Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 9 December 2013

பாலீர்ப்பு சர்ச்சையில் டாம் டேலி (Tom Daley) - olympics to gay olympics....



“இந்த வருடத்தில் நான் சந்தித்த ஒரு நபரால் என் வாழ்க்கையின் பாதையே மாறிப்போனது.... என்னை மிகுந்த மகிழ்ச்சிக்கும், பெருமிதத்துக்கும் ஆட்படுத்திய அந்த நபர் ஒரு ஆண்.... என்னுடைய இந்த முடிவுக்கு என் அம்மா முழுமனதோடு சம்மதம் தெரிவித்துள்ளார்... உறவினர்கள் மற்றும் நண்பர்களில் மட்டும் ஒருசில மாற்றுக்கருத்துகளை நான் எதிர்கொள்கிறேன்...” இப்படி நீளும் அந்த யூடியூப் காணொளி காட்சிக்கு சொந்தக்காரர் என்னை போல ஒரு சாமானியன் இல்லை, ஒலிம்பிக் வெண்கல பதக்கம் வரை வென்று, நீச்சல் பிரிவில் மகுடம் சூடிய பிரிட்டனை சேர்ந்த 19 வயதான டாம் டேலி (Tom Daley)தான் அவர்.... கடந்த வாரத்தின் உலக ஆங்கில ஊடகங்களின் முக்கிய விவாதமே இந்த டேலியின் யூடியூப்தான்... அதுமட்டுமல்லாமல் உலகின் பல பிரபலங்கள் டேலியின் இந்த துணிச்சலான வெளிப்படுத்துதலுக்கு தங்கள் ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்....
இதைப்பற்றிய தகவல்களை உங்களில் பெரும்பாலானவர்கள் படித்திருக்கலாம்... ஆனால், இதற்குள் புதைந்திருக்கும் ஒருசில புரியாத புதிர்களை பற்றி இப்போ நான் பேசலாம்னு நினைக்கிறேன்...
டாம் டேலி’தான் உலகில் முதன்முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஒருபால் ஈர்ப்பு விளையாட்டு வீரர் என்பதை போன்ற பூதாகரமான செய்தியாக இதை ஊடகங்கள் விஸ்தரித்துள்ளதாக நான் நினைக்கிறேன்... நிஜத்தில், விம்பிள்டன் போட்டிகளில் பதினெட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்ட்டினா நவ்ரத்திலோவா , பிரபல கால்பந்தாட்ட வீரர் ஆன்டன் ஹைசன், அமெரிக்காவின் கூடைப்பந்தாட்ட வீரர் ஜேசன் காலின்ஸ், பிரிட்டனின் குத்துச்சண்டை வீரர் நிக்கோலஸ் ஆடம்ஸ், கால்பந்தாட்ட வீரர் ராபி ரோஜர்ஸ் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அளவிற்கான “டாம் டேலியைவிட” அதிகமான சாதனைகளை புரிந்த ஜாம்பவான்களை தங்கள் பாலீர்ப்பை வெளிப்படுத்திக்கொண்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் நாம் இணைக்க முடியும்....
அப்படி இருக்கையில், டாம் டேலியின் கருத்தை ஊடகங்கள் இவ்வளவு பெரிய அதிசய நிகழ்வாக சித்தரிப்பதற்கான காரணம் கொஞ்சம் குழப்பமான ஒன்றுதான்...
மேலும், அந்த காணொளியின் முழு பாகத்திலும் டாம் டேலி எந்தவொரு இடத்திலும், தன்னை “gay” என்று வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை... தனக்கு பெண்களுடனும் ஈர்ப்பு இருப்பதாக கூறும் டேலி, குறைந்தபட்சம் தன்னை ஒரு “bisexual” என்று கூட வெளிப்படையான கருத்தை முன்வைக்கவில்லை... அந்த காணொளி காட்சியை பார்க்கும் நமக்கே டேலி ஒருவித தெளிவற்ற கருத்துகளை முன்வைத்திருக்கிறார் என்பது புரியும்.... அவர் சொன்ன விஷயங்கள் பலவற்றையும் இணைத்துப்பார்த்து “டேலி ஒரு கே” என்றோ “டேலி ஒரு பைசெக்சுவல்” என்றோ நாமாக ஒரு யூகத்திற்கு வரவேண்டிய கட்டாயத்தில்தான் அவரின் காணொளி காட்சி தெளிவற்ற போக்கை கொண்டுள்ளது.... அப்படி இருக்க, இந்த எதிர்மறை விஷயங்கள் எதையும் கணக்கிலெடுக்காமல் “டேலி ஒரு முற்போக்குவாதி, வீரர், தீரர், துணிச்சல்காரர்” போன்ற அடைமொழிகளை சூட்டி அந்த ஊடகங்கள் அழகு பார்ப்பது எதனால்?....
உண்மையில், இந்த விஷயத்தில் நாம் டாம் டேலியை பாராட்டுவதற்கு முன்பாக, அதைவிட அதிக பாராட்டுதலுக்கு உரிய ஊடக நண்பர்களை பாராட்டியே ஆகவேண்டும்...ஏன்?... நான் மேற்சொன்ன டேலியை பற்றிய விமர்சனங்களுக்கு காரணம், டேலியின் முதிர்ச்சியற்ற கருத்துகள்... அதற்கு டேலியை குறை சொல்லக்கூடாது, பத்தொன்பது வயது இளைஞனிடமிருந்து இப்படிப்பட்ட கருத்துகள் வருவது இயல்புதான்... பிறகு எதற்காக டேலி மீதான விமர்சனங்களை முன்வைக்கிறேன்? என்று நீங்கள் கேட்பீர்கள்.... மேற்கத்திய ஊடகங்கள் இவ்வளவு விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் டேலியின் கருத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ள ஆச்சரிய நிகழ்வை சுட்டிக்காட்டத்தான் நானும் மேற்சொன்ன டேலி பற்றிய விமர்சனங்களை முன்வைத்தேன்... மழலை பேச்சின் இலக்கனப்பிழையை கண்டுபிடிப்பது முட்டாள்த்தனம்தான், நானும் கூட ஊடகத்தின் பெருந்தன்மையை சுட்டிக்காட்டத்தான் இந்த பிழைகளை முன்வைக்க வேண்டி இருந்தது....
ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மீதான அந்த ஊடகத்துறை நண்பர்கள் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடுதான், டேலி பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம்... “டேலி இதை சொன்னார், இப்படி சொன்னார், இங்கே சொன்னார்” என்று குற்றங்களை தேடி கண்டுபிடிக்க முயலவில்லை, மாறாக டேலியின் துணிச்சலை பாராட்டி பாலீர்ப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு இந்த செய்திகளை பயன்படுத்திக்கொண்டார்கள்....
“தெஹல்கா”  தருண் தேஜ்பால் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வரிந்துகட்டிய வடஇந்திய ஊடகங்கள், மத்திய பிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி மீது சுமத்தப்பட்ட ஓரினசேர்க்கை புகாரை எப்படி கையாண்டார்கள்? என்பதை நான் முன்பே கூறி இருக்கிறேன்...
தமிழ் ஊடகங்களும், இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் கிடையாது...
ஒருபால் ஈர்ப்பு திருமணம் பற்றிய செய்தி ஒன்றுக்கு, “உலகம் போகும் போக்கை பாருங்க!” என்று சலித்துக்கொள்ளும் “அந்துமனிகள்” தொடங்கி, “இயற்கைக்கு மாறான உறவுகள்” என்று அடைமொழி சூட்டிடும் “ஆவியின் ஜூனியர்”கள் வரை தமிழ் ஊடகங்களின் செய்திகளை பார்த்து சலித்து, வெறுத்து, களைத்துப்போன நமக்கு மேற்கத்திய ஊடகங்களின் மனநிலை நிச்சயம் ஆச்சரியம் ஊட்டும் ஒன்றாகத்தான் தெரியும்...
2016ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல டாம் டேலியை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய ஊடக முன்னோடிகளை வணங்கிக்கொண்டும் விடைபெறுவோம்!....


கொசுறு தகவல்....    
கே ஒலிம்பிக்ஸ் (gay Olympics) என்னும் விளையாட்டு போட்டிகள் பிரத்யேகமாக பாலீர்ப்பு சிறுபான்மையினருக்காக 1982ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது... முதலாம் கே ஒலிம்பிக் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது... ஒருபால் ஈர்ப்பு குற்றமாக பார்க்கப்படும் நாடுகளை சார்ந்த வீரர்கள் கூட அந்த போட்டிகளில் கலந்துகொள்வதை நாம் காணமுடியும்.... ஒருபால் ஈர்ப்பு நபர்களை பற்றிய நல்லதொரு எண்ணங்களை மக்களிடம் விதைக்கவும், ஒருபால் ஈர்ப்பு நபர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் இப்படிப்பட்ட விளையாட்டுகள் நடத்தப்படுவதாக “கே ஒலிம்பிக்” ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்....

Thursday, 5 December 2013

“அது உனக்கு புரியாது....!” – குட்டிக்கதை....

        அது உனக்கு புரியாது....!” – குட்டிக்கதை....    

   வினுக்கு இப்போதுதான் பதின் வயது தொடங்குகிறது... அது சிறுவர்களுக்கான வயதா? பருவ வயதா? என்கிற வயதை பற்றிய குழப்பம் நமக்கென்றால், அந்த வயதிற்கே உரிய பலவிதமான குழப்பங்கள் கவினுக்கு... உலகை பற்றியும், தன் உடலை பற்றியும் நிறைய குழப்பங்கள் நிறைந்த அந்த வயதில், கவினுடைய குழப்பம் அவன் மற்ற நண்பர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டது....
பொதுவாக ஒரு மனிதனுக்கு முதல் காதல் அரும்பும் அந்த வயதில், பெரும்பாலான ஆண்களின் அந்த முதல் காதலுக்கு உரியவர், அவர்களின் பள்ளி ஆசிரியையாகவோ, உடன் பயிலும் தோழியாகவோதான் இருப்பார்கள்... அதை காதலென்று கூட சொல்ல முடியாது, ஒருவித ஈர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்....
ஆனால், கவினுடைய முதல் ஈர்ப்பு, அவன் மற்ற நண்பர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது... கவினுக்கு அவன் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ‘வருண் அண்ணன்’ மீதுதான் அந்த முதல் ஈர்ப்பு உண்டானது... வருண் அந்த பள்ளியின் மாணவர் தலைவனும் கூட... ப்ரேயர் ஹாலில் மேடையில் நிற்கும் வருணை பார்ப்பதற்காகவே கவின் நேரம் தவறாமல் பள்ளிக்கு சென்றுவிடுவதுண்டு...
நண்பர்கள் பலரும் பெண்களின் அழகை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கூட, கவினுக்கு “வருண் அண்ணனை விட அழகா எந்த பெண்ணும் இல்லையே!” என்றுதான் தோன்றும்.... முதல் காதல் எப்போதும் ரஜினி மாதிரி, எப்போது வரும்? யார் மீது வரும்?னு சொல்ல முடியாது... அதே போல வந்த வேகத்தில் அது காணாமலும் போய்விடும், மனதில் அழுத்தமான வடுவை மட்டும் சுவடாக பதித்துவிட்டு....
இது ஒரு தொடர் குழப்பமாக கவின் மனதிற்குள் உறுத்திக்கொண்டிருக்க, மேலும் சில குழப்பங்களும் சங்கிலி போல அவன் மனதை இறுக்கத்தொடங்கியது ... “இரண்டாம் உலகம்” படத்தில் மற்ற நண்பர்கள் அனுஷ்காவின் அழகை ரசித்தபோது, கவின் மட்டும் ஆர்யாவை கண்கொட்டாமல் ரசித்தான்... சானியாவையும், சாய்னாவையும் கனவு தேவதைகளாக சகநண்பர்கள் கொண்டாடிய வேளையில், கவின் மட்டும் விராட் கோலியையும், நமன் ஓஜாவையும் விளையாட்டை கடந்து ரசித்தான்.... அப்போதுதான் தன்னை பற்றிய ஒரு தெளிவான பிம்பம் கவினுக்குள் உருவானது, “தனக்கு உண்டாகும் ஈர்ப்பானது வருண் அண்ணனுடனோடு முற்றுப்பெற்றுவிடவில்லை, அது அழகான ஆளுமைமிக்க ஆண்கள் பலரை பார்க்கும்போதும் தொடர்கிறது” என்று உணர்ந்தான்....
“சரி, இது சரியா?... ஆண்கள் பெண்களைத்தானே திருமணம் செய்துகொள்கிறார்கள்?.. அப்போ எனக்கிருக்குற ஈர்ப்பு தவறானதா?” முதல் முறையாக தன்னை பற்றிய பயம் நிறைந்த கேள்வி கவினுக்குள் தோன்றியது...
இந்த கேள்விகளுக்கு பதில் யாரிடம் கேட்பது?... அந்த வயதிலேயே டார்வினின் “ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ்” முதல் ராமர் பிள்ளையின் “மூலிகை பெட்ரோல்” வரை பலவிஷயங்களை பற்றியும் புரியும் வகையில் (சில நேரங்களில் புரியும் வரையில்) சொல்லிக்கொடுத்த “அம்மா”வைத்தவிர இதை கவின் வேறு யாரிடம் கேட்பதும் பொருத்தமாக இருந்திடாது...
அன்று விநாயகர் சதுர்த்தி.... அம்மா தீவிரமாக பூஜை வேலைகளில் தன்னை ஆட்படுத்திக்கொண்டிருந்தாள்... மோதகமும், கொழுக்கட்டையும், சுண்டலும் மஞ்சளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையாரின் படையலுக்காக காத்திருந்தன... விளக்கிற்கு பொட்டுவைத்துக்கொண்டிருந்த அம்மாவின் அருகில் சென்று பவ்யமாக அமர்ந்தான் கவின்...
“தம்பி, பூஜை முடிஞ்சப்புறம்தான் இதல்லாம் சாப்பிடனும்... இப்போ தொடக்கூடாது” அம்மா அந்த உணவு பதார்த்தங்களை கொஞ்சம் தள்ளி வைத்தாள்...
பூஜைக்கு ஆயத்தமாகும் நேரத்தில், செவிக்காவது உணவை பெற்றிடலாம்! என்கிற நோக்கத்தோடு, “ஏன்மா பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகல?.. முருகனுக்கு மட்டும் ரெண்டு கல்யாணம்?” முதல் கேள்வியை அம்பாக பாய்ச்சினான்...
“ஹ்ம்ம்.... அவருக்கு பொண்ணு கெடைக்கலயாம், அதான்...” விளையாட்டாக சிரித்தாள் அம்மா...
“ஏன்மா, ஆம்பளையும் பொம்பளையும்தான் கல்யாணம் பண்ணிக்கனுமா?... ஏன் ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா?”  இதை விநாயகருக்காக கேட்பதாக நினைக்கும் அம்மாவிற்கு, கவினுக்குரிய கேள்வியும் இதுதான் என்பது புரியவில்லை...
“இல்லப்பா... அதான் இயற்கை... ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிகிட்டாதான் குழந்தை பிறக்கும்... நானும் அப்பாவும் கல்யாணம் பண்ணிகிட்டதாலதான் நீ பிறந்த... இயற்கைக்கு புறம்பா நாம எதுவும் யோசிக்கவே கூடாது...” அம்மா விளக்கில் திரியை போட்டுக்கொண்டிருந்தாள்....
“நான் எப்டிம்மா பிறந்தேன்?”
“அதல்லாம் உனக்கு புரியாதுடா... உனக்கு அதுக்கான வயசு வர்றப்போ புரியும்...” தனக்குள் சிரித்துக்கொண்டே அம்மா விளக்கிற்கு எண்ணையை ஊற்றினாள்....
“பிள்ளையார் எப்டிம்மா பிறந்தார்?”
“ஹ்ம்ம்... பார்வதி தேவிக்கும், கங்கைக்கும் பிறந்தார்...”
“ஐயப்பன்?”
“அவரு சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தார்...”
“அதெப்டி ரெண்டு பெண்களுக்கு பிள்ளையார் பிறந்தார்? ரெண்டு ஆண்களுக்கு ஐயப்பன் பிறந்தார்?”
விளக்கில் ஒளியை ஏற்றிவிட்டு, கண்களை கவினின் பக்கம் திருப்பிய அம்மா, “அவங்கள்லாம் கடவுள்டா... நம்ம விதிகள் அவங்களுக்கு பொருந்தாது.... அதல்லாம் உனக்கு புரியாதுடா....” கவினின் தலையை கோதிவிட்டாள்...
மெல்ல எழுந்த கவின், அம்மாவின் அருகில் இருந்த கொழுக்கட்டையை எடுத்து , அதே வேகத்தில் கடித்தும் விட்டான்...
“ஏய்!.. என்ன பண்ற?.. நான்தான் சொன்னேன்ல, சாமிக்கு படைச்சதுக்கு அப்புறம்தான் நாம சாப்பிடனும்னு?” அம்மா அடிக்க கை ஓங்கிவிட்டாள்....
மெல்ல சிரித்த கவின், “நானும் சாமி தான்மா...”
இன்னும் அதிகமான கோபத்துடன் அம்மா, “என்னடா சொல்ற?.. கொழுப்பா உனக்கு?” சீறினாள்....
“அது உனக்கு புரியாதும்மா....” சொல்லிவிட்டு பூஜையறையை விட்டு வெளியே ஓடினான் கவின், அம்மாவை தவிர அங்கிருந்த மற்ற அனைத்து கடவுள்களும் எல்லாம் புரிந்தவர்களாக படங்களில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.... விளக்கின் வெளிச்சம் வீடுமுழுக்க விஸ்தரிக்க தொடங்கியது...
நீங்களும் சிரிப்பதை பார்த்தால், உங்களுக்கும் புரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன்????.....
(முற்றும்)
(உங்கள் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களை வலைப்பூவிலேயே இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!)

Monday, 2 December 2013

“கே” குழந்தைகளின் பெற்றோர்களுக்காக. – “TEN TIPS for Parents of a Gay, Lesbian, or Bisexual child…”

      ங்கள் குழந்தை (மகன் அல்லது மகள்) ஒருபால் ஈர்ப்புள்ள நபர் என்ற உண்மை உங்களுக்கு தெரியவருகின்ற நேரத்தில் நீங்கள் என்னவல்லாம் செய்யனும்? எவற்றை செய்யக்கூடாது? என்ன விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும்? போன்றவற்றை பற்றிய சில முக்கிய ஆலோசனைகளை “பாலீர்ப்பு” பற்றிய கலந்தாய்வு அமைப்பு நடத்திடும் லிசா மாறர்(Lisa Maurer) கூறியவற்றை இப்போது பார்க்கலாம்... (நம் நாட்டிற்கு ஏற்றார் போல சில குறிப்புகளை மேலதிகமாக இணைத்துள்ளேன்)...

1.      புரிந்துகொள்ளுங்கள்.... முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, உலகத்தில் நீங்கள் மட்டும்தான் இப்படி ஒருபால் ஈர்ப்புள்ள குழந்தையின் பெற்றோராக இருப்பதாக நினைக்க கூடாது.... உங்களை போலவே லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பெற்றோர்கள் இருக்கிறார்கள், அவர்களின் பிள்ளைகளும் ஒருபால் ஈர்ப்புள்ள நபர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்....                   

2.      வித்தியாசத்தை உணருங்கள்.... பாலீர்ப்புக்கும் (sexual orientation), பாலின அடையாளத்துக்கும் (gender identity) உள்ள வித்தியாசத்தை அடுத்ததாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்... ஒரு மகன், தன் பாலீர்ப்பை பற்றி தன் பெற்றோரிடம் தெரிவிக்கும்போது, பெற்றோர்களில் பெரும்பாலானோர் இந்த இரண்டு விஷயங்களையும் போட்டு குழப்பிகொள்வர்.... “கே” என்பதையும், திருநங்கை என்பதையும் நிறைய குழப்பிக்கொள்ளும் பெற்றோர்கள் இங்க நிறைய உண்டு.... அதனால், இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை கற்றறிந்த பின்பே, உங்கள் பிள்ளையை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு நீங்கள் வரவேண்டும்....

3.      உண்மையை அறியுங்கள்... உங்கள் மகன் பாலீர்ப்பு மாறுபாடு உடையவன் என்பது உங்களுக்கு உறுதியானால், அதாவது உங்கள் பிள்ளை ஒருபால் ஈர்ப்பு நபர்தான் என்பதை நீங்கள் தெளிவுபடுத்திக்கொண்டுவிட்டால், மேற்கொண்டு இணையம் வழியாக அதுபற்றிய மேலதிக தகவல்களை அறிய முற்படவும்.... அருகில் இருக்கும் பாலீர்ப்பு தொடர்பான அமைப்புகளையோ, கலந்தாய்வு கூடங்களையோ தேவையிருப்பின் அணுகலாம்... நம் சட்டம் பற்றியும், பாலீர்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களை பெறவும் இணையம் மிகவும் உறுதுணையாக இருக்கும்...

4.      கவனியுங்கள்.... “நான் ஒரு கே”ன்னு உங்க பையன் உங்ககிட்ட சொல்கிறான் என்றால், நீங்கள் நிஜமாகவே சிறந்த பெற்றோர் தான்... காரணம், அப்படி தன் பாலீர்ப்பை உங்களை நம்பி சொல்லும் அளவிற்கு, உங்கள் வளர்ப்பு நல்ல தோழமையோடு இருப்பதாகவே அர்த்தம்... அதனால், மேற்கொண்டு நீங்கள் அவனிடம் நிறைய பேசுங்கள்... கோபமான வார்த்தைகளை கொட்டாமல், பொறுமையாக அவன் சொல்வதை கேளுங்கள், கவனியுங்கள்... பேசுவதைவிட, அதிகம் அவர்கள் பேசுவதை கவனியுங்கள்... உங்கள் கவனிப்பு ஒன்றுதான் அவனுக்கு அப்போதைய முக்கிய அவசியமான தேவை என்பதை உணருங்கள்... ஒரு நண்பரை போல அணுகவேண்டிய கடமை உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணரவேண்டும்....
5.      மேலும் குழப்பாதீர்கள்.... இப்போதெல்லாம் பதின்வயது தொடக்கத்திலேயே ஒரு குழந்தையால், தன் பாலீர்ப்பை எளிதாக அடையாளம் காணமுடிகிறது... இயல்பாகவே குழப்பங்களை அதிகம் தனதாக்கிக்கொள்ளும் அந்த வயதில், பாலீர்ப்பு தொடர்பான குழப்பம் மிகவும் அதிக பாதிப்பை உண்டாக்கும்... படிப்பில் கவனமின்மை, திடீர் குணநல வேறுபாடு போன்றவற்றை நீங்கள் திடீர் மாற்றமாக உங்கள் பிள்ளையிடம் உணர்ந்தால், அதற்கான காரணத்தை தேடுங்கள்.. அது பாலீர்ப்பு காரணம்தான் என்றால், தயவுசெய்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.... அது மேலும் அதிக குழப்பங்களைத்தான் உங்கள் பிள்ளைக்கு கொண்டு சேர்க்கும்...

6.      தண்டனையோ சிகிச்சையோ கிடையாது.... அடித்தோ. கடுமையான தண்டனை கொடுத்தோ உங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை மாற்றமுடியாது... அது இயற்கையான ஒன்று என்பதை உணருங்கள்... ஆனால், இந்த உண்மையை சொல்ல வேண்டிய சமுதாய பொறுப்பில் இருக்கின்ற மனநல மருத்துவர்களுக்கே இன்னும் பாலீர்ப்பை பற்றிய தெளிவான முழுமையான கருத்துகள் வாய்த்திருக்கவில்லை... அதனால், உங்கள் பிள்ளைகளை அவசரமாக மனநல மருத்துவரிடம் காட்டி, குணமாக்கும் முயற்சியிலும் ஈடுபடாதீர்கள்... சில நேரங்களில் ஷாக் ட்ரீட்மெண்ட் எனும் தவறான சிகிச்சை வழியாக, உங்கள் பிள்ளை மேலும் ஆபத்தை அணுகும் வாய்ப்பும் அதில் இருக்கிறது.... ஓரளவு தெளிவான மனநல மருத்துவர் இருப்பின், ஒரு தெளிவிற்காக நீங்கள் அவரிடம் ஆலோசனை பெறலாம்...

7.      கேலி கிண்டல் செய்யாதீர்கள்.... நீங்கள் உங்கள் மகனின் பாலீர்ப்பை சகஜமாக எடுத்துக்கொள்வதாக நினைத்து, “அவனா நீ?” போன்ற சினிமா வசன நகைச்சுவைகளை பிரயோகிக்காதீர்கள்.... உங்கள் கோபமான வார்த்தைகளைவிட, இப்படிப்பட்ட கேலிகள் குழந்தையை இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கும்....

8.      அரவணையுங்கள்.... உங்கள் பிள்ளை இந்த சமுதாயத்தில் எதிர்காலத்தில் நிறைய சமூக புறக்கணிப்புகளை எதிர்கொள்ளப்போகிறான் என்பதை உணருங்கள்... அதற்குண்டான வலிமையை கொடுக்க வேண்டியது உங்கள் அரவணைப்புதான்... ஆறுதலான பேச்சு, கனிவான கவனிப்பு போன்றவை அவசியமாக அவனுக்கு கொடுக்கப்பட வேண்டும்... பாலீர்ப்பை பற்றி தெரிந்ததும், உங்கள் வழக்கமான நடவடிக்கைகளில் உங்கள் மகன் சிறிதும் வித்தியாசம் கண்டிடக்கூடாது... எந்த தருணத்திலும் அவனுக்கு நீங்கள் துணை இருப்பதாக அரவணைப்பை கொடுக்கவேண்டும்...

9.      கடமையை உணருங்கள்... “இது தவறு”, “இது இயற்கைக்கு முரணானது” என்று பாடம் நடத்தி, மேலும் குழப்பமான எண்ணங்களை பிள்ளையின் பிஞ்சு மனதிற்குள் விதைக்காதீர்கள்.... “அது ஒன்னும் இல்லப்பா... நீ நார்மல்தான்” போன்ற ஆரோக்கியமான வார்த்தைகள் தான் உங்கள் பிள்ளைக்கு அப்போதைய தேவை... நாளைக்கே அவன் ஒரு ஆணை திருமணம் செய்து வாழப்போவதில்லை, அதற்கு நிறைய நாட்கள் இருக்கிறது... அப்போதைய மன குழப்பங்களில் இருந்து அவனை நீங்கள் மீட்பதுதான் உங்களின் அத்தியாவசிய தேவை என்பதை முதலில் உணருங்கள்... உங்கள் பிள்ளையின் திறமைகளை திரைபோட்டு மறைத்திருக்கும், இந்த மனக்குழப்பங்களை அகற்றி, நல்ல திறமை மிக்க இளைஞனாக அவன் வளர வழி வகுத்து கொடுக்க வேண்டிய உங்கள் அவசியமான கடமையை நீங்கள் முதலில் உணரவேண்டும்....

10.  நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.... சமுதாயம், கலாச்சாரம், சட்டம் என்று உங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை நீங்கள் எதிர்க்க ஆயிரம் காரணங்கள் உங்களுக்கு கிடைக்கலாம்... ஆனால், ஒரே ஒரு காரணம் உங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை ஏற்க உங்களுக்கு வாய்த்திருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும்.... அது என்ன? “உங்கள் பிள்ளை உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை”தான் அந்த ஒற்றை காரணம்.... அது உங்கள் பிள்ளை... உலகமே எதிர்த்தாலும், துணை நிற்க வேண்டிய பெற்றோர்கள் நீங்கள்... நீங்கள்தான் அதற்கு உலகமே, உங்களிடம்தான் முதலில் அந்த குழந்தைக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்... இத்தகைய உங்கள் பிள்ளைகளின் “நம்பிக்கையை” காப்பாற்றவாவது நீங்கள் உங்கள் பிள்ளையின் கரம் பிடித்து நிற்க வேண்டியது ஒரு முக்கிய காரணம்....
அவ்வளவுதான்.... இவற்றை செய்துவிட்டாலே, உங்கள் பிள்ளையின் முழு மனதை புரிந்துகொண்ட “சூப்பர் ஹீரோ” போல நீங்கள் மாறிவிடலாம் பெற்றோர்களே!.... புரிந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.....

உங்கள் விஜய் விக்கி...