Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 2 July 2012

"கூடா நட்பு" - சரித்திர கதை.....









இடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது  போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்புகளால் ஆன குடில் ஒன்று, அதை சுற்றியிலும் காவலுக்கு ஏழெட்டு போர் வீரர்கள்.... நன்றாக கவனித்து பார்த்தால், அதில் சிலரின் கைகளில் புலிக்கொடி பொறித்த வேல் கம்புகளும், மற்றவர்களின் கைகளில் மீன் முத்திரை பதித்த ஈட்டிகளும் இருக்க உள்ளே இருப்பவர்களுக்கு காவல் காப்பதைப்போல நின்றுகொண்டிருந்தனர்.... அந்த மூங்கில் குடிலுக்குள் என்னதான் நடக்கிறது என்று நாம் உற்றுநோக்கினால், அங்கு இரண்டு உடல்கள் உடலில் ஆடைகளின்றி பினைந்திருந்தன.... நன்றாக உற்றுநோக்கினால் அதில் ஒருவன் பாண்டிய நாட்டு இளவரசன் ஐந்தாம் வீரபாண்டியன்.... கறுத்த தேகமும், உடல் முழுக்க ஆண்மை ததும்பும் அழகும், பரந்த மார்பும், திமிறிய புஜங்களும் என்று ஊர் எல்லையில் நிற்கும் கருப்பண்ண சாமியை நினைவுபடுத்தின அவனது தோற்றம் ..... மேலும், அவன் அணிந்திருந்த முத்து மாலைகள், கறுத்த மார்புகளுக்கு இடையில் ஜொலிப்பது, இருள் சூழ்ந்த நாளில் பற்பல நட்சத்திரங்கள் மின்னுவதைப்போல காணப்பட்டது.... அவன் கண்களின் ஒளி கோபக்கனல்களை கக்குவதைப்போன்று எப்போதும் சிவந்து காணப்படும்.... ஆண்மை, அளவுக்கு மீறி திமிரி நிற்கும் அழகை காண்பவர்கள் ஒரு நிமிடம் திகைப்பது உறுதி.... இப்படிப்பட்ட ஆண்மகனுடன் படர்ந்திருப்பது அவனைவிட திறமையிலும், வீரத்திலும், அழகிலும் உயர்ந்த சோழ இளவரசன் விக்கிரமன்.... ஓரின சேர்க்கை என்பதை வாயால் கூட உச்சரிக்க அஞ்சிடும் அந்த காலத்தில், சிறு பிராயம் முதல் நட்பாக பழகி இன்று காதலர்களாக மாறி நிற்கும் இவர்களின் செயல்பாடுகள் பலரை அதிர்ச்சியாக்கினாலும், இளவரசர்கள் என்பதால் எதிர்த்து பேசிட எவரும் அஞ்சுவார்கள்.... விக்கிரம சோழனின் தேகமோ இளம் சிவப்பான , தொட்டால் கைகளின் தடம் பதியும் அளவிற்கு மென்மையானது..... விக்கிரமனின் கழுத்தில் மாட்டியிருக்கும் நவரத்தினங்களை காணும்போது, அந்தி நேரத்தில் மழை ஓய்ந்த நாளில்  தெளிவான மேகத்திற்கிடையில் காணப்படும் வானவில்லை போன்று வண்ணங்கள் மிளிர காணப்பட்டது.... விக்கிரமனின் கண்களில் ஒரு கருணை, ஒரு அன்பு எப்போதும் காணப்படும்.... பார்ப்பவர்கள் அனைவரையும் தன் வசம் ஆக்கிடும் நேர்த்தியான தெய்வீக பார்வை உடையவன்.... அத்தகைய விக்கிரமன் இப்போது வீரபாண்டியனின் மார்பினில் தலை வைத்து, தன் கைகளால் பாண்டியனின் தேகத்தை வருடிக்கொண்டிருந்தான்.... அந்த வருடலில் மயங்கிய நிலைமையில் இருந்த வீரபாண்டியன் விழித்துவிட்டான்.... எழுந்த பாண்டியன் விக்கிரமனின் முழு நிலவை போன்ற அந்த முகத்தை தன் கைகளால் பிடித்து நிமிர்த்தி, தேனில் திளைத்த சுவை மிகுந்த பழத்தை ஒத்த இதழ்களை மெல்ல தன் கைகளால் வருடினான்.... இன்னும் சிவப்பாகிய அந்த இதழ்களில் இப்போது தன் உதடுகளால் கோலமிட்டான்.... சுகம் உடல் முழுக்க பரவி, கண்களை மூடி இருந்தான் விக்கிரமன்.... அந்த நேரத்தில் வெளியில் நின்ற காவலர்களில் ஒருவன் அந்த கதவுகளை தட்டினான்.... கோபம் மிகுந்த வீரபாண்டியன் வேகமாக சென்று கதவை திறக்க, அவன் அனல் கக்கும் பார்வையில் சுட்டெரிக்கப்பட்டனர் அங்கு நின்ற காவலர்கள்.... கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட ஒரு காவலன், "இளவரசே! இன்னும் சில நாழிகைகளில் சூரியன் சாய்கோணத்திற்கு வந்துவிடும்.... இப்போது புறப்பட்டால்தான் அந்தி சாயும் நேரத்திற்குள் நாங்கள் சோழ தேசம் சென்றடைய முடியும்... இளவரசரை நாங்கள் சரியான நேரத்தில் மாமன்னரிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்பது எங்களுக்கு மாமன்னர் இட்ட கட்டளை" என்று கூறிவிட்டு தலையை கவிழ்த்தபடி நின்றான் அந்த காவலன்.... இதை கேட்ட வீரபாண்டியன் சினம்  தனியாதவனாக அந்த காவலரை அடிக்க முனைய , நல்ல நேரத்தில் விக்கிரமன் பாண்டியனை சமாளித்துவிட்டு காவலர்களோடு சோழ நாட்டை நோக்கி விரைந்தான்.......
பாண்டிய இளவரசன் வீரபாண்டியனும், சோழ இளவரசன் விக்கிரமனும் இந்த அளவிற்கு நெருக்கமாகவும், காதலில் திளைக்கவும் காரணம் இருவரின் பெற்றோரும்தான்.... சோழ மன்னர் இரண்டாம் விமலாதித்தரும், பாண்டிய மன்னர் சுந்தர  பாண்டியனும் நெருங்கிய நண்பர்கள்.... உறவு முறைகளில் பெண் கொடுத்து பெண் எடுத்த நெருங்கிய உறவினர்கள்... அதனால் இந்த இளவரசர்கள் இருவருமே சிறு பிராயம் முதல் நல்ல நண்பர்களாக பழகினர்..... நாளடைவில் அது இருவருக்குள்ளும் அந்த நட்பினை தாண்டி காதல் படர்ந்தது எப்போதென்று இருவருக்கும் தெரியவில்லை.... இது தவறா? சரியா? என்று எண்ணிடும் மனநிலையில் இருவரும் இல்லை.... பதினெட்டு வயதே ஆகிடும் இந்த கட்டிளம்காளைகளுக்கு எவர்தான் கடிவாளம் போடமுடியும்?.... ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வேட்டைக்கு செல்வது இருவருக்கும் வழக்கம்... அப்படி வேட்டை முடிந்த பின்னர், ஞாயிறு உச்சிக்கு வந்தவுடன், சிறிது களைப்பாற கட்டிவைத்த அந்த மூங்கில் குடிலுக்குள் இருவரும் காம லீலைகள் புரிந்தனர்..... அப்படி இருவரும் இப்போது சந்தித்துக்கொள்வது இம்முறையோடு பதினேழாம் திங்கள்.... இன்றும் இருவரும் எல்லாமும் முடிந்தபிறகு காம இச்சைகள் தனிந்தவர்களாக தத்தமது நாடுகளை நோக்கி பயணமானார்கள்.... ஊர் எல்லையில் இருக்கும் ஏரியில் குளித்துவிட்டு, அங்கு கம்பீரமாக நிற்கும் காளி தேவியை வணங்கிவிட்டு செல்வது விக்கிரமனின் வழக்கம்.... அன்றும் அப்படி காளி தேவியை வணங்கிவிட்டு நகருக்குள் நுழைந்தான் .... விக்கிரமனுக்கு எப்போதும் தான் இளவரசன் என்கிற கர்வம் துளியும் இருக்காது.... தன் ஐந்து அகவையிலேயே தாய் பார்வதி நாச்சியார் அவர்களை இழந்தவன் என்பதால், ஊர் மக்கள் எல்லோரும் இளவரசர் என்கிற மரியாதையை தாண்டி தங்கள் குடும்பத்திற்குள் ஒருவராய் விக்கிரமனை நினைப்பார்கள்.... விக்கிரமனும் அனைவரிடமும் மிகவும் கனிவோடும் பாசத்தோடும் பழகுவான்.... அன்று பவுர்ணமி நாள் என்பதால் விக்கிரமன் வரவிற்காக ஆங்காங்கே பலரும் காத்திருந்தார்கள்..... அனைவரும் விக்கிரமன் கம்பீரமாக குதிரையில் வருவதை பார்த்து, "சோழ இளவரசர், எங்கள் யுவராஜா விக்கிரம சோழர் அவர்கள் பல்லாண்டு வாழ்க.... பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்து கோஷம் முழங்கினார்... அப்படி ஆங்காங்கே குழுமி இருந்த மக்களிடம் குதிரையில் இருந்து இறங்கி நலம் விசாரித்தும், தேவைகளை கேட்டறிந்தும் சென்றுகொண்டிருந்தான்... விக்கிரன் வேட்டையாடிய மான்களை முன்னால் சென்ற வீரர்கள் தூக்கி சென்றதை அங்கிருந்த சிறுவர்கள் அதிசயித்து பார்த்தனர்.... இப்படியாக நகரை வளம் வந்து விக்கிரமன் அரண்மனையை அடைந்தபோது அந்தி சாய்ந்து ஐந்து நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது..... அரண்மனை வாயிலில் தளபதி வெள்ளாளத்தேவன் பரபரப்பாக யாருக்காகவோ காத்திருந்ததை கவனித்த விக்கிரமன், தளபதியின் அருகில் சென்று, “என்ன தளபதியாரே, யாருக்காக இவ்வளவு கலக்கத்துடன் காத்திருக்கிறீர்கள்?.... போரிட யாரும் வருவதாக சொன்னார்களா என்ன?” என்று சிரித்தான்.... இன்னும் பதட்டம் விலகாத தளபதி, “இளவரசரே!... தங்களுக்காக மாமன்னர் அவர்கள் வெகுநேரமாக நந்தவனத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்..... ஏன் இவ்வளவு தாமதம்?.... “ என்றார்.... “நான் என்ன சின்ன குழந்தையா தளபதியாரே?.... மன்னர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள்?.... நகருக்குள் வரும்போது நம் நாட்டு மக்களிடம், நம் மாமன்னரின் ஆட்சியை பற்றியும், அவர்களின் தேவைகளை பற்றியும் குறிப்பறிந்து வந்தேன்.... அதனால் சிறிது தாமதம் ஆகிவிட்டது.... சரி வாருங்கள் இப்போதே போய் மன்னரை பார்க்கலாம்” என்று கூறிவிட்டு தளபதியுடன் நந்தவனத்திற்கு சென்றான்....
மன்னர் நந்தவனத்தில் வானில் உள்ள நிலவை பார்த்தபடியே ஏதோ குழப்பத்தில் நின்றிருந்தார்.... அருகில் சமஸ்தானத்தின் முக்கிய அமைச்சரும் , திறமை வாய்ந்த ராஜதந்திரியான வாகனூர் கிழார் நின்றுகொண்டிருந்தார்.... மன்னரை பார்த்த விக்கிரமன், “மாமன்னருக்கு அடியேனின் வணக்கங்கள்.... “ என்றான்.... திரும்பி பார்த்த மன்னர், விக்கிரமனை கண்டவுடன் மென்முறுவல் உதிர்த்தார்.... “விக்கிரமா!... நம் சோழ சாம்ராஜ்யத்தின் அடுத்த பட்டத்ததிபதி நீ தான்.... இன்னும் சிறுபிள்ளை போல நடந்துகொள்ளலாமா?...” என்றார் மன்னர்... “தந்தையே, தாங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை... நான் அப்படி செய்யத்தகாத காரியங்கள் எதுவும் செய்யவில்லையே?” என்றான் விக்கிரமன்.... “வீரபாண்டியனிடம் நீ பழகும்  விதம், முறை தவறி இருப்பதாக தெரிகிறது,,.... இதைப்பற்றி ஒரு தந்தையாக நான் உன்னிடம் கூறவே வார்த்தைகள் வர மறுக்கிறது.... சேரநாட்டு இளவரசி நந்தினி தேவியை உனக்கு மணம் முடிக்க சொல்லி சேரமான் இரும்பொறை தூதுக்கு மேல் தூதாக அனுப்பிக்கொண்டிருக்கிறான்.... நம் முன்னோர்கள் கரிகாலனைப்போல, சுந்தர சோழனை போல,ராஜராஜனை போல புலிக்கொடியை இந்த வையகம் முழுக்க பறக்க வைக்க உன்னால் மட்டும்தான் முடியும்.... அப்படி இருக்கையில், உன் முறை தவறிய செயல்களால் வரலாற்றில் நம் சோழ வம்சத்திற்கு நீங்காத பிழையை ஏற்படுத்தி விடாதே” என்ற மன்னரின் வார்த்தைகளில் எப்போதும் போல் அல்லாமல் சற்று கோபக்கனல் மிகுந்து காணப்பட்டது.... எல்லாவற்றையும் கேட்ட விக்கிரமனின் முகம் சுருங்கிப்போய்விட்டது, பவுர்ணமி நிலவாக  இருந்த விக்கிரமனின் முகம், பிறை சந்திரனாக மாறிவிட்டது.... “தந்தையே, சேரமன்னன் மகளை மணம் முடித்துதான் நம் சோழர் கொடியை உயர்த்திட வேண்டிய அவசியம் நம் சோழ சாம்ராஜ்யத்திற்கு ஏற்பட்டுவிடவில்லை ... எனக்கு உங்கள் ஆட்சியின் மீதும், என் திறமையின் மீதும், எல்லாவற்றையும்விட நம் சோழ நாட்டு வீரர்கள் மீதும் குறைவில்லாத நம்பிக்கை இருக்கிறது.... எத்தகைய பெரும் சேனைகள் வந்தாலும் அதை தவிடு பொடி ஆக்கிடும், மறக்குலத்தவர் நம் சோழ வீரர்கள்.... அதனால் அத்தகைய ஐயம் தங்களுக்கு வேண்டாம்.... மேலும், வீரபாண்டியனுடனான என்னுடைய உறவு நிச்சயமாக முறை தவறிய உறவல்ல.... நானும் அவனும் காதலர்கள்.... மொகாலய மன்னரான அலாவுதீன் கில்ஜியும், அவரின் தளபதியான மாலிக் கபூரும் எங்களைப்போன்று காதலர்கள்தான்.... வடக்கே தொடங்கிய அவர்களின் ஆளுகை தெற்கே பாண்டிய நாடு வரை ஆக்கிரமிக்கவில்லையா?.... அதைப்போல நானும் வீரபாண்டியனும் உலகம் போற்றும் ஆட்சியை நிர்மானிப்போம் தந்தையே” என்றான் விக்கிரமன்.... குழம்பிய மன்னர், “உங்கள் உறவை பற்றி விடு, அதைவிட முக்கியம் பாண்டிய மன்னர்கள்.... பாம்பின் பல்லின் விஷத்தைவிட, பாண்டியனின் நாவில் விஷம் அதிகம்..... சுந்தர பாண்டியன் மட்டும்தான் அதற்கு விதிவிலக்கு.... இந்த நேரத்தில் நமக்கு சேரனின் தோழமையும் வேண்டும்.... எல்லாவற்றையும் சிந்தித்து நல்லதொரு முடிவை எடு..... இப்போது செல்” என்றார் ..... “தந்தையே, நான் என் முடிவை சொல்லிவிட்டேன்..... இனி நான் கூறியதை வைத்து முடிவெடுக்க வேண்டியவர் தாங்கள்.... நல்ல முடிவை எடுத்து என்னிடம் தெரிவியுங்கள்” என்று கூறிவிட்டு தன் மாளிகையை நோக்கி விரைந்தான் விக்கிரமன்....
விக்கிரமன் அப்படி பேசிவிட்டு சென்ற திசையை வெறித்து பார்த்தபடியே நின்றார் மன்னர்.... மன்னரின் கண்களில் ஒரு கலக்கம் காணப்பட்டதை அறிந்த அமைச்சர் வாகனூர் கிழார், “மன்னரே, உங்கள் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது.... நம் இளவரசர் இன்னும் குழந்தைதான் மன்னா..... அவருக்கென்ற பொறுப்புகள் வந்துவிட்டால், எல்லாவற்றையும் உணர்ந்து செயல்படுவார்.... தாங்கள் அதற்காக வருந்த வேண்டாம்” என்றார்.... “இன்னும் எவ்வளவு காலம்தான் விக்கிரமன் குழந்தையாகவே இருப்பான் அமைச்சரே?... தாய் இல்லா பிள்ளை என்று கண்டிக்காமலே விக்கிரமனை வளர்த்ததன் விளைவு இப்போதுதான் புரிகிறது.... இவனின் செயல்களால் எப்படிப்பட்ட விளைவுகள் உண்டாகும் என்று நினைத்தாலே மனம் பதறுகிறது அமைச்சரே....” என்று மன்னர் பேச்சின் வருத்தத்தை உணர்ந்த வாகனூரார் , “இளங்கன்று பயமறியாது என்ற ஆன்றோர் சொல் இன்றுதான் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது..... எல்லாம் நன்றாகவே நடக்கும் மன்னா, தேவையற்ற கலக்கத்தை மனதிலிருந்து அகற்றிவிடுங்கள்....” என்ற ஆறுதல் வார்த்தைகளை மன்னர் ஏற்றபடி மாளிகையை நோக்கி சென்றார் மன்னர்..... தந்தையின் மீது கோபத்தில் தன் மாளிகைக்கு சென்ற விக்கிரமன், மனம் துவண்டு தன் மாளிகை மாடத்தில் நின்றபடி அருகில் இருந்த பூச்செடிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.... அந்த பூச்செடிகளுக்கு அருகில் ஒரு கருப்பு உருவம் நிற்பதை போல இருந்தது.... விக்கிரமனை பார்த்து சிரித்த அந்த உருவத்தின் பற்கள், வானில் ஜொலித்த நட்சத்திரங்களை ஒத்திருந்ததை கண்டபோதுதான் அது வீரபாண்டியன் என்பதை உணர்ந்தான் விக்கிரமன்.... உடனே முகமெல்லாம் புன்னகையுடனும், மனமெல்லாம் மகிழ்ச்சியோடும் அந்த இடத்தை நோக்கி ஓடி, அந்த உருவத்தை தொட்டபோது அது கானல் நீரை போன்று மறைந்துவிட்டது..... இது இன்று மட்டுமல்ல வெகு நாட்களாகவே நடக்கும் ஒன்றுதான்.... வீரபாண்டியனின் நினைவுகள் விக்கிரமனை ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தது.... அருகில் வீரபாண்டியன் இருப்பதைப்போல உணர்வதும், அருகே சென்றால் மறைவதும் என்று விக்கிரமனை இந்த காதல் படுத்திய பாடு எழுத்துக்களால் வடிக்க முடியாத உணர்வுகள்.... சோகமும் ஏமாற்றமும் நிறைந்த மனதோடு அங்கு விரித்திருந்த பட்டு மஞ்சத்தில் படுத்தான்..... உடலெங்கும் ஆங்காங்கே வீரபாண்டியன் பதித்த தழும்புகள் மெல்லிய வலியை உண்டாக்கியது..... அவன் அன்றைய பொழுதில் விக்கிரமனை கடித்த தழும்புகள் இன்னும் சிவப்பு நிறம் மாறாமல் அவனின் லீலைகளை நினைவுபடுத்தின..... வீரபாண்டியனின் வாசம், அவனின் தழுவல், அவனுடைய வெப்பம் என்று எதுவுமே வேறு எந்த விஷயத்தாலும் ஈடுகொடுக்க முடியாதவை.... தன் உதடுகளை வருடிய விக்கிரமன், அதில் வீரபாண்டியன் பதித்த முத்தங்களை நினைத்து ரசித்தான்.... அப்படியே அவன் நினைவுகளில் தூங்கிப்போய் விட்டான்.... அடுத்த சிலநாட்களும் இந்த பனிப்போர் மன்னருக்கும் விக்கிரமனுக்கும் இடையே நடந்துகொண்டிருந்தது.... அன்றொருநாள் விக்கிரமனை சந்திக்க வாகனூர் கிழார் வந்திருந்தார்.... அவரை வணங்கிய விக்கிரமன், “என்ன ராஜ தந்திரியாரே இவ்வளவு தூரம்?... முக்கியமான விடயம் ஏதேனும் உண்டா?” என்றான்.... “ஆம் இளவரசே... மீண்டும் சேர மன்னனிடமிருந்து தூது வந்திருக்கிறது” என்றார் கிழார்.... “என்ன விடயமாக?” என்ற விக்கிரமனின் கண்கள் கோபத்தில் அகண்டன... “தங்களுக்கு அவர்களின் இளவரசியை மனம் முடிக்க இறுதி தூது அனுப்பி இருக்கிறார் இரும்பொறை..... மன்னர் இதைப்பற்றி தாங்களே கூறி அனுப்பும்படி கூறிவிட்டார்” என்ற கிழார், வெளியில் நின்ற தூதுவனை அழைத்தார்.... விக்கிரமனை வணங்கிய சேர தூதுவன், “சோழநாட்டு யுவராஜருக்கு வணக்கம்.... தங்கள் முடிவை அறிந்து வரும்படி சேரமான் அவர்கள் என்னை இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்றான்..... “உங்கள் இளவரசி அவ்வளவு அழகானவரா?” என்றான் விக்கிரமன்..... “அதில் எள் அளவும் ஐயம் வேண்டாம் இளவரசே.... மாசற்ற பொன்னை போன்றவர், மாறிலா அழகை கொண்டவர், மாற்றிலா உள்ளம் கொண்டவர்.... மூவுலகமும் காணாத பேரழகை உடையவர்.... காண்போர் கண்கள் சிமிட்டாமல் கண்ணீர் வரும் அளவிற்கு பேரழகி அவர்....” என்று தூதுவன் சொன்ன வார்த்தைகளை கேட்ட இடியென சிரித்தான் விக்கிரமன்.... இளவரசனின் சிரிப்பிற்கு அர்த்தம் புரியாத தூதுவனும், வாகனூராரும் விழித்தனர்..... “எதற்காக மன்னா தாங்கள் சிரிக்கிறீர்கள்? என்றான் தூதுவன்.... சிரிப்பை நிறுத்திய விக்கிரமன், “இவ்வளவு பெரிய பேரழகிக்கு பொருத்தமாக உங்கள் சேர நாட்டில் ஒரு ஆண்மகன் கூடவா இல்லை?.... மூவுலகமும் வியக்கும் அழகை உடைய உங்கள் இளவரசிக்கு இந்த சோழநாட்டை தவிர வேறு வரன் கிடைக்கவில்லையா?.... உங்கள் சேரமானிடம்  போய் கூறு, இன்னும் ஆயிரம் முறை தூது அனுப்பினாலும் உங்கள் இளவரசியை மணக்க நான் சம்மதிக்க மாட்டேன் என்று” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான் விக்கிரமன்..... இந்த வார்த்தைகளை சிறிதும் எதிர்பார்க்காத அமைச்சர் திகைத்து நின்றார்..... இதை கேட்ட தூதுவன், சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டான்..... நடந்த விடயங்கள் அனைத்தையும் மன்னரிடம் அமைச்சர் தெரிவித்ததும், மன்னர் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார்....  விக்கிரமனை நினைத்து வருந்தி வருந்தியே மன்னரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.... வைத்தியர்கள் பலரும் பல மருந்துகள் கொடுத்தும், மன்னரின் உடல் நலம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது.... உடலின் குறைபாட்டை மருந்துகளால் குணப்படுத்திவிடலாம்..., மனதின் வருத்தங்களை எந்த மருந்தால் குணப்படுத்த முடியும்.... அதனால் சோழநாட்டின் பிரதான சோதிடர் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்.... சோதிடம் கணிப்பதிலும், நடக்க இருக்கும் நல்ல மற்றும் துன்ப நிகழ்வுகளையும் கணிப்பதில் இவர் சிறந்தவராக சோழ நாட்டை தாண்டியும் அறியப்பட்டவர்.... மன்னரின் சோதிட குறிப்புகளையும், இளவரசரின் சோதிட குறிப்புகளையும் கவனித்த சோதிடர், வெகுநேரமாக சோழிகளை உருட்டி கணித்தார்.... இறுதியாக மன்னரை பார்த்த சோதிடர், “மன்னர் மன்னா, தங்களின் குறிப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது..... இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு உங்களை அந்த எமதர்மன் எட்டிக்கூட பார்க்க மாட்டான்.... ஆனால் இளவரசரின் குறிப்புகள்......” என்று இழுத்தார்..... பதறிய மன்னர், “விக்கிரமனுக்கு என்ன ஆகும்?.... அவன்தான் முக்கியம்..... அதை முதலில் கூறுங்கள் சோதிடரே” என்றார்..... “இளவரசருக்கு ராகு திசையோடு, அஷ்டம சனியும் இணைந்துள்ள நேரமிது..... உயிருக்கே ஆபத்தான நிலைமை கூட இளவரசருக்கு வரலாம்.... கவனமும், கடவுள் அருளும் மட்டுமே இதிலிருந்து அவளை மீட்டெடுக்க வைக்க முடியும்....” என்ற சோதிடரின் வார்த்தைகளை கேட்ட மன்னர் திகைத்து நின்றார்..... முகமெல்லாம் வியர்த்து, வெளிரிப்போனது..... இதைக்கண்ட சோதிடர், “கலக்கம் வேண்டாம் மன்னா..... காளி தேவிக்கு சிறப்பான யாகங்களும், கால பைரவனை வழிபட்டாலும் இதிலிருந்து நிச்சயம் மீட்டுக்கொள்ளலாம்....” என்ற வார்த்தைகள் மன்னரை கொஞ்சம் நிம்மதி அடைய வைத்தது..... உடனே மன்னரின் கட்டளையால் காளி தேவிக்கு ஆயிரம் அர்ச்சர்கள் யாகம் நடத்த, பல மிருகங்களை பலி கொடுத்தும் பூசைகள் செய்தனர்..... மன்னர் கொஞ்சம் மன நிம்மதி அடைந்து இருந்த நேரம்..... அன்று பவுர்ணமி, வேட்டைக்கு விக்கிரமன் ஆயத்தமாவதை அறிந்த மன்னர் மீண்டும் கலக்கத்தில் ஆட்பட்டார்..... விக்கிரமனை தேடி சென்ற மன்னர், “விக்கிரமா!... இன்று நீ வேட்டைக்கு செல்ல கூடாது....” என்றார்.... “எதற்காக தந்தையே?..... ஏன் இந்த திடீர் கட்டளை?” என்றான் விக்கிரமன்.... “சோழநாட்டை போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நேரமிது.... இத்தகைய நேரத்தில் நீதான் இங்கிருந்து நம் சேனைகளை தயார் படுத்த வேண்டும்” என்றார் மன்னர்.... “என்ன சொல்கிறீர்கள் மன்னா?.... நம் நாட்டின் மீது படையெடுக்க யாருக்கு வீரம் பிறந்தது.... நம் சேனைகளையும், வீரத்தையும் அறிந்த பின்னர் ஒருவன் நம்முடன் போருக்கு வருவானா என்ன?” என்றான் விக்கிரமன்.... “இல்லை விக்கிரமா.... நம் மீது போர் தொடுக்க உள்ளவன் சாதாரண ஆள் இல்லை.... சேரமான் இரும்பொறை.... நம் சேனைகளுக்கு நிகரான படை வலிமை கொண்டவன்.... எதிரியை எப்போதும் குறைவாக மதிப்பிடாதே.... அதுவே நம் குறையை நிறைவாக நம்மிடம் காட்டி நம்மை ஏமாற்றிவிடும்” என்றார் மன்னர்.... “சரி தந்தையே.... ஆனால், இன்று நான் காட்டிற்கு சென்றே ஆகவேண்டும்.... சேரமான் போருக்கு வந்தால், நமக்கு உதவிட பாண்டியனிடம் கேட்டுக்கொள்வதற்காகவாவது நான் இன்று செல்ல வேண்டும்” என்று கூறிய விக்கிரமன், மன்னன் எவ்வளவோ கூறியும், அவற்றை மறுதளித்துவிட்டு வேட்டைக்கு கிளம்பினான்.....
மனம் வருத்தத்தில் வெளியில் சொல்ல முடியாத கவலையில் ஆழ்ந்தார் மன்னன்.... ஒவ்வொரு முறை வேட்டைக்கு செல்லும் முன்னரும், திரும்பும் போதும் செல்லும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டான் விக்கிரமன்.... காளி தேவிக்கு தீப ஆராதனை செய்துவிட்டு படபடப்போடு வெளியே வந்தார் பூசாரி..... பூசாரியின் முகத்தின் கலக்கத்தை கவனித்த விக்கிரமன் கலக்கத்திற்கான காரணத்தை வினவினான்.... தயங்கியபடியே பேசிய பூசாரி, “சோழ பேரரசின் தீரமிகு இளவரசரே, தாங்கள் இன்று வேட்டைக்கு செல்ல வேண்டாம்.... ஏதோ ஆபத்து உங்களை ஆட்கொள்ள இருப்பதாக உணர்கிறேன்.... காளி தேவியின் கழுத்தில் போடப்பட்ட மலர் கோவை தீபாராதனை காட்டியபோது தவறி விழுந்தது.... இது இந்த கோவிலை பொருத்தவரை துர்சகுனமாக கருதப்படும் ஒன்று..... வேண்டாம் இளவரசே, உங்கள் பயணத்தை காளி தேவி விரும்பவில்லை....” என்று கூறிவிட்டு அமைதியாக வியர்க்க விறுவிறுக்க நின்றார்..... சிறிய நிதானத்திற்கு பிறகு, பூசாரியிடம் எதுவும் சொல்லாமல் வெளியே வந்தான் விக்கிரமன்.... குழம்பிய பூசாரி, “இளவரசே, அரண்மனைக்குத்தானே செல்கிறீர்கள்?.... காளியின் கட்டளையை ஏற்காமல் வேட்டைக்கு செல்ல வேண்டாம்” என்று மன்றாடினான்.... அனல் கக்கும் பார்வையுடன் திரும்பிய விக்கிரமன் "பூசாரி, போதும் நிறுத்து..... ஆபத்து வரப்போகிறது என்று சொல்வதற்கு காளி தேவி தேவையில்லை, சோதிடர் போதும்.... எத்தகைய ஆபத்தையும் கானல் நீராக மறையவைக்கும் சக்தி படைத்தவள் நம் காளி தேவி.... அவள் என்னுடன் இருக்கும்வரை நான் எத்தகைய ஆபத்தையும் சந்திக்க தயார்...."என்று கூறிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்து குதிரையை நோக்கி நடந்தான் விக்கிரமன்.... அப்போது அருகில் வந்த காவலர்களில் ஒருவன், "இளவரசரே, ஏற்கனவே தங்களுக்கு ஆபத்து இருப்பதாக வளநாடு சோதிடர் கூறியதாக சோழநாடெங்கும் பேச்சாக இருக்கிறது, இந்நிலையில் காளி கோவிலிலும் எங்கள் கண் முன்னே துர்சகுனம் ஏற்பட்டுள்ளதாக பூசாரி கூறுகிறார், இதையும் தாண்டி நாம் காட்டிற்கு செல்ல வேண்டுமா இளவரசரே?" என்றான்..... இன்னும் கோபத்தில் கண்கள் சிவக்க, "மன்னர் நடத்திடும் நாடகத்தில் நீங்களும் அங்கத்தினரா?..... எத்தகைய தடங்கல் வந்தாலும் இன்று நான் வேட்டைக்கு செல்வது உறுதி..... உயிருக்கு அஞ்சிடும் கோழைகள் மீண்டும் நகருக்குள் செல்லுங்கள்....." என்று கூறிவிட்டு குதிரையில் ஏற முயன்றான் விக்கிரமன்....  எப்போதும் அமைதியாக நிற்கும் இளவரசரின் குதிரை, அன்று முரண்டு பிடித்தது.... பொறுமை இழந்த விக்கிரமன், "அகிலா! நீயுமா?.... எவர் வந்தாலும் வராவிட்டாலும் நீ என்னுடன் இறுதிவரை இருப்பாய் என்று எண்ணினேன்.... என் எண்ணங்களில் மண் இறைத்துவிட்டாய்.... நான் செல்கிறேன்" என்று கூறிவிட்டு நடக்க தொடங்கினான் விக்கிரமன்..... சில அடிகள் வைத்த விக்கிரமனை பின்தொடர்ந்த குதிரை, அவனிடம் மன்னிப்பு கேட்பதைப்போல குனிந்து நிற்க, நெகிழ்ந்த விக்கிரமன் குதிரையை உச்சி முகர்ந்து விட்டு அதில் ஏறி பயணிக்க தொடங்கினான்.....
விக்கிரமனும் காவலர்களும் அந்த மூங்கில் குடிலை அடைந்தபோது அங்கு ஏற்கனவே வீரபாண்டியன் வந்திருப்பதை கண்ட விக்கிரமன், மனதில் புன்னகையோடு உள்ளே நுழைந்தான்..... உள்ளே நுழைந்த விக்கிரமனை சிறிதும் தாமதிக்காமல் பின்னால் நின்றபடியே கட்டிப்பிடித்தான் வீரபாண்டியன்..... "எவ்வளவு நாழிகை உனக்காக காத்திருந்தேன் தெரியுமா?.... ஒவ்வொரு பவுர்ணமி நாள் அன்றும், உன்னை காண்பதற்காக ஒரு திங்கள் காத்திருக்க வேண்டும் என்ற வருத்தத்தை எல்லாம் உன்னை பார்த்ததும் மறந்துவிட்டேன் விக்கிரமா.....உன் உடலை வருட, இதழை சுவைக்க, உடலோடு புணர காத்திருந்த நேரமெல்லாம் உன் நினைவைவிட வேறு எதுவும் என்னை பாதித்துவிடவில்லை...." என்று கூறிவிட்டு விக்கிரமனின் முகத்தை பார்த்த வீரபாண்டியன் பதறியவனாக,"உயிருக்கு உரியவனே!... இத்தனை நாட்கள் கழித்து உன்னை பார்த்திட, மிகுந்த ஆவலுடன் வந்த என்னை உன் முகம் வேதனைகொள்ள வைக்கிறது.... எப்போதும் ஞாயிறு அனைய கதிர்களாய் சுடர்விடும் உன் முகம் இப்போது, காரிருள் மொய்த்த இருளாய் காணப்படுவது ஏன்?.... உன் மனதினுள் உள்ள வருத்தத்திற்கு காரணம் என்ன?" என்று விக்கிரமனின் கன்னத்தை வருடியபடி கேட்டான் வீரபாண்டியன்.... "எல்லாம் நம் உறவை பற்றிய சிந்தனைதான் பாண்டியா..... நம் புனிதமான உறவை மற்றவர்களுக்கு எத்தகைய வடிவில் உணரவைக்க முடியும்?.... எப்போது நம் காதல் பூர்த்தியாகும் ?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தான் விக்கிரமன்....வெடித்து சிரித்த வீரபாண்டியன், "இதுதான் உன் வருத்தத்திற்கு காரணமா?.... உனக்காக நான் நாடு, பதவி, மக்கள், என்று எதையும் துறக்க நான் தயார்..... அதைப்பற்றி நாம் இப்போது பேச நேரமில்லை, அதைவிட முக்கிய வேலைகள் இப்போது இருக்கின்றன " என்று கூறிவிட்டு விக்கிரமனின் இதழ்களில் கைவைத்து, இலஞ்சிவப்பான உதடுகளை இன்னும் சிவப்பாக்கினான்.... கவலைகளை மறந்த விக்கிரமனும் அன்றைய இணைவுக்கு ஆயத்தமானான்.... இதழோரம் உள்ள தேனினும் இனிய சாறை பருகி இன்னும் தன் உடலை சூடாக்கினான் வீரபாண்டியன்....  களவு முடிந்து வழக்கமான காம மயக்கத்தில் திழைத்திருந்தனர்  இருவரும்....  எல்லாம் முடிந்து மீண்டும் பயணத்திற்கு தயாரானபோது தான் கொண்டுவந்திருந்த குடுவையை விக்கிரம்னிடம் கொடுத்தான் வீரபாண்டியன்..... "என்ன இது பாண்டியா?" என்று வினவினான்.... "இது அரபு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பழச்சாறு...... மெல்லிய போதை தரும் மது வகை..... குடித்துப்பார்... வானத்தில் பறப்பதை போல உணர்வாய்" என்றான்..... மிகுந்த உற்சாகத்துடன் அதை வாங்கி பருகினான் விக்கிரமன்.... அப்போது தலை சுற்றுவதைப்போலவும், தடுமாறியதைப்போலவும் உணர்ந்த விக்கிரமன், மஞ்சத்தில் விழுந்தான்..... மூர்ச்சையாகிவிட்ட விக்கிரமன்,கண் விழித்து பார்க்கையில் எல்லாம் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தது..... இப்போது தான் புல் மற்றும் பச்சை தழைகளால் ஆன படுக்கையில் கிடந்தான்....நெற்றியில் பச்சிலை பூசப்பட்டிருந்தது.... சுற்றிலும் உடல் முழுக்க விபூதிகள் பூசப்பட்டு, கழுத்திலும், உடலிலும் மனித எழும்புகளால் ஆன மாலைகள், தலை முழுக்க ஜடாமுடி என்று பார்த்ததும் அவர்கள் 'கபாலிகர்கள்' என்பதை உணர்ந்தான்..... என்ன நடந்தது? தான் எங்கிருக்கிறோம்? என்று முழுமையாக உணரமுடியாமல் படுத்திருந்த விக்கிரமன் கொஞ்சம் எட்டிப்பார்த்தான்..... அங்கு ஒரு மரத்தில் வீரபாண்டியன் பினைக்கப்பட்டிருந்தான்.....  அவனருகில் முட்டி இட்டபடி இருபதிற்கும் மேற்பட்ட பாண்டிய வீரர்கள் கைகளில் கயிற்றால் பினைக்கப்பட்டிருன்தனர்..... மற்றொரு பக்கம் தன்னுடன் வந்த சோழ வீரர்கள் காயங்களுக்கு பச்சிலை மருந்து தடவிக்கொண்டிருந்தனர்.... பதற்றத்துடன் எழுந்த விக்கிரமன், மிகுந்த கோபத்துடன் "கபாலிகர்களே! என் வாளுக்கு இரையாக வேண்டுமா நீங்கள்?.... எதற்காக வீரபாண்டியனையும் அவன் ஆட்களையும் கட்டிவைத்திருக்கிறீர்கள் ?.....உடனே அவர்களை அவிழ்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு தன் வாளை உருவினான்..... அப்போது விக்கிரமன் முன் வந்து நின்ற ஒரு கம்பீரமான கபாலிகன், விக்கிரமனை வணங்கிவிட்டு, “இளவரசரே, தாங்கள் கட்டளையிட்டால் அந்த கயவர்களை நிச்சயம் நாங்கள் விடுவிக்கிறோம்.... ஆனால் அது உங்கள் வாள் வீச்சிற்கு அஞ்சி அல்ல, சோழ பேரரசின் மீதுள்ள பற்றால்..... “ என்று கூறிவிட்டு வீரபாண்டியனையும் அவன் ஆட்களையும் விடுவித்தார் அந்த கபாலிகர்..... “சோழ பேரரசின் மீது பற்றுள்ள நபர்கள் செய்யும் செயலா இது?.... நம் நாட்டின் எல்லைக்குள் வந்த விருந்தினருக்கு தாங்கள் கொடுக்கும் மரியாதையா இது?” என்று அந்த கபாலிகர் கூட்டத்தை பார்த்து கேட்டான் விக்கிரமன்.... அப்போது ஆற்றாமையோடு ஒரு கபாலிகன், “இளவரசே, இந்த கயவர் கூட்டமா நம் நாட்டு விருந்தினர்கள்?.... எதிரியாக இருப்பவன்கூட நேருக்கு நேர் போரிட்டுத்தான் இதுவரை மாண்பாக கருதப்பட்டது.... ஆனால், உங்களை மூர்ச்சையடைய வைத்து , தங்களின் கரங்களையும் கால்களையும் கயிற்றால் பிணைத்து தூக்கி சென்றதை பார்த்தபிறகும் இந்த கயவர் கூட்டத்தை நாங்கள் உயிரோடு வைத்திருப்பதே தங்களின் உத்தரவிற்காகத்தான்..... “ என்றான்..... விக்கிரமன் ஒரு நிமிடம் யோசித்தான்..... தான் அந்த பழச்சாறு குடித்தபிறகு என்ன நடந்தது? என்று எவ்வளவோ நினைவுபடுத்த முயன்றும் நினைவிற்கு கொண்டுவர முடியவில்லை..... விக்கிரமன் யோசிப்பதை கவனித்த வீரபாண்டியன், “விக்கிரமா, இந்த கபாலிக கூட்டம் சொல்வதை நீ நம்புகிறாயா?.... ,மனித உயிரின் மதிப்பு தெரியாமல் கடவுளின் பெயரை சொல்லி நரபலி கொடுத்து, காட்டிற்குள் வருவோரை வழிப்பறி செய்தும் பிழைக்கும் இந்த நபர்கள் சொல்வதை நம்புகிறாயா?” என்றான்..... விக்கிரமன் அத்தனை நேரம் யோசித்த எண்ணங்களையும் வீரபாண்டியனின் அந்த அனுதாபப்பார்வை தவிடுபொடி ஆக்கியது...... வீரபாண்டியன் சொன்னதை கேட்ட கபாலிகர் தலைவன், “போதும் நிறுத்தடா...... கொலையே செய்தாலும், அதை நாங்கள் மறைத்தோ மறுத்தோ பேசும் இரட்டை நாக்கு எங்களுக்கில்லை.... கால பைரவனின் பிள்ளைகளாக இந்த காட்டில் மட்டும் ஆயிரக்கணக்கான கபாலிகர்கள் இருக்கிறோம்..... இதுவரை ஆண்ட மன்னர்கள் எல்லாம் எங்களை ஒழிக்க பார்த்தார்கள்.... ஆனால், எங்கள் விமலாதித்த சோழர் பெருமகனார் மட்டும்தான் எங்களை மனிதனாக மாற்றினார்.... எங்களுக்கு தேவையானவற்றை மன்னரே செய்கிறார்.... இப்போதெல்லாம் நாங்கள் வழிப்பறியோ , நரபலியோ கொடுப்பதில்லை..... இப்போது கூட தங்களுக்கு ஆபத்து நேர இருக்கிறது என்று மன்னர் மூலம் வந்த செய்தியால் இங்கு வந்தோம்..... அந்த கால பைரவன் மட்டும் எங்களை சரியான நேரத்திற்கு இங்கு சேர்ப்பிக்காதிருந்தால் இளவரசை காப்பாற்றி இருக்கும் பெரும்பேறு எங்களுக்கு கிடைத்திருக்காது...... “ என்று கூறியதை கேட்ட விக்கிரமன் கொஞ்சம் கோபத்துடன், “இப்போதுதான் புரிகிறது, இதெல்லாம் என் தந்தையின் நாடகம் தான்.... என்னையும் வீரபாண்டியனையும் பிரித்திட அவர் செய்யும் சூழ்ச்சிதான் இது.... பாண்டியா! நீ செல்.... நான் இதைப்பற்றி என் தந்தையுடன் பேசிக்கொள்கிறேன்” என்று கூறினான்....  அப்போது அங்கு நின்ற சோழ வீரன் ஒருவன், “இளவரசே, கபாலிகர்கள் சொல்வது உண்மைதான்..... எங்களையெல்லாம் தாக்கிவிட்டு தங்களை தூக்கி சென்றது பாண்டிய நாட்டவர்கள்தான்” என்றான்..... கோபமடைந்த விக்கிரமன், “போதும் நிறுத்து..... யார் எதை செய்திருப்பார்கள் என்று நீ எனக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டாம்.... அனைவரும் சோழ நாட்டு மன்னருக்கு அளவுக்கதிகமான விசுவாசத்தோடு இருக்கிறீர்கள்..... உங்களிடம் இனி வேறு பேச்சு கிடையாது” என்று கூறிவிட்டு தன் குதிரையில் ஏறி அரண்மனை விரைந்தான்.... அன்று உடல் முழுவதும் வலியாகவும், களைப்பாகவும் இருந்ததால் நேராக தன் மாளிகைக்கு சென்று உறங்கிவிட்டான் விக்கிரமன்... மறுநாள் காலை இதுபற்றி தந்தையிடம் கேட்கவேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினான்.... இதற்கிடையில் நடந்த நிகழ்வுகளை விக்கிரமனுடன் வேட்டைக்கு சென்ற வீரர்கள் மன்னரிடம் தெரிவிக்க மன்னர் மிகவும் வருந்தினார்.... நாளுக்கு நாள் விக்கிரமனின் பிடிவாதமும், போக்கும் எத்தகைய விளைவுகளை உண்டாக்குமோ? என்ற அச்சத்தில் மனம் நொந்து இருந்தார்..... மறுநாள் காலை தாமதமாக எழுந்த விக்கிரமன், சிறிதும் கோபம் குறையாமல் நீராடிவிட்டு மன்னரை காண அரண்மனை சென்றான்.... எப்போதும் போல் அல்லாமல் அன்று சபை தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தது.... மன்னர், ராஜ தந்திரியார், தளபதி, பிரதம அமைச்சர்கள், வளநாடு சோதிடர்,  இவர்களோடு இன்னும் சில நபர்களும் அங்கிருந்தனர்.... மிக முக்கியமான தருணங்களில் மட்டுமே இவ்வாறு அவசர கூட்டங்கள் போடப்படும்...... மன்னரை வணங்கிய விக்கிரமன் தன் இருக்கையில் அமர்ந்தான்..... அனைவரும் எதைப்பற்றி விவாதிக்கிறார்கள் என்று கவனித்தான்.... ஏதோ போர்தொடர்பாக பேசுகிறார்கள்... அப்படியானால், சேரன் போருக்க வரப்போகிறானா?... வரட்டும், வந்து நம் வாளுக்கு இரையாகி போகட்டும் என்று உள்ளுக்குள் சிரித்தான்.... ஆனாலும், சேரனுக்காக இவ்வளவு கலக்கம் அடையக்காரணம் என்ன?.... சேரனைவிட படை வலிமையிலும், போர் திறத்திலும் வல்லவர்கள் நாம் என்று நாடறிந்த விஷயம் எனும்போது, இந்த பெரியவர்களின் தயக்கத்திற்கு காரணம் என்ன? என்றெல்லாம் சிந்தித்த விக்கிரமனை விளித்த மன்னர், “விக்கிரமா, நம் சோழநாடு இப்போது மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.... இப்போது நாம் எடுக்க போகும் முடிவுதான் நம் சோழ சாம்ராஜ்யத்தையே நிர்ணயிக்க போகிறது....” என்றார்....
“மன்னா!... தாங்கள் ஏன் இவ்வளவு மன வருத்தத்தோடு பேசுகிறீர்கள்?.... தாங்கள் பேசியதை கவனித்தபோது, நம்முடன் சேரன் போருக்கு வர இருப்பதாக தெரிகிறது..... சேரனைவிட படையிலும், போர் வலிமையிலும் நாம் வலிமை பெற்றவர்கள்.... அப்படி இருக்கையில் அச்சம் எதற்கு?” என்றான் விக்கிரமன்.... “சரிதான் விக்கிரமா.... ஆனால், சேரன் மட்டும் வருவதானால் நாம் அச்சப்பட தேவை இல்லை.... இப்போது போருக்கு வர இருப்பது சேரனுடன் பாண்டியனும்.... இந்த கூட்டுப்படையை எதிர்கொள்வது பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.....” என்ற மன்னரின் வார்த்தைகளை கேட்ட விக்கிரமன் மனம் குழம்பினான்..... அதிர்ச்சியில், “என்ன கூறுகிறீர்கள் மன்னா?.... பாண்டியன் எப்படி இதற்கு சம்மதித்திருப்பான்?.... இது வந்தந்தியாக இருக்கும்.... ஒருகாலும் பாண்டியன் நம்முடன் போருக்கு வரமாட்டான்” என்ற வார்த்தைகள் மன்னரை இன்னும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது..... விக்கிரமனை பரிவுடன் பார்த்த மன்னர், “நான் இதை கூறவில்லை விக்கிரமா.... நம் பிரதம ஒற்றன் செம்பியத்தேவன் கொண்டு வந்த நம்பகமான செய்தி இது.... அப்போது அந்த ஒற்றனும், “ஆம் இளவரசே, சேரன் இளவரசி நந்தினி தேவிக்கும், பாண்டிய இளவரசன் வீரபாண்டியனுக்கும் மணம் முடிக்க இருக்கிறார்கள்.... அதற்கு முன்னர் சோழ தேசத்தை கைப்பற்ற அவர்கள் தீட்டிய திட்டம்தான் தங்களை கடத்த முயன்றது கூட.... விஷயம் சோழ நாட்டிற்கு தெரிந்து நாம் சுதாரிக்கும் முன்னர் அவர்களே பெரும் சைன்யத்தை திரட்டி போருக்கு தயாராகிவிட்டார்கள்....” என்றான்..... செம்பியனை பற்றி விக்கிரமன் கேள்விப்பட்டதுண்டு.... மிகவும் நம்பகமான ஒற்றன்.... எத்தகைய சூழலையும் எளிதாக சமாளித்து தகவல் சேகரிப்பதில் வல்லவன்.... அப்படி ஒருவன் வீரபாண்டியனை பற்றி கூறியது விக்கிரமனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..... மற்ற அனைவரும் பலவாறாக போர் வழிமுறையை பற்றி விவாதித்துக்கொண்டிருன்தனர்..... ஆனால் விக்கிரமனின் எண்ணமெல்லாம் வீரபாண்டியனை சுற்றியே சுழன்றது..... இறுதியாக விக்கிரமனை அழைத்த மன்னர், “விக்கிரமா! இந்த போரை நீதான் வழிநடத்தி செல்ல வேண்டும்....” என்றார்.... திகைத்த விக்கிரமன், “மன்னா! நான் எப்படி.... ? என்னால் முடியாது” என்று பின்வாங்கினான் .... “விக்கிரமா! சோழ நாட்டின் ஒவ்வொரு ஆண்மகனும் போருக்காக வாள் ஏந்தி முன்னால் நிற்கையில், இளவரசன் அஞ்சி நிற்பது இதுவரை சோழ தேசம் கண்டிராத விந்தை” என்றார் மன்னர்.... “,மன்னிக்கவும் மன்னா..... பாண்டியன் என் தோழன்.... நான் இப்போது பாண்டிய நாட்டோடு போரிட்டால் அது எங்கள் நட்பிற்கு இழுக்காகும்.... எதிர்கால வரலாறு கூட நம் சோழ தேசத்தை இழித்து பேச வாய்ப்புண்டு..... அதனால் நம் தளபதி தலைமையில் படை செல்லட்டும்....என்னால் ஒருகாலும் என் நண்பனை எதிர்த்து களமாட முடியாது” என்றான் விக்கிரமன்.... இதை கவனித்த வாகனூர் கிழார், “இளவரசே,படையை  வழிநடத்தி செல்ல மட்டும்தான் தளபதி.... எப்போதும் படையை  முன்னின்று அழைத்து செல்வது மன்னர்கள்தான்.... நம் மன்னரின் உடல்நிலை படையை வழிநடத்திடும் அளவிற்கு ஒத்துழைக்கவில்லை.... இந்த தருணத்தில் அடுத்த பட்டது அதிபதியான தாங்கள் படையை முன் நின்று வழிநடத்தி போரிட வேண்டும்.... அப்போதுதான் போரிட இருக்கும் வீரர்களுக்கும் ஒரு புத்துணர்வாக இருக்கும்.... உங்களை எப்போது வீரபாண்டியன் எதிர்க்க துணிந்தானோ, அப்போதே உங்கள் நண்பன் அல்ல என்றாகிவிட்டான்.... நம் சோழ தேசத்தின் மீது படைஎடுப்பவன் கடவுளாகவே இருந்தாலும், எதிர்த்து நின்று போரிடுவதுதான் வீரனின் மாண்பு.... இளவரசனாக இருக்கும் தாங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் சோழ சைன்யத்தை காத்திட தயாராகுங்கள் இளவரசரே....” என்றார்.... விக்கிரமன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றான்.... இதுவரை சிறுசிறு போர்களுக்கு சென்றதுண்டு.... இப்படி ஒரு மாபெரும் போரில் பங்கேற்க வேண்டும் என்பது விக்கிரமனின் நெடுநாள் கனவு... ஆனால், அப்படிப்பட்ட தருணம் தன் நண்பனுடன் போரிடவா அமைய வேண்டும்? என்று மனம் நொந்தான்..... இப்போது வீரபாண்டியன் மீது சிறிது சந்தேகம் வந்தாலும், அதை உறுதிப்படுத்தாமல் மணம் நம்ப மறுத்தது.... பலவாறும் சிந்தனைகளில் இருந்த விக்கிரமனை பார்த்த மன்னர், “இத்தகைய திரிசங்கு நிலைமை நம் நாட்டிற்கு ஏற்படும் என்று நான் எண்ணிப்பார்க்க கூட இல்லை.... இது சோழ சாம்ராஜ்யத்துக்கே வாழ்வா சாவா ? போராட்டம்தான்.... இதில் வென்றால் விக்கிரமனுக்கு மும்முடி சோழன் என்கிற பட்டம் கிடைக்குமென நினைத்தேன்.... அவன் மறுத்தும் நான் அவனை போருக்க அனுப்ப நினைக்கவில்லை.... இன்னும் என் உடலில் உயிரும், உடலில் வழுவும் இருக்கிறது.... என் கடைசி மூச்சு உள்ளவரை என்னால் போரிட முடியும்... இந்த போருக்கு நான் தலைமை ஏற்கிறேன்..... தளபதியாரே, வீரர்களை தயார் படுத்துங்கள்.... முரசறிவித்து போர் தொடர்பான அறிவிப்பு வெளியிடுங்கள்...” என்று  மன்னர் கூறியபோது அங்கு நின்ற அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் மல்கியது..... இதை கூறிவிட்டு தன் இருக்கையை விட்டு எழுந்த மன்னர், கால் இடறி கீழே விழ முயன்றபோது விக்கிரமன் மன்னரை தாங்கி இருக்கையில் அமரவைத்தான்.... சிறிது அமைதிக்கு பிறகு விக்கிரமன், “மாமன்னா!... நானே போருக்கு செல்கிறேன்.... நம் மீது படையெடுக்க எண்ணம் வந்தாலே, இந்த போர்தான் மற்றவர்களுக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு எதிரி படையை ஓட ஓட விரட்டுவோம்.... இந்த போர் நிச்சயம் நம் சோழ வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் அளவிற்கு நமக்கு வெற்றியை தேடித்தரும்..... போர்க்களத்தில் நிற்பது என் வீரபாண்டியனாகவே இருந்தாலும், போர் முடிந்து வெற்றி முரசு கொட்டும்வரை அவனும் என் எதிரிதான்..... வெற்றி வேல்... வீர வேல்.... “ என்று கூறியபோது அவையில் இருந்த அத்தனை பேரும் “வெற்றிவேல்! வீரவேல்!.... சோழ மாமன்னர் விமலாதித்தர் வாழ்க, சோழர் புகழ் ஓங்குக.... இளவரசர் விக்கிரம சோழர் வாழ்க” என்ற கோஷம் இப்போதே வெற்றி முழக்கமாக மன்னரின் செவிகளில் கேட்டு, மன்னரின் மனதை நிம்மதி கடலில் மூழ்கடித்தது....
அடுத்த இரண்டு நாட்களும் விக்கிரமன் வேறு எவ்வித சிந்தனையும் இல்லாமல் தீவிர போர் பயிற்சிகளில் ஈடுபட்டான்..... இளவரசரின் ஈடுபாட்டையும் பயிற்சியையும் பார்த்து அனைத்து வீரர்களும் வீர வேங்கையாக களத்திற்கு ஆயத்தமானார்கள்.... போருக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது... சோழர் படையுடன், பல்வேறு குறுநில மன்னர்களின் படையும் அணிவகுத்து போர்க்களத்தை நோக்கி விரைந்தனர்.... வீரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஆக்ரோஷம் காணப்பட்டது, வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற மன உறுதி தெரிந்தது.... யானைப்படை, குதிரைப்படை, வில் எய்தும் வீரர்கள், காலாட்படை, என்று அணிவகுத்து செல்வதை பார்ப்பவர்களின் மனதில் கூட வீரம் வரும் அளவிற்கு இருந்தது.... புலிக்கொடி தாங்கிய வீரன் முன்னே செல்ல, இளவரசன்  விக்கிரமன் , தளபதி மற்ற அமைச்சர்கள் என்று முன் நின்று படையை வழிநடத்தி சென்றார்கள்..... சில தூரம் சென்றபிறகு, எதிரில் சேரர் மற்றும் பாண்டியர் படை வருவதை கவனித்தார்கள்....  எதிரில் வந்த படையை கண்ட அனைவரும் அதிசயித்து போனார்கள்.... சேரர் மற்றும் பாண்டியர் கூட்டுப்படை எல்லைகளே இல்லாமல் வந்துகொண்டே இருந்தது....  கலிங்கத்துப்பரணியில் கூறுவதைப்போல, “பார் சிறுத்தலிர் படை பெருத்ததோ, படை பெருத்தலிர் பார் சிறுத்ததோ” எனும் அளவிற்கு உலகமே சிறியதாக தெரியும் அளவிற்கு சேரர் பாண்டியர் படை பெரிதாக இருந்தது..... மேலும், குதிரைப்படையில் இருந்த அத்தனை குதிரைகளும் அரபு நாட்டு குதிரைகள்..... படை வலிமையில் சோழர் படையைவிட சிறப்பாக இருந்தது அவர்களின் கூட்டுப்படை.... ஆனாலும் மனம் தளராத விக்கிரமன், வீரபாண்டியனுடன் பேச வேண்டும் என்று அழைத்தான்.... இரண்டு படைகளுக்கும் நடுவே வந்த வீரபாண்டியனை பார்த்த விக்கிரமன், “பாண்டியா! உன்னைப்பற்றி நான் எவ்வளவோ விடயங்கள் கேள்விப்பட்டேன்.... அத்தனையும் பொய்யாக இருக்கும் என்று நினைத்து போருக்கு வந்தேன்... ஆனால், நீயே படைக்கு தலைமை தாங்கி நிற்பதை காணும்போது மனம் வலிக்கிறது.... போர் வேண்டாம்.... நாம் எப்போதும் நட்பு நாடுகளாகவே இருப்போம்.... சேரனின் ஆசை வார்த்தைகளுக்கு விலை போய்விடாதே” என்றான்.... இடியென சிரித்த வீரபாண்டியன், “சோழ இளவரசருக்கு எங்கள் படையை பார்த்ததும் அச்சம் வந்துவிட்டது போலும்.... இன்னும் எத்தனை காலத்திற்கு சோழனின் அடிமையைப்போல எங்கள் பாண்டிய நாடு இருக்க நினைக்கிறாய்..... என் தந்தையை நட்பு என்று சொல்லியே இத்தனை காலம் எங்கள் சாம்ராஜ்யத்தை விரிவாக்க முடியாமல் செய்தது உன் தந்தை.... நானும் என் தந்தை போலவே ஏமாளியாகவும், அடிமையாகவும் இருக்க நான் விரும்பவில்லை.... சேரன் மகளை நான் மணம் முடித்து, உன் நாட்டையும் வென்று மும்முடி பாண்டியனாக என் பாண்டிய சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும்.... என் முன்னோர்களின் கனவை நினைவாக்க வேண்டும்..... போருக்கு பயந்தவனாக இருந்தால் இப்போதே நீ ஓடிவிடு, உயிராவது பிழைப்பாய்” என்று மீண்டும் சிரித்தான்....
கடும் கோபம் கொண்ட விக்கிரமன், “போதும் நிறுத்தடா பாண்டியா.... என் தந்தை சொன்னதைப்போல பாம்பின் விஷத்தைவிட, உன் நாவின் விஷம் கொடுமையானது என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.... நட்பு, காதல் என்று பொய் வார்த்தைகளை கூறி என் நாட்டை அல்ல, என் நாட்டின் ஒரு பிடி மண்ணை கூட நீ கொண்டு செல்ல முடியாது..... ஆனால் இன்று உன் இறப்பு நிச்சயம்.... உன்னைப்போல ஏமாற்ற நினைப்பவர்கள் அத்தனை நபர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்..... “ என்று கூறியபடியே தன் படையை நோக்கி விரைந்தான்.... இறுதியாக தன் படை வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கிய பின் போர் தொடங்கியது..... எதிரில் நிற்பவன் எமனாக இருந்தாலும் அஞ்சாமல் போரிட்டனர் சோழ வீரர்கள்..... சேரனின் படை வலிமை பெரிது என்பதால் போர் மிகவும் உக்கிரமாக இருந்தது.... யானைகள் ஒன்றோடொன்று மோதி, இடி போன்ற முழக்கத்தை கொடுத்தது..... பல கல் தொலைவிலும் குருதியும், மனித உறுப்புகளும் கிடக்க, பல நாழிகைகளுக்கு பிறகும் போர் நிறைவடையாமல் நடந்தது..... ஆனால், சோழ வீரர்கள் எவ்வளவோ போராடியும், வீரர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியதால் சோழர் பலம் வெகுவாக குறைந்தது..... சில குறுநில மன்னர்களின் வீரர்கள் பின்வாங்க தொடங்கினர்.... இந்த நிலையில் எதிரே வரும் ஒருவன் தலையையும் உடலோடு விடாமல் வீழ்த்தி சாய்த்தான் விக்கிரமன்.... அப்போது பாண்டிய வீரன் ஒருவன் விட்ட அம்பு விக்கிரமனின் மார்பை குறி பார்த்து வந்தது.... இதை கவனிக்காமல் வேறொருவனுடன் வாள் வீசிக்கொண்டிருந்தான் விக்கிரமன்... அப்போது விக்கிரமனை காப்பாற்றும் பொருட்டு தன் முன்னங்கால்களை தூக்கிய விக்கிரமனின் குதிரை, அந்த அம்பை  தன் மார்பில் வாங்கியது....  அந்த அம்பு பாய்ந்த மறு நொடியில் சுருண்டு விழுந்தது விக்கிரமனின் குதிரை.... நிலைமையை உணர்ந்த விக்கிரமன், “அகிலா!!!!!” என்று அலறினான்.... அந்த சத்தம் வானை பிழக்கும் அளவிற்கு ஓலமாக ஒலித்தது.... குதிரையை பார்த்து கண்ணீர் விட்ட அந்த நொடியில், பாய்ந்து வந்த ஒரு அம்பு விக்கிரமனின் கால்களில் குத்தி, அவனும் சரிந்தான்.....அதிர்ச்சியோடு  திரும்பிய விக்கிரமன், அந்த அம்பை எய்தவன் வீரபாண்டியன் என்று நினைத்தபோது மேலும் அதிர்ந்தான்.... காலில் குத்திய அம்பை எடுத்து வீசிய விக்கிரமனால் எழ முடியவில்லை.... சோழர் படை மிகவும் சுருங்கி இரட்டை இலக்கத்தை அடைந்தது....  விக்கிரமனின் நிலையை கண்ட சில வீரர்கள் பதறிப்போய் அவன் அருகில் வரவே, அவர்களையும் தூக்கி எரிந்தது பாண்டியனின் அம்புகள்.... விக்கிரமன் எல்லா நம்பிக்கைகளையும் இழந்தான்... தான் தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தினை ஒரு மகனாக நிறைவேற்ற முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானதை எண்ணி வருந்தினான்.... அப்போது தன் குதிரையில் அவன் முன் வந்து நின்ற வீரபாண்டியன், “என்ன சோழ இளவரசரே, எழ கூட முடியாத முடவனாக ஆகிவிட்டீர் போல.... உங்கள் சோழ சைன்யம் இப்போது மண்ணாகிவிட்டது போலும்.... இப்போதாவது என்னிடம் மன்னிப்பு கேட்டால் உனக்கு உயிராவது மிஞ்சும்” என்று கூறினான்.... “மன்னிப்பு கேட்டு உயிர்வாழ்வதைவிட, இந்த களத்தில் உயிர்விடுவதே மேல்.... உன் வாளுக்கு இரையாகிறேன், என்னை கொன்றுவிட்டே போ” என்றான் விக்கிரமன்..... “உன்னை நான் கொல்ல விரும்பவில்லை.... உன்னை உயிரோடு கொத்தித்தின்ன வானில் பறக்கும் கழுகுகள் ஆர்வமாக இருக்கின்றன.... அவைகளின் கையில் உன் உயிரை கொடுக்கிறேன்” என்று சிரித்தான் வீரபாண்டியன்.... “இதுவரை நல்ல நட்பென்றால் கோப்பெருஞ்சோழனும் , பிசிராந்தையாரும் தான் நினைவுக்கு வருவார்கள்.... அதேபோல கூடா நட்பென்றால் விக்கிரம சோழனும் வீரபாண்டியனும் நினைவுக்கு வரும் அளவிற்கு செய்துவிட்டாய்..... என் தந்தை, அமைச்சர்கள், நண்பர்கள், என்று யார் கூறியும் ஏற்காமல் உன் நட்பையும் காதலையும் நம்பிய எனக்கு நீ கொடுத்த பரிசு இந்த உலகில் எவருக்கும் கிடைத்திராத பரிசு..... நிச்சயமாக இதற்கு காளிதேவியும், காலபைரவனும்தான் விடை கூறவேண்டும்” என்று கூறியபோது விக்கிரமனின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் மண்ணில் விழுந்தது.... அந்த நொடியில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் புயல்போல தங்களை நெருங்கி வருவதை கவனித்தார்கள் இருவரும்..... அருகில் வர வர தான் அது புயல் இல்லை.... ஆயிரக்கணக்கான கபாலிகர்கள் வெறியோடு ஓடிவருவதை கவனித்தார்கள்.... பொதுவாக கபாலிகர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள்.... ஆனால், விக்கிரமனுக்காக அவர்கள் ஓடிவருவதை உணர்ந்த வீரபாண்டியன் அஞ்சி தன் குதிரையில் தப்பிக்க முயன்றான்.... அப்போது அருகில் கிடந்த ஒரு குத்தீட்டியை எடுத்து குறி எய்து பாண்டியன் மீது தொடுத்தான்.... அது அவன் முதுகில் குத்தி, நிலை குழைந்து விழுந்தான் பாண்டியன்..... போரில் புறமுதுகிட்டு மடிந்தான் வீரபாண்டியன்.... கபாலிகர்கள் வந்ததும் பின்வாங்கி சென்ற சோழ வீரர்கள் பலரும் களத்திற்கு வந்து போரிட தொடங்கினார்கள்..... சில நாழிகளில் சேரர் பாண்டியர் கூட்டுப்படை கபாலிகர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட தொடங்கினர்..... அந்த சமயம் விக்கிரமன் வலி பொறுக்காமல் மூர்ச்சையானான்...... மூர்ச்சை விலகி, கண்கள் விழித்து பார்த்தபோது மஞ்சத்தில் படுத்திருந்தான்..... அருகில் மன்னர் உட்பட முக்கிய சபையினர் அனைவரும் இருந்தனர்..... விழித்த விக்கிரமனை பார்த்த மன்னர், “விக்கிரமா! சாதித்துவிட்டாய் செல்வமே..... சோழர் புகழை உலகறிய வைத்துவிட்டாய்..... நம் புலிக்கொடியை பார் புகழ செய்துவிட்டாய்..... “ என்றார்.... கண்கள் கலங்கிய விக்கிரமன், “இவ்வளவு காலம் தங்களின் வார்த்தைகளின் உண்மை தெரியாமல் தங்களை மிகவும் வருத்திவிட்டேன்..... என்னை மன்னிக்கவும் தந்தையே.... நான் பிழைக்க காரணமாக கபாலிகர்களை உரிய நேரத்தில் தகவல் கொடுத்து அனுப்பி வைத்ததால்தான் நான் இப்போது உயிரோடவே இருக்கிறேன்.... ஒவ்வொரு முறை நான் தவறு செய்தபோதும், அந்த தவறுக்கான விளைவை நான் அனுபவிக்கும் முன்னரே என்னை காப்பாற்றிவிட்டீர்கள்....” என்றான்.....

“போரில் நம் சைன்யம் தோல்வியை நோக்கி செல்வதாக தகவல் வந்தது..... வேறு வழியின்றி கபாலிகர்களுக்கு தகவல் தெரிவித்தேன்.... போரில் ஈடுபடுவதில்லை என்ற தங்கள் கருத்தையே நமக்காக மாற்றிக்கொண்டு களத்திற்கு வந்தார்கள் அந்த வீரர்கள்.... இன்னொன்றை நான் உனக்கு தெளிவுபடுத்த வேண்டும் விக்கிரமா....நான் எப்போதுமே உன் காதலுக்கு எதிரானவன் இல்லை.... நீ தேர்வு செய்தவனிற்குத்தான் எதிராக இருந்தேன்..... இனி நீ யாரை மணம் முடிக்க கோரினாலும், நானே செய்துவைக்கிறேன்..... இன்று மாலை உனக்கு பட்டாபிஷேகம்..... மும்முடி சோழனாக நீ பட்டம் ஏற்க வேண்டும்..... இனி உன்னை நம்பி எவ்வித தயக்கமும் இன்றி நாட்டை ஒப்படைக்கலாம்..... நான் ஆன்மிக பணிகளில் ஈடுபட பல்வேறு புனித தளங்களுக்கு செல்ல உள்ளேன்..... மேலும், இன்று மாலை ஒரு புதிய அறிவிப்பும் வெளியிடப்போகிறேன்..... நம் சாம்ராஜ்யம் விரிந்துள்ள இடங்களில் எல்லாம் இனி ஒரு பால் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு..... “ என்று கூறிய மன்னர் விக்கிரமனின் நெற்றியில் உச்சி முகர்ந்தார்..... மன்னரை கட்டிப்பிடித்த விக்கிரமன் வார்த்தைகள் வெளிவராமல் அழுதான்..... அந்த நேரத்தில் அவன் உள்ளத்தை வெளிக்காட்ட வார்த்தைகள் தேவைப்படவில்லை..... காதலுக்காக உயிரையே கொடுப்பது தவறில்லை.... ஆனால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு உங்கள் காதலும் காதலரும் உயர்ந்தவர்களா? என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.... உலகத்திலேயே அதிகம் ஏமாறுவதும், அதிகம் ஏமாற்றப்படுவதும் காதலில்தான் அதிகம்.... அதை உணர்ந்து புரிந்து நடந்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்..... நல்ல காதலரை தேர்ந்தெடுங்கள், உங்களுக்காகவே காத்திருக்கும் அந்த நபருக்காகவே உங்கள் வாழ்வை அற்பனியுங்கள்......

(இந்த வரலாற்று கதை முழுக்க முழுக்க கற்பனைதான்...... இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே...... யார் மனதையும் புண்படுத்துவது கதையின் நோக்கமல்ல....)

9 comments:

  1. Superb story vijay. Good work. My heartiest wishes for ur writing work.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா....... உங்கள் வாழ்த்திற்கு நன்றி..... தொடர்ந்து மற்ற கதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் பாலா....

      Delete
  2. Very nice.....I really feel like i've been to the chola age...

    ReplyDelete
  3. Ithu than nan paditha muthal kathai anna!

    ReplyDelete
  4. அருமை என்றால் அது மிகையாகாது ் ஒப்பிட இயலாத கற்பனை என்ற போதும் இது போன்று ஓரின காதல்களை நம் முன்னோர்கள் வரலாற்றில் மறைத்து இருப்பர் என்பது என் யூகம்

    ReplyDelete
  5. I am So happy to read this epic story an.. as nagha said kandipa namma ancestors kum indha madhiri feelings irundhurukum.........

    ReplyDelete