Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 24 March 2013

மாணவர் போராட்டங்கள்.... புரட்சியை நோக்கி....

யாரும் கனவிலும் எதிர்பார்த்திராத மாணவர் புரட்சி நடந்துகொண்டு இருக்கிறது.... ஈழத்து உறவுகளுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடும் மாணவர்களை காணும்போது “நானும் தமிழன்” என்று சொல்லிக்கொள்வதில் ரொம்பவே பெருமையா இருக்கு... இத்தனை நாட்கள் போராட்டங்களிலும் ஒரு சிறு வன்முறை கூட இல்லாமல், தங்கள் இலக்கை நோக்கி உண்மையான சாத்வீக முறையில் போராடுகிறார்கள்...

மாவீரன் பிரபாகரனின் வேகமும், தியாக சுடர் திலீபனின் பொறுமையும் இணைந்த உருவத்தை ஒவ்வொரு மாணவரின் உருவத்திலும் காணமுடிகிறது.... தெலுங்கானா போராட்டத்தில் “உஸ்மானியா” பல்கலைக்கழக மாணவர்களின் ஒருநாள் போராட்டம் கலவரமாக முடிந்தது நினைவிருக்கலாம்... இத்தனை நாட்கள் ஈழப்போராட்டத்திலும் மாணவர்களால் ஒரு சிறு வன்முறை கூட நிகழ்த்தப்படாதது வரலாற்றின் உதாரணம்.... வகுப்புகளை புறக்கணித்தார்கள், மத்திய அலுவலகங்களை முற்றுகை இட்டார்கள், உண்ணாவிரதம் இருந்து தங்களையே வருத்திக்கொண்டார்கள், சாலை மறியல் செய்தார்கள்.... அரசியல் கட்சிகளை சரியான தூரத்தில் ஒதுக்கி வைத்திருந்தார்கள்...
முன்பெல்லாம் ஈழம் பற்றி தொலைக்காட்சிகளில் நேர்காணல்களில் பேசும் நபர்களின் வயது ஐம்பது வயதாகி இருக்கும்... இப்போது இருபதுகளில் வயதை கொண்ட நபர்கள் “வட்டுக்கோட்டை தீர்மானம் முதல் ராஜீவ்-ஜெயவர்தனா ஒப்பந்தம் வரை” எல்லாமும் பேசுவதை காணும்போது, என்றாவது ஈழம் மலரும் என்ற உறுதியான நம்பிக்கையை மனதிற்குள் விதைக்கிறார்கள்... 

மாணவர் போராட்ட வாசகங்களில் என்னை ரொம்பவும் கவர்ந்த வாசகங்கள் இரண்டு.... “பிரபாகரன் உயிர் கொடுத்தது ஒரு பாலச்சந்திரனுக்கு, அந்த பாலச்சந்திரன் உயிர்கொடுத்தது லட்சக்கணக்கான பிரபாகரன்’களுக்கு”, “எங்கள் போராட்டத்தின் முடிவு என்பது இலங்கையின் வரைபடம் மாறுவது மட்டுமே.... மாறுவது இலங்கையின் வரைபடமா, இந்தியாவின் வரைபடமா? என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்..”...

மாணவர்களின் போராட்டம் என்பது இனிதான் இன்னும் அதிகமாக இருக்கவேண்டும்... இம்மாத இறுதிவரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருக்கும் மாணவ அமைப்புகள், தங்கள் கோரிக்கைகளை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும்....

·        1.இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தைஇந்தியா புறக்கணிக்க வேண்டும் (ஏற்கனவே கனடா நாடு புறக்கணிக்கும் முடிவை எடுத்துவிட்டது, பிரித்தானியாவும் பரிசீலனையில் இருக்கிறது),
·        2.ஆசிய போட்டிகள் மட்டுமல்லாமல், இலங்கை வீரர்கள் பங்குகொள்ளும் எந்த விளையாட்டும் இங்கு நடக்க கூடாது.... ஐபிஎல் அணிகளில் இருந்து இலங்கை வீரர்கள் நீக்கப்படவேண்டும்....
·           3.இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும்....

இந்த மூன்று கோரிக்கைகளும் பிரதானமாக இருக்க வேண்டும்.... இதுநாள் வரை நமக்கு எதிரியாக காங்கிரசை மட்டும் நினைத்தோம்.... இலங்கைக்கு எதிராக நம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றுவது தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், இந்த தீர்மானத்துக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் முதலில் பேசியது நாம் அதிகம் நம்பிய பாரதிய ஜனதா கட்சிதான்... அங்கு பேசிய சுஸ்மா சுவராஜ் அம்மையார், “இலங்கை நமது நட்பு நாடு, அவர்களுக்கு எதிராக தீர்மானம் நம் நாடாளுமன்றத்தில் இயற்றக்கூடாது” என்றார்... இந்த பேச்சுக்கு மாணவர் ஒருவர் விடுத்த கருத்து எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.... “இலங்கை உங்களுக்கு நட்புநாடு என்றால், தமிழ்நாடு உங்களுக்கு பகை நாடா?” என்பதுதான் அது.... பாஜக மட்டுமல்ல முலாயம் சிங்’இன் சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளுமே நம் கோரிக்கைகளுக்கு எதிராகத்தான் இருக்கிறது....

அதனால் நமக்கு எதிரிகள் சத்தியமூர்த்தி பவனில் இருப்பவர்கள் மட்டுமல்ல, “கமலாலயத்தில்” இருப்பவர்களும் தான்....

நம் மாநில கட்சிகள் இந்த விஷயத்தில் நமக்கு ஆதரவாக இருப்பது மட்டுமே ஒரே ஆறுதல்... நம் சார்பாக நம் மாநிலத்தை சார்ந்த “முப்பது” நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே நம் குரலாக நாடாளுமன்றத்தில் தங்கள் குரல்களை பதிவுசெய்ய முடியும்.... இங்கிருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களை நான் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை....
மாணவர் போராட்டம் நிச்சயம் நல்ல பலனை தரும்.... இந்த போராட்டம் மட்டுமே மத்தியில் ஆளும் அரசை அசைத்துப்பார்க்கும் போராட்டம்.... இதுவரை எத்தனையோ உரிமைகளை இழந்தோம்... காவிரி விவகாரம், முல்லை பெரியாறு, கூடங்குளம் என்று நாம் இழந்தது தான் நிறைய... இனி நாம் இருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும், இழந்ததை மீட்கவும் இந்த போராட்டங்கள் நல்லதொரு பாதையை வடித்துக்கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.... மாணவர் போராட்டம் ஓங்குக.... மாணவர் போராட்டங்களுக்கு பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் என்று அனைத்து தரப்பினரும் ஆதரவு நல்கி, நம் உறவுகளை காப்போம்... இப்போது விட்டுவிட்டால், உறவுகளை கைவிட்ட பழி பாவத்திற்கு காலத்திற்கும் நாம் ஆட்பட்டுவிடுவோம்..... 

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்,
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்,
பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும்,
பகைவர் ஓடும் சேதி கிடைக்கும்”
-          உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன் எழுதிய இந்த வரிகளுக்கு விரைவில் உயிர்கிடைக்க இறுதி வரை போராடுவோம்....

1 comment:

  1. நன்றி இந்தியதமிழர்களின் அழவற்ற அன்புக்கு............
    எனக்கு வேறுஎதுவும் சொல்லதெரியவில்லை....!
    ஆனால் உண்மமை இதுதான் ஒருபோதும் சிங்கள அரசு தமிழீழத்தை தராது. இது எம்மவர்கள் இருந்தால் ஒருவேளை சாத்தியபட்டிருக்கலாம்
    ஆனால் தற்பொழுது யதார்தத்தில் சத்தியப்படாது இதுதான் உண்மை
    தற்போது நாங்கள் வேண்டுவது சம உரிமை சமஷ்டிஆட்சிமுறை
    தயவுசெய்து அதையாவது பெற்றுதாருங்கள், சற்று யோசித்து பாருங்கள் நான் சொல்வது சரி என்று புரியும். நானும் தமிழ் உணர்வாழந்தான் எனக்கும் நீங்கள் சொல்வது சரி என்றுதான் படுகிறது
    ஆனால் யதார்த்தம் அப்படிஇல்லை என்பதுதான் உண்மை. ஏன் எனில் தமிழீழத்தை இந்திய மத்திய அரசும் ஏற்காது, முதலில் எமக்கு சம ஆட்சி அந்தஸ்து பெற்றுதாருங்கள் பிறகு இதை யோசிக்கலாம், இதை உங்கள் மத்திய அரசும் ஏற்கும். நீங்கள் தமிழீழத்தை 100 வருடத்திற்கு பிறகு தருவதை விட இப்போது தரும் சமஷ்டி ஆட்சியே மேல். ஏன்எனில் நீங்கள் தமிழீழத்தை தரும்போது தமிழர்களே இருக்கமாட்டார்கள், எனவே தற்போதய யாதற்தத்தை புரிந்துகொண்டு
    சம அதிகாரங்களுடன் கூடிய சமஷ்டி ஆட்சியை பெற உதவுங்கள். அதுதான் எங்களின் உடனடி தேவை. இல்லாவிடில் தமிழருக்கு என்று ஒரு பிரதேசமும் இருக்காது. எங்கள் மாகாணசபை தேர்தல் பற்றி மிகசிறப்பாக செய்திகள் தந்தன இந்திய தொலைக்காட்சிகள் ஆனால் அவை மறைத்துவிட்டன மாகாணஅரசு ஒரு அதிகாரம் அற்ற அரசு என்பதை நாங்கள் பெரும்பான்மையாக வென்றும் செயலாற்ற முடியாதவர்களாய் இருக்கிறோம் இன்று யாழ்பாணத்திலும் சிங்கள குடியேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அதைதடுக்க மாகாணஅரசுக்கு அதிகாரம்இல்லை. இதுதான் இங்கு இருக்கும் உண்மை நிலை அதனால் தான் நான் சொல்கிறேன் 100 வருடத்திற்கு பிறகு தமிழீழத்தை தருவதை விட இப்போது பெற்றுதரும் தரும் சம அதிகாரத்துடனான சமஷ்டி ஆட்சியே மேல். அப்போதுதான் நாம் இலங்கையில் எம் நிலப்பரப்புக்களை தக்கவைக்க முடியும்.
    நன்றியுடன்
    இப்படிக்கு;- இலங்கை யாழ்ப்பாண தழிழன்

    ReplyDelete