Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 10 February 2014

"முதல் இரவுப்பயணம்..." - சிறுகதை...


ப்படி ஒரு தருணத்தில் அகிலனை பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை... திருச்சியிலிருந்து சென்னை கிளம்பும் அந்த சொகுசு பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளிக்காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, என் பக்கத்தில் காலியாக இருக்கின்ற இருக்கையில் அமரப்போவது அகிலன்தான் என்பது அந்த நிமிடம்வரை என் கற்பனைகளுக்கு கூட அப்பாற்பட்ட ஒரு விஷயம்... பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த அதே உடல் தோற்றம் தான் என்றாலும், இப்போது அங்கங்கள் மட்டும் தன் இலகுத்தன்மையை இழந்து, முறுக்கேறி இருப்பதாக பார்த்தவுடன் தோன்றியது...
அவனை முதலில் பார்த்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது....
பன்னிரண்டாம் வகுப்பில் படித்த வயதில், சென்னையில் ஒரு அறிவியல் கண்காட்சியில்தான் அகிலனை நான் முதலில் சந்தித்தேன்... நூற்றுக்கணக்கான பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மத்தியில் தொடர்பே இல்லாத நானும் அவனும் சந்தித்து, பேசி, உடலால் உள்ளத்தால் கலக்க வேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்ட விதியா? என்பது எனக்கு புரியவில்லை...
“வணக்கம் சொல்லும் ரோபோ, மகிழுந்துக்கான நவீன சென்சார் கருவி, பணம் வைத்து பூட்டப்பட லேசர் பணப்பொட்டி” என்று அறிவியலை மேற்தட்டு மனோபாவத்தோடு மட்டுமே அணுகி, ஆராய்ந்து, நாட்டுக்கு அற்பனித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு மத்தியில், “புகை வராமல் சமைக்க பயன்படும் விறகு அடுப்பு” செய்துவைத்த அகிலனின் வித்தியாசமான பார்வைதான், அவன் மீதான என் முதல் காதல் பார்வைக்கு அடித்தளம்!...
“உங்க படைப்பு நல்லா இருக்கு...” என்று தொடங்கிய எங்கள் பேச்சு, கண்காட்சி நடந்த மூன்று நாட்களும், “உசேன் போல்ட்”இன் ஓட்டத்தை போல நிற்காமல் ஓடியது.... நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளவில்லை, “ஐ லவ் யூ... நீ இல்லாம நான் வாழ முடியாது” என்கிற சினிமா வசனங்கள் பேசிடவில்லை, மடியில் படுக்கவைத்து “கண்ணே, மணியே, புஜ்ஜி, குட்டி...” செயற்கை வர்ணனைகளால், வார்த்தைகளுக்கு வண்ணம் சேர்க்கவில்லை.... ஆனால், உளமார இருவரும் அந்த உறவை உணர்ந்தோம், ஓரிரவில் ஒன்றாகவும் கலந்தோம்....
நாங்கள் இருவரும் சந்தித்தது “விதி” என்றால், எங்கள் பிரிவுக்கான காரணமும் விதிதான் என்பதில் ஐயமில்லை... மூன்று நாட்களுக்கு பிறகு எங்கள் பள்ளிகளை நோக்கி நாங்கள் நகர்வதற்கான நேரமும் வந்தது, பரிமாற்ற அலைபேசி அப்போதில்லை, துண்டுக்காகிதத்தில் எழுதப்பட்ட அகிலனின் முகவரி கூட, நான் ஊர் வந்து சேர்வதற்கு முன்பு கசக்கி எறியப்பட்டது... ஆனால், அதற்கு காரணம் விதியில்லை, என் நண்பனொருவனின் சதி... என் சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்த அந்த காகித சுருளை கசக்கி எரிந்து, உள்ளே துழாவி ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துவிட்டான்.... அந்த அற்ப “ஐந்த ரூபாயில்” அகிலனுடனான அனைத்து தொடர்புகளையும் நான் இழந்தேன்....
அதன் பிறகு எத்தனையோ நாட்கள் அவன் நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கும்... அகிலன் எனக்காகவே படைக்கப்பட்ட ஒருவன் என்பதான நினைப்பு எனக்குள் எப்போதும் நிலைபெற்றிருக்கும்... ஆனாலும், தேடிக்கிடைக்காத புதையலாகத்தான் அவன் இத்தனை வருடங்களும் இருந்துவிட்டான்... மனப்பசியை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, உடற்பசியை தீர்த்துக்கொள்ள “பிளானட் ரோமியோ” வசமெல்லாம் வாசம் செய்தேன்.... சிற்சில அழகன்களையும் சந்தித்து, உடலால் உறவாடினேன்....
ஆனாலும் ஏனோ, முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரிடம் என் வெற்றுடலை காண்பிக்கவும், உடலால் இன்பம் துய்க்கவும் என் மனம் இடம்கொடுக்க மறுத்தது... யாரோ ஒரு தெரியாத நபர், என் உடலை தொடும்போது உடலில் “புழு நகர்வதாகவும், கம்பளிப்பூச்சி நெருடுவதாகவும்” உணர்வுகளை என் மூளை பிரதிபலிக்கும்... நாளடைவில், வேற்று ஆண்கள் என்னை தொட்ட மறுகணமே என் உடல் அறிப்பதை போல உணர்வுகள் மேலிட்டது....
என்ன செய்யலாம்? உடலின் பசியை தீர்க்க மனம் வழிவிட மறுக்கிறது... மனதின் பசியை தீர்க்க, காலம் பதில் சொல்ல தயங்குகிறது... என்னதான் செய்வது?....
இப்படி யோசித்துக்கொண்டிருந்த அப்படி ஒருநாளில்தான் என் அருகில் வெகு இயல்பாக வந்து அமர்ந்தான் அகிலனும்....
மன்மதன்’கள் எப்போதும் கையில் அம்புடன் வருவதில்லை, சில நேரங்களில் கையில் “வாட்டர் பாட்டிலுடன்” வந்தும் நம் பக்கத்தில் அமரலாம்.... அருகில் அமர்ந்த அதே வேகத்தில் என்னை முழுவதும் கபளீகரம் செய்வதை போன்ற ஒரு பார்வையை வீசினான்...
அகிலனுக்கு லேசான தெத்துப்பல், அதை வெளிக்காட்ட தயங்கியே எப்போதும் அந்த “அளவான புன்னகை” என்னும் அளவீட்டை வைத்திருப்பான்... இப்போதும் அந்த வழக்கமான உதடு பிரியாத புன்னகையை அவன் உதிர்க்க, என் மனதிற்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்க தொடங்கியது...
“பேச்சை எப்படி தொடங்கலாம்?” என்று நான் யோசித்து வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எவ்வித பதற்றமும் படபடப்பும் சிறிதும் இல்லாமல் அகிலனே பேச்சை தொடங்கிவிட்டான்....
“சென்னைல வேலை பாக்குறீங்களா?”
“இல்ல... திருச்சிலதான் வொர்க் பண்றேன், சென்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் விஷயமா போறேன்...” என் வார்த்தைகளில் தயக்கமும் தடுமாற்றமும் கலந்தே வெளிவந்தது....
அதன்பிறகு பேச்சுகள் ஏனோ திசையற்ற காற்றாடி போல எங்கெங்கோ பறந்தது...
“சென்னைல இப்போலாம் க்ளைமேட் ரொம்ப மோசம்...” புவியியலில் தொடங்கி,
“மின்வெட்டு நேரம் இப்போ அதிகமாக்கிட்டாங்க, சோலார் பவர் தான் இதுக்கல்லாம் ஒரே வழி....” இயற்பியலில் பயணித்து,
“வர்ற எலெக்சன்ல காங்கிரஸ் ரொம்ப மோசமா அடிவாங்கப்போகுது....” ஆபத்தான அரசியலில் அவன் பேச்சுகளை நிறைவுசெய்தபோது, பேருந்து பெரம்பலூரை நோக்கி பயனித்துக்கொண்டு இருக்கிறது..... அர்த்தமற்ற பேச்சுகள்தான் காதலின் மொழி என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்...
மெல்ல பயணிகள் ஒவ்வொருவராக நித்திரையில் ஆழ்த்திக்கொள்ள தொடங்கிவிட்டனர்... பேருந்து விளக்குகள் அணைக்கப்பட்டு, மெல்லிய சிவப்பு விளக்கின் வெளிச்சம் மட்டும் பழுப்பாக பேருந்தில் படர்ந்திருந்தது....
இளைஞன் ஒருவன் அலைபேசியில் வெகுநேரமாக குறுஞ்செய்தி தட்டிக்கொண்டிருக்க, குழந்தை ஒன்று மெலிதான சிணுங்கலை சினுங்கிக்கொண்டு இருந்ததை தவிர மற்றவர்கள் எல்லாம் பெரும்பாலும் இந்நேரம் “ஆல்பா” நிலையில் தூக்கத்தை நோக்கி பயணித்திருக்கக்கூடும்....
ஒருவழியாக அகிலனும் தன் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, “குட்நைட்” சொல்லிவிட்டான்...
எனக்கோ படபடப்பு அதிகமானது.... அப்போதைய மூன்று நாட்களுக்கு இடையில் இருந்த “பத்து வருட” இடைவெளியின் தாக்கமே இல்லாமல் அவன் பேசுவது எனக்கு மகிழ்வாக இருந்தாலும், மறுபுறத்தில் அந்த “இயல்பில்” கொஞ்சம் பயமும் எனக்கிருந்தது... “நான் காதலாகவும், வாழ்க்கையாகவும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு உறவை, அவன் சாதாரண ஒன்றாக கருதிவிடுவானோ? இப்போது அவனுக்கு என் மீது ஈர்ப்பு இல்லையோ?” போன்ற கேள்விகள் என் மனதை இன்னும் அதிகமான பயப்பதற்றத்தில் ஆழ்த்தியது....
புரியாத குழப்பத்தில் விரல் நகத்தை நான் கடித்துக்கொண்டிருக்க, அகிலனின் கை என் மீது எதேச்சையாக பட்டது... தூக்கக்கலக்கத்தில், வண்டியின் குலுக்கத்தில் இதெல்லாம் இயல்பான ஒன்றுதான் என்று கருதி, மேற்கொண்டு என் கடித்தலை நகம் தாண்டி, விரல் நோக்கி கொண்டுசென்றுவிட்டேன்....
எதேச்சையாக என் மீது பட்ட கை, வண்டியின் குலுக்களுக்கு எதிர்த்திசையில் பயணிக்க தொடங்கியது... அப்போதுதான் எனக்கு மண்டைக்கு மேலே பல்பு எறிந்தது, காதுகளுக்குள் மணி அடித்தது... மேற்கொண்டு நகரப்போகும் காட்சிகளை “மெளனமாக” கவனிக்க நானும் ஆயத்தமானேன்... என் எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை... கைகளை தாண்டி அவன் உடலும் என் மீது தன் தழுவுதலை தொடங்கியது... விழுப்புரம் செல்வதற்குள் அந்த உல்லாச பயணம் “உச்சக்கட்டத்துடன்” நிறைவுக்கும் வந்துது... பத்து வருட காத்திருப்பின் பலனை, அந்த பத்து நிமிடத்தில் நான் அடைந்துவிட்டேன்... நீண்ட நாட்களுக்கு பிறகு உடலால் மட்டுமல்லாது, மனதாலும் முழு நிறைவு பெற்ற ஒரு உறவாடல்.... வெகுகாலத்திற்கு பிறகு ஒரு உறவுக்கு பின்பு, என் உடல் “புழுவின் ஊறுதலையும், அரிப்பையும்” எதிர்கொள்ளவில்லை..... அவன் இன்னும் என் மீதான அந்த ஈர்ப்பினை துறக்கவில்லை என்பதை நான் உணர்ந்த தருணம் அது....
முழு மனநிறைவோடு, அவன் தோள் மீது சாய்ந்தபடி கண் அயர்ந்தேன்....
சென்னையின் புறநகரை நாங்கள் அடைந்தபோது, அதிகாலை நான்கு மணி... காரிருள் மெல்ல அகன்று, பழுப்பிருள் அப்பிக்கொண்டு நிற்கும் விடிகாலை பொழுது....
இருவரும் விழித்துவிட்டோம்... இரவின் உறவால் ஒருவித வெட்கத்தின் வெளிப்பாடாக தயக்கத்துடன் நான் அமர்ந்திருக்க, அகிலனோ எவ்வித நிகழ்வின் சுவடும் வெளிக்காட்டாதவனாக, “ஓகே.... இன்னிக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா?” என்றான்...
எனக்கோ மகிழ்ச்சியின் உச்சத்தில் என் மனம் துள்ளிக்குதித்தது... நான் “எப்படி கேட்பது?” என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்த கேள்வியையும் அவனே கேட்டுவிட்டான்...
தொடக்கம் முதலே எங்கள் காதல் விளையாட்டில், பாய்ன்ட்’களை அவன்தான் அள்ளிக்கொண்டு இருக்கிறான்... முதன்முதலாக என் புள்ளிகள் கணக்கை துவக்க எண்ணி, அவன் முகத்தை நோக்கி என் தலையை நிமிர்த்தி, “உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க அகிலன்...” என்றேன்....
ஆனால், அவன் முகமோ அதுவரை நிறைத்துவைத்திருந்த புன்னகையை சட்டென இழந்து, புருவங்கள் உயர்த்தப்பட்டு ஆச்சரிய குறியீடாய் என்னை பார்த்து,  “என் பெயர் உங்களுக்கு எப்டி தெரியும்?... என்னை முன்னாடியே தெரியுமா உங்களுக்கு?” எச்சிலை விழுங்கிவிட்டு கேள்வியை கேட்டான்....
அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் நான்.... அப்போதுதான் மெதுவாக என் உடலில் புழுக்கள் நகர்வதாகவும், கம்பளிபூச்சிகள் நெருடுவதாகவும் தோன்றியது... மெல்ல உடல் முழுக்க அரிப்பு பரவ தொடங்கியது.... (முற்றும்)

16 comments:

  1. sila manithargal ippadi thaan. silar akilanai pola poovuku poo amatum vandaaga iruppargal entha poovin thenai kudithom endru gnaabagam irukkadhu.

    ReplyDelete
    Replies
    1. சில மனிதர்கள் இல்லை அண்ணா, இங்கே பல மனிதர்கள் அப்படித்தான்.... கருத்துக்கு நன்றி அண்ணா...

      Delete
  2. vijay nalla story.... i didnt expect the ending... but paavam ,akilan anbai ethir paathu romba yaemaatram... but different story... the reality in ur writings is each story s different from other... ungal eluthu paniku en vazhalthukal...nan thalai vanangukuren

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாலா....

      Delete
  3. தண்ணீர் புட்டியுடன் வந்தமர்ந்த மன்மதன், அர்த்தமற்ற பேச்சுகள், ஐந்து ரூபாய் நாணயத்திர்க்காக நண்பனின் சதி என்று இயல்பு காட்சிகள்; ஆல்பா நிலை உறக்கம், புகைவராத விறகு அடுப்பு என்று அறிவியலையும் சீண்டிவிட்டு, புழுக்களும் கம்பிளிபூச்சியும் தீண்டுவது போன்ற உளவியல் என்னும் பன்முக கோணங்களில் பயணித்த அழகான கதை. பலர் கூறுவது போல் விஜய் விக்கியின் முத்திரை கதை என்று சொல்லலாகுமா ?

    ReplyDelete
    Replies
    1. முத்திரை கதையெல்லாம் இல்லை தோழி.... இதுவும் வழக்கமான கதை போலத்தான்.... மற்ற கதைகளை காட்டிலும் கருவில் வித்தியாசமாக இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதை என் ஐம்பதாவது கதை.... விரைவில் அதை வெளியிடும்போது, அதுதான் முத்திரை கதையாக இருக்கணும்னு ஆசைப்படுறேன்... உங்களின் மேன்மையான கருத்துகளுக்கு நன்றி தோழி..

      Delete
  4. Etharthamana story. perumbalum bus travella start aguratha, neenga intha storyla mudichirukeenga. Nalla karpanai valam anna ungaluku.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி...

      Delete
  5. very good attempt Vijay.. keep up the good work. :) :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுமி....

      Delete
  6. Vijay,
    good story, i really enjoyed it, infact enjoyed all your story.
    my only request would be, why dont u explain the sexual pleasure between them in a bit more detail.. like what hapened in the 10 minutes in the bus... would be more fullfilling as a story when it has everything, including the sex element. ( like many of the good english movies will have a good erotic scene included..)..

    ReplyDelete
    Replies
    1. நன்றி டேவிட்.....
      உங்கள் கருத்துகள் எனக்கு புரியுது.... ஆனால், இந்த வலைப்பூவின் முக்கிய நோக்கம் விழிப்புணர்வு தான்... பொழுது போக்கு இரண்டாம் பட்சம்தான்... அதனால், காம காட்சிகளை நான் கதையில் இணைக்கும்போது பொதுத்தள நண்பர்களின் பார்வை தளத்திலிருந்து விலகும் அபாயம் இருக்கு... அதனால்தான், இதை முழு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தளமாக தொடர்கிறேன்...

      Delete
  7. super vijay...சில இடங்களில் விஜய் trend esp that manmathan with water bottle...ha ha...ரொம்ப ரசிச்சு படித்தேன்...வழக்கம்போல் உங்க நெகடிவ் முடிவு...but இது நிறைய பேரின் வாழ்க்கையில் கொஞ்சம் வேறு வேறு மாதிரியான நிகழ்வாக இருக்கும்...jus like that மாதிரி சொல்லும் பாணி வித்தியாசமாக இருக்கு...கலக்குறீங்க விஜய்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாம்.... வழக்கம்போல உங்கள் நிறைவான கருத்துகளில் உள்ளம் உவந்தேன்...

      Delete
  8. வழக்கமான நிகழ்வுக்கு புது விதமான அணுகுமுறையில் எழுதி இருப்பது அருமை : விஜய் விக்கி அண்ணா கலக்குறிங்க.

    ReplyDelete
  9. vijay unga kaigal'la edho vitthaigal vechirukinga'nu ninaikka thondrugiradu, unga padivugalaiyum adan varigalaiyum padikumbodu.. manmadan eppovum ambodu mattumilla water bottle'dum varuvan endra varigal... miga arumai.. my heartiest wishes for your 50th story... kaklakunga!

    ReplyDelete