Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 10 January 2014

“பச்சை சட்டை, கருப்பு பேன்ட்...” – சிறுகதை....


    பச்சை சட்டை, கருப்பு பேன்ட்...” – சிறுகதை....

   வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில், தன் படுக்கை அறையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தான் அசோக்... கதவை சாத்திய வேகத்தில் “படார்” என்று அதிர்ந்த சத்தத்தில் மீன் தொட்டிக்குள் நீந்திக்கொண்டிருந்த மீன்கள் ஒருசில வினாடிகள் நீந்த மறந்து நின்றன... அறைக்குள் ஏற்கனவே நிலவிய இதமான தட்ப வெப்பத்தை இன்னும் சிலிர்ப்பாக்கிய குளிரூட்டியோடு, ‘வீட்டின் எல்லா மூலைகளிலும் காற்றை கொண்டு சேர்க்கும்’ என்று விளம்பரத்தில் சொல்லப்பட்ட அந்த முன்னணி நிறுவனத்தின் காற்றாடியும் தீவிரமாக இயங்கியும் கூட, அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அருவியாய் அசோக்கின் காதோரம் வழிந்தது வியர்வைத்துளிகள்....
அறைக்குள் எதற்காகவோ தயாராக விரிக்கப்பட்டிருந்த படுக்கையின் மீது அமர்ந்தபடி, தன் பைக்குள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியே வைத்தான்... தூக்க மாத்திரைகள், வீரியமான விஷமருந்து நிரப்பப்பட்ட குடுவைகள், ஒரு குளிர்பான புட்டி... அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைக்கும்போதும், அவன் கைகளின் நடுக்கமும், தொண்டைக்குள் விழுங்கப்பட்ட உமிழ்நீரும் அவனுடைய மனதிற்குள் புதைந்திருந்த பயத்தையும், பதற்றத்தையும் அப்பட்டமாகவே வெளிக்காட்டியது...
ஒரு கண்ணாடி குவளையில் முதலில் குளிர்பானத்தை ஊற்றி, அதனோடு விஷத்தையும் கலந்தான், பிறகு ஒவ்வொரு மாத்திரையாக எண்ணிக்கொண்டே (மாத்திரையை அல்ல, ஏதோ நினைவுகளை எண்ணிக்கொண்டு) அதனுள் போட்டுக்கொண்டிருக்க, அறையின் வெளியிலிருந்து ஒரு குரல் “போதும் போதும்.... மிக்ஸிங் சரியா இருக்கும்” என்றது.... விஷக்கலவையை கலந்துகொண்டிருந்த கைகள் சட்டென நிற்க, கழுத்து அறையின் வாயிலை நோக்கி திரும்பியது... யாராக இருக்கும்?... “அம்மாவும் அப்பாவும் வெளியூருக்கு சென்றுவிட்டார்கள், பணிப்பெண் தன் வேலையை காலையிலேயே முடித்து சென்றுவிட்டாள், அருகில் வசிப்போர் வேறு யாரும் கூட ஹாலிற்குள் வரும் அளவிற்கும் பழக்கமில்லை....”
யோசனைகள் மூளையை கசக்கிக்கொண்டிருக்க, கால்கள் மெல்ல ஹாலை நோக்கி நகர்ந்தது... மனதிற்குள் கொஞ்சமும் பயமில்லை, மரண விளிம்பில் நிற்கும் ஒருவனுக்கு பயம் எப்படி இருக்கும்?....
ஹாலில் இருக்கையில் அமர்ந்தபடி, தொலைக்காட்சி சேனல்கள் ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறான் ஒரு புதியவன்... பார்ப்பதற்கு திருடன் போலவல்லாம் இல்லை, வீடு தவறி வந்தவனை போலும் இல்லை... கல்லூரி மாணவன் ஒருவன் வெகுநாள் பழகிய தன் நண்பன் வீட்டில் வந்து, சாவகாசமாக அமர்ந்திருப்பதை போல வெகு இயல்பாக அமர்ந்தவாறு, அஷோக்கை நோக்கி திரும்பி, “ஹாய் அஷோக்.... வா, உக்காரு.... செந்தில் ஜோக் பார்த்தியா?... தற்கொலை பண்ணிக்க போறதா சொல்லிட்டு அவன் அடிக்குற லூட்டியை பார்த்தியா?... ஹவா ஹவ்வா...ஹவ்வா.... ஹவா ஹவாவா...” பாடியபடியே சிரித்தான்....
“ஹலோ... நீ யாரு?... என் பேர் உனக்கெப்படி தெரியும்?... எப்டி வீட்டுக்குள்ள நுழைஞ்ச?” அஷோக் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தான்....
“இந்த கேள்விக்கல்லாம் பதில் தெரிஞ்சா உன்னை என்ன ப்ரீ பாஸ் கொடுத்து சொர்க்கத்துக்கா கொண்டுபோகப்போறாங்க?... தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்கு நிச்சயம் நரகம்தான்... இதைத்தான் ரிக் வேதத்துல ‘அதோ சம்பாக்ய முகந்தவே!... சமோ தேவாய பஹம் பஹம்’னு சொல்லிருக்காங்க...” தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு புதியவன் இப்படி சொன்னதை, அஷோக் கொஞ்சம் ஆச்ச்சரியத்துடனே பார்த்தான்....
“சரி.... உங்க பேர் என்ன?... உங்களுக்கு என்ன வேணும்?” பவ்யமாக கேட்டான் அஷோக்....
“பேரு தெரியனுமா?... சரி, உன் வசதிக்காக ஈசன்’னு வச்சுக்கோ... எனக்கு ஒன்னும் வேணாம்... இப்போ எமகண்டம், நீ இறந்தா நிச்சயம் நரகம்தான்... அதனால, ஒரு அறை மணி நேரம் கழிச்சு இறந்துடு... அதுவரை உனக்கு கம்பெனி கொடுக்க வந்ததா நினைச்சுக்கோ....”\
“கம்பெனியா?”
“ஆமா.... மன்னார் அண்ட் கம்பெனி.... நீ நினைக்குற மாதிரி மத்த விஷயத்துக்கான கம்பெனி கிடையாது, கொஞ்சம் பேச மட்டுமே...”
“நீங்க நல்லா பேசுறீங்க” மெல்ல அரும்பிய புன்னகையை மறைக்க விரும்பாதபடி, ஈசனின் அருகில் அமர்ந்தான் அஷோக்....
“இனி நீதான் பேசனும்... உனக்கு என்ன பிரச்சின? ஏன் தற்கொலை பண்ணிக்க போற?”
“நான் ஒரு கே... முதன்முதலா இப்போதான் ஒரு அந்நியர்கிட்ட இப்டி வெளிப்படையா என்னோட பாலீர்ப்பை பற்றி சொல்றேன்...”
“கே’யா இருக்கிறது தப்பில்லையே?”
“இல்லைதான்... ஆனால், அழகில்லாம, அதுவும் இந்தியாவுல பொறந்தது தப்பாகிடுச்சே?” சொல்லும்போது அஷோக்கின் வார்த்தைகள் தடுமாறியது...
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு....”
“இந்தியா போல ஹோமொபோபிக் சமூகம் நிறைஞ்ச நாட்டுல, என்னோட பாலீர்ப்பை பற்றி சொல்லக்கூட முடியாம வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?.. முதன்முதலா என்னோட ஒரு நண்பனை செட்யூஸ் பண்ணேன்.. இப்போவரைக்கும் என்கூட அவன் பேசுறதில்ல, வருஷமும் ஏழாச்சு... அவன் என்னைய புரிஞ்சுக்கல...”
“அட முட்டாளே.... உபநிஷதங்கள்ல கூட ‘மஹோ மகாந்த மிதுனோ தனாயமா விபோ தேவ!’னு விருப்பமில்லாமல் மற்றொருவரை தொடுவதுகூட மிகப்பெரிய பாவம்னு சொல்லிருக்கு.... உன் நண்பன் ஸ்ட்ரைட்னு தெரிஞ்சும் அவனை செட்யூஸ் பண்ணது உன் தப்புதானே?... எத்தனையோ கே பசங்க கொட்டிக்கெடக்குற இந்த நவீன உலகத்துல, ஒரு ஸ்ட்ரைட் பையனை போய்.... அடப்போடா....”
“நானும் அந்த தவறை உணர்ந்துதான், பிளானட் ரோமியோ, பேஸ்புக்னு கே பசங்களை தேடுனேன்...”
“கெடச்சாங்களா?”
“ஹ்ம்ம்... நெறைய.... ஆனால், போட்டோ கேட்பாங்க, நான் அனுப்புவேன்... அவ்ளோதான், அதுக்கப்புறம் ஒரு ரெஸ்பான்சும் வராது... ஒரு தடவை இல்ல, நூறு தடவைக்கு மேல வெந்து நொந்து போய்ட்டேன்....” விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகளுக்கு இடையே, தன்னை நொந்துகொள்ளவும் தயங்கவில்லை அஷோக்...
“ஏன் பதில் அனுப்பல?”
“ஹ ஹா... என் மூஞ்சிய பார்த்துமா உனக்கு அந்த சந்தேகம்?”
“நீ ஒன்னும் அசிங்கமா இல்லையே?” அஷோக்கின் முகத்தை ஒருமுறை உற்றுப்பார்த்தவாறே கேட்டான் ஈசன்...
“அதே நேரத்துல அழகாவும் இல்லையே?”
“தற்கொலை பண்ணிக்க இதல்லாம் ஒரு காரணமா யாராச்சும் சொல்வாங்களா?”
“தற்கொலை பண்ணிக்கன்னு எதாச்சும் காரணங்கள் வகுத்திருக்காங்களா என்ன?”
“நீயும் நல்லாதான் பேசுற” ஈசன் சிரித்தான்...
“பேசி என்ன புண்ணியம்?”
“சரி... நல்லாதான் பேசுறியே, இப்டி டேட்டிங் பண்றத விட்டுட்டு ஒருத்தனை பாக்காமலே லவ் பண்ணிருக்கலாம்ல?.. போட்டோ அனுப்பாம, பேசிட்டு மட்டும் லவ் பண்ணி அடுத்த கட்டத்துக்கு உன்னோட காதலை நகர்த்தி இருக்கலாம்ல?...”
“அதையும் நான் முயற்சி பண்ணாம இல்ல... அப்டி அஜித்தை பார்த்து நான் செஞ்ச தப்புதான் இப்போ தற்கொலை வரை நிறுத்திருக்கு.... புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டா மாதிரி....”
“ஏன்? என்னாச்சு?” ஆர்வத்தில் கேட்டான் ஈசன்...
“போட்டோ ஷேர் பண்ணிக்காம லவ் ப்ரப்போஸ் பண்ணி, ஒரு மாசம் பேசி, இன்னிக்கு ‘பச்சை சட்டை, ப்ளாக் பேன்ட்’ போட்டிட்டு வர்றதா பஸ் ஸ்டான்ட்’ல வந்து வெய்ட் பண்ண சொன்னான் ஒருத்தன்... நானும் ரெண்டு மணி நேரமா நின்னேன், கால் பண்ணி பார்த்தா சுவிட்ச் ஆப் பண்ணிருக்கான்... எங்கயோ நின்னு பார்த்துட்டு, என்னைய புடிக்கலைன்னு சொல்லிக்காம ஓடிட்டான்... இந்த மாதிரி நான் அவமானப்பட்டதும் கூட இன்னையோட பதினாலாவது முறை... இவ்வளவு விரக்தியும் சேர்ந்து என்னைய இந்த அளவுக்கு கொண்டு வந்திடுச்சு....” கண்களை துடைத்துக்கொண்டான் அஷோக்....
“சரி... உன்னை புறக்கணிச்சவனுக்காக நீ இறக்கனுமா?... ‘உன்னை மதிக்காதவனை, துரும்பினும் கீழாக நினை’னு ஓஷோ சொல்லிருக்காரு....”
“இல்ல ஈசா... என்னைய யாருக்குமே புடிக்கல...”
“யாருக்குமேன்னா? உன் அம்மா அப்பாவுக்கா?”
“இல்ல... அவங்களுக்கு புடிக்கும்...”
“உன்னோட நெருங்கிய நண்பர்களுக்கா?”
“இல்ல... அவங்களுக்கு நான்னா உயிர்...”
“உன்னோட சொந்தபந்தத்துக்கா?”
“இல்ல... அவங்களும் இல்ல....”
“அப்போ யார்தான் அந்த ‘யாருமே?’”
“பிளானட் ரோமியோ’ல இருக்குற பசங்களுக்கு, கே க்ரூப்’ல இருக்குற பசங்களுக்குனு எல்லாருக்கும்...”
“பேர் கூட தெரியாத, முன்பின் அறிமுகமில்லாத யாரோ சிலருக்காக நீ சாகுறதா சொல்றது வேடிக்கையா இல்லையா?... சரி, எமகண்டம் முடிஞ்சிடுச்சு, நீ இப்போ சாகலாம்...” சொல்லிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியை  ஆன் செய்து, ஒவ்வொரு சேனலாக மாற்றத்தொடங்கினான் ஈசன்...
அஷோக் எதையோ யோசிக்க தொடங்கினான்... ரிமோட்டை பிடுங்கி, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு “எனக்கு தற்கொலை பண்ணிக்குற எண்ணமே போய்டுச்சு... உண்மையை சொல்லுங்க நீங்க கடவுள்தானே?” என்றான்....
“என்னது?” ஆச்சரியத்தில் கேட்டான் ஈசன்....
“ஆமா... எனக்கு நல்லா தெரியும்... நான் அந்த பக்கம் திரும்புற நேரத்துல நீங்க காணாமல் போய்டுவீங்க....”
“ஹ ஹ ஹா... நீ ரொம்ப தமிழ் படங்கள் பார்ப்பன்னு நினைக்குறேன்...அதுவும் நிறைய குறும்படங்கள்ல இப்போலாம் எதார்த்தம்ங்குற பேர்ல கடவுள்களை இப்டி பேன்ட் ஷர்ட் போட்டு காண்பிக்குறதால நீ ரொம்ப குழம்பிட்ட போல... உன் மனம் மாறக்காரணம் நான் இல்ல, சில உண்மைகளை நீ புரிஞ்சுகிட்டதுக்கான அடையாளம் அது... கொஞ்ச நேரம் உண்மைகளை யோசிச்சாவே இப்டி ஆபத்தான முடிவுகள் கூட அபத்தமான விஷயங்கள்னு நமக்கு புரிஞ்சிடும்.... உன்னைய யோசிக்க வச்சது மட்டும்தான் நான் செஞ்ச ஒரே வேலை, மத்ததெல்லாம் தானா நடந்தது...” சிரித்தான் ஈசன்....
“அப்புறம் எப்டி வேதங்கள், ஓஷோ தத்துவங்கள் எல்லாம்?”
“அது உண்மையில் வேதங்களே கிடையாது.... தமிழ்’ல சொன்னா எவன் கேக்குறீங்க, வாழைப்பழத்த வாய்ல போட்ட மாதிரி எதையாச்சும் சொல்லி அதை வேதம்னு சொன்னா கடவுளா நினைக்க ஆரமிச்சிடுவீங்க, யாருக்கும் புரியாத விஷயங்களை சொன்னா அதை தத்துவங்களா நினைப்பீங்க.... அதனாலதான் இப்போகூட வாய்க்கு வந்ததை சொல்லி, அதுக்கு வேதங்கள்னு போர்வை போர்த்திவிட்டேன்.... நீகூட அதுனாலதான் இப்போ நான் சொன்னதை ஏத்துக்கிட்ட...”
“மூடியிருந்த கதவை எப்டி திறந்து வந்தீங்க?”
“இது என்ன அலிபாபா குகையா, மந்திரம் போட்டு திறக்க?... நீ போன வேகத்துல கதவு தானாவே திறந்துதான் கெடந்துச்சு....”
“அப்போ... அப்போ நான் தற்கொலை பண்ணிக்க போறது உங்களுக்கு எப்டி தெரியும்?” இன்னும் குழப்பம் அகலாதவனாக கேள்வியை கேட்டான் அஷோக்....
“உன்ன ரெண்டு மணி நேரமாவே நான் பாலோ பண்றேன்... அப்டி உன் வீடுவரைக்கும் வந்தபோதுதான் நீ இந்த முடிவை எடுத்ததே எனக்கு தெரியும்....”
“அப்டின்னா நீங்க?..... நீ?...” தலையை சொறிந்துகொண்டே கேட்டான்...
“நான் மதன்...” சிரித்தபடியே அஷோக்கை பார்க்க, அப்போதுதான் மதன் அணிந்திருந்த “பச்சை சட்டையையும், கருப்பு பேன்ட்’ஐயும்” கவனித்தான் அஷோக்... (முற்றும்)

(கதையின் தலைப்பு உபயம் – Avid)

25 comments:

  1. congrats for 100 posts in 2013, wish u a happy new year.... MY BEST WISHES FOR U TO REACH 1000 POSTS IN THIS YEAR.....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி கமல்.... உங்கள் ஆதரவோடு அதனை இந்த வருடம் சாதிப்போம் நண்பா...

      Delete
  2. super vijay...உங்கள் இந்த வருட முதல் கதையே அருமையான கதையாக இருப்பது ரொம்ப சந்தோசம் தருகிறது...கே செய்யும் தவறுகளை யதார்த்தமாக சொல்லும் style super...இந்த சிரிப்போடு சொல்லும் விஷயம் கண்டிப்பாக யோசிக்க வைக்கும்...இதே போல் தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சாம்.... இதுபோன்று ஜாலியாக மெசேஜ் சொல்லும் கதைகளையும் அப்பப்போ எழுதுறேன்...

      Delete
  3. Replies
    1. ரொம்ப நன்றி அண்ணாச்சி...

      Delete
  4. thats a nice story, also after a long time NOT a tragedy

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி க்ரிஷ்.... ரொம்ப நாளாவே சோகக்கதைகள் குறைத்துட்டேன் நண்பா...

      Delete
  5. nice story vijay... keep up the good work

    ReplyDelete
  6. Super Story my dear friend :-)

    i think tis d 1st story of year 2014

    super hit.............

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்ரீதர்... ஆம், இந்த வருடத்தின் முதல் கதை இதுதான்... கடந்த வருடம் போலவே இந்த வருடமும் உங்கள் மேலான ஆதரவு எனக்கு வேண்டும்...

      Delete
  7. fantastic... nice twist and my Advanced Happy Pongal to all..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தம்பி... உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்...

      Delete
  8. pichutinga ji......... kili kili kilichutinga........................

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிஜி...

      Delete
    2. உங்களையும் "ஜி" என்ற சொல் ஆட்சி கொண்டுவிட்டது போல் தெரிகிறது தோழரே! ஒருவரின் பெயர் அவரை அழைப்பதற்கு தான் என்ற உண்மையை நம் மக்கள் புரிந்துகொண்டு மரியாதை என்பதை மனதில் இருத்தினால் போதுமானதன்றோ? ஜி சார் போன்ற தமிழ் அல்லாத அடைமொழிகளின் பயன்பாடு குறைந்தால் இனிமையாக இருக்கும்.

      Delete
  9. அழகான சிறுகதை! "அதோ சம்பாக்ய முகந்தவே...." ரிக் வேதத்தில் எந்த மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது என்ற குழப்பத்துடனே படித்தேன், வாய்ல வாழைப்பழ மொழின்னு இப்போ தெளிவாகி விட்டது. வேதங்களும் ஓஷோ தத்துவமும் பேசும் பலரை நம் தற்காலத்திய மக்கள் கடவுளாகவே பார்க்கும் நிதர்சனத்தை இதை விட அழகாய் சொல்ல இயலுமா என்று தெரியல்வில்லை. பச்சை நிற ஆடை ஒரு கால கட்டத்தில் சம பாலீர்ப்பாளர்களை அடையாள படுத்த பயன்பட்டது என்னும் வரலாற்று குறிப்பையும் தாங்கியுள்ளது 2014 ஆம் ஆண்டின் முதல் வெளியீடு. பசுமை புரட்சி போல் பல படைப்புகள் வெளியிட வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சகோ.... கதையை விட அழகான உங்கள் கருத்து விமர்சனத்துக்கும் நன்றிகள்...

      Delete
    2. உங்கள் கதைகளின் கருத்துக்கள் நல் விமர்சனத்திற்கு தகுதியுடையவையே! இவற்றில் பல, பொது மக்களை சென்று அடைய வாழ்த்துக்கள்!

      Delete
    3. நான் இலங்கைல இருக்கிறன். உங்க கதைகள் ரொம்ப நல்லா இருக்கு நான் தவறாம பாக்கிறனான். நன்றி விக்கி அண்ணா.

      Delete
    4. உங்களை போன்றவர்களின் இந்த எல்லை கடந்த ஆதரவுதான் என்னை இன்னும் நிறைய எழுத தூண்டுகிறது தம்பி, நன்றிகள் பல....

      Delete
  10. super anna. romba comedya irunthathu. athe nerathula swarasyamavum irunthathu. unmaiya sollirukeenga. ithu neraiya per padikanum anna! azaga illanu azukura pasanga neraiya irukanga anna.

    solli puriya vaikiratha vida intha kataiya padicha kandipa purinjuppanga. neenga solrathu pola nama sonna keka matranunga. intha kathiya padichu purinjukita romba nallarukum. thanks anna

    ReplyDelete