Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 11 April 2014

"சுந்தர் weds வேலு" - இது நம்ம வீட்டு கல்யாணம்....





 “அமெரிக்கா சென்ற சுந்தரும் வேலுவும் சட்ட ரீதியாகவும் திருமணம் செய்து வாழ்ந்தனர்... நேற்று உதித்து, இன்று மலர்ந்து, நாளை சருகாகும் உறவல்ல அது... கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு மேலாக ஒருவரை ஒருவர் புரிந்து உணர்ந்த அந்த வாழ்க்கையின் சட்ட அங்கீகாரம் தான் இப்போதைய இந்த திருமணமும்...”
இது என் கதைகளில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி போல தெரியுதா நண்பர்களே?... நீங்க அப்படி நினைப்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.... எத்தனையோ கதைகளில் காதலர்களை ‘கனடா’விற்கு விமானம் ஏற்றிவிட்டு, ‘அவங்க இனியாவது நிம்மதியா வாழட்டும்!’னு வார்த்தைகளை முற்றாக்கி கதையை முடித்திருப்பதால உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்... ஆனால், நான் மேற்சொன்ன அந்த சம்பவம் கதை அல்ல, சுந்தர் மற்றும் வேலு இருவரும் என் கதைகளின் கற்பனை பாத்திரங்கள் இல்லை... எல்லாமே உண்மை, உண்மை, உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை...
ஓரினம் அமைப்பின் சுந்தர் தான் நான் இப்போ எழுதப்போகும் உண்மைக்கதையின் நாயகன்... சுந்தருடன் எனக்கு நீண்டகால மின் தொடர்பு இருந்தாலும், சமீபத்தில் அவரை பற்றி நான் அறிந்த மூன்று செய்திகள்தான் அவரை நோக்கி என்னை இன்னும் அதிகம் ஓட சொல்லியது....
“சுந்தருக்கும் வேலுவிற்கும் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சட்டரீதியான திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் ஆகிறது”
“சுந்தரின் தம்பி பாலா, தன் பேஸ்புக் ஸ்டேட்டஸ்’இல் தன் அண்ணனுடைய ஒருபால் ஈர்ப்பு பற்றியும், அண்ணனின் காதல் கம் துணைவர் பற்றிய வெளிப்படையான கருத்தை பகிர்ந்திருந்தார்....”
“சுந்தரின் அம்மா பூங்கோதை அவர்கள் ஓரினம் அமைப்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் தன்னார்வலராக ஈடுபட்டு வருகிறார்...”
இந்த மூன்று சுந்தரை பற்றிய தகவல்களும், அவர் வாழ்க்கை மீதான அதிக ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது... அதன்பின்னர் தான், அவரை தொடர்புகொண்டு ஆச்சரியத்துடன் சேகரித்த தகவல்களை உங்களுக்கும் பகிர்கிறேன்....
சுந்தர் பதினைந்து வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் உயர் கல்விக்காக சென்றவர்... பூர்விகம் விருதுநகராகவும், படித்தது கோவை மற்றும் சென்னையாகவும் அமைந்திருந்த சுந்தருக்கு அமெரிக்க மேல்படிப்பு சமூக அளவிலான நிறைய மாற்றங்களை உணர செய்தது...
அந்த நாட்களில் இப்போது இங்கிருக்கும் “ஹோமொபோபிக்” நிலைதான் அங்கும் காணப்பட்டது... ஆனாலும், இணையம் வழியாக தன்னை போன்ற உணர்வுள்ளவர்களை கண்டறிய அவருக்கு அதிக சிரமம் ஏற்படவில்லை... அப்படி அறிமுகமானவர் தான் நண்பர் வேலுவும்... அதன்பிறகு பேசி, பழகி, காதலை பகிர்ந்து, இன்றைக்கு குடும்பஸ்தர்களாக வாழும் அவர்களின் வாழ்க்கையில் நாம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது...
அவருடன் பல மணி நேரங்கள் பேசிய பேச்சின், சில மணித்துளிகள் உரையாடல்கள் உங்கள் பார்வைக்கு...
“ஒருபால் ஈர்ப்பு திருமணம் செய்துகொண்ட தமிழ் தம்பதிகள்” சொல்லவே சந்தோஷமா இருக்கு சுந்தர்... எப்படி உணர்கிறீர்கள் இந்த தருணத்தை?
நிச்சயமா ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு விஜய்... வார்த்தைகளில் ரொம்ப எளிதா சொல்ல முடிஞ்ச அந்த வார்த்தைக்கான வாழ்க்கையை நாங்கள் அடைவதற்கு,பட்ட கஷ்டங்கள் அளவில்லாத ஒன்று... அதே போல எங்களுக்கு இருக்கிற பொறுப்பையும் என்னால உணரமுடியுது, அதனால அதையும் மனசில் வச்சுதான் வாழனும்...
உங்களுக்கு திருமணம் பற்றி சொல்லுங்க... எப்போ? எப்டி நடந்துச்சு?...
நாங்கள் வாழ்ந்தது கலிபோர்னியா மாகாணத்துல... ஆனால், அங்க நம்ம திருமணங்களுக்கான அங்கீகாரம் இல்லை... அதனால, வேலுவும் நானும் 2009ஆம் வருஷத்துல டொமஸ்டிக் பார்ட்னர்’ஆக மட்டும் அங்கே பதிவு செஞ்சுகிட்டோம்... அப்புறம் ஜூலை 9 2012 அன்னிக்குத்தான் நியூயார்க் மாகாணத்துல சட்ட ரீதியாக எங்க திருமணத்தை பதிவு செஞ்சோம்... என்னோட நண்பர்கள், அம்மா’ன்னு ரொம்ப சிலரோட முன்னிலையில் திருமணம் செஞ்சுகிட்டோம்... அதுக்கு முன்னாடியே ஒன்பதரை வருஷங்கள் நாங்க ஒண்ணாதான் வாழ்ந்தோம் என்பதால், சட்ட ரீதியான பதிவு ஒன்னும் எனக்கு பெருசா தெரியல... ஆனாலும், ஒருவித பொறுப்புணர்வு, மகிழ்ச்சி, பயம்னு கலவையான உணர்வுதான் அப்போ எனக்குள் இருந்துச்சு... அது நல்லாவும் இருந்துச்சு...
உங்க சட்ட ரீதியான திருமணத்துக்கு முன்பே, நீங்களும் வேலுவும் ஒண்ணாத்தான் வாழ்ந்திங்க... ஒரு காதலனா, துணைவனா தான் வாழ்ந்திருப்பிங்க... அப்போ ஏன் அந்த சட்ட அங்கீகாரம் உங்களுக்கு தேவைப்பட்டுச்சு?...
நீங்க சொல்றது சரிதான் விஜய்... திருமணத்திற்கு முன்பும் பின்பும் எங்க காதல் வாழ்க்கையில் பெரிய மாற்றமல்லாம் இல்லை... ஆனால், சமூக சிக்கல்கள் சிலவற்றுக்கு எங்க திருமணப்பதிவு தேவைப்படுது... ஒரு தம்பதிகளா எங்க இருவருக்கும் கிடைக்கவேண்டிய அங்கீகாரங்கள், சட்ட அங்கீகாரத்தால் மட்டுமே கிடைக்குது.. ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்... ரொம்ப வருஷமாக ஒன்றாகவே ஒருபால் ஈர்ப்பு காதலர்களாக வாழ்ந்த இணையில் ஒருத்தர் இங்க இறந்துட்டார்... மருத்துவமனை’லேந்து அந்த உடலை கூட இறந்தவரோட காதலனுக்கு காட்ட மறுத்தது மருத்துவ நிர்வாகம்... எந்த குடும்பத்தைவிட்டு பிரிஞ்சு வாழ்ந்தாரோ, அந்த குடும்பத்து உறவுகளுக்குத்தான் அவரோட உடலும் கொடுக்கபட்டுச்சு... நம்ம சட்டமும், சமூகமும் வெறும் காகிதங்களை நம்புற அளவுக்கு, மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காது... அதனால ஒரு கணவன் மனைவிக்கு இந்த சமூகத்துல கிடைக்கப்படுற இயல்பான உரிமைகளை பெறுவதற்காகவாவது எங்க சட்ட ரீதியான பதிவு தேவைப்படுது...
காதல், திருமணம் எல்லாம் ஓகே?... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?..
நீங்க எதைப்பற்றி கேட்குறீங்கன்னு புரியுது.... குழந்தை பற்றிய எங்களோட கனவுகள் நிறைய இருக்கு... க்ரீன் கார்டு இன்னும் எங்களுக்கு கிடைக்கல, கிடைத்தபிறகு முதல் வேலையாக குழந்தை தத்தெடுக்க உள்ளோம்... என்னைவிட வேலுவிற்குதான் குழந்தை வளர்க்குறதில் விருப்பம் அதிகம்... அதனால, விரைவில் நாங்க இருவர் மூவராகிடுவோம்....

உங்க திருமணம் எனக்கு தந்த ஆச்சரியத்தைவிட அதை அணுகும் உங்க குடும்பத்தினரின் செயல்பாடுகள் கொடுத்த ஆச்சரியங்கள் அதைவிட அதிகமானது... அதிலும் குறிப்பா உங்க தம்பியோட பேஸ்புக் ஸ்டேட்டஸ்.... நீங்க அமெரிக்காவுல இருந்துட்டு ஒருபால் ஈர்ப்பாளனாக வாழறது பெரிய விஷயமில்ல, இங்க இந்தியாவுல இருந்துட்டு ‘என் அண்ணன் ஒரு கே’னு அவர் சொல்றதுதான் ரொம்ப பெரிய விஷயமா தோணுது... அவர் எப்பவும் உங்களுக்கு சப்போர்ட் தானா?...
ஆமா... என்னோட திருமண வாழ்க்கைக்கு முதல் மற்றும் முக்கிய சப்போர்ட் என் தம்பி பாலா தான்... எல்லா விஷயத்தையும் முற்போக்கா எடுத்துக்கறவன், என்னோட பாலீர்ப்பை பற்றி அவன்கிட்ட சொன்னப்போ கூட, அதை ரொம்ப இயல்பான விஷயமா எடுத்துகிட்டான்... பாலீர்ப்பு பற்றியல்லாம் அவனுக்கு முழுமையான புரிதல் இல்லைன்னாலும் கூட, ‘நீ நீயாவே இரு...  உனக்கு எது சரின்னு படுதோ செய்’னு சொல்லிட்டான்... பேஸ்புக் ஸ்டேட்டஸ் மட்டுமில்ல, அவனுக்கு திருமண வரண் பாத்துட்டு இருக்குற மேட்ரிமோனியல் தளத்தில் கூட, என் திருமணத்தை பற்றி சொல்லி “ஹோமோபோபியா” இல்லாத குடும்பமாக வேண்டும் என்று தேடிக்கொண்டு இருக்கிறான்...
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ன்னு சொல்வாங்க... உங்க விஷயத்துல நீங்க பாலாவை வச்சுகிட்டு முப்படையை கூட சமாளிக்கலாம்.... உங்க தம்பியின் துணையை போல, உங்க பெற்றோரின் ஆதரவும் உங்களுக்கு கிடைச்சுதா?...
அம்மா ஆரம்பத்துல அதை ஏத்துக்க கொஞ்சம் தயங்கினாலும், நாளாக முழுசா மாறிட்டாங்க.... இப்போ பையனான என்னைவிட, மருமகனான வேலு மேலதான் அவங்களுக்கு அதிக ஒட்டுதல்.... நான் தனிமையாகிடுவனோ’ன்னு பயந்திருந்த அம்மா, வேலுவோட பழகிய பிறகு நிம்மதி ஆகிட்டாங்க... இப்போ அவங்க பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால, ஓரினம் அமைப்பின் தளத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பு உதவிகளை செய்றாங்க.... நான் சின்ன வயசுல பாலீர்ப்பு புரிதல் இல்லாம பட்ட கஷ்டத்தை வேற பிள்ளைகள் படக்கூடாதுன்னு செய்றாங்க போல... அப்பாவை பொருத்தவரைக்கும் இப்போ வரைக்கும் என் திருமணத்தில் முழு உடன்பாடில்ல.... ஆனாலும், அதை எதிர்க்கல, இயல்பா இருக்குறதா காட்டிக்கறார்... இன்னும் எங்க திருமணத்தை ஏற்கும் மனநிலையை அவர் அடையவில்லை... ஆனாலும், நாங்க வாழற வாழ்க்கை அப்பாவை மாத்திடும்னு நம்புறேன்...

இவ்வளவு இடர்பாடுகளை எதிர்கொண்ட பிறகுதான் இத்தகைய இன்பமான மணவாழ்க்கையை வாழறீங்க... ஆனாலும், ஒரு திருமணம வாழ்க்கைன்னு இருக்கும்போது நிச்சயம் அதுல பிரச்சினைகள் இல்லாம இருக்காது... உங்க ஒருபால் திருமண வாழ்க்கையில் அப்படி நீங்க சந்தித்த பிரச்சினைகள் என்ன?... அதை எப்படி சமாளிச்சிங்க?....
ரொம்ப முக்கியமான கேள்வி விஜய் இது... நம்மில் பலரும் ஒருபால் ஈர்ப்பு திருமணம் என்பதை ஒருநாள் பதிவுத்திருமணம் செய்றதோட அவ்ளோதான்னு நினைச்சிடுறாங்க... உண்மை அதுவல்ல, அதுக்கு பிறகுதான் உண்மையான பிரச்சினைகளை நாம சமாளிக்கணும்... அதுவும் இந்தியர்களான நாம இந்த திருமண பந்தத்தில் நுழையும்போது கொஞ்சம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்... பொதுவா நாம சின்ன வயசுலேந்து ஆணாதிக்க சமூகத்தில் பிறந்து, வாழ்ந்து வந்தவங்க... என்னதான் நாம முற்போக்கு எண்ணங்களை படிச்சாலும், பேசினாலும் நம்ம மனசுல ஏதோ ஒரு ஓரத்துல ஒரு சின்ன அளவிலான ஆணாதிக்க எண்ணம் இருக்கவே செய்யும்.... அதுதான் நம்ம திருமண வாழ்க்கைல ஒரு பிரச்சினையா வரும்... திருமணம் செய்துகொள்ளும் இரண்டுபேருமே ஆண்கள் என்பதால, வீட்டு வேலைகள் செய்றது முதல் இன்னொருத்தரை ஆதிக்கம் செலுத்த முயல்வது வரை நம்மை அறியாமலேயே ஆணாதிக்க சிந்தனையில் நாம ஈடுபடுவது போலத்தான்... அதுமட்டுமல்ல, நம் குடும்ப வாழ்க்கையில் ஒரு சின்ன பிரச்சின்னைன்னா கூட, அதை பற்றி பகிர்ந்துக்கவும், பிரச்சினைக்கான தீர்வை சொல்லவும் ஆட்கள் கிடையாது... மேலும், குடும்பம், சமூகம் எல்லாத்தையும் எதிர்த்து நின்னு நாம கல்யாணம் செஞ்சுக்கறோம்... அந்த நேரத்துல, நம் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்சுதுன்னா ‘நான்தான் அப்பவே சொன்னேன்ல, இதல்லாம் நிலைக்காதுன்னு’ என்று சொல்லவே ஒரு கூட்டம் காத்துகிட்டு இருக்கு... அதனால வரும் பிரச்சினைகளை நாமதான் யோசிச்சு சமாளிக்கணும்.... ஆரம்ப நாட்கள்ல அது கொஞ்சம் கஷ்டமா தெரியும், போகப்போக விட்டுக்கொடுப்பதிலும் சந்தோசம் இருக்குறதை நாம உணரத்தொடங்கிடுவோம்....

நீங்க சொல்றது ரொம்ப சரி சுந்தர்.... அதேநேரத்துல இங்க நான் பார்க்குற நிறைய காதல்கள், அரும்பிய சில நாட்களிலேயே கருகிடுது.... “காதலிக்கிறேன்!”ன்னு முதல் நாள் ஸ்டேட்டஸ் போடுறான், மூன்றாவது நாளே “ப்ரேக் அப்” ஆச்சுன்னு சோக ஸ்மைலி போடுறான்... ஒருபால் ஈர்ப்பு காதல்களில் பொதுவாக காதலில் இருக்கும் ஸ்திரத்தன்மை இல்லையோ?...
அப்டி கிடையாது விஜய்... காதல்ல நாம ஒருபால், எதிர்பால்’னு பிரிச்சு பார்க்க முடியாது... தினமும் பேப்பர்களில் பார்க்குற கள்ளக்காதல்கள், காதலில் ஏமாற்றிய கதைகள் எல்லாமே எதிர்பால் உறவில்தானே அதிகம் காணப்படுது... அப்போ, அந்த காதலையும் நாம ஸ்திரத்தன்மை இல்லாத காதல்னு தானே சொல்லணும்... ஒருவிதத்துல நீங்க சொல்றது உண்மைதான்... இந்தியாவை பொருத்தவரைக்கும் எதிர்பால் காதலின் வாழ்நாளை விட, ஒருபால் உறவின் காதலின் வாழ்நாள் கொஞ்சம் குறைவுதான்... அதற்கு காரணமும் கூட, வரைமுறை படுத்தப்படாத ஒருபால் ஈர்ப்பு வாழ்க்கைதான்... ஒருபால் ஈர்ப்பை, காமம் வரையில் மட்டும் பார்க்கும் வெளி சமூகத்தின் விளைவுதான் இந்த ஏற்றத்தாழ்வும் கூட.... ஒருவேளை இந்தியாவில் ஒருபால் ஈர்ப்பு சட்டம் மற்றும் சமூக ரீதியாக ஏற்கப்பட்டால் , இந்த கேள்விக்கே அவசியம் இருக்காதுன்னு தோணுது.... அந்த நாளையும் எதிர்நோக்கி காத்திருப்போம்...
ஒருபால் ஈர்ப்பு நபர்கள் இன்னமும் பெரும்பாலும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாத நிலைமைதான் இருக்கு.... அதுக்கு காரணம் உறவுகள், சமூகம், பெற்றோர்னு நிறைய சொல்லப்படுது.... இங்க நிறைய பேருக்கு அத்தகைய பயம்தான் இருக்கு... உங்களை நீங்க வெளிப்படுத்திக்க, உங்களுக்கு உண்டான துணிச்சலும், தைரியமும் அமெரிக்க வாழ்க்கை கொடுத்ததுதானா?..
ஹ ஹா... நிச்சயமா இல்ல விஜய்... நான் அமெரிக்கா சென்று, வேலுவை காதலித்து, அதை வீட்டில் சொன்ன காலகட்டம் என்பது கிட்டத்தட்ட ஒன்பது வருஷத்துக்கு முன்பு... இன்றைக்கு இந்தியாவில் காணப்படும் இதே அளவிலான ஹோமொபோபிக் நிலைமைதான் அப்போது அமெரிக்காவிலும் நிலவியது...இன்றைக்கு போல இணைய வளர்ச்சியும் கூட உருவாகாத காலகட்டம் அது... அதுவும் நான் இருந்த கலிபோர்னியா மாகாணத்தை பற்றி சொல்லனும்னா, ஒரு உதாரணத்தை சொல்லலாம்... 2009ஆம் வருஷத்துல ‘கலிபோர்னியா மாகாணத்துல ஒருபால் ஈர்ப்பு திருமணங்களை சட்டப்பூர்வமாக்கலாமா?”னு ஒரு வாக்கெடுப்பை மக்கள் முன் நடத்தினாங்க.... பெரும்பாலானவங்க அந்த வாக்கெடுப்பில் “கூடாது!”னு வாக்களிச்சாங்க... அந்த அளவுக்குத்தான் அமெரிக்காவா இருந்தாலும் கூட அப்போது நமக்கான சமூக அந்தஸ்து இருந்துச்சு...
இப்போ நாம பயப்படுற சொந்தங்களும், சமூகமும் நாளைக்கு நாம கல்யாணம் ஆகி கஷ்டப்படுற சமயத்துல கண்டுக்கப்போறதில்ல... நான் பதில் சொல்ல வேண்டியதும், புரியவைக்க வேண்டியதும் என் பெற்றோரும், உற்ற நண்பர்களும் மட்டும்தான்.... அவங்களுக்கு என்னைப்பற்றி தெளிவா விளக்கினேன், அவங்களுக்கு புரியவச்சேன்... அவங்களும் என்னை புரிஞ்சுக்கிட்டாங்க.... நாமதான் நம்ம பெற்றோர்கள் புரிஞ்சுக்க மாட்டாங்கன்னு பயந்தே, எதையும் சொல்றதில்ல... அவங்க நமக்காக எதையும் செய்வாங்கன்னு, நிரூபிக்க நாமதான் ஒரு வாய்ப்பை அவங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கணும்... இவ்வளவு பக்குவத்தையும் நீங்க பெற அமெரிக்காவுல இருக்கணும்னு அவசியம் இல்ல, ஆண்டிப்பட்டியில இருந்தாகூட அது சாத்தியம்தான்...

ரொம்ப நிறைவான பதில்களை சொல்லிருக்கிங்க சுந்தர், கடைசியா ஒரு கேள்வி.. உங்ககூட கடைசி வரைக்கும் இருக்கப்போறவர் பத்தின கேள்வி... உங்க வேலுவை பற்றி சொல்லுங்க....
சொந்தம், சமூகம்னு பலரையும் பகைச்சுகிட்டு நான் வாழற வாழ்க்கைக்கு எல்லாமுமா இருக்குறது அவன்தான்... என்னைவிட குடும்பத்து எதிர்ப்பை அதிகம் சம்பாதிச்சது அவன்தான்... அவனை பத்தி நான் புகழ்றது, நிச்சயம் என்னை நானே சுயபுகழ்ச்சி செய்றது போலத்தான்... ஒரே விஷயம் மட்டும் சொல்றேன், “நான் நிறைய அழுததும் அவனுக்காகத்தான், நான் நிறைய சந்தோஷமா இருக்குறதும் அவனால்தான்...!”...

சுருக்கமாக சொன்ன அந்த ஒற்றை வரியில், தனியொரு கட்டுரைக்கான மொத்த கருத்தையும் புதைத்தபடி பதில் சொன்னார் சுந்தர்...
“கோடிக்கணக்கான ஒருபால் ஈர்ப்பு நபர்கள் வாழ விரும்பியும், முடியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் நீங்கள்... அதற்கு ஏற்ப உங்க வாழ்க்கை இன்னும் தித்திப்பாய் அமைய வாழ்த்துக்கள் சுந்தர் மற்றும் வேலு....”

                            என்றைக்கும் உங்களுக்காக இறைவனை பிராத்திக்கும்,
                      உங்கள் விஜய்...

28 comments:

  1. பெருமை கொள்வதா அல்லது பொறாமை கொள்வதா? மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஜான், பொறாமை படவல்லாம் வேணாம்... பெருமை கொள்க...

      Delete
  2. சுந்தர் வேலு'வுக்கும் வேலு சுந்தரு'க்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். இந்த சமூகத்துக்கு மிகச் சிறந்த உதாரணமா இருக்கணும்னு நினைக்கிறதுக்காகவே ஒரு மிகப் பெரிய ஹாட்ஸ் ஆஃப். சுந்தர்ரோட தம்பி ஓரினஈர்ப்பை ஏத்துக்கிடுற மனநிலைல இருக்கார் அப்படிங்கிறதுவே, உண்மைல மிகப்பெரிய விஷயம். அப்படி ரெண்டு பேரும் ஒரு முதிர்ச்சியான பக்குவத்துல இருக்குறதுக்கு மிகப்பெரிய காரணமான இருக்கிற அவங்க அம்மாவுக்கு நன்றிகள். ஓரின ஈர்ப்பு உள்ள எல்லோருக்குமே இப்படி ஒரு அருமையான குடும்பம் அமையாது. அப்படி ஒரு குடும்பம் அமைஞ்சதும், வேலு அப்படிங்கிற ஒரு நல்ல துணைவர் கிடைச்சதும், சுந்தர் நிச்சயம் ரொம்ப கொடுத்து வச்சவர் தான். சுந்தர் உங்களை இந்த விஷயத்தில் பார்க்கும் போது, எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு.

    @ விஜய்க்கு
    சுந்தர்ரோட தரப்பு விஷயங்களை மட்டும் இங்க பகிர்ந்திருக்கீங்க. வேலுவோட தரப்பு விஷயங்களை எப்போ பகிர்வீங்க விஜய்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி அவிட்....
      சுந்தரும் வேலுவும் தமிழகம் வரும்போது, நேரடியாக அவர்களை சந்தித்தே வேலுவின் தரப்பு நேர்காணலை இங்கு பதிவுசெய்கிறேன்....

      Delete
    2. நன்றி திரு. விஜய் விக்கி. வேலுவின் தரப்பு நேர்காணலை படிக்க மிக ஆவலாக உள்ளேன்.

      Delete
  3. Replies
    1. கருத்திற்கு நன்றி க்ரிஷ்...

      Delete
  4. Replies
    1. உங்கள் வாழ்த்து அந்த தம்பதிகளுக்கு கொண்டு சேர்ப்பிக்கப்படும்...

      Delete
  5. very nice and interesting interview.. there is a need for couple to get their marriage registered in the US to get some benefits. But there are no such grants and requirements in our country. So the need for marriage becomes less important in India.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா.... உண்மைதான்... இந்தியாவிலும் அமெரிக்கா போலவே அங்கீகாரம் தேவைப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை அண்ணா....

      Delete
  6. இப்படி ஒரு தம்பதி பற்றிய பதிவிற்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் விஜய். என்னதான் ஓரின ஈர்ப்பு பற்றி தெரிந்து கொண்டாலும், இது சாத்தியமா என்று நினைபவர்களுக்கு இது பதில் கூறும். இருவரும் நரை கூடும் கிழப்பருவம் தாண்டியும் இதே காதலோடு வாழ வேண்டும். இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி இசை.... நிச்சயம் நம்மை போன்ற கோடிக்கணக்கான உள்ளங்களின் வாழ்த்து அவர்களை சிறப்பா வாழவைக்கும்...

      Delete
  7. Valthukal Mr. Sundar and Velu, ivangala pathi enagluku sonna Vijay ku romba nandri nanba,


    nambalaala vala ninaikura, valamudiyatha, valkai ya ivanga valuraanga kekavee romba santhosama irruku, itha normal ah eduthukitu, support panina thambi Bala vuku oru periya salute

    pasanga manasa purinjukitta amma pongothai ku nandrigal

    ipadi elorum kastttapattu amacha valkaiya, super ah, nalapadiya, joly ya valura sundar & velu ku oru migaperiya salute


    ipadi namba vala assai patta valkaiya patri, sundar & velu parti sonna Vijau Vickey ku oru periyaaaaaaa Saluteeeeee,

    kandippa ini mattra ulangalum marum endra nambikai ullathu.............

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஸ்ரீதர்.... உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் கபடமற்ற வாழ்த்து நிச்சயம் அந்த தம்பதியை நலமுடனும் வளமுடனும் வாழவைக்கும்...

      Delete
  8. சுந்தர் வேலுவுக்கு என் வாழ்த்துக்கள் !!
    அதை வெளி கொணர்ந்த என் விஜய் கு இரு மடங்கு வாழ்த்துக்கள்
    ஜூலி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.....

      Delete
  9. very nice couple....God will Bless them with all the good things..
    Hats off to Vijay Vicky. Your blog is simply superb..nice keep it up.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மைக்கேல் கார்த்திக்.... உங்களை போன்றவர்கள் தொடர்ந்து என்னோடு பயணிக்க வேண்டும்...

      Delete
  10. Kadaisiya sundar annan sonna dialog cinema dialog pola irunthalum avarathu, vali, pasam & santhosathai kattuvathaka irunthathu, Iruvarum nalamudan vala nan vendikkaren...

    Vijay anna, avanga baby pathina thakaval viraivil varum ena kathirukkiren...

    ReplyDelete
  11. பார்த்தயுடன் மிக சந்தோசமா இருக்கு...அவர்கள் பல்லாண்டுகள் வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்...தன் பிள்ளை போல் மற்ற குழந்தைகளின் எண்ணத்தை மதிக்கும் அவரின் அம்மா...உண்மையில் போற்றி மதிக்க வேண்டியவர்...

    ReplyDelete
  12. முதல்ல வாழ்த்திகிறேன். கொஞ்சம் பொறாமயா இருக்கு இவங்களபாத்தா ஆனா சந்தோசாமாவும் இருக்கு. நானும் லைஃப் பாட்னர் தேடிகிட்டுதான் இருக்கேன் ஒரு பக்கியும் புரிஞ்சிக்க மாட்டிகிதுபா. ம்ம் எல்லாம் அழகு மட்டும்தான் போட்டோ பாத்து விரும்புறாங்க ஆனா லவ் பண்ணகூட யாரும் தயாரா இல்ல. இதுல கல்யாணம் ஆனவங்க வேற அவங்க கல்யாணம் பொண்ணுகூட பண்ணி புள்ளகுட்டியோட இருப்பாங்களாம் நாம அவங்களுக்காகவே இருக்கணுமாம் வேணும்னா புடிச்ச பொண்ணவேணும்னா கட்டிககணுமாம். நானும் கைக்குதான் வேலகொடுக்குறேன். ரொம்ப சோகமா முதல் முறை comment செய்யுறேன். நன்றி மச்சான் (விஜய்)

    ReplyDelete
    Replies
    1. Don't worry Anna. Neega thedura mari unga manasa purijikura mari oru life partner kandipa kedaipanga.... all the very best Anna prabhu

      Delete
  13. வணக்கம் விஜய், உங்களது பதிப்பை தொடர்ந்து நாங்கள் படித்து கொண்டு இருக்கோம், சுந்தர் மற்றும் வேலு விற்கு எங்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள், ஒரு பால் ஈர்ப்பு பற்றி வெளியில் பேச கூட முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் எங்களை போல் பல பேருக்கு மத்தியில் இவர்கள் திருமணம் மிகுந்த மகிழ்ச்சியை நல்குகிறது. எங்களுக்கும் எவ்வாறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஒன்றாக வாழ வேண்டும் என்று பல கனவுகள் உள்ளது ஆனால் அதை யாரிடமும் கூற முடியாமல் மன குழப்பங்களோடு தவிக்கிறோம். எங்களுக்கு உங்களது ஆலோசனை தேவை விஜய்.... உங்களுடன் பேச விழைகிறோம்.
    இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரர்கள்,
    கிருஷ், மற்றும் ராஜா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தோன்றும் சந்தேகம் மற்றும் குழப்பங்களை தாராளமாக எனது மின்னஞ்சல் முகவரியில் கேளுங்க நண்பர்களே... என்னால் இயன்ற அளவு உங்களுக்கு வழிகாட்ட முயற்சிக்கிறேன்....
      vijayms.salem@gmail.com

      Delete
  14. Happy Married life to both of them.... They are really Lucky...

    ReplyDelete
  15. சுந்தர் க்கு தினமும் மஜா தான். மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. சுந்தர் க்கு தினமும் மஜா தான். மகிழ்ச்சி.

    ReplyDelete