Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 18 January 2015

"Coming Out of the Closet" - பாலீர்ப்பை வெளிப்படுத்துவது ஒரு உளவியல் பயணம்... !










2013ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த 200 மீட்டர் நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும்வரை டாம் லுஷிங்கர்’க்கு தன் பாலீர்ப்பை மறைத்துவாழ்வது அவ்வளவு சிரமமாக இல்லைதான்...  ஆனால், அதன்பிறகு ஒரு பிரபலமாக உருவானபின்பு, தம் ஒருபால் ஈர்ப்பை மறைத்துவாழ அதிக சிரமம் அடைந்தார் என்றுதான் சொல்லவேண்டும்... ஊடகங்களின் பார்வை, சமூக தளத்தில் பிரபலம் என்கிற பரிச்சயம், ரசிகர்களின் துரத்தல்கள் என்று டாம் லுஷிங்கர் சந்தித்த புதுவிதமான அழுத்தங்களால், அதன்பிறகு நடந்த ஒருசில போட்டிகளில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தார்... 2016ஆம் ஆண்டில் நடக்க இருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயாற்படுத்தக்கூட முடியாத அளவிற்கு, முழுக்கவனமும் பாலீர்ப்பை மறைப்பதிலேயே சிதறிப்போய்விட்டது அவருக்கு... இந்த தருணத்தில்தான் சமீபத்தில் தன்னை சமபால் ஈர்ப்புள்ள நபராக பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொண்டார் டாம் லுஷிங்கர்... 

“என் கவனம் நீச்சல் பற்றி இருந்ததைவிட, நான் ஒரு கே என்று பிறர் கண்டுபிடித்துவிடுவார்களோ? என்றுதான் எப்போதும் இருந்தது... என்னால் மனதை ஒருமுகப்படுத்தி போட்டிகளில் பங்கேற்கமுடியாததால்தான், சில தோல்விகளை சந்தித்தேன்... சின்ன சின்ன விஷயங்களில் கூட நான் ஒரு கே’ன்னு தெரிஞ்சிடுமோன்னு பயந்தே நாட்களை நகர்த்தியது ரொம்ப மோசமான அனுபவங்கள்.. ஒரு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தால் கூட அதை பத்து முறையாவது பார்த்தபிறகு, அந்த பேட்டியில் என் பாலீர்ப்பை வெளிப்படுத்தும்விதமாக எதுவும் பேசவில்லை என்பதை உறுதி செய்தபிறகுதான், அதை ஒளிபரப்ப அனுமதிப்பேன்.. அதே போல சமூக வலைதளங்களில் நான் போடும் ஸ்டேட்டஸ்களை ஒரு இருபது முறையாவது படித்துபார்த்துவிட்டுதான் பதிவிடுவேன்... இப்படி எல்லா விஷயங்களிலும் அதீத குழப்பம் உண்டாகி, எப்போதும் ஒருவித பதற்றத்திலேயே இருப்பதாக உணர்வேன்... இதே நிலை தொடர்ந்தால் என் ஒலிம்பிக் கனவும் கனவாகவே போய்விடும் என்பதால்தான் என்னை வெளிப்படுத்திக்கொண்டேன்... இப்போ ரொம்ப நிம்மதியா உணர்கிறேன், இனி இரட்டை வாழ்க்கை வாழவேண்டாம்... இப்போதான் ஏதோ புது உலகத்திற்கு வந்ததை போல உணர்கிறேன், இந்த உலகத்தில் குழப்பங்களுக்கு இடமே இல்லை... இனி ஒலிம்பிக் போட்டிகளை வெல்வது மட்டுமே என்னுடைய ஒரே குறிக்கோளாக இருக்கும்” என்று உற்சாகம் ததும்ப டாம் லுஷிங்கர் சொல்லி முடித்தார்...
தம்மை வெளிப்படுத்த நினைத்தபோது, முதலில் தான் ஒரு கே என அவருடைய அம்மாவிடம்தான் வெளிப்படுத்தினார்...

சோகங்கள் அத்தனையையும் கண்ணீராக வெளியேற்றி அழுதபடியே அந்த தாயிடம், “அம்மா, எனக்கு இதை சொல்றதுக்கு ரொம்ப பயமா இருக்கு... நான் ஒரு கே” என்றார்..

“நாங்க 23 வருஷங்களா வளர்த்த அதே பையன்தானே நீ?” என்றார் அம்மா...

“ஆமா...”

“அப்போ நீ என்னவாக இருந்தாலும் எங்க பிள்ளைதான் டாம், கவலைப்படாதே!” என்ற பதிலால் புது உத்வேகத்தையும் துணிச்சலையும் பெற்ற டாம், தன்னை வெளிப்படையாக சமபால் ஈர்ப்புள்ள நபராக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்....

ஒரு பிரபலம், அதுவும் அமெரிக்கா போன்ற விழிப்புணர்வுமிக்க நாட்டில் தம்மை வெளிப்படுத்துவதில் இவ்வளவு குழப்பங்கள், தன்னை சமபால் ஈர்ப்பு நபராக மறைத்து வாழ்வதில் இவ்வளவு இடர்ப்பாடுகள் என்றால், “வெளிப்படுதல்” அவ்வளவு சிரமமான விஷயமா?... முதலில், இந்த வெளிப்படுதல் (Coming Out) என்றால் என்ன? என்பதை கொஞ்சம் விளக்கமாகவே பார்த்தால், அதனுள் இருக்கும் சிக்கல்களை நம்மால் உணரமுடியும்…

தனிச்சிற்றறையிலிருந்து வெளிப்படுதல் (Coming Out of the Closet) என்ற பதத்தின் சுருக்கமே “வெளிப்படுதல்” (Coming Out) என்று பரவலான பேச்சுவழக்கு சொல்லாகிவிட்டது... ஒரு நபர் தன்னுடைய நிஜமான பாலீர்ப்பை வெளிப்படுத்தும் நிகழ்வை இப்படி குறிப்பிடுகிறார்கள்... எதிர்பால் ஈர்ப்பே பெரும்பான்மை சமூகத்தின் ஈர்ப்பாக இருக்கின்ற சூழலில், ஏனைய சிறுபான்மை பாலீர்ப்புகளை (சமபால்/இருபால் ஈர்ப்புகள், ஏசெக்சுவாலிட்டி, பான்செக்சுவாலிட்டி) கொண்டவர்கள், சமூகத்தின் மாறுபட்ட மனப்போக்கையும் தாண்டி, தம்மை வெளிப்படுத்தும் அந்த நிகழ்வு சமீபகாலங்களில் அதிகரித்துவருகிறது...

இது ஏதோ “காபி சாப்பிட போறேன்!” என்பது போல சர்வ சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய விஷயம் இல்லை, ஒருநபர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் நிகழ்வானது மிகப்பெரிய உளவியல் பயணத்தின் இறுதியில்தான் நிகழ்வதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்...

19ம் நூற்றாண்டில், அதாவது 1869ஆம் ஆண்டே இத்தகைய வெளிப்படுதல் பற்றி “தன்னைத்தானே அடிமைப்படுத்திய நிலையிலிருந்து விடுதலை” என்று பிரபல சமூக ஆர்வலர் ‘கார்ல் என்ரிக்’ கூறியுள்ளார்...  மேலும், “சமபால் ஈர்ப்பு நபர்கள் தங்கள் பாலீர்ப்பை மறைத்து வாழ்வதுதான், சமூகத்தில் பாலீர்ப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது... அதனால் அந்த அடிமைத்தளையிலிருந்து வெளிவர, முதலில் நம்மை நாம் வெளிப்படுத்துவோம்!” என்ற சிம்ம கர்ச்சனையை அப்போதே உதிர்த்து, இந்த வெளிப்படுதல் பற்றிய முதல் விதையை விதைத்தவர் அவரே... அந்த விதை ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகள் கழித்து இப்போது விருட்சமாக நிற்க மாக்னஸ் ஹர்ஷ்பீல்ட் தொடங்கி எத்தனையோ லட்சக்கணக்கானோர் உழைத்தனர் என்பதையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்...

சரி, முதலில் நாம் சொன்ன ஒருவிஷயத்தை அப்படியே விட்டுவிட்டோம்... அது என்ன வெளிப்படுதல் ஒரு உளவியல் பயணம்னு சொல்றாங்க? என்ற கேள்வி நமக்கு எழலாம்... எதிர்பால் ஈர்ப்பை இயல்பான ஈர்ப்பாக கருதுவதாலும், ‘ஹோமோபோபியா’ எனப்படுகிற சமபால் ஈர்ப்பு நபர்கள் மீதான வெறுப்புணர்வு மனநிலை உண்டாகிவிட்டதாலும், சமபால் ஈர்ப்பு நபர்களை ஒரு குழுவாக மட்டுமே இந்த உலகம் பார்க்கும் நிலை உண்டாகிவிட்டது...

தன் சுயபாலீர்ப்பையே அறியாத சமபால் ஈர்ப்பு நபர்களும் இன்னும் வாழ்கிறார்கள், தன் பாலீர்ப்பை பிறரிடம் வெளிப்படுத்தாத சமபால் ஈர்ப்பாளர்களும் நிறைய இருக்கிறார்கள்... இப்படி வெளியுலகத்திற்கு அடையாளம் தெரியாத பாலீர்ப்பு சிறுபான்மையினர்களின் இருப்பால், அப்படி சமபால் ஈர்ப்பு நபர்கள் சொற்ப அளவில் இருப்பதை போன்ற ஒரு மாயை உண்டாகிவிட்டது... 

ஆக, இத்தகைய எதிர்மறையான சமூக சூழலுக்கு மத்தியிலும், தம் குடும்பம், சுற்றம், நண்பர்கள் ஆகியோரது ‘இயல்பு’ உலகத்திலிருந்து தனியே இருப்பதை போன்ற உணர்வும் கண்டிப்பாக ஒருவரை வெளிப்படுத்த தடையாக இருக்கும்... தாம் வெளிப்பட்டால் தன்னை எல்லோரும் ஒதுக்கிவிடுவார்களோ என்கிற பய உணர்வு, பணியிடத்தில் சிக்கல் வருமோ? என்கிற தயக்கம், சட்டம் மற்றும் சமூக அழுத்தங்கள் சிக்கலாக உண்டாகுமோ? என்கிற குழப்பம், பிறரால் வெறுக்கப்படுவோமா? என்கிற அச்சம் என இன்னும் ஆயிரம் காரணங்கள் ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாமைக்கு சொல்லிக்கொண்டே போகலாம்... இப்படியோர் சூழலிருந்து ஒருவர் தம்மை மீட்டு, வெளிப்படுத்திக்கொள்வது என்பது நிச்சயம் ஒரு உளவியல் பயணமாகத்தான் இருக்கும்...

அந்த பயணத்தின் முதல் புள்ளியே, “தம்மை தன்னிடமே வெளிப்படுத்திக்கொள்வது” (Coming Out to Oneself) எனப்படுகின்ற சுய ஏற்புதான்... ஆம், முதலில் நம்முடைய பாலீர்ப்பு பற்றிய சிறிதும் குழப்பமில்லாத, தெளிவான மனநிலை நமக்கு உண்டாக வேண்டும்... அந்த பாலீர்ப்பை நாம் முழுமையாக ஏற்கவேண்டும்.. இந்த சுய அங்கீகாரம் என்பது கண்டிப்பாக நம்மை உளவியல் ரீதியாக பலமாக்கும்... ஆகையால் முதலில் நம்மை நம்மிடம் வெளிப்படுத்திக்கொண்ட பிறகே, இந்த பயணத்தின் அடுத்தக்கட்ட நகர்வு நமக்கு சாத்தியம்...

ட்ரைடன் என்ற அறிவியலாளர் இந்த வெளிப்படும் நிகழ்வு ஆறு சிக்கலான புள்ளிகளை கடந்த பிறகே சாத்தியம் என்கிறார்... பல அறிஞர்களும் வெளிப்படுதல் பற்றிய பயணத்தின் படிநிலைகள் பற்றிய பலவிதமான ஆய்வுகளை வெளியிட்டாலும், பலராலும் ஏற்கப்பட்ட மாதிரி படிநிலை ஆய்வின் முடிவை ட்ரைடன்தான் கண்டுபிடித்தார்...

1)      பாலீர்ப்பு அடையாள குழப்பம்..
2)      பாலீர்ப்பு அடையாள ஒப்பீடு...
3)      பாலீர்ப்பு அடையாள சகிப்பு...
4)      பாலீர்ப்பு அடையாள அங்கீகரிப்பு...
5)      பாலீர்ப்பு அடையாள பெருமிதம்...
6)      கூட்டிணைந்து செயல்படுதல்...

என்கிற ஆறு படிநிலைகளின் முடிவில்தான்  எந்தவொரு நபரும் வெளிப்படுவது சாத்தியம் என்கிறார்கள்...

சமீப காலங்களில் நம் நாட்டில் சமபால் ஈர்ப்பு நபர்கள், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துவருவதை பரவலாக காணமுடிகிறது... இதனை ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என சொல்லலாம்... சட்டமும் சமூகமும் நமக்கு எதிராக இருக்கின்ற சூழலிலும் இத்தகைய வெளிப்படுத்தல்கள் நிச்சயம் நம்மவர்களின் மனவுறுதியை காட்டுவதாகவே இருக்கிறது... இனி வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நிச்சயம் அதிகரிக்கும், அதன்வழியே கூட சமுதாய மாற்றத்திற்கான வழிபிறக்கும் என நினைக்கிறேன்..

நம்முடைய பாலீர்ப்பை வெளிப்படுத்திக்கொள்ளாமல், மறைத்து வாழும் அந்த இரட்டை வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? என்பது நாம் எல்லோரும் அறிந்ததே... சிலர் இப்போது அதிலிருந்து விடுபட்டிருக்கலாம், பலர் இன்னும் அந்த வாழ்க்கையை தொடர்ந்துகொண்டுதான் இருக்கக்கூடும்... அந்த வலி, ஒவ்வொரு நிமிடமும் நம்மை சுற்றி இருக்கிறவர்களை ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறோமே! என்கிற விரக்தி, நம்மைப்பற்றி தெரிந்துவிடுமோ? என்கிற பயம் என்று எந்த நிலையிலும் ஒருவித பதற்றத்தை சுமந்த வாழ்க்கை நம்மில் பலருக்கு பழகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்...

சரி, வெளிப்படுதல் எல்லோருக்கும் சாத்தியமா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்... கொஞ்சம் சிக்கலான கேள்விதான் என்றாலும், அதற்கு பதில் அவரவர் வாழும் சூழலை பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து...

“அப்பா நான் ஒரு கே!” என்று சிலருக்கு காபி சாப்பிடுவதை போல, வெளிப்படுதலும் சாத்தியமாகலாம்... ஆனால், பலருக்கும் அப்படியான வாய்ப்புகள் இல்லைதான்... அதற்கு சிலவிஷயங்களை பரிசீலித்த பிறகு, இந்த வெளிப்படுத்தலை நடைமுறைப்படுத்துவது நல்லது... 

·        முதலில் யாரிடம் நம்மை வெளிப்படுத்தப்போகிறோம்? என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்...
·        நீங்கள் வெளிப்படுத்த இருக்கின்ற நபருக்கு மாறுபட்ட பாலீர்ப்புகளை பற்றிய தெளிவு இருக்கிறதா? என்பதை முன்பே சோதித்து பார்த்திருக்கவேண்டும்...
·        உங்களை வெளிப்படுத்திக்கொள்ளும்போது, நீங்கள் வெளிப்படுத்தும் நபர் ஆயிரம் கேள்விகளை உங்கள் முன் வைக்கலாம்... அந்த ஆயிரம் கேள்விகளுக்கான பதில்களை பெற்றிருக்கும் அளவிற்கு, உங்களது பாலீர்ப்பை பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கவேண்டும்...
·        நண்பர்களிடம் சிலநேரம் வெறுப்பை சந்திக்க வாய்ப்பிருக்கிறது, சிலருக்கு குடும்பத்தினரிடம் கடுமையான சொற்கள், தாக்குதல்கள்கூட பெற்றிட வாய்ப்பிருக்கிறது... இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் அளவிற்கான மனவுறுதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும்...
·        கோபமோ, பதட்டமோ பட்டிடாமல் உங்கள் தரப்பு நியாயங்களை அவர்கள் ஏற்கும் வண்ணம் நளினமாக வெளிப்படுத்தவேண்டும்... சில சென்டிமென்ட் வசனங்கள், ஒன்றிரண்டு துளிகள் கண்ணீரை கடைசி அஸ்திரமாக கையில் எப்போதும் வைத்திருங்கள்...

மேற்சொன்ன விஷயங்களை கணக்கில்கொண்ட பிறகே வெளிப்படுத்தும் எண்ணத்தினை செயல்வடிவமாக்குங்கள்... கண்டிப்பாக இது மிகப்பெரிய சவால்தான், என்றாலும் கூட நாம் நாமாக இருக்க சிலநேரங்களில் இந்த கடினமான பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது...

ஹம்சபார் ட்ரஸ்ட்டின் நிறுவனர் அசோக் ரா கவி மிகப்பிரபலமான, பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான போராளி... இந்த வெளிப்படுத்தலை பற்றி அவர் கூறும்போது, “இந்தியாவை பொறுத்தவரையில் தமது பாலீர்ப்பை ஒருவர் வெளிப்படுத்துவது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான்.. அந்த நபர் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், மிகச்சிறந்த விஞ்ஞானியாக இருந்தாலும் கூட தம்மை வெளிப்படுத்திய பிறகு, அவருக்கான பிரதான அடையாளமாக அவருடைய பாலீர்ப்பே இருந்துவிடும்... நம்மை பிடிக்காதவர்கள் நம்மைப்பற்றிய கற்பனை கதைகளை கட்டிவிட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்... இவையல்லாம் சமாளித்து வாழ்வதென்பது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும், நாம் நாமாகவே வாழ்வது அந்த சிரமத்தை தாண்டிய மகிழ்ச்சியை நமக்கு உண்டாக்கும்” என்கிறார்...

அசோக் ரா கவி சொல்வது மிகச்சரியான பார்வை... இன்னும் முழுமையான பாலீர்ப்பு பற்றிய விழிப்புணர்வு இங்கே உண்டாகாத நிலையில், இத்தகைய சிக்கல்கள் எழுவது இயற்கைதான்... அதேநேரத்தில் சமீபத்தில் அதிகரித்துவரும் மாற்றுப்பாலீர்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வுகள் நிச்சயம் எதிர்வரும் காலங்களில் நிறைய நபர்களை வெளிப்படுத்த வைக்கும் என்று நம்பலாம்...

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11ம் திகதியை “தேசிய வெளிப்படுத்தும் நாள்” என உலக அளவில் நம்மவர்கள் கடைபிடிக்கிறார்கள்... அந்நாளில் உலகின் பல்வேறு நாடுகளிலும் நம்மவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதும், பேரணிகளில் கலந்துகொள்வதும் அதிகரித்துவருகிறது... மதம், இனம், காதல், பாசம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்த ஒருநாள் கொண்டாடப்படும்போது, நமக்காக, நம்மை நாமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நாளை அனுசரிப்பதில் தவறில்லை...

முன்பு சொன்ன ஒருவிஷயத்தை மீண்டும் சொல்லி, கட்டுரையை நிறைவு செய்கிறேன்... ஒருவர் தம் பாலீர்ப்பை வெளிப்படுத்திக்கொள்வதென்பது ஒருவித உளவியல் பயணம்... அந்த பயணத்தில் நமக்கு மட்டுமல்லாது, நம்மை சார்ந்தவர்களுக்கும் பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டு, மனக்காயங்கள் உண்டாக்கிடாமல், சூழலை உணர்ந்து பயணியுங்கள் என்பதுதான் என் ஆலோசனை... அதை கவனத்துடன் நிறைவேற்றிவிட்டால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை ஒரு பசுமையான பாதையில் பயணிக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை...

11 comments:

  1. I come out to my dad... Like u said .. Dad in gay.....

    It's totally cool

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சகோ... இதுவே நம்மை போன்றவர்களுக்கு பெரிய சாதனைதான்...

      Delete
  2. I dream such a day in my life where I come out and my family accept me who I am :-)

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அந்த நாள் உங்க வாழ்க்கையில் ஒரு பொன்னாளாக வரும்னு நம்புவோம் சகோ....

      Delete
  3. Replies
    1. அந்த உளவியல் பயணத்தின் வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.... பல சிக்கல்கள் மிகுந்த அந்த பாதையை கொஞ்சம் கொஞ்சமாக சிதிலம் போக்கி பயணிக்க தொடங்கியுள்ளேன்...

      Delete
  4. என்.அம்மாவின் கே பற்றிய பார்வயை மாற்றி வருகிறேன். மின்பு கே பற்றிய விவரம் கேட்டாலே முகம் சுளிக்ககும் என் அம்மா இப்போது எதிர் வாதம் செய்ராங்க. விரைவில் அம்மாவின் கே பற்றிய பார்வை மாறும் என நம்பிக்கை பிறந்துள்ளது. அது மட்டும் அல்ல விஜய் டிவியில் மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் "என் வாழ்க்கை" கே வாழ்க்கைய விவரிக்கிறது. மின்பு இதை பார்க்க மறுத்த அம்மா இப்போது என்னுடன் சேர்ந்து பார்கிறான். அம்மா படிகாதவங்க ஆன புரிஞ்சிகுறாங்க கே என்றால் என்ன என்று. ஆனா அவங்க மனம் தான் ஏற்க மறுக்குது விஜய். அதையும் மாத்தமுடியுமுனு நம்பிக்கை இருக்கு விஜய்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்ல விஷயம் கமல்.... முதலில் சமூக மாற்றத்தை நமது குடும்பத்திலிருந்து தொடங்குவதுதான் முறை... அந்த வகையில், உங்கள் முயற்சி சிறந்த ஆக்கத்திற்கு வழிவகுக்கும்.... வாழ்த்துகள்...

      Delete
  5. Great move Thasan kamal... Even i m also trying...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் Sat. முயற்ச்சிதான் திருவினையாக்கும். சீக்கிரமே வெற்றி அடைவோம் நாம்.

      கமல்தாசன்.

      Delete
    2. நல்ல முயற்சி தம்பி.... எல்லாம் சுபமாக வாழ்த்துகள்...

      Delete