Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 12 February 2015

இனிது... இனிது.... காதல் இனிது... - சிறுகதை...






அதிகாலை தூக்கம் சுகம்தான்... ஆனாலும் தனா இருந்திருந்தால் இன்னும் சுகமாக இருந்திருக்கும்... பெரும்பாலான நாட்களில் அவனுடைய முதுகுதான் முதல் விழிப்பாய் அமைந்ததுண்டு... மேலாடை இன்றி படுத்திருக்கும் அவன் உடலின் பின்பகுதி பளபளப்பு, கிரானைட் கற்களுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல... மெள்ள நகர்ந்து அவன் வெகு அருகாமையில் படுத்தவாறு, அவனை நுகர்ந்து பார்ப்பேன்... அது அவன் வாசனை, அவனுக்கே உரிய வாசனை.. என் மூச்சுக்காற்றின் சூடு, அதன் வெப்ப அளவினை வைத்தே எந்த நோக்கத்தில் அவனை நெருங்கியுள்ளேன் என்பதை யூகித்துவிடுவான்... பெரும்பாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், என் சில்மிஷங்களை ரசிப்பான்... அவன் முடிகளை மெல்ல வருடி, காதின் மடலில் இதழ் பதிப்பேன், அந்த தொடுதலில் அவனுடல் சிலிர்ப்பதும்கூட வழக்கமானதுதான்... அப்படியே கன்னங்களை கடந்து, அவன் இதழ்களை நோக்கி பயணிக்கும்போதுதான் முழுவதுமாக என் பக்கம் திரும்பி, என்னை கபளீகரம் செய்யத்தொடங்குவான்... அடச்ச... இன்றைக்கு எதுவுமே இல்லை... ஏதோ திருவிழாவாம், ஊருக்கு போய்விட்டான்... இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த தனிமைத்தவிப்பு மட்டுமே என் பிழைப்பு....

தலையணையை இறுக்க அணைத்துக்கொண்டு, கண்களை அழுத்த மூடியபடி இன்னொரு தூக்கத்தினை நோக்கி பயணித்தேன்... கனவிலும் தனா, ஊருக்கு போனால் கூட என்னை நினைவுகளால் படுத்துகிறான்... அழைப்பு மணி, அவசர ஒலியாக ஒலித்துக்கொண்டே இருந்ததை நான் வெகுநேரம் கவனிக்கவில்லை... “டிங் டாங்... டிங் டாங்...” தொடங்கி, “டிங்க்க்கக்க்க்க்..... டாங்கக்க்க்கக்க்க்” என சுவிட்ச்சை விரல் விலக்காமல் அழுத்திக்கொண்டே இருந்ததின் அவசரம் புரிந்து, பதட்டமாய் எழுந்து கதவை நோக்கி ஓடினேன்... ஓடிய வேகத்தில் நழுவிய ஷார்ட்ஸ்’ஐ சரிசெய்தவாரே கதவை திறந்தேன்....
கையில் பைகள் சகிதம் தனாதான்...

“நீதானா?... சொல்லிருந்தா வண்டி எடுத்திட்டு வந்திருப்பேன்ல, ஆட்டோல வந்தியா?” பைகளை வாங்கியபடியே பயணம் விசாரித்தேன்...

“எரும எரும... எதாச்சும் பேசுன, அடிவாங்குவ.... காலைலேந்து எத்தன தடவ உனக்கு கால் பண்றது, அந்த கருமத்த சைலன்ட்’ல போடாதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்!” வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் பொரிந்து தள்ளினான்... அவசரமாக அலைபேசியை எடுத்துப்பார்த்தேன், அதிலோ பதினெட்டு தவறிய அழைப்புகள்... இன்னிக்கு செத்தேன்... ஒன்னு ரெண்டு மிஸ்டு காலுக்கே தலைகீழா தண்ணி குடிப்பான், இதில பதினெட்டு’ன்னா சொல்லவே வேணாம்...

 “சாரி தனா... நீ நைட்டே சொல்லிருக்கலாம்ல..”

“ஓஹோ... சார்கிட்ட அப்பாயன்மென்ட் வாங்கிட்டுதான் எல்லாத்தையும் செய்யனுமாக்கும்!” அதற்க்கும் அதே குதர்க்கமான பதில்... என் முகத்தைக்கூட ஏறிட்டுப்பார்க்காமல் படுக்கையில் கவிழ்ந்தான்... போர்வையை தலையோடு இழுத்து போர்த்தியபடி, உறங்க ஆயத்தமாகிவிட்டான்...

குழப்பத்தோடு அவன் அருகே படுத்தேன்.. என் மூச்சுக்காற்றல்லாம் படுமளவிற்கு வழியில்லாமல் போர்வை கனமான அரணாக இருந்தது... குத்துமதிப்பாக அவன் மீது என் கையை போட்டேன், அநேகமாக என் கை பட்ட இடம் வயிறாகத்தான் இருக்கும்... நல்லவேளையாக கை இன்னும் கொஞ்சம் கீழே இறங்கவில்லை, இல்லாவிட்டால் அதற்கொரு கலவரம் ஆயத்தமாகவே காத்திருக்கும்... 

“சாரி தனா... காலைலேந்து உன் நினைப்புதான் தெரியுமா?... உன்ன பாக்காம தூக்கம் கூட வரல!”

“ஆமாமா... அதான் நான் பத்து நிமிஷமா காலிங் பெல் அடிச்சும் திறக்கலையாக்கும்...” என் எல்லா பந்துகளையும் அவன் பவுண்டரிகளை நோக்கி பறக்கவிட்டான்...

“அதான் சாரி கேட்டேன்ல, இன்னும் என்னடா பண்ண சொல்ற?...”

“உன் சாரியை வச்சு என்ன பண்றது?... இப்டி இம்சை பண்ணாம போய் ஒரு காபி போட்டுட்டு வா...” சொல்லிவிட்டு போர்வையை விலக்கி என் முகத்தைப்பார்த்தான்... சிரித்தபடிதான் இருக்கிறான், எனக்கு போன உயிர் மீண்டு வந்ததாக உணர்வு...

“அட லூசு, பயந்துட்டியா?... நீ கால் அட்டன்ட் பண்ணலைன்னதும் இப்டியல்லாம் சண்டை போடணும்னு கோபம் வந்துச்சுதான், ஆனா உன் முகத்தை பார்த்ததும் எல்லாம் புஸ்சுன்னு போய்டுச்சு...” செல்லமாக என் கன்னத்தை கிள்ளினான்...

“டேய் பாவி, ஒரு நிமிஷத்துல என்னை டர்ராக்கிட்ட... இப்போ பதிலுக்கு உன்னை டார் டார்’ராக்க போறேன் பாரு” சொல்லிக்கொண்டே அவனை என் பக்கம் திருப்பி, இரண்டு கைகளுக்குள்ளும் பிணைத்துக்கொண்டேன்... என் கிடுக்கிப்பிடியை சாமாளிக்க முடியாததைப்போல பொய்யாக உடலை உலுக்கி திமிர முயன்றான்..

“செல்லம், ட்ராவல் பண்ண டயர்டா இருக்கேண்டா... ஒரு காபி கொடுத்திட்டாவது உன் வேலையை தொடங்கு...” சிணுங்கினான்...

“காபிதான?.. இதோ தரேன், சூடா...” அவன் கன்னத்தருகே நுகர்ந்தேன், அதே வாசம்... என்னை எப்போதும் கிளர்ச்சியூட்டும் அவன் வாசம்...

“அழுக்கா இருக்கேண்டா, குளிச்சுட்டு வரேன்!” 

“எல்லாம் முடிஞ்சதும் ஒண்ணா குளிச்சுக்கலாம்.... மூணு நாளா என்னை தனியா விட்டுட்டு போனில்ல, அதுக்கு....”



                                                            ****************
சமயலறையில் தனாவிற்காக தோசை வார்த்துக்கொண்டிருந்தேன்... தூக்கம் களைந்து எழுந்தவன், நேரடியாக குளியலறைக்குள் தஞ்சம் புகுந்து அரைமணி நேரம் கடந்துவிட்டது...

சில நிமிடங்களில் இடுப்பில் துண்டை மட்டும் சுற்றிக்கொண்டு, பாலித்தின் பேப்பர் சுற்றிய அல்வா போல குளித்து முடித்து வெளியே வந்தான்...  தலை முதல் பாதம் வரை நீர்த்துளிகள் வழிந்து வந்து தரையை தொட்டன... அநேகமாக இந்த நீர்த்துளிகள் மட்டும் பிறவிப்பேற்றை அடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது...

“ஏய், என்னடா புதுசா பாக்குற மாதிரி பாக்குற?” விரல்களால் தலையை தட்டிக்கொண்டே கேட்டான்...

“ஹ்ம்ம்.... அப்டிதான் தெரியுது, இன்னொரு தடவை பாத்திடலாமான்னு தோணுது...”

“அடப்பாவி, ஆளவிடு... இங்க பாரு, எத்தன எடத்துல கடிச்சு வச்சிருக்க... என் உதடு உன்கிட்ட படுற பாடு, ரொம்ப பாவம்டா... போன பிறவில நாயா பிறந்திருப்பியோ?” தன் உதட்டின் காயத்தை வருடியபடியே பொய்யாக கோபித்துக்கொண்டான்...

“நான் நாயா பிறந்திருந்தா, நீ பிஸ்க்கட்டா’தான் பிறந்திருப்ப!” பதிலை ரசித்துக்கொண்டே அறைக்குள் சென்று உடைமாற்றி, சமையலறைக்குள் நுழைந்தான்...
தட்டை எடுத்து ஊற்றிய தோசையை வைத்து, முதல் வாயை எனக்கு ஊட்டிவிட்டான்...

“நீ சாப்பிடுடா, எனக்கு பசி அப்போவே முடிஞ்சிடுச்சு...” கண்ணடித்து சிரித்தேன்..
அவனும் வெட்கத்தில் சிவந்தான்...

“உன் தோசையை சாப்பிட்ட பின்னதான், சாப்ட்ட மாதிரி ஒரு உணர்வே வருது!”

“டேய் டேய், இதல்லாம் டூமச்... உங்க வீட்ல மூணு நாளா கறிவிருந்தே போட்டிருப்பாங்க, என் தோசை அதைவிட உனக்கு டேஸ்ட்டா இருக்காக்கும்?”

“என்னதான் இருந்தாலும் உன் கைப்பக்குவம் வேற யாருக்கும் வராது... சில நேரத்துலதான் அந்த பக்குவம் கொஞ்சம் எல்லை மீறிடுது!” கண்ணடித்து சிரித்தான்.. அதற்கு பதில் சொல்வதற்கு முன்பு என் வாயில் தோசையை திணித்தான்...

“வருஷத்துல எல்லா நாளும் இப்டி சண்டே’யாவே இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?” என் தோள் மீது கைவைத்து, ஏக்கத்தோடு கேட்டான்...

“நல்லாத்தான் இருக்கும், ஆனா இந்த சண்டே’ய என்ஜாய் பண்ண பணம் எங்கிருந்து வர்றதாம்?”

“ஹ்ம்ம்... சரிதான்... ஆனாலும் ப்ராஜக்ட், டீம் லீடர், எச்.ஆர்., இப்டியே வாழ்க்கை ஓடுறது போர் அடிக்குது... சீக்கிரம் எப்டியாச்சும் கனடா போய்ட்டா, எல்லா ப்ராப்ளமும் தீர்ந்திடும்... அங்க நமக்குன்னு ஒரு வாழ்க்க, அதில நம்ம குழந்த... மூணு பேரு மட்டும் உலகத்துல இருக்குற மாதிரி ஒரு வாழ்க்க... எப்டி இருக்கும்!” கண்களை திறந்துகொண்டே வழக்கம்போல அவன் கனவுலகில் பிரவேசிக்க தொடங்கிவிட்டான்...

“சரி சரி... அதல்லாம் நல்லாத்தான் இருக்கும்.. இப்போ நீ கிச்சனை காலி பண்ணிட்டா, மதியம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ண நல்லா இருக்கும்...”

“இருடா, நானும் வந்திடுறேன்...” கைகழுவ அவசரமாக எழுந்தான்...

“ஒன்னும் அவசியம் இல்ல... நீ ட்ராவல் பண்ண டையர்டா இருக்க, போய் ரெஸ்ட் எடு... அரை மணி நேரத்துல சமைச்சுட்டு உன்ன கூப்பிடுறேன்” வலுக்கட்டாயமாக அவனை வெளியேற்றி, சமையலுக்குள் ஐக்கியமானேன்...


                                                       ***************
சமையல் வேலை முடிந்து, ஹாலில் ஆசுவாசமாக அமர்ந்தேன்... இன்னும் தனா அறைக்குள் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறான்... மணி பன்னிரண்டுதான் ஆகிறது, மெள்ளவே எழட்டும்... மேசை மீது கிடந்த விகடனை புரட்டினேன், மூன்றாவது பக்கம் புரட்டுவதற்கு முன்பே தூக்கம் களைய, அறைக்குள்ளிருந்து வெளியே வந்தான் தனா...

ஹாலில் இருந்த அவன் பையிலிருந்து ஒரு கவரை பிரித்து, என் முன் நீட்டினான்..

“திருவையாறு போனேன்டா, நீ கேப்பில்ல அசோகா...” நெய்யில் நீந்திக்கொண்டிருந்தது அசோகா... இரண்டு விரல்களால் லாவகமாக பிய்த்து வாயில் போட்டுக்கொண்டேன், நாவில் கூட தண்டாமல் தொண்டைக்குள் திரண்டோடியது...

விகடனை வாங்கி தூரப்போட்டுவிட்டு, என் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்...

அந்த முடிகளை மெல்ல விரல்களால் கோதிவிட்டேன், இன்னொரு கையை அவன் கைகளால் அழுந்த பிடித்துக்கொண்டான்...
கண்ணுக்கு கீழே சிவப்பாக ஏதோ தடிப்பு... மெல்ல அதை வருடினேன்...

“அது நீ கடிச்சது இல்ல, கொசு கடிச்சது” சிரித்தான்...

“எனக்கு போட்டியா இன்னொருத்தனா? விடமாட்டேன் ...”

“லூசு, அது அவன் இல்ல, அவள்.... பெண் கொசுதாண்டா கடிக்கும்...”

“இந்த சைன்ஸ் ரிசர்ச் ரொம்ப முக்கியமா இப்போ?... கொசுவைக்கூட எனக்கு வில்லனா ஏத்துக்க மாட்டேன்...”

“ரொம்ப கஷ்டம்...” சிரித்தான்...

“வீட்ல கல்யாணப்பேச்சு பேசுனதா சொன்னியே, என்னடா ஆச்சு?” வில்லனைப்பற்றி பேசியபோதுதான், அவன் முன்பு சொன்ன திருமண பேச்சு நினைவில் தோன்றியது...

அது வழக்கம்போல இந்த தடவையும் ஓடுச்சுதான், இந்தமுறை கொஞ்சம் அடுத்த லெவலுக்கு போயிருக்கு... அவ்ளோதான்...”

அவன் இயல்பாக சொன்னாலும், என் பதற்றம் அதிகரித்தது... “அடுத்த லெவலா?... என்ன?”

“திருவிழாக்கு வந்திருந்த அத்தை நேரடியாவே அவங்க பொண்ணை கட்டிக்க சொல்லி கேட்டுட்டாங்க... ‘நீ ஹ்ம்ம்னு சொன்னா இப்பவே இவளை விட்டுட்டு போய்டுவேன்’னு கூட சொன்னாங்க...”

“நீ என்ன சொன்ன?”

“அப்டி விட்டுட்டு போறதா இருந்தா, உங்க பையனையாவது விட்டுட்டு போங்க அத்த, கொஞ்சம் வசதியாவாவது இருக்கும்!’னு சொன்னேன்... நான் சீரியஸா சொன்னாலும் கூட, அது புரியாம சிரிக்கிறாங்க எல்லாரும்... செம்ம காமெடியா போச்சு!”

“விளையாடாம சொல்லு தனா, என்ன சொன்ன?”

“ஐயோ சத்தியமா இப்போ சொன்னததான் சொன்னேன்.... அவங்க சிரிச்சுட்டு, ஜாதகத்த மட்டும் வாங்கிட்டு போயிருக்காங்க...” கொஞ்சம்கூட சலனமில்லாமல்  சொல்லிவிட்டான்... என் இதயம் மெல்லிய விரிசல் விட்டதைப்போல உணர்வு எனக்குள்...

என் முகம் வாடியதையோ, என் பதட்டத்தையோ அவன் கவனித்ததாக தெரியவில்லை... அவன் இயல்பான அணுகுமுறை, என்னை அச்சமுற வைத்தது....

“அப்போ ஜாதகம் ஒத்துப்போச்சுன்னா?” கேட்டேன்...

“ஹ்ம்ம்... அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்... வந்து மொய் வச்சுட்டு போ.... இதல்லாம் கேள்வியா?” என் மடியிலிருந்து எழுந்து என் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கோபத்தை வெளிப்படுத்தினான்...

“நீ இவ்ளோ சாதாரணமா இதை சொல்றத பார்த்தா, அதுக்குக்கூட நீ தயார் ஆனமாதிரி தெரியுது...”

“நீ திருந்தவே மாட்ட... ஒரு ஜோக்கைகூட ரசிக்கத்தெரியாத முட்டாளா நீ?... இந்த விஷயத்த எப்டி சொன்னா நீ ஏத்திருப்ப?... சீரியல்ல வர்ற மருமகள் மாதிரி அழுது ஒப்பாரி வச்சு சொல்லிருந்தா, உனக்கு ஓகேவா?... அடச்ச...” தீப்பிழம்பாய் வார்த்தைகளை கொட்டினான்...

ஆனால், இது என்ன மாதிரியான நியாயம் என்று எனக்கு புரியவில்லை... நியாயமாக நானல்லவா இதற்கு கோபித்து, சண்டை பிடித்திருக்கவேண்டும்?... அவன் முந்திக்கொண்டதால் அவன் தரப்பு நியாயமாகிவிட்டதா?... எனக்கும் கோபம் தலைக்கு மேல் ஏறியது...

“ஆமா... நான் முட்டாள்தான், ஜோக் புரியாத சைக்கோதான்... உனக்கு உன் சொந்தங்கள்தான் முக்கியம், நான் ரெண்டாம் பட்சம்தான்... உன் அத்தை, அத்தை பொண்ணு, அவங்க பையன்னு இருந்துக்க... என்னைய ஆளவிடு” சட்டென எழுந்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை வேகமாக சாத்திக்கொண்டேன்...

படுக்கையில் விழுந்த வேகத்தில், தலையணை தடுமாறி கீழே விழுந்தது...
கோபம் இன்னமும் என்னைவிட்டு குறையவில்லை... கோபம், ஆத்திரம், வெறுப்பு, இயலாமை என எல்லா இம்சைகளும் ஒருசேர என்னை ஆட்கொண்டுவிட்டதை போல விரக்தியின் விளிம்பில் படுத்திருக்கிறேன்...

அதெப்படி அவன் எல்லா விஷயங்களையும் சாதாரணமா எடுத்துக்கறான்?... சரி, அது அவன் குணாதிசயமாகவே இருக்கட்டும், அவனைப்போலவே நானும் இருக்கவேண்டும் என்றும்கூட எப்படி எதிர்பார்க்க முடிகிறது?... எதிர்காலத்தை பற்றி யோசித்தால் அது அவசியமற்ற செயலா?... அவனும் கூடத்தான் கனடா, குழந்தைன்னு எவ்வளவோ கனவுகளை சுமக்கிறான்... நான் சொல்லும் பிரச்சினைகளை கடந்துவிடாமல், அந்த கனவுகள் சாத்தியமில்லை என்ற அடிப்படை அறிவுகூடவா அவனுக்கு இல்லை...

எந்த விஷயங்களில் ஜோக் செய்வதாம்?... வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றி பேசும்போதா?... இந்த நிலையில் அவன் சொல்லும் அர்த்தமற்ற நகைச்சுவையை நான் ரசிக்கவில்லையாம்!... நான் முட்டாளாம்.... ஆம், நான் முட்டாள்தான்... குடும்பம், சொந்தம், நண்பர்கள், சமுதாயம்னு எல்லாத்தையும் தூக்கிபோட்டுட்டு அவனுக்காகவே வாழ்றேனே நான் அடிமுட்டாள்தான்... 

நேரமும் மெல்ல நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது... அநேகமாக இரண்டு மணி ஆகியிருக்கலாம்... வயிறு இரைவதை வைத்தே, எனது பசியை அனுமானித்துவிடலாம்... கருமம்பிடிச்ச வயிறுக்கு இன்னைக்குன்னு பார்த்துதான் இவ்வளவு பசிக்கும்!... 

அவனோடு நான் சண்டைபோட்டால், அடுத்த நிமிடமே சமாதானத்துக்கு போய்டுவேன்... இப்போ என்னோட சண்டைபோட்டுட்டு, இவ்வளவு நேரம் கண்டுக்காம இருக்குறான்... அழுத்தக்காரன்... எனக்கு பசி தாங்கமுடியாதுன்னு கூடவா....

கதவை திறக்கும் சத்தம்கேட்டது... அவன்தான், அதை கண்டுகொள்ளாதவனை போல கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன்... என் அருகாமையில் வந்து படுக்கிறான், என் உடலோடு மிக நெருக்கமாக நகர்ந்துவந்துவிட்டான்.... மெள்ள என் தோள் மீது கை வைத்தான்... அவன் கையை விலக்கிவிட்டு, அவனைவிட்டு சற்று தள்ளிப்படுத்தேன்... இன்னும் வேகமாக என் அருகே நகர்ந்த தனா, என்னை இறுக்கமாக கட்டி அணைத்தான்... கோபமெல்லாம் காற்றில் கரைந்துவிட்டதை போல, மனது இளகிவிட்டது...

“டேய் முட்டைக்கண்ணா, என்னடா கோபம் உனக்கு?” என் தலை மீது தலை சாய்த்து அவன் கேட்டபோதே, எல்லாம் பறந்துபோய்விட்ட நிலையில், என்னவென்று பதில்சொல்வதாம் அவனுக்கு...

“ஆமா நான்தான் முட்டைக்கண்ணு... உன் அத்தைப்பையன், அந்த நல்ல கண்ணன்கிட்ட போய் கொஞ்சிக்கோ”

“அட லூசே... ரன்பீர் கபூரே வந்தாலும், உன்னைத்தாண்டா நான் பார்ப்பேன்...”

“நிஜமாவா? சத்தியமா சொல்றியா?”

“ரன்பீர் கபூருக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்க்யூஸ் கொடுத்திடலாம், அவனைத்தவிர எவன் வந்தாலும் நீதாண்டா அழகு!” கன்னத்தில் இச்சிட்டான்....
மென்மையாக சிரித்தேன், அதை அவனும் பார்த்துவிட்டான்...

“அடடே, இந்த சிட்டி ரோபோவுக்கு சிரிக்கக்கூட தெரியுதே?”

“மறுபடியும் கடுப்பேத்தாத... எந்த விஷயத்துல ஜோக் பண்றதுன்னு உனக்கு புரியல... நம்ம எதிர்காலம் பத்தி எவ்ளோ பயப்படுறேன் தெரியுமா, அந்த விஷயத்துல உனக்கு என்ன இவ்ளோ அசால்ட்?”

“சரி, நான் என்ன பண்ணிருக்கனும்னு சொல்ற?”

“உன் கல்யாணத்த பத்தி வீட்ல கேட்டப்போவே, நம்ம லவ் பத்தி சொல்லிருக்கலாம்ல?”

“சொல்லிட்டா?... உடனே ஜாதகம் பார்த்து, முகூர்த்த தேதி குறிச்சிடுவாங்களா?... அடப்போடா, அது எந்த காலத்துலயும் நடக்காது... இப்போ நாம சொன்னா அது பர்மிஷன் கேட்குற மாதிரி... இதுவே நாம கனடால செட்டில் ஆகிட்டு, நம்ம கல்யாணம் முடிஞ்சப்புறம் சொன்னா அது தகவல் சொல்ற மாதிரி... அதனால, இப்பவே என்னத்துக்கு ரிஸ்க் எடுக்கணும்?” படபடன்னு சொல்லிமுடித்துவிட்டான்... ஆம், அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது... அவன் முன்ன சொன்னதுபோலவே நான்தான் முட்டாள், எல்லாவற்றிலும் அவசரம்!...

“ஓஹோ.... சாரிடா...”

“அட லூசு, விடுடா... இதல்லாம் மேட்டரா?”

“ஆனா நீ பெரிய ஆளுடா... தப்பு நான் பண்ணாலும் நான்தான் சாரி கேட்கிறேன்... அதே தப்பை நீ பண்ணாலும், நானே சாரி கேட்குற மாதிரி செஞ்சிடுற...” சிரித்தேன்...

“ஹ ஹ ஹா... யாரு சாரி கேட்டா என்ன, பிரச்சினை முடிஞ்சா சரிதான்...”

“சரி, எனக்கு பசி வயித்தை கிள்ளுது.... எழுந்திரு, போய் சாப்பிடலாம்...” படுக்கையைவிட்டு எழ முயல, என் கையை பிடித்து இழுத்து மீண்டும் கட்டிலில் கிடத்தினான்...

“எனக்கும் பசிக்குது... ஆனா, இது வேற பசி” என்று அப்படியே என் முழு உடலையும் தன்வசப்படுத்திக்கொண்டான்...

“டேய், கொஞ்சம் .... சாப்பிட்டு .... வந்திடுறேன்... ரொம்ப பசிக்குதுடா!” அவன் கொடுத்த முத்தங்களுக்கு மத்தியில் கிடைத்த இடைவெளியில் வார்த்தைகளை கோர்த்துவைத்தேன்...

“காலைல நான் சொன்னப்போ நீ கேட்டியாக்கும்!... இனி பேச உன்ன வாயை திறக்க விட்டாதானே!”.... பச்ச்... பச்சக்.....


                                                          **************
இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது... தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போர் அடிக்க, படுக்கையில் படுத்தபடி அடுத்தநாள் அலுவல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்...

“சரி, லைட் ஆப் பண்ணிட்டு தூங்குடா!” என்று கண்களை கசக்கிக்கொண்டான் தனா...

“என்னது தூங்குறதா?.. இதென்ன புதுப்பழக்கம்!” சிரித்தேன்...

“அடப்பாவி... காலைலேந்து ப்ரேக் கூட இல்லாம இதானேடா நடந்துச்சு?”

“அது காலைல... நான் சொல்றது இப்போ... நைட்டு இப்டி இப்டி நடக்கனும்னுதான் நம்ம கல்ச்சர் சொல்லுது... அதில எந்த குறையும் இல்லாம நடக்கணும்... அததுக்கும் இடம், பொருள், வவ்வால்னு இருக்குல்ல?”

“எரும, அது வவ்வால் இல்ல... ஏவல்”

“ஆமா... நடு ராத்திரியில இந்த இலக்கண வகுப்பு ரொம்ப அவசியம் பாரு!... ஆனா, நீ சொல்ற மாதிரி கனடா போய்ட்டா இன்னொரு விஷயமும் ஜாலிதான்...”

“என்ன?”

“அங்க எப்பவும் குளிரா இருக்கும், நாம எப்பவும் கட்டிபிடுச்சுகிட்டே இருக்கலாம்ல!” வேகமாக அவனை கட்டி அணைத்தேன்....

“அது ரொம்ப நாள் முடியாதே... நம்ம யாழினி குட்டி வந்துட்டா, நம்ம நடுவில அவதான் படுத்திருப்பா...”

“அது யாரு யாழினி?”

“எத்தன தடவ சொல்லிருக்கேன்... நம்ம வளர்க்கப்போற குழந்த, நம்ம குழந்தைடா...” என் தலையில் செல்லமாக குட்டினான்...

“ஓ சாரி சாரி... ஆமால்ல... அவ தூங்குன பிறகு, அவ ஸ்கூலுக்கு போன பின்னாடின்னு  இதல்லாம் வச்சுக்கலாம்...” என் பதிலால் அவன் வெட்கப்பட்டு சிரித்தான்...

“நம்மளையும் அப்பான்னு கூப்பிட ஒரு குழந்தை.... நினைக்கவே சந்தோஷமா இருக்குடா...!... உனக்கு என்ன தோணுது?” என்னை ஆரத்தழுவி அணைத்துக்கொண்டான்... அவன் கண்கள் மெல்லிய கோடாக நீரை சுரந்தது...

“இப்டியே செத்துப்போனா கூட சந்தோஷமா போய்டுவேன்டா, அந்த அளவுக்கு மனசு முழுக்க சந்தோஷம்... ஐ லவ் யூ டா...” அவன் கண்ணீர் வழிந்த கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்...

என் வாயை அவன் விரல்களால் மூடியவன், “சத்தம் போட்டு சொல்லாத, நம்மள இவன் கொன்னாலும் கொன்னிடுவான்...” இந்த கதை எழுதப்பட்ட கணினியை நோக்கி சுட்டுவிரலை நீட்டினான் தனா...

அந்த அறைமுழுக்க சிரிப்பொலி, எதிரொலிக்க... சுவர்களின் சுண்ணாம்பு பூச்சுகூட வெட்கத்தால் வெளிறிவிடும் அளவிற்கு அன்றைய இரவு முழுமையான மகிழ்ச்சியோடு முற்றுப்பெற்றது... (முற்றும்)

10 comments:

  1. :-) I really admire the way you expressed the love here. Nice job Vijay

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பிரபு...

      Delete
  2. அண்ணா உங்க கதைல வர்ற பத்திரங்கள் எப்போதும் உயிர்போட வாழுது என் மனசில உங்க கதைகளுக்கு தான் நன்றி சொல்லணும் உங்க கதைகள வாசிக்கேக்க மனசு லேசாக்குது ஒரு இனம்புரியாத சந்தோஷம் கூட வருது இதுக்குமேல என்ன சொல்லுறது....... நீங்க இப்படி கதைகள் என்னும் நிறைய எழுதனும் எண்டு கேட்டுகிறன். உங்களுக்கு இலங்கையிலும் ஒரு விசிறி(fan) இருக்கிறான் என்பதையும் நினைவில வச்சுக்கொள்ளுங்க. நன்றி அண்ணா உங்க கதைகளுக்கும் கதைல வர்ற பத்திரங்களுக்கும் உங்களுக்கும்.





    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தம்பி.... என் தம்பிகளில் எப்போதுமே இலங்கை வாழ் தம்பிகள் மீது தனிப்பாசம் உண்டு... அந்த வகையில இந்த ரவி தம்பிக்கும் எப்போதும் என் மனதில் இடமுண்டு....

      Delete
    2. வணக்கம் விஜய்.

      இந்த கதை படிக்கும போதே புரிஞ்சது மீண்டும் அழகான காதல் கதைனு.
      அப்பரம் இந்த கதைல யாரையும் நீங்க சாகடிக்கமாட்டிகனு புரிஞ்சது.

      உங்க நகைச்சுவை உணர்வு இந்த கதையில் மீண்டும் என்னை
      மலைக்க வைத்தது வைக்கிறது விஜய்.

      மெருன் கலர் தளும்பு கதைலதான் உங்க நகைச்சுவை உணர்வை கண்டு ரசித்த பிறகு இந்த கதைல மீண்டும் பாக்குரேன் சில இடத்துல இந்த கதைல விஜய்.

      மீண்டும் முழு நீல நகைசுவை கலந்தகதை தரனுமுனு கேட்டுகுரேன் விஜய்.

      எனக்கு உங்க மேலே கோபம் வருது விஜய் உங்க பெரும்பாலான கதைல கே எல்லாரும் வெளிநாட்டுல தான் வாழனும் நினைக்கிறாங்க.
      படிச்சி வசதிவாய்ப்பு இருக்கரவங்களுக்கு சரியா இருக்கலாம். படிக்காத, வசதி வாய்ப்பு இல்லாதவங்க காதல் பன்னி கல்யாணம் பன்னி இங்க வாழ முடியாதுனு எதிர் மறையான எண்ணம் தான் வருது விஜய்.

      ஏன் கே தம்பதிகள் இந்த நாட்டிலே வாழ முடியாத என்ன.

      நீங்க சொல்லுர வெளிநாட்டுல கே பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலத்துலயே அங்க வாழ்ந்த கேஸ் வெளிநாட்டுக்கோ அல்லது வெற கண்டத்துக்கோ ஓடிரல அங்கயே வாழ்ந்து போராடி இப்ப இருக்கர மாற்றத்த கொண்டு வந்தாங்க. அவங்க அவங்களுடைய சுயமரியாதைய விட்டு கொடுக்கல யாருக்கும் பயந்து நாட்டவிட்டு ஓடிபோய்டல.

      மன்னிக்கனும் விஜய் உங்க மனச புண்படுத்தனுமுனு இத சொல்லல. ஏன் இந்த நாட்ட விட்டு போகனுமுனுதான் ஆதங்கம் விஜய்.

      இப்படிக்கு
      கமல்தாசன்.கு

      Delete
    3. கருத்திற்கு மிக்க நன்றி சகோ... நீங்க சொல்ற கருத்துக்கு நான் முழுதும் உடன்படுகிறேன்... ஆனால், எதிர்கால கனவுடன் கூடிய சமபால் ஈர்ப்பு வாழ்க்கை இங்கே சாத்தியம் இல்லை என்பதுதானே நிதர்சனம்... இங்க திருமணம் செஞ்சுக்க முடியாது, குழந்தை வளர்க்க முடியாது... இப்படி சூழலில், பயந்து பயந்து மணவாழ்க்கை அமைவது வாழ்க்கையின் கடைசி வரை சாத்தியமில்லையே... அதனால்தான் பலரையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுகிறேன்... ஆனால், நிச்சயம் நம் மீதான அடக்குமுறை சட்டங்கள் ஒழிந்து, நாமும் சம உரிமையோடு வாழும் சூழல் உண்டாகும் என்ற நம்பிக்கை இருக்கு... அதுவரை காத்திருப்பதை தவிர வேற வழி இல்லையே!

      Delete
    4. யாரு சொன்னது இங்க கல்யாணம பன்னி குழந்தை பெத்துக முடியாதுனு. மதுரை, சென்னைல நம்ம கே தம்பதிகள் கல்யாணம் பன்னி குழந்தை பெத்துகிட்டு இல்லனா தத்து எடுத்து சந்தோஷமா வாழ்ராங்க விஜய்.

      Delete
    5. சட்டப்படி இங்கே திருமணம் செஞ்சுக்கவும், குழந்தையை தத்தெடுக்கவும் முடியாது என்பதால்தான் சொன்னேன் நண்பா... மற்றபடி இந்த சூழல் விரைவில் மாறும், அதன்பின்பு எல்லாம் சாத்தியம் நண்பா...

      Delete
  3. உண்மைலேயே இது இனிது இனிது தான் எத்தனை பேருக்கு இப்படி வாய்க்கும் வாழ்கை இந்த வாழ்கைக்கு தானே எல்லாரும் கனவு காண்கிறார்கள்?

    ரொம்ப சந்தோசம், கதைய நல்லபடியா முடிச்சதுக்கு, சந்தோசமா முடிச்சதுக்கு,


    கடைசி வரிகள் "சத்தம் போட்டு சொல்லாதே இவன் நம்பள கொன்னாலும் கொன்னுடுவான்" என்னையும் அறியாமல் நான் சிரிக்க பக்கத்துல இருக்குறவங்க என்ன அடிகடி இப்படி சிரிகுற கேட்டு இவன் சரி இல்லை நு சொல்லிகிட்டே போய்ட்டாங்க....

    வாழ்த்துக்கள் நாளுக்கு நாள் உங்க எழுத்து மேருகேரிகிடே போகுது ரொம்ப அருமை

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா... உங்க கருத்தை பார்த்து நானும் ரசித்து சிரித்தேன்... நல்லவேளை அருகில் யாருமில்லை, இருந்திருந்தால் உங்களைப்போலவே கேட்டிருப்பார்கள்... ரொம்ப நன்றி நண்பா...

      Delete