Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday 14 June 2014

காதலில் சொதப்பாதது எப்படி?....






சமீப காலங்களா டேட்டிங் வலைதளங்களில் ஆட்களின் வருகை ரொம்பவே குறைஞ்சுடுச்சு, காரணம் என்னவாக இருக்கும்னு நண்பர்கிட்ட கேட்டப்போ, “எல்லாரும் காதலிக்க போய்ட்டாங்க போல” என்றார்... நகைச்சுவையாக அவர் சொன்னாலும் கூட, சமீப காலங்களில் இந்த “காதலில் விழுந்த கணவான்கள்” தொல்லை தாங்க முடியலதான்.... முதல்நாள் வந்து, “நான் காதலிக்கிறேன்... அப்டியே பறக்குற மாதிரி இருக்கு... இனி வாழ்ந்தா அவன்கூடத்தான்”ன்னு ஸ்டேட்டஸ் போடுறான்... மூன்றாம் நாள், “ஏண்டா என்ன அழவைக்குற?... ரொம்ப வலிக்குது... நான் சாரி சொன்னா கூட கேட்கமாட்டியா?”னு நம்மள அழவைக்குறாங்க.... அநேகமாக ஐந்தாவது நாளே, “பிரேக்கப்” ஸ்டேட்டஸ் துள்ளி வந்திடுது...
பொதுவாக “கே காதல்களில் ஸ்திரத்தன்மை இல்லை”னு சொல்லப்படுற விஷயத்தில் உண்மை இருக்கோ?னு நாம சந்தேகப்படுற அளவுக்கு இதல்லாம் நடக்குது... உண்மையில், அவங்களுக்கு பிரச்சினைகளை சரியா கையாளமுடியாதது தான் இதுக்கல்லாம் காரணம்னு நினைக்குறேன்... அத்தி பூப்பதை போல வருடங்களை கடந்தும் பயனிக்குற அதிசய காதல்களையும் நான் பார்த்திருக்கேன்.... தனிப்பட்ட முறையில் தோல்வியால் நான் கற்ற பாடங்களையும், இனிதான இல்லற ஜோடிகளின் அனுபவத்தால் கிடைத்த வெற்றிப்பாடங்களையும் தான் இங்க கலந்தடிச்சு சொல்லப்போறேன்...
அப்படி காதல் சுழலில் சிக்கித்தவிக்கும் தம்பிமார்களுக்கு, உங்கள் விஜயின் பத்து அட்வைஸ்’கள் இதோ...

1.      பொய் சொல்ல போறிங்களா?....
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு சொல்வாங்க, ஆனால் காதலிக்க தொடங்கிய பிறகு ஒரு பொய் என்றாலும் ஆயிரம் முறை யோசிச்சுட்டு சொல்லுங்க... காதலிக்க தொடங்கிய காலகட்டத்தில் நீங்களும் நானும் ஆயிரம் பொய்களை சொல்லிதான் இருப்போம்... காதலில் கலந்த பிறகு எந்த தருணத்திலும் பொய்களை உதிர்க்காதீர்கள்... ஒரு பொய்யை உண்மை போல கட்டிக்காப்பாத்துவது மிக சிரமம்... மேலும், அந்த பொய்யை நம்பவைக்க துணை பொய்களை யோசித்தே நம் நிம்மதி பறிபோகும்... அதுமட்டுமல்லாமல் என்றைக்காவது ஒருநாள் நீங்கள் பொய் சொல்லியிருப்பதை உங்க காதலன் கண்டுபிடிக்க நேர்ந்தால், உங்க மீதிருந்த அத்தனை உயர் எண்ணங்களும் சீட்டுக்கட்டு அரண்மனையாய் சரிந்துவிடும்... உங்கள் மீதிருந்த நம்பகத்தன்மை அடியோடு ஆட்டம் கண்டுவிடும்.... உங்களை நிரூபிக்க நீங்கள் கடும் பிராயத்தனம் செய்ய வேண்டி வரும்... அதன்பிறகு நீங்கள் எது சொன்னாலும், “இவன் சொல்றது உண்மைதானா?”ன்னு அவர் அலசி ஆராயும் நிலைக்கு சென்றுவிடுவார்.... அதனால், பொய்யை சொல்லி இவ்வளவையும் அனுபவிப்பதற்கு பதிலா, உண்மையை சொல்லி நேர்மையா அந்த சூழலை சமாளியுங்கள்...

2.      கருத்துத்திணிப்பு....
அநேகமாக பல காதலர்களின் சண்டைகளுக்கு காரணம் இந்த கருத்துத்திணிப்புதான்... நம்மகிட்ட இருக்குற வரைக்கும் நம்மோட கருத்துகளால் ஒரு பிரச்சினையும் இல்லைங்க... எப்போ அதை இன்னொருத்தர் ஏற்கனும்னு நினைக்குறமோ, அப்போ நமக்கு பிடிக்கும் “சனி”... கருத்தொற்றுமை உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கலாம், காதலர்களாக இருக்க முடியாது... நம்ம கருத்தில் உள்ள நியாயங்களை பேசுறதா நினச்சிட்டு விவாதம் நடத்த தொடங்கி, அது விதண்டாவாத பேச்சாக உருமாறி, கடைசியில் பக்கவாதம் வரும் அளவிற்கு மிகப்பெரிய பிரளயமாக அந்த சின்ன விஷயம் உருமாறிவிடும்... உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும், அவனுக்கு கால்பந்து பிடிக்குமா?... ஒன்னும் பிரச்சினை இல்ல... ரெண்டும் உருண்டையான பந்துதான், அவனுக்காக நீங்க கால்பந்தை ரசிக்க கத்துக்கறது தப்பில்ல...

3.      “சண்டைகள்” – வரும் முன் காப்போம்....
ஊடல்கள் இல்லாத காதல், உப்பில்லாத பண்டம்னு சொல்வாங்க (வேற யாரு?... நாமதான் சொல்லிக்கனும்)... ஆனால், உண்மையில் ஊடல்கள் பிரச்சினை இல்லை, அது சண்டையா மாறும்போது அதற்கேற்ப விளைவுகளும் உண்டாகும்... முழுமையான புரிதல் இருப்பவர்களுக்கு அந்த பிரச்சினை இல்லை.... அலுவலகத்தில் ஒரு ஆடிட்டிங் தொடர்பா நம்ம ஆளு டென்ஷனா வீட்டுக்கு வந்திருப்பான்... அந்த நேரத்துல நாம கால் பண்ணினா, அப்புறம் பேசலாம்னு எடுத்திருக்க மாட்டான்... ஆனால், அது அடுத்தநாள் எந்த அளவுக்கு பிரச்சினையா உருவாகியிருக்கும் தெரியுமா?.... “கால் அட்டன்ட் பண்ணி, டென்ஷனா இருக்குறேன்னு சொல்றதுக்கு உனக்கு முடியலைல்ல?”ன்னு நாம சொல்ல, “அப்டி எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டுதான் செய்யனுமா?... ஒரு சின்ன விஷயத்தை கூட புரிஞ்சுக்காத நீயல்லாம் எப்டி வாழ்க்கை முழுக்க என்னை புரிஞ்சுக்க போற?”ன்னு அவனும் ஊதி ஊதி பெருசாக்குறது ஒரு “தவறிய அழைப்பு”தான்னு சொன்னா நம்பமுடியுதா?... நம்ம கே’க்களின் வாழ்க்கைல இப்படிப்பட்ட கேயாஸ் தியரி பல பேரோட வாழ்க்கைல கதகளி ஆடினதை நானே பார்த்திருக்கேன்.... அதனால, அந்த ஆபத்துக்கு பிள்ளையார் சுழி போடாம, ஒரு மரணக்குழி வெட்டி புதைச்சிடுங்க....

4.      விட்டுக்கொடுக்குறவன் கெட்டுப்போறதில்ல....
சின்ன சண்டையாத்தான் ஆரமிக்கும்... ரெண்டு பேருமே பேசாம இருப்போம்... யார் வந்து முதல்ல பேசுறதுன்னு ஒரு ஈகோ உருவாகும் பாருங்க, அந்த கருமம்தான் வருஷங்கள் கடந்தும் கூட சிலரை ஒன்னு சேர்ப்பதில்லை... “அவனுக்கே அவ்வளவு இருக்குறப்போ, நான் மட்டுமென்ன சும்மாவா?”னு நினைச்சுகிட்டு, ஒவ்வொரு நிமிஷமும் அவர் வந்து பேசனும்னு எதிர்பார்த்து காத்திருப்பது தேவையா?... சட்டுபுட்டுன்னு ஒரு “சாரி”... முடிஞ்சுது வேலை... அடுத்து “நைட் என்னடா டின்னர் சாப்பிடலாம்”ன்னு போய்கிட்டே இருங்க பாஸ்....

5.      சந்தேகப்பேய்’க்கு வேப்பிலை அடியுங்கள்....
பொதுவாவே நமக்கு காதலிப்பவங்க மேல ஒரு குறிப்பிட்ட அளவு பொஸ்சிவ்னஸ் இருக்கத்தான் செய்யும்... ஆனால், அது எல்லையை தாண்டுறப்போ, நமக்கு நாமே சொந்த செலவில் சூனியம் வச்சுக்க ஆரமிச்சாதா அர்த்தம்... நம்ம ஆளு நம்மைவிட (பல நேரங்களில் நமக்கு கொடுக்கும் அளவே) வேற ஒரு நண்பருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினா அவ்ளோதான், நம்ம உரிமை பறிபோனதா உக்காந்து கவலைப்பட தொடங்கிடுவோம்.... அந்த கவலைதான் நாளடைவில் சந்தேகமா உருமாறும்.... அவன் இன்னொரு ஆளோட பேசுனா, நாம பேசும்போது போன் பிஸியா போனா, வேற யார்கூடவும் வெளில போனான்னு தொட்டதுக்கல்லாம், நாம புள்ளி வச்சு கோலம் போடுவோம்... அது நம்ம வாழ்க்கைலையே அலங்கோலமா மாறி நிற்குரப்போ தான் நம்ம முட்டாள்த்தனம் நமக்கு புரியும்... அதனால, காரணமில்லாத கவலைகளும், கவலைகளால் உண்டான சந்தேகமும் அறவே வேணாம்.... அதேபோல இன்னொரு முக்கியமான விஷயம்... எந்த அளவுக்கு உங்க காதலன் உங்ககிட்ட உண்மையா இருக்கணும்னு நினைக்குறீங்களோ, அதே அளவு நம்பிக்கை ஊட்டும் விதமா நீங்களும் நடந்துக்கணும்... அடுத்த பாய்ன்ட் அதுதான்...

6.      என்னமா இருக்கான்?.....
காதல்னு வந்தாச்சு, கமிட்மன்ட்டும் ஆகியாச்சு... ஆனாலும், எங்கயோ பொது இடத்துல ஆர்யா மாதிரி ஒருத்தன பாக்குறப்போ, நம்ம கண்களை விலக்க முடியுறதில்லை தான்... நிச்சயம் “ச்ச.. இவன் கூட வாழ்ந்தா எப்புடி இருக்கும்?”னு ஒரு சபலம் தோன்றவே செய்யும் (நிஜத்தில் அந்த ‘ஆர்யா’ கூட வாழறவன் என்ன கஷ்டப்படுறான்’ன்னு அவனோட காதலன்கிட்ட கேட்டாதான் தெரியும்)... அந்த சில நொடிகள் சபலத்தை, சட்டுன்னு திசைதிருப்பி உங்க வழக்கமான வேலைகளை பார்க்க துவங்கிட்டிங்கன்னா நீங்க நிச்சயம் “பாஸ் மார்க்” காதலர் தான்...  எந்த ஒரு அழகான பையனையும் சைட் அடிக்குறது தப்பில்ல, அவன் நம்ம சைட்’லையே இருந்தா எப்புடி இருக்கும்?னு நினச்சு, அதை நோக்கிய எண்ணத்துல பயணிக்கிறது தான் தப்பா வரும்... உங்க அலுவலகத்தில் கூட அப்புடி ஒருத்தன் வேலை செய்யலாம்... அந்த அழகனை மனதில் நினைத்தவாறே, உங்களை அறியாமல் உங்க காதலின் மீது திருப்தியின்மை உண்டாகும்.... விளைவு?... காரணமற்ற சண்டைகள்.... எப்பவும் நம்ம பக்கத்துல இருக்குற மன்மதனை விட, தூரத்தில் தெரிகிற திருஷ்டி பொம்மை கூட அழகாத்தான் தெரியும்... அதனால, உங்க மனக்குரங்கை கட்டிபோட்டுட்டு, காதலன் கூட கவலையில்லாம வாழ முயற்சி பண்ணுங்க....

7.      இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?....
சில பசங்க அநியாயத்துக்கு குறிப்பிட்ட நாட்களை நியாபகம் வச்சுப்பாங்க... அவங்ககிட்ட என்னை மாதிரி பசங்க மாட்டிகிட்டா அவ்ளோதான்... இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?ன்னு ஆரம்பிப்பாங்க... அந்த காதலனோட பிறந்தநாளை கூட சரியா நினைவில் வச்சுக்காத நம்ம பார்ட்டி, “உன் பிறந்தநாள் தானே?”ன்னு உளறுவான்... “ஏய் இன்னிக்குதான் முதன்முதலா நான் உங்க வீட்டுக்கு வந்தநாள்... ப்ளாக் ஷர்ட் போட்டுட்டு நீ டிவி பார்த்துட்டு இருந்தல்ல...?”ன்னு அவன் ஆரமிக்கிற விஷயத்தை தத்தி தடுமாறி சமாளிச்சு பெருமூச்சு விடுவோம்... ஆனால், உண்மையான பிரச்சினை அதுக்கப்புறம் தான் தொடங்கும்... “ஆமா... என் பர்த்டே எப்போன்னு உனக்கு தெரியாதா?”ன்னு அவன் போடுற அடுத்த பந்தில்தான் உங்க காதல் வாழ்க்கையின் மிடில் ஸ்டெம்ப் பறக்கும்.... அப்புடிப்பட்ட காதலர்களுக்காக குறைந்தபட்சம் ஒரு ஐந்தாறு நாட்களை எழுதி வச்சு மனப்பாடமாவது செஞ்சுக்கோங்க... எப்பவும் ஒரு நாலஞ்சு பரிசுப்பொருள் தயாராவே வச்சுக்கோங்க... தூங்கி எழுந்ததும் “இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?”ன்னு அவன் ஆரமிச்சா, டக்குன்னு மனப்பாடம் பண்ணத யோசிச்சு நினைவுபடுத்தி ஒரு பரிசை கொடுத்து பாருங்க... அப்புறமென்ன?.... ஜலபுல ஜன்க்ஸ் தான்....


8.      ரொமாண்டிக் ஹீரோவா மாறுங்க....
“ஹாய் டியர் குட் மார்னிங்”னு அவன் மெசேஜ் அனுப்புவான்... பதிலுக்கு ஒரு சிரிப்பு ஸ்மைலியை போட்டு சமாளிக்குற ஆளா நீங்க?... அப்போ மேற்கொண்டு வாங்க... பொதுவா எங்கள மாதரி ஆளுங்க எழுதுற கதைகளை படிச்சுட்டு, ரொம்ப ரொமான்ஸ் விஷயங்களை எதிர்பார்த்து காதலில் குதிக்குறவங்க நிறையபேர்.... எப்பவும் அவங்க உங்கள “அலைபாயுதே” மாதவன் போல பார்க்க விரும்புவாங்க... நீங்களோ, “எனக்கு இந்த மாதிரி டிராமாட்டிக் காதல்லாம் பிடிக்காது... இயல்பாதான் பேசுவேன்”ன்னு எவனோ ஒருவன் மாதவன் மாதிரி தத்துவம் பேசுனிங்கன்னு வச்சுக்கோங்க, அப்போ உங்களுக்கு “ஏழரை” ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு அர்த்தம்... ரொமான்ஸ் இல்லாம அவர்கிட்ட நீங்க என்ன பேசினாலும் உங்க காதலனுக்கு எரிஞ்சு விழற மாதிரித்தான் தெரியும்... “ஏன் இப்போலாம் என் மேல எரிஞ்சு விழற?... என் மேல இருந்த லவ் குறஞ்சுடுச்சுல்ல?”ன்னு அவர் கற்பனைக்கு மேல் கற்பனையா பண்ணி, ஒரு கட்டத்துல அது பூகம்பமா வெடிக்கும்.... அதுக்காக போலியா “கண்ணே மணியே... கலியுக கனியே”ன்னு வசனம் பேச வேணாம்... “ஐ லவ் யூ”ன்னு அவர் சொல்லும்போது, குறைந்தபட்சம் “மீ டூ”ன்னாவது சொல்ல பழகிக்கோங்க....

9.      குத்தி காட்டி, குறை சொல்லாதிங்க....
குறைகள் இல்லாத மனுஷன் இந்த உலகத்தில் இல்லைங்க... ஆனால், அந்த குறையை ஊதி பெருசாக்கி, உங்க காதலனை கஷ்டப்படுத்தாதிங்க.... “நம்ம லவ்வர் தானே”ன்னு உரிமை எடுத்து, அவரோட குறைகளை மட்டுமே எப்பவும் நீங்க பேசுனிங்கன்னா நிச்சயம் ஒரு கட்டத்தில் உங்க கூட பேசுறதையே அவர் தவிர்ப்பார்... வெளியில் தெரியாமல் உங்க மீது வெறுப்பு அவருக்கு உண்டாகலாம்... மேலும், அடுத்தவர்களோட உங்க காதலனை ஒப்பிட்டு பேசுவதை எந்த பையனும் விரும்பமாட்டான்... அவரை உற்சாக படுத்த விரும்பினால் கூட, பாஸிட்டிவ் கருத்துகள் மூலம் உற்சாகப்படுத்துங்க... ஹமாம் சோப் அம்மா மாதிரி எந்த விஷயத்தையும் பாசிட்டிவா, சிரிச்ச முகத்தோட சொல்லுங்க.... எல்லாம் சுபமாகவே சம்பவிக்கும்...

10.  பழசை அப்பவே மறந்திடுங்க....
சிலருக்கு பழசை அசைபோட்டுகிட்டே இருக்கிறது பழக்கமா இருக்கும்... ஒரு சின்ன சண்டை வந்துச்சுன்னா கூட, “போன வருஷம் ஜூன் மாசம் என்னை இப்டி பேசுனில்ல?... ஆகஸ்ட் மாசம் இந்த மாதிரி திட்டுனல்ல?...”னு ஆரமிச்சா, கிட்டத்தட்ட அரைமணிநேரம் பழைய பிரச்சினைகளுக்கு புதுவடிவம் கொடுத்து பேச தொடங்கிடுவாங்க.... அந்த மாதிரி ஆட்கள் கொஞ்சம் அந்த பழக்கத்த மாத்திகோங்க.... சின்ன சின்ன விஷயங்களை கூட அப்படிப்பட்டவங்க புதுவித உருவம் கொடுத்து, நம்ம கற்பனைக்கே எட்டாத அளவுக்கு விளக்கம் கொடுப்பாங்க... தப்பு செஞ்சா, அந்த நேரத்துலே திட்டுங்க, தேவைப்பட்டா பளார்’னு அடிச்சிடுங்க.... ஆனால், இந்த மாதிரி பழசை ரீமேக் செஞ்சு இம்சிக்காதிங்க... அதாவது உங்க வாழ்க்கையில் ரீவைண்ட் ஆப்ஷன்’ஏ இல்லைன்னு நினச்சு வாழுங்க, வருங்காலம் நிம்மதியா கழியும்...


குடும்பம், சமூகம், நாடு, சட்டம்னு பல விஷயத்தையும் சமாளிக்கும் துணிவோடு தான் காதலிக்க தொடங்கியிருப்பிங்க.... காதலிக்க தொடங்கும் முன்னர் இருக்குற இவ்வளவு உறுதியும், துணிச்சலும் காதலிக்க ஆரம்பிச்ச பிறகு கரைந்து போறது ஏன்?னு தெரியல.... சின்ன சின்ன விஷயங்களுக்கு ப்ரேக்கப் ஆகுற நிகழ்வுகள் சர்வசாதாரணமா நடக்குது.... அது மேலே நான் சொன்ன பத்து காரணங்களால்தான் நிச்சயம் இருக்கும்... உங்க காதலனோட நீங்க பிரிஞ்ச பிறகு, “நான்தான் அப்பவே சொன்னேன்ல, இதல்லாம் தாக்குபிடிக்காதுன்னு”ன்னு சொல்றதுக்காகவே ஒரு கூட்டம் காத்துகிட்டு இருக்கு.... உங்க வாழ்க்கையை, காதலை மற்றவர்களுக்கு உணர்த்தும் முழுப்பொறுப்பும் உங்களுக்குதான் இருக்கு.... உங்க காதலின் வெற்றிகள் தான் எதிர்காலத்தில் நம்மை பற்றிய பொதுத்தளத்து மக்களின் மனமாற்றத்தை உண்டாக்கும்... ஆக, காதலை தாண்டிய சமூக பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது என்பதால், அந்த கூடுதல் பொறுப்போடு உங்க வாழ்க்கையை இனிதே நகர்த்த வாழ்த்துகள்....

8 comments:

  1. Superb... எதிர்பாலின காதலுக்குமே பொருந்தும் வகைல.. உங்களுக்கே உரிய பாணியில சொல்லியிருக்கீங்க... பாக்கலாம்.. நம்ம மகிழ்வன்கள் இதெல்லாத்தையும் ஒழுங்கா கடைபிடிச்சி... முகநூல்ல ஸ்டேட்டஸா போட்டுத் தள்ளபோறாங்களா என்னன்னு...

    அப்படியே.. ஸ்டிரைட்னு தெரிஞ்சும் லவ் பண்ணித்தொலைஞ்சவங்க... உயிருக்கு உயிரா காதலிச்சவன்.. ஏதோ ஒரு காரணத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டான்னா... அத மறக்க முடியாம தவிக்கற ”நவீன” தேவதாஸுங்களுக்கும் கொஞ்சம் டிப்ஸ அள்ளி விட்றது...?!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அண்ணாச்சி.... நவீன தேவதாஸ்களுக்கு டிப்ஸ் கொடுக்குற கட்டமல்லாம் தாண்டிட்டாங்க.....

      Delete
  2. விஜய் ஜி, இந்த பதிவிற்கு 100/100 மதிப்பெண்... இதையெல்லாம் follow பண்ணினா, மகிழ்வன்கள் காதல்ல நிச்சயம் 100% வெற்றியடைய முடியும்.


    @ரோத்தீஸ் அண்ணன், சைடுகேப்ல என்னை நல்லா ஓட்டிருகீங்களே!!! நான் புரிஞ்சிக்கிட்டேன்....


    ReplyDelete
    Replies
    1. உங்க தணிக்கைக்கு பிறகான மாற்றங்கள் திருத்தப்பட்டுவிட்டது ஜி..... உங்க கருத்தில் மிக்க மகிழ்ச்சி ஜி...

      Delete
  3. அருமையாக சொன்னீங்க விஜய், அந்த 10 ல் இருக்கும் சின்ன விஷயங்கள் எனக்கும் பொருந்தும். ஆனால் நான் எதையும் பெரிதாக்க மாட்டேன் அவ்வளவுதான். நீங்கள் ஞாபகமறதி காரரா...? அதாவது நண்பர்களின் பிறந்த நாள் போன்ற விஷயங்களில்?

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சக்தி... ஆமாம், நான் ரொம்பவே மறதி ஆசாமிதான்... பல பிரச்சினைகளை அதனால சந்தித்ததும் கூட உண்டு...

      Delete
  4. ரொதெயிஸ்: அது என்ன ஜி அப்படி சொல்லிட்டீங்க? (ஸ்ட்ரேட் காதாலிச்சு தொலைசவங்க) ஸ்ட்ரேட் காதல்ல எதயும் தெரிஞ்சிக்காமா வர காதல் தான் உயர்ந்தது சிறந்தது னு சொல்றாங்க.. அதுமாதிரி தான் இதுலயும் அவன் ஸ்ட்ரேட்/ கே வானு தெரிஞ்சு காதாலிச்சா அது காதலே கிடையாது... அது ஒரே ஜாதில கல்யாணம் பண்ற மாதிரி..
    கலப்பு திருமணங்களை வரவேற்பது போல் இதிலும் ஸ்ட்ரேட் ஆண்களை காதலிக்க வைத்தாளோ அல்லது திருமணம் செய்தளோ அன்றி இந்த மகிழ்வ்ன் காதல்/ திருமணம் முழுமை அடையாது...

    ReplyDelete