Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 3 May 2015

இவைகளும் தற்கொலைதான்!... இவர்களும் பெண்கள்தான்!...





 மருத்துவர் ப்ரியா வேதியின் தற்கொலை குறித்த செய்திகள் இன்னுமே ஊடகங்கள், சமூக தளங்கள் என எங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... கணவர் கமல் வேதியின் தவறுகளை பக்கம் பக்கமாக சிலர் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்... இதற்கிடையே கமலின் தந்தை, தன் மகனுக்கு ஆதரவாக பேசியதற்காக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்... ஒரு பெண்ணுடைய தற்கொலைக்கு இந்த ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, நியாயத்தை நிலைநாட்ட முயற்சிப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்...

ஆனால் இந்த தருணத்தில், இதே ஊடகங்கள் மறந்துபோன சில பெண்களின் தற்கொலைகள் பற்றி இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்... கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடந்த இருவேறு சம்பவங்கள் குறித்து உங்களிடம் பகிர விரும்புகிறேன்...

சம்பவம் 1: கௌஹாத்தியில் இரண்டு இளம்பெண்கள், பிரம்மபுத்திரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்... இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டபோது, இருவருடைய கைகளும் துப்பட்டாவால் பிணைக்கப்பட்டிருந்தது... இதுபற்றி மேலும் விசாரிக்கையில், இரண்டு பெண்களும் லெஸ்பியன் என்பதும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும் தெரிகிறது... இதற்குமுன்பு மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்ற நிகழ்வும் நடந்தேறியுள்ளது, இருவரின் குடும்பங்களிலும் பல பிரச்சினைகள் உருவாகி, கண்டித்து பிரித்துவைக்கப்பட்ட பெண்கள்தான் இப்போது ஆற்றில் பிணமாக மிதந்துள்ளனர்...

சம்பவம் 2: வங்கமொழி தொலைகாட்சி நடிகை திஷா கங்குலி, தன்னுடன் பணியாற்றிய சுசெந்திரா என்ற பெண்ணுடன் காதல்வயப்பட்டிருக்கிறார்... வீட்டினரின் எதிர்ப்பால், தனியொரு வீட்டில் குடியேறி இருவரும் இல்வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள்... திஷாவின் குடும்பத்தினர் அந்த வீட்டிற்கு வந்து இருவரையும் தாக்கி, சுசெந்த்ராவை வெளியே தள்ளியுள்ளனர்.. வருத்தம் தாளாத சுசெந்த்ரா தற்கொலைக்கு முயற்சிக்க, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.. இதற்கிடையில் குடும்பத்தின் அழுத்தம் அதிகமான திஷாவும் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்...

இரண்டு சம்பவங்களையும் படித்தீர்களா?... இவை இரண்டுமே வெறும் பெட்டி செய்திகளாக மட்டுமே மீடியாக்களில் வெளிவந்தது.. ப்ரியா வேதியின் இறப்புக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இந்த பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை (மூன்று சம்பவங்களுமே ஒரு மாத இடைவெளியில்தான் நடந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்க!)... இந்த இரண்டுவிதமான தற்கொலைகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்ன தெரியுமா?..

ப்ரியா வேதியின் தற்கொலைக்கு காரணம், அவருடைய “ஹோமோசெக்சுவல் கணவன்...

இந்த பெண்களின் தற்கொலைக்கு காரணம், இந்த “ஹோமோபோபிக் சமூகம்...

கமல் வேதி செய்த அதே தவறுகளை, இன்னும் அதிக மூர்க்கத்தனத்துடன்தான் இந்த சமூகம் செய்கிறது... அப்போ ஏன் இந்த ஊடகங்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை?னு உங்களுக்கு கேள்வி எழலாம்.. இந்த தற்கொலைகளின் பங்குதாரர்களே இங்கே உள்ள ஊடகங்கள்தானே, கொலை செய்தவனிடம் எப்படி நியாயத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?... கமல் வேதி என்கிற ஒற்றை மனிதனின் தவறை, ஒட்டுமொத்த கே ஆண்களின் மனநிலை போல சித்தரித்து எழுதிய அத்தனை மீடியாக்களுமே, சமபால் ஈர்ப்பு பற்றியதான விஷ விதையை விதைத்துள்ளார்கள்... அது விருட்சமாக வளர்ந்து இன்னும் எத்தனை உயிர்களை பரிக்கப்போகிறதோ? என்கிற அச்சம்தான் இப்போ எழுகிறது...

இறந்த ப்ரியா வேதி ஒரு பெண் என்பதால், மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை சுட்டிக்காட்டினேன்.. சமீப காலங்களில் இறந்த கே ஆண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது... குடும்ப நிர்பந்தங்கள், சமூக அழுத்தங்கள், மீடியா வெறுப்புகள்னு காரணங்கள் மாறுபட்டாலும், அவர்களின் ‘ஹோமோபோபியாதான் ஒட்டுமொத்தமாக ஒரே காரணம் என்பதுதான் உண்மை...

ஆற்றில் குதித்து இறந்த இளம் பெண்களாக இருக்கட்டும், நடிகை திஷாவாக இருக்கட்டும் அவங்களும் பெண்தான்.. அவர்கள் இறப்புகளுக்கும் நியாயம் கேளுங்கள், அதுதானே மனிதாபிமானம்...

பிரபல பிரிட்டிஷ் மருத்துவ ஏடான, “தி லேன்சட் சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவை அறிவித்துள்ளது... அதன்படி இந்த உலகில் ஒரு லட்சம் நபர்களில் 14.5 நபர்கள் தற்கொலை செய்துகொண்டு இறப்பதாக ஆய்வு செய்துள்ளனர்... அந்த ஆய்வின் நமக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா?.. இந்தியாவில் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது... ஒரு லட்சம் பெண்களில் 148 பெண்கள் (அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில்) தற்கொலை மூலம் இங்கே இறக்கிறார்கள்... இது சர்வதேச விகிதத்தைவிட சுமார் பத்து மடங்கு அதிகம்... பெரும்பாலும் இளம்வயதினர்தான் தற்கொலை செய்வதாகவும், மன ரீதியிலான அழுத்தங்கள்தான் முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது...

இவைகளில் நிச்சயம் குறிப்பிட்ட சதவிகித தற்கொலைகள் பாலீர்ப்பு புரிதல் இன்மையால்தான் நடக்கிறது என்பதை உறுதியாக சொல்லமுடியும்... இதனைப்பற்றி முழுமையான ஆய்வு முடிவுகளை ஏதேனும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எடுக்கும் பட்சத்தில், இன்னும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கலாம்...

உயிர்கள் விலை மதிக்க முடியாதவை... அவைகளை வறட்டு காரணங்களை சொல்லி பரித்துவிடாதீர்கள்... ஒரு மனிதனின் பாலீர்ப்பு இயற்கையானது, அதை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சித்து “இயற்கைக்கு முரணான உறவுக்குள் எங்களை ஆழ்த்திவிடாதீர்கள்... சாவதை விட வாழ்வதை சிக்கல் நிறைந்த விஷயமாக ஆக்கிவிடாதீர்கள்... அந்த சகோதரிகளின் இறப்பு, உங்கள் மனங்களை நிச்சயம் உறுத்தசெய்யும் (மனம் இருந்தால்!)... ப்ரியா வேதி, கவுகாத்தி பெண்கள், திஷா கங்குலி ஆகியோரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்.. இந்த பட்டியலை இன்னும் நீண்டுவிடாமல் இருக்கவிடுங்கள்!...

6 comments:

  1. வருத்தமான உண்மைகள். மன அழுத்தம். சமூகத்தில் அதிகரித்து வரும் நுகர்பொருள் மோகம் கூடவே பழமைவாதமும், இளம் தலைமுறையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதைத் தடுத்துத் தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. இவை தற்கொலைகள் என்று சொல்வதைவிட, சமூக அழுத்தங்களால் நிகழ்கிற கொலைகள் என்றுசொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன் சகோ... தங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  2. What can we expect in a society where a gang-rapist advice that rape victim should have let them rape her and media is giving more coverage for that? Shameful to in a community where only victims are crucified all the times

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பிரபு... இவங்ககிட்ட இதைத்தான் நாம எதிர்பார்க்கமுடியும்!... கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பா..

      Delete
  3. Anna indha Naadu epo dha maarum?? unmaya solla vendiya media kuda panathukagavum politician mela iruka bayathunalavum unmaya moodi maracharanga.. yaarum uyira oru poruta kuda madhikaradhu illa... I hate this homophobic country... All are narrow minded people... I feel ashamed about this.. Government should take a step towards this matter..

    ReplyDelete
    Replies
    1. வெட்கப்பட வேண்டியது அவங்கதான் தம்பி... நிச்சயம் அவங்க தவறுகளை ஒருநாள் புரிஞ்சுப்பாங்க... நம்புவோம்.. கருத்துகளுக்கு நன்றி சகோ,..

      Delete