Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 24 May 2016

தொடுவானம் - தொடர்கதை (பாகம் 1)



  “ஏன் இன்னிக்கு காலைலேந்து பேசவே இல்ல?... உன் கால் வரும்னு மொபைலயே பாத்துட்டு இருந்தேன் தெரியுமா...
“தெனமும் கையெழுத்து போடுறதுக்கு, காதல் ஒன்னும் கண்டிஷன் பெயில் இல்ல மகி..
“ஆமா நீ தெனமும் அப்டியே பேசிட்டாலும்... காதல் கசிய, தேனொழுக பேசிடுவ பாரு... நான் அதுக்காக சொல்லல, ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லத்தான் கூப்டேன்..
“அப்டி என்ன தலைபோற விஷயம்?
“விஷயத்தை சொல்றேன், அது தலை போறதா, போகாததான்னு நீயே முடிவு பண்ணிக்கோ... எங்க வீட்ல எல்லாத்தையும் சொல்லிட்டேன்... நான் கேன்றது, உன்ன லவ் பண்றது, நாம ரெண்டு பேரும் அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்கப்போறதுன்னு அத்தனையும் போட்டு உடைச்சிட்டேன்...
“அடப்பாவி... அப்டியே என் வீட்டு அட்ரஸையும் கொடுத்து, அடிக்குறதுக்கு ஆள் செட் பண்ணி கொடுத்துட்டின்னா ஒருவழியா மொத்தமா இந்த விஷயத்துல பினிஷிங் டச் கொடுத்தாப்ல இருக்கும்ல?...
“அப்டி விட்ருவேனா உன்ன?.. என்னை மீறி அடுத்தவங்க நிழல் கூட உன்மேல படாது... சரி, நடந்த சண்டையை பாதியோட விட்டுட்டு வந்திருக்கேன்... எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளைக்கு விளக்கமா பேசுறேன்..
அழைப்பை துண்டித்த நொடியில் பெருமூச்சு விட்டுக்கொண்டான் திலீப்... முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட, அருகிலிருந்த துண்டடினால் முகத்தை ஒற்றிக்கொண்டான்.. தண்ணீர் புட்டியை எடுத்து இரண்டு வாய் குடித்துவிட்டு , இருக்கையில் மல்லாந்து சாய்ந்தான்..
திலீப் அலைபேசியில் பேசத்தொடங்கியதிலிருந்து, ஆசுவாசமாக சாய்ந்துகொண்டிருப்பதுவரை அத்தனை நிகழ்வுகளையும் அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தான் வாசு...
மெலிதாக சிரித்தவாறே, “என்னடா பேயறஞ்ச மாதிரி இருக்க, அப்டி என்ன சொன்னான் மகி? ஆர்வமாக கேட்டான் வாசு..
“என்னத்த புதுசா சொல்லப்போறான், லவ் பத்தி வீட்ல சொல்லிட்டானாம்... அவனோட வேகம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு, கடைசில எதுல கொண்டுவந்து இழுத்துவிடப்போறானோ! விரக்தியோடு பேசினான்...
“ஏன் பயப்படுற, நீ அவன லவ் பண்றதான?
“அந்த சந்தேகமே இன்னும் முழுசா தீரல வாசு... கமலோட பிரேக்கப்ல இருந்த சமயம் பார்த்து மகி ப்ரப்போஸ் பண்ணதால, சட்டுன்னு ஒத்துகிட்டேன்.. ஒருவகைல கமலை வெறுப்பேத்த செஞ்ச விஷயம் இப்ப என் தலைய உருட்டுது...
“மகிய பிடிக்கலையா?
“பிடிக்கலைன்னு சொல்லல... அதுக்காக பிடிச்சவங்க எல்லாரையும் லவ் பண்ணிட முடியுமா?.. அதுமட்டுமில்லாம கமலை இன்னும் என்னால முழுசா மறக்கமுடியல..
“ஒன்னும் கவலைப்படாத... எல்லாம் போறபடி போகட்டும், உனக்கு செட் ஆகலன்னு தோணுச்சுன்னா எதாச்சும் காரணத்த சொல்லி கட் பண்ணிடலாம்... இப்போல்லாம் லவ் பண்றதுக்குதான் காரணம் தேவை, பிரேக்கப்க்கல்லாம் ஒண்ணுமே தேவையில்ல... விடு பாத்துக்கலாம்... தோள் தட்டி ஆறுதலாக பேசினான் வாசு... ஓரளவு குழப்ப மேகங்கள் மறைந்து, தெளிவு பிறந்ததை போல திலீப்பின் முகம் மலர்ந்திருந்தது...
கதைக்குள் போறதுக்கு முன்பு, யார் இந்த திலீப்?ன்னு கொஞ்சம் ஒரு இன்ட்ரோ கொடுத்திடலாம்.. சங்கர் படங்களைப்போல நாயகனுக்கு பிரம்மாண்ட ஓப்பனிங் இல்லைன்னாலும், ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக ஒரு மினி அறிமுகம்...
திலீப், இவனோட நிஜப்பெயர் என்னவோ திலீபன்தான்.. மாடலிங், மீடியான்னு வந்ததுக்கு பிறகு தனது பெயரை ‘திலீப் நாயர்என்று மாற்றிக்கொண்டான்... மாடலிங் துறையில் கேரள சேட்டன்களுக்கு கிடைத்த பூரணகும்ப முதல் மரியாதையை பார்த்து அவனது பெயரின் ஈறு போக, நாயர் இணைந்துகொண்டது... அவ்வப்போது “வந்தாஹ, போனாஹ என்ற தஞ்சை வட்டார வழக்கு, வார்த்தைகளில் வெளிவரும்போது, “எந்தா பறஞ்சு? என்று மலையாள பிட்டு ஒட்டி சமாளித்துவிடுவான்... ஒரு விபத்தில் பெற்றோர்கள் இறந்துபோக, கல்லூரி படிப்பை பாதியோடு விட்டுவிட்டு மாடலிங் துறைக்குள் நுழைந்தவனுக்கு, அங்கே தனக்கென ஒரு அடையாளத்தை நிறுவிக்கொள்ள நிறைய வளைந்தும், சில இடங்களில் குனிந்தும்(?) கொடுக்கவேண்டி இருந்தது... அவ்வளவு வலிகளையும் கடந்து,  இன்றைக்கு ஓரிரு மெகாத்தொடர்களில் தம்பியாகவும், நாயகியின் தங்கையை கரெக்ட் செய்யும் இரண்டாம் நிலை வில்லனாகவும் ஓரளவு தமிழக தாய்மார்களின் மனதில் பதிந்துவிட்டான்.. அவ்வப்போது, “உங்களுக்கு என்ன பாட்டு வேணும்? யாருக்கு டெடிக்கேட் பண்றீங்க? என்று பிரபல மியூசிக் சேனல்களில் கூடுதல் அழகோடு காட்சியளிப்பதுமுண்டு...
இது ஒருபுறமென்றால், மறுபுறமோ மகி என்கிற மகிழனோ ‘கஷ்டம் என்ற வார்த்தைக்கு எத்தனை எழுத்துகள்? என்றே தெரியாத அளவுக்கு வளர்க்கப்பட்டவன்... மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு, முழுநேரப்பணியாக இப்போ காதலித்துக்கொண்டிருக்கிறான்..
“நான் திலீப்பைதான் லவ் பண்றேன்
“எந்த திலீப்படா? அண்ணன்தான் கேட்டான்...
“திலீப் நாயர்... என் ப்ரென்ட்தான்...
“என்னது நாயரா? அப்பா மறுபடியும் தலையில் அடித்துக்கொண்டார்...
“ஏன், நாட்டுக்கோட்டை செட்டியாரா இருந்தா மட்டும் கல்யாணமா பண்ணிவைக்க போறீங்க? பொங்கினான் மகி...
“காலைலேந்து கரடி மாதிரி கத்துறேனே, இவன் கொஞ்சம்கூட புரிஞ்சுக்கலையே? அப்பா விரக்தியில் உழன்றார்...
“கரடி பாஷையல்லாம் எனக்கு புரியாது...
“டேய், அப்பா வயசுக்காச்சும் மரியாதை குடுத்து பேசு அண்ணன் நெஞ்சை நிமிர்த்தி கத்தினான்...
“நானும் காலைலேந்து சயின்ஸ், ரிசர்ச், ஜீன் பற்றியல்லாம் எவ்வளவோ சொல்லி என்னோட பாலீர்ப்பு தப்பில்லன்னு சொல்றேனே, நீங்க யாராச்சும் அதை புரிஞ்சுகிட்டிங்களா?
இப்படி நீளும் இந்த விவாதங்கள் நிச்சயம் நள்ளிரவை தாண்டியும் தொடரும் என்பதில் ஐயமில்லை... கணவரும் பிள்ளைகளும் இன்னும் சாப்பிடவில்லையே? என்கிற மனக்குறை மட்டுமே அம்மாவுக்கு பிரதானமாக இருந்தது...

மறுநாள் அதிகாலையில் திலீப்பின் வீட்டு அழைப்பு மணி விடாமல் அலறிக்கொண்டிருந்தது... கனவுலகிலிருந்து மீண்டு, ஒருவழியாக அந்த சத்தத்தை உணர்வதற்கு ஓரிரு நிமிடங்கள் ஆகிவிட்டது... போர்வையை தலையோடு இழுத்துப்போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கிறான் வாசு, இரவில் குடித்துத்தள்ளிய மதுவின் மயக்கம் அவனை இப்போதைக்கு எழவைத்துவிடாது... மெல்லிய எரிச்சலோடு, கண்களை கசக்கிக்கொண்டே எழுந்துசென்று கதவை திறந்தான் திலீப்...
கையில் ஒரு பெட்டியும், தோளில் ஒரு பையுமாக முகத்தின் மகிழ்ச்சிப்பொலிவை மறைத்த பயணக்களைப்புடன் வாசலில் நின்றான் மகி... கையிலிருந்த பெட்டியை கீழே வைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழையும் முன்பே திலீப்பை கட்டி அணைத்துக்கொண்டான்... சற்று சுதாரித்து நிதானித்த திலீப், மெள்ள அந்த அணைப்பிலிருந்து விடுபட்டு அதிர்ச்சியோடு மகியை பார்த்துக்கொண்டிருந்தான்...
“நல்லவேளையா நீ கதவை திறந்த மாமா, எங்க அந்த வாசுப்பையன் வந்திடுவானோன்னு பயந்திட்டு இருந்தேன்... இதானே வாசல்படி என்று சொல்லிக்கொண்டே கவனமாக வலது காலை முன்னெடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தான்... ஆசுவாசப்படுத்திக்கொண்டே ஹாலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்...
“நான் வாழப்போற வீட்டுக்குள்ள நுழையிறப்போ உன் முகத்துலதான் முதல்ல முழிக்கனும்னு நினச்சேன்... ஒரு ஆரத்தி எடுத்திருந்தா இன்னும் சுபமா இருந்திருக்கும், அதை அப்புறம் பார்த்துக்கலாம்... எழுந்துசென்று மின்விசிறியின் சுவிட்ச்சை அழுத்திவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டான்...
“நேத்து நைட் எட்டு மணிக்குதான திருச்சிலேந்து போன் பண்ணின?.. அதுக்குள்ள இப்போ எப்டி இங்க? அரைகுறை சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினான் திலீப்...
“ஆமா... ஆனால் பத்து மணிக்கு திருச்சில பஸ் ஏறுனா, இந்த நேரத்துக்கு சென்னை வந்திடலாம்னு உனக்கு தெரியாதா மாமா?
அப்போதுதான் தலையில் கையை வைத்து அழுத்திக்கொண்டே அறைக்குள்ளிருந்து வெளிவந்தான் வாசு... “என்ன வாசு தலை வலிக்குதா? சிரித்துக்கொண்டே கேட்டான் மகி...
“இதுவரைக்கும் லேசா இருந்துச்சு, இனி அதிகமாகும்னு நினைக்குறேன்... ஆமா, நீ என்ன இங்க?
“அப்பல்லோ ஹாஸ்பிட்டல் விலைக்கு வர்றதா சொன்னாங்க, அதான் வாங்கிப்போடலாம்னு வந்தேன்... நீயும் ஷேர் போடுறியா?
குணுக்கு சிரிப்பு சிரித்துக்கொண்ட திலீப், வாசுவை ஒரு ஏளனப்பார்வை பார்த்தான்... “இந்த அசிங்கம் உனக்கு தேவையா? என்று அந்த ஒற்றை பார்வை, ஓராயிரம் முறை அவனுள் எதிரொலித்தது....
அசடுவழிய சிரித்துக்கொண்ட வாசு, “இல்ல... பரவால்ல... கமுக்கமாக அமர்ந்துகொண்டான்...
“முதல்முறையா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன், காபி குடிக்கிறியான்னு ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட கேட்கமாட்டியா வாசு?
‘விடமாட்டான் போலருக்கே! மனதிற்குள் புலம்பிக்கொண்டே, “காபி வேணுமா மிஸ்டர் மகிழன்? பொய் சிரிப்புடன் கேட்டான்...
“ஹ்ம்ம்... ஓகே... கொஞ்சம் சக்கரை தூக்கலா ஒரு காபி தாப்பா...
அதற்குமேலும் சமாளிக்க வாசுவின் மனநிலை ஈடுகொடுக்கவில்லை.. வேறுவழியின்றி சமையலறைக்குள் சென்று பால் காய்ச்சத்தொடங்கினான்...
“ஏய் மகி, விளையாடாம சொல்லு... என்ன திடீர்னு?
“வீட்ல சண்டை போட்டு வந்துட்டேன் மாமா... இனி அந்த ராமன் இருக்கும் இடமே இந்த சீதைக்கு அயோத்தி... வெட்கப்படுவதைப்போல நளினப்பட்டான்...
“எதையுமே யோசிச்சு செய்யமாட்டியா?... அப்டி  ஏன்தான் எல்லாத்துலயும் அவசரப்படுவியோ...
“என்ன மாமா நான் அவசரப்பட்டேன்... அடுத்தவாரம் நாம கல்யாணம் பண்ணிக்கறதா பேசிருக்கோம், இப்போ கூட வீட்ல என் விஷயத்த சொல்லலைன்னா தப்பில்லையா?... நான் எப்போ சொன்னாலும் இதான் என் வீட்டோட ரியாக்சன், அதனால நீ ஒன்னும் குழம்பிக்காத.. நிதானமாக சொன்னான்...
திலீப்பால் மேற்கொண்டு பேசமுடியவில்லை, பேசினாலும் கூட நிச்சயம் வாதத்தை வலுக்கும் பதிலைத்தான் சொல்வான்..
“என்னமோ பண்ணு, எனக்கு லேட் ஆகுது... நான் கிளம்புறேன்.. துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் திலீப்..
காபியை ஒரு குவளையில் எடுத்துவந்து மகியின் கைகளில் திணித்தான் வாசு... “தாங்க்ஸ்பா சொல்லிவிட்டு குடிக்கத்தொடங்கினான்... ஒரே மூச்சில் குடித்துவிட்டு, குவளையை வேகமாக கீழேவைத்தான் மகி...
“காபி எப்டி இருந்துச்சுன்னு சொல்லவே இல்ல?
“ஏன் வாசு என் வாயை கிளருற?... இதை காபின்னு சொன்னின்னா, ப்ரூ கம்பெனி காரன் உன் மேல மானநஷ்ட வழக்கு போட்டிடுவான்... குடிக்கும்போது மூச்சு விட்ருந்தா, அப்டியே துப்பிருந்தாலும் துப்பியிருப்பேன்...
வில்லங்க பதிலால் ‘எங்க தப்பு நடந்திருக்கும்? என்கிற ஆய்வுக்குள் நுழைந்துவிட்டான் வாசு...
பயணக்களைப்பும் தூக்க மிகுதியும் மகியை அசரவைத்தது... கண்கள் எரிச்சலடைய தொடங்கிவிட்டதால், அறைக்குள் சென்று படுக்கையில் சாய்ந்தான்.. குளித்துமுடித்து அப்போதுதான் அறைக்குள் நுழைந்தான் திலீப்பும்...
இடுப்பில் சுற்றிய துண்டைத்தவிர, முக்கால் நிர்வாணமாகத்தான் வந்தான்... தலையிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த நீர்த்துளிகள், காதோரம் வழிந்து, சறுக்கியபடி இடுப்பின் மேட்டில் அழகாக ஏறி இறங்கியது...
“ஏய் என்ன பார்வை இங்க? அதட்டல் தொனியில் கேட்டான் திலீப்...
“ஒண்ணுமில்ல... அந்த டவல் காட்டனா, வுல்லன்ஆன்னு பார்த்தேன்...
“தெரியும் தெரியும்... நீ டவலைத்தான் பார்த்திருப்பன்னு நல்லா தெரியும்.. சொல்லிக்கொண்டே அவசரகோலத்தில் உடைகளை மாற்றிவிட்டான் திலீப்...
“எங்க கிளம்பிட்ட மாமா?

“சீரியல் ஷூட்டிங் இருக்கு, அதுக்குத்தான்...
“சாயந்திரம் சீக்கிரம் வந்து என்னைய பீச்க்கு கூட்டிட்டு போ
“ஐயோ அதல்லாம் முடியாது... சூட் முடிய நைட் ஆகிடும், வேணும்னா வாசுவோட போயிட்டு வா
“அதுக்கு நான் கடல்லையே குதிச்சுடுவேன்... லேட் ஆகும்னா, இப்போ உன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் வரேன்.. அப்போ ஓகேதான?
“இல்ல இல்ல... வேணாம்... நான் ஈவ்னிங் சீக்கிரம் வரப்பார்க்குறேன், நீ ரெஸ்ட் எடு... அதற்கு மேலும் அங்கிருந்தால் அடுத்தக்கட்ட ஆபத்தினை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதால், அவசரமாக அறையை விட்டு வெளியேறினான் திலீப்...
இன்னும் காபி பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த வாசு, திலீப்பை பார்த்ததும் இயல்பானான்...
“இம்சை தாங்கமுடில வாசு... பீச்சுக்கு போகணும், பார்க்கை பார்க்கனும்னு நச்சரிக்குறான்... அவன் மேல லவ் இல்லன்னு நான் எப்டி அவனுக்கு புரியவைக்குறது? கிசுகிசுப்பாக சொன்னான்...
“ஒன்னும் கவலைப்படாத திலீ... இன்னிக்கே இதுக்கு ஒரு புல் ஸ்டாப் வச்சிடலாம்.. உன்னப்பத்தி எதாச்சும் தப்புத்தப்பா சொல்லி, அவனாவே உன்ன வெறுக்குற மாதிரி செஞ்சிடுறேன்...
“நீ சொன்னா நம்புவானா?
“நம்புறமாதிரி சொல்றேன்...
“அடுத்தவாரம் கல்யாணம் பண்ணிக்கப்போறதா வேற பிக்ஸ் ஆகிடுச்சு, சீக்கிரம் கழட்டி விடனும்
“நீ ஷூட் முடிஞ்சு வர்றப்போ எல்லாம் டன்னா இருக்கும் தோள் தட்டி திலீப்பை அனுப்பிவைத்தான் வாசு... மெள்ள காபி பிரச்சினையை மறந்து, திலீப் விஷயத்திற்குள் ஐக்கியமானான்..
தூக்கம் களைந்து மகி எழுவதற்குள் நேரமும் பிற்பகலை எட்டியிருந்தது... காலை முதல் சாப்பிடாததன் பசி, அவசரமாக எழவைத்தது... முகம் கழுவிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான்... விரையாய் வடித்த சோறும், மஞ்சள் நிற திரவமும் பாத்திரங்களில் நிரம்பியிருந்தது.. பசி ருசி அறியவில்லை என்பதால், அந்த சாம்பார் சாதம் சரவண பவன் தரத்தை தாண்டிவிட்டதாக அவனுக்குள் தோன்றியது... ஒருவழியாக சாப்பிட்டு முடித்து பசியாறிய பிறகுதான், அந்த நளபாக சக்கரவர்த்தி வாசுவின் நினைவே வந்தது...
‘எங்கே போயிருப்பான்? என்று மனதிற்குள் அலசிக்கொண்டே அடுத்த அறையின் கதவை திறக்க, அங்கே மதுக்கோப்பையுடன் உறவாடிக்கொண்டிருந்தான் வாசு...
கோப்பையில் ஊற்றிய மதுவும், அருகில் தண்ணீர் புட்டியும்.. பழத்துண்டுகளின் கலவை ஒரு தட்டிலும், கிழங்கு வறுவல் இன்னொரு தட்டிலுமாக ரசனையோடு குடித்துக்கொண்டிருந்தவன் மகியை பார்த்ததும் மெலிதாக பதற்றமடைந்தான்...
“அடப்பாவி... பகல்லயே ஆரமிச்சுட்டியா?
“குடிக்குறதுன்னு முடிவான பிறகு, இரவென்ன பகலென்ன?
“ஆல்கஹால் உள்ள போனதும் தத்துவமா வருதாக்கும்... இப்போ ஏன்பா குடிக்குற?
“காலைலேந்து ஒரு குழப்பத்தை எப்டி தீர்க்குறதுன்னு யோசிச்சிட்டு இருந்ததால கொஞ்சம் அதிகமா குழம்பிட்டேன்... அதான் இப்போ குடிக்குறேன்...
“காலைல காபி நல்லா இல்லன்னு சொன்னதுக்கா இப்டி குடிக்குற?... ஐயோ அது ஒரு ப்ளோல சொன்னதுப்பா... இப்போ நீ செஞ்ச சாப்பாடு அவ்ளோ பிரமாதம்... வாசுவின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து வாழ்த்து சொன்னான்...
“ச்ச ச்ச... அதுக்கில்ல... இது வேற விஷயம்... ஆமா, நீ இங்க ஜாப்ல எதுவும் சேரப்போறியா?
“ஆமா... எஸ்.எம் ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணப்போறேன், நாளைக்கு சேர்ந்திடுவேன்... நீ ஏதோ இன்டர்வியூலாம் போனியே, என்னாச்சு?
“அது வாரத்துக்கு நாலு அட்டன்ட் பண்ணிட்டுதான் இருக்கேன்.. ஒரு கழுதையும் வேலை தரமாட்றான்...
இயல்பான பேச்சு, இடையிடையே நகைச்சுவையோடு பயணித்து, இறுதியில் மெள்ள விஷயத்துக்கும் வந்தது...
“நீ திலீப்பை ரொம்ப லவ் பண்றியா மகி?
“இதென்ன கேள்வி?... அளவுக்கதிகமா லவ் பண்றேன்... காலம் முழுக்க அவனோடவே வாழணும்னு ஆசைப்படுறேன்... சிலாகித்து சொன்னான் மகி...
“அந்த அளவுக்கு அவன் உனக்கு உண்மையா இருக்குறான்னு நம்புறியா?
“இப்ப என்ன சொல்ல வர்ற வாசு?
“திலீப்போட பல வருஷம் பழகியவன்குற முறைல சொல்றேன், அவனுக்கு இந்த காதல், கமிட்மென்ட் எதுவுமே செட்டாகாது... பார்த்ததும் பிடிச்சுதுன்னா ஓகே பண்ணிட்டு, ரூம் போடுறதுதான் அவனைப்பொருத்தவரைக்கும் வழக்கம்... மத்தபடி நீ எதிர்பார்க்குற வாழ்க்கை முழுக்க உள்ள கமிட்மென்ட் அவனுக்கு செட் ஆகாது...
“... மகி மௌனமாகவே அமர்ந்திருந்தான்... பதிலுக்கு எதுவும் பேசவுமில்லை, அதற்கான ஆதாரங்கள் பற்றியும் வினவவில்லை... அந்த வெற்றிடத்தையும் தனது வாதத்தால் நிரப்ப முயன்றான் வாசு...
“நேத்து நீ போன் பேசி முடிச்ச பின்ன, கூட நடிக்குற கோ ஆர்டிஸ்ட் ஒருத்தன் கூட இந்த ரூம்லதான் படுத்திருந்தான்... எதையும் நான் பெருசா கண்டுக்கறதில்ல, நான் அட்வைஸ் எதுவும் பண்ணினாகூட அதை பெருசா எடுத்துக்கமாட்டான்... உனக்கு நான் சொல்றதுல சந்தேகம் இருந்ததுன்னா, திலீப் கிட்டயே கேட்டுக்க.. சொல்றதை சொல்லிட்டேன், இனி உன் வாழ்க்கைய நீதான் முடிவு பண்ணிக்கணும் சொல்லிவிட்டு கடைசி குவளை மதுவையும் குடித்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் சாய்ந்துவிட்டான் வாசு...

                           ********
“திலீப், என்னாச்சு உங்களுக்கு?... சிம்பிள் டயலாக்தான, எதுக்கு இத்தன டேக் வாங்குறீங்க இன்னிக்கு?தோளில் கிடந்த துண்டால் முகத்தின் வியர்வையை ஒற்றிக்கொண்டே கேட்டார் இயக்குனர்...
“சாரி சார்.. கொஞ்சம் மூட் ஆப், அதான்... இந்த டேக்ல முடிச்சிடுறேன் சார்... பவ்யமாக சொல்லிக்கொண்டிருக்கும்போது, அந்த மெகாசீரியல் நாயகியும் அருகில் வந்துவிட்டாள்... ஒருகாலத்தில் ஓஹோவென கொடிகட்டிப்பறந்த நாயகிதான், இப்போ இடை பெருத்தாலும் தடை தகர்த்து சீரியலில் உச்சம்த்தொட்டிருக்கும் இந்த ஷைலஜா... நாற்பதுகளை கடந்த வயதானாலும் கூட, போட்டுக்கொள்ளும் ஒப்பனைகள் வழியே நான்கைந்து வயதை குறைத்துக்காட்டியிருக்கிறார்...
“என்ன திலீப் ப்ராப்ளம்? என்று அக்கறையோடு தோள் தொட்டு விசாரிக்கும்போது, நகத்தால் அவன் மார்பை மெள்ள அழுத்தவும் செய்தாள்...
“ஒண்ணுமில்ல மேடம்... இப்போ டேக் சரியாகிடும்... நளினமாக அவளின் பிடியிலிருந்து விடுபட்டுக்கொண்டான் திலீப்...
“ஓகே டேக் போங்க சார்... திலீப் இப்போ ஸ்மார்ட்டா பண்ணுவான் பாருங்க செல்லமாக திலீப்பின் கன்னத்தை கிள்ளினாள்...
‘ஆண்டவா! இவ இம்சை எப்போ தீருமோ?மனதிற்குள் நொந்துகொண்டே டேக் போக ஆயத்தமானான்...
அழுது வடிந்த முகத்துடன் ஒரு இளம்பெண் நிற்க, அவளிடம் ஆத்மார்த்தமாக காதலை வெளிப்படுத்த தயாராக திலீப் நிற்க, “காகித கப்பல் , சீன் சிக்ஸ்டி டூ, டேக் பைவ்... ஆக்ஷன் கரகரத்தக்குரலில் சொன்னார் ஒரு பெரியவர்...
“இங்க பாரு தேவி, நான் உன்ன உயிருக்குயிரா காதலிக்குறேன்ங்குறதுல சந்தேகமே வேணாம்... கடல்ல போற கப்பலை பார்த்து, காஸ்ட்லியான காருன்னாலும் தண்ணில மெதக்க ஆசைப்படக்கூடாது... உன்னோட வசதியான வாழ்க்கைக்கு, இந்த மிடில் கிளாஸ் காதலன் சரிவரமாட்டேன்... என்ன புரிஞ்சுக்கோம்மா... சொல்லிவிட்டு திலீப் அங்கிருந்து கடந்துவிட, ஆறு பக்கத்து கேமராக்களும் சுற்றிசுழன்று அந்த பெண்ணை வட்டமடித்தது... பின்னணி இசையில் கீ போர்டு பதைபதைக்க, க்ளோஸ் அப் ஷாட்களில் இந்த காட்சியை பார்க்கப்போகும் இல்லத்தரசிகளின் நிலைமையை திலீப் மெல்லிய கவலையோடு யோசித்துக்கொண்டிருந்தான்...
“டேக் ஓகே... இயக்குனர் கட்டை விரலை உயர்த்தி ஒப்புதல் கொடுத்தபோதுதான் திலீப் நிதானமானான்...
படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு ஐந்து மணி ஆகிவிட்டது... வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில், ‘ஏதாவது நடந்திருக்காதா? என்கிற ஆர்வத்தில் அவனறைக்குள் சென்றான்...
எவ்வித பதற்றமும் இல்லாமல் மகி உடைமாற்றி, எங்கோ வெளியே கிளம்பிக்கொண்டிருந்தான்...
திலீப்பை பார்த்ததும், “ஏய் மாமா... வந்துட்டியா?... எங்க லேட் ஆகுமோன்னு பயந்திட்டு இருந்தேன்... ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு, கிளம்பிட்டேன்..  முகத்தில் பவுடரை பூசிக்கொண்டே சொன்னான்...
‘அப்போ ஒண்ணுமே நடக்கலையா? குழப்பத்தோடு அறையை விட்டு வெளியேற, தூக்கம் களைந்த முகத்துடன் அடுத்த அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டான் வாசு..
“எப்போ வந்த திலீ?
“அது கிடக்கட்டும்... நீ எதுவுமே பேசலையா?
“எல்லாம் பேசிட்டேன்... இன்னிக்கு பெரிய பூகம்பமே கிளம்பும் பாரு
“போடா லூசு... ஒரு புழுதி கூட பறக்கல... அவன் ஜாலியா பீச்சுக்கு கிளம்பிட்டு இருக்கான்...
“ஹ ஹா... அப்போ பீச்சுல வச்சு உன்கிட்ட நான் சொன்னதுப்பத்தி கேட்பான் பாரு... எதுனாச்சும் சண்டை வந்துட்டா அப்டியே கோயம்பேடுக்கு பஸ் ஏத்திவிட்டுட்டு வந்திடு வில்லத்தனமாக சிரித்தான்...
‘அப்படியும் நடக்கலாம்! என்கிற நம்பிக்கையோடு முகம் கழுவி கடற்கரை போருக்கு தயாரானான் திலீப்...

அந்திசாயும் பொழுதென்பதால் கடற்கரை முழுக்க தங்கம் உருக்கி ஊற்றப்பட்டதைப்போல மின்னியது... ஜனத்திரள் கொஞ்சம் கொஞ்சமாக அலைகளை நோக்கி நடந்துகொண்டிருந்தது... குதிரை சவாரி, கைரேகை ஜோதிடம், சுண்டல் சோளப்பொறி என்று வழக்கமான பரபரப்புக்குள் மெரீனா ஆழ்ந்துகொண்டிருப்பதற்கு நடுவில், திலீப்பின் விரல் உரச நெருக்கமாக நடந்து செல்வதில் மகிக்கு கரைபுரண்டது மகிழ்ச்சி...
ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்த ஒரு பகுதியில் இருவரும் அமர்ந்தனர்... வெகுநேரமாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை... கடலுக்குள் எங்கோ மிதந்துகொண்டிருக்கும் ஒரு படகை உற்றுகவனித்துக்கொண்டிருந்தான் திலீப்..
“ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா... திலீப்பின் வெகுஅருகாமையில் அமர்ந்து தோளில் தலை சாய்த்துக்கொண்டான்...
“இந்த கடற்கரை காத்து, பக்கத்துல நான்... உனக்கு இப்போ மனசுக்குள்ள என்ன மாமா ஓடிட்டு இருக்கு? திலீப்பின் முகம் பார்த்து ஆர்வமாக வினவினான் மகி...
“நெறைய தோணுது... ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும்னு தோணுது
“அப்டியா?... சீக்கிரம் கேளு மாமா, அக்கம்பக்கத்துல கூட யாருமில்ல உற்சாகத்தோடு கேட்டான்...
“உப்புக்காத்து முகத்துல பட்டு பிசுபிசுப்பா ஆகிடுச்சு, அதுனால ஸ்கின் அலர்ஜி எதாச்சும் வருமா? ரொம்ப சீரியசாக கேட்டான் திலீப்...
“இதத்தான் கேட்கனும்னு நெனச்சியாக்கும்?... லவ் பத்தியல்லாம் உனக்கு எல்.கே.ஜி லேந்து பாடம் எடுக்கணும் போலயே நொந்தபடி சொன்னான்...
“பாடம் எடுக்குற அளவுக்கு என்ன எனக்கு தெரியாம போச்சு?
“இல்ல மாமா... ஒரு லவ்வர் நான், உன் பக்கத்துல தனியா உக்காந்திருக்கேன்... ஜில்லுன்னு கடல் காத்து, சரசரன்னு அலைகளோட சத்தம்... ரொமான்ஸா எதாச்சும் தோனலையேன்னு சொன்னேன்...
“இப்டி எக்ஸ்டர்னல் பேக்டர் ஸ்டிமுலேட் பண்றதுக்கு பேரு காதலா?... அதல்லாம் உள்ளுக்குள்ள தோணனும்... அப்டி தோணிட்டா, சித்திரை வெயில்ல பைபாஸ் ரோட்ல நின்னா கூட ரொமான்ஸ் வரும்...
“சரி சரி... விடு மாமா... அது வர்றப்போ வரட்டும்... இப்டி சீரியல் வசனம் பேசாம, வேற எதாச்சும் பேசு...
திலீப் மனதிற்குள் இன்னும் குழப்பம் அகலவில்லை... வாசு மகியிடம் சொன்ன விஷயங்கள் பற்றி ஏன் இதுவரை தன்னிடம் எதுவும் கேட்கவில்லை? என்ற கேள்வி குடைந்துகொண்டே இருந்தது... கேட்க தயங்கிக்கொண்டிருக்கிறானோ?...
“வாசு பகல்லயே தண்ணி அடிச்சான் போல இன்னிக்கு? தூண்டிலை போட்டான் திலீப்...
“ஆமாமா... தண்ணிய போட்டுட்டு ஒரே புலம்பல்... சிரித்துக்கொண்டான்...
“அப்டி நெனைக்காத மகி... அவன் தண்ணி அடிச்சிட்டா உண்மைய தவிர எதுவும் பேசமாட்டான்... எதுவும் முக்கியமான விஷயம் சொன்னானோ?
“ஆமாமா... சொன்னான்...
“என்ன? ஆர்வமாக கேட்டான் திலீப்...
“பாஜக ஆட்சியை பாக்குறப்போ, காங்கிரஸ் தேவலாம்னு தோனுதுன்னு சொன்னான்... வியாபம், குஜராத் பட்டேல் கலவரம், செம்மரக்கடத்தல்னு நிறைய நாட்டு நடப்புகளை பத்தி பேசினான்...
“அவ்ளோதானா?... என்னைப்பத்தி ஏதும் பேசலையா? ஏமாற்றத்தோடு கேட்டான்...
“உன்னப்பத்தி இல்லையே மாமா... அப்டின்னா அந்த அளவுக்கு நீ இன்னும் ரீச் ஆகலன்னு அர்த்தம்... திலீப்பின் கன்னம் கிள்ளி சிரித்தான் மகி...
‘குடிகார நாய், சொதப்பி வச்சிட்டானே... எல்லாத்தையும் சொல்லிட்டேன்னு சொன்னவன், போதைல சம்மந்தமே இல்லாம பேசிருக்கான்... இருக்கட்டும், இன்னிக்கு நைட்டோட அவனுக்கு சங்கு ஊதிடுறேன்... மனதிற்குள் கருகினான் திலீப்..
இது எதனைப்பற்றிய கவலையும் இல்லாமல், கடல் அலையில் கால் நனைத்து விளையாடி, செல்பி எடுத்து உற்சாகமாக பொழுதை போக்கிக்கொண்டிருந்தான் மகி...
நேரம் ஆகிக்கொண்டிருக்க, ஒருவழியாக இருவரும் வீட்டை நோக்கி கிளம்பினர்... வீட்டிற்குள் நுழைந்ததும் ‘வாசுவை ஒரு வழி பண்ணிடனும் என்கிற ஒரே கொள்கையோடு பயணித்தான் திலீப்... மறுபுறம் மகியோ, காதலனுடன் கொண்டாடிய நிமிடங்களை மனதிற்குள் அசைபோட்டபடி அமர்ந்திருந்தான்...
வீட்டின் அழைப்பு மணியை அடித்த வேகமே, திலீப்பின் கோபத்தை வெளிப்படுத்தியது...
“ஏன்தான் இத்தன முறை அடிக்குற?.. அதான் வரேனே திலீ? நடக்கப்போகும் விபரீதம் புரியாமல் சிரித்துக்கொண்டே கதவை திறந்தான் வாசு...
“இது அடி இல்ல, இனிதான் இருக்கு அதல்லாம் நறநறவென பற்களை கடித்துக்கொண்டே கிசுகிசுத்தான் திலீப்...
பின்னாலேயே மகியும் வர, தலையை சொறிந்தபடியே குழப்பத்தில் நின்றான் வாசு... இருவரின் முகத்திலும் எவ்வித சண்டைக்கான அறிகுறியும் இல்லாதது, அவனது குழப்பத்தை இன்னும் இரட்டிப்பாக்கியது... வந்தவேகத்தில் முகத்தை கழுவிவிட்டு அறைக்குள் நுழைந்துவிட்டான் மகி... நெற்றியில் வைவைத்து, இருக்கையில் தலைசாய்த்தபடி தரையில் அமர்ந்தான் திலீப்... அவனருகில் மெள்ள நகர்ந்து, சத்தம் வராமல் கிசுகிசுத்தான் வாசு...
“நான் அப்போவே நினச்சேன் திலீ... சண்டைபோட்டுட்டு போறவன், கொண்டுவந்த பேக்கை எடுக்காம போறானேன்னு... அதை எடுக்கத்தான வந்தான்?
“இருக்குற கடுப்புல உன்னை கடிச்சு துப்பிடுவேன் பார்த்துக்க...
“என்னாச்சு திலீ?
“ஒண்ணுமே ஆகல, அதான் பிரச்சினையே...
“அப்டின்னா?
“சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு அர்த்தம்... நீ எதுவுமே என்னப்பத்தி சொல்லலன்னு சொல்றான்...
“என்னடா சொல்ற? அதிர்ந்து கேட்டான் வாசு...
“ஆமா... அந்த லட்சணத்துல நீ சொல்லிருக்க..
“இல்ல திலீ... நான் ரொம்ப தெளிவாத்தான் சொன்னேன், பட் எப்புடி மிஸ் ஆச்சுன்னு புரியல... இன்னிக்கு நைட் நானே அதுபத்தி கேட்குறேன், ரெண்டுல ஒன்னு பார்த்திடலாம்... நம்பியார் போல உள்ளங்கைகளை பிசைந்துகொண்டான்...
“அடத்தூ... இந்த மேனரிசம் எல்லாம் வேணாம், வில்லத்தனத்தை உன் செயல்ல காட்டு கோபத்தோடு எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான் திலீ...
தலையில் கைவைத்துக்கொண்டு கட்டிலில் சாய்ந்தபடி,  கண்களை மூடிக்கொண்டிருந்தான் திலீப்.. கையில் ஒரு கிண்ணத்தோடு அவனருகில் அமர்ந்து, திலீப்பின் கன்னங்களை வருடினான் மகி...
திடுக்கிட்டு விழித்த திலீப், “ஏய், என்ன?... என்னது கைல? பதற்றமடைந்தான்...
“பயப்படாத... வெறும் பால்தான் மாமா...
“நமக்கென்ன பர்ஸ்ட் நைட்டா நடக்குது?... கைல பாலோட வந்து நிக்குற? மெலிதாக கோபமடைந்தான்...
“ஆமா... ஆசைதான் உனக்கு... இது உன் முகத்துக்கு மாமா... நீ கண்ண மூடிட்டு படுத்துக்கோ, க்ளென்சிங் பண்ணிவிடுறேன்... முகத்துல படிஞ்சிருக்குற அழுக்கல்லாம் போய்டும் சொல்லிக்கொண்டே ஒரு பஞ்சில் பாலினை தொட்டு அவன் முகத்தில் சுத்தம் செய்யத்தொடங்கினான் மகி... 


“அப்டியே தூங்கிடாத மாமா... பத்து நிமிஷம் கழிச்சு முகத்த கழுவிட்டு தூங்கு, இல்லைன்னா எனக்கு சொந்தமான முகத்துல ஈ எறும்பு மொய்க்க ஆரமிச்சிடும்... நான் போய் பக்கத்து ரூம்ல படுத்துக்கறேன் சொல்லிவிட்டு எழுந்துசென்றுவிட்டான் மகி... கண்களை இறுக்க மூடியிருந்தாலும், தூக்கம் வரவே இல்லை திலீப்புக்கு... எதாவது ஒரு விஷயத்தை கிளறி, சண்டை போடலாமென பார்த்தாலும்கூட, அதற்கான சந்தர்ப்பத்தைக்கூட சிதைத்துவிடுகிறான் மகி...  இன்று எப்படியும் தன்னருகில்தான் படுப்பான், தூக்கக்கலக்கத்தில் கை மேலே பட்டிருந்தால் கூட, அதனைவைத்து ஒரு கலவரத்தை உருவாக்கியிருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த திலீப்பின் எண்ணத்தில் விழுந்ததென்னவோ காவிரிப்படுகை மணல்தான்...
‘என்னதான் லவ்வரா இருந்தாலும், இப்டி விருப்பமில்லாம தொடுவியா?... இப்பவே இப்டி செய்றவன், நாளைக்கு கமிட் ஆனபிறகு என்னவல்லாம் செய்யமாட்ட? இதுதான் திலீப் யோசித்துவைத்திருந்த முதல் வசனம், ஆனால் பயனற்ற யோசனையாக அது மாறிவிட்டது...

             ********************
வழக்கம்போல ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி படுத்திருந்தான் வாசு... விரல்களால் காற்றில் கோலமிட்டபடி அதிதீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த வாசு, மகியை பார்த்ததும் மெலிதான குழப்பத்தோடு எழுந்து அமர்ந்தான்...
“நீ விரலால கோலம்போட்டு யோசிக்குற அழகை பார்க்குறப்போ, அப்டியே சியான் விக்ரம் மாதிரியே இருக்கு வாசு
“ஏய்... சும்மா இருடா... இப்டி எதாச்சும் சொல்லி ஆளை கவுத்திடுவ முகத்தில் ஆயிரம் வால்ட்ஸ் வெட்கம் ததும்பியது...
“ஐயோ நிஜமாவே வாசு... தெய்வத்திருமகள் படத்துல விக்ரம் கூட உன்னப்போலத்தான் விரலால கோலம்போட்டுகிட்டே பேசுவார்.. கட்டிலின் மறுபுறம் அமர்ந்து தலையணையை வைத்தபடி சாய்ந்துகொண்டான் மகி...
வாசு எரிச்சலானான்.. “ஏய், இங்க என்ன படுக்குற?... அந்த ரூம்ல உன் ஆளு தனியாத்தான படுத்திருக்கான், அங்க போயேன்..
“இல்ல வாசு... நேத்து வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல படுத்திருந்திட்டு, இன்னிக்கு வந்த எனக்காக வழக்கத்தை மாத்திக்க வேணாம்... அடுத்த வாரத்துலேந்து நாங்க ஒண்ணா படுத்துக்கறோம், இப்போ நீ அங்கயே படுத்துக்கோ சொல்லிக்கொண்டே போர்வையை உதறி படுப்பதற்கு ஆயத்தமானான் மகி...
‘ச்ச... இவ்ளோ நல்லவனா இருக்கானே! என்று மனம் நினைத்தாலும், அடுத்து மகி ஏதேனும் கலாய்க்க காத்திருக்கிறானோ? என்கிற சந்தேகத்தில் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் வாசு... இல்லை, நிஜமாகத்தான் சொல்கிறான் போலும்... சரி, நம்ம வேலையை பார்ப்போம்...
“பீச்ல செம்ம என்ஜாய்மென்ட் போல? கொக்கி போட்டான் வாசு...
“ஆமா... ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு நிறைஞ்சுது... சொல்லும்போதே வார்த்தைகளில் உற்சாகம் பீறிட்டது...
“அவ்ளோ சொல்லியும், நீ திருந்தலையா?
“திருந்துற அளவுக்கு நீ என்ன சொன்ன வாசு?
“திலீப் கேரக்டர் பத்தி சொன்னேனே... அவனுக்கு வேற சிலர் கூட தொடர்பு இருக்குன்னு...
“அதனால என்ன?
“அதனால என்னவா?... உன் லவ்வர்டா அவன்?
“அதுக்காக அவனோட ப்ரைவசில தலையிட முடியுமா நான்?
“அப்புறம் என்னடா அதுக்கு பேரு லவ்வு?
“லவ்வர் அடுத்தவன் கூட படுக்குறத கண்கானிக்குறதுக்கு பேர்தான் லவ்வுன்னா, எனக்கும் திலீப்புக்கும் இடையில உள்ள உறவு அதையும் தாண்டியது...
“இப்ப என்னதான் சொல்ல வர்ற?
“உனக்கு புரியுற மாதிரி சொல்றேன் கேட்டுக்கோ... எனக்கு ரன்பீர் கபூர்னா ரொம்ப பிடிக்கும்... நாளைக்கே ரன்பீர் வந்து என்னைய டேட்டிங் கூப்ட்டா, திலீப்பை லவ் பண்றேன்னு சொல்லி மறுக்குற அளவுக்கு நான் உத்தமன் கிடையாது... அப்டிதான் நான் திலீப் பண்றதையும் பார்க்குறேன்...
“அப்போ உனக்கு அது கஷ்டமா இல்லையா? அதிர்ச்சியோடு கேட்டான் வாசு...
“கஷ்டமில்லன்னு யார் சொன்னது?... ஆனா, அதுக்காக அவன் செய்றத நான் தடுக்கப்போறதில்ல... ஒருவேளை நான் கஷ்டப்படுறேன்னு தெரிஞ்சு அவன் தன்னை மாத்திகிட்டா சந்தோஷப்படுவேன், அவ்ளோதான்... இதப்பத்தி நீ யோசிச்சு யோசிச்சு, சேது விக்ரமா மாறிடாத... குட் நைட் சொல்லிவிட்டு தலையோடு சேர்த்து போர்த்திக்கொண்டு நித்திரைக்குள் நுழைந்துவிட்டான் மகி..
அடப்பாவமே... மகி இவ்வளவு காதலிக்குறான் திலீப்பை.. ஆனா, அதை புரிஞ்சுக்காம எப்டி கழட்டிவிடுறதுன்னு யோசிக்கிறான் அவன்... இதல்லாம் எடுத்துச்சொன்னாலும் புரிஞ்சுக்கவும் மாட்டான்... என்னதான் பண்றது?... மனதிற்குள் இருவரையும் நினைத்து புலம்பியபடியே படுத்தான் வாசு....
மறுநாள் காலை, முதல் நாள் பணியின் பதற்றத்தோடு கிளம்பிக்கொண்டிருந்தான் மகி... மூன்றாம் தடவையாக முகத்திற்கு சன் ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொண்டிருந்தான்...
“மாடலிங்ல இருக்குற திலீப் கூட இவ்ளோ மேக்கப் செஞ்சு பார்த்ததில்ல மகி சிரித்தான் வாசு...
“என் டார்லிங் அல்ரெடி மன்மதன்டா... அவனுக்கு மேக்கப் போட்டா ரோட்ல கற்போட நடமாட முடியாதுன்றதால, அளவோட வச்சிக்கர்றான்... நானல்லாம் ஏதோ அப்டி இப்டி டச்சப் பண்ணாதான், ஓரளவு அவன் பார்ட்னர்னு சொல்லிக்க முடியும்.. சட்டையின் பொத்தான்களை மாட்டிக்கொண்டே கதவை நோக்கி நடந்தான்...
“முதல் நாள் ஜாப் போறேன், விஷ் பண்ண மாட்டியா வாசு?
“சரி... வாழ்த்துகள் மகி...
“லூசா நீ?... ப்ரெண்ட்ஸ்க்குள்ள என்ன வாழ்த்தல்லாம்... நான் கிளம்புறேன், பை சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினான் மகி...
தனக்கும் இன்று பத்து மணிக்கு பணிக்கான நேர்காணல் இருப்பது அப்போதுதான் அவன் சிந்தைக்குள் ஒலித்தது... அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து, நான்கைந்து கப் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டு, முகத்தில் மட்டும் மெலிதாக சோப்பை படரவிட்டு கழுவிக்கொண்டு வெளியே வந்தான் வாசு...

                          ************
வழக்கமான அதே சீரியல் ஷூட்டிங் தளம்... காகித கப்பல் நாயகி ஷைலஜா, திலீப்பின் கன்னங்களில் கைவைத்தபடி உருக்கமாக வசனம் பேசிக்கொண்டிருந்தாள்...
“என் தங்கச்சி வாழ்க்கைய நாசமாக்கிடாத ராஜேஷ்... காதல்னு சொல்லி எங்க குடும்பத்த சிதச்சிடாத... பூமாலையா இருக்குற குடும்பத்துல, அது கட்டியிருக்குற நூலை மட்டும் தனியா பிரிச்சுடாத கன்னங்களை இரண்டு கைகளாலும் அழுத்தி வருடிக்கொண்டே வசனத்தை பேசிமுடித்தாள் நாயகி... சக்கர வண்டியில் வைக்கப்பட்டிருந்த கேமரா அவர்களை சுற்றி வட்டமடித்தது.. “டேக் ஓகே கட்டை விரல் உயர்த்தப்பட, பெருமூச்சுடன் ஒரு இருக்கையில் அமர்ந்தான் திலீப்...
திலீப்பின் தோள் தட்டி சிரித்த வாசு, “ஆக்டிங்ல கலக்கிட்ட திலீ சிரித்துக்கொண்டான்...
“என்னடா கொழுப்பா?... இதுவும் நடிப்புதான்..
“அது சரிடா... தங்கச்சி வாழ்க்கைய கெடுத்த உன் சட்டைய புடிச்சு நியாயம் கேட்டா ஓகே, அதென்ன உன் கன்னத்த தொட்டுகிட்டு அந்தம்மா சண்டை போடுது?
“கன்னத்தோட விட்டுச்சேன்னு நான் சந்தோஷப்படுறேன் தெரியுமா?... போன எபிசோட்ல அவங்க அப்பா செத்ததுக்கு நான்தான் காரணம்னு என் இடுப்பை புடிச்சுகிட்டு சண்டை போட்டுச்சு... கிசுகிசுப்பாக சொன்னான் திலீப்...
“அதுக்கும் கீழ இறங்கிடாம இருக்குறவரைக்கும் நல்லதுதான்... ஆமா, இதல்லாம் சகிச்சுகிட்டு இங்க நடிக்கணுமா என்ன?
“இப்போலாம் டிவிதான் சினிமாக்கு கேட் பாஸ்டா... சந்தானம், சிவகார்த்திகேயன், மாகாபா இவங்கல்லாம் இப்போ ஸ்டார்ஸ்னா எப்டி, இப்டிதான்... சரி இன்டர்வியூ போனியே, என்னாச்சு?
“அட்டன்ட் பண்ணிருக்கேன், பார்க்கலாம்...
“ஹ்ம்ம்.. நீ வெயிட் பண்ணு, நான் பேமன்ட் வாங்கிட்டு வரேன்... எங்கயாச்சும் சாப்ட்டுட்டு வீட்டுக்கு போலாம்...
ஷூட்டிங் முடிந்து பொருட்கள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் வாசு... துணை இயக்குனர்கள் மறுநாள் காட்சிக்கான ஸ்க்ரிப்ட் பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார்கள்..
ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக்காட்சிகள் சலிப்புத்தட்ட, எழுந்து காலாற அந்த வீட்டின் வெளிப்புறத்தில் நடந்துகொண்டிருந்தான்.. தூரத்தில் பரிச்சயமான ஒரு பச்சை சட்டை கண்ணில் பட்டது... கையில் வெள்ளை கோட்டுடன், பைக்கில் ஏறுவது மகியேதான்...
சட்டென அலைபேசியை எடுத்து மகியின் எண்ணுக்கு அழைத்தான் வாசு...
“ஏய் மகி, எங்க இருக்க?
“வீட்டுக்குதான் வந்திட்டு இருக்கேன், என்னடா?
“மகாவீர் நகர் கிட்ட உனக்கென்ன வேலை? சிரித்தான்...
“என் ப்ரென்ட்ஐ பார்க்க வந்துட்டு இப்போ வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்.. ஆமா, நீ எப்போ பார்த்த?
“அப்டியே உன் ரைட் சைட் இருக்குற வீட்டு வராண்டால என்ன தெரியுது?சொல்லிக்கொண்டே கைகளை மேலே உயர்த்தி அசைத்தான்...
“ஒரு கரடி கை தூக்கிட்டு நிக்குற மாதிரி தெரியுது..சிரிக்காமல் சொன்னான் மகி...
“ரொம்பத்தான் கொழுப்புடா உனக்கு... இங்க வா, திலீப்போட ஷூட்டிங் ஸ்பாட் இங்கதான்...
“வேணாம்... வந்தா அந்த சிடுமூஞ்சி என்னைய கடிக்கும்..
“ச்ச ச்ச.. அவன் என்ன அவ்ளோ மோசமானவன்னு நினைச்சியா?... ஒன்னும் சொல்லமாட்டான், இங்க வா...
அந்த வீட்டை ஆச்சர்யத்துடன் ரசித்தவாறே உள்ளே நுழைந்தான் மகி.. வாசலில் ஸ்டிக்கர் கோலம் முதல், வீட்டினுள் பிளாஸ்டிக் செடிகள் வரை அத்தனையும் செயற்கைதான்... பல வீடுகளை கண்ணீர் கடலில் தத்தளிக்கச்செய்த மாமியாரும் மருமகளும் அளவளாவிக்கொண்டிருந்தனர்... எரிந்துகொண்டிருந்த குத்துவிளக்கிற்கு பக்கத்தில், புகைந்துகொண்டிருந்த சிகரெட் துண்டு...
“என்னடா அதிர்ச்சியா பாக்குற?
“இதானா ஷூட்டிங் ஸ்பாட்?.. இவ்ளோ குப்பையா, அழுக்கா இருக்கு?
“அதல்லாம் நீ ஏன் பாக்குற?... டீவில வர்றப்போ அதோட அவுட்ப்புட்ட பாரு, கோவில் ரேஞ்சுக்கு காட்டுவாணுக சிரித்தான்... பேசிக்கொண்டிருக்கும்போதே வாசுவின் அலைபேசி குலுங்க, காதில் வைத்தபடி சில அடி தூரங்கள் நடந்துசென்றுவிட்டான்...
கைகளில் பணத்தை எண்ணிக்கொண்டே வந்து, நிமிர்ந்து பார்த்தபோது மகி நின்றதைக்கண்ட திலீப்பிற்கு அதிர்ச்சி...
கோபமும் மெள்ள கண்களிலிருந்து மூளையின் பாகங்களுக்குள் நுழைந்தது...
நடையின் வேகமே, அந்த கோபத்தின் வெப்பத்தை அளவிட்டு சொல்லிவிடும்... மகியின் அருகில் சென்று நின்றவன், “என்ன நெனச்சிட்டு இருக்க?... இந்த கருமத்துக்குத்தான் நான் அன்னிக்கே பயந்தேன்... சும்மா லவ்வு, ஜவ்வுன்னு சொல்லி இம்சை பண்ணாத... வேலைல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன் வார்த்தைகளில் வெப்பத்தை உமிழ்ந்தான்... மகி பதிலெதுவும் பேசாமல், ஸ்தம்பித்து நின்றான்...
அலைபேசியில் பேசிமுடித்துவிட்டு, திலீப் கோபமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்து பதற்றத்தோடு அங்கு விரைந்தான் வாசு..
“என்னடா என்னாச்சு? இருவரையும் பார்த்து கேட்டான் வாசு...
“நான் அப்பவே சொன்னேன்ல, இவன் இம்சை தாங்க முடியாதுன்னு.. இப்போ பாரு தேடி கண்டுபிடிச்சு இங்கவந்து நிக்குறான்.. பாக்கவே எரிச்சலா இருக்குடா... பதிலெதுவும் பேசாமல் அங்கிருந்து மகி கிளம்பிவிட்டான்...
“பதிலே பேசாம கல்லுளிமங்கன் மாதிரி போறான் பாரு! மகியின் காதுகளுக்குள் விழவேண்டும் என்பதற்காக கொஞ்சம் சத்தமாகவே சொன்னான் திலீப்... பேக்கப் செய்துகொண்டிருந்த யூனிட் ஆட்களில் ஒருசிலர் அங்கு நடப்பதை வேடிக்கைப்பார்க்க தொடங்கினர்...
“லூசா திலீ நீ?... அவனா இங்க வரல... இந்த வழியா போனவன நான்தான் கம்பல் பண்ணி இங்க வரச்சொன்னேன்.. அவனையும் நம்மளோட சேர்ந்து சாப்பிடலாம்னுதான் வரச்சொன்னேன், மத்தபடி உன்கூட ரொமான்ஸ் பண்ணவல்லாம் அவன் வரல... வாசுவும் அங்கிருந்து கிளம்பிவிட்டான்...

                               ***********
மொட்டை மாடியில் நின்று அந்த தெருவை வேடிக்கை பார்க்கும்போதல்லாம் திலீப்பிற்கு ஒரு தற்காலிக மன அமைதி வருவதுண்டு... மாலை நேரமென்பதால் புத்தகச்சுமையை மீறிய புன்னகையுடன் நடந்துவரும் பள்ளிக்குழந்தைகளின் முகம்தான் மனதில் தோன்றும் வலிகளுக்கான ‘மூவ்... சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது, பழைய நினைவுகள் மட்டும் மெலிதாக உதிக்கத்தொடங்கியது....
“திலீப்... அந்த நிலாவ பார்த்தியா?.. உன்னைமாதிரியே அவ்வளவு அழகு, கொஞ்சமும் பொலிவு குறையாம...
“இந்தியாவே நிலாவுக்கு சந்திராயன் அனுப்பியும் இன்னும் நீ தியாகராஜ பாகவதர் காலத்து ‘வதனமே சந்திர பிம்பமே வசனம் பேசிட்டு இருக்கியே கமல்...
கமல், ரசனையான காதலன்... மறக்கமுடியாத காதலை மனதில் புதைத்துவிட்டு சென்ற மன்மதன்... இப்பவும் எங்கயாவது காதல் வசனம் கேட்கும்போது அவன் நினைவுதான் வருது... அவனோட இடத்தை இன்னொருத்தன்கிட்ட கொடுக்குறத நினைச்சாவே அருவருப்பா இருக்கு...
கட்டை சுவற்றிலிருந்து எழுந்து நடக்கத்தொடங்கினான்... மீண்டும் சுவர் அருகே நடந்துவந்து கீழே எட்டிப்பார்த்தான்... எல்லா காட்சிகளுமே மினியேட்ச்சர்கள் போல தெரிந்தது... குதித்தால் உடல் சிதறிவிடும், ஆனால் வலியில்லாத மோட்சம்... அடச்ச.. என்ன கருமம் இது?, ஏன் இப்டியல்லாம் தோணுது?.. அவசரமாக நான்கடி பின்னே நகர்ந்து தரையில் அமர்ந்துவிட்டான்...
தலையில் கைவைத்தபடி சுவற்றின் மீது சாய்ந்துகொண்டான்... ஏன் நான் இப்டி இருக்குறேன்?... அவன்தான் என்னைய வேணாம்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டான்ல..
“ஒன்னும் கவலைப்பட வேணாம் திலீப்... கனடா போய் செட்டில் ஆகி, கல்யாணம் செஞ்சுட்டு, நாலு பிள்ளைகள வாடகைத்தாய் மூலமா பெத்துகிட்டு சந்தோஷமா வாழலாம்...
“நாலு போதுமா கமல்?... இப்டி கனவுலேயே வாழ்க்கைய ஓட்டவேண்டியதுதான், எனக்கு ஷூட்டிங்க்கு லேட் ஆச்சு கிளம்புறேன்..
‘ஐயோ கடவுளே.... ஏன் அந்த நினைவல்லாம் மறுபடியும் வந்து என்னை கொல்லுது? தலையை பிய்த்துக்கொண்டான்...
“ஏய் திலீ, என்னாச்சு? அவசரமாக அருகில் வந்து திலீப்பின் தலையில் கைவைத்துக்கேட்டான் வாசு... நினைவில்லை, நிஜம்தான்...
“இல்ல... ஒண்ணுமில்ல... கண்களின் மிரட்சியை மறைக்க முனைந்தும் முடியவில்லை... பொய்யாக சிரிக்க கடும் பிரயத்தனம் செய்தும், இயலவில்லை...
“கொஞ்ச நாளாவே இப்டிதான் இருக்க... என்னன்னு கேட்டா எதாச்சும் சொல்லி சமாளிக்குற... இன்னும் அந்த கமல் ஞாபகமாவே இருக்கியா? தலைமுடியை சரிசெய்துவிட்டான்...
“தெரியல வாசு... நான் என்ன பண்றேன்னு கூட புரியல... அவனை முழுசா மறக்கவும் முடியல...
“தேவையில்லாத நினைவு திலீ இது... இப்டி எதாச்சும் நினச்சுகிட்டு, கிடைக்குற நல்ல வாழ்க்கைய கெடுத்துக்காத... நிஜமாவே சொல்றேன், மகி உன்னைய அவ்ளோ லவ் பண்றான்... நீ திட்டுனத கூட பெருசா எடுத்துக்காம சகஜமா இருக்கான்... தேவையில்லாம போட்டுக்குழப்பி அதையும் கெடுத்திடாத... மகிய உனக்கு பிடிக்கலையா என்ன?
“பிடிக்கலைன்னு இல்ல... அவன் லவ்வை கூட ஏத்துக்கலாம்னு நினச்சாலும், அவன்கிட்ட பேசுறப்போ கமல் ஞாபகம் வந்து தடுமாறிடுறேன்... என்ன பண்றதுன்னு புரியல..
“ஒன்னும் கவலைப்படாத திலீ, எல்லாம் போகப்போக சரியாகிடும்... திலீப்பை தோள் நிமிர்த்தி அழைத்து வீட்டிற்கு சென்றான்...

                                  **************
“ஹலோ திலீப் நாயர் இருக்காரா?
“நான்தான் பேசுறேன், சொல்லுங்க...
“காகித கப்பல்ல நடிக்குற பையன்தான?
“அட ஆமாங்க... என்ன வேணும்?
“ராயல் ப்ரொடக்சன்ஸ்லேந்து பீ.ஆர்,ஓ பேசுறேன்... எம்.டி உங்கள பாக்கனும்னு சொல்றாரு, வரமுடியுமா?
“கண்டிப்பா சார்... ஷூட்டிங் முடிச்சிட்டு ஈவ்னிங் வரட்டுமா?..
“என்னய்யா ஆளு நீ?... ஆடி கார் வாசல்ல நிக்குறப்போ, ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வரேன்னு சொல்ற... இன்னிக்கு பத்து மணிக்கு உனக்கு அப்பாய்ன்மென்ட், உன்னோட மாடலிங் போட்டோக்கள எடுத்துகிட்டு ஆபிஸ் வந்திடு...
பதிலுக்கு காத்திடாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டது... திலீப்பால் தன்னையே நம்பமுடியவில்லை... ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான்.. சமீபத்தில் அவர்கள் தயாரித்த அத்தனை படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் எனும்போது, அந்த சந்தோஷத்தில் நியாயம் இருக்கத்தானே செய்யும்..
“எதாச்சும் ஹீரோ ப்ரென்ட் கேரக்டருக்கு கூப்பிட்டிருப்பாங்களோ? வாசுதான் முதலில் ஆசையை தூண்டினான்...
“அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டருக்கு கூட நான் ஓகே... உற்சாகம் ததும்ப சொன்னான் திலீப்...
“முதல்ல இப்பவே கிளம்பு திலீப்... மகி அவசரப்படுத்தினான்...
“ஏய் இன்னும் நேரம் இருக்கு...
“பரவால்ல... அவங்க ஆபிஸ்ல போய் ஒரு மணி நேரம் காத்திட்டு இருந்தாலும் கூட தப்பில்ல.. வாய்ப்புகள் வர்றப்போ, அதை எந்த விதத்திலும் தவற விட்டுடக்கூடாது... திலீப்பை வலுக்கட்டாயமாக குளியலறைக்குள் பிடித்து தள்ளினான் மகி...
‘ராயல் ப்ரொடக்சன்ஸ் பிரம்மாண்ட பெயர் கிரானைட் கற்களில் மின்னியது... கைகளில் ‘கரிக்குலம் விட்டேக்களுடன், வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டே காத்திருக்கின்றனர் எதிர்கால தமிழ் சினிமாவின் கனவு நாயகன்கள்... அவர்களை கடல் அலையை கிழித்து பயணிக்கும் கப்பலைப்போல, கடந்து உள்ளே நுழைந்தான் திலீப்... மெலிதாக மனம் படபடக்க தொடங்கியது... வரவேற்பில் நின்றிருந்த பெண் இவனை பார்த்ததும் வாய் நிறைய புன்னகையோடு, “ஹலோ நீங்க காகித கப்பல்ல வர்ற ஆக்டர் தான? என்று கேட்பாள் என்று நினைத்தபடி அவள் முன் நின்ற திலீப்பிற்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றம்தான்...
அவன் விபரங்களை சொன்னதும், “அங்க வெயிட் பண்ணுங்க... பீ.ஆர்.ஓ வந்ததும் சொல்றேன் சொல்லிவிட்டு அருகிலிருந்த கோப்புகளை ஆராயத்தொடங்கினாள்... சீரியல் பார்க்காத ஜடம் போல இவள்... இல்லை.. அந்த இடத்திலிருந்து பல உச்ச நடிகர்களையும் பார்த்தே அலுத்ததால், சீரியல் நடிகன் அவ்வளவு ஆச்சர்யத்தை அவளுக்குள் ஏற்படுத்தவில்லை போலும்... எது எப்படியோ, ஆள் என்னவோ மங்களகரமாக இருக்கிறாள்..
அலைபேசி வைப்ரேட்டியது... மகிக்கு அவசரம் பொறுக்காது...
“என்னடா சொன்னாங்க? ஆவலோடு கேட்டான்...
“ரிசப்ஷன்லதான் இருக்கேன், இன்னும் கூப்பிடல... ஏதும் சொன்னாங்கன்னா நானே கூப்டுறேன், போனை வை அழைப்பை துண்டித்தான் திலீப்...
எதிரே தீராத வயிற்றுவலியுடன் அமர்ந்திருந்த நோயாளியிடம் சுரத்தே இல்லாமல் “எந்த இடத்துல வலிக்குது... என்ன மாதிரியான வலி? மருத்துவராகிவிட்டான்...
அந்த வரவேற்பறையை மேலும் கீழுமாக பார்த்தான் திலீப்... பிரம்மாண்டமாக இருக்கிறது, நான்கைந்து வயதான ஆட்களின் புகைப்படம் மட்டும் முரணாக சிரித்துக்கொண்டிருந்தது... நாக்கு வரண்டுவிட்டது, எழுந்து சென்று அந்த ரோபோ பெண்மணியிடம் தண்ணீர் கேட்க தயக்கமாக இருந்ததால் எச்சிலை விழுங்கிக்கொண்டான்...
உருட்டி வைத்த களிமண் உருண்டை உருண்டு போவதைப்போல ஜிகுஜிகு ஆடையுடன் ஒரு நபர் அந்த வரவேற்பறையை கடந்து செல்ல, நான்கைந்து கோட்டு சூட்டுகள் அவரை பின்தொடர்ந்தது... அவரைப்பார்த்ததும்தான் ஆச்சர்யமாக ரிசப்ஷன் பெண்மணி சிரித்தபடி எழுந்து நிற்கிறாள், முன்வரிசை பற்களின் ஊடே ஒரு தெத்துப்பல் அழகாக தெரிந்தது...
சில நிமிடங்களில் அவள் அருகிலிருந்த அலைபேசி சிணுங்க, அதனை காதில் வைத்துக்கொண்டே திலீப்பை கை நீட்டி அழைத்தாள்...
“இந்த ஸ்டெப்ஸ்ல ஏறிப்போனா, மூணாவது ரூம்ல பீ,ஆர்,ஓ இருப்பாங்க... நீங்க போங்க... மாடிப்படிகளை நோக்கி விரலை காட்டினாள்...
மனம் இன்னும் வேகமாய் படபடத்தது... மாடிப்படிகளில் ஏறிமுடிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது... கர்சீப்பால் முகத்தை ஒற்றிக்கொண்டு, குறிப்பிட்ட அறையின் முன்பு நின்ற உதவியாளரிடம் விபரத்தை சொல்லி காத்திருந்தான் திலீப்...
“என்ன மகி காலைலேந்து டல்லா இருக்கீங்க? சக மருத்துவரின் அனுமானத்தை கண்டு ஆச்ச்சர்யமானான் மகி...
“ஒண்ணுமில்ல பிரதீப்... ஒரு சின்ன குழப்பம், அதான்..
“என்ன?... உங்க பார்ட்னரோட ஏதும் சண்டையா?
“ஐயோ இல்ல... அப்டிலாம் எதுமில்ல... அவசரமாக மறுத்தான்...
“எல்லாம் தெரியும் மகி... இப்போ தோழர் அமைப்புல எல்லோரும் உங்களைப்பத்திதான் பேச்சு... திலீப் நாயர் கூட அதுல மெம்பர்... சீக்கிரமாவே எங்கேஜ்மன்ட் கூட ஆகப்போறதா கேள்விப்பட்டேன்.. அடப்பாவி... பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி சொல்றானே... மகிக்கு அதிர்ச்சியில் கண்கொட்டவே மறந்துபோனது...
“நீங்க உள்ள போகலாம் உள்ளே நுழைந்தான் திலீப்...
நெற்றி நிறைய விபூதியும், மையமாக குங்கும பொட்டுமாக தும்பைப்பூ வெண்மையில் சட்டையோடு அமர்ந்திருந்தார் ஒரு நாற்பது வயதினர்...
“உக்காருப்பா... தன்னிடம் அலைபேசியில் பேசியதும் இதே குரல்தான்...
தயக்கத்துடன் இருக்கையில் அமர்ந்தான்... “இப்போ முதலாளி கூப்டுவாரு, பார்த்துட்டு வந்திடலாம்... மூக்கின் விளிம்பில் நின்ற கண்ணாடியின் ஊடே திலீப்பை பார்த்து சொன்னார்...
“சரி சார்.. வலமும் இடமுமாக தலையை அசைத்தான்...
“முகத்தை நல்லா துடைச்சுக்கோ... உதடு வறண்டு போயிருக்கு, எச்சிலால ஈரப்படுத்து... தண்ணீ ஏதும் வேணுமா? தண்ணீர் பாட்டிலை நீட்டினார்...
அவசரமாக அதனை வாங்கி, ‘கடக்.. முடக் குடித்தான்...
“ஒன்னும் பதற்றம் வேணாம்... எது கேட்டாலும் ரிலாக்ஸா பதில் சொல்லு, உனக்கு சான்ஸ் கிட்டத்தட்ட உறுதிதான்.. சிரித்துக்கொண்டார்...
அலைபேசியை எடுத்து காதில் வைத்து, எண்களை தட்டினான்...
“மொதலாளி... அந்த பையன் வந்திருக்கான், கூட்டிட்டு வரட்டுங்களா?
“....
“சீரியல் பையனுங்க... வைப்பர் லுங்கி விளம்பரத்துல வர்றவன்...
“....
“சரிங்க... சரிங்க... இதோ கூட்டிட்டு வரேன்.. தொலைபேசியை கீழே வைப்பதற்குள், இருக்கையை விட்டு எழுந்து இரண்டடி நடந்துவிட்டார் பீ,ஆர்,ஓ...
“புதுப்படத்துக்கான டிஸ்கஷன்தான் ஓடிட்டு இருக்காம், உன்ன உடனே மொதலாளி வரச்சொல்றார்... அப்போதுதான் மெலிதாக சகஜ நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த திலீப்பிற்கு, அந்த மனிதரின் பதற்றம் பயத்தை உண்டாக்கியது...
இருவரும் பரபரப்பாக நடக்கத்தொடங்கினார்கள்... திலீப்பின் கண்களுக்கு ஐம்புலன்களும் செயலற்றதை போல இருக்கிறது...
ஒரு அறையின் முன்பு நின்று கதவை தட்டிவிட்டு, திறந்தார் பீ.ஆர்.ஓ... உள்ளிருந்து ஏசிக்காற்று திலீப்பின் முகத்தில் அறைந்தது... உடல் சிலிர்ப்பானது...
சற்றுமுன்பு பார்த்த ஜிகுஜிகு சட்டைக்காரர் ஒருவித அலட்சிய தொனியில் குஷன் நாற்காலியில் சாய்ந்துகொண்டு வலமும் இடமுமாக அசைந்துகொண்டிருந்தார்...  அவர் பின்னாலேயே இரண்டு சூட்டு ஆசாமிகள் சிலை போல நிற்கிறார்கள்... அந்த அறையின் பக்கவாட்டு இருக்கை ஒன்றின் விளிம்பில் தன்னைவிட அதிக பதற்றத்தில் ஒருவர் அமர்ந்திருப்பதையும் திலீப் கவனித்தான்...
திலீப்பை மேலும் கீழும் பார்த்தபடி, “இவன்தானா அது?... விளம்பரத்துல பாத்ததவிட செவப்பா இருக்கான்யா... சிரித்தார்...
“ஒம்பெரு என்னப்பா?
“திலீப் நாயர் சார்...
“நாயரா?... மலையாளத்தானா?... ஆளு கலர பாத்தப்பவே நெனச்சேன்... இருக்கட்டும்... திலீப்பிலிருந்த பார்வை, அமர்ந்திருந்த பதற்ற ஆசாமியை நோக்கி நகர்ந்தது...
“என்னய்யா, ஆளு ஓகே தான?
“இல்லைங்க மொதலாளி... நம்ம படத்துல ரெண்டு ஹீரோதான்..  அதுக்கு ஏற்கனவே அஷ்வினையும், அசோக் செல்வனையும் பேசியாச்சுங்க... தயங்கியபடி சொன்னான் அந்த அப்பாவி இயக்குனர்...
“ஏன்?... மூணு ஹீரோ இருந்தா உங்க கொலசாமிக்கு ஆகாதா?...
“கதைப்படி ரெண்டு ஹீரோதானுங்களே
“கதைப்படி நீதான் டைரக்டரா இருக்கணும்னு கூட அவசியமில்லையே?...
“ஐயோ இல்லங்க மொதலாளி...
“அப்போ கதைல இவன மூணாவது ஹீரோவா போடு... கதை ஒத்துவரலைன்னா கதைய மாத்து. கஷ்டம்னா சொல்லு உன்ன மாத்திடுறேன்... கதையே இல்லைன்னாலும், அதை எப்புடி விளம்பரம் பண்ணி ஓடவைக்கணும்னு எனக்கு தெரியும்...
தலையசைத்து ஆமோதித்தான் இயக்குனர்... அந்த தலையசைப்பிற்கு பின்னே ஒருவித இயலாமையும், “இன்னும் எத்தன ஹீரோக்கள் வரப்போறான்களோ? என்கிற கவலையும் அப்பட்டமாக தெரிந்தது... இந்த விவாதத்தை கவனித்துக்கொண்டிருந்த திலீப்பிற்குதான் பெரிய ஆச்சர்யம்... தனக்கான வாய்ப்புக்காகத்தான் இவ்வளவு வாதமும் நடப்பதை அவனால் இன்னுமே நம்பமுடியவில்லை...
“இந்த பையன பாக்கையில அந்த சபேஷ் சாயல்ல இருந்ததாலதான், நம்ம அடுத்த படத்துல இவனை கண்டிப்பா போட்டே ஆகணும்னு சொல்றேன்... யாரந்த சபேசு?... ரெண்டு வருஷத்துக்கு முன்ன இதே ஆபீஸ்ல கால் கடுக்க காத்துகிட்டிருந்தவன், இன்னிக்கு என் கம்பெனிக்கு கால்ஷீட் இல்லங்குறான்... இவன வச்சு அவன அடிச்சுக்காட்டுறேன்... அருகிலிருந்த உதவியாளன் ஒரு கோப்பையில் வைன் ஊற்றிட, அதனை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கீழே வைத்தார்...

“ஏம்பா, உன் சட்டைய கழட்டு... திலீப்பை பார்த்து சொன்னதும், அவனுக்கு ஒன்றும் புரியாமல் தயக்கத்தோடு சட்டையை கழற்றினான்...
ஏசிக்காற்றால் மயிர்கூச்செறித்தது... சட்டையை கழற்றுவது ஒன்றும் அவனுக்கு பெரியவிஷயம் இல்லைதான்... வைப்பர் லுங்கி விளம்பரத்தில் நூறு பேருக்கு மத்தியில், லுங்கி மட்டும் அணிந்து அமர்ந்திருந்தபோதல்லாம் இந்த கூச்சம் எட்டிக்கூட பார்த்ததில்லை..
“அந்த பேன்ட்டை கொஞ்சம் கழட்டு... அடுத்த கட்டளைதான் அவனை இன்னும் அதிக கலவரமூட்டியது...
“சார்... தயங்கினான்...
“ஒன்னும் பயப்புடாத... படத்துக்கு ஏத்தமாதிரி உடல்வாகு இருக்கான்னு பாக்கத்தான்... ஏதோ ஒரு படத்துல வடிவேலு இடுப்புல துணிய கட்டிக்கிட்டு பெருசா காட்டுவாரே, அப்புடி இருந்துடக்கூடாதுல்ல?... ஹ ஹ ஹா.... அதிரச்சிரித்தார்...
பீ.ஆர்.ஓவை திரும்பிப்பார்த்தான் திலீப்... கடனுக்கு சிரித்துக்கொண்டிருந்தார் அவரும்... திலீப் பார்ப்பதை கவனித்ததும், ‘அவர் சொல்றத செய்! என்பது போல பாவனை செய்தார்...
வேறு வழியில்லை, கழுதைக்கு வாழ்க்கப்பட்டாச்சு.... மறுத்தும் பயனில்லை...
முகத்தில் வருத்தத்தையும் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதால், பொய்யான பொலிவுடன் பேன்ட்டை கழற்றினான்... வெறும் ஜட்டியோடு அந்த தனி அறைக்குள், நான்கைந்து நபர்களுக்கு மத்தியில் நிற்பது தர்ம சங்கடமாக இருந்தது...
திலீப்பை மேலும் கீழுமாக பார்த்த தயாரிப்பு, மையத்தில் மட்டும் சில நொடிகள் நிலைநிறுத்திப்பார்த்தது... அந்த பார்வையின் தாக்கம், அவனை தடுமாற செய்தது...
“சரிதான்யா... கடத்தல் தங்கம் கணக்கா சொலிக்கிறான் பையன்... படத்துல எதுனாச்சும் ஒரு பாட்டுல, இவன் ஜட்டியோட வரணும்... அந்த ஒரு பாட்டு, ஒட்டுமொத்த சபேசு ரசிகர்களையும் இவன்பக்கம் திருப்பனும் பாத்துக்க...
இயக்குனர் அவசரமாக தலையசைத்து ஆமோதித்தான்... கொஞ்சம் தாமதித்தாலும், இயக்குனரை மாற்றிவிடுவார் என்பதால்...
“பழனிச்சாமி, இந்த பையனை ஸ்க்ரீன் டெஸ்ட் ரூமுல இருக்கச்சொல்லுங்க... டெஸ்ட்டு எடுத்துட்டு பைனல் பண்ணிடலாம்...
“சரிங்க மொதலாளி...
உடைகளை அவசரமாக மாட்டிக்கொண்டு, தயாரிப்பாளரிடம் நன்றியை சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறியபோதும் கூட, அப்போதுவரை நடந்தது கனவா? நிஜமா? என்பது புரியவில்லை...
ராயல் ப்ரொடக்சன்ஸ் தயாரிக்குற அடுத்த படத்தோட ஒரு ஹீரோ நானா?... இதுவரைக்கும் நீளமான வசனங்கள், ஷைலஜாவோட அன்புத்தொல்லைகள், கிளிசரின் கண்கள்.... இனி, கேரளத்து நாயகிகளோட டூயட்... எங்க போனாலும், ‘திலீப், திலீப்னு ரசிகர்கள்.. ஒரு நாலஞ்சு வருஷம் நடிச்சுட்டு, அரசியலுக்கு போறதைப்பற்றியும் யோசிக்கணும்... ஒருபடத்துல ஹீரோன்னு சொன்னதுக்கே இவ்வளவு யோசிக்கிறேனா?... அட ஆண்டவா....
“இதுவா சார் ஸ்க்ரீன் டெஸ்ட் ரூம்?  ஆச்சர்யம் விலகாமல் கேட்டான்...
கிரானைட் கற்களை போர்த்திய வெல்வெட் கார்பெட், விலையுயர்ந்த அலங்காரப்பொருட்கள், பார்த்ததுமே படுக்கத்தூண்டும் அழகான மெத்தை... ஜன்னலை மறைத்திருந்த கர்ட்டைனை விலக்கி பார்த்தான், அலுவலக வாசலின் பிரதான வழி... ஆளுயர நின்ற கண்ணாடியின் முன்பு முகத்தை பார்த்துக்கொண்டான்...
“என்ன சார் பதிலே காணும்... இதுவா ஸ்க்ரீன் டெஸ்ட் ரூம்? மீண்டும் கேட்டான்...
“ஆமாமா.. முதல்ல குளிச்சிட்டு இந்த ட்ரஸ்ஸை போட்டுக்கோ... நல்லா நீட்டா மேக்கப் பண்ணிட்டு வெயிட் பண்ணு... மறந்திடாம இந்த பாடி ஸ்ப்ரே போட்டுக்கோ ஒரு வாசனை திரவியத்தை கைகளில் திணித்தார், மல்லிகை வாசனை மூக்கை துளைத்தது....
                                                            ***********
“என்னாச்சு திலீ?... என்ன கேரக்டராம்?.. வீட்டிற்குள் நுழையும் முன்பே இடைமறித்தது கேள்விகள்...
“எல்லாம் ஓகே வாசு... நல்ல ரோல்தான்.. மற்றது எதையும் இப்போ கேட்காத, நான் ரெஸ்ட் எடுக்கணும்... பிடிகொடுக்காமல் குளியலறைக்குள் சென்றான்...
உடலில் இன்னும் அந்த மல்லிகை வாசனை போகவில்லை... குமட்டிக்கொண்டுவந்தது..
ஷவரில் தண்ணீரை திறந்துவிட்டு, வெகுநேரம் அசையாமல் நின்றான்...
“ஐயோ சார் உங்க வயசு என்ன, என் வயசு என்ன?
“சீரியலுக்காக அந்த சைலஜாகூட படுத்தப்போ வயசு தெரியலையா?.. கண்ணை மூடிக்கிட்டு பேசாம படு கொஞ்ச நேரம்
வாந்தி எடுத்துவிட்டான்... உடலும் சோர்ந்துபோனது.. துண்டால் துடைத்துக்கொண்டு வெளியே வந்தவனை வாசு அதிசயமாக பார்த்தான்...
“என்னடா வாமிட் பண்ணியா?... என்ன சாப்ட்ட?
“அசிங்கத்த... அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்...
கண்களை இறுக்க மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தான், கண்ணீர்தான் வந்தது...
“த்தா... என்னடா தின்னு வளர்த்த?... சைலஜா யோகக்காரிதான் போ... என்கூடவே இருந்திடேன், பாதி சொத்தை உம்பேர்ல எழுதி வச்சிடுறேன்...
தலையணையை முகத்தோடு சேர்த்து அழுத்திக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டான்....
பரபரப்பாக உள்ளே நுழைந்தான் மகி... வாசலில் கிடந்த திலீப்பின் செருப்பை கண்டதும், இன்னும் அதிக உற்சாகமானான்...
“எங்க?
“தூங்குறான்...
“என்னாச்சு... என்ன ரோல்?
“அதல்லாம் ஆண்டவனுக்குதான் வெளிச்சம்... ரோல் ஓகே ஆகிடுச்சாம், அதுவரைக்கும்தான் எனக்கு தகவல் வந்துச்சு... ஆளே பார்க்க ரொம்ப டையர்டா இருந்தான், வாமிட் வேற பண்ணிட்டான்... அதான் நானும் தொந்தரவு பண்ணல...
அவசரமாக அறைக்குள் எட்டிப்பார்த்தான்... ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் திலீப், தொந்தரவு செய்ய மனம் வரவில்லை... எழுந்ததும் கேட்டுக்கலாம்...
“மதியம் வந்ததுலேந்து தூக்கம்தான்... அதுவும் நல்லதுதான், நைட்டு தூக்கம் வராதுல்ல கண்ணடித்து சிரித்தான் வாசு...
“ஆமாமா முழிச்சுட்டாலும்... போடா... வெட்கப்பட்டுக்கொண்டான் மகி...
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அறைக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டான் மகி... தூக்கம் களையவே இல்லை..
‘மதியம் சாப்பிட்டானோ என்னவோ? தெரியவில்லை... வாந்தியும் எடுத்துவிட்டான், எழுப்பி ஏதாவது சாப்பிட சொல்லலாமா?திலீப்பின் தலையருகே நின்றுகொண்டே யோசித்தான் மகி... திட்டினாலும் திட்டுவான்... என்ன பண்ணலாம்?.. பரவால்ல, எழுப்பிடலாம்... மெலிதாக திலீப்பின் தோள் மீது கைவைத்து அசைத்தான்...
ஜிகினா ப்ரொட்யூசரும், சைலஜாவும் இரண்டு பக்கங்களிலிருந்தும் துரத்திக்கொண்டிருக்க, ஒரு பள்ளத்தில் இடறி விழுந்தான் திலீப்.. எழமுடியாமல் திகைத்து நிற்க, அவன் தோள் தொட்டு பிடித்து இழுத்தது ஜிகினா...
திடுக்கிட்டு விழித்தான் திலீப்... மகிதான் எழுப்புகிறான்... மற்றவை கனவுதான்...
முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பி வழிய, பேயறைந்ததை போல எழுந்து அமர்ந்தான்...
“என்னாச்சு திலீப்?... ஏன் இப்டி வேர்க்குது?.. உடம்புக்கு என்ன பண்ணுது? நெற்றியில் கைவைக்க, அவசரமாக அந்த கையை தட்டிவிட்டான் திலீப்...
“ஒண்ணுமில்ல... கெட்ட கனவு... எச்சிலை விழுங்கிக்கொண்டான்...
“எதாச்சும் சாப்ட்டு தூங்கலாம்ல?
“இல்ல பசிக்கல.. மீண்டும் படுத்துவிட்டு, வேறுபக்கம் திரும்பிக்கொண்டான்...
காலையில் தூக்கம் களைந்து எழுந்ததும், அவசரமாக அலைபேசியை தேடினான்... நேற்றுகாலை தனக்கு வந்த அழைப்பின் எண்ணை தேடினான்.. பச்சை பொத்தானை அழுத்திவிட்டு, காதில் வைத்தபோது கைகளும் நடுங்கியது...
“ஹலோ ராயல் ப்ரொடக்சன்ஸ்...
“பீ.ஆர்.ஓ பழனிச்சாமி சார் இருக்காங்களா?
“நீங்க யாரு?
“சார்தான் பேசச்சொன்னார்... நான் சீரியல் ஆர்டிஸ்ட்ங்க..
“சரி.. வெயிட் பண்ணுங்க..
நான்கைந்து பீப்களுக்கு பிறகு, ஒரு கரகரத்த குரல் “ஹலோ யாரு? என்றது... பழனிச்சாமியேதான்..
“சார்.. நான் திலீப் நாயர்.. நேத்து வந்தேனே...
“ஹ்ம்ம்.. சொல்லு, என்ன விஷயம்?
“நேத்து ஏன் சார் எதுவுமே சொல்லல... ரொம்ப கஷ்டமா இருக்கு... ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்ல?
“என்ன விஷயம்?னு கேட்டேன்... குரல் கடுமையானது...
“படம் பத்தி ஏதும் சொல்லலையே சார்
“படத்து பேரு களம்... நாளை மறுநாள்தான் பூஜை, மத்ததல்லாம் யூனிட் ஆட்கள் உனக்கு பேசுவாங்க அழைப்பு துண்டிக்கப்பட்டது...
கோபத்தின் உச்சிக்கே போனான் திலீப்... ஒரு சம்பிரதாய அனுதாபத்தோடு கூட பேசாமல், வேண்டாவெறுப்பாக பேசுகிறான்... கையில் வைத்திருந்த அலைபேசியை தூர வீசினான், பேட்டரி கழன்று ஒரு மூலையில் விழுந்தது... அவசரமாக எழுந்து அலமாரியை துழாவினான்... ஒரு வைன் பாட்டிலை வேகமாய் எடுத்து, அப்படியே குடிக்கப்போனான்...
“திலீப்... ப்ளீஸ் அவசரமாக கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினான் மகி...
“என்ன? அனல் பறந்தது...
“குடிக்க வேணாம்னு சொல்லல... நேத்தும் ஏதும் சாப்பிடல, இப்போ வெறும் வயித்துல குடிக்க வேணாம்.. ரொம்ப கெடுதல்..
“கை எடு... உன்கிட்ட நான் மெடிக்கல் அட்வைஸ் கேட்டனா?... உன் வேலைய பாரு அவனை உதறிவிட்டு மூச்சுவிடாமல் நான்கு மடக்குகள் குடித்துவிட்டு நிறுத்தினான்... மகி அங்கேயே அவனைபார்த்தபடி நின்றான்...
“என்ன வேணும் உனக்கு? எரிச்சலோடு கேட்டான்...
“ஏதும் ப்ராப்ளமா?.. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க?
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்.. உன் வேலைய பாரு அங்கிருந்து கடந்து சென்றுவிட்டான்...
ஓரிரு நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டு, உள்ளே ஏதும் நடக்காததை போல வாசுவிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான் மகி...
வாசுவின் மனம் கனத்தது... வேகமாக எழுந்து, அறைக்கதவை ஒரு ‘படார்... கட்டிலில் சாய்ந்தவாறு, ஒருகையில் தலையை பிடித்துக்கொண்டு கண்களை மூடியிருந்த திலீப் திடுக்கிட்டு விழித்தான்... மறுகையில் வைத்திருந்த வைன் பாட்டிலின் பிடி இறுக்கமானது...
“என்ன நெனச்சிட்டு இருக்க திலீப்?... எதுக்கு இப்ப அவன்மேல எரிஞ்சு விழற?
“என் மூட் சரியில்ல வாசு... இப்ப எதுவும் பேசாத, ப்ளீஸ் போய்டு பற்கள் நறநறத்தன..
“உன் மூட் சரியில்லாததுக்கு மகி என்ன பண்ணான்?... கொஞ்சமாச்சும் மனுஷத்தன்மையோட நடந்துக்க...
“ஆமா... நான் மனுஷன் இல்ல... மிருகம்... ரோபோ... உணர்ச்சியில்லாத மிஷின்தான்... போதுமா... என்கிட்டே எதுவும் பேசவேணாம், கெட் லாஸ்ட் மீண்டும் மதுவை இரண்டு ‘மடக்...
“இப்டி சொன்னதும் வாயை மூடிட்டுப்போக என்னயென்ன மகின்னு நெனச்சியா?... இன்னும் ஒரு நிமிஷத்துல அந்த வைன் பாட்டிலை நீ கீழ வைக்கலைன்னா, நான் மனுஷனா இருக்கமாட்டேன் பத்து டெசிபல்கள் சத்தம் கூடியிருந்தது...
60.. 59… 58… 57… 56.. 55…  அந்த பாட்டிலை கீழே வைத்தபோது திலீப்பின் முகம் பதற்றம் குறைந்து காணப்பட்டது... இரண்டு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.. திலீப்பின் அருகில் அமர்ந்தவாறு, அவன் தோள்களை தொட்டு ஆறுதல் படுத்தினான்...
“சாரிடா... கண்ணீர் அரும்பி வழிந்தது...
“இந்த சாரிய மகிக்கிட்ட சொல்லு... அவன் என்னடா தப்பு பண்ணான்?.. ஒவ்வொரு முறையும் அவ்ளோ இன்சல்ட் பண்ற?.. நீயாதான அவன லவ் பண்ண, இப்போ கமலை மறக்க முடியலன்னு சொல்ற... இதுல அவன் தப்பு என்ன?... நாளைக்கி உங்க கல்யாணம்னு அவ்ளோ ஆசையா நைட்டல்லாம் பேசிட்டு இருந்தான், ஒரு நிமிஷத்துல அவன் ஒடஞ்சு போய்ட்டான்..
திலீப் மௌனம் கலைக்கவே இல்லை, இன்னும் குழப்ப ரேகைகள் அவன் முகத்தில் கிளைகள் பரப்பி ஓடின...
“எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு வாய்ப்புதான் கிடைக்கும்... ஆனா நீ இப்போ பண்றத பாக்குறப்போ, ரெண்டாவது வாய்ப்பையும் தவறவிடப்போறியோன்னு பயமா இருக்கு... மகிய விட பெஸ்ட் பேர் உனக்கு கிடைக்காது திலீ, அவன கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு... ப்ளீஸ்... திலீப்பின் கைகளை பிடித்து உருக்கமாக பேசினான்....
திலீப் உடைந்து அழுதான், வாசுவின் கண்களும் குளமாகின...
“இப்போ உனக்கு மகி ப்ராப்ளம் இல்லன்னு நினைக்கிறேன்... வேற ஏதோ சிக்கல் மனசுக்குள்ள ஓடுதுன்னு தோணுது, ஆனா எதையாச்சும் நெனச்சிட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காத... மகிய ஏத்துக்கற மனசை தயார் படுத்திக்கோ... சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான் வாசு...
திலீப் விட்டத்தை பார்த்தபடி படுத்திருக்க, கண்களின் ஓரம் நீர் கசிந்துகொண்டிருந்தது..
“ப்ளீஸ் கமல் என்னைய புரிஞ்சுக்கோ... ஏன் என்னைய அவாய்ட் பண்ற?
“இல்ல திலீப்... இனியும் ஒரு ரோபோவோட வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பமில்ல... ரொமான்ட்டிக் விஷயங்கள் அத்தனையும் உனக்கு டிராமாட்டிக்கா தெரியுது... ஆனா லவ்ல எனக்கு எல்லாமும் வேணும்...
“இல்ல... இனி நீ எப்டி சொல்றியோ அப்டி நடந்துக்கறேன் கமல்...
“ஆர் யூ மேட்?... உனக்கு உணர்ச்சிகள் வரக்கூட, ப்ரோக்ராம் பண்ணனுமா?... ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்டி ப்ரோக்ராம் செஞ்சு மெஷின் கூட வாழ்க்கை நடத்த எனக்கு பிடிக்கல... உன் வாழ்க்கைய நீ பாத்துக்கோ, குட் பை
தலையணையை தூக்கி எறிந்தான் திலீப்... இரண்டு வருடங்கள் ஆகிவிட்டாலும் அந்த வார்த்தைகளின் வெப்பம் தணிந்தபாடில்லை, ஒவ்வொரு நொடியும் சுட்டுக்கொண்டே இருக்கிறது...
‘ரோபோ, மெஷின், மிருகம்... அப்போ நான் மனுஷன் இல்லையா?... ஆமா.. மனுஷனா இருந்திருந்தா ஏன் மகிய அவ்ளோ கஷ்டப்படுத்தப்போறேன்?... என்னைய பிடிக்கலன்னு சொல்றதுக்கு அவன் யாரு?... நான் சொல்றேன், ஐ ஹேட் யூ ப்ளடி பாஸ்டட்... ஐ ஹேட் யூ கமல்.... போய்டு... போய்டு... இனி என் வாழ்க்கைல உனக்கு இடமே இல்ல... தலையணையின் பஞ்சுகள் வெளிவரத்தொடங்கின....
“என்ன மகி ரவுண்ட்ஸ் முடிஞ்சிடுச்சா? பிரதீப் கேட்டான்...
மகியின் நினைவு முழுக்க காலையின் நிகழ்வுகளுக்குள் மூழ்கியிருந்தன...
“ஹலோ...மகி, உங்களைத்தான் தோள் தொட்டு உலுக்கியதும்தான் கவனித்தான்...
“ஹாய் பிரதீப்... வாங்க...
“நான் வந்து ஒரு மாமாங்கம் ஆச்சு, என்ன இன்னிக்கும் பீலிங்கா? சரியா பிரச்சினைகளால் சூழப்பட்ட நேரத்தில் மட்டும் இவனுக்கு எங்கிருந்துதான் மூக்கு வியர்க்குமோ, வந்துவிட்டான் இப்போதும்..
“இல்லப்பா... சும்மாதான்... ஆமா அன்னிக்கே கேட்கனும்னு நெனச்சேன், எங்க விஷயம் எப்டி உங்களுக்கு தெரிஞ்சுது?
“ஹ ஹா... நம்ம உலகம் ரொம்ப சின்னது மகி, அதுவும் திலீப் மாதிரி செலிப்ரிட்டி பத்தின விஷயங்கள்னா இங்க கேட்பரி சாக்லேட் சாப்பிடுற மாதிரி சிரித்தான்...
“அடப்பாவிகளா...
“அதுவுமில்லாம உங்க விஷயத்துல எனக்கு இன்னொரு கூடுதல் தொடர்பும் இருக்கு...
“என்ன?
“திலீப்போட எக்ஸ் லவ்வர் கமல் தெரியுமா?... அவன் என்னோட க்ளோஸ் ப்ரென்ட்... தப்பா நெனைக்கலன்னா ஒன்னு கேட்கிறேன்... திலீப்புக்கு சுட்டுபோட்டாலும் லவ் வராதுன்னு கமல் அடிக்கடி சொல்வான், கொஞ்சம் திமிர்னு வேற கேள்விப்பட்டேன்... கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்ல?
அலட்சியமாக சிரித்த மகி, “சுட்டுப்போட்டா காதல் வராது சார், ரத்தம்தான் வரும்.. அதப்பத்தி நீங்க கவலைப்பட வேணாம்.. ஒன் மோர் திங், நாளைக்கு எனக்கும் திலீப்புக்கும் என்கேஜ்மன்ட்... அதை உங்க நண்பருக்கும் சொல்லிடுங்க... சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்...
                     

‘திலீப் சாப்பிட்டிருப்பானா?’, ‘என்ன ப்ராப்ளமா இருக்கும்?, ‘இப்போ நார்மல் ஆகிருப்பானா? குழப்பமான கேள்விகளோடுதான் கதவைத்திறந்து உள்ளே நுழைந்தான் மகி... வீடே புயலுக்கு பின்னான அமைதியில் ஆழ்ந்திருந்தது.. வாசு வழக்கம்போல உறங்கிக்கொண்டிருக்கிறான்... நடக்கும் சத்தம் கூட அதர்ந்து கேட்டிடாத வகையில், அடிகளை அளவெடுத்து வைத்தபடி அந்த அறைக்கதவை திறந்தான் மகி...
தலையணையை இரண்டாக மடக்கி தலைக்கு வைத்தபடி படுத்திருக்கிறான் திலீப்... கைகளில் அலைபேசி, விரல்கள் விளையாடிக்கொண்டிருக்கிறது... காலையில் தென்பட்ட கோபம் இல்லை என்றாலும், மெலிதான சோகம் இன்னும் அப்பிக்கொண்டிருக்கிறது... மகியை பார்த்ததும் எழுந்து அமர்ந்துகொண்டான்...
‘சாப்டியா?ன்னு கேட்கலாமா? யோசித்தான்.. வேண்டாம், அது எனக்கு தேவையில்லாத விஷயம்னு சொல்லிடுவான்... வேகமாக சமையலறைக்குள் சென்று கழுவாத பாத்திரங்களை துழாவினான், திலீப்பின் தட்டும் இருந்தது... மனதிற்குள் ஒரு தற்காலிக நிம்மதி... முகம் கழுவிவிட்டு அறைக்குள் சென்று உடைமாற்றிக்கொண்டான், திலீப்பின் கருவிழிகள் இரண்டும் வலது ஓரத்திற்கு தஞ்சம் புகுந்தது...
மேசை மீது கிடந்த விகடனை புரட்டிக்கொண்டே அந்த கட்டிலின் மறுபுறத்தில் படுத்துக்கொண்டான் மகி.. திலீப் மகியையே வைத்த கண் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தான், ‘கோபமாக இருக்கானோ? சந்தேகம் வலுவடைந்துகொண்டே இருக்கிறது...
கோபமாகத்தான் இருப்பான்... மன்னிப்பு கேட்டிடலாமா?... இத்தனை வருடங்களாக நீர் ஊற்றி வளர்த்துவைத்திருக்கும் அந்த ஈகோ தயங்கச்செய்தது... நான்கு முறை, ‘ம்.. ம... ம்ம என்று சொன்னதோடு பேச்சு வராமல், மூச்சை ஆழமாக இழுத்துக்கொண்டு தனது முயற்சியில் பின்வாங்கிவிட்டான்...
ஐந்தாவது முறை, “மகி.. அழைத்துவிட்டான்...
நிஜமாகவே அழைத்தானா?, இல்லை அசரிரீ எதுவுமா? என்கிற குழப்பத்தோடு திலீப்பின் பக்கம் திரும்பினான் மகி...
“கூப்டியா?
“ஹ்ம்ம்... ஆமா... எச்சில் தொண்டைக்குழிக்குள் இறங்க தடுமாறியது...
“சொல்லு திலீப், என்ன?
“அது... காலைல நான் அப்டி பேசிருக்கக்கூடாது... அது அப்போ இருந்த டென்ஷன்ல... அதனால... உன்கிட்ட... அதுவந்து வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று ஒட்ட மறுத்தன...
“இப்ப என்ன சாரி சொல்லனுமா? உடைத்துவிட்டான்...
“ஹ்ம்ம்.. தலையை குனிந்துகொண்டான் திலீப்...
“உனக்கு அதல்லாம் செட்டாகாது மாமா... நீ எப்பவும் அப்புடியே இரு... உன்மேல நான் கோபப்படுவேனா?... உன்னோட அந்த திமிர்தான் மாமா அழகே... கன்னத்தை கிள்ளினான்...
திலீப்பின் முகம் சிவந்தது... கிள்ளியதால் அல்ல, வெட்கத்தால்...
“இல்ல மகி.. தப்பு என்மேலதான்... எனக்கிருந்த டென்ஷன்ல என்ன பேசுறேன்னே தெர்ல... அதான்... குற்ற உணர்ச்சி இன்னும் அவனுள் உறுத்தியது...
“அதான் சொல்லிட்டியே மாமா... ப்ரீயா விடு...  நாளைக்கு கல்யாணம் ஓகேதான மாமா?
“ஓகேதான்... ஆனா...தயங்கினான்..
“என்ன மாமா இழுக்குற? முகம் சோர்வானது...
“இல்ல மகி, இப்போ கல்யாணம் அவசியமா?
“பின்ன எப்போ பண்ணிப்பியாம்?பொய்யாக கோபம் கொண்டான்..
“இன்னும் நம்ம நாட்ல சட்டப்படியே நம்மள ஏற்கல... அதனால ஒரு சம உரிமை கிடைக்குற வரைக்கும்...
இடைமறித்த மகி, “அதுவரைக்கும் காத்திருந்தா அனேகமா ஒரு எழுபது வயசுல நம்ம கல்யாணம் நடக்கலாம்... நான் உன்ன ரெஜிஸ்டர் ஆபிஸ்லையா கல்யாணம் பண்ண சொல்றேன்... எங்கயாச்சும் ஒரு கோவில்ல, நாம ரெண்டு பேர் மட்டும் போய் சாமி கும்பிட்டுட்டு மோதிரம் மாத்திக்கலாம்ல?
“அதுக்கு பேரு கல்யாணமா?
“அதுக்கு பேரும் கல்யாணம்தான்...
“இப்பவே நீயும் நானும் தம்பதிகள்தான?... இதை மோதிரம் மாத்திகிட்டாதான் நம்புவியா?
“இது நம்பிக்கைக்காக இல்லை... உன்மேல நம்பிக்கை இல்லாமலா வீட்டைவிட்டு வெளில வந்தேன், இது என்னோட மன திருப்திக்காக மாமா... ஒரு அளவில்லாத சந்தோஷத்துக்காக.... வேண்டாம்னு சொல்லிடாத மாமா கைகளை பிடித்துக்கொண்டு கேட்டான்... திலீப்பால் அதற்குமேல் தர்க்கரீதியான காரணங்கள் சொல்லி மறுக்க மனமில்லை...
“சரி என அவன் தலையசைத்த மறுநொடி, மகியின் முகத்தில்தான் வெள்ளியின் வெளிச்சம்... கற்பனை குதிரைகளில் ஏறி, கனவுலகில் மிதக்கத்தொடங்கினான்... திலீப் சொன்னபடி, நாளைக்கு செய்துகொள்ளப்போகிற ‘மோதிர மாற்றுதல் நிகழ்வு ஒன்றும் அவர்கள் வாழ்க்கைக்குள் புதுமையை புகுத்திவிடாது என்பதை மகியும் அறிவான்... என்றாலும் கூட அற்ப ஆசைகளுக்கு எப்போதுமே இந்த மனசு ஏங்கித்தான் கிடக்கிறது...
“என்ன நான் உள்ள வரலாமா? அறைக்கதவின் மறுபுறத்திலிருந்து வாசுவின் குரல் ஒலித்தது...
“அதான் ஒட்டுக்கேட்டுட்டல்ல, பின்ன என்ன கேள்வி இது? எழுந்து சென்று கதவைத்திறந்தான் மகி...
“இருந்தாலும் இங்கிதம்னு ஒன்னு இருக்குல்ல? கட்டிலில் அமர்ந்துகொண்டான் வாசு...
“அந்த இங்கிதம் நாங்க பேசுறத ஒட்டுக்கேக்கும்போது எங்கபோச்சு?
“தலப்பாக்கட்டு பிரியாணி வாங்க கடைக்கு போச்சு... நீங்க பேசுறதுதான் ஊருக்கே கேட்குதே, இதுல நாங்க ஒட்டுக்கேட்கனுமாக்கும்?..  சரி எனக்கு எப்போ ட்ரீட் மகி?
“தந்துட்டா போச்சு, இது ஒரு மேட்டரா?... நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு, கல்யாணம் முடிஞ்சப்புறம் உனக்கு எங்க வேணுமோ, அங்க ட்ரீட்... வாசுவின் கன்னத்தை கிள்ளினான்...

                                                                       *************
காலை முதலாகவே பரபரப்பாக காணப்பட்டான் மகி... இருவீட்டார் சம்மதத்தோடு, சுற்றமும் நட்பும் சூழ நடக்க இருக்கிற திருமணத்தின் அளவிற்கான ஒரு பதற்றம் அவனுக்குள்... அவற்றை ரசித்தபடியே திலீப்பும் கிளம்பிக்கொண்டிருந்தான்...
“ஏன் பதட்டம்? என கேட்க விரும்பவில்லை... கேட்டால் அதற்கும் ஏதோ ஒரு உணர்வு ரீதியான விளக்கம் சொல்லி, வாயை அடைத்துவிடுவான்...
வடபழனி முருகன் கோவிலில் இருவரும் ஒருவருக்கொருவர் நேரெதிரே நின்று, மோதிரங்களை விரல்களில் மாற்றிக்கொண்டபோது மகியின் கண்கள் கலங்கியிருந்தது... வாசு அரைகுறையாக தப்பும் தவறுமாக, “மாங்கல்யம் தந்துனானேனா பாடினான்...
“முருகன் தமிழ்க்கடவுள்... நீ தமிழ்ல்லையே வாழ்த்து சொல்லு வாசு மகி இடைபுகுந்தான்...
“ஹலோ மிஸ்டர்... நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது திலீப் நாயரை.. நாயர்... நாயர்... நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.. அதனால தமிழ் உணர்வுகள கொஞ்சம் கட்டுப்படுத்திக்கோ.. சிரித்தான்...
“ஏய், என் மாமா தஞ்சாவூர்க்காரன்... பச்சை மஞ்சள் செகப்பு தமிழன் அவன்..சூழல் கலகலப்பானது..
அர்ச்சனை பையுடன் நான்கைந்து பெண்கள் அவர்களை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தனர்... அவர்கள் அநேகமாக திலீப்பின் சீரியல் ரசிகர்களாக இருக்கக்கூடும்... அவர்களுள் ஒருத்தி, “ஷூட்டிங்தான் போலடி... அங்க பாரு கேமரா கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை நோக்கி விரல்களை நீட்டினாள்...
“காகித கப்பல் ஷூட்டிங் போல... இப்புடி பையனோட நிக்குற சீனைத்தான், கிராப்பிக்ஸ்ல சைலஜா நிக்குற மாதிரி மாத்தி போடுவாங்களாம்... எங்கண்ணன் ஒருக்கா சொன்னுச்சுஅறிவியல் தொழில்நுட்ப விளக்கம் கொடுத்தது ஒரு பச்சை சேலை...
அதற்குமேலும் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தால், கூட்டம் கூடிவிடும் என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டனர் மூவரும்...
உண்ட மயக்கம் மிகுதியானதால் உடைகூட மாற்றிடாமல் தரையில் மல்லாந்து படுத்தான் வாசு... அவன் அருகே சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்து நாளிதழால் முகத்தில் விசிறிக்கொண்ட மகியின் முகம் பதற்றம் குறைந்து, உற்சாகம் நிறைந்திருந்தது...
“ஹப்பா... நல்ல சாப்பாடுடா, வயித்துக்குள்ள கோழியும் ஆடும் மாறி மாறி கத்துறாப்ல ஒரு பீலிங் சிரித்துக்கொண்டான் வாசு...
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாசு, இப்டி ஒரு நாள் என்னோட வாழ்நாள் கனவுடா...
“கேட்குறேன்னு தப்பா நினைக்காத, நிஜமாவே உனக்கு சந்தோஷமா?... ஒருவேள உங்க குடும்பம், சொந்தங்கள், நண்பர்கள்னு எல்லாம் வந்து நின்னு இப்டி ஒரு கல்யாணம் நடந்திருந்தாதான அது நிறைவா இருந்திருக்கும்? சிரமப்பட்டு எழுந்து மகியின் அருகில் அமர்ந்துகொண்டான்...
“அவங்கல்லாம் இருந்தாதான் சந்தோஷமா இருக்கனுமா என்ன?... நீ சொல்ற அத்தனை பேரும் அரைமனசோட வந்து நிக்குறதுக்கு பதிலா, நாங்க நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்துர ஒரு நபர் கூட இருந்தாவே அது நிறைவான கல்யாணம்தான் வாசு.. உருக்கமாக சொன்னான் மகி...
“ஓ... அப்டி யாரும் வந்தாங்களா என்ன? நிஜமாகவே யோசிக்கத்தொடங்கினான் வாசு...
மகியின் முகம் சிறுத்தது, பற்களை நறநறவென கடித்துக்கொண்டே வாசுவின் தலையில் நறுக்கென ஒரு கொட்டுவைத்தான்... “எரும எரும... உன்னத்தான் சொல்றேன் எரும...
தலையை விரல்களால் தேய்த்துக்கொண்டே, “ஐயோ சாரிடா... கண்டதையும் சாப்பிட்டதுல பிரைன் கொஞ்சம் ஜாம் ஆகிடுச்சு... ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ சொல்றத கேக்குறப்போ உருகினான்...
“சீரியல் சாயந்திரம் ஆறு மணிக்குதான ஆரமிப்பாணுக, வசனம் மட்டும் இப்பவே கேட்குது? அறைக்குள்ளிருந்து சிரித்துக்கொண்டே வெளிவந்தான் திலீப்... குளித்துவிட்டு தலையை துவட்டிக்கொண்டே வரும்போது, சோப்பின் நறுமணம் மகியை சொக்கவைத்தது...
“உங்க சீரியல்ல எப்போடா இப்டி உணர்வுப்பூர்வமா சீன்ஸ் வந்துச்சு?... பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாம பார்த்தா, ‘சிரிச்சா போச்சு டீம் பண்றதவிட காமெடியா தெரியும்... சிரித்தான் வாசு...
“ஏய் மாமாவ கிண்டல் பண்ணாத... மாமா, ஈவ்னிங் பீச் போலாமா? திலீப்பிடம் ஆர்வமாக கேட்டான்..
நேரத்தைப்பார்த்தான் திலீப், நான்கு மணி... காலை முதல் அலைந்ததில் உடல் சோர்ந்து போயிருந்தது, கண்களும் தூக்கத்திற்கு ஏங்கியது... மறுத்தாலும் அவன் மனம் சங்கடப்படும்... என்ன சொல்லலாம்? தடுமாறினான்....
“இல்ல வேணாம் மாமா... ஆள் பார்க்கவே ரொம்ப டையர்டா இருக்க, நீ ரெஸ்ட் எடு... இன்னொருநாள் பார்த்துக்கலாம்... மனதில் நினைத்ததை சரியாக ஊகித்துவிட்டான், நிஜமாகவே வாசு சொன்னதைப்போல மகி ஒரு சிறந்த துணைவனா இருப்பான்னுதான் தோன்றியது...
“ஏய், இங்க பாரு... திலீப் சொன்ன களம் படத்தை பத்தி பேப்பர்ல விளம்பரம்... எதேச்சையாக கண்களில் தென்பட்ட அந்த விளம்பரத்தை ஆர்வமாக பிரித்துப்பார்த்தான் வாசு... ஒரே பாய்ச்சலில் வாசுவின் அருகில் சென்ற மகி, பரபரப்பாக அதனுள் மேயத்தொடங்கினான்...
“பார்த்தியா மகி எவ்ளோ லக்கின்னு?.. கல்யாணம் ஆன முதல் நாளே நீ நடிக்கப்போற படத்தோட விளம்பரம்... வாசு சொல்லும்போது திலீப்பின் எண்ணங்கள் வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்தது... பீஆர்ஓ சொன்னபடி ஏன் இன்னும் யூனிட் ஆட்கள் பேசவில்லை?... பூஜைக்கு கூட அழைப்பில்லையே?...
அஷ்வினும், அசோக் செல்வனும் எதிரெதிரே நின்று கேமராவின் பக்கம் திரும்பிபார்த்தபடியான ஸ்டில்... அதன் மேலே கொட்டை எழுத்துகளில், ‘ராயல் ப்ரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும்... அடைமொழியோடு, கிறுக்கலான எழுத்துகளில் ‘களம் என்று திரைப்படத்தின் பெயர்... ‘நாளை இனிதே படப்பிடிப்பு தொடக்கம்...
படத்தின் நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள்வரை அத்தனை பெயர்களையும் ஒவ்வொன்றாக கவனத்துடன் படித்துப்பார்த்தான் மகி... மூன்றாவது கதாநாயகனின் பெயர், அந்த பட்டியலுக்குள் இருந்திடாது என்று தெரிந்தும் கூட, ஒரு அற்ப ஆசை...
என்னாகிருக்கும்?... ஏன் திலீப்பின் படம் இல்லை, பெயர் கூட இல்லையே?... கேட்கலாமா? வேண்டாமா? குழப்பத்தோடு திலீப்பை நிமிர்ந்து பார்த்தான்.. அவனும் அதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கக்கூடும்....
“அப்புறம் என்ன? மகி வந்த நேரம், எல்லாம் சுபம்தான் நேரம் காலம் புரியாமல் உளறிக்கொண்டிருக்கிறான் வாசு... அவன் கைகளை பிடித்து அழுத்தி, காதருகே ரகசியம் போல, “திலீப் பேரு இல்ல... கிசுகிசுத்தான்...
எதிர்பார்த்தபடியே, “என்ன திலீப் பேரு இல்லையா? சத்தமாக எதிர்வினை புரிந்துவிட்டான்... பாவி, ரகசியத்தைக்கூட தண்டோரா போடுகிறான்...
திலீப் அவர்களை திரும்பிப்பார்த்துவிட்டு, பெரிதாக ஆச்சர்யம் அடையவில்லை.. எல்லாம் நேற்றே அடைந்து முடிந்தாகிவிட்டது என்பதால், ஒரு இயலாமையோடு மட்டும்தான் அவர்களை பார்த்தான்...
“என்னடா கேரக்டர் கன்பார்ம்னு சொன்ன, இதில அப்டி தெரியலையே? வாசு கேட்டுவிட்டான்..
திலீப் அமைதியாவே இருந்தான்... எதை சொல்வது, எதை விடுவது? என்கிற தடுமாற்றம் அவனுக்குள்..
“நேத்திலேந்தே ஏதோ ஒரு குழப்பத்துலையே இருக்க மாமா.. என்னன்னு சொன்னின்னா, ஏதோ எங்களுக்கு தோனுற யோசனை சொல்வோம்ல... அட்லீஸ்ட் ஷேர் பண்றதால உன் கவலையாச்சும் குறையும்..
சில நிமிட யோசனைகளுக்கு பின் “இல்ல... நேத்து கால் வந்ததும் ப்ரொடக்சன் கம்பெனி போனேன்ல, அப்ப தயக்கத்தோடு தொடங்கி, அத்தனை விஷயங்களையும் இம்மி பிசகாமல் சொல்லிமுடித்தான் திலீப்... மகியின் கண்களில் நீர் சுரந்துவிட்டது.. ‘இவ்ளோ கஷ்டத்தையும் மறைச்சுட்டா இன்னிக்கு சந்தோஷமா இருக்க மாதிரி நடிச்சான்! அழுதுவிடுவான் போல...
“அடப்பாவிகளா... மனுஷனா அவனுக?... சும்மாவா விட்ட, உன் செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்திருக்க வேண்டியதுதான?... வாசு கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டான்...
“இல்லடா... அவசரப்படக்கூடாது... அட்லீஸ்ட் வர்ற வாய்ப்பையாவது பயன்படுத்திக்கணும் அலைபேசியை காதில் வைத்து நிறுவனத்தின் எண்ணுக்கு அழைத்தான், “நான் திலீப் நாயர் பேசுறேன்... பீ.ஆர்,ஓ சார் பேச சொன்னாருங்க...மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது..
“போனை கட் பண்ணிட்டாங்களா? மகி கேட்டான்...
“ஹ்ம்ம்.. நான் நேரவே போய் கேட்டுக்கறேன்... உடைமாற்ற ஆயத்தமானான் திலீப்...
“இல்ல மாமா... நீ நேரா போனாலும், இதே புறக்கணிப்புதான் கிடைக்கும்...
“அப்போ பேசாம இருக்க சொல்றியா?.. சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ, அந்த காட்டுப்பன்னிய நாலு அடியாச்சும் அடிக்கணும் வாசுவால் நிதானிக்கவே முடியவில்லை...
“இப்டி அவசரப்பட்டா எல்லாம் ஸ்பாயில் ஆகிடும்... நாளைக்கு பூஜை இருக்குல்ல, அங்க போய் அவங்ககிட்ட பேசிக்கலாம்...
“தனியா பாக்குறப்போவே கண்டுக்காதவணுக, அவ்ளோ கூட்டத்துலையா பதில் சொல்ல போறானுக? திலீப் ஆற்றாமையோடு சொன்னான்...
“அதை நான் பார்த்துக்கறேன் மாமா... உனக்கு அவனுக சொன்ன லீட் ரோல் உண்டு, மத்ததை நாளைக்கு பார்த்துக்கோ திலீப்பின் கை பிடித்து நம்பிக்கையாக சொன்னான்... அது நடக்குமா இல்லையா? என்ற சந்தேகக்கேள்விகள் இப்போது திலீப்பிற்கு எழவில்லை... மகி சொல்லும்போது அவன் வார்த்தைகளில் ஒரு உண்மை தெரிந்தது, அந்த நம்பிக்கையில் அதைப்பற்றி மறந்தே போனான்..
அந்த பிரம்மாண்ட திருமண மண்டபத்தை சுற்றி ஆளுயர நின்ற விளம்பர தட்டிகளில் அஸ்வினும், அசோக் செல்வனும் சிரித்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் விதவிதமான போஸ்களில் அட்டகாசமாய் நிற்க, ‘களம் அவர்கள் காலடிகளில் கிடந்தது... மண்டப வாசலில் கேரளத்து செண்டை மேளங்கள் முழங்கிக்கொண்டிருந்தன... வாயிலில் நின்று, “அந்த ஸ்க்ரீனை கொஞ்சம் கீழ இறக்கிக்கட்டு பரபரப்பாக காணப்பட்டார் பீஆர்ஓ பழனிச்சாமி... திலீப்பிற்கு அந்த தளத்தில் பரிச்சயமான ஒரே முகம்..
அவர் அருகில் சென்று சிரமப்பட்டு சிரித்தான்.. அவர் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி, மறுகணமே அதனை மறைத்துக்கொண்டார்...
“சார்... நான் திலீப்.. அவசியப்படாத அறிமுகம்...
“வா வா.. உள்ள போய் சாப்டுப்பா... சொல்லிவிட்டு, இடதுபக்கமாக திரும்பி,  “ஏய் யாரு அங்க?, அந்த வண்டிய ஓரமா நிறுத்த சொல்லுகடந்து சென்றுவிட்டார்...
முகம் நிறைந்த சோகத்தோடு மகியை பார்த்தான் திலீப்..
“கூல்டா... பூசாரி கண்டுக்கலைன்னா என்ன?, சாமி வரம் கொடுக்கும் போஅந்த கொடூரனை ‘சாமியென சொன்ன சில வினாடிகள் மட்டும், மகி நாத்திகனாகிவிட்டான்...
உள்ளே எதிர்கொண்ட பெரும்பாலான முகங்கள் எப்போதோ ஒருமுறை திரையில் பார்த்ததாக தோன்றியது.. அதனுள் ஏதேனும் ‘தேஜா வூ, ஜமாய் யூவிஷயங்கள் பொதிந்து இருக்குமா? என்றும் தெரியவில்லை...
மேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் பல்வேறு சினிமா பிரபலங்கள் அமர்ந்திருந்தனர்... இருபுறமும் ஏற்றப்படாத ஆளுயர வெள்ளி குத்துவிளக்குகள், ராசியான கைகளுக்காக காத்திருந்தன...
திடீரென வாசலிலிருந்து ஒரு பரபரப்பு... ‘மொதலாளி வர்றாரு நடுநாயக மேடை ஒன்று தயார் படுத்தப்பட்டது... வாயிலிலிருந்து உள்ளே வரும் பாதையை இறுக்கமான கருப்பு டீ ஷர்ட் ஸ்டன்ட் யூனியன் ஆட்கள் சரிபடுத்த, பட்டு ஜிப்பா பளபளக்க உருண்டு வந்தார் தயாரிப்பாளர்.. அவர் பின்னால் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியும், இரண்டு பதின் வயது பிள்ளைகளும் உடன் வந்தனர்...
இடமும் வலமுமாக திரும்பி வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தவர், தன்னை நோக்கி கை அசைக்கும் திலீப்பை பார்க்க தவறவில்லை... சடாரென மின்னலாக ஒரு அதிர்ச்சி, ஆனால் வெளிக்காட்டவில்லை... அவனை கண்டுகொள்ளாததைப்போல, கடந்து மேடைக்கு சென்றார்...
“இவரும் பார்த்துட்டு கண்டுக்கல மகி சோகமாக சொன்னான்...
“சரி.. நீ எங்கயும் போகாம, இங்கயே இரு.. நான் கொஞ்சம் விளையாண்டு பார்க்குறேன் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகி பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் நுழைந்துவிட்டான் மகி...
ஆற்றாமையோடு மேடையில் பேசிக்கொண்டிருந்த பிரபலங்களை கவனித்துக்கொண்டிருந்தான் திலீப்... தயாரிப்பாளரின் மனைவி, கேரளத்து நாயகி உதிஷா என மங்களகரமான கரங்கள் விளக்கேற்ற, விநாயகரை வணங்கி பூஜையும் போடப்பட்டது... முகமெல்லாம் பற்களாக சிரித்துக்கொண்டிருந்த தயாரிப்பு, அவ்வப்போது வேறுபக்கம் திரும்புவதைப்போல திலீப்பை கவனிக்க மறக்கவில்லை..
இறுதியாக பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கத்தொடங்கியது, திலீப்பின் நம்பிக்கைகள் க்ரிட்டிக்கல் அளவிற்கு கீழே சென்றிருந்தது...
“அதென்ன சார் படத்துக்கு பேரு களம்?... எதுவும் யுத்தம் பற்றிய கதையா?
“ஆமா... இது காதல் யுத்தம்... ஒரு பொண்ணை ரெண்டு பேரு லவ் பண்றாங்க, அப்போ அது யுத்தம்தான? அலட்சியமாக சிரித்தார் தயாரிப்பு...
“தொடர்ந்து நாலு படங்கள் ஹிட், ஏன் திடீர்னு இப்போ புதுமுக இயக்குனர்?
“யாருமே இங்க பழசில்ல தம்பி, எல்லாரும் புதுசுதான்... நான் உறுதியா சொல்றேன், மத்த நாலு படத்தையும்விட இது சூப்பர் டூப்பர் ஹிட்டா வரும் பாருங்க அருகில் அப்பாவியாக அமர்ந்திருந்த இயக்குனரின் தோள் மீது கைபோட்டுக்கொண்டு சொன்னார்...
“உங்களுக்கும் சபேஷுக்கும்...
“அதல்லாம் ரூமர்ப்பா... வேற கேள்வி அவரசமாக மறுத்தார்...
“உங்க ஆபிஸ்ல ஸ்க்ரீன் டெஸ்ட் ரூம்லதான் எல்லாம் நடக்குறதா... கூட்டத்திற்குள்ளிருந்து ஒரு குரல்...
தயாரிப்பாளரால் அடையாளம் காணமுடியவில்லை... சட்டென முகத்தில் வியர்வை அரும்பியது, கண்களில் ஒரு மிரட்சி...
“நான்தான் சார் கேட்டேன்.. நீங்களே ஆர்டிஸ்ட்களுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டேன் இயல்பாக கேட்டான் மகி...
“சாப்ட்டதும் டேப்லட் போட மறந்துட்டேன், போட்டுட்டு வந்திடுறேன் அவசரமாக எழுந்து அங்கிருந்து வெளியேற முற்பட, சிறிதுநேரம் அங்கு சலசலப்பு உண்டானது...
“என்னங்க?... என்னாச்சு?... மயக்கம் எதுனா வருதா? மனைவி பரபரக்க, அவர் கண்கள் மட்டும் மகியை தேடியது... எதிர்பார்த்ததை போல மகி ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்...
“என்ன?... என்ன கேட்ட? வார்த்தைகள் குழறின...
“கேள்விப்பட்டதைதான் சார் கேட்டேன்... இது மட்டுமில்ல, உங்களுக்கு சபேஷ் டைம் பாமே வச்சு காத்துகிட்டு இருக்கார்... அளக்கத்தொடங்கினான் மகி...
“சபேஷா?... அவனுக்கு என்ன?


நீங்க இதுவரைக்கும் சினிமா சான்ஸ் தர்றதா சொல்லி எத்தன பேரை தப்பா அப்ரோச் பண்ணிங்க, அவங்களயல்லாம் எப்டி யூஸ் பண்ணிகிட்டிங்கன்னு அத்தனை தகவலும் வச்சிருக்கார்... இப்போ கடைசியா யாரோ ஒரு சீரியல் ஆர்டிஸ்ட்கிட்ட ஹீரோ சான்ஸ் வாங்கி தர்றதா ஏமாத்துனது வரைக்கும் ஆதாரம் வச்சிருக்கார்... அந்த சீரியல் ஆர்டிஸ்ட் கிட்ட இப்போ ஒரு பேரம் கூட பேசிட்டு இருக்கார்.. உங்களைப்பத்தி உன்மைகள மீடியா முன்னாடி சொன்னா, அந்த பையனுக்கு அவர் படத்துல நல்ல ரோல் தரேன்னு சொல்லிருக்காராம்...
சில வினாடிகள் யோசிப்புகளுக்கு பின், “ஆமா.. நீ யாரு?... உனக்கெப்டி இதல்லாம் தெரியும்? உஷார் ஆனார்...
“டெக்கான் கிரானிக்கல் சிட்டி ரிப்போர்ட்டர் நான்...
“அப்டின்னா?
“பத்திரிகைக்காரன் சார் சட்டைப்பைக்குள்ளிருந்து ஒரு அட்டையை அவர் கண்முன் நீட்டினான்... அதை வாங்கி தலைகீழாக பிடித்தபடி, படிப்பதை போல பாவனை செய்துவிட்டு திருப்பிக்கொடுத்தார்...
“உனக்கு எப்டி இதல்லாம்?பயம் முழுமையாக அவர் கண்களில் தெரிந்தது..
“எங்க அண்ணன்தான் சபேஷ் கிட்ட மேனேஜரா இருக்கார், அவர் சொல்லிதான் தெரியும்.. இதை சொன்னா எதாச்சும் கவனிப்பிங்கன்னுதான்.. தலையை சொரிந்துகொண்டான்...
“சரி சரி... இதப்பத்தி யார்கிட்டயும் பேசிடாத... நாளைக்கு ஆபிஸ் வா, பாத்துக்கலாம் கன்னங்களை தேய்த்தபடி யோசித்தார் தயாரிப்பு... ‘அந்த சபேஷ் அவ்வளவு தூரத்துக்கு போயிட்டானா?... விடக்கூடாது, கவனிச்சுக்கறேன்... அதுக்குமுன்ன இப்போ நம்ம பிரச்சினைய எப்டி தீர்க்குறது?சற்று தூரம் நடந்துவந்து கூட்டத்திற்குள் யாரையோ தேடினார்...
திலீப்பை பார்த்ததும் கை அசைத்து, தன்னருகே வருமாறு சைகை செய்தார்...
பத்திரிகையாளர் சந்திப்பில் ஏதோ ஒரு கிசுகிசு கேள்விக்கு அசோக் செல்வன் மறுத்துக்கொண்டிருக்க, இடை புகுந்தார் தயாரிப்பு...
தன் இடதுபுறம் திலீப்பின் தோள் மீது கைபோட்டபடியே, வலது கையில் மைக்கை பிடித்துக்கொண்டு, “உங்க எல்லாருக்கும் ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்தனும்... இவர்தான் திலீப் நாயர், இந்த படத்தோட மூணாவது ஹீரோ சத்தமாக சொன்னார்...
இயக்குனர் மிரட்சியோடு பார்த்தான், கதைக்கு எங்க போறது? என்று யோசிக்கத்தொடங்கினான்...
“இவர் சீரியல் ஆர்டிஸ்ட் ஆச்சே?.. என்ன சார் திடீர் முடிவு?
“கதைக்கு மூணாவது ஹீரோ ரொம்ப தேடி அலைஞ்சோம், இப்போ தம்பிய பார்த்ததும் நம்ம டைரக்டர்தான் கதைக்கு செட்டாகுவாப்லனு சொன்னார்... அதான் முடிவு பண்ணிட்டேன்... தம்பி என் பிள்ளை மாதிரி, அதாவது என் மகன் மாதிரின்னு தெளிவா எழுதிக்கோங்க ஒரு பட்டு சால்வையை எடுத்து திலீப்பிற்கு போர்த்திவிட்டு, புகைப்படங்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார் தயாரிப்பு...
“போகும்போது கால் டாக்சி, இப்போ யூனிட் அனுப்பின ஏசி கார்... களம் படத்தோட ஹீரோ பக்கத்துல நான்... ரொம்ப சந்தோஷமா இருக்குடா மகியின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது..
திலீப் இருக்கையில் தலை சாய்த்தபடி, கண்களை மூடியிருந்தான்.. நடந்தவை எதையுமே இன்னும் நம்பமுடியவில்லை... கண்களை திறந்து கார் கண்ணாடி வழியே சாலையை பார்த்தான்... மாஸ் திரையரங்கம், ராயல் ப்ரொடக்சன்ஸ் கடைசியாக எடுத்த திரைப்படத்தை நூறு நாட்கள் கடந்து திரையிட்டுக்கொண்டிருந்தது... ‘நாளைக்கு என் படமும் இங்கே ஓடும், எனக்கும் ப்ளெக்ஸ் வச்சு ரசிகர்கள் கொண்டாடுவாங்க!மனதிற்குள் பனிக்கட்டி சிலிர்த்தது...
“ரொம்ப தாங்க்ஸ் மகி மகியின் கையை பிடித்து அழுத்தினான்...
“ம்க்கும்... எனக்கு தாங்க்ஸ் சொல்லனுமா?... பொய்யாக கோபித்துக்கொண்டாலும், திலீப்பின் அந்த முதல் தொடுகையை அவன் வெகுவாக ரசித்தான்...
“என்ன சொல்றதுன்னு தெரியலப்பா... மகியின் கையை எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்... மகியின் உடல் சிலிர்த்து அடங்கியது, அவனும் ஸ்தம்பித்துப்போனான்...
“ஏய் மாமா, என்ன இவ்ளோ பீல் பண்ற? சொல்லிக்கொண்டிருக்கும்போதே மகியின் தோளில் சாய்ந்துவிட்டான்.. திலீப்பின் நெற்றி மகியின் கன்னங்கள் மீது பட்டுக்கொண்டிருந்தது, கையினை தோளோடு வளைத்து அணைத்திருந்தான்...
“மாமா... இது கார்... கிசுகிசுப்பாக கூறினான்...
“அதனாலென்ன? திலீப் தன் பிடியை இன்னும் இறுக்கமாக்கினான்...
“கொஞ்சநேரம் இப்டியே இருந்தின்னா, நான் என் கண்ட்ரோலை இழந்திடுவேன்... அதே ஹஸ்கி குரலில்...
நிமிர்ந்து அமர்ந்துகொண்டான் திலீப்... முதன்முதலாக அவன் முகத்தில் வெட்கம் படர்ந்திருந்தது, சிலபல பிரீக்வன்சி அழகு கூடியிருந்தது...
“அண்ணே, பீச் ரோடு போங்க ஓட்டுனரிடம் வழியை மாற்றும்படி சொன்னான்...
மகி ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியுடன் அவனை பார்த்தான், திலீப் கண்ணடித்து சிரித்தான்..
இன்னும் சூரியன் அஸ்தமிக்க தொடங்கவில்லை என்றாலும், மழை மேகம் சூழ்ந்த காரணத்தால் ஒரு ரம்மியமான இருள் கடற்கரையை ஆட்கொண்டிருந்தது... மெல்லிய மழைக்காற்று அவர்களின் தோள்மீது பட்டு சிலிர்த்தது...
கடற்கரை மணலில் கால் பதித்து நடக்கும்போது, அவ்வப்போது உரசிய மகியின் கையினை தனது விரல்களோடு கோர்த்துக்கொண்டான் திலீப்... சட்டென கடல் நீரை அடைந்துவிட்டதாக தோன்றியது, கடற்கரை இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கக்கூடாதா? என்று இயற்கை மீது கோபம் வந்தது...
கடல் நீர் காலில் படும் ஒரு இடத்தில் அமர்ந்து, மகியின் தோள் மீது தலை சாய்த்துக்கொண்டான் திலீப்...
“மாமா...
“என்னடா?
“இதுக்கு மேல அதிர்ச்சியல்லாம் என் மனசு தாங்காது... கொரோனரி ஆர்ட்டரியல்லாம் வெடிச்சிடும்... திலீப்பின் தலை கோதிக்கொண்டே சொன்னான்..
“ஹ ஹா... அப்போ இது மட்டும் போதுமா? நிமிர்ந்து அமர்ந்து மகியை பார்த்து கண்ணடித்தான்...
“மாமா, நெஞ்சல்லாம் வலிக்குற மாதிரி இருக்குடா... போதும் வெட்கத்தில் நெளிந்தான்...
“இப்போ நான் என்ன யோசிக்கிறேன் தெரியுமா?
“முகத்துல உப்புக்காத்துபடுதுன்னு கவலைப்படுறியா?
“அந்த நடுக்கடலுக்குள்ள ஒரு படகுல போய், நீயும் நானும் மட்டும் தனியா எதுவுமே பேசிக்காம லவ் பண்ணிக்கிட்டு இருந்தா எப்டி இருக்கும்?
“இலங்கை கடற்படை நம்மள சுட்டுத்தள்ளும், பரவால்லையா?...
“அப்டி செத்துப்போனாக்கூட சந்தோசம்தான்... திலீப் விடுவதாக இல்லை...
மகிக்கு அதற்கு மேல் தர்க்கம் புரிய விருப்பமில்லை, அப்படி வாதம் புரிந்தும் பழக்கமில்லை.. ஏன் இந்த திடீர் மாற்றம்? என்று யோசிக்கக்கூட தோன்றவில்லை, இந்த நிமிடத்தை ரசிக்கத்தொடங்கினான்...
வெகுநேரம் ஒருவர் தலை மீது இன்னொருவர் தலை சாய்த்து கடல் அலைகளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்... கடற்கரையை கள்ளக்காதலர்கள் ஆக்கிரமிக்கதொடங்க, நிதானித்தபடி எழுந்து அங்கிருந்து புறப்பட்டனர்...
வீட்டிற்குள் நுழையும் முன்பே வாசுவின் கேள்விகள் அர்ஜுனனின் அம்புகளாக சீறின...
“ஏண்டா நான் தூங்கி எழறதுக்கு முன்னாடியே போய்ட்டிங்க?... சொல்லி வச்சாப்ல ரெண்டு பேரோட மொபைலும் ஸ்விட்ச் ஆப்... உறுமினான்...
“மகிம்மா, உன் பேன்ட்டை மொதல்ல மாத்து... பாரு, ஈரமா இருக்கு... திலீப் மகியிடம் உருகிக்கொண்டிருந்தான்...
“நீயும் மாத்திக்கோ மாமா... வேணும்னா ஒண்ணா மாத்திப்போமா? வெட்கப்பட்டுக்கொண்டான்...
“நான் மாடு மாதிரி கத்திட்டு இருக்கேன், ரெண்டுல எதாச்சும் ஒன்னு கண்டுக்குதா பாரேன்?இருவருக்கும் நடுவில் நந்தி போல நின்றான் வாசு...
“இப்ப என்னடா வேணும் உனக்கு?
“போன விஷயம் என்னாச்சு?
“எல்லாம் டண்டணக்கா டன்... சொன்னபடி மூணாவது ஹீரோ நான்தான், நாளைக்கே ஷூட்டிங்க்காக ஊட்டி போறோம்.. வாசு நிம்மதியானான், கண்களில் ஒருவித தெளிவு தெரிந்தது... திலீப் குளியலறைக்குள் சென்றுவிட்டான், மகி உடைமாற்றிக்கொண்டு ஹாலில் அமர்ந்தான்..
 சில நிமிடங்கள் கழித்து, “ஆமா... இப்போ திலீப் உன்கிட்ட பாசமா பேசுன மாதிரி தெரிஞ்சுதே? அடுத்த சந்தேகக்குழிக்குள் விழுந்தான் வாசு...
“யாரு அந்த ரோபோவா?... அடப்போடா பொய்யாக நொந்துகொண்டான்...
“ஓ இல்லையா?... எனக்குதான் அப்டி தோனுச்சு போல தலையில் அடித்துக்கொண்டான்...
“மகி... மகிம்மா... குளியலறைக்குள்லிருந்து திலீப் அழைத்தான்...
“டேய் திலீப்பா கூப்பிடுறான்? வாசு அதிர்ச்சியானான்...
“என்ன மாமா?
“உள்ளவந்து சோப் போட்டு விடுறியா?
“என்னங்கடா நடக்குது இங்க? குழப்பத்தின் உச்சிக்கே போனான் வாசு...
“குளிச்சிட்டு வா மாமா, அப்புறமா போட்டுவிடுறேன்...
“டேய் எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல, என்னடா நடக்குது இங்க?
“எனக்கு அல்ரடி புடிச்சிடுச்சு வாசு... மாமா என்னைய லவ் பண்ண ஆரமிச்சுட்டான்... வெட்கத்தில் முகம் சிவந்தது...
“ஒரு நாள்ல என்னடா இவ்ளோ ஷாக்கிங் நியூஸ்?... போதும், எனக்கு மயக்கமா வருது... நான் தூங்கப்போறேன்...
“மகிம்மா... குளிச்சுட்டேன், ரூம்க்கு போ
“இந்த ஆட்டத்துக்கு நான் வரல... ஆள விடுங்கடா சாமிகளா அவசரமாக எழுந்து தனது அறைக்குள் ஓடினான் வாசு...
திலீப் மெத்தையில் படுத்தபடி, விகடன் சினிமா பக்கங்களில் மூழ்கியிருந்தான்... மகி, அலைபேசியில் ஆழ்ந்திருந்தான்...
விகடனை மூடி அருகில் வைத்துவிட்டு, மகியின் பக்கம் திரும்பினான்.. மகியின் வெகு அருகாமையில் திலீப், அவன் மூச்சுக்காற்று மகியின் கன்னங்களை சூடாக்கிக்கொண்டிருந்தது... எதையும் கவனிக்காதது போல, அலைபேசிக்குள் ஆப்ஸ்களை மேய்ந்துகொண்டிருந்தான் மகி...
மூச்சுக்காற்றின் சூடு மகியின் உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது.. அவசரமாக ஒரு தலையணையை எடுத்து தனது வயிற்றுக்கு கீழே வைத்துக்கொண்டான்... இதயம் படபடத்தது, எச்சிலை விழுங்கிக்கொண்டான்...
மெள்ள திலீப்பின் கைகள் மகியின் நெற்றியை வருடின... கண்களின் கருவிழிகள் மொபைலை மீறி அலைபாய்ந்தது... நெற்றியிலிருந்து மூக்கின் மேட்டினை கடந்து, உதட்டை நோக்கி அந்த விரல் பயணிக்கும்போது மகியின் உடல் சிலிர்ப்படைந்தது...
கீழ் உதட்டினை தனது விரல்களால் அழுத்தி இழுத்தபடி, முத்தம் கொடுக்க எத்தனிக்கையில், “மாமா... வேண்டாம்! அவசரமாக எழுந்து அமர்ந்தான் மகி... உடல் நடுங்கிக்கொண்டிருந்தது...
“ஏண்டா?... என்னாச்சு, பிடிக்கலையா?
“உன்ன பிடிக்காமலா மாமா!
“பின்ன ஏன் விலகுற?
“இன்னிக்கு வேணாம்... உன் கண்ணுல காதலைவிட, நன்றி உணர்ச்சிதான் அதிகம் தெரியுது... உனக்காக நான் செஞ்ச நல்லதுக்கு, ஏதோ உபகாரமா இதல்லாம் பண்றியோன்னு தோணுது... அது சரியா? தப்பான்னு கூட தெரில... ஆனா இன்னிக்கு நமக்குள்ள எதாச்சும் நடந்தா, அது எப்பவும் எனக்குள்ள உறுத்திகிட்டே இருக்கும் தலையை தரையை நோக்கி குனிந்தபடியே குரல் உடைந்து சொன்னான்...
திலீப் பதிலெதுவும் பேசவில்லை.. கோபமோ, ஏமாற்றமோ, வருத்தமோ அவன் முகத்தில் தென்படவில்லை.. ஒருவேளை மகி சொல்வதுதான் உண்மையோ? என்றெழுந்த எண்ணத்தின் விளைவால் மெலிதான குழப்பம் மட்டுமே அவனுள்...
“தப்பா நெனச்சுக்காத மாமா... எனக்கு தோணுனத சொன்னேன்.. இதை பீச்லையே சொல்லிருப்பேன், உன் மனசு கஷ்டப்படுமோன்னுதான்... இழுத்தான்...
“பரவால்ல மகி... நான் ஒன்னும் நெனைக்கல, நீ ரெஸ்ட் எடு மௌனம் களைத்தான்...
                            ***************
காலை முதலாகவே உடைகளை எடுத்துவைப்பதில் தீவிரமாக இருந்தான் திலீப்... கடைசிநேர பயணம் என்பதால், ட்ரைன் டிக்கெட் உறுதிசெய்யப்படவில்லை... யூனிட் கார்தான் வரப்போகிறது, எப்படியும் மதியத்திற்குள் கிளம்பிவிடவேண்டும்...
“ஊட்டில சாரல் மழையாம்... அங்க எதுக்குதான் இப்போ ஷூட்டிங் வைக்குறாங்க? சட்டையை மடித்துக்கொண்டே தனது ஏமாற்றத்தை பதிவுசெய்தான் மகி...
“அப்போதான உதிஷாகூட மழைல நனைஞ்சுகிட்டே திலீப் டான்ஸ் ஆடமுடியும் சிரித்துக்கொண்டான் வாசு...
மகியின் முகம் சிறுத்தது, வெளிக்காட்டிக்கொள்ளாமல் திலீப்பின் உடைகளை சரிசெய்துகொண்டிருந்தான்...
“பாவம், சைலஜாதான் ஏமாந்து போவாங்கல்ல? அதே குதர்க்க சிரிப்பு...
“வாசு, அந்த செருப்பு வெளிலதான கெடக்கு? பற்களை நறநறத்துக்கொண்டே மகி சொன்னதும், அப்பாவியாக அமர்ந்துகொண்டான் வாசு...
“உனக்கு லீவ் போடமுடியும்னா நீயும் வாயேன்... லீவ் போட முடியுமா? மகியின் வருத்தத்தை பார்த்து மனம் உருகிப்போய் சொன்னான் திலீப்...
“லீவ் போடணுமா?... நீ சொன்னா ரிஸைன் பண்ணிட்டே வரேன் மாமா உற்சாகத்தால் துள்ளிக்குதித்தான்...
“ஷூட்டிங் போறிங்களா, ஹனி மூன் போறிங்களா?.. முதல்ல வேலை, அப்புறம்தான் இதல்லாம் திலீப்
“வாசு, அதை நாங்க பார்த்துக்கறோம்... நாங்க வர்றவரைக்கும் ஒழுங்கா உங்க வேலைய பாருங்க!


                              *************
கோவையை கடந்து, கொண்டை ஊசி வளைவுகளில் பயணித்தபோதல்லாம் திலீப்பின் உடல் சோர்வடைந்துவிட்டது... அசதியின் மிகுதியால் மகியின் தோள் மீது சாய, அப்படியே தன் மடியில் கிடத்திக்கொண்டான்...
குழந்தை போல உறங்குகிறான்... நெற்றியில் வழிந்த முடிகளை கோதிவிட்டான் மகி.. எத்தனை காலத்து தவம் இது?... இன்று நிதர்சனமாக கண்முன்னால் தனது மடியில் திலீப்...
எவ்வளவு கஷ்டப்படுத்திருக்கான்?... ஏன் எனக்கு கோபமே வரல!.. இவனை எந்த தருணத்திலும் இழந்துடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுதான் எப்போதும் என்னை பொறுமையை கடைபிடிக்க சொன்னது...
ஐ லவ் யூ திலீப்... ஐ லவ் யூ சோ மச்.. குனிந்து திலீப்பின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்... உதடுகளில் மின்சாரம் பாய்ந்ததை போல ஒரு உணர்வு...
கார் ஜன்னலுக்கு வெளியே ஊட்டியின் சாரல் மழை, சூழலை இன்னும் ரம்மியமாக்கியது... பசுமை மாறாத சூழல் மகியின் மனதினுள் புத்துணர்ச்சியை உண்டாக்கியது...
ஹோட்டல் அறையில் உடைகூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான் திலீப்... சாப்பிடவில்லை.. வேண்டாம் என்று மறுத்துவிட்டு, களைப்பின் மிகுதியால் அசந்து கிடக்கிறான்... அவ்வளவு சோர்விலும் அழுக்கிலும் கூட திலீப்பின் அழகு மட்டும் கொஞ்சமும் குறையவில்லை..
அறையின் அலைபேசி அழைப்புதான் அதிகாலை அலாரமாக அலறியது...
“திலீப் நாயர் இருக்காரா?... எட்டு மணிக்கு ஷூட்டிங், யூனிட் கார் வந்திடும்.. கிளம்பி வந்திடுங்க
மணி இப்போதே ஏழு... திலீப் இன்னும் நித்திரை களைக்கவில்லை...
அவன் மீது ஏறி அமர்ந்து, விளையாடி, தூக்கம் களைந்து எழுப்பி குளிக்க அனுப்பும்போது நேரமும் ஏழரையை தொட்டிருந்தது... முதல்நாளே தாமதமாகிவிடக்கூடாது என்கிற பதற்றம் மகியினுள்...
தானும் பெயருக்கு தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு, உடைமாற்றி கிளம்பினான் மகி..
ஒருவழியாக திலீப்பை கிளப்பி, அறையிலிருந்து வெளியே தள்ளி காருக்குள் ஏற்றும்போது நேரம் சரியாக எட்டு... சொன்ன நேரத்திற்குள் கிளம்பிவிட்டதன் நிறைவு மகியின் மனதில்...
முக்கிய சாலைகளை கடந்து, மண் சாலையில் அந்த கார் பயணிக்கும்போது, “நெஜமாவே ஷூட்டிங் கூட்டிட்டு போறாங்களா? கடத்திட்டு ஏதும் போறாங்களா? கிசுகிசுப்பாக கேட்டான் திலீப்...
ஒரு யூகலிப்டஸ் தோப்பின் வெளியே கார் நின்றது... ஏற்கனவே நான்கைந்து யூனிட் ஆட்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தனர்...


ஷூட்டிங் இங்கதான? கார் ட்ரைவரிடம் ஒருமுறை உறுதி செய்துகொண்டான்... இன்னும் யூனிட் ஆட்கள் வரவில்லை.. இயக்குனரையோ, சக நடிகர்களையோ மருந்துக்குக்கூட காணவில்லை... மகியை பார்த்து முறைத்தான்..
“இன்னும் கொஞ்சநேரம் தூங்கிருப்பென்ல கண்களை தேய்த்துக்கொண்டான்...
“எத்தன மணிக்கு ஷூட்டிங்? அந்த இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த யூனிட் ஊழியரிடம் பவ்யமாக கேட்டான் மகி...
“அல்லாரும் வர்ற நேரத்துக்குத்தான்... நீங்க ஆரு?.. ஜூனியர் ஆர்டிஸ்டுங்களா?...
“இல்ல.. இவர்தான் படத்துல ஒரு ஹீரோ
“ஓ.. புதுமுகமா?... அதான், சொன்னநேரத்துக்கு வந்துட்டிங்க போல, போய் உக்காருங்க... எப்புடியும் பத்து மணிக்கிட்ட ஆகிடும் உடைந்து கிடந்த பாட்டில் சில்லுகளை கவனமாக எடுத்தபோது, உதிஷாவின் பாதம் இதில் பட்டு காயம் உண்டாகிவிடக்கூடாது என்கிற அக்கறை அந்த பெரியவரின் கண்களுக்குள் பொதிந்திருந்தது....
யூனிட் கார்கள் ஒவ்வொன்றாக வரிசைகட்டி வந்தன... வெளிச்சத்திற்கு தோதாக கேமரா பொருத்தப்பட்டது... ட்ராலி தயார் செய்யப்பட்டு, காட்சி அமைப்புகளுக்கான இடம் தேர்வு செய்வதில் துணை இயக்குனர்களுக்குள் ஒரு சிறு வாக்குவாதம்...
இயக்குனரின் கார் வந்து நிற்க, யூனிட் இன்னும் சுறுசுறுப்பானது...
“உதிஷா இங்கருந்து வர்றாங்க, அஸ்வின் அந்த மரத்துக்கு பின்னால நிக்குறாரு.. ஓடிப்போய் அவர பின்னாலருந்து கட்டிப்பிடிக்கிறாங்க காட்சியை விளக்கிக்கொண்டிருக்கும்போது, இடைபுகுந்து வணக்கம் வைத்தான் திலீப்...
“யார் நீங்க? கொஞ்சம் கடுமையாக கேட்டார் இயக்குனர்...
“சார்... நாதான் திலீப் நாயர்... தர்ட் ஹீரோ... ப்ரட்யூசர் கூட... நினைவூட்டினான்..
“ஓ... நீயா... ஓரமா போய் நில்லுப்பா, உனக்கு சீன் வரும்போது சொல்றேன்
ஏமாற்றத்தோடு அங்கிருந்து நகரும்போது, இயக்குனர் பேசிக்கொண்டிருப்பது தெளிவாக கேட்டது...
“படுத்தவனயல்லாம் படத்துக்கு ஹீரோ ஆக்கணும்னா, படத்துக்கு நூறு ஹீரோதான் போடணும் துணை இயக்குனர்கள் புரியாவிட்டாலும் சிரித்துவைத்தனர்...
‘களம்... சீன் ஒன், டேக் சிக்ஸ்... ஆக்ஷன்.. கிளாப் அடிக்கப்பட்டது...
மரத்திற்கு பின்னால் கைகட்டி நின்றுகொண்டிருந்த அஷ்வினை, அவன் பின்னால் சென்று கட்டி அணைத்த உதிஷா, “என்னே ஆர்னு கட்டுப்பிடி பாக்கலாம் குழைந்தாள்...
“டேக் ஓகே இயக்குனர் எழுந்துவிட்டார்...
“சார், டயலாக் சொதப்பிடுச்சே..
“டப்பிங்ல சரிபண்ணிக்கலாம்... இன்னொரு டேக் போக என் மனசுல தைரியம் இல்ல கையிலிருந்த துண்டால் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டார், ஊட்டி வானிலை வெட்கி தலைகுனிந்தது...
“அடுத்த சீன்ல, அஷ்வினோட கைய பிடிச்சுகிட்டே ஒரு பத்து மீட்டர் ஓடுறீங்க... அங்க இருக்குற ஒரு நீர்வீழ்ச்சிய பார்த்து பூரிச்சு போய் நிக்குறீங்க உதிஷாவிடம் விளக்கிக்கொண்டிருந்தான் துணை இயக்குனர்...
“பூரிச்சி மீன்ஸ்?
“பூரிச்சுன்னா... முகத்துல ஒரு பரவசம்.. அதாவது தடுமாறினான்...
திலீப் அங்கிருந்து எழுந்து நடக்கத்தொடங்கினான்.. முகத்தில் ஒருவித எரிச்சல், தளர்வானது நடை... மனதிற்குள் ஏதேதோ சிந்தனைகள், சிறகுகள் விரித்து பறந்துகொண்டிருந்தன..
ஷூட்டிங் ஸ்பாட் கண்களிலிருந்து மறைந்த இடத்தில், ஒரு பாறையின் திட்டின் மீது அமர்ந்தான்..
“என்னாச்சு?... ஏன் ஆளே உடைஞ்சு போய்ட்ட?... இன்னிக்கு உன் சீன்ஸ் இல்ல போல, அவ்வளவு ஏன் அசோக் செல்வனுக்கு கூடத்தான் இன்னிக்கு சூட் இல்ல... இதுக்கல்லாம் மூட் அவுட் ஆகிட்டா என்னாகுறது? திலீப்பின் பின்புறம் நின்று, அவன் பின்னந்தலையில் வருடிக்கொண்டிருந்தான்...
“அப்புறம் எதுக்கு இன்னிக்கு என்ன வரச்சொல்லணும்?
“நாம தனியா ஹனி மூன் கொண்டாடவா இருக்கலாம்ல... சிரித்தான்...
“அடப்போடா... மெல்லிய வெட்கம் கலந்த சிரிப்பு...
“ஹப்பா சிரிச்சுட்டியா... இப்டியே இரு எப்பவும்... ஷூட்டிங் எப்டி நடக்கும்? என்னன்னவல்லாம் செய்யனும்னு நீ தெரிஞ்சுக்கறதுக்காகக்கூட வர சொல்லிருக்கலாம்ல.. திலீப்பின் அருகில் அமர்ந்து, அவன் விரல்களோடு தனது கையை பிணைத்துக்கொண்டான்...
கண் எட்டும் தூரம் வரையிலும் கண்களுக்கு நிறைவான பசுமை, பனி படர்ந்த காற்று, அருகில் காதலன்... ரஹ்மானின் மெல்லிசை மட்டும் மிஸ்ஸிங்.. மனதிற்குள் பூரித்துக்கொண்டான் மகி... ‘பூரிச்சு மீன்ஸ்? உதிஷாவின் கேள்வி மனதிற்குள் நுழைய, சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டான்...
திலீப்பின் தோள் மீது சாய்ந்துகொண்டு, “இப்போ சொல்லு மாமா, உனக்கு இன்னிக்கு சீன் இல்லாதது வருத்தமாவா இருக்கு?காதலோடு கேட்டான்..
“நாளைக்கு சீன் இருக்குமோன்னு கவலையா இருக்கு அழகாய் சிரித்தான்..
“ஹாய் கைஸ்... பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது... இருபதுகளின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர், யூனிட் ஆள்தான்.. சற்றுமுன் உதிஷாவிடம் ‘பூரிப்பாய் விளக்கிக்கொண்டிருந்த துணை இயக்குனர்தான்.. சட்டென இருவரின் கைகளும் விலகிக்கொள்ள, ஆச்சர்யத்தோடு எழுந்து நின்றான் திலீப்..
“சிவபூஜைல கரடியா நுழஞ்சிட்டனோ?இருவரையும் மாறிமாறிப் பார்த்தபடி கேட்டான்...
“ச்ச ச்ச... அப்டிலாம் இல்ல அவசரமாக மறுத்தான் திலீப்..
“ஆமா.. எந்த ஊர்ல கரடி பேன்ட் ஷர்ட் போட்டிருந்துச்சு மகி உட்புகுந்தான்...
“நீங்கதான திலீப்?... ப்ரட்யூசர் கூட பிரஸ்மீட்ல இன்ட்ரோ கொடுத்தாரே
“ஹ்ம்ம்.. ஆமா...அமைதியாக ஆமோதித்தான்..
“காலைல டைரக்டர் உங்கள ஹர்ட் பண்ணமாதிரி பேசிட்டாரேன்னு பீல் பண்றீங்களா?
“இல்ல... அதல்லாம் ஒண்ணுமில்ல...
“ஒன்னும் கவலைப்படாதிங்க... அல்ரடி பிக்ஸ் ஆன கதைல இப்ப உங்களுக்கு தனி ட்ராக் போட்ருக்கோம்... கூடிய சீக்கிரம் உங்க சீன்ஸ் ஷூட் ஆரமிச்சிடும்..
திலீப்பின் முகத்தில் மகிழ்ச்சி திரண்டது...
“ஆனா இந்த படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் எல்லாவிதமான இன்சல்ட்களையும் சகிச்சுதான் ஆகணும்.. இந்த கனவு தொழிற்சாலைல நமக்குன்னு ஒரு இடத்தை பிடிக்கணும்னா, அதல்லாம் தாங்கிக்கணும் அரைகிலோ அட்வைஸ்களை அள்ளி இறைத்தான்...
“அதுக்காக என்ன வேணாலும் பேசுவாங்களா சார்? மகி பொருமினான்...
“ஆமா... எதுவேணாலும் பேசுவாங்க... ஆனா அதப்பேசுற எத்தனை பேரு இங்க ஒழுங்குன்னு சொல்லுங்க பாப்போம்.. அறிமுகமாகுற ஒவ்வொரு புதுமுகத்துக்கு பின்னாடியும் அவ்வளவு வலிகள் இருக்கத்தான் செய்யும்... நிச்சயம் நீங்க ஷைன் ஆகுவீங்க திலீப் தோள் தட்டி ஆதரவாக பேசினான்...
“ஆமா.. சாப்டிங்களா நீங்க?
“இல்ல...
“முதல்ல அதை செய்ங்க... ஒட்டுமொத்த ஷூட்டிங்லையும் அது ஒண்ணுதான் பெஸ்ட்டா இருக்கும்.. சீக்கிரம் போய் சூடா சாப்டுங்க...
“ஆமா... உங்க பேரென்ன?
“குமார்...
பனித்துளிகளின் குளிரையும் தாண்டி, ஆவி பறந்த வெண்பொங்கலின் மீது வியர்வையாய் நெய் வழிந்துகொண்டிருந்தது... முந்திரி பருப்புகள், அரிசிக்கு போட்டிபோட்டுக்கொண்டு அடைந்திருந்தன... அந்த குளிருக்கு இதமான கொதிநிலையை எட்டிய சாம்பார், தொட்டு வெண்பொங்கலை சாப்பிடும்போது தேவலோகத்தில் அமிர்தம் உண்டுகொண்டிருப்பதாக அவர்களுக்குள் ஒரு மாயை...
“சார்... அங்க வாட்டர் பால்ஸ் இல்ல, தென் ஹவ் கேன் ஐ ஆக்ட்? குழந்தையைப்போல கையையும் காலையும் உதறி சினுங்கிக்கொண்டிருந்தாள் உதிஷா...
“நயாகரா பால்ஸ் கிட்ட விட்டா மட்டும் நடிச்சிடவா போற, சும்மா கன்னத்துல கை வச்சு வாவ்னு சொல்லு பேபி... அதவச்சு சீன் க்ரியேட் பண்ணிக்கறேன்... ஒருவழியாக உதிஷாவை சமாளித்து டேக்கிற்கு தயாரானது யூனிட்...
டேக் முடிந்து முகத்தை டச்சப் செய்தவாறே, திலீப்பின் அருகில் வந்து நின்றாள் உதிஷா..
“ஹாய்... நீதானே திலீப் நாயர்? கை நீட்டினாள்...
“ஆமா... ஆச்சர்யத்தோடு கை குழுக்கிக்கொண்டான்...
“மல்லு ஹீரோவ பாக்குறப்போ ஆம் சோ ஹாப்பி... கையை இன்னும் அவள் விடவில்லை...
“ஓ... தாங்க்ஸ்... அசடு வழிந்தான்...
“உனக்கு தெர்யூமா, ஆக்சுவலி நான் பொர்ந்தது மட்டும்தான் கேர்ளா... வளந்தது எல்லாம் நார்த்ல... அத்னால மல்யாலம்ல பேசிடாத... குலுங்கி சிரித்தாள்...
“ஹ்ம்ம்... சரி...
“ஸ்டோரிபடி இந்த படத்துல உன்னோடதான் க்ளைமாக்ஸ்ல சேரனுமாம்... டைரக்டர் சொல்லிச்சி... சோ, நம்க்குள்ள கொஞ்சம் கெமிஸ்ட்ரி வர்க்கவுட் பண்ணனும்...
“ஓ... பண்ணலாமே...
“ப்ரீயா இருக்கப்போ, ரூம் வா... ரூம் நம்பர் த்ரீ நாட் டூ... ச்சும்மா பேசிட்டு இர்க்கலாம்...
“கண்டிப்பா வரேன்...
“பட் மம்மி இருக்கப்போ வராத, எதாச்சும் ஹர்ட் பண்ணிடும் காதுக்குள் ரகசியமாக சொன்னாள்...
“பேபி, டேக் போகலாமா? இயக்குனரின் குரல் கேட்க, அவசரமாக குதித்து ஓடினாள் உதிஷா...
கேரளத்து நாயகி.. உயரம் என்னவோ திலீப்பிற்கு பொருத்தமில்லாத உயரம்தான், ஆனால் வடிவான உடல்வாகு... உதடுகள் மட்டும் கொஞ்சம் சிறிதாக இருந்திருந்தால், நயன்தாராவை பின்னுக்கு தள்ளியிருப்பாள்... பின்னழகும் கூட...
யோசித்துக்கொண்டே இடதுபக்கம் திரும்ப, மகி தன்னையே இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான்.. அங்கு ஏதும் நடக்காதது போலவும், தான் இயல்பை மீறி எதையும் செய்துவிடாதது போலவும் இயல்பாக சிரிக்க முயன்று, அது அசட்டு சிரிப்பாய் முறிந்து விழுந்தது...
ஹப்பா... செம்ம டையர்டுடா... கைகளை உயாத்தி நெட்டி முறித்தவாறே கட்டிலில் சாய்ந்தான் திலீப்...
தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு, விருப்பமில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டிருந்தான் மகி.. ரிமோட்டை அதிர கீழே வைத்துவிட்டு, அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து வேடிக்கைப்பார்க்க தொடங்கினான்.. ஜன்னலுக்கு வெளியே குழந்தைகள் புல்தரையில் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்ததை ஆர்வமாக பார்த்தான்.
“உனக்கு அசதியாவே இல்லையா மகி?
“எனக்கென்ன அசதி?... நானென்ன உதிஷா கூட கடலை போட்டா டயர்ட் ஆனேன்? பார்வையை சடாரென திலீப்பை நோக்கி திருப்பினான்..
“ச்ச... ச்ச... ஏன் இப்டி தப்பா பேசுற?... என்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? எழுந்து அமர்ந்தான்...
“நம்பிக்கை இல்லாமல்லாம் இல்ல, உறுதியாவே சொல்றேன் உன் பார்வை சரியில்ல...
“என்ன சரியில்ல?
“அவகூட பேசுனப்போ உன் கண்ணு எங்க பார்த்துச்சு?
“அவ கண்ணை பார்த்துதான் பேசுனேன்...
“உதிஷாக்கு மட்டும் கழுத்துக்கு கீழ கண்ணு இருக்கா திலீப்? விடுவதாக இல்லை...
‘டக் டக் டக்.. அறைக்கதவு தட்டப்பட்டது... ரூம் சர்வீஸாக இருக்குமோ?...
திறந்த கதவின் மறுபுறத்தில், வாய் நிறைய புன்னகையோடு குமார் நின்றுகொண்டிருந்தான்...
“இப்பவும் நான் சிவபூஜைல கரடியா வந்துட்டனோ? அதே கேள்வியோடு உள்ளே நுழைந்தான்...
“இல்ல தெய்வமே... கரடி பூஜைல சிவனா வந்து என்னைய காப்பாத்திட்டிங்க... வாங்க, வந்து உக்காருங்க ஆர்வமாக உட்காரச்செய்தான்... தன்னை ‘கரடியாக உருவகப்படுத்திய திலீப் மீது, ஒரு தேக்கரண்டி எரிச்சல் கூடியிருந்தது மகிக்கு...
“ஸ்டோரி டிஸ்கஷன் இப்பதான் முடிஞ்சிச்சு... ஒருவழியா உங்க ட்ராக் கிளியர் ஆகிடுச்சு, க்ளைமாக்ஸ்ல உதிஷா உங்களுக்குத்தான்.. கத்தியை கூர் தீட்டியல்லவா கொடுக்கிறான், பாதகன்...
“ஷூட்டிங் ஸ்பாட்ல கூட அந்த பொண்ணுகிட்ட ஏதோ உருகி பேசுனீங்களே எப்படியும் குத்தாமல் விடமாட்டான் போல... இவன் கரடி அல்ல, காண்டாமிருகம்...
“ஊட்டி குளிருக்கு கொஞ்சம் கூடுதலாவே உருகிட்டார் நம்ம ஹீரோ மகியும் லாகின் செய்து உள்ளே நுழைந்தான்...
“ஏன்தான் இந்த ஹீரோயின்லாம் இப்டி இருக்காங்க குமார்?... ரூமுக்கல்லாம் வர சொல்லுது, சினிமான்னாலே இப்டிதானா? தன்னை நிரூபித்துக்கொள்ள, உதிஷாவை பலியாடு ஆக்கினான்...
“ஹலோ ஹலோ... திலீப்... கொஞ்சம் பொறுமையா இருங்க... ஒரு பொண்ணு உங்ககிட்ட சிரிச்சு பேசிட்டா உடனே அவ கேரக்டரை நீங்க தீர்மானிச்சிடுவீங்க.. அதுவும் சினிமாக்காரின்னா முடிவே பண்ணிடுவீங்களா? குமார் சீறினார்...
“பின்ன எதுக்கு என்கிட்ட வழிய வந்து வழியனும்?
“அது வழியறது இல்ல, கோ ஆர்டிஸ்ட் கிட்ட ஈகோ இல்லாம பழகுறதுன்னு சொல்லலாம்... அந்த பொண்ணை பத்தி தெரியுமா உங்களுக்கு?... சில பெரிய ஆளுங்ககிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்க மறுத்ததால, மூணு நல்ல படங்களை மிஸ் பண்ணிருக்கு... வெள்ளந்தியான பொண்ணு, எல்லார்கிட்டயும் கலகலன்னு பேசும்... அவ்ளோதான்... சினிமால நடிக்குறதாலையே எல்லாரும் தப்பான ஆளுங்கன்னு முடிவு பண்ணிடாதிங்க... ஏன்னா நாமளும் சினிமாக்காரங்கதான்...
“பின்ன எதுக்கு ரூம்க்கு வர சொல்லணும்?... அதுவும் ரூம் நம்பர் 302ன்னு அழுத்தி சொன்னுச்சே?” மகி ஆர்வமானான்...


அது சும்மா விளையாட்டுக்கு கூப்ட்டிருக்கும், வேற எதாச்சும் நெனச்சு போய் அடிவாங்காம இருந்திங்களே, அதுவரைக்கும் சந்தோஷப்படுங்க... திலீப்பின் தோள் தட்டி சிரித்தான் குமார்...
‘ட்ரிங்.... ட்ரிங்... அறையின் தொலைபேசி சிணுங்கியது...
மகி எடுத்தான்... ஹஸ்கி வாய்ஸில் ஒரு பெண் குரல் ஒலித்தது...
“திலீப் நாயர் இருக்காரா?
“இருக்கார்... நீங்க?
“நான் ரூம் நம்பர் 302லேந்து பேசுறேன், அவர்கிட்ட பேசணும்... லைன் கனெக்ட் பண்ணுங்க ப்ளீஸ்
இருவரையும் பார்த்து முறைத்தபடியே திலீப்பிடம் ரிசீவரை நீட்டினான் மகி... இவ்வளவு நேரம் கதாநாயகிகளுக்கு கலாச்சாரக்காவலர் போல பாடம் நடத்திக்கொண்டிருந்த குமாரை பார்வையாலே பொசுக்கிவிடுவதை போல அனல் தெறிக்க பார்த்தான்...
“என்ன? சைகை செய்தான் குமார்...
“ரூம் நம்பர் 302” அந்த பதில் போதுமானது, குமார் அதிர்ச்சியில் விழிபிதுங்கி நின்றிட..
தயக்கத்தோடு ரிசீவரை காதில் வைத்த திலீப், “திலீப் ஹியர்..
“ஹ்ம்ம்... தாங்க்ஸ்...
“டைம் கிடைக்குறப்போ வரேன்..
“சரி... பை, குட் நைட் அவசரமாக ரிசீவரை கீழே வைத்தான்.. பேயறைந்ததை போல முகம் வெளிறி போயிருந்தது...
ஒருவாறாக குமார் அனுமானம் செய்துவிட்டாலும், அதை உறுதிசெய்துகொள்ளும் விதமாக திலீப்பிடம் கேட்டான்...
“என்ன சொன்னாங்க?
“ப்ரீயா இருக்கப்போ மீட் பண்ணனுமாம்.. எச்சிலை விழுங்கிக்கொண்டான்...
“திலீப், ரொம்ப அதிர்ச்சி ஆகுற மாதிரி நடிக்க வேணாம்... உள்ளுக்குள்ள ஹாப்பிதான? மகி குறுக்கிட்டான்...
“அடப்பாவி, இப்போ பேசுனது உதிஷா இல்ல... அவ அம்மா... தலையில் அடித்துக்கொண்டான்...
“என்ன சொல்றிங்க திலீப்? குமாருக்கு பேரதிர்ச்சி...
“ஆமா... காகித கப்பல் சீரியலை தொடர்ந்து அந்தம்மா பாக்குமாம்.. நான்னா ரொம்ப பிடிக்குமாம்.. நிறைய பேசணுமாம், ப்ரீயா இருக்கப்போ வரசொல்றாங்க அப்பாவியாக சொன்னான்...
“ஹ ஹ ஹா... குமார், மூணு படத்து சான்ஸ் மிஸ் ஆனதுக்கு காரணம் உதிஷா அட்ஜஸ்ட் பண்ணாததாலதானா? இல்ல, அவங்க அம்மா அட்ஜஸ்ட் ஆகாததாலையா? விழுந்து புரண்டு சிரித்தான்...
“சரி, நான் கிளம்புறேன்... டைரக்டர் கூப்பிடுறாரு! அலைபேசி அடிக்கவில்லை, அசிரிரீ எதுவும் கேட்டிருக்கும் போல...

                             ****************
பச்சை புல் போர்த்திய அந்த மலையில் ஷூட்டிங் பரபரப்பாக தொடங்கியது...
“திலீப், உங்க சீன்ஸ் இன்னிக்கு எடுக்குறோம்... காஸ்டியூம் மாத்திட்டு வாங்க... டைரக்டர் சொன்னபோது, ‘ஒரு வார்த்தை கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்!சாதனா சர்கம் பல்லவி பாடத்தொடங்கினாள்...
அவசரமாக அறைக்குள் ஓடி, காஸ்ட்யூம் டிசைனர் முன்பு மூச்சிரைக்க நின்றான்...
“என்ன சார்?
“காஸ்டியூம்
ஒரு சிறு டவலை கையில் கொடுத்து, நமட்டு சிரிப்பு சிரித்தார் ஆடை வடிவமைப்பாளர்...
“முகம் துடச்சுக்கவா? அப்பாவியாக கேட்டான் திலீப்...
“இதான் உங்க காஸ்டியூம்.. இந்த டவலோடதான் உங்களுக்கு ஒரு சாங் இருக்கு அதிர்ச்சியாகி நின்றான்... வெள்ளைநிற காட்டன் துண்டு, கட்டினால் தொடையின் கீழ் பகுதி அளவிற்கு கூட நின்றிடாது.. இரண்டுமுறை புரட்டிப்பார்த்துவிட்டு, குழப்பத்தில் அப்படியே நின்றான்...
“காஸ்டியூம் சேஞ் பண்ணிட்டா வாங்க திலீப், சீன்ஸ் எக்ஸ்ப்ளைன் பண்ணனும்! வெளியே ஒரு துணை இயக்குனர், கடமையில் கண்ணாக நின்றுகொண்டிருக்கிறான்....
கழுதைக்கு வாக்கப்பட்ட பிறகு, உதைக்கு யோசிக்க முடியுமா?... முடிந்த அளவு மறைக்க முடிந்த பாகங்களை மறைத்து ஒருவித தயக்கத்தோடு வெளியே வந்தான் திலீப்...
துண்டின் மீது கைகளால் மறைத்துக்கொண்டே மருகியபடி அறைக்கு வெளியே வந்தான் திலீப்... காகிதங்களை ஒன்றன்பின் ஒன்றாக புரட்டிக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்திருந்த துணை இயக்குனர், திலீப்பை பார்த்ததும் மெலிதாய் அதிர்ச்சியானான்...
“இது உதிஷாவுக்கான காஸ்டியூம் இல்லையே? சந்தேகத்தோடு கேட்டான்...
“இல்ல... இதைத்தான் காஸ்ட்யூமர் கொடுத்தார் குளிரால் உடல் நடுங்கத்தொடங்கியது...
“நீங்க குளிச்சிட்டு வெளில வரீங்க, அப்போ எதார்த்தமா உதிஷா உங்கள பார்க்குறாங்க... அதிர்ச்சில வெட்கப்பட்டு அவங்க குனியும்போது, அவங்க பக்கத்துல போய் இடுப்புல கை வைக்குறீங்க... அதுக்கு பின்னதான் இந்த சாங் காட்சியை விளக்கி முடிக்கும்போது, திலீப்பின் நடுக்கம் ரிக்டர் அளவில் எட்டு ஆகியிருந்தது...
குளிக்க பாத் ரூம் இல்லை, அவள் வெட்கப்பட அவசியமும் இல்லை... ஆனாலும் இதல்லாம் நடந்தாகணும்... வெள்ளை நிற சல்வார் கம்மீஸ் உடையில், கையில் ஒருசில புத்தகங்களோடு காட்சிக்காக தயார் படுத்தப்பட்டுக்கொண்டிருந்தாள் உதிஷா...
“காலங்காத்தால அந்த ப்ரட்யூசர் போன் பண்ணி, உடனே திலீப்போட ஜட்டி சாங் சூட் பண்ணுன்னு சொல்றாரு... ஸ்க்ரிப்ட்படி இந்த பாட்டு அவசியமே இல்ல, அந்த மனுஷனால ஏ சர்டிபிகேட்தான் கிடைக்கப்போகுது! உருண்டு திரண்டிருந்த டான்ஸ் மாஸ்டரிடம் வருத்தத்தை கொட்டிக்கொண்டிருந்தார் இயக்குனர்...
“டேக் போகலாமா? ஒளிப்பதிவாளர் மேகத்தை பார்த்துக்கொண்டே கேட்டார்...
“ஒரு நிமிஷம் என்றபடி கையில் ஒரு தண்ணீர் பாட்டிலோடு ஓடிய இயக்குனர், திலீப்பின் வெள்ளை துண்டின் மீது தெளித்துவிட்டான்...
“சார்... இது எதுக்கு?இயலாமையோடு கேட்டான் திலீப்...
“குளிச்சதுக்கு அடையாளமாம்... மேலிடத்து உத்தரவு, மேல எதுவும் கேட்காதப்பா அதே இயலாமைதான் இயக்குனரின் வார்த்தைகளிலும்...
‘களம்... சீன் சிக்ஸ்... டேக் ஒன்... ஆக்சன்
தங்கமாய் மின்னிய மேனியோடு, அரும்பிய முத்துக்களாய் தண்ணீர் துளிகள்... செட்டிங் கதவிற்கு பின்னாலிருந்து, அரை சான் துண்டோடு திலீப் வெளியே வரும்போது, நிஜமாகவே உதிஷா ஆச்சர்யத்தில் எழுந்துவிட்டாள்...
“பேபிம்மா... சூப்பர் எக்ஸ்ப்ரஷன்... கண்டின்யூ
ஒவ்வொரு அடியாக அளந்து வைத்து உதிஷாவின் வெகு அருகாமையில் வந்து நின்ற திலீப், அவள் இடுப்பில் கைவைக்க ஆயத்தமானபோது, ‘வலது கையா? இடது கையா?’ ஒருசில வினாடிகள் குழம்பி நின்றான்...
“வைக்குறதுன்னு முடிவாகியாச்சு, மொத்தமா வைக்கவேண்டியதுதான் இரண்டு கைகளையும் இடுப்பில் வளைத்து, தன் மார்போடு அவள் தலையை சேர்த்து அணைத்தான்...
“வாவ்... பெண்டாஸ்டிக்... டேக் ஓகே... இயக்குனர் ஓடிவந்து திலீப்பின் கையை பிடித்து வாழ்த்தினான்...
“நல்லவேளையா இன்னிக்கு மகிய கூட்டிட்டு வரல, வந்திருந்தா பிரளயமே உண்டாகிருக்கும் பெருமூச்சு விட்டுக்கொண்டு போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தான்... அடுத்த காட்சிக்கு தயாராக இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகலாம், ஒரு ஷால் எடுத்து மேல் மீது போர்த்திக்கொண்டான்...
அருகில் போடப்பட்ட இருக்கையில் பவ்யமாக வந்து அமர்ந்தாள் உதிஷா...
“ரொம்ப நல்லா ஆக்ட் பண்ணுச்சு அடக்கடவுளே இன்னும் பத்து நிமிடம் அரைகுறை தமிழுக்கு விளக்கம் தேடவே பத்தாது போல...
“நீங்களும்தான்... சிரித்துக்கொண்டான்...
“உதிம்மா... போய் மேக்கப் சரிபண்ணு... மஸ்காரா இன்னும் டார்க்கா போடு நாற்பது வயது பெண்மணி உதிஷாவை அப்புறப்படுத்தினாள்...
நிம்மதி... ஆனால் பாடல் காட்சிக்கு அவள் பேய் போல வந்து நிற்கப்போகிறாள், ஆடும்போது குழம்பப்போகிறேன்...
“திலீப் நாயர் அந்த பெண்மணி ஹஸ்கி வாய்ஸில் அழைத்தாள்... எங்கோ கேட்ட குரல், அடக்கடவுளே நேற்று அலைபேசியில் பேசிய பெண்ணா இது?...
“சொல்லுங்க ஆண்ட்டி... கேடயத்தை முன்னிறுத்தினான்...
“ஆண்ட்டின்னு கூப்பிடாதிங்க... மஞ்சுன்னு கூப்டுங்க... காகித கப்பல்ல அவ்ளோ அழகா நடிச்சிங்க, அதுவும் காமெடி சீன்ஸ்ல... ஹ ஹ ஹா... குலுங்கி சிரிக்கும்போது, அவள் கை அவ்வப்போது திலீப்பின் தோளினை வருடத்தவறவில்லை..
“திலீப் வாங்க... டான்ஸ் மூவ்மன்ட் பாருங்க இம்முறையும் குமார் காப்பாற்றினான்... பதறி அடித்து எழுந்து தளத்திற்குள் ஐக்கியமானான்...

                                *************
கோவையிலிருந்து ரயில் சென்னை புறப்பட்டபோது எல்லோர் மனதிலும் சென்னை வெயிலை எதிர்கொள்ளப்போகும் கவலை படிந்திருந்தது... சுஜாதாவை வாசித்துக்கொண்டிருந்தான் மகி.. பொறுமை இழந்த திலீப் எழுந்து மெள்ள நடக்கத்தொடங்கினான்... கதவோரத்தில் நின்று ரயிலுக்கு போட்டியாக புகைவிட்டுக்கொண்டிருந்தான் குமார்...
“ஹலோ குமார், என்ன தூக்கம் வரலையா?தோள் தட்டி சிரித்தான்...
“தூக்கத்த மறந்தே ஒரு வாரமாச்சு...
“ஒருவாரம் ஷூட்டிங்க்னு ஏன் நாலு நாள்ல ரிட்டர்ன் ஆகுறோம்?
“கிளைமேட் சரியில்ல, லைட்டிங் பத்தாதுன்னு சென்னைல வச்சுக்கலாம்னு சினிமட்டோகிராபர் சொல்லிட்டார்...
“ஓ... நல்லது.. எப்பவுமே சென்னைதான் பெஸ்ட் கதவோரம் சாவகாசமாக சாய்ந்துகொண்டான் திலீப்..
“நீங்க நடிச்சிட்டு இருந்த சீரியல்ல உங்க கேரக்டரை இப்போ என்ன பண்ணிருப்பாங்க?
“அது ரொம்ப ஈசி... இவருக்கு பதில் இவர்னு ஒரு கார்ட் போட்டு ஆளை மாத்திடுவாங்க... சீரியலை பொருத்தவரைக்கும் அது ரொம்ப ஈசி தடக் தடக் சத்தத்தோடு, குளிர்க்காற்று முகத்தில் பட்டு சிலிர்க்க செய்தது...
“ஹ்ம்ம்... ஆனா உங்களுக்காக சீரியல் பாத்த ரசிகர்கள் அதை விரும்பமாட்டாங்க
“அப்டிலாம் இல்ல... யார் நடிச்சா என்ன? கதையைத்தான பார்க்குறாங்க
“ஹ ஹா... எந்த காலத்துல திலீப் நீங்க இருக்கீங்க?.. இப்பவல்லாம் நம்ம தமிழ் சீரியலைவிட, சக்கைப்போடு போடுறது ஹிந்தி டப்பிங் சீரியல்தான்... ஏன் அதல்லாம் இப்போ ஹிட்டாகுது தெரியுமா?
“அதானே... ஏன்?
“வழக்கமான முகங்களையே பார்த்து போர் அடிச்ச நம்ம ஆட்களுக்கு, நார்த் இந்தியன் பசங்கள சட்டுன்னு பார்த்தப்போ ஒரு ஈர்ப்பு உண்டாகிடுச்சு... புல் மேக்கப் போட்டு, கியூட்டா இருக்குற பசங்கள பார்க்குறதுக்குதான் கூட்டம் அங்க அள்ளுது... உங்க காகித கப்பல்லகூட ஹான்ட்சம்மா உங்கள பார்த்ததும்தான் சீரியல் ஹிட்டாச்சு... வட்ட வடிவ புகைக்குள் தெரிந்த திலீப்பின் முகம் ஆயிரம் விதமான குழப்பங்களுக்குள் ஆட்பட்டிருந்தது...
“என்னப்பா வித்தியாசமா யோசிக்கிறீங்க?
“இதுதான் சைக்காலஜிக்கல் பேக்ட்... இப்போகூட நீங்க ஷைன் ஆகுவீங்கன்னு நான் உறுதியா சொல்றதுக்கு காரணம், உங்கள இவ்ளோ நாள் ரசிச்ச ரசிகைகள்தான்..


யாரு?.. அந்த மஞ்சு மாதிரி ஆன்ட்டியா? சிரித்தான்...
“அவங்களும்தான்.. உங்களோட பெரிய ப்ளஸ் அப்படிப்பட்ட பெண்கள்தான்...
“ஐயோ சத்தமா சொல்லிடாதிங்க... யாராச்சும் தப்பா புரிஞ்சுக்க போறாங்க... ஆனா நீங்க சொல்றதை கேட்குறப்போ நல்லாதான் இருக்கு ஆளுயர கட்டவுட், பால் அபிஷேகம், நூறாவது நாள்... வரிசையாக காட்சிகள் தோன்றி மறைந்தது...
“என்ன ஊட்டி ஷூட்டிங்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? வீட்டிற்குள் நுழையும்போது வாசு ஆர்வமாக வினவினான்...
“ஹ்ம்ம் முடிஞ்சுது... நம்ம திலீப் ஆன்ட்டி ஹீரோ ஆகிட்டான்... மகி நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டான்...
“வாவ் சூப்பர்... அதான் நல்லது.. முதல் படத்துல நெகட்டிவ் ரோல் பண்றது நிச்சயம் சக்சஸ் ஆகும் பாரு... சரிதான திலீப்?அர்த்தம் புரியாமல் ஆஜர் ஆனான்..
“வீட்டுக்குள்ள நுழையும்போதே உன்னை அடிச்சுட்டேன்குற நிலைமையை உருவாக்கிடாத... பற்களை நறநறவென கடித்துக்கொண்டான்... அப்போ சைலஜா, இப்போ மஞ்சு... இந்த கொடுமையிலிருந்து எப்போ விடிவுன்னுதான் தெரியல!
‘காரணம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்தாச்சு, மருத்துவமனையில் எதாவது காரணம் சொல்லி சமாளிக்கணும்... அலைபேசியில் அழைத்தாவது சமாளித்திருக்கலாம், இப்ப யோசிச்சு என்ன பண்றது?..குழப்பத்தோடுதான் பணிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான் மகி...
அரைகுறை தூக்கத்தோடு மகியின் பரபரப்பை ரசித்துக்கொண்டிருந்தான் திலீப்... படுத்துக்கொண்டே தலையணையை தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டு மகியை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தான்... குளித்து முடித்த தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.. கண்களில் குழப்பமும், உதட்டுசுழிப்புமாக ஒரு மார்க்கமாய் அல்லவா தெரிகிறான்... என்னமோ தெரியல, இன்று முழுக்க அவனை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு.. ‘இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போகாதடா!ன்னு சொல்லச்சொல்லி மனம் படுத்தியது... ‘வேண்டாம்.. அவன் வேலையை முதலில் பார்க்கட்டும்தன்னை சமாதானப்படுத்திக்கொண்டான்...
கட்டிலுக்கு அருகில் வந்து பைக் சாவியை தேடினான் மகி... அருகில் நெருங்கியபோது, நாசிகளை நிறைத்த மகியின் வாசம் திலீப்பை கிறங்கச்செய்தது... படுத்திருந்த திலீப்பை தாண்டி கையை நீட்டி அந்த சாவியை எடுக்கும்போது, ‘பச்சக் மகியின் கன்னத்தில் ஒரு முத்தம்...
ஆசை வருவதற்கு பதிலாக, அதிர்ச்சிதான் மேலிட்டது மகிக்கு... கன்னத்தை ஒருமுறை தொட்டுப்பார்த்தான், ஈரப்பதம் இருக்கிறது... நிஜமாகவே முத்தம்தான் கொடுத்தானா?
“மாமா... இப்போது ஆசையும் கலந்து வந்தது...
“சாரி... வெட்கத்தில் குனிந்துகொண்டான்...
“நிஜமாவே முத்தம் கொடுத்தியா?
“ஆமா... ஆனா அதுக்கும் நன்றி உணர்ச்சிதான் காரணம்னு என்ன அசிங்கப்படுத்திடாத அப்பாவியாக சொன்னான்...
“ஐயோ இல்ல மாமா... இப்ப உன் கண்ணுல லவ் தெரியுது... என்னால என் கண்ணையே நம்பமுடியல... வானத்துல பறக்குற மாதிரி உணருறேன் மாமா... திலீப்பை கட்டி அணைத்துக்கொண்டான்... இப்போது இன்னும் ஒரு ஆழமான ‘பச்சக் கன்னத்தில்..
“மாமா... இன்னிக்கு நான் லீவ் போட்டுடவா? பரவசத்தின் எல்லையை கடந்திருந்தான்...
“இல்ல மகி, நீ ஹாஸ்பிட்டல் போ... அல்ரெடி ரொம்ப லீவ் எடுத்திட்ட... நானும் ஷூட் முடிச்சிட்டு சீக்கிரம் வந்திடுறேன்.. வெட்கப்பட்டு சிரித்தான்...
“அய்யய்யோ... என்னென்னமோ நடக்குதே... எனக்கு தலையும் புரியல, காலும் புரியல... துள்ளிக்குதித்தான்...
“அதுக்கு இடைல இருக்குறதல்லாம் புரிஞ்சா போதும் மகி...
“போதும் மாமா... என் கண்ட்ரோலை நான் இழந்திடுவேன், ஹாஸ்பிட்டல் கிளம்புறேன் நான்... நடக்கும்போது உற்சாகமும் ததும்பி வழிந்தது... இப்படியொரு தருணத்துக்காகத்தான் இவ்வளவு கஷ்டங்களும்... திலீப்பிற்கு என் மேல காதல் வந்திடுச்சா?.. இனி எந்த நிலையிலும் அவனை தவற விட்டுடக்கூடாது....
“நாட் பீலிங் வெல், சின்ன ஆக்சிடென்ட், அண்ணன் கல்யாணம் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி ஒருவழியாக மருத்துவமனை நிர்வாகத்தையும் சமாளித்துவிட்டான்.. புறநோயாளிகளின் பிரிவில் ஏதோ நினைப்பில் ஆழ்ந்திருந்தான்..
“என்ன பண்ணுது?
“நெஞ்சு வலிக்குது சார்... அடிக்கடி படபடப்பு வருது
“எனக்கும் அப்டிதான் இருந்துச்சு... இப்போ பட்டாம்பூச்சி மனசுக்குள்ள பறக்குது சிரித்தான் மகி...
கையில் சிடி ஸ்கேனுடன் திகிலோடு நின்றார் நோயுற்றவர்... “சார்... என்றார் அதிர்ச்சியாக...
“ஐயோ சாரி... ரிப்போர்ட்ஸ் காமிங்க சுதாரித்துகொண்டான்...
அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டான்... எப்போதான் நான்கு மணி ஆகுமோ?.. நொடி முற்கள் கூட மெள்ள நகர்கிறது... காலையில் பார்த்த மகியின் பார்வை இன்னும் மனதினை விட்டு அகலவில்லை...
“ஹாய் மகி, லஞ்ச் வரலையா? பிரதீப் அழைத்தான்...
“பசி இல்லப்பா.. சிரித்தான்...
“என்ன ஆச்சர்யம்?.. மகி இன்னிக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்குறாப்ல தெரியுது?... கல்யாணம்னு போனிங்க, நாலு நாள் ஆளையே காணும்... இப்போ முகமல்லாம் சிரிப்பா வந்திருக்கிங்க?... ஒருவாறாக யூகித்துவிட்டான்...
“ஹ ஹா... ஆமா பிரதீப்... ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... ஏன்னு சரியா தெர்ல...
“காரணம் தேடாதிங்க, அனுபவிங்க... அப்புறம்... அன்னிக்கு திலீப் பத்தி நான் பேசுனத எதுவும் மனசுல வச்சுக்காதிங்க... தன்மையாக சொன்னான்...
“ச்ச ச்ச இல்லப்பா... இப்போ எதுக்கு அதப்பத்தி பேசிகிட்டு கொலை செய்தவனுக்கு கூட இந்த மனநிலையில் மகி மன்னிப்பு கொடுத்துவிடுவான்...
“திலீப்புக்கு கூட படம் பிக்ஸ் ஆகிடுச்சாமே... நீங்க ட்ரீட் வைக்கவேண்டிய கணக்கு கூடிட்டே இருக்கு மகி...
“உங்களுக்கு இல்லாததா... தாராளமா வைக்கலாம்...
“அப்புறம் நம்ம தோழர் அமைப்புல கூட இன்னிக்கு பார்ட்டி இருக்கு, வாங்களேன்
“இல்லப்பா... பார்ட்டில எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல... வேற எதாச்சும் மீட்டிங் இருக்கப்போ சொல்லுங்க, வரேன்.. நிலாவுக்கு போக அழைத்தால் கூட இன்று மட்டும் ‘அமாவாசைக்கு போகலாம் என சொல்லி மறுத்துவிடுவான்...
தனது அலைபேசியை எடுத்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பிரதீப்பிடம் ஒவ்வொன்றாக காட்டி விளக்கிக்கொண்டிருந்தான் மகி.. உதிஷாவும், அவள் அம்மாவும் வரும் புகைப்படங்களை மட்டும் அவசரமாக ‘ஸ்வைப் செய்தான்..
“மகி, ஒன்னு சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க... இவ்ளோ அளவுக்கதிகமா எப்பவும் சந்தோஷமா இருந்திடாதிங்க...
“ஏன்?
“சுஜாதா கதை ஒன்னு படிச்சிருக்கேன்... கணவனும் மனைவியும் அவ்வளவு அன்யோன்யமா இருப்பாங்க... இதுக்கு மேல சந்தோசம் வேணாம்னு கடவுள்கிட்ட மனைவி வேண்டிப்பா... அடுத்த நிமிஷம் அவளுக்கு ஒரு கால் வரும், அவ ஹஸ்பன்ட் ஆக்சிடன்ட்ல இறந்துட்டார்னு...
“ஏய் ஏய்.... என்ன பேசுற நீ?... மனுஷனா நீ? கோபத்தில் சிவந்தான்...
“இல்லப்பா... அந்த கதைல அப்டி வரும்னு சொல்றேன்...
“அதை எதுக்கு இப்ப சொல்லணும்?... மொத்தமா என் மூட் ஸ்பாயில் ஆகிடுச்சு.. அலைபேசியை எடுத்து திலீப்பின் எண்களுக்கு தட்டினான்... “நாட் ரீச்சபுள்... முருகா... மீண்டும் மீண்டும் தட்டிக்கொண்டே இருக்க, வார்த்தை பிசகாமல் ‘தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் இம்சித்துக்கொண்டே இருந்தது...
என்ன செய்யலாம்?... இன்று ஏ.வி.எம்ல ஷூட்டிங்க்னு சொன்னதா ஞாபகம்... அங்க போய் பார்க்கலாமா?.. நேரத்தை பார்த்தான், இரண்டு மணி... தலையில் கைவைத்துக்கொண்டு யோசித்தான்...
“ஏய் மகி, இப்போ என்னப்பா ஆச்சு?... நான் சும்மா ஒரு பேச்சுக்குதான் சொன்னேன்...
“ப்ளீஸ் பிரதீப்... கொஞ்சநேரம் என்னைய தனியா விடுங்க கனல் கசிந்தது...
காலண்டரில் சிரித்துக்கொண்டிருந்த முருகனை வணங்கிக்கொண்டான்... மீண்டும் அலைபேசியை அழைத்தான், அதே ‘நாட் ரீச்சபுள்... இனி இங்கு அமர்ந்திருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.. எழுந்து நடந்தான்... சாப்பிடாததால் கண்களும் இருட்டியது... அருகிலிருந்த ஜூஸ் பாட்டிலை எடுத்து வாயினுள் திணித்துக்கொண்டு நகர்ந்தான்...
மகியின் அலைபேசி அலறியது... புது எண்ணிலிருந்து வந்தது அழைப்பு...
நடுங்கிய கைகளுடன், பச்சை பட்டனை நோக்கி விரல்களை செலுத்தினான்...
கால்கள் நடுக்கத்தால் சுவற்றில் சாய்ந்துகொண்டு, அலைபேசியை காதில் வைத்தான்..
“ஹலோ..  யாரு?  தொண்டைக்குழி அடைத்துக்கொண்டது...
“மகிதான? மறுபுறத்தில் எங்கோ கேட்ட குரல், ஆனால் யோசிக்கத்தான் சிந்தை தயாரில்லை..
“ஆமா... நீங்க யாரு?.. என்ன விஷயம்? பதற்றம் பற்றிக்கொண்டது...
“நான் கார்த்தி... மறந்துட்டிங்களா வாய்சை?
அழைப்பை துண்டித்தான் மகி... நேரம் காலம் தெரியாமல் ஏதோ ஒரு கார்த்தி பீடிகை போட்டுக்கொண்டிருக்கிறான்... நிதானித்து எழுந்து விரைந்து நடக்கத்தொடங்கினான்...
“மகி சார், சுப்பையா கேஸ் ஷீட்ல ஏதோ சிக்கலாம்.. மறித்துக்கேட்ட செவிலிப்பெண்ணை பொருட்படுத்தாது கடந்து போனான்.. வாயிலில் நின்ற காவலாளியின் வழக்கமான வணக்கத்தையும் மறந்துபோனான்...
பைக்கை எடுத்தான்... எங்கே போவது?... ஏவிஎம் போகலாமா? வேற அவுட் டோர் ஷூட்டிங் எங்கயாவது போயிருப்பாங்களா?... வாசலில் நின்று யோசிக்க வேண்டிய கேள்வியா இது?... பின்னால் நின்ற கார் விடாமல் ஹாரன் அடிக்க, வேறு வழியின்றி வாகனத்தை செலுத்தினான்...
வழக்கத்தைவிட கூடுதலாக வாகன நெரிசல்.. போதாக்குறைக்கு நீண்ட நெடிய சிக்னல் வரிசை... வழிந்த வியர்வையை வழித்து வீசியபோது, குமாரிடம் ஊட்டியில் போன் நம்பர் வாங்கியது அவனுக்கு நினைவில் தோன்றியது...
சட்டென பைக்கை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, அந்த எண்ணை தேடினான்... ஏ, பி, சி... கடந்து கே.... கதிர், கிருஷ்ணா, குமார்... இதோ இந்த நம்பர்தான்... அழைத்தான்...
வெகுநேரம் ரிங் அடித்தும், பதிலில்லை... இந்நேரம் எந்த நாயகியிடம் “பூரிப்பு பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறானோ பாதகன்... மீண்டும் அழைத்தான்...
“ஹலோ.. சொல்லுங்க மகி.. அப்பாடா எடுத்துவிட்டான்...
“எங்க இருக்கீங்க?
“ஹாஸ்பிட்டல்ல... ஏன்?
“யூனிட்ல யாருக்கும் எதாச்சும் ப்ராப்ளமா?திலீப்பிற்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாது என்று மனம் பரபரத்துக்கொண்டிருந்தது...
“ஆமாப்பா.. ஒரு ஆக்ஸிடென்ட்... ஷூட்டிங் கூட இப்போ கான்சல் ஆகிடுச்சு, லீட் ரோல் பண்றவங்களுக்கு எதுனாச்சும் ஆகிட்டா இப்டிதான்...
“யா... யாருக்கு என்னாச்சு? முருகா....
“உதிஷாவுக்கு சுண்டுவிரல்ல கீறிடுச்சு, மத்தபடி ஒண்ணுமில்ல... அதுக்கே அவங்கம்மா இல்லாத ஆட்டம் ஆடி, ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டுவந்திடுச்சு


அப்போ திலீப்புக்கு... இழுத்தான்...
“அவருக்கென்ன?... ஆப்பிள் ஜூஸ் சாப்பிட்டு, உதிஷாவோட அம்மாகிட்ட கடலை போட்டுட்டு இருக்கார் சிரித்தான்...
உயிரே அப்போதுதான் வந்தது... நடுக்கம் மெள்ள குறைந்திருந்தது...
அடச்ச... ஏன் இப்படியல்லாம் எதிர்மறையா யோசிக்கிறேன்?.. நான் இவ்வளவு பதறிக்கிட்டு இருக்கும்போது, அந்த நாய் ஆண்ட்டி கிட்ட கடலை போட்டுக்கிட்டு இருக்கான்... வரட்டும், கவனிச்சுக்கறேன்... அரை மணி நேரமாக நடந்த எதுவுமே நினைவில்லை, சிரித்துக்கொண்டான்...
இதற்குமேல் எங்கே ஹாஸ்பிட்டல் போறது?... பைக்கை வீட்டை நோக்கி செலுத்தினான்...
வீட்டை நெருங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும், மகியின் மனது உற்சாகத்தில் திளைத்தோடியது...  ஷூட்டிங் கான்சல் ஆகிட்டதால சீக்கிரமே அவனும் வந்திடுவான்... இன்னிக்கு நைட் என்னவல்லாம் பண்ணனும்?... ஐயோ, அவனுக்கு எப்டி நடந்துகிட்டா பிடிக்கும்?... அவன்கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கணும்...
வெட்கத்தில் தானாக சிரித்துக்கொண்டான்...
“என்ன டாக்டர் தனியா சிரிக்குறீங்க? அப்பார்ட்மெண்ட் காவலர் வணக்கம் வைத்துவிட்டு சிரித்தார்... ஒரு நூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டிவிட்டு, இன்னும் அதிகமாய் சிரித்துக்கொண்டான்...
எதற்கு சிரிக்கிறோம்? எதற்கு பணம் கொடுக்கிறோம்? ஒன்றும் புரியவில்லை... லிப்ட் எங்கோ மூன்றாவது மாடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது... அவசரமாக ஒவ்வொரு படிகளாக தாவிக்குதித்து ஏறி நான்காவது மாடியை அடைந்தபோது, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியிருந்தது...
எதிர்வீட்டு சிறுவன் கையில் மிட்டாயுடன் முன்னே நிற்கிறான்... “ஏய் ஸ்ரீ குட்டி, என்னடா சாக்லேட்? கன்னத்தை கிள்ளினான்...
“இன்னிக்கு பர்த் டே, சாக்லேட் எடுத்துக்கோங்க!
மிட்டாய் எடுத்துக்கொண்டு, அவன் கன்னத்தில் முத்தமிட்டான்... “முத்தம் கொடுத்ததோட முடிச்சுக்காம, ஒழுங்கா எதாச்சும் கிப்ட் வாங்கிக்கொடுங்க!.. சொல்லிவிட்டு ஓடிவிட்டான்...
சிரித்துக்கொண்டே அழைப்புமணியை தட்டிவிட்டு, மூச்சிரைக்க கதவில் கைவைத்தபடி நின்றான்..
திறந்த கதவின் மறுபுறத்தில் யாரோ ஒரு புதியவன்.. கண்களில் குறும்பும், உதட்டில் பொய் கோபமுமாக அழகே உருவாய் ஒரு மன்மதன்... எங்கோ பார்த்த முகம்தான், நன்றாக பரிச்சயமான நபர்தான்... கண்களை கசக்கிக்கொண்டு, உற்று கவனித்தான்..
வேகமாய் உள்ளே பாய்ந்த வேகத்தில் அவனை கட்டியணைத்து, “டேய்... கார்த்திக்குட்டி... என்ன இது ஷாக் சர்ப்ரைஸ்? கொஞ்சம் உடல் இறுகிப்போயிருக்கிறான், ஜிம் எதுவும் போகிறான் போல!...
“தள்ளிப்போ மாமா... என்கிட்டே பேசாத மகியை உதறிவிட்டு நகர்ந்து நின்றான்...
“ஏண்டா என்னாச்சு? கைபிடித்து கேட்டான்...
“உனக்கு கால் பண்ணினா கட் பண்ணி விடுற... அந்த அளவுக்கு ஆகிட்டேன்ல?
“குட்டிம்மா, இத கேட்டுமா இன்னும் சுனாமி வரல?... நீ கால் பண்ணி நான் எப்போ கட் பண்ணேன்
“இப்போ ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னதான்...
யோசித்தான்... பனி படலம் மறைந்து, காட்சிகள் தெளிவாவதைப்போல நினைவுகள் மீண்டன.. ‘வாய்ஸ் தெரியலையா?... நான்தான் கார்த்தி அந்த கார்த்தி இவன்தானா?... அடக்கடவுளே அப்படியொரு இக்கட்டான சமயத்திலா இவன் அழைக்கணும்!..
“நீ வெறுமனே கார்த்தின்னு சொன்னதால யாரோன்னு நினச்சுட்டேண்டா
“வெறுமனே கார்த்தின்னு சொல்லாம, நவரச நாயகன் கார்த்தின்னு சொல்ல சொல்றியா?
“அப்டி இல்லடா... நீ என்னோட கார்த்திக்குட்டிதான எப்பவும்... இல்லன்னா எப்பவும் போல ஆசையா மங்க்கி மாமான்னு சொல்லிருந்தா, சட்டுன்னு தெரிஞ்சிருக்கும்ல... மொட்டை வெயில்ல ட்ராபிக்ல நிக்குறப்போ, கார்த்தின்னு சொன்னா நான் எப்டி கெஸ் பண்ணமுடியும்கன்னத்தை கிள்ளினான்... சந்தன நிறத்து மேனியில், மெல்லிய குங்கும நிறம் படர்ந்தது...
“இப்டி எதாச்சும் சொல்லி ஆள கவுத்திடு மங்க்கி மாமா... ஆமா, நீ ஏன் வியர்த்து விறுவிறுத்து செங்கல் சூளைல வேலை பாக்குற மாதிரி வந்திருக்க? மகியின் தலைமுடியை தட்டிவிட்டான், உள்ளே படிந்திருந்த வியர்வை திட்டுக்கள் இறைந்தன... ஒரு நாற்காலியை போட்டு, அதில் அமரச்செய்து காற்றாடியின் சுவிட்ச்சை போட்டுவிட்டான்... ஒரு துண்டை எடுத்து மகியின் தலையை துடைத்துவிட்டு, அவனருகில் அமர்ந்தான்...
“எப்டிடா இருக்க? அக்கறையாக கேட்டான் மகி...
“ரோட்ல போற நாலு பேரு சைட் அடிக்குற அளவுக்கு நல்லாவே இருக்கேன் மாமா... சிரித்தான்...
“இன்னும் உன் பேச்சு மட்டும் குறையல பாரு! மூக்கை திருகினான்...
“ஆ,, ஆ... பொய்யாக வலிப்பதை போல செய்தான்...
“என்னடா திடீர்னு இங்க?...
“இங்கதான் டிசிஎஸ்ல பிளேஸ்மென்ட் ஆகிருக்கேன் மாமா... இன்னும் பத்து நாள்ல ஜாயின் பண்ணனும்... அதுவரைக்கும் உன்கூட இருந்து, உன்ன இம்சை பண்ணலாம்னு வந்தேன்...
“இந்த அட்ரஸ் எப்டி தெரியும்?
“திலீப் நாயர் வீடு கண்டுபிடிக்கிறது கஷ்டமா என்ன?
“ஓ... அப்போ எல்லாம் தெரியுமா உனக்கு?
“எல்லாம் தெரியாது... நீ வீட்டைவிட்டு கோவிச்சுகிட்டு வந்ததுலேந்து, இப்போ திலீப்போட என்கேஜ் ஆனவரைக்கும் தெரியும் சிரித்தான்... அப்படியானால் எல்லாவற்றையும் தெரிந்துதான் வந்திருக்கிறான்...
“யார் சொன்னது?
“ஊர்ல அத்தைதான் சொன்னாங்க...
“அம்மா நல்லா இருக்காங்களா?
“ஹ்ம்ம்... ஏதோ இருக்காங்க... எப்பவும் உன்னப்பத்தியே நெனச்சுகிட்டு
மகியின் கண்கள் கலங்கியது... இவ்வளவு காலம் அம்மா பிள்ளையாகவே இருந்துவிட்டு, திடீரென ஒரு தருணத்தில் அவளைவிட்டு வெகுதூரத்தில் வந்துவிட்டேன்... சிலநேரங்களில் நானும் எவ்வளவு சுயநலமாக வாழ்கிறேன்!... அவசரமாக கண்ணீரை துடைத்துக்கொண்டான்...
“ஆனா மாமா இன்னும் எடுத்த அருவாள கீழ வைக்கல... அது துருப்பிடிச்சு உதுந்து போறவரைக்கும் விடமாட்டார்னு நினைக்குறேன் சிரித்தான் கார்த்தி... மகிக்கும் சிரிப்பு வந்துவிட்டது...
அவ்வளவு நேரமும் நடந்தவற்றை மிரட்சியோடு கவனித்துக்கொண்டிருந்த வாசுவிற்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை... சப் டைட்டில் இல்லாமல் இரானிய திரைப்படம் பார்த்ததை போல ஒரு உணர்வு...
ஒருகட்டத்தில் பொறுமை இழந்து, “என்னடா நடக்குது இங்க?... யார் இந்த அறுந்த வாலு? கேட்டேவிட்டான்...

அப்போதுதான் இருவரின் நினைவுகளும் தஞ்சை வீதிகளிலிருந்து, சென்னை சிட்டிக்குள் எட்டிப்பார்த்தது...
“சாரி வாசு... இவன்தான் கார்த்தி... இல்ல, கார்த்திக்குட்டி.. என் அத்தை பையன்... அறிமுகப்படுத்தினான்...
“ஒரு அரை மணி நேரத்துல வீட்டையே அதகளப்படுத்திட்டான்... யார்னு கேட்டா, ‘மகி என்னை வச்சிருக்காருன்னு சொல்றான்.. பெருமூச்சு விட்டுக்கொண்டான் வாசு...
“உன்மைதான மாமா... உன் மனசுக்குள்ள என்ன வச்சிருக்கதான? குழைந்தான்...
“ஆமா குட்டி... அதிலென்ன சந்தேகம்! பதிலை முடிப்பதற்குள், மகியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, “தாங்க்ஸ் மாமா என உற்சாகமானான்...
“ஆமா.. உன் அத்தை பையன் எதுக்கு உன்ன மாமான்னு கூப்பிடுறான்?.. உறவுமுறைப்படி அத்தான்னுதான சொல்லணும் குடைந்துகொண்டிருந்த குழப்பத்தை கொட்டினான்..
“இது வெறும் உறவுக்காக கூப்பிடிற வார்த்தை இல்ல, உள்ளத்துலேந்து உணர்வுப்பூர்வமா கூப்பிடுற வார்த்தை.. முகத்தை சீரியசாக வைத்து சொல்ல எத்தனித்து, இறுதியில் சிரித்துவிட்டான் கார்த்தி..
“உனக்கு தலை சுத்துமே, நீ இன்னும் படுக்கல? வாசுவை சீண்டினான் மகி..
“என்னமோ சொல்லிக்கோங்க, என்ன ஆள விடுங்க அறைக்குள் பாய்ந்துவிட்டான்...
“கல்யாணமல்லாம் ஆகிடுச்சாம், எனக்கு ஒரு வார்த்தை சொல்லலையே மாமா...
“அது சும்மா ஒரு மனதிருப்திக்காகத்தான்டா, யாருக்குமே சொல்லல..
“யாரோவா நானும்?
“ச்ச ச்ச.. அப்டி இல்லடா.. சொல்றதுக்கான சூழ்நிலை இல்ல.. உன்ன எப்பவாச்சும் நான் அவாய்ட் பண்ணிருக்கனா?
“பேசி கவுத்திடுவான் மங்க்கி மாமா... சரி, உங்க வெட்டிங் போட்டோக்களாச்சும் காட்டு..
மகியின் அலைபேசியில் ஒவ்வொரு புகைப்படமாக ஸ்வைப் ஆகின.. ஒவ்வொரு படத்திற்கும் ஆயிரம் விளக்கங்கள் கேட்டு கடந்துகொண்டிருந்தான் கார்த்தி.. மகியின் மடியில் தலைவைத்தவாறு மொபைலை தலைக்கு மேல் உயர்த்தியபடி அவற்றை பார்த்துக்கொண்டிருந்த அந்த தருணத்தில், சடாரென வீட்டின் கதவு திறந்தது...
கதவை திறந்த திலீப்பின் முகம் மெள்ள இருளத்தொடங்கியது... மகியின் மடியில் ஒரு வாலிபன், அதுவும் வாட்டசாட்டமான அழகன்.. வாய் நிறைந்த புன்னகையோடு, அளவளாவிக்கொண்டிருப்பதை பார்த்ததும் நெஞ்சில் ஒரு முள் ஆழமாக பாய்ந்தது...
“ஹலோ... உள்ள வர்றவங்க பர்மிஷன் கேட்டு வரமாட்டிங்களா?... மேனர்ஸ் தெரியாது? மடியிலிருந்து மஞ்சம் கலைக்காமல் திலீப்பை தலைகீழாக பார்த்தபடி கேட்டான் கார்த்தி...
திலீப் மேலும் அதிர்ச்சியானான்... மகியோ சூழல் புரியாது சிரித்தபடி, “ஏய் லூசு, எழுந்து யாருன்னு ஒழுங்கா பாரு! கார்த்திவை நிமிர்த்தி அமர்த்தினான்...
ஜன்னல் வழியே வெளியான ஒளிக்கீற்றைகள் கண்களை நெருட, ஒருவழியாக சுதாரித்து பார்த்தபோது மெலிதாய் சிரித்தான் கார்த்தி...
“ஓ.. நீங்களா நாயரே, நான் வேற யாரோன்னு நினச்சுட்டேன்... உள்ள வாங்க
என் வீட்டில் அமர்ந்துகொண்டு அதிகாரம் செய்துகொண்டிருக்கிறான் எவனோ... அதுவும் ‘நாயர்ங்குறான்... “நான் நாயர் இல்ல... திலீப் சத்தம் வராமல் சொன்னான்...


திலீப் நாயர்தானே உங்க பேரு?... அதான் சேட்டா நாயர்னு பறஞ்சு...
திலீப் பதில் சொல்லவில்லை.. அவர்களை கடந்து அறைக்குள் நுழைந்தான்.. வாசு உறங்கிக்கொண்டிருந்தான், ஊரே பற்றியெரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனாய்... அருகிலிருந்த டேபிள் வெயிட்டால் வாசுவின் மண்டையை பிளக்கும் அளவிற்கு கோபம் வந்தது.. எவன் மேலோ உள்ள வெறுப்பை ஏன் இவன் மேல காட்டனும்?... டேபிள் வெயிட்டை கீழே வைத்துவிட்டு, வாசுவின் தலையில் நறுக்கென கொட்டினான்...
பதறிப்போய் எழுந்தான் வாசு... திலீப்பின் உக்கிரப்பார்வை அவனுள் இன்னும் கலவரத்தை உண்டாக்கியது... சட்டென சுதாரித்து இரண்டடிகள் பின்னே நகர்ந்துவிட்டு, “என்னடா?.. எதுக்குடா இப்போ கொட்டுன? தலையை தேய்த்துக்கொண்டான்...
“யாருடா அவன்? அறைக்கதவை நோக்கி விரலை நீட்டினான்...
கதவில் ஒட்டப்பட்டிருந்த படத்தை பார்த்துவிட்டு, “ரன்பீர் கபூர்... நீதான ஒட்டின, மறந்துட்டியா? அப்பாவியாக கேட்டான்..
“எரும எரும... நான் ஹால்ல மகியோட உக்காந்திருக்க ஜந்துவ பத்தி கேட்டேன் அடிக்கப்பாய்ந்தான்..
“அத தெளிவா கேட்கலாம்ல... அவன் மகியோட அத்தை பையனாம்.. பேரு கார்த்திக்குட்டி.. இல்ல இல்ல, கார்த்தி... நாக்கை கடித்துக்கொண்டான்...
அத்தை பையனா?... அதுக்காக அவ்வளவு நெருக்கமா இருக்கனுமா?... பற்கள் நறநறத்தன...
“உன்ன எதாச்சும் கலாய்ச்சுட்டானா என்ன? ஆர்வமாக கேட்டான்..
கையில் கட்டியிருந்த வாட்ச்சை கழற்றிவிட்டு, சட்டையை கையில் மடித்துக்கொண்டே வாசுவை திரும்பிப்பார்க்க, அப்படியே நிசப்தமாகிப்போனான் வாசு...
ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த சமயத்தில் வேண்டுமென்றே உதிஷாவின் விரலை கீறிவிட்டு, வரும் ரத்தத்தை பார்த்து, “ஐயோ ப்லட்... மயக்கம் வருதா உதிஷா? என்று அவள் தலையை வலுக்கட்டாயமாக சாய்த்து, மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ஒருவழியாக படப்பிடிப்பிலிருந்து பாதியோடு கழன்றுகொண்டு அரக்கபபறக்க மகியை தேடி ஓடிவந்தால், அவனோ எவனோ ஒரு அத்தை பையனோட விளையாடிக்கொண்டிருக்கிறான்...
அதுவும் ஆள் வேற அம்சமா இருக்கான்... என்னைவிட கொஞ்சம் கலரும் கூட தெரிகிறான்..
கண்ணாடி முன்பு நின்று முகத்தை வெறித்துப்பார்த்தான் திலீப்.. மெலிதாய் மெலானின் பிக்மன்ட்கள், சந்தன நிறத்தை கருக்க செய்திருந்தன... இனி சன் ஸ்க்ரீன் லோஷன் போடணும், வெயிலில் ஷூட்டிங் நடக்குறப்போ கவனமா இருந்துக்கனும்... என்றைக்கும் இல்லாத அழகின் மீதான அக்கறை, இன்றைக்கு அதிசயமாக எட்டிப்பார்க்கிறது...
கட்டிலில் சாய்ந்துகொண்டான்.. நேரம் ஆறை கடந்திருந்தது, அறைக்கு வெளியே இன்னும் பேச்சுக்குரல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...
“ஏய் மாமா... உன் ஆளு வந்து இவ்ளோ நேரமாச்சே, எதாச்சும் சாப்பிட கொடுத்தியா?
“அச்சச்சோ... உன்னோட பேசிட்டு இருந்ததுல அதை சுத்தமா மறந்துட்டேன், இரு காபி போட்டு குடுத்திட்டு வரேன்..
அவசரமாக பாலை ஊற்றி, தூளை கொட்டி, சக்கரையை கலந்துகொண்டு அறைக்குள் நுழைந்தான்...
“மாமா... கண்களை மூடி படுத்திருந்த திலீப்பின் கன்னங்கள் தொட்டு எழுப்பினான் மகி..
எழவில்லை, வேறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்... மீண்டும் எழுப்ப, ஊஹூம்... எழுவதாக உத்தேசம் இல்லை.. பாவம் இன்னிக்கு ஷூட்டிங்ல ரொம்ப வேலை இருந்திருக்கும் போல, டயர்டா தூங்குறான்...
எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு, கதவை சாத்திவிட்டு ஹாலுக்கு சென்றான் மகி...
“என்ன காபி குடிக்கலையா?
“இல்லடா... தூங்குறார்... ரெஸ்ட் எடுக்கட்டும், சப்பாத்தி போட்டுட்டு சாப்பிட எழுப்பிக்கலாம்...மாவை பிணைந்துகொண்டிருந்தான்...
“ஹ்ம்ம்... வீட்ல இருந்தவரைக்கும் கீழ விழற பொருளை எடுத்துவைக்காத ஆளு, இப்போ மாஞ்சு மாஞ்சு வேலை பார்க்குற...சிரித்தான் கார்த்தி...
“கமிட்மன்ட்னா அதானே குட்டி
“அதென்ன கமிட்மென்ட்னா நீதான் வேலை பாக்கணுமா?... நீ சப்பாத்தி போடு, அவரு குர்மா வைக்கட்டும்
“இதென்ன பாகப்பிரிவினையா?.. நீ அதப்பாரு, நான் இதப்பார்க்குறேன்னு சொல்றதுக்கு... எத்தனையோ நாள் திலீப் வீட்ல இருக்கும்போது, அவர்தான் சமச்சிருக்கார்... ஏன் பலநேரம் வாசு சமைப்பான்.. இதுல எங்கிருந்து வந்தது ஈகோ இஸ்யூஸ்
“மாமா... கிரேட்... கன்னத்தை கிள்ளினான்...
தூக்கம் களைந்து வந்த வாசு, அதைக்கண்டதும், “அடப்பாவிகளா இன்னும் கொஞ்சிக்கிட்டுதான் இருக்கிங்களா? தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்து சென்றான்...
 “நம்ம மகேஷ் இருக்கான்ல, அவன் காயத்ரிய லவ் பண்றான்... அது அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சு...” கார்த்தி ஓயாது செய்திகளை அசைபோட்டுக்கொண்டிருந்தான்..
அறைக்குள் இன்னும் கண்களை திறக்காமல் ஒரு கனல் கனன்றுகொண்டு இருந்ததை அறியாது மகி சமையலில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தான்...
சாப்பிட்டு முடித்து பாலகுமாரன் நாவல் ஒன்றை விருப்பமில்லாமல் புரட்டிக்கொண்டிருந்தான் திலீப்.. விரல்கள் மட்டும் தாள்களை நகர்த்திக்கொண்டிருக்க, கண்கள் திறக்கப்போகும் அறைக்கதவையே கவனித்துக்கொண்டிருந்தது... நேரமும் பதினொன்றை நெருங்கிவிட்டது... காலை ஆறு மணிக்கு எழணும், இதற்கு மேலும் விழித்திருப்பது வேலைக்கு ஆகாது... புத்தகத்தை மூடி கீழே வைத்துவிட்டு, போர்வையை தலைக்கு மேல் உயர்த்திய கணப்பொழுதில் கதவு திறந்தது...
முகத்தை துடைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் மகி... நல்லவேளையாக திலீப் இன்னும் தூங்கவில்லை, உற்சாகம் அரும்பியது... சத்தம்வராமல் கதவை சாத்தி தாழிட்டுவிட்டு, திலீப்பை நோக்கி நகர்ந்தான்..
“குட் நைட் மகி பொய்யாக கொட்டாவி விட்டான்..
“என்னது குட் நைட்டா?.. டேய் மாமா, காலைலேந்து இலவுகாத்த கிளியா காத்துகிட்டு இருக்கேன், சட்டுன்னு குட் நைட் சொல்லிட்ட அருகில் அமர்ந்து போர்வையை விலக்கினான்...
“மிஸ்டர் மகிழன், நான் வீட்டுக்கு வந்து ஆறு மணி நேரமாச்சு, இப்போதான் என் ஞாபகம் வருதா?
“கார்த்தி வந்திருந்ததால கொஞ்சம் பேசிட்டு இருந்தேன், அவ்ளோதான் மாமா.. கன்னங்களை வருடினான்...
“ஹ்ம்ம்.. அப்போ இன்னொரு ஆறு மணி நேரம் நீ வெயிட் பண்ணு, எனக்கு தூக்கம் வருது கண்களை அழுத்தி மூடினான்...
“இன்னும் அஞ்சு நிமிஷம் கூட காத்திருக்க முடியாது, போடா மாமா திலீப்பின் மேலே பாய்ந்தான்.. தடுக்கவில்லை, கண்களை திறவாமல் ரசிக்கத்தொடங்கினான்.. கன்னங்களை கன்னங்களோடு உரசினான்.. நெற்றியில் தொடங்கிய முத்தப்பயணம், உதட்டை நெருங்கியபோது உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்தது... உதட்டை உதடுகளால் அழுத்தி, இன்னும் ஆழமாக.....
“டக்...டக்... தடாக்... கதவு வேகமாய் தட்டப்பட, அவசரமாக உதடுகள் விலகின... முத்தம் கூட இன்னும் முழுதாய் கொடுக்கவில்லை, அதற்குள் ஒரு இடைஞ்சல்.. வாசுவாகத்தான் இருக்கும்.. கதவை திறந்தபின்னர், “மொபைல் தாயேன், கேம்ஸ் விளையாடனும்னு கேட்டாலும் கேட்பான்... இன்னிக்கு ஒருவழி பண்ணிடுறேன், எரிச்சலோடு கதவை திறந்தான் மகி...
மறுபுறத்தில் வாயல்லாம் பற்களாக கார்த்தி நின்றுகொண்டிருந்தான்...
“என்னடா? இயலாமையோடு கேட்டான் மகி.. கோபப்படக்கூட முடியவில்லை...
“என்ன மாமா இங்க வந்து படுத்துட்ட?...
“இதான் எங்க ரூம், நீ வாசு ரூம்ல படுத்துக்கோ
“வாசுவோட படுக்கத்தான் சென்னை வந்தனாக்கும்?... நிறைய பேசணும், நீ அந்த ரூம் வா மாமா.. வாசுவ வேணா நாயருக்கு கம்பெனி கொடுக்க சொல்லலாம்..
அப்பாவியாக திலீப்பை எட்டிப்பார்த்தான்.. எண்ணெயில் போட்ட கடுகாய் முகம் வெடித்திருந்தது, வேறு பக்கம் திரும்பி உறங்குவதற்கு ஆயத்தமானான்...
“என்ன மாமா பாக்குற?, அவர் தூங்கிட்டார் போல.. நீ வா... கையை வலுக்கட்டாயமாக பிடித்து அடுத்த அறைக்குள் இழுத்துசென்றான்.. வாசு இந்நேரம் ஏதோ ஒரு நாயகியோடு டூயட் பாடிக்கொண்டிருப்பான்... அவனை மெள்ள உருட்டி நகர்த்திவைத்துவிட்டு, பேசத்தொடங்கினான் கார்த்தி..

                                  ****************

No comments:

Post a Comment