Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 28 December 2012

சென்னை தோஸ்த் அமைப்பிடமிருந்து வந்துள்ள கடிதம்....

-->
.



என் வலைப்பூவில் நான் ஒருபால் ஈர்ப்பு அமைப்புகள் பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கு சென்னை தோஸ்த் அமைப்பின் நிறுவனர் விக்ராந்த் பிரசன்னா அவர்களிடமிருந்து வந்த நேரடி பதில்.... ஒரு விமர்சகனாக இரண்டு பக்க கருத்துகளையும் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்பதால், அவர்களின் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்....



நண்பர் விஜய்க்கு..



கே அமைப்புகள் மற்றும் நமது அமைப்பு சார்ந்த பணிகள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு நான் நேரடியாகவே பதிலளிக்க விரும்பினதாலதான் இந்தக் கடிததத்தை எழுதுகிறேன். இதையும் நீங்கள் உங்கள் வலைப்பூவில் பதிவிட்டு அதன் மூலம் உங்கள் வாசகர்கள் இருதரப்பு கூற்றினையும் தெரிந்துகொள்ள உதவுவீங்கன்னு நம்பறேன்.



உங்கள் மூலமாக தான் நாங்கள் முதல்முறையாக விமர்சன்ங்களை எதிர்கொள்கிறோம் என்றும், அதனாலதான் அதை எங்களால் ஏற்க முடியவில்லையென்றும் குறிப்பிட்டிருக்கீங்க. நீங்கள் கூறுவதில் அல்லது கூறுவதாக எங்களுக்கு விளங்கியதில், உண்மை இருப்பதாய் கொள்ள முடியவில்லை. ஏனெனில் பூமிக்கு வந்த நாளிலிருந்து சமுதாயத்திடமிருந்தும், குடும்பத்தாரிடமிருந்தும் நாம் எதிர்ப்பை மட்டுமே பெற்று வருகிறோம். இன்னும் அது தொடர்கதையாத்தான் உள்ளது. அதையும் மீறி வெளியே வந்து இந்தப் பணிகளில் ஈடுபடுவதே உங்களைப் போன்ற நண்பர்களுக்கு நம்பிக்கை கொடுக்கத்தான். விமர்சனங்கள் எங்களுக்கு புதிதல்ல. 377 வழக்கு மற்றும் ப்ரைட் மார்ச்களுக்கு பிறகு தான் நம் நாட்டில் இந்த அளவுகேனும் ஊடகங்கள்லயும் இணையத்திலயும் தன்பால்ஈர்ப்பு பற்றி விவாதிக்க முடியுதுங்குறதை நீங்க கவனிக்கனும்.

சில பழமைவாத அமைப்புக்கள்ல இருந்து உயிருக்கு அச்சுறுத்தல்கள், குடும்பத்தினரே வேறுபடுத்தி பார்க்கிறது போன்றவை மட்டுமில்லாம பல பேர் கிட்ட இருந்து நமக்கு கிடைச்சதெல்லாம் எதிர்மறையான கருத்துக்கள் மட்டும் தான். ஆனா இதையெல்லாம் மீறி ஊடகம், காவல்துறை, குடும்பங்கள், சுகாதார அமைப்புகள், அரசுன்னு எல்லோரோட கவனத்தையும் நம்ம பக்கம் திருப்பி அவர்களுக்கு தன்பால் ஈர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டுதான் இருக்கோம்.. சமீபத்தில நாம நடத்துன ப்ரைடோட நோக்கமே பாலியல் சிறுபான்மையினர் நலச்சங்கம், Gay, Lesbian and Bisexual (Sexual minorities) Welfare Board-ஐ அரசாங்கம் அமைக்கணும்கிறது தான். இதற்கான பிரஸ் ரிலீஸ் கீழ உள்ள லிங்க்ல இருக்கு. தயவுசெஞ்சு அதை பாருங்க






ப்ரைட் ஊர்வலம் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்கள்ல நடந்தது ஆனா அருப்புக்கோட்டை போன்ற சின்ன ஊர்கள்ல நடக்கலங்குறது உண்மை தான். ஆனா அது போன்ற ஊர்கள்ல நடத்தக் கூடாதுங்குறது எங்க எண்ணமில்ல. நடத்தும் அளவிற்கு காலம் இன்னும் கனியவில்லை என்பதுதான் உண்மை. உங்களுக்காக ஒரு சின்ன புள்ளிவிவரம்.. 2009 சென்னைல நடந்த ப்ரைட்ல ஏற்றத்தாழ்வு இல்லாம, மொழி, பாலின பாகுபாடு பார்க்காம 800 பேர் கலந்துக்கிட்டாங்க. ஆனா 2012ல மதுரைல நடந்த ப்ரைடோட நிலை என்ன தெரியுமா?!! 15 பேர் மட்டுமே கலந்துக்கிட்டாங்க. அதுலயும் 8 பேர் சென்னைலருந்து வந்தவங்க. அவங்கள நான் இங்க குறை சொல்லல. மாறாக, அந்த புலப்படாத நண்பர்களை நாம் சென்றடைய இன்னும் பொறுமையா இருக்கணும்னு சொல்றேன்.. அது ஒரே நாள்ல நிகழக்கூடிய மாற்றம் கிடையாது. அதே போல இந்த ப்ரைட் மார்ச் எல்லாம் எதோ பணம் படைச்சவங்களுக்கு மட்டுமேன்னும் நடுத்தர மக்களைப் போய் சேர்றதுயில்லைன்னும் சொல்லியிருக்கீங்க. அடுத்த ப்ரைடுல நீங்களே கலந்துகிட்டிங்கன்னா எவ்வளோ நடுத்தர மக்கள் இதுல கலந்துக்கறாங்கன்னு உங்களுக்கே தெரிய வரும்.



அதே போல பத்திரிக்கை உட்பட தமிழ் ஊடகங்களை நாங்க அணுகுறதில்லைன்னும் ஏதோ ஒரு ‘இன்பாக்ஸ்’ செய்தியை கணக்குல எடுக்க முடியாதுன்னும் சொல்லிருக்கீங்க. திருநங்கை சமூகத்தோடும் நம்மை ஒப்பிட்டு இருக்கீங்க. அடுத்த பிரஸ் ரிலீஸின் போது உங்களையும் நான் கூப்பிடனும்னு நினைக்கிறேன். அப்போ உங்களுக்கு அவர்கள் மனப்பான்மை தெரியவரும். அவர்கள் எதிர்பார்க்கும் பரபரப்பு தகவல் எதுவுமே நம்மகிட்ட இருந்து வர்றதில்லைன்னு நினைக்கிறாங்க. அப்படியே எதுனா எழுதினாலும் திருநங்கை சமூகத்தின் செய்தி புகைப்படங்களுக்கிடையேத்தான் அவற்றை பிரசுரம் செய்யறாங்க. ஊடக நண்பர்களுக்கு தொடர்ந்து நம்மை பற்றிய விழிப்புணர்வு பயிற்சிமுகாம் நடத்தினாலும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் நம்ம பத்தி தவறான கருத்துக்கள் மட்டும் தான் எழுதறாங்க. அப்படி இருந்தும் கூட சத்யம் டிவி, சன் செய்திகள் (டாக்டர் கமராஜுடன்), விஜய் டிவி, தினகரன், தினமணி போன்றவைகள்ல நாம் வந்துக்கிட்டு தான் இருக்கோம். அதை நீங்க கவனிக்க தவறியிருந்தீங்கன்னா அதுக்காக வருத்தப்படறேன். சத்யம் டிவில வந்த கலந்துரையாடலை பார்க்க கீழ லின்க் குடுத்துருக்கேன். இன்னொரு விஷயம் அதுல இருக்குறவரு மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவரு. சென்னைல உள்ள சர்வதேச பள்ளிக்கூட்த்துல இல்ல.








அடுத்து பெரும்பாலும் நம்ம நிகழ்ச்சிகள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்ல நடக்குதுன்னும், அப்படி இல்லாம பொது இடங்கள்ல நடக்குதுன்னா அதுக்கான அத்தாட்சியையும் கேட்ருக்கீங்க. கீழ உள்ள லிங்க்கையும் அதில் உள்ள புகைப்படங்களையும் தயவு செய்து பார்க்கும்படி உங்களை கேட்டுக்குறோம். பெரும்பாலும் இந்த 2 அமைப்புக்களும் தான் முன்னின்று இதுபோன்ற நிகழ்வுகளை நடத்திட்ருக்காங்க. இவங்களுக்கு எங்கயிருந்தும் நிதியுதவியோ, நன்கொடையோ கிடைக்கிறதில்லைங்குறதையும், பெரும்பாலும் அமைப்புக்களுக்குள்ள இருக்கவங்களோட சொந்தப் பணம்ங்றதையும் தெரிவிச்சிக்க விரும்புறேன். அவர்களோட சொந்த பணத்தை எப்படி செலவிடனும்னு சொல்ற உரிமை உங்களுக்கு இருக்கிறதா எனக்குப்படலை. வெளிநாட்டுப் பணம் குறித்தோ, நன்கொடை பணம் குறித்தோ நீங்க குற்றம்சுமத்துறதா இருந்தா, ஆதாரத்தோட செய்ங்க இல்லைன்னா உங்க மீது வழக்குகளா கூட அவை முடியலாம்.







அப்புறம் இது போன்ற பொது நிகழ்வுகளை நகரம்தவிர்த்த இடங்களில் நடத்தணும்னு சொல்லிருக்கீங்க. நல்ல விஷயம் தான். ஆனா அதுல எத்தனை பேர் கலந்துக்குவாங்கன்னு நினைக்கிறீங்க? இப்படி ஒரு நிகழ்ச்சியை நட்த்துறதுக்கு காவல்துறை கிட்ட அனுமதி வாங்குறது எப்படின்னு தெரியுமா? இதை நடத்துவதற்கான செலவின நிதி எங்க இருந்து வரும்? அதே போல பார்ட்டி நட்த்துறதால யாருக்கும் எந்த பயனுமில்லைன்னு சொல்லிருக்கீங்க.. 2012ல அநாதை இல்லங்களுக்கு எவ்ளோ பணம் நன்கொடையா குடுத்துருக்கோம்னு தெரியுமா?! ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கற்பனை ஊக்குவிப்பு பயிற்சி முகாம் (Creative workshop) நடத்த எவ்ளோ தொகை செல்வாச்சுன்னு தெரியுமா? ப்ரைட் மார்ச்க்காக எவ்ளோ தொகை நன்கொடையா அளிக்கப்பட்ட்துன்னு தெரியுமா? தன்பால்சேர்க்கைவெறுப்பிற்கு எதிரான மனித சங்கலிப்போராட்டம், மெழுகேந்தல் போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா? எத்தனை தமிழ் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்குன்னு தெரியுமா?!



தமிழ் இலக்கியத்தோட ஆங்கில எழுத்துக்களை ஒப்பிட்ருக்கீங்க. யாராவது மாத இதழ் வெளியிட நிதியுதவி செய்யத் தயாரா இருந்தா நாங்க அவருக்கு உதவி செய்ய காத்துக்கிட்ருக்கோம். ஹிந்தியிலும் கூட இதுவரை ஒரு மாதஇதழோ வருட இதழோ பதிப்பிக்கப்படுவதில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்பிகிறேன்.



நானும் உங்களோட பல கருத்துக்களை ஒத்துக்குறேன். பெருநகரங்கள் தவிர்த்து நாம் இன்னும் பரவலாக ஊடுருவவில்லை. தமிழ் திரைப்படத்துறையை நாம் நினைத்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும். திருநங்கை சமூகத்தைப் போலல்லாமல் நமக்கு அரசாங்கத்திடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ நிதியோ வேறு உதவிகளோ இதுவரை கிடைக்கவில்லை. பொதுமக்களும், அரசாங்கமும் தன்பால்ஈர்ப்பை இன்னும் ஒரு சாதாரண பாலியல் நாட்டமாய் கருதவில்லை. நமக்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவோ, போராட்டங்களில் பங்கு பெறவோ இன்னும், தங்களை வெளிஉலகிற்கு அறிவித்த பல தன்பால் ஈர்ப்பாளர்கள் இல்லை. நாம் பிரஸ்ரிலீஸ்களை வெளியிட்டாலும், ஆங்கில ஊடகங்கள் செய்வதுபோல தமிழ் ஊடகங்கள் தங்கள் முதல் பக்கத்தில் அவற்றை வெளியிடுவதில்லை.



ஒருவரை உலகிற்கு தன்னை வெளிக்காட்டி கொள்ள சொல்வது அவரது தனிப்பட்ட உரிமை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விமர்சிப்பவர்கள் பலர் இருபத்தைந்து வயதிற்குள், வலி, துயர், வேற்றுமைபடுத்தல், உயிர் சவால்கள், பணப்பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் கடந்து, தங்களை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தி, கே சமூகத்திற்காக போராடி, பலருக்கு நம்பிக்கையூட்டிவர்களே. அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்களால் உதவ முடியவில்லை என்றாலும்கூட, அவர்கள் குறைந்தபட்சம் இது போன்ற வலைப்பூ சாடல்களை எதிர்பார்ப்பதில்லை.







உலகுக்கே தெரிந்த ஒரு உண்மையை உங்களுக்கு உரக்க சொல்ல விரும்புகிறேன். சென்னையில் வாழும் அனைவருமே பணம்படைத்தவர்கள் அல்ல, யாரோ உங்களிடம் தவறாக புள்ளிவிவரம் சொல்லியிருக்கிறார்கள். இங்கே வாழ்பவரும் தமிழர்தான், இவர்கள் வேற்றுகிரக வாசிகள் அல்ல.



எல்லா விவாதங்களும் இறுதியில் ஒரு நன்மையோடு முடிவடையும். அதே சமயத்தில் பொதுவாக நமது community-இல் பொத்தாம்பொதுவாக ஒரு விஷயத்தை விமர்சனம் செய்வதும், தவிர்க்கப்படவேண்டிய விஷயமாகும், இல்லையென்றால் பாதிக்கபடபோவது எங்கோ பயத்தில், அவமானத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு கே என்பதை நாம் உணரவேண்டும் . ஒரு இயக்கத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களை அவர்களின் செயல்பாடு அறியாமல் மேலோட்டமாக விமர்சனம் செய்வது அந்த இயக்கங்களின் செயல்பாடு அல்லது விழிப்புணர்ச்சி செய்திகள் ஒரு சாமானிய மனிதனை சென்றடையாமல் அவனை இதுபோன்ற விமர்சனங்கள் தடுத்துவிட கூடும். மிகுந்த வலியுடனும், போராட்டங்களுடனும் தொடர்ந்து இயக்கம் நடத்தி கொண்டிருக்கும் எங்களை போன்றவர்களை இது புண்படுத்தக் கூடும்.



இப்படிக்கு

விக்ராந்த் பிரசன்னா

நிறுவனர் - சென்னை தோஸ்த்,மகிழ்வன் மன்றம்





இந்த கடிதத்தின் சில கருத்துகளுக்கு நான் ஒரு சிறு விளக்கத்தை கொடுக்க விரும்புகிறேன்.... கீழே அதற்கான விளக்கத்தை கொடுக்கிறேன்.....



நண்பர் விக்ராந்த் அவர்களுக்கு,



தங்களின் திறந்த மடலில் என்னுடைய சில கருத்துகளை ஏற்றமைக்கு நன்றிகள்..... இந்த மக்களின் கருத்துக்கள் சிலவற்றையாவது உங்களிடம் கொண்டுசேர்த்து புரிய வைத்தமைக்கு எனக்கு மகிழ்ச்சி......

மேலும், நான் சொன்ன சில விஷயங்கள் (குறிப்பாக நிதி பற்றிய கருத்து) உங்கள் அமைப்புக்கு தொடர்பில்லை என்பதை அறிகிறேன்..... நான் அந்த கருத்தை சொன்னது பொதுவான அமைப்புகளை பற்றி என்பதால், அதில் ஒருசில கருத்துகள் உங்கள் அமைப்பிற்கு தொடர்பில்லாமல் இருக்கலாம்.... உங்கள் விளக்கம் மூலம் அதை மக்கள் புரிந்திருப்பார்கள்..... நீங்கள் சொல்வதைப்போல நாம் இருவருமே ஒரே கப்பலில் பயணம் செய்கிறோம்... நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்... கப்பலின் மாலுமியாக இருக்கும் உங்களைப்போன்றோர் வழி தவறி சென்றாலோ, தவறான முடிவுகள் எடுத்தாலோ அதை சுட்டிக்காட்ட வேண்டிய உரிமை எவருக்கும் உண்டு.... அதற்காக மாலுமி கோபித்துக்கொண்டு, "கப்பலை நீயே செலுத்து!" என்று சொல்வது தவறு....



பல்வேறு இன்னல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தங்களை வெளிப்படுத்திக்கொண்ட உங்களைப்போன்றோர் நிச்சயம் போற்றத்தக்கவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..... அதே நேரத்தில் சமூகத்தின் மற்ற நபர்களும் அத்தகைய நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் தொடங்கியுள்ள அமைப்புகள் செய்யும் சில விஷயங்களில் எங்கள் முரண்பட்ட கருத்துகளை மட்டுமே முன்வைத்தேன்..... பாராட்டுதலுக்குரிய விஷயங்களை நீங்கள் செய்யும் அதே நேரத்தில், இன்னும் சிறப்பான போற்றுதலுக்குரிய விஷயமாக இதை கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.... ஒரு மருத்துவனாகவும், எழுத்தாளனாகவும் என்னால் முடிந்த பங்கினை இந்த கே சமூகத்துக்கு கொடுத்து வருகிறேன்.... அதை நான் வெளியே வந்துதான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.... நீங்கள் சொல்வதைப்போல நான்  எதுவும் செய்திடாமல் இல்லை.... எத்தனையோ நபர்களுக்கு கலந்தாய்வுகள் கொடுத்திருக்கிறேன்.... ஒரு மனநல மருத்துவருக்கு பால் ஈர்ப்பு பற்றிய தெளிவான அறிவு இல்லை என்கிற நிலைமை பல இடங்களில் பார்க்க முடிகிறது... அவர்களிடம் செல்ல தயங்கும் பலருக்கு என்னால் முடிந்த, எனக்கு தெரிந்த கலந்தாய்வு கொடுக்கிறேன்..... உங்களோடு இணைந்து வர அவர்கள் தயங்குவதாக சொல்கிறீர்கள்.... உண்மைதான்.... பொதுவாகவே இங்கு ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கிறது.... சமூகத்தின் மீதான பயம், தாழ்வு மனப்பான்மை இதெல்லாம் அவர்கள் உங்களை அணுக தயங்க வைக்கிறது.... நீங்கள் நடத்தும் ப்ரைடுகள், பார்ட்டிகள் போன்றவை இன்னும் அவர்களுக்கு அதிக காம்ப்ளெக்ஸ் உருவாக  ஒரு காரணமாக ஆகிவிட்டது... 
மதுரை ப்ரைடு பற்றி கூறினீர்கள்.... என்னை பொருத்தவரை ப்ரைடு என்பது அத்தியாவசியம் இல்லை.... மதுரையில் அதை தாண்டி நடைப்பெற்ற இலக்கிய வட்டம் சார்ந்த கூட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததே..... அப்படி ஆக்கப்பூர்வமான இலக்கிய வட்டத்தினை பால் ஈர்ப்பு விஷயத்தில் இணைப்பது மிக அவசியம் அல்லவா.... அதைப்போன்று நிறைய செய்யுங்கள்.....
உங்கள் அமைப்பின் நிதி செலவினங்களில் நான் தலையிடக்கூடாது என்று கூறுகிறீர்கள்..... சரி, அதில் நான் தலையிடவில்லை..... அதை நான் “விஜய்” என்ற தனிப்பட்ட மனிதனாக சொல்லவில்லை, இந்த நபர்களின் ஒரு அங்கமாகத்தான் கேட்டேன்.... அது வரம்பு மீறல் என்றால், அதைப்பற்றி இனி கேட்கவில்லை...



ஒரு கல்லூரியில் நீங்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தினால், அதன்மூலம் அங்கிருக்கும் பத்து கே நபர்கள் தன்னம்பிக்கை பெறுவார்கள்... அதுமட்டுமல்ல, அதே கல்லூரியில் அந்த கே நபர்களை சுற்றி இருக்கும் நூற்றுகணக்கான மக்கள் அது தவறில்லை என்பதை உணரும் வாய்ப்பும் அதன்மூலம் உருவாகிறது.... இதுதானே உண்மையான சமூக மாற்றத்திற்கு அச்சாரம் போடும்.....

இத்தனை வருடங்களுக்கு பிறகு "தமிழில் கே விழிப்புணர்வை" பற்றி யோசிக்கவாவது தொடங்கி இருப்பது தாமதமான காரியம் என்றாலும், பாராட்டுதலுக்கு உரிய விஷயம்.... மேலும், சில அமைப்புகளிடம் நான் பேசியபோது அவர்கள் நிதிப்பற்றாக்குறையில் இருப்பதையும் உணர முடிகிறது.... நிச்சயம் அந்நிலையும் விரைவில் மாறும் என நம்புகிறேன்.... நிச்சயம் விளம்பரமின்மை காரணமாக உங்கள் அமைப்புகளின் கூட்டங்கள் தெரிவதில்லை என்றால், அதற்கான பொறுப்பை வலைப்பதிவர்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்...... மேலும் நீங்கள் சொன்னதுபோல உங்களைப்போன்ற அமைப்புகளை நான் நேரில் காணவில்லை என்றாலும், உங்கள் அமைப்புகளை சேர்ந்த என் நெருங்கிய நண்பர்கள் மூலம் இவற்றை அறிந்தே கட்டுரை எழுதுகிறேன்.... இதை நான் ஒப்புக்கொள்கிறேன்.... அதே நேரத்தில் இத்தகைய அமைப்புகளை சாராத லட்சக்கணக்கான நபர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்... அவர்களில் நூற்றுக்கணக்கான நபர்களிடம் நான் பேசி, பழகியுள்ளேன்.... அவர்களின் மனநிலை உங்களுக்கு நான் சொல்லி புரியாவிட்டாலும், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களின் குமுறல் மினன்ஞ்சல்களை காட்டுகிறேன்..... அவர்களை கொஞ்சம் நீங்கள் யோசித்து பார்த்தால் போதும் என்பதுதான் என் கருத்து....

இன்னும் தமிழ் ஊடகங்கள் பற்றிய தெளிவான நிலைப்பாட்டை நீங்கள் பெறவில்லை.... கே பற்றிய விழிப்புணர்வுக்கு அவர்கள் கொடுக்கும் பங்களிப்பு “இல்லை” என்று சொல்லும் அளவிற்கு மிக மிக மிக குறைவாகத்தான் இருக்கிறது... ஞானி போன்ற பல இலக்கிய வட்டத்தினர் ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள்..... நீங்கள் கூறினால் ஊடகங்கள் அதை கேட்க மாட்டார்கள், பிரசுரிக்க மாட்டார்கள் என்பது சரிதான்.... அதே நேரத்தில் ஞானி போன்ற தமிழ் இலக்கிய வட்டத்தினரை நீங்கள் களம் அமைத்து கொடுத்து பெசவைத்தால், அவர்கள் சொல்வதை ஊடகங்கள் பிரசுரிக்கும் அல்லவா?....... அப்படி ஒரு களத்தை உருவாக்கலாம் அல்லவா?..... அவர்களை ஒருங்கிணைக்க மறந்ததன் விளைவுதான் , இன்றைக்கும் படித்தவர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வை உருவாக்க முடியாமல் போனதன் காரணம்.......

நீங்கள் செயல்படுவதில் நான் குற்றம் சுமத்துவதாக நினைக்காதிங்க..... இந்த கருத்துகள் அனைத்தும் உங்கள் அமைப்புகளை தாண்டிய கே சமூகத்து மக்களின் கண்ணோட்டம் மட்டுமே.... அதை எழுத்தாக வடித்தது மட்டுமே என் செயல்....

ஒரு சாதியை பற்றிய தவறான கருத்து பாடப்புத்தகத்தில் இருந்ததால், மத்திய அரசையே உலுக்கும் போராட்டம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் அந்த சாதி அமைப்புகள்.... திருநங்கைகள், சாதி அமைப்பு போன்றவர்களால் முடிந்த ஒரு விஷயம் நம் அமைப்புகளால் முடியாதது ஏன்?.... திரைப்படங்களில் ஒருபால் ஈர்ப்பு பற்றிய தவறான காட்சிகள் வரும்போது, அதை எதிர்த்து இந்த அமைப்புகள் குரல் கொடுக்காதது ஏன்?.... குறைந்தபட்சம் “அவனா நீ?....” போன்ற தவறான பிம்பத்தையாவது பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காமல் இருந்திருக்கலாம்....

இப்போதும் நான் சொல்கிறேன், உங்களை குறை சொல்வது என் நோக்கமல்ல.... நீங்கள் செயல்படும் அமைப்புதான்.... செயல்பாட்டில் இன்னும் வேகமும், மாற்றமும் வேண்டும் என்றுதான் சொல்கிறேன்....

இதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் உங்களை போன்ற அமைப்புகள் செயல்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்....

எப்போதும் ஆக்கப்பூர்வமான உங்கள் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு முதல் ஆதரவு குரலை நான் கொடுப்பேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.....

நன்றி...

No comments:

Post a Comment