Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 24 October 2013

"பல்லி" - சிறுகதை...

 ஐந்தாவது முறையாக ஸ்னூஸ் பட்டனை அழுத்திவிட்டு, பத்து நிமிட ‘மினி’ தூக்கத்தில் தன்னை ஆழ்த்திக்கொண்ட சுரேஷை, எலியை துரத்தும் பூனை போல விடாமல் துரத்தி, ஆறாவது முறையாக “பழம் நீயப்பா... ஞானப்பழம் நீயப்பா...” கே.பி சுந்தராம்பாளை பாடவைத்து எழுப்பியது அலைபேசி அலாரம்.... அலாரத்தை கண்டுபிடித்தவன் புத்திசாலியாக இருந்தாலும், ஸ்னூஸ் பட்டனை கண்டுபிடித்தவன் சோம்பேறியாகத்தான் இருக்கணும்.... ஜன்னல் திரையின் ஓரத்தில் எட்டிப்பார்த்த சூரிய வெளிச்சம், சூரியன் உதித்து நீண்ட நேரம் ஆகிவிட்டதாய் ரகசியம் சொன்னது.... ஒருவழியாக எழ தீர்மானித்தவனாய், கண்களை மூடியபடியே அலைபேசி திரையை முகத்திற்கு நேரே கொண்டுவந்தான் சுரேஷ்.... தூக்கத்தை ஒத்திவைத்த கண்கள், மெல்ல திறந்து திரையை பார்த்த மறுநொடியில், சிவந்து போய் கோபத்தை கக்கியது..... பல்லை கடித்தவாறே, அருகில் அரை நிர்வாண கோலத்தில் படுத்திருந்த வினோத்தின் கையை கிள்ளினான்....
வலியால் துடித்து எழுந்த வினோத், “ஏய்... போதும் சுரேஷ்.... நாளைக்கு பாத்துக்கலாம்... எனக்கு தூக்கம் தூக்கமா வருது...” அப்படியே சுரேஷ் மீது சாய்ந்தான்...
இதில் இன்னும் அதிக கோபமான சுரேஷ், “எரும.. எரும... விடுஞ்சிடுச்சு.... எப்ப பார்த்தாலும் உனக்கு அந்த நெனப்புதானா?” வினோத்தின் தலையை நிமிர்த்தி நிறுத்தினான்....
கண்களை கசக்கியபடியே விழித்த வினோத், “என்னடா ப்ராப்ளம் காலைலயே?” இன்னும் ஒரு மணி நேர தூக்கம் கண்களில் இருக்கிறது....
“என்ன பண்ணி வச்சிருக்க என் மொபைல்ல?... வால் பேப்பரா முருகன் படம் வச்சிருந்தேன், அதை ஏன் இப்டி மாத்துன?” வினோத்தின் முகத்திற்கு நேராக அலைபேசி திரையை நீட்டினான்.... அதில் குரங்கு ஒன்று வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது... இதை பார்த்ததும் மனதிற்குள் சிரித்துக்கொண்ட வினோத், வெளிப்படையாக சிரித்தால் விளைவுகள் விபரீதமாகும் என்கிற சமயோசித யோசிப்புக்கு பிறகு, அதை அறியாதவனாக, “அட! போட்டோ நல்லா இருக்கே?... எப்போடா வாழைப்பழம் சாப்பிடுற மாதிரி போட்டோ எடுத்துகிட்ட?.... நல்லா இருக்கு... ஹால்ல ப்ரேம் போட்டு மாட்டிக்கலாம்...” பொறுமையாக சொன்னான்....
இதில் இன்னும் கோபமான சுரேஷ், “இது ஜோக் இல்ல வினோ... எத்தன தடவை சொல்லிருக்கேன், என் நம்பிக்கைகள்ல தலையிடாதன்னு?... காலைல எழுந்ததும் முருகன் படத்த முதல்ல பார்த்தாதான் என் மனசு சந்தோஷமா இருக்கும்னு உனக்கு தெரியாதா?” இப்போதுதான் குயில்கள் கூடுகளுக்கு திரும்பி, காக்கைகள் கரைந்து தங்கள் ஆளுகைக்குள் உலகை கொண்டு வரும் நேரம்.... அதற்குள் ஒரு பிரளயத்தின் வாசம் அடிக்கிறது அவர்கள் படுக்கை அறைக்குள்...
“குரங்கும் கடவுள்தானே?... அதையும் கோவில்ல கும்பிடுற தானே? அப்புறம் ஏன் கோபப்படுற?”
“நான் எதை கும்பிடனும்னு நான்தான் முடிவெடுக்கணும், நீ இல்ல.... இன்னிக்கு வழக்கமா நடக்காததாலதான் நமக்குள்ள இப்போ சண்டை, நிம்மதி இன்மை எல்லாம்.... புரியுதா?”
“அதுக்கு காரணம் நீ முழிச்ச போட்டோ இல்ல, உன் முட்டாள்த்தனமான மூடநம்பிக்கை.... உன் தவறை ஒரு பாவமும் அறியாத அந்த குரங்கு மேல திணிக்காத...” அதே கோபத்துடன் எழுந்த வினோ, அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு சென்றான்...
சுரேஷ், சில நிமிட அமைதிக்குள் தன்னை ஐக்கியமாக்கினான்... மனதிற்குள் ஆண்டவனை தரிசித்தவனாக, அலுவலகத்திற்கு கிளம்ப ஆயத்தமானான்...
வழக்கமாக சிணுங்கல்கள், முனகல்கள், செல்ல திட்டுகள் என மூலை முடுக்குகளில் கூடலின் வாசம் நிறைந்திருக்கும் அந்த வீடு, இன்றைக்கு தியான வகுப்பு நடக்கும் அறை போல காட்சி அளிக்கிறது.... நேரம் புரியாமல் சன் மியூசிக் மட்டும் “காதல் கானங்களை” கக்கிக்கொண்டு இருக்கிறது....
பல் துலக்கும்போது “வசீகரா....”
குளிக்கும்போது “அய்யய்யய்யோ ஆனந்தமே...!”
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது “யாரோ இவன்... யாரோ இவன்....” பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை, கோபமாக சென்று அணைத்தான் சுரேஷ்... காரணம், அது காதல் நிரம்பி வழியும் போதல்லாம் சுரேஷை பார்த்து வினோ பாடும் பாடல்.... அந்த பாடலை பார்த்த வினோத், கமுக்கமாய் உதிர்த்த மெல்லிய சிரிப்புதான் அந்த பாடலை நிறுத்திய சுரேஷின் கோபத்திற்கு முக்கிய காரணம்...
ஒன்பது மணி ஆகிவிட்ட பரபரப்பில், இட்லிக்களை அவசரமாக கபளீகரம் செய்து தண்ணீரால் அதை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, அவசரமாக எழுந்தான் வினோ.... கை கழுவிக்கொண்டிருந்த வினோ தலையில், அவ்வளவு நேரம் அதற்காகவே காத்திருந்ததை போல ஒரு பல்லி அவன் தலையில் விழுந்தது.... எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் தன் மேல் விழும் பல்லியை கண்டு பதறாமல் இருக்க முடியுமா என்ன?.... பதறினான் வினோவும், அந்த சில நொடிகள் மட்டும்... அதன்பிறகு வழக்கமாக அலுவலகத்திற்கு கிளம்புவதில் மும்முரமானான்...
இதை பார்த்த சுரேஷ் தான் பதினைந்து நிமிடங்கள் ஆகியும் இன்னும் அந்த பதட்டத்தில் இருந்து மீளவில்லை.... ஓடிப்போய் சுவரில் மாட்டியிருந்த “செல்வ விநாயகர்” காலண்டரின் பின்புறத்தை ஆராய்ந்தான்.... ஆங்... கண்டுபிடித்துவிட்டான்....
“பல்லி விழும் பலன்....”
கை, கால், கழுத்து தாண்டி தலையில் விழுந்தால் உண்டாகும் பலனை நோக்கி நகர்ந்த சுரேஷ், மேலும் அதிர்ந்தான்.... பலனாக இருந்தால்தானே பயப்படாமல் இருக்க முடியும், தலையில் விழுந்தால் “மரணம்” என்றல்லவா அதில் இருக்கிறது.... அதை பார்த்த சுரேஷின் தலையில் பல்லிக்கு பதில் பாறாங்கல் விழுந்ததை போல “சுர்...” என்றது....
பத்து நிமிடத்தில் பதினைந்து பவர் ஸ்டார் படங்களை பார்த்த குழப்பம் அவன் தலைக்குள் சுழன்றது.... மனம் அதிகமாய் படபடத்தது, பூசியிருந்த பவுடரை பொருட்டாகவே மதிக்காமல் வியர்வை அவன் முகத்தை தாண்டி, கழுத்தை நோக்கி பை பாசில் வழிந்தது... என்ன செய்வது?... ஷூவிற்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்த வினோவின் அருகில் சென்றான்....
பேச்சை தொடங்க ஈகோ ஒரு பக்கம் தடுத்தது, பேச சொல்லி பயம் மறுபக்கம் தூண்டியது... இன்னும் தாமதித்தால், இரண்டொரு நிமிடங்களில் வீட்டை விட்டு வினோ கிளம்பிவிடுவான்....
“வினோ....”
பாலிஷ் போட்ட கைகள் நின்றன, கழுத்து மெல்ல மேல் நோக்கி நிமிர்ந்தது.... “என்ன?” என்பது போல புருவத்தை உயர்த்தி, தலையை அசைத்தான்.... காலை கோபத்தின் எச்சங்கள் முகத்தினில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது...
“இன்னிக்கு ஆபிஸ் போகனுமா?” தயங்கியபடியே கேட்டான் சுரேஷ்....
“இது என்ன கேள்வி? தினமும் ஆபிஸ் போகணும் தான்....” வார்த்தைகளில் பிடிப்பு இல்லை... விருப்பமின்றி தவறி விழுந்த வார்த்தைகள் சுரேஷை எரிச்சல் படுத்தியது....
“இல்ல... இன்னிக்கு வேணாமே!”
“ஏன்?”
“எனக்கென்னமோ ஏதோ தப்பு நடக்க போறதா தோணுது....”
“எதை வச்சு சொல்ற?”
“பல்லி தலைல விழுந்தா மரணம்’னு போட்டிருக்கு... அதான்...”
அலட்சியமாக சிரித்த வினோ, “பல்லி, கரப்பான் பூச்சி விழுந்ததுக்கெல்லாம் ஆபிஸ் லீவ் போட்டா, வருஷத்துல பாதி நாள் வீட்ல தான் இருக்கணும்.... பல்லி சாப்பாட்டுல விழுந்தா மட்டும்தான் கவலைப்படணும், அதனால நீ முதல்ல ஆபிஸ் கிளம்பு....”..
பயம் ஒரு பக்கம், பதட்டம் மறுபக்கம் நெருக்கி சுரேஷை இறுக்கியது....
“பல்லிக்காக வேண்டாம், எனக்காக லீவ் போடலாம்ல?” கிட்டத்தட்ட இறைஞ்சு பேசினான் சுரேஷ்...
“இங்க பார் சுரேஷ்.... உன் நம்பிக்கை’ல நான் எந்த அளவுக்கு தலையிடக்கூடாதுன்னு நீ நினைக்குறியோ, அந்த அளவுக்கு உன் நம்பிக்கைகள என் மேல நீ திணிக்கவும் கூடாது....” சொல்லிவிட்டு, வலது ஷூவில் அரைகுறை பாலிஷ் அப்பியதோடு அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டான் வினோ.... பைக்கில் ஏறிய வினோ வீட்டில் நடந்த எந்த நிகழ்வின் சுவடும் தெரியாதவனாக சீறிப்பாய்ந்தான்...  கண்களை விட்டு மறையும்வரை, ஜன்னல் வழியாக அவனை கண்களால் பின்தொடர்ந்தான் சுரேஷ்....
இனி வீட்டில் சுரேஷ் மட்டும் இருந்து என்ன செய்வது?... தனக்கு பெயர் தெரிந்த அத்தனை கடவுள்களையும் வாய்க்குள் முணுமுணுத்தான்.... சில நிமிட புகைப்பட கடவுள் தரிசனத்தை தொடர்ந்து வீட்டை விட்டு கிளம்பினான்...
குளிரூட்டப்பட்ட அலுவலகம்தான் என்றாலும் கூட, ஏதோ ஒருவித வெக்கை அடிப்பதாய் அவனுக்கு தோன்றியது... வழக்கமாக வாயில் காவலாளியிடம் வைக்கும் வணக்கம் மறந்தான், அலுவலக முகப்பில் அப்பாவியாக அமர்ந்திருக்கும் விநாயகரை ஒத்திக்கொள்ள மறந்தான், தன் கேபினுக்குள் நுழைவதற்கு முன் அடுத்த கேபினில் அமர்ந்திருக்கும் “வெங்கட்” அண்ணாவை பார்த்து சிரிக்க மறந்தான்.... இந்த பதட்டத்தில் அலுவலகத்தையும், அலுவலகத்தில் தன் கேபினையும் சுரேஷ் மறக்காமல் இருந்ததே ஆச்சரியம்தான்...
பதட்டத்திற்கான மற்ற புற காரணிகளை மறக்க, தன் கணினியை இயக்கினான்... கணினி முகப்பில் திருச்செந்தூர் ராஜ அலங்காரத்தில் முருகன் சிரிக்க, அவரை கடந்து அலுவலக கோப்புகளை ஆராய்ந்தான்.... வழக்கத்தைவிட அதிகமான வேலை இன்று, ஆனால் வழக்கம் போல கவனத்தை ஒருநிலைப்படுத்த முடியவில்லை... தட்டச்சு செய்வதில் கூட ஆயிரம் தடுமாற்றம்.... விசைப்பலகையில் வழக்கமாக நீண்டு நிமிர்ந்து படுத்திருக்கும் “ஸ்பேஸ் பார்”ஐ தட்டச்ச கூட சில நொடிகள் தேடல் அவனுக்கு அவசியமாய் பட்டது..... ஒருவழியாக கோப்பினை தயார் செய்து, மேலாளருக்கு அனுப்பியும் விட்டான்.... ஒரு மணி நேரம் கழித்து, பொறுமை இழந்தவராக எழுந்து வந்த வெங்கட் அண்ணா, தன் அருகில் நிற்பதை கூட சுரேஷ் இன்னும் கவனிக்கவில்லை....
வெங்கட் அண்ணா தான் சுரேஷின் ஆஸ்தான ஜோதிடர் என்று சொன்னால் கூட அது மிகையில்லை... இருவரும் அலுவலக விஷயங்களை விட, அதிகம் ஆன்மிக ஆராய்ச்சிதான் ஈடுபடுவார்கள்... ரேகை பார்த்து, “நீ சர்வீஸ் எக்ஸாம் எழுதிப்பாரு சுரேஷ்... உன் கைல கவர்ன்மன்ட் முத்திரை பக்காவா பதிஞ்சிருக்கு” என்று சொல்வது முதல், “நீ ரிஷப ராசி தானே?... உனக்கு இப்போ ராகு திசை நடக்குது... கும்பகோணம் பக்கத்துல ராகு பகவான் கோவில் இருக்கு, அங்க போயிட்டு வந்திடு” என்று பயணத்திற்கு வழி அனுப்புவது வரை எல்லா ஆன்மிக ஆலோசனைகளுக்கும் வெங்கட் அண்ணா ஒருவர்தான் மூலவர், அவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!....
“என்ன சுரேஷ், ரொம்ப பிஸியா?”
இப்போதான் அவரை கவனிக்கிறான்... தன் கவனிப்பின்மையை உணர்ந்தவனாய், “ஐயோ இல்லண்ணா... ஸ்கூல்’களுக்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்றது தொடர்பா கொட்டேஷன் அனுப்ப சொன்னார் மேனேஜர், அதான்...” வார்த்தைகள் கூட பவ்யமாய் விழுந்தன...
“ஓஹோ.... உன் முகத்த வந்தப்பவே கவனிச்சேன், உடம்பு எதுவும் சரி இல்லையா?... ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“இல்லண்ணா... கொஞ்சம் தலைவலி...”
“கொஞ்சம் தலைவலிக்கே இப்டி சோர்ந்து கிடக்கு முகம்.... நிறைய தலைவலி இருந்திருந்தா?” சிரித்தார்.... சுரேஷும் சிரித்தாலும், மனதிற்குள், “அதான் வீட்டுல ஒரு பெரிய தலைவலி இருக்கே!” என்று நினைத்துக்கொண்டான்...
“பல்லி விழும் பலன்’ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா அண்ணா?”
“என்ன இப்டி கேட்டுட்ட?... என் மாமா ஒருத்தரு, எல்லா தொழிலும் நஷ்டமாகி ஓட்டாண்டியா ஆகிட்டாரு... எதேச்சையா பல்லி ஒன்னு அவர் தோள்பட்டை’ல விழுந்துச்சு... அடுத்த நாளே, லட்சாதிபதி ஆகிட்டாரு”
எப்படி லட்சாதிபதி ஆனார்? யார் அந்த மாமா? இந்த கேள்விகள் எல்லாம் சுரேஷுக்கு அவசியமாய் தோன்றவில்லை... மனதிற்குள் இன்னும் அதிக படபடப்பு உண்டானது.... சில நம்பிக்கைகளில் அவனால் லாஜிக் பார்க்க முடிவதில்லை...
அஷ்டமி நவமிகளில் பயணம் செய்யாமல், நல்ல விஷயங்கள் தொடங்க வளர்பிறை வரை காத்திருந்து, ராகு கேது சனி என்று சகலத்தின் நடமாட்டத்தையும் ஜோதிடம் வழியாக கண்காணித்து, தனக்குள் இருக்கும் திறமைகளைவிட பாக்கெட்டில் வைத்திருக்கும் கடவுள் படத்தை நம்பும் சுரேஷ் போன்ற ஒருவன் பல்லி விழும் பலனை பார்ப்பதும், அதற்காக பயப்படுவதும் வியப்பொன்றும் இல்லைதானே!...
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது இடைபுகுந்தார் மேலாளர்.... கையில் ஒரு தாள், முகத்தில் ஒரு எரிச்சல்... வழக்கமான புன்னகை கூட இல்லை, ஒருவேளை அவருக்கும் தலையில் எதுவும் விழுந்ததோ? தெரியவில்லை...
“என்ன டைப் பண்ணிருக்க சுரேஷ்?... தமிழ் டைப் பண்ண தெரியாதா உனக்கு?” வந்த வேகத்தில் சீறினார்... நிலைமையை உணர்ந்து வெங்கட் அங்கிருந்து விலக, நடப்பதை இன்னும் கிரகிக்க முடியாமல் குழம்பி நின்றான் சுரேஷ்....
“பள்ளிக்கல்வி துறை’னு போடுறதுக்கு பதிலா, பல்லி கல்வித்துறை’னு போட்டிருக்க.... சாதாரண லகரம் புரியலையா உனக்கு?... இதை நான் அனுப்பிருந்தா என்ன நினச்சிருப்பாங்க நம்ம கம்பெனிய பத்தி?... அந்த கொட்டேஷன் நானே அனுப்பிக்கறேன், நீ உன் அரட்டையை கண்டின்யூ பண்ணு” சுரேஷின் கையில் அந்த தாளை திணித்துவிட்டு கோபமாக அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டார் மேலாளர்.... அதுவரை அமைதியாய் சுற்றிக்கொண்டிருந்த பல்லி ஒன்று, மின்விளக்கின் அருகே தலையை நிமிர்த்தி “ச்ச்...ச்ச்... ச்ச்...” சத்தம் போட்டது... பல்லி கூட தன்னை பரிகாசித்து சிரிப்பது போல தோன்றியது சுரேஷுக்கு... நிஜமாகவே தலைவலி அப்போது தான் எட்டிப்பார்க்கிறது அவனுக்குள்...
ஏனோ மனம் விரக்தியின் விளிம்பிற்கு சென்றது.... அரை நாள் விடுப்பு எடுத்தான், வீட்டை நோக்கி விரைந்தான்... செல்லும் வழியில் சில நிமிட கோவில் பிரவேசத்தை அவன் மறக்கவில்லை... அந்த உச்சி வெயில் நேரம், கோவில் அர்ச்சகர் கூட களைத்துப்போய் அமர்ந்திருக்கும் கடவுளுக்கு தொடர்பில்லாத நேரம்... வெயில் அவனுக்கு பொருட்டாக தோன்றவில்லை, முருகன் வழக்கம்போல அந்த நேரத்திலும் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறான்....
மனம் ஓரளவு நிதானமானதாய் உணர்ந்தான்.... அந்த நிதானத்துடன் வீட்டிற்கு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டான்.... கனவுகளில் கூட அவனை பல்லிகள் துரத்தியது..... யானை அளவிலுள்ள பல்லி ஒன்று ஆக்ரோஷமாய் அவனை துரத்துகிறது... பல்லிக்கு கனவில் மட்டும்தான் பற்களை பார்க்க முடிகிறது, அதுவும் கூர்மையாக கோரமாக... தன் உடலின் பாதியை பல்லி விழுங்கிக்கொண்டிருந்த நேரம், திடுக்கிட்டு விழித்தான்...
மணி ஐந்து... வழக்கமாக வினோ வந்துவிடும் நேரம்... எழுந்து சென்று ஜன்னல் வழியே சாலையை பார்த்தான்... சுவாரசியமில்லாத சாலை, வாகனங்களை தவிர அங்கு எந்த சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியும்?... அந்தி வெயிலின் உக்கிரத்தை எதிர்கொள்ள தயங்கியபடியே சாலையில் வலம் வரும் ஒருசிலரை தவிர, ஆள்நடமாட்டம் கூட அதிகம் பார்க்கமுடியவில்லை...
ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கினான்... டிஸ்கவரி சேனலில், “உலகத்துல மொத்தம் 3800 வகை பல்லிகள் இருக்கு.... அதுல நாம பாக்குற இந்த பல்லி ரொம்ப அபூர்வமானது, அபாயமானது...” ஷாட்ஸ் போட்ட வெள்ளைக்காரன், தேமதுர தமிழில் பேசிக்கொண்டு இருக்கிறான்... இங்கயும் பல்லி தானா?... காலை முதல் மாலை வரை இந்த பல்லி விடாமல் அவனை துரத்துகிறது....
பல்லி மீதான கோபத்தை ரிமோட் பட்டனை அழுத்தி வெளிப்படுத்தினான்... அந்த அழுத்தத்தில், நான்கு சேனல்கள் கடந்து ஓடின...
புதிய தலைமுறை செய்தி சேனல்.... கீழே “சற்று முன்” செய்தி ஸ்க்ரோல் ஆகிக்கொண்டு இருந்தது.... “சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் விபத்தில் மரணம்...” இந்த செய்தி சுரேஷை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது... அதிர்ச்சியில் உறைந்து நின்றான்... யாரோ ஒரு இளைஞன் இறந்ததற்கா சுரேஷ் இவ்வளவு பயப்படனும்?.... வழக்கமான நாளில் அந்த செய்தி அவனை பாதித்திருக்காது, இன்றோ வழக்கத்தை மீறிய ஒரு பதட்டம் அவனை தொற்றிக்கொண்டிருக்கும் நாள், எப்படி பதறாமல் இருக்க முடியும்?... வழக்கமாக இந்த நேரத்தில் வினோ கடக்கும் சிக்னல் அல்லவா அது!... அட ஆண்டவா!.... முருகா!... உடனே வினோவின் அலைபேசியை அழைத்தான்... வழக்கம்போல “சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது” பெண் குரல் ஒலித்தது.... அடி வயிற்றுக்குள் ஒருவித பதட்ட உணர்வு மேலோங்கியது.... கைகளும், கால்களும் நடுக்கங்கள் கொண்டன.... எச்சில் கூட தொண்டைக்குள் இறங்க தயங்கி நின்றது.... மனதிற்குள் புலம்பியபடியே, இனி யோசிப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து, அவசரமாக கிளம்பினான்.... பைக் சாவியை எடுத்துக்கொண்டு கதவை திறந்த கணப்பொழுதில், கண்களில் களைப்போடு வாயிலில் நின்றான் வினோ....
கண்களில் அரும்பிய நீரோடு கதவை திறந்த சுரேஷை ஆச்சரியமாக பார்த்தான்....
“என்னடா? என்னாச்சு?” வினோ கொஞ்சம் பதட்டத்துடனே கேட்டான்...
அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களையும் அழுகையாய் கொட்டித்தீர்த்தான் சுரேஷ்.... ஹாலிற்கு அவனை அழைத்து சென்று, குடிக்க தண்ணீர் கொடுத்து, நடந்தவற்றை கேட்டான் வினோ....
“அட லூசு... இதுக்கா பதறுவ?” சுரேஷை கட்டி அணைத்தான்... சுரேஷின் மனம் அந்த அணைப்புக்காக காத்திருந்ததை போல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டது.... உடலும், மனமும் அந்த சில நிமிட அரவணைப்பில் சீராகின....
“சாரிடா.... நான் முட்டாள்த்தனமா நம்புற விஷயங்களுக்கு உன்னோட நிம்மதியையும் கெடுத்திடுறேன்.... பல்லி தலைல விழுந்தா யாராச்சும் இறப்பாங்களா?... நான் முட்டாள் வினோ...” அழுகை நின்று, தன்னிலை மீண்டவனாய் நிதானித்து சொன்னான் சுரேஷ்...
சுரேஷின் தலையை கோதிவிட்டு, தன்னோடு சேர்த்து அணைத்தபடியே, “இல்ல சுரேஷ்.... நீ சொன்னதுதான் இப்போ நடந்திருக்கு.... தலைல பல்லி விழுந்தா மரணம்னு சொன்ன, யாருக்குன்னு சொல்லலைல?.... அங்க பாரு....” என்று அவன் கை நீட்டிய இடத்தில், ஜன்னல் கம்பிகளுக்குள் தாறுமாறாக தன் தலையை நுழைத்து சிக்குண்ட பல்லி, நைந்து போய் இறந்து கிடந்தது... (முற்றும்)

18 comments:

  1. Excellent...... high standards :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி விஜய் தாஸ்

      Delete
  2. Excellent...... high standards :)

    ReplyDelete
  3. Wow!!! Different perception!!! Ungala pola enakku avlooo thooya tamil vaartha therila naa... Love, pain, tension, romance, comedy ellaamey iruka oru story,, super na!!! Way 2 go!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி.... வார்த்தைகளை விட, உங்கள் மனமகிழ்ச்சியை என்னால் உணர முடியுது....

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. nalla kadhai na.. palli viluntha pal thalaila thelichikanum, illa kulikanumnu amma solvanga..
    enaku pidikadhu.. avangalukaga seiven...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி... கதையின் நோக்கம் கூட நீங்க சொன்ன விஷயம் போலத்தான்... நாம நம்பலைன்னாலும், அடுத்தவங்க நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்கணும்... அதே போல, நம் நம்பிக்கைகளை அடுத்தவங்க மேல திணிக்கவும் கூடாது... இதை சொல்லத்தான் இந்த கதையே...

      Delete
    2. nice and different story simple nd sweet vicky nan uinga kita neriya kallvi kananum nd yan sathakatha therikukanum yan fb book vara adikadi close painiviturainga so inga nan kakalama

      Delete
    3. ரொம்ப நன்றி ராஜா.... சந்தேகம் இருந்தா, கேளுங்க.... பேஸ்புக் கணக்கை நான் க்ளோஸ் செய்யவல்லாம் இல்லை நண்பா, ரொம்ப நாட்களாக இருக்கிறது...

      Delete
  6. Replies
    1. ரொம்ப நன்றி குமார்...

      Delete
  7. sweet and explain the lovers affection for the other

    ReplyDelete