Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 14 July 2014

விலையில்லா இன்பம் - பாகம் 4...

(“விலையில்லா இன்பம்” கதையின் முதல் மூன்று பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, வாசக நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இதோ நான்காம் பாகம் உங்களுக்காக.... உங்கள் அபியை உங்களோடு மீண்டும் இணைப்பதில் மகிழ்கிறேன்... 
பாகம் ஒன்று - http://envijay.blogspot.in/2013/08/blog-post_11.html
 பாகம் இரண்டு - http://envijay.blogspot.in/2013/10/2.html
பாகம் மூன்று -  http://envijay.blogspot.com/2014/01/blog-post_23.html )








“டேய் டேய்... போடப்போறாங்க, சீக்கிரம் வா....” அரைகுறையாக குளித்ததோடு ஓடி வந்தான் அபி... காதோரத்தில் சோப் நுரையும், உடல் முழுக்க வழிந்த நீர் திவலைகளும் அமானுஷ்யனின் கண்களை சில நொடிகள் ஸ்தம்பிக்க வைத்தது....
“டேய் டைரக்டர் பையா, டிவிய பாருடா...” என்று கன்னத்தில் கைவைத்து அவன் கழுத்தை தொலைக்காட்சியின் பக்கம் திருப்பினான் அபி....
விஜய் தொலைக்காட்சியில் டிடி தனக்கே உரிய பாணியில், வழவழவென்று வரப்போகும் விருந்தினர்களை பற்றி பத்து நிமிடங்களை கடந்தும் அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தாள்.... “இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க சூப்பர் டூப்பர் ஹிட்டா கலக்கிகிட்டு இருக்கும் ‘அதீதம்’ திரைப்படத்தோட கதாநாயகன் அபிமன்யூவையும், அந்த படத்தோட இயக்குனர் அமானுஷ்யனையும்தான் நம்ம ப்ரோக்ராமில் பார்க்கப்போறோம்....” மறுநொடியே படிகளில் இறங்கி வரும் இருவரை நோக்கி திரை நகர்கிறது....
நடையும் ஓட்டமுமாக வந்து இருக்கையில் அமர்ந்தனர் இருவரும்... அபி அடிக்கடி கேமராவின் பக்கம் பார்த்து சிரித்துக்கொண்டும், தன் உடைகளை சரிபடுத்திக்கொண்டும் இயல்பாக அமர்ந்திருக்க, அமானுஷ்யனின் கண்களிலோ ஆயிரம் மெகாவாட் பதற்றம்....
“முதல்ல நான் டைரக்டர் சார்கிட்ட முக்கியமான ஒரு கேள்வி கேட்கணும்... தமிழ்நாடே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுற ஒரு கேள்வி....” டிடி முடிப்பதற்கு முன்பாக இடைமறித்த அபி, “காவிரில எப்போ தண்ணி வரும்னு கேட்கபோறிங்களா?” என்று சிரித்தான்...
“ஹீரோ சார், இப்டி இடைல பேசுனிங்கன்னா டயலாக்கை மறந்திடுவேன்....”
“சரி சரி கேளுங்க....” சோபாவில் சொகுசாக சாய்ந்தபடி சொன்னான் அபி...
“என்ன பேர் சார் அது அமானுஷ்யன்?... ரொம்ப வித்தியாசமா இருக்கே.... உங்க பதிலுக்காக பலபேர் காத்திருக்காங்க, அந்த ரகசியத்தை சொல்லுங்களே....”
அபி இடைபுகுந்து குழப்புவதற்கு முன்பு அமானுஷ்யனே தொடங்கினான், “ரகசியமல்லாம் ஒண்ணுமில்ல, வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வச்சுகிட்டதுதான்...” அதற்கு மேல் அந்த கேள்விக்கு பதில் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை....
கலகலப்பாக கரைந்தோடிய நிமிடங்கள் பெரும்பாலும் சிரிப்பலையால் நிரம்பி வழிந்தது... சில உண்மைகள், சில பொய்கள், சில கற்பனைகள் என்று கலவையான பதில்கள் கேள்விகளுக்கு இரையாகின....
“சினிமா’க்கு வர்றதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க?” அபியிடம் இந்த கேள்வி கேட்டபோது, அவன் அசராமல் சொன்ன பதிலை கேட்டு அமானுஷ்யனே ஆச்சரியமாகத்தான் பார்த்தான், “நான் ஒரு சயின்ஸ் ரிசர்ச் ஸ்டூடன்ட்.... நாசால ராக்கெட் பெய்ன்ட்டிங் ப்ராஜக்ட்’க்கு போகலாம்னு இருந்தப்போதான் சினிமா சான்ஸ் கிடச்சுது, அதனால யுஎஸ் பிளானை டிராப் பண்ணிட்டேன்... மம்மி டாடி’லாம் கூட இப்போ அங்கதான் இருக்காங்க....”.
யாரும் எந்த விஷயத்தையும் ஆராயப்போவதில்லை என்பதை அபி அறிவான்... அநேகமாக தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் தன் சில நூறு கஸ்டமர்கள், இதை கேட்டு சிரிக்கலாம்... “ஏன் சிரிக்குறீங்க?” என்ற அவர்களின் மனைவியின் கேள்விக்கு கூட பதில் சொல்லமுடியாத அவர்களால் தனக்கு என்ன பிரச்சினை வந்துவிடப்போகுது? என்று உறுதியாக நம்பினான்....
ஒருவழியாக நிரம்பி வழிந்த விளம்பரங்களுக்கு மத்தியில் நிகழ்ச்சி முடிய, அமானுஷ்யனின் கண்களில் முட்டிக்கொண்டு நின்றது கண்ணீர்... அருகிலிருந்த மேசையில் காற்றில் படபடத்துக்கொண்டிருந்த விகடனின் பக்கங்களை புரட்டி, “அதீதம் சொல்வது என்ன?” என்ற அமானுஷ்யனின் பேட்டியை காட்டிய அபி, “விகடன்ல போன வாரம், விஜய் டீவில இந்த வாரம்.... உன்னோட கனவுகள் நிறைவேறிடுச்சா அமு?” என்றான்...
கண்களை துடைத்துவிட்டு பதில் சொல்ல முடியாதவனாக, “ஹ்ம்ம்...” என்று மட்டும் தலையாட்டினான் அமானுஷ்யன்... தன் கனவுகள் கண்ணுக்கெதிரே நிகழ்வாகிவிட்டதன் பூரிப்பு அந்த கண்களில் பளிச்சிட்டது....
“ஓ டைரக்டர் பையா, பீலிங்க்ஸா?” என்றபடி அமானுஷ்யனின் தலையை தன் மார்போடு ஒட்டி அணைத்தான் அபி.... காஷ்மீர் ஆப்பிளின் குளுமையும் மென்மையும் அபியின் அங்கங்களில் உணரமுடிந்தது... கொஞ்சம் கொஞ்சமாக அமானுஷ்யனின் எண்ணங்கள், காதல் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது... தன் வாயருகே ஆப்பிள், கடிக்காமல் இருப்பானா பசியுற்றவன்?...
செல்லமாக அபியின் மார்பில் கடிக்க, “ஆஹ்!” என்று குதித்தபடி சில அடிகள் பின்னோக்கி குதித்தான்...
“உன்னயல்லாம் கூல் ஆக்க கிட்ட வந்தேன் பாரு, என்னைய சொல்லணும்... நான் இன்னும் முழுசா குளிக்கல, போய் குளிச்சுட்டு வரேன்....” என்று கிளம்ப தயாரானான் அபி....
“டேய்.. எப்டியும் எல்லாம் முடிஞ்சப்புறம் குளிக்கத்தான் போற, இப்போ எதுக்கு அவசரம்?” அமு கண்ணடித்து சிரித்தான்...
“ஐயோ சாமி.... ஆளைவிடு... எனக்கு தூக்கம் வருது, நான் குளிச்சுட்டு தூங்கப்போறேன்...” என்று அபி நகர, “அப்போ ஒன்னாவே குளிச்சுட்டு தூங்குவோம்...” என்றபடி அமானுஷ்யனும் அபியின் பின்னே ஓட..... அப்புறமென்ன?... அரை மணி நேரத்தில் குளியலறை சுவர்கள் வெட்கத்தில் சிவப்பு பூச்சு அடிக்காமலே சிவந்துவிட்டது....
கண்ணாடி ஜன்னல்களை தாண்டி, காற்றில் ஜன்னல் திரை படபடக்கும் சமயங்களில் உள்புகுந்த ஒளிக்கீற்றுகள் அபியின் முகத்தில் சுளீரிட, சோம்பல் முறித்து எழுந்தான் அபி... இன்னும் போர்வைக்குள் நிர்வாணத்தை மறைத்தபடி உறங்கிக்கொண்டிருக்கும் அமு’விற்கு விடிந்த தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
மெல்ல படுக்கையை விட்டு எழுந்த அபி, கண்ணாடி முன்னின்று தன் அங்கங்களை கவனித்தான்... உடல் முழுக்க ஆங்காங்கே சிவந்து, குங்குமத்தில் தேய்த்தேடுத்த மஞ்சளை போல காணப்பட்டது....
“அடப்பாவி!... இப்டி கடிச்சு வச்சிருக்கான் பாரு.... நாய் கூட பரவால்ல போல...” என்று முனகியவாறே அமுவின் அருகில் சென்று போர்வைக்குள் மறைந்திருந்த அங்கங்களில், ஒருவாராக தொடைப்பகுதியை கண்டுபிடித்து நறுக்கென கிள்ளினான் ....
“ஆ.... ஆ...” என்று அலறியபடி எழுந்த அமு, “என்னடா கண்ட இடத்துல கிள்ளுற?... காலைலயே மூடா?” என்றவாறே அபியின் அருகில் நகர, “ஆளைவிடுப்பா சாமி” என்றபடி அங்கிருந்து தப்பித்து ஓடினான் அபி...
முகம் கழுவி, ஹாலில் அமர்ந்திருக்கும்போது “மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்” என அபியின் அலைபேசி சோம்பல் முறித்து சினுங்கியது....
திரையில் “பாஸ்” என பெயரை பார்த்ததும், அபியின் கண்கள் மெலிதாக மிளிர்ந்தது...
“சொல்லு பாஸ்... எப்டி இருக்க?” ஆர்வத்தோடு கேட்டான் அபி...
“நேத்து விஜய் டிவி பார்த்தேன், நல்லா இருந்துச்சுடா ப்ரோக்ராம்...” நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான் பாஸ்கர்.... “நல்லா இருக்கேன் அபி, நீ எப்டி இருக்க?” என்று கேட்டிருந்தால்தான், அது ஆச்சரியம்....
“ஓஹோ... தாங்க்ஸ் பாஸ்... வேலயல்லாம் எப்டி போகுது?”
“ஹ்ம்ம்.... நல்லா போகுது... உன் இடத்தை நிரப்பத்தான் இப்போவரைக்கும் யாருமில்ல... யாரை பார்த்தாலும் ‘அபி, அபி, அபி’தான்.... நான் எங்க போய் இன்னொரு அபியை புடிக்கிறது.... சரி விடு, இன்னொரு முக்கியமான விஷயம்...”
“சொல்லு பாஸ்...”
“டைரக்டர் குமார் இருக்கார்ல, அவர் இப்போ பெரிய பேனர்’ல படம்  பண்ண  போறாராம்... மெகாபட்ஜெட் படம்... அதுல உன்ன ஹீரோவா போட கேட்குறாங்க.... ஓகேதானே?”
“இல்ல பாஸ்... இப்போ அடுத்த படமும் அமானுஷ்யனோடதான் பண்றேன், இன்னிக்குத்தான் படபூஜை கூட...” பாஸ்கரிடம் ஒரு பாராட்டையும், வாழ்த்தையும் எதிர்பார்த்து சொன்னான் அபி...
“ஏய்... உனக்கு இரண்டாவது படமே பெரிய பேனர்ல பண்ண சான்ஸ் கிடைச்சிருக்கு, செண்டிம்மென்ட் பார்த்துட்டு மறுத்திடாத... நல்லா யோசி....”
“இன்னிக்கு பூஜைக்கு முடிஞ்சா வா பாஸ்.... வேற எதுவும் விஷயம் இல்லைதானே?” எரிச்சலாக பதில் சொன்னான் அபி... இருவருமே மற்றவர்களின் கோபத்தை பெரிதாக பொருட்படுத்துபவர்கள் இல்லை... அழைப்பை  துண்டித்தபிறகு, சில நிமிடங்களில் இயல்பானான் அபி...
தன் இரண்டாம் படத்தின் தொடக்கவிழா இன்று.... முதல் படத்தின் வெற்றியின் சூட்டோடு, அடுத்த முயற்சியிலும் அதே டீமோடு களமிறங்கிவிட்டான் அமானுஷ்யன்... “அமானுஷ்யனின் உறைபனி இன்று இனிதே படப்பிடிப்பு தொடக்கம்” என்ற விளம்பரம் தாங்கிய நாளிதழ்கள் வீடுகளின் வாசல்களை ஆக்கிரமித்துவிட்ட அதிகாலை நேரமும் கடந்துவிட்டது...
அந்த அரங்கத்தின் வாசலில், தற்காலிக கோவில் உருவாக்கப்பட்டு பூஜைக்கான வேலைகள் தடபுடலாக தொடங்கிவிட்டது...
யூனிட் ஆட்கள் விருந்தினர்களை வரவேற்பதும், வேலைகளை கவனிப்பதுமாக பம்பரமாக சுழன்றனர்... அமானுஷ்யன்தான் வரவேற்பில் நின்றவாறு வருபவர்களை தரம் பிரித்து மேடைக்கும், கூடத்திற்கும் ஆட்களை அனுப்பிக்கொண்டிருந்தான்... தன்னிடம் வந்து கை குழுக்குபவர்கள் தயாரிப்பாளரா? லைட் மேனா? என்று தெரியாத குழப்பத்தில், எல்லோருக்கும் ஒரு சமதர்ம சிரிப்பை உதிர்த்தவாறு இருக்கையில் அமர்ந்திருந்தான் அபிமன்யூ...
“பூஜை ஆரமிச்சுடலாம்...” என்ற குரல் கேட்க, கூட்டம் கோவிலை நோக்கி கூடியது...
சினிமா பூஜைக்கெனவே சிறப்பு கோர்ஸ் படித்தது போல அதே அப்பு குருக்கள் தான் இங்கும் சாமி படங்களுக்கு பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்தார்.... மும்பை இறக்குமதி புதுமுக நாயகி லகிதா ஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றுதலுடன் இனிதே தொடங்கியது தொடக்க விழா... அவள் குனிந்து வளைந்து, தீக்குச்சியை இரண்டு விரல்களால் பட்டும் படாமல் பிடித்து, அதை மெல்ல தீப்பெட்டியோடு உரச..... பற்றிக்கொண்டது என்னவோ அதைப்பார்த்த யூனிட் ஆட்களின் மனசுதான்... நிருபர்களின் கேமராக்கள் பல ஜிபி’க்களை அந்த சிலநிமிட காட்சிகளை க்ளிக்கியதில் விரயமாக்கியது...
இந்த காட்சிகளை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த அபியின் கண்களுக்கு அப்போது ஒரு உருவம் அதிர்ச்சியை உண்டாக்கியது.... வெகுநாட்கள் பார்த்திடாத அந்த உருவத்தினால், பல நாட்கள் உறங்காமல் அவன் தவித்ததுண்டு....
அந்த மனிதனின் கண்கள் அலைபாய்ந்து, அபியை பார்த்ததும் தன் தேடல் முடிந்த நிறைவோடு, அபியின் அருகில் வேகமாக நகர்ந்தது...
ஆம், அது காத்தமுத்துதான்.... அபியின் அருகே வந்த வேகத்தில், அவன் தோள்களை பற்றி அணைத்து, “அபி குட்டி எப்டி இருக்க?” என்று குசலம் விசாரித்த கே.எம் என்கிற காத்தமுத்துவை சில கண்கள் வியப்புடன் ஏறிட்டு பார்த்தன...
தன் கையை நீட்டி யாரையோ அவர் அழைக்க, ஒரு புகைப்பட நிருபர் ஓடி வந்தார்...
“நீ சந்தனம் பத்திரிகை ஆளுதானே?”
“ஆமா சார்....”
“உங்க எம்டி செல்வம் நல்லா இருக்கானா?”
தன் எம்டியை ஒருமையில் விளிக்கும் அளவிற்கான ஒரு பெரிய மனிதர் போல என்ற அவனுடைய எண்ணம் அவன் வளைந்து நெளிதலில் அப்பட்டமாய் தெரிந்தது... “இருக்காங்க சார்...”
“அபியோட அம்சமா ஒரு க்ளிக் எடு... அடுத்த வாரத்துல அட்டைப்படமே இந்த போட்டோவா இருக்கணும்.... ‘கே.எம் அவர்களின் அறிமுகத்தில் உருவான அடுத்த ஸ்டார்’ னு டைட்டிலோட ஒரு கவர் ஸ்டோரி பண்ணனும்....” என்றவாறு அபியின் அருகில் இன்னும் நெருங்க, நான்கைந்து க்ளிக்குகளை கடந்தது அந்த நெருடல் போராட்டம்....
இவ்வளவும் அபி தன்னை சுதாரிப்பதற்குள் நடந்துவிட, சில நிமிடங்களில் நிதானம் அடைந்தவனாக காத்தமுத்துவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்தபடி, வேகமாக அங்கிருந்து விடைபெற்றான்...
“ஏய்... ஏய்...” என்ற காத்தமுத்துவின் சத்தம் அங்கிருந்த நாற்பது ஐம்பது ஆட்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைக்க, தர்ம சங்கடத்துடன் அவரும் அங்கிருந்து வெளியேறினார்....
கூட்டத்தில் எழுந்த சலசலப்புக்களை ஒருவாறாக சமாளித்த அமானுஷ்யன், மேற்கொண்டு ஆட்கள் மேடையில் பேச ஏற்பாடு செய்தான்... ஹீரோவிற்கான இருக்கை காலியாக கிடந்தது... மேடையில் பேசிய பலரும் அபியின் முந்தைய படத்தின் நடிப்பை பற்றி பேசிவிட்டு, இருக்கையை நோக்க... அமானுஷ்யனுக்கு வெளிப்படுத்த முடியாத சங்கடம்.... அவன் இந்நேரம் வீட்டிற்கு சென்றிருப்பான்... அலைபேசியையும் அணைத்திருப்பதிலிருந்து அபியின் கோப மனநிலை எளிதாக அமானுஷ்யனுக்கு புரிந்தது.... ஆனாலும், தொடக்கநாள், பிரச்சினை இன்றி முடிய வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள் வேறு எதை பற்றியும் அவனை சிந்திக்கவிடவில்லை....
வந்திருந்தவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆலோசனைகளை யூனிட் ஆட்களிடம் ஆலோசித்துவிட்டு, வீட்டிற்கு செல்ல இரவாகிவிட்டது அமானுஷ்யனுக்கு...
மெலிதாக எட்டிப்பார்த்த தலைவலியை தாண்டி, வீட்டில் வெடிக்கப்போகும் அணுகுண்டு பற்றிய பயம் ஒருபக்கம்.... ஆனாலும், அங்கிருந்து கோபித்துக்கொண்டு வந்த அபியின் செயலின் வெறுப்பு மறுபக்கம்...
எல்லாம் கலந்த கலவையாக வீட்டிற்குள் நுழைந்தான் அமானுஷ்யன்...
ஹாலின் சோபாவில் அமர்ந்து விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறான் அபி... காலையில் அணிந்திருந்த உடை கூட இன்னும் மாற்றவில்லை, பூஜையில் பூசப்பட்ட சந்தனம் கூட இன்னும் நெற்றியிலிருந்து நீங்கவில்லை.... அமானுஷ்யன் வந்துவிட்டதை கவனித்தும், இன்னும் அதை பொருட்படுத்தாதவனாக தன் வெறித்தலை தொடர்ந்தான்...
உடைகளை மாற்றிவிட்டு, முகம் கழுவி தன்னை புத்துணர்ச்சி ஆக்கிவிட்டு ஹாலை மீண்டும் அடைந்தான் அமானுஷ்யன்... அபியோ இன்னும் அதே போஸில்...
கோபத்தை கட்டுப்படுத்தியவனாக அமானுஷ்யனே தொடங்கினான்...
“சாப்டியா?”
“....” பதில் இல்லை...
“உன்னைத்தான் அபி கேட்குறேன், காதுல விழலையா?” இன்னும் சத்தமாக கேட்டான் அமு...
“...” மீண்டும் அதே மௌனம் தான்...
“இன்னிக்கு நீ பண்ணது ரொம்ப தப்பு அபி... நம்ம நிகழ்ச்சி அது, பாதில நீ கிளம்பிருக்கக்கூடாது....”
தன் பார்வையை அமுவின் மீது பாய்ச்சியவனாக தன் பேச்சை தொடங்கினான் அபி, “இப்பவும் கூட நான் அங்கிருந்து கிளம்பினதுதான் பெருசா தெரியுதுல்ல?”
“ஐயோ இல்ல அபி, அது நம்ம நிகழ்ச்சிடா”
“அப்டி நினைச்சிருந்தா எதுக்கு நீ காத்தமுத்துவை இன்வைட் பண்ணின?... அவனால நான் பட்ட வலி உனக்கு தெரியாதா?”
“ஏய், இது சினிமா உலகம்... பழசையல்லாம் நினச்சிட்டு இருந்தா ரொம்பநாள் நிக்க முடியாது.... இன்னிய தேதில நம்பர் ஒன் டிஸ்ட்ரிப்யூட்டர் அந்தாளுதான்.... அதுமட்டுமில்லாம திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க செயலாளரா ஆகப்போறார், அப்போ...”
அமு சொல்லிமுடிப்பதற்குள் இடைமறித்த அபி, “போதும் அமு, எனக்கு காத்தமுத்து புராணமல்லாம் தேவையில்ல... என்னைவிட நீ காத்தமுத்துவை நல்லா புரிஞ்சு வச்சிருக்க, நீ பேசாம அவனையே லவ் பண்ணிருக்கலாம்...” சொல்லிவிட்டு எதிர்வினையை எதிர்நோக்க மனமில்லாமல் எழுந்து படுக்கை அறைக்கு சென்றுவிட்டான்....
வெகுநேரத்து போராட்டத்திற்கு பிறகு தூங்கியும் போனான்....
அர்த்தராத்திரி... திடுக்கிட்டு விழித்தான் அபி, அருகில் அமானுஷ்யனை காணவில்லை... நேரம் இரண்டென காட்டியது, விடியலை நோக்கி காத்திருக்கும் வானத்தின் அடர் இருள் சூழ்ந்த பொழுது....
தண்ணீரை குடித்துவிட்டு, எழுந்து சென்று அமுவை தேடினான்... பால்கனியில் அமர்ந்தவாறு இருளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்...
பின்வழியே சென்றவாறு அமானுஷ்யனின் வெகு அருகாமையில் நின்றான்...
“அமு....”
“....” பதில் இல்லை...
“பதிலுக்கு பதிலா?... நான் கூப்டா என்னன்னு கேட்க மாட்டியா அமு?”
“என்ன வேணும் உனக்கு இப்போ?” எரிச்சல் மேலிட வார்த்தை விழுந்தது....
“ஒண்ணுமில்ல.... வந்து படு... ஆள் பார்க்கவே ரொம்ப டையர்டா இருக்க...”
“ஓஹோ, என் மேல உனக்கு அவ்வளவு அக்கறையா?... உன்ன கஷ்டப்படுத்துறதுல நான் சந்தோஷப்படுவேன்னு நினச்சுட்டில்ல?”
“அப்டி சொல்லலடா.... ப்ளீஸ், இந்த பேச்சை இத்தோட விட்டுடலாம்.... மேற்கொண்டு பேசி நம்ம நிம்மதியா கெடுத்துக்க வேணாம்...” சொன்னதோடு அமானுஷ்யனை கட்டி அணைத்தான்... இன்னும் இறுக்கம் தளராமல் அதே வீம்போடு அமைதியாகவே இருந்தான் அமு...
“ப்ளீஸ்.... சொல்றேன்ல” என்று அமுவின் கன்னத்தில் முத்தம் கொடுக்க, குளிர்நீரில் பட்ட நெருப்பாய் அத்தனை கோபங்களும் காணாமல் போகின....
படுக்கையறைக்கு நகர்த்தி சென்று, அமுவின் மார்பில் தலைவைத்து படுத்தவாறு இருவரும் உறங்கியும் போனார்கள்... மனங்கள் இரண்டும் சலனங்கள் இன்றி தெளிந்த நீரோடையாய் மாறிப்போனதன் விளைவாக, உறக்கம் விடியலை கடந்தும் வெகுநேரம் விட்டு அகலவில்லை...
அடுத்தடுத்த நாட்கள், படப்பிடிப்பு எவ்வித சிக்கலும் இன்றியே சென்றுகொண்டிருந்தது... படத்தின் பெயர்தான் உறைபனியே தவிர, 109டிகிரி சென்னை வெயிலில்தான் படப்பிடிப்பு பத்து நாட்களை நடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது....
வழக்கம் போல சென்னையின் பிரபல மாலில் அன்றைக்கு படப்பிடிப்பு... கூட்டத்தை கட்டுப்படுத்தி, வெயிலையும் சமாளித்து ஒரு சண்டை காட்சி எடுத்தாகிவிட்டது...
கதாநாயகி தன் உதட்டு சாயத்தை பதினான்காவது முறையாக சரிபார்த்துக்கொண்டிருக்கிறாள்.... அடுத்த காட்சிக்காக தீவிர யோசனையில் அமர்ந்திருந்த அமானுஷ்யனின் அருகில் சென்று அமர்ந்தான் அபி...
ஏசி காற்றினை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அபியின் நெற்றியிலிருந்து வியர்வை துளிகள் வழிந்தது....
“டேய் டைரக்டர், படத்தோட பெயரை பார்த்து ஏமாந்து உனக்கு கால்ஷீட் கொடுத்தது தப்பா போச்சுடா....” வெயிலின் உக்கிரம் தாங்காதவனாக சொன்னான் அபி...
“என்னடா ஆச்சு?” ஸ்க்ரிப்ட் எழுதிய பேனாவை வாயில் கடித்தபடி கேட்டான் அமு....
“பின்ன என்னடா?... உறைபனின்னு பேர் பார்த்ததும் ஷூட்டிங் சிம்லா, டார்ஜிலிங்னு இருக்கும்னு நினச்சேன்.... கடைசில நீ ஏற்காடு கூட காட்டமாட்ட போல....”
“ஹ ஹா.... நான் படத்துக்கு அந்த அர்த்தத்துல பேர் வைக்கலடா.... படத்தோட க்ளைமாக்ஸ்ல உன் லவ்வர் ஆக்சிடென்ட்’ல இறந்து போயிடுறா, அப்போ ப்ரீசர் பாக்ஸ்ல வச்ச அவ உடலை பார்த்து நீ உறைஞ்சு போய் நிக்குற.... அவ உடல் பனி போல குளிர்ச்சியாவும், உன் உடல் உறைஞ்சு போயும் நிக்குற அர்த்தத்தில்தான் படத்துக்கு அந்த பேர்....”
“எங்கிருந்துடா இப்டிலாம் வில்லங்கமா யோசிக்கிறீங்க?... என்னமோ பண்ணு... கொல்றதுதான் கொல்ற, லகிதாவை கொஞ்சம் சீக்கிரம் கொன்னிடு.... இங்கிலீஷ். தமிழ், இந்தின்னு கலந்து கட்டி அவ அடிக்குற பேச்சை சகிக்கவே முடியல... இதுல ‘அதீத நடிகருக்கும், புதுப்பட நாயகிக்கும் புதிதாக காதல்’னு கிசுகிசுப்பல்லாம் வேற கொடுமை பண்றானுங்க...”
 “ஹ ஹா... பாவம்டா, நல்ல பொண்ணு அவ... அடுத்ததாவும் என் படத்துலதான் நடிக்கப்போறதா சொல்லிட்டு இருக்கா, அந்த அளவுக்கு என்மேல அவளுக்கு நம்பிக்கை....”
“அது நம்பிக்கையும் இல்ல, தும்பிக்கையும் இல்ல... உன்னைத்தவிர வேற யாரும் அவளுக்கு சான்ஸ் தரமாட்டாங்க, அதனாலதான் இப்பவே பில்டப் பண்றா... விட்டா நீ லகிதாவுக்கு கோவிலே கட்டிருவ போல, நான் கிளம்புறேன்...” சொல்லிவிட்டு மாலினை சுற்றிப்பார்த்தான் அபி...
ஆங்காங்கே சிலர் அவனை அடையாளம் காண்பதும், ஓடிவந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும் வாடிக்கையான ஒன்றுதான்... சிலர், “அவன்தானா இவன்?” என்கிற குழப்பத்தோடு கடந்துசெல்வதும் பல நேரங்களில் நிகழ்வதுண்டு....
கல்லூரி பெண்கள் நான்கைந்து பேர் அபியை அடையாளம் கண்டு, நடையும் ஓட்டமுமாக வந்து, “அபிதானே நீங்க?” என்றார்கள்...
அவன், “ஆமா!”ன்னு சொல்வதற்குள் ஒரு பெண் கன்னங்களை கிள்ளிவிட்டாள்... இன்னொரு பெண்ணோ, “ஒரு போட்டோ எடுங்கடி” ன்னு சொன்னபடி அபியின் மிக அருகாமையில் நின்றாள்.... அவள் மார்பு அபியின் இடையை அடிக்கடி உரச, சங்கடத்தில் நெளிந்தது என்னமோ அபிதான்... அவ்வளவையும் அருகிலிருந்த அறையின் ஜன்னல் வழியே பார்த்தபடி சிரித்துக்கொண்டிருந்தான் அமானுஷ்யன்....
“ஷூட்டிங்க்கு லேட் ஆச்சு!” ஒருவாராக அந்த பெண்களிடம் சொல்லிவிட்டு தப்பித்து வருவதற்குள் அபி பல நூறு கலோரி எனர்ஜிக்களை விரயம் செய்திருப்பான்....
அப்படி, வேகமெடுத்து ஓடிவந்த அபியை இன்னொரு கை தடுத்து நிறுத்த, யாரென்று பார்த்த அபிக்கு, ஒரு மங்கலான ஞாபகம்.... எப்போதோ பரிச்சயமான முகம் அது... பதினேழு வயதிருக்கும் யுவன் அவன்...
“அபி சார் தானே நீங்க?” இளைஞனும் தயங்கியபடிதான் கேட்டான்...
“ஆமா... நீ?... நீங்க?” என்று புதைந்து கிடந்த பழைய நியாபகங்களை துழாவினான்.... அந்த முகத்தோடு ஒத்திருந்த சில பெயர்களை அவன் அறிவு பரிசீலித்து பார்த்துக்கொண்டிருந்தது....
“என்னைய ஞாபகம் இல்லையா?... எஸ்.எஸ். சில்க்ஸ் விளம்பரம்... பலபலக்குது பட்டாடை...” இளைஞன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அபியின் முகம் பிரகாசித்துவிட்டது.... தான் அவனை கண்டுபிடித்து விட்டதன் அறிகுறியாக கண்கள் ஒளிர்ந்தது....
சட்டென அவன் கன்னத்தை கிள்ளியவாறு, “டேய் கௌதம் குட்டி, எப்டி இருக்க?” என்றான்....
“ஞாபகம் இருக்கா சார்?” ஆச்சரியமாக கேட்டான் கௌதம்...
“என்னடா சார், மோர்னு புதுசா?... அபின்னே கூப்பிடு... உன்ன எப்டி மறக்க முடியும்?... பதினஞ்சு நாள் அந்த விளம்பர ஷூட்டிங்க்காக ஒன்னாவே இருந்தோம்... அப்போ நீ குட்டிப்பையனா இருந்த, இப்போ மீசையல்லாம் முளைச்சு பெரிய ஆளா ஆகிட்ட போல?” கௌதமின் மீசையை வருடிப்பார்த்தான் அபி...
“ஹ்ம்ம்... நீங்ககூடத்தான் ஹீரோவா ஆகிட்டிங்க, மாடலிங் பக்கமே பார்க்க முடியல?”
“இல்லடா குட்டி, இப்போதான் ரெண்டாவது படம் பண்றேன்... நீ எப்டி இருக்க?... என்ன பண்ற? எங்க இருக்க?” கேள்விகளை அபி வரிசையாக அடுக்கிக்கொண்டே இருக்க, ஷூட்டிங் யூனிட் ஆள் ஒருவன் வந்து, “சார், டேக் போகலாம்...” என்றான்...
“ஓஹோ.... சரி குட்டி, நீ ப்ரீயா இருக்குறப்போ வீட்டுக்கு வா... நிறைய பேசனும்...” என்று சொல்லிவிட்டு, கௌதமனின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அங்கிருந்து விலகி நடந்தான் அபி....
அந்த “முத்தம்” பலரது கண்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, சில புருவங்கள் அதிர்ச்சியில் உயர்ந்தது, அதில் அமானுஷ்யனின் புருவங்களும் அடக்கம் என்றுதான் சொல்லணும்....
படப்பிடிப்பு அன்றைக்கு வழக்கத்தைவிட சீக்கிரமாகவே முடிந்துவிட்டது.... இயக்குனர் ஏன் “பேக்கப்” சொன்னார் என்பதை யாரும் ஆராயவில்லை... “வெளிச்சம் பத்தல, க்ரவுடு அதிகமாகிடுச்சு, டைரக்டருக்கு திருப்தி ஆகல, கொல்லேசன் சரியில்ல..” என்று ஆளாளுக்கு அவரவருக்கு தோன்றும் காரணங்களை, அந்த தருணத்தில் கேள்விக்கு பதிலாக நிரப்பிக்கொண்டிருந்தார்கள்....

                                                  *****************
மறுநாள் அதிகாலையிலேயே குமரன் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகிவிட்டது யூனிட்....
“அபியும் பக்கத்து வீட்டு பசங்களும் இந்த திண்ணைல பேசிட்டு இருக்காங்க... அப்போ லகிதா ஒரு குழப்பத்தோட வந்து அட்ரஸ் கேட்குறதுதான் சீன்...” அமானுஷ்யன் தன் சகாக்களிடம் காட்சியை விளக்கிவிட்டு, லகிதாவின் மேக்கப்பை குறைக்குமாறு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தான்....
அபியும் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஸ்க்ரிப்ட் வசனங்களை உச்சரித்து பழகிக்கொண்டிருந்தான்....
“எங்கப்பா அந்த சின்னசாமி?” மைக்கில் யாரிடமோ சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறான் அமானுஷ்யன்....
ஏதோ ஒரு சிறிய குழப்பம், எப்படியும் டேக் போக இன்னும் கால் மணி நேரமாவது ஆகலாம்.... கண்களை மூடியவாறு தன் இருக்கையில் சாய்ந்து படுத்தான் அபி....
சில நிமிட நித்திரையை, ஒரு கை கலைத்து எழுப்பியது....
கௌதமேதான் அது.... அபிக்கு ஆச்சரியம் கலந்த குழப்பம்... நேற்று பார்த்தது எதேச்சையாக நடந்திருக்கலாம், இன்றும் எதேச்சையாகவா வந்திருக்கிறான்? குழம்பியபடியே எழுந்து அமர்ந்தான் அபி...
“என்ன அபி, காலைலயே தூக்கமா?”
“ஏய் கௌதம், என்னடா பண்ற நீ இங்க?”
“எனக்கும் படத்துல நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்குபா... நானும் உங்கள மாதிரி இன்னும் கொஞ்ச நாள்ல ஹீரோ ஆகிடுவேன்... அப்புறம் பாருங்க, லகிதா ஸ்ரீ என்னோட சேர்ந்து கிசுகிசுக்கப்படுவா....” சிரித்தான் கௌதம்...
“ஏய் நிஜமாவா?... வாழ்த்துகள்டா... இங்க டைரக்டர் யாரையும் பார்க்க வந்தியா?”
“இல்லப்பா.... ப்ரொட்யூசர்... அவரும் சாதாரண ஆள் இல்ல, உங்கள அறிமுகப்படுத்தின அதே ஆள்தான்....” முகம் முழுக்க சிரிப்பாய் சொன்னான் கௌதம்...
“யாரை சொல்ற?...” அபியின் கேள்வியில் ஒரு பதற்றம் தெரிந்தது....
“கே.எம் சார்...”
“காத்தமுத்துவா?”
“ஆமா... உங்கள அவர்தான் அறிமுகப்டுத்தினதா சந்தனம் பத்திரிகைல படிச்சேன்...”
அபிக்கு தலையே சுற்றியது... இரண்டு வருடங்களுக்கு முன்பான தன்னையே கௌதமின் வடிவில் காண்பதாக உணர்ந்தான்... மிகவும் அப்பாவியாக, தான் ஒரு நாயகனாக ஆகப்போகும் மகிழ்ச்சியில் பூரிப்பாக காணப்படும் கௌதமிடம் என்ன சொல்லி புரியவைப்பதென்று புரியாத குழப்பத்தில் தடுமாறினான் அபி...
“இன்னும் பத்து நிமிஷத்துல சார் வந்திடுவார்... நான் கிளம்பட்டுமா?” நகர முயன்ற கெளதமை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தான் அபி...
“வேணாம் கௌதம்.... அந்தாளு வேணாம்... உனக்கு வேற சான்ஸ் கிடைக்கும்...”
“அடப்போங்க அபி... இப்டி வாய்ப்பல்லாம் அரிதாத்தான் கிடைக்கும்... முதல் படத்துல சின்ன ரோல்தான், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிடலாம்...”
சட்டென ஏதோ நினைவில் வந்தவனாக, “உனக்கு ஏதோ ஒரு படத்துல சின்ன ரோல் கிடச்சா போதும்தானே?” சொன்னான் அபி....
“ஹ்ம்ம்... அதுதானே இங்க குதிரை கொம்பா இருக்கு....”
“உனக்கு நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்.... கொஞ்சம் வெயிட் பண்ணு...” சொல்லிவிட்டு அமானுஷ்யனை நோக்கி நகர்ந்தான் அபி... சற்று தொலைவில் இருந்து இந்த காட்சிகளை அமானுஷ்யன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.... ஆனாலும், அபி தன்னருகில் வருவதை கவனிக்காதவனாக “ஏய், லைட்டிங் ஒழுங்கா செட் பண்ணு...” என்று யாரையோ கடிந்துகொண்டிருந்தான்....
“அமு...”
“என்ன?”
“ஒரு விஷயம்....”
“ஷூட்டிங் முடிஞ்சதும் பேசிக்கலாம்... முதல்ல டயலாக் மனப்பாடம் பண்ணு....” பிடிகொடுக்காத பதில்....
“அதல்லாம் பண்ணியாச்சு... ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வா....” தனியே அழைத்தான் அபி...
சுற்றிலும் ஆட்கள் வேடிக்கை பார்ப்பதை உணர்ந்து, மேற்கொண்டு யார் வாய்க்கும் அவலாக தான் சிக்க விரும்பாதவனாக அபியின் அருகே சென்றான் அமானுஷ்யன்...
“என்ன அபி இந்த நேரத்துல?”
“இப்போ ஷூட்டிங்ல என் பக்கத்துவீட்டுக்கார பசங்களா நடிக்கிறாங்கள்ல?, அதுல இன்னும் ஒரு ஆளை கூட சேர்க்கணும்....”
“அதுக்கல்லாம் ஆளுங்க அல்ரெடி ரெடி பண்ணியாச்சு... அங்க பாரு, மேக்கப் கூட போட்டு ரெடியா இருக்காங்க” அமு கை காட்டிய இடத்தில் நான்கைந்து இளைஞர்கள் இயல்பான கைலி பனியனுடன் பேசிக்கொண்டிருந்தனர்...
“தெரியும் அமு.... அந்த பசங்க கூட இன்னுமொருத்தனை சேர்க்கணும்...”
“என்ன அபி இப்டிலாம் பண்ற?... ஷூட்டிங் விஷயத்துல யார் தலையீடும் எனக்கு இருக்கக்கூடாதுன்னு தெரியாதா?”
“எல்லாம் எனக்கும் தெரியும்... ஆனால், இப்போ நாம அவனுக்கு சான்ஸ் கொடுக்கலைன்னா காத்தமுத்துவால சீரழிஞ்ச பசங்க பட்டியல்ல அவன் பேரும் வந்திடும்.... அதனாலதான் சொல்றேன், புரிஞ்சுக்க...” அபி கொஞ்சம் சத்தமாகவும், மெல்லிய கோபத்துடனும் இதை சொல்லி முடித்தான்...
“காத்தமுத்து” இந்த பெயரை கேட்டதும் அமானுஷ்யனுக்கு பயம் வந்துவிட்டது.... இப்போதுதான் பழைய பிரச்சினை ஓய்ந்திருக்கு, மீண்டும் அந்த ஆள் பெயரால் இன்னொரு கலவரத்தை தான் சந்திக்க விரும்பவில்லை...வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான்...
ஒரு வீட்டின் திண்ணையில் அபி தன் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி... அபியின் வலது புறத்தில் கௌதம் அமர்ந்திருந்தான்... எந்த இடத்தில் அமர்ந்தால் நாயகனோடு அதிகம் போகஸ் செய்யப்படுவார்கள் என்பதை அறிந்த அபிதான், கௌதமிற்கு தன் வலது பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான்...
“மச்சான்... நேத்து ஒரு படம் பார்த்தேன்டா... ஹீரோ ப்ரெண்ட்ஸ்ஓட உக்காந்து பேசிட்டு இருக்கான், அப்போ தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்து பக்கத்து வீட்டு அட்ரஸ் கேட்குது... ஒரு பார்வை பரிமாற்றம் தான், அப்புறம் காதல், டூயட்னு போகுது....” அபி சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க, நண்பர்கள் அவரவரும் ஓரிரு வார்த்தைகளை தங்கள் பங்கின் வசனமாக உதிர்த்துக்கொண்டிருந்தார்கள்...
“எக்ஸ்க்யூஸ் மி... பக்கத்த்லே பண்டியன் வீடு எங்கே இற்கு...?” லகிதா கொஞ்சும் மொழியில் தமிழை கொலை செய்துகொண்டிருந்தாள்....
“கட்.... கட்... கட்...” அமானுஷ்யன் இடை நிறுத்தினான்...
“யாருப்பா இது வசனம் சொல்லி கொடுத்தது?... பாண்டியனை பண்டியன்னு சொல்லுது, தமிழையே பயமுறுத்துற மாதிரி பேசுது” சிலர் சிரிக்க, அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவன், வேகமாக ஓடி வந்து லகிதாவிடம் வசனங்களை திருத்தி உச்சரிக்க கற்றுக்கொடுத்தான்...
“சரி... டேக் போகலாம்....”
“எக்ஸ்க்யூஸ்மி... இங்க பாண்டியன் வீடு எங்க இருக்கு?” லகிதா ஓரளவு சரியாக உச்சரித்தாள்... பிசிறுகளை ரீரெக்கார்டிங்கில்தான் சரி செய்யனும்...
“மச்சான்... நீ சொன்ன மாதிரியே தேவதை மாதிரி பொண்ணுடா....” கௌதமின் டயலாக் இது....
“கட்.... கட்.... கட்...” மீண்டும் இடை நிறுத்தம்.... அமானுஷ்யனை நோக்கி எல்லா கண்களும் பார்க்க, அவனோ இன்னும் குழப்பத்தில் வேறு யாரையோ தேடினான்...
அப்போதுதான் கட் சொன்னது, ஒளிப்பதிவாளர் என்பது எல்லோருக்கும் புரிந்தது...
“உனக்கென்னப்பா பிரச்சினை?... இந்த பொண்ணே எப்போவாச்சும்தான் அதிசயமா டயலாக்கை சரியா பேசுது, அது பொறுக்கலையா உனக்கு?” ஆற்றாமையில் கேட்டான் அமானுஷ்யன்...
“இல்ல சார்.... அந்த டயலாக் சொன்ன பையனை கொஞ்சம் பின்னாடி போக சொல்லுங்க....” கெளதமை நோக்கி கை காட்டினான்...
சரியாக அந்த நேரத்தில் அபியும் அங்கு வந்துகொண்டிருப்பதை இருவரும் கவனிக்கவில்லை...
“ஏன்?... என்ன ப்ராப்ளம்?” அமானுஷ்யன் குழப்பத்தில் கேட்டான்...
“ஹீரோ பக்கத்துல அவன் உட்காந்திருக்கதால, ஹீரோ டல்லா தெரியுறாரு” அதை கேட்டு அபி சிரித்துவிட, தான் சொன்னதை அபி கேட்டுவிட்டதனை உணர்ந்து வளைந்து நெளிந்தான் ஒளிப்பதிவாளர்.... அபியும் அமானுஷ்யனும் எதற்காக சிரிக்கிறார்கள்? என்ற குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருந்தான்... இருவரின் முதல் சந்திப்பே இப்படியான ஒரு நிகழ்வின் நீட்சிதான் என்பதை எவர் சொல்லியும் அவனுக்கு புரியவைத்துவிட முடியாது....
“மச்சான்.... நீ சொன்ன மாதிரியே தேவதை மாதிரி இருக்காடா” அதே வசனத்தை கௌதமே பேசி முடிக்க டேக் ஓகே ஆனது....
அன்று ஷூட்டிங் முழுவதும் அபியும் கௌதமும் ஒன்றாகவே அமர்ந்து பழைய விஷயங்களை சிரித்து அசைபோட்டுகொண்டிருந்தனர்...
அன்றும் கௌதமிடமிருந்து விடைபெறும்போது அதே “முத்தம்”... அமானுஷ்யனை இன்னும் அதிக எரிச்சலூட்டியது....
“நான் நேத்து சொன்னேன், நீ நம்பலையே... அங்க பாரு” அமானுஷ்யனின் காதில் கேட்கும்படி யூனிட் ஆட்கள் இருவர் இப்படி பேசியதை கேட்டு இன்னும் அதிக எரிச்சலுடன் வீட்டை நோக்கி நகர்ந்தான் அமானுஷ்யன்...
“ப்ரீயா இருக்குறப்போ வீட்டுக்கு வா...” வழக்கமான சம்பிரதாய விடைபெறுதல்.... கௌதமிடம் விடைபெற்ற பிறகு, தன்னை நோக்கிய எந்த கண்களையும் பொருட்படுத்தாமல் தானும் வீட்டிற்கு விரைந்தான் அபி...
வீடு இன்றைக்கு மிகப்பெரிய உஷ்ண சக்தியை வெளிப்படுத்தப்போவதை உணராதவனாக உள்ளே சென்றான் அபி....
தன் உடைகளை கூட இன்னும் மாற்றாமல், படுக்கையில் தலையில் கைவைத்தபடி படுத்திருக்கிறான் அமானுஷ்யன்...
புகைந்துகொண்டிருப்பது கனல் என்று அறியாமல், இயல்பான பேச்சோடு உள்ளே நுழைந்தான் அபி....
நுழைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த நெருப்பிற்கு சிறிது எண்ணையும் வார்த்தான், “இன்னிக்கு முழுக்க கௌதமோட செம்ம ரகளை தெரியுமா?... நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி போன மாதிரி ஒரு உணர்வு...” சொல்லிக்கொண்டே அமானுஷ்யனின் அருகில் அமர்ந்து, அவன் தோளில் சாய்ந்தான்....
இன்னும் எதையும் பொருட்படுத்தாமல் படுத்திருக்கும் அமு, அபியின் கண்களுக்கு அந்நியமாக தோன்றவில்லை... சிலநேரங்களில் ஷூட்டிங் முடிந்த நாட்களில், உச்சத்திற்கு ஏறிய டென்ஷனை குறைக்கும் பொருட்டு, வீட்டில் இப்படி தனித்தவம் மேற்கொள்வது வாடிக்கைதான்....
“என்ன அமு தலைவலியா?” இன்னும் நெருங்கியபடி கேட்டான் அபி....
“ஆமா.... காலைலேந்து...”
“ஐயோ.... ஏண்டா சொல்லவே இல்ல, மாத்திரை எதுவும் போட்டியா?”
“இந்த தலைவலிக்கு மாத்திரை தீர்வில்ல... என்னைய கொஞ்சம் தனியா விட்டின்னாவே போதும்...” அமு வேறுபக்கம் புரண்டு படுத்தான்.... அபிக்கு இது அதிர்ச்சியான பதிலாக தோன்றியது.... எப்போதுமே அமுவிற்கு உடல்நிலை சரியில்லை என்றால், “மாத்திரைல்லாம் வேணாம் அபி, நீ கூட இருந்தாவே போதும்...” என்று அவன் மடியில் படுத்துக்கொள்வதுதான் வாடிக்கை....
ஆனால், இப்படி தனிமையை தேடும் அளவிற்கு அமுவிற்கு என்ன ஆனது?...
“என்மேல என்ன கோபம் அமு?” நேரடியாகவே கேட்டுவிட்டான் அபி...
“ஒண்ணுமில்ல....” ஆயிரம் இருப்பதாய் சொன்னது அந்த பதில்....
“தயவுசெஞ்சு சொல்லு... இன்னிக்கு நான் எதுவும் உன்னை கோபப்படுத்துற மாதிரி செஞ்சதா தெரியல.... வழக்கத்தைவிட வேற எதுவும் இன்னிக்கு புதுசா நடக்கல.... ஒருவேளை கௌதம்?” என்று கேட்டபடி அமுவின் முகத்தை கவனித்தான், ‘கௌதம்’ பெயர் உச்சரித்தபோது அதில் எழுந்த மாற்றங்கள், நிச்சயம் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி அதுதான் என்பதை அபிக்கு உணர்த்தியது....
“அப்போ நீயும் மத்த பசங்க மாதிரிதான்ல?... கௌதம் என் தம்பி மாதிரிடா...”
“தம்பி மாதிரி தானே, தம்பி இல்லைல்ல?... அவனோட பேசுறதையோ, பழகுறதையோ நான் குற்றம் சொல்லல... அத்தனை பேருக்கு மத்தில முத்தம் கொடுக்குறதல்லாம் எனக்கு புடிக்கல...” அமு நேரடியாகவே சொல்லிவிட்டான்...
அதிர்ச்சியில் உறைந்தவனாக அபி தொடங்கினான், “இப்போ இல்ல அமு, அவன் மாடலிங் வந்தப்போ அவன் வயசு பதினொன்னு.... குண்டா கொழுகொழுன்னு இருக்குற அவனை நான் மட்டுமில்ல, ஷூட் நடக்குறப்போ எல்லாருமே கிள்ளி, கொஞ்சி விளையாடுவோம்... இது உன் கண்ணுக்கு ஏன் உறுத்தலா தெரியுதுன்னு எனக்கு புரியல....”
“பதின்மூனு வயசுல அவனுக்கு முத்தம் கொடுக்குறதுக்கும், இப்போ பதினேழு  வயசுல முத்தம் கொடுக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குன்னு உனக்கு தெரியலையா?...”
“ஏதோ நேத்து அவனை எதார்த்தமா பார்த்தேன், இன்னிக்கு நம்ம படத்துல ஒரு சின்ன ரோல்’க்கு ரெக்கமண்ட் பண்ணேன்றதுக்காக நீ பொதுப்படையா இப்டி பேசுறது சரியில்ல அமு.... அவன என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மாளமா போட்டேன்...” அபி விளக்கிக்கொண்டு இருக்கும்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது...
“இவனுங்க வேற எவனாச்சும்... நல்லா ப்ளோல போயிட்டு இருக்கும்போது கரடி மாதிரி...” வாசலில் நிற்கும் அந்த மூன்றாம் நபரை கரித்துகொட்டியவாறே கதவை நோக்கி விரைந்தான் அபி....
கதவை வேகமாக திறக்க, கதவின் மறுபுறத்தில் நின்ற கெளதமை பார்த்ததும் அபியின் முகமெல்லாம் முத்துக்களாய் வியர்வை துளிகள் அரும்பின.... சிரிக்க மறந்து, சம்பிரதாய ‘ஹாய்’கூட மறந்து “நான் என்ன அவன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மாளமா போட்டேன்” என்று சொல்லிமுடித்த ஒலி அலைகள் கூட இன்னும் அகலாத கணப்பொழுதில் கௌதம் வந்து வாசலில் நிற்பது நிச்சயம் அபியை பதற்றமானவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது...
“என்ன அபி, வந்தவனை உள்ள கூட கூப்பிடாம அப்டியே பேய் அறைஞ்ச மாதிரி நிக்குறீங்க?... பேய் படம் எதுவும் பார்த்துட்டு இருந்திங்களோ?” மெல்ல எட்டி ஹாலின் தொலைக்காட்சியை கவனிக்க, அது அணைத்துதான் கிடந்தது...
தன்னை சுதாரித்தவனாக கெளதமை உள்ளே அழைத்து ஹாலின் இருக்கையில் அமரவைத்தான்... ஒவ்வொரு நொடியும் அமு இருக்கும் அறையை அபியின் கண்கள் கலவரத்துடன் கவனிப்பதும், அதன்பின் ஒரு பெருமூச்சு விடுவதும் அணிச்சையான  நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது....
“வீட்டுக்கு வந்த கெஸ்ட்’க்கு எதுவும் சாப்பிட தரமாட்டிங்களா?” சொல்லிவிட்டு அபியின் பதிலை எதிர்பார்க்காமல் குளிர்சாதன பெட்டியை திறந்து குளிர்பானத்தை எடுத்துவந்து குடிக்க தொடங்கினான்... அருகிலிருந்த நொறுக்கு தீனிகளை மேசை மீது கடைபரப்பி வைத்துவிட்டு அபியை பார்த்து, “உக்காருங்க... கூச்சப்படாம சாப்பிடுங்க” என்று கிண்டல் செய்ய.... அபியோ இன்னும் பதற்றம் அதிகமானவனாக அறையை பார்த்தவாறே கௌதமின் அருகில் அமர்ந்தான்...
“ஆமா... உங்ககூட டைரக்டர் சாரும் தங்கிருக்கதா சொன்னாங்க, ஆளையே காணும்?” என்று அபியின் காதருகே கேட்டவனாக, கண்களை அலைபாயவிட்டான்...
“ரூம்குள்ள இருக்காரா?...”
“ஹ்ம்ம்...” அப்பாவியாக தலையசைத்தான் அபி....
“உள்ள அவர் மட்டும்தானே இருக்காரு? லகிதாவும் கூட இருக்குற மாதிரில்ல உங்க மூஞ்சி இப்டி டென்ஷனா இருக்கு....” சத்தமாக சிரித்தான் கௌதம்... வேறுவழியின்றி அபியும் சிரிக்க.... சரியாக அந்த நேரத்தில், கதவை திறந்து ஹாலிற்குள் வந்தான் அமானுஷ்யன்....
சத்தமான சிரிப்பு, மேசை மீது குளிர்பானம் முதல் சகல சிற்றுண்டிகளும், அபியின் வெகு அருகாமையில் கௌதம்.... ‘நான் என்ன அவன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மாளமா போட்டேன்’ அபி சொன்னது அமுவின் காதுகளுக்குள் மீண்டும் ஒலித்தது, மென்மையாக சிரித்தான்...
இயக்குனரை பார்த்ததும் அம்மாவை பார்த்த ஆளுங்கட்சி மினிஸ்டரை போல பவ்யம் காட்டினான் கௌதம்... சட்டென எழுந்து, வளைந்து நெளிந்து நின்றவன், இன்னும் சில நேரத்தில் ஒடிந்து விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.....
சில நிமிட சம்பிரதாய பேச்சுகளுக்கு பிறகு, அமு மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான்....
அத்தனை நேரமும் கலவரத்துடன் காணப்பட்ட அபி, மீண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டான்....
“டைரக்டர் ரொம்ப நல்ல மனுஷன்தான்... ரொம்ப அமைதியானவர் போல!” என்று சொல்லிக்கொண்டே அபியை பார்க்க, அபியோ எச்சிலை விழுங்கிவிட்டு சில டெசிபல் சிரிப்புகளை தனக்குள் அடக்கியவனாக, ஆமோதித்து தலையசைத்தான்....
கால் மணி நேர அபியுடனான பேச்சு ஒருவாறாக நிறைவடைந்த பிறகு, கௌதமும் ஒருவழியாக விடைபெற்று வீட்டை விட்டு கிளம்பினான்....
இரண்டு குவளை தண்ணீரை தன் வாய்க்குள் ஊற்றிக்கொண்டான்.... மிகப்பெரிய கலவரத்திற்கு தயாராகிக்கொண்டான்.... ஒரு போர்வீரனுக்கே உரிய அத்தனை தற்காப்பு உத்திகளையும் யோசித்தவனாக அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.... அமு இப்போது கொஞ்சம் இயல்பாக இருப்பதாக அபிக்கு தோன்றியது.... அந்த இயல்பிற்கு பின்பு ஒளிந்திருக்கும் சலனமற்ற உணர்வுகளை அபியால் புரிந்துகொள்ள முடியவில்லை....
“இங்க பாரு அமு....” அபி தொடங்குவதற்கு முன்பே இடைமறித்தான் அமு.....
“எந்த விளக்கமும் எனக்கு தரவேணாம் அபி.... நான் உன்ன எப்பவும் சந்தேகப்பட மாட்டேன்.... ஆனாலும், மற்றவங்க பார்வையும் என்னை போலவே இருக்குமான்னு எனக்கு தெரியாது... இப்டி அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதும், பேசிட்டு இருக்குறதும் தப்பே இல்ல... நல்லா பேசு, நிறைய பேசு, சந்தோஷமா இரு.... ஆனால், பப்ளிக்ல நீ ஒரு செலிப்ரிட்டி... உன்னை எப்பவும் பல கண்கள் கண்காணிச்சுட்டே இருக்கும்... நீ சறுக்குறதுக்கான தருணம் எதிர்பார்த்துட்டே இருக்குற அந்த கண்கள், நீ விழறப்போ அதை சந்தோஷமா வேடிக்கை பார்க்கும்... கடைசி வரைக்கும் நீ எழவே முடியாத அளவுக்கு அந்த ஆட்கள் உன்னை பாதாளத்துள தள்ளி விட்டுடுவாங்க.... மறுபடியும் சொல்றேன், நான் என்ன நம்புறதை விட, உன்னைத்தான் அதிகம் நம்புறேன்.....” அமு சொல்லி முடிக்கும்போது வேகமாக ஓடிவந்து அவனை கட்டி அணைத்தான் அபி... அபியின் கண்கள் கலங்கி நீர் தாரை பெருகியது.... 
அந்த கண்ணீரில் அளவற்ற நம்பிக்கையும், களங்கமற்ற காதலும் கலந்தே வெளியானது...
சரியாக மூன்றே மாதத்தில் படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங் ரீரெக்கார்டிங் தொடங்கி லைட் மேன்’களின் சம்பள பாக்கி வரை எல்லாமும் சுபமாக நிறைவேறிவிட்டது... நல்லதொரு நாளில் திரைப்படம் வெளியாகும் தேதியும் குறித்தாகிவிட்டது...


                                               *******************
சென்னை வழக்கமான நாளை விட கொஞ்சம் பரபரப்பு குறைவாக காணப்பட்டது.... சனிக்கிழமை என்பதால் மட்டுமல்ல, ஒன்பது மணி ஆகிவிட்டது என்றாலும் கூட இன்னும் சோம்பல் முறித்து எழுந்து வராத சூரியனின் சூழ்ச்சியால் கூட இருக்கலாம்... மழை வருவதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்பட்டது, நேற்று இரவே ரமணன் கூட ‘மழைக்கான வாய்ப்பு ஆங்காங்கே உண்டு” என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டார்....
மகிழுந்தில் அமர்ந்து சாலையோரங்களை வேடிக்கை பார்த்தபடி வந்தான் அபி...
“ப்ரொட்யூசர் வீட்டுக்கு போனதோட நான் மட்டும் பிரஸ்மீட் போயிட்டு வரேன்னு சொன்னா கேட்க மாட்ற.... அங்க நம்மள வெறுப்பேத்துற மாதிரி கேள்வி கேட்பாங்க அபி..” எச்சரித்தான் அமு....
“ஏய்... நான் எவ்ளோ பேட்டியை பார்த்திருக்கேன், இதல்லாம் ஒரு விஷயமா?”
“இப்போ பிரஸ்மீட்’ல பார்க்கப்போற ஆளுங்க யாரும் டிடி மாதிரி சிரிச்சுகிட்டே நமக்கு பிடிச்ச கேள்வியை கேட்கமாட்டாங்க... எந்த இடத்துல நம்ம வாயை கிளறுனா அவங்களுக்கு கிசுகிசுவும், நியூஸும் கிடைக்கும்னு பார்ப்பாங்க.... ரொம்ப கவனமா இருக்கணும்....”
“உன்னையவே ரெண்டு வருஷமா நான் சமாளிச்சுட்டேன், இதல்லாம் என்ன பெருசா அமு?” கண்ணடித்து அபி சிரிக்க, எதிர்வினையாய் தொடையில் நறுக்கென்ற கிள்ளு விழுந்தது....
ப்ரொட்யூசர் வீடு, விநியோகஸ்தர்கள் மீட்டிங்னு எல்லாம் முடிந்துவிட்டு ஒருவழியாக பத்திரிகையார் சந்திப்பிற்கு வந்துசேர மாலை ஆறு மணி ஆகிவிட்டது.... கையில் பேனாவோடும், கண்களில் ஒரு பழிவாங்கும் வெறியோடும் அரை மணி நேரமாக காத்திருக்கும் பத்திரிகையாளர்களை கண்டதும் அமானுஷ்யன் கொஞ்சம் கலவரமானான்....
பல்வேறு மைக்குகள் பொருத்தப்பட்டு, கேமராக்களின் ப்ளாஷ்கள் ஒளித்ததோடு கேள்விக்கணைகள் அம்பாக பாயத்தொடங்கியது....
“உங்க அதீதம் படத்துல பத்திரிகையாளர்களை கிண்டல் பண்ணிருக்கதா சொல்றாங்களே?” கூட்டத்திற்குள் வந்த குரலை வைத்து ஆளை அடையாளம் காணமுடியவில்லை....
“அப்டி காட்சிகள் எதுவும் இல்லை... பிரஸ் ஆட்கள் நீங்க விரும்பினா, உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டு காட்டவும் நாங்க தயார்....” அமானுஷ்யன் யோசித்து பதில் சொன்னான்....
இப்படி பொதுப்படையான கேள்விகள் ஒருகட்டத்தில் திசைமாறி தனிநபர் சார்ந்த கேள்விகளாக மாறின....
“அது என்ன நீங்க அபியை தவிர வேற யாரையும் வச்சு படம் எடுக்க மாட்டிங்களா?”
“அப்டி இல்ல.... என்னோட கதைக்குத்தான் ஹீரோவே தவிர, எப்போதும் நான் ஹீரோக்காக கதை உருவாக்குறதில்ல... அதுவுமில்லாம ரெண்டு படம்தானே நான் பண்ணிருக்கேன், அதுக்குள்ள இந்த கேள்வி அவசியமா?” எழுந்த கோபத்தை எச்சில் வடிவில் விழுங்கிவிட்டு, சாந்தமான வார்த்தைகளை மட்டும் பதிலாக வெளிவிட்டான்....
“அபி, உங்கள பத்தி இப்போ பேசப்படுற கிசுகிசு பற்றி என்ன நினைக்குறீங்க?” அம்பு அபியை நோக்கி பாய்ந்தது....
“எனக்கும் லகிதாவுக்கும் சம்திங் சம்திங்’ன்னு தானே?... நீங்களும் பக்கம் பக்கமாதான் கிசுகிசு எழுதுனீங்க, அதைத்தாண்டி ஒண்ணுமே நடக்கலையே!” அபி சிரித்தான்....
“நான் அதை சொல்லல அபி, இது வேற விஷயம்....”
“என்ன?” இப்போதுதான் அபி பதற்ற வலைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கத்தொடங்கினான்....
“நீங்க ஒரு கே’ன்னு....” எவனோ ஒரு பத்திரிகையாளர் இழுக்க, சக பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் கூட சலனம் உண்டானது.... இதை கேட்கலாமா? கூடாதா? என்கிற விவாதம் அவர்களுக்குள் உண்டானது.... அபியோ, அமானுஷ்யனை பார்க்க.... கைகளை அழுத்தி, தான் பார்த்துக்கொள்வதாக தலையசைத்தான் அமு...
“இது இப்போ இங்க அவசியமில்லாத விவாதம் சார்...” அமானுஷ்யன் கூடத்தை நிசப்தமாக்கினான்...
“சபை வரைக்கும் வந்தாச்சு, சொல்லிடலாம்ல.... அவருக்கும் மாடல் கௌதம்’க்கும் ஏதோ தொடர்புன்னு சொல்லிக்கறாங்க....” கிட்டத்தட்ட ஒரு வார கிசுகிசுவிற்கு வழிதேடினான் அந்த பத்திரிகையாளன்...
‘கௌதமின்’ பெயரோடு தன் பெயர் இணைத்து பேசப்படுவதை கேட்டதும் அதிர்ந்தான் அபி...
சூழல் திசை திரும்புவதை உணர்ந்த அமானுஷ்யன், “சரி... இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்... நன்றி” என்று கைகூப்பியபடியே அபியை அழைத்துக்கொண்டு மகிழுந்தை நோக்கி வேகமாக நகர்ந்தான்....
வீட்டை அடைந்தபோதிலும் அபி இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை...
“என்ன சாப்பிடுற அபி?” அபியை சகஜமாகக முயற்சித்தான் அமு...
“நீ சொன்னது சரிதான் அமு... இப்போதான் அதுக்கான அர்த்தம் புரியுது... எப்போ என்னை அவங்க கவனிச்சாங்க, ஏன் இப்படி அவங்களாவே ஒரு முடிவுக்கு வந்துட்டாங்கன்னு ஒண்ணுமே புரியல...” ததும்பிய கண்ணீரை, துடைத்தபடியே சொன்னான் அபி....
“சரிப்பா... கூலா இரு... இவங்க என்ன முடிவு பண்றது, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்...”
“என்ன?” என்பது போல அமுவை ஏறிட்டு பார்த்தான் அபி...
“நாம ரெண்டுபேரும் ஒண்ணா வாழறோம்னு பிரஸ்லேயே சொல்லிடலாம்... நாம கே’தான்னு வெளிப்படையா சொல்லிடலாம்... எவ்ளோ காலம் இதை மறச்சு, இன்னும் பல கற்பனைகளுக்கு நாம தீனி போடுறது?... நம்ம படம் ரிலீஸ் ஆன கொஞ்ச நாளில், இந்த அறிவிப்பை கொடுத்திடுவோம்... அதுக்கு பிறகு என்ன பிரச்சினை வந்தாலும், சமாளிச்சுக்கலாம்....” அமு சொல்ல சொல்ல, அபியின் முகம் இறுக்கம் களைந்து புன்னகை தவழ தொடங்கியது....
“தாங்க்ஸ் டா” இறுக்கமாக கட்டி அணைத்தான் அமுவை....
“இன்னொரு சர்ப்ரைசும் உனக்கு இருக்கு....”
“அது என்னடா?” மார்போடு மார்பு பிணைந்திருக்க, தலையை மட்டும் நிமிர்த்தி அமானுஷ்யனை நோக்கியபடி கேட்டான் அபி....
“என்னோட வாழ்க்கை துணைவனுக்கு ஒரு வீடு  பரிசா கொடுக்கப்போறேன்...”
“ஏய் என்ன சொல்ற?.... எப்போ? எங்கடா?” ஆர்வத்தில் துள்ளிக்குதித்தான் அபி....
“சொல்றேன் சொல்றேன்... போரூர் பக்கத்துல, உன் பேர்ல ப்ளாட் புக் பண்ணிட்டேன்.... வேலை கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு, இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு சொந்தமானவனுக்கு சொந்தமா ஒரு வீடு வரப்போகுது.... இன்னிக்கு கடைசி செட்டில்மென்ட் முடிச்சுட்டு வந்திடுறேன்....” அமானுஷ்யன் கிளம்ப ஆயத்தமாக, அபியால் தன் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை...
“ஏய், நானும் வரேன் அமு... எனக்கும் நம்ம வீட்டை பார்க்கணும்னு ஆசை இருக்காதா?”
“ஆசையை அப்டியே வச்சுக்க... எல்லா வேலையும் முடிஞ்சு மொத்தமா உன் கைல சாவியை கொடுக்குறப்போ பார், அதான் உனக்கு சர்ப்ரைஸ்...” பிடிவாதமாக அபியை மறுத்துவிட்டு, வீட்டை விட்டு கிளம்பினான் அமு....
எட்டு மணி ஆகிவிட்டது... மாலையில் எழுந்த கோபம் மற்றும் சோகத்தை தாண்டி, அமுவால் உண்டான மகிழ்ச்சிதான் மேலிட்டது....
எவ்வளவோ கற்பனைகள் மனதில் உருவாகி, கண்களில் காட்சிகளாக ஒருவாறு தூங்கியும் போனான் அபி....
“மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்...” அலைபேசி அலறியது....
திடுக்கிட்டு விழித்தான்... புது எண், எவனாவது பிரஸ்மீட் பற்றி கேட்டு இம்சிக்கக்கூடும்...  அணைத்துவைத்துவிட்டு மீண்டும் படுத்தான்... தூக்கம் வரவில்லை... மணி பத்து ஆகிவிட்டது, அமுவை இன்னும் காணவில்லை... அலைபேசியை மீண்டும் ஆன் செய்து, அமுவை அழைத்தான்.... அவனுடைய எண்ணும் அணைத்துதான் இருந்தது....
சரியாக அந்த நேரத்திலும் புது எண்ணிலிருந்து அழைப்பு...
அமுவாக கூட இருக்கலாம்...
ஆர்வத்தோடு அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்....
“ஹலோ...”
“அபி சாரா?... போரூர் ஸ்டேசன்லேந்து பிசி பேசுறேன் சார்...”
எச்சிலை விழுங்கிவிட்டு, “என்ன சார்?... என்ன விஷயம்?” பதற்றத்தில் கேட்டான் அபி...
“ஒண்ணுமில்ல சார், ஒரு நிமிஷம் நீங்க பெரியாஸ்பத்திரி வந்துட்டு போங்க....”
“என்ன? என்ன விஷயம்னு சொல்லுங்க...”
“ஒன்னும் பதற வேணாம், ஒரு அடையாளம் காண்பிக்கணும்.... நீங்க வாங்க சார்...” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார் காவலர்....
பதற்றத்தோடு வீட்டை விட்டு கிளம்பினான் அபி... ஒருவேளை தான் வெளியில் சென்ற நேரத்தில் அமு வந்துவிட்டால்? என்கிற குழப்பத்தில் சாவியை வாட்ச்மேன் வசம் கொடுத்துவிட்டு மகிழுந்தை எடுத்து சீறிப்பாய்ந்தான்...
பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு இன்றைக்கு வழக்கத்தைவிட பரபரப்பாக காணப்பட்டது... அவசர ஊர்திகள் வருவதும், ஆட்களை இறக்குவதுமாக தீவிரமாக இயங்கின....
அபியை பார்த்ததும் இனங்கண்ட காவலர் ஒருவர், “நான்தான் உங்களுக்கு கால் பண்ணேன், ஒரு நிமிஷம் அந்த ரூம்’க்கு வாங்க...” என்று கைகாட்டிவிட்டு முன்னே சென்றார்....
மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்து, பதற்றம் நடுக்கத்தில் வெளிப்பட்டதோடு அறையை நோக்கி நகர்ந்தான்...
அபியின் முன்பே சென்ற காவலரின் அலைபேசி அடிக்க, “ஹலோ... நான் மௌலிவாக்கத்துல பில்டிங் இடிஞ்சு விழுந்தது விஷயமா ஒருத்தர அடையாளம் காட்டுறதுக்கு ஜி.ஹெச்’ல இருக்கேன்... உங்களுக்கு அப்புறமா பேசுறேன்...” அழைப்பை துண்டித்தார்....
“போரூர் பக்கத்துல அப்பார்ட்மென்ட்ல உனக்கொரு பிளாட் வாங்கிருக்கேன்!” சில மணி நேரத்திற்கு முன்பு அமானுஷ்யன் சொன்ன விஷயம் மனதினுள் தோன்றியது....
மேற்சொன்ன இரண்டு விஷயங்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் காவலர் குறிப்பிட்ட அந்த அறை வந்துவிட்டது....
கண்ணாடி குளிர்பதன பெட்டிக்குள் ஒரு உடல், முழுவதும் துணியால் சுற்றப்பட்டு சிதிலமடைந்த முகம் மட்டும் வெளியில் தெரிந்தது....
கால்கள் இரடி தடுமாறி கீழே விழுந்தான் அபி.... கண்களில் நீர் அரும்பவில்லை, கதறி அழக்கூட இல்லை.... அப்படியே உறைந்து போனவனாக நின்றான்....
“க்ளைமாக்ஸ்ல உன் லவ்வர் ஆக்சிடென்ட்’ல இறந்து போயிடுறா, அப்போ ப்ரீசர் பாக்ஸ்ல வச்ச அவ உடலை பார்த்து நீ உறைஞ்சு போய் நிக்குற.... அவ உடல் பனி போல குளிர்ச்சியாவும், உன் உடல் உறைஞ்சு போயும் நிக்குற அர்த்தத்தில்தான் படத்துக்கு அந்த பேர்....” அமானுஷ்யன் சொன்னது இப்போதும் அபியின் காதுகளுக்குள் ஒலித்தது..... (முற்றும்)

17 comments:

  1. Meendum Soga Mudiva? Paavam Abi avara Konjam sandhosama iruka vidunga vijay...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சக்தி.... சோகமும் மகிழ்ச்சியும் கலந்ததுதானே வாழ்க்கை... அபிக்கும் அப்படியே...

      Delete
  2. மிக மிக அருமைன்னு சொல்ல வைக்கிறது...கதையின் நடை,யதார்த்த பேச்சு ,சின்ன சின்ன விஷயத்தில் உள்ள குறும்பு ,current news எல்லாம் கதைக்குள் நம்மை பயணிக்க வைக்கிறது. உங்கள் கதை சொல்லும் நேர்த்தியில் பிரமிப்பான முன்னேற்றம்...வாழ்த்துக்கள் விஜய்...but எங்கள் அபி நிர்கதியாய் விட்டதில் நிறைய வருத்தம்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சாம்.... நிச்சயம் நடையின் மாற்றத்தில் உங்களை போன்ற தொடர் விமர்சகர்களின் பங்கும் இருக்கு..... இன்னும் திறம்பட எழுத முயற்சிப்பேன் நண்பா....

      Delete
  3. I have been die hard fan of your stories, but I never thought you would end the story like this... So bad, and recent news, please stop using it, doesn't make any value to the store, anyone can say the result once they read about porur apartment, and I stopped reading from there

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது நண்பா... அமுவின் இறப்பு ஏற்படுத்திய வருத்தம் என் மீதான கோபமாக உருமாறி உள்ளது... அவன் இறப்பு நான் முன்பே தீர்மானித்த ஒன்றுதான்... முதலில் வாகன விபத்தில் இறப்பதாக காட்சி யோசித்திருந்தபோது, இந்த கட்ட விபத்து நிகழ்ந்ததால் நிஜத்தொடு கதையை பிணைத்தேன்.... மற்றபடி நிஜத்தை பிணைக்க வேண்டும் என்பதற்காக அமு இறக்கவில்லை.... நிச்சயம் ஐந்தாம் பாகம் எழுதினால், அதில் அபிக்கு நல்ல முடிவை கொடுப்பேன்....

      Delete
  4. Osm story and great lines.. the way u take the story is simply the great one... but i dint xpct suc a tragic ending... konjam romantic and nallatha mudichirukalame!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரோஹித்.... சில நேரங்களில் கதையின் போக்கிற்காக இப்படிப்பட்ட முடிவுகளையும் நாம் ஏற்றுத்தான் ஆகணும் நண்பா...

      Delete
  5. Yan na? Abi Idhu varaikum patta kastam podhaadha enna? :'( idhukku mela avan uyiroda irundhu??? Enna panna poraan??? :'( nenachaave alugaya nirutha mudila. :( Enakku sad endings dhan pudikkum(set aavudhu) aana... :'( abi n amu va pirichadhu niyayame illa :(

    ReplyDelete
    Replies
    1. கருத்துகளுக்கு நன்றி தம்பி... என்ன பண்றது?.. சில நேரங்களில் இழப்புகள் எதிர்பாராத நேரத்தில் வந்துவிடுவதும் இயற்கைதானே?... அமுவின் இறப்பையும் அப்படியே நினைத்துகொள்வோம்...

      Delete
  6. Kaila sikkinenganna konnuduven ama...

    ReplyDelete
  7. Dai Loosu anna unkalukke ithu over a illa, eppa pathalum negative climex a vaikkarenga, ippadi abiya anathara vittathu enakku suthama pidikkala, i hate u....

    ReplyDelete
    Replies
    1. ஏய் தம்பி... பொறுமையா இரு.... இது கதைதான்.... நிச்சயம் அபிக்கு இது முடிவில்ல... கண்டிப்பா அடுத்த பாகம் எழுதுறப்போ அவனுக்கு நல்ல முடிவையே கொடுப்பேன்...

      Delete
    2. i m waiting for that na..., nan en remba tension anenna nan ithai kadhainu ninaikkala athan

      Delete
    3. புரியுது தம்பி,... நிச்சயம் நம் அபியை நான் சோகத்தில் தவிப்பதோடு முடித்திட மாட்டேன்... நல்ல முடிவை அவனுக்கு கொடுப்பேன்,,,,

      Delete
  8. அடக்கடவுளே... அமானுஷ்யன கொன்னாச்சா??? வாங்குனது தான் வாங்கினான்... போரூர விட்டுட்டு அருண் எக்செல்லோ ஓரகடத்துல வாங்கியிருக்கலாம்ல... டபுள் ஓகே ஆயிருக்கும்.. இப்படி ஆயிப்போச்சே.. :(

    ReplyDelete
  9. வாரத்தைகள் இல்லை நேர்தியான நாவல் ்தோழரே ஐந்தாம் பாகம் எப்போது வரும்் உங்கள் அன்பு வாசகியின் அன்பு வேண்டுகோள் என்னவெனில் தாங்கள் தயுவு செய்து ஒரு கதை ஆகிலும் திருநங்கை பற்றி எழுத வேண்டும்

    ReplyDelete