Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 27 September 2013

"நான்.... அவன்.... அது!" - சிறுகதை...



“பூவலூர் – 2 கிமீ” என்கிற அந்த மஞ்சள் நிற தகவல் பலகையை நான் அடைந்தபோது மணி பதினொன்று இருந்திருக்கலாம்... தார் சாலையிலிருந்து பிரியும் அந்த செம்மண் சாலையில் இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்கணும்... அது அமாவாசை நாள் இல்லை என்றாலும் கூட, கருமேக கூட்டங்கள் நிலவை மறைத்து செயற்கை அமாவாசையை உண்டாக்கி இருக்கிறது.... மழைக்காலத்தின் பிரதிபலிப்பாக மேற்கு பகுதியில் வானம் மின்னிக்கொண்டு இருக்கிறது... தவளை “க்ர்ர்.... க்ர்ர்..” சத்தம் தவிர மருந்துக்கும் மனித நடமாட்டமோ, குரல்களோ இல்லை... ஆனாலும், தயக்கம் களைந்து செம்மண் சாலையில் நடக்க தொடங்கினேன்...
எச்சிலை விழுங்கிக்கொண்டு, பெருமூச்சோடு நடையை வேகப்படுத்தினேன்.... இருளும், தனிமையும், அமானுஷ்ய அமைதியும் என்னை கலவரப்படுத்தினாலும்,  எண்ணமல்லாம் ஊருக்குள் இருக்கும் என் அமுதவனை பார்க்க வேண்டும் என்பதில்தான் உடும்புப்பிடியாக இருந்ததால் நடையில் மட்டும் தடுமாற்றம் இல்லை....
இந்த இரண்டு கிலோமீட்டர் தூரமும், என்னுடன் எனக்கு துணையாக வரப்போவது அவனுடைய நினைவுகள் மட்டும்தான்.... பெயர் மட்டுமல்ல, அவன் ஆளும் கூட அமுதத்தில் திளைத்ததை போலத்தான் இருப்பான்... ஒருவேளை உங்கள் கண்களுக்கு அவன் பேரழகனாக தெரியாமல் இருக்கலாம், நான் அதிகப்படியாக கூறுவதாக கூட நீங்கள் நினைக்கலாம்... ஆனால், அவன் என் குறிஞ்சி மலர்... குறிஞ்சி மலரை நீங்க பார்த்திருக்கிங்களா?... நிஜத்தில் அதைவிட அழகான ஆயிரம் வகையான மலர்களை நாம பார்த்திருப்போம்... ஆனால், அந்த ஆயிரம் மலர்களுக்கும் இல்லாத முக்கியத்துவத்தை குறிஞ்சி மலர் எப்படி பெற்றது?.... பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், மலர்களுள் எல்லாம் சிறப்பானதானது... அப்படித்தான் அமுதவனும்... அவனைவிட ஆயிரம் அழகான ஆண்களை பார்த்தாலும், அவனை பார்த்தபோது எனக்குள் உண்டான அந்த “ஸ்பார்க்” வேற யார் மேலும் ஏற்படவில்லை....
பார்த்ததும் எனக்கு காதல் பத்திகிட்டாலும், எனக்கும் அவனுக்கும் ஒரு விஷயம் கூட ஒத்துவராது... ஜாதகத்தில் பத்து பொருத்தம் சொல்வாங்கல்ல, அதுல பார்த்திருந்தா எங்களுக்கு ஒரு பொருத்தம் கூட ஒத்து வந்திருக்காது.... ஆனால், இந்த ஆண்டவன் அப்படி ஆளுங்களா பார்த்துதான் சேர்த்து வைப்பார் போல.... “நீ காதலிச்சுட்டு ஆண்டவன் மேல ஏண்டா தப்பு சொல்ற?”னு நீங்க கேட்கிறது புரியுது, என்ன பண்றது?, எதை சொன்னாலும் கேட்டுட்டு அமைதியா இருக்குறவன் ஆண்டவன் மட்டும்தானே!....
நண்பர்களா நாங்க பழகுனப்பவே, ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் வருவது உண்டு... அப்போ காதல்னு வந்தப்போ, எப்டி இருந்திருக்கும்?னு சொல்லவே தேவையில்ல.... நான் காதலை அவன்கிட்ட சொன்னதே பெரிய கலவரம் தாங்க...  நண்பர்கள் எல்லாரும் ஊருக்கு போயிருந்த சமயம்... அறையில் நானும் அவனும் மட்டும்தான்... வங்கக்கடலில் ஏற்ப்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் (நன்றி ரமணன் சார்) மழை ‘ஜோ’ன்னு வெளியில் பேஞ்சுட்டு இருந்தது.... அறைக்குள் என் கவலைகளை மறந்து, காதல் மூடுக்கு ஏற்றது போன்ற வெப்பநிலை, யாருமற்ற தனிமை, ஹோம் தியேட்டரில் “வசீகரா.... என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்....” பாடல்.... இந்த ரம்மியமான சூழலுக்கு நானா பொறுப்பு?... என் காதலை சொல்லியும் விட்டேன்ங்க... அவன் என்னை பார்த்தான் பாருங்க ஒரு பார்வை... அப்பப்பா!!!.... சுயேச்சை வேட்பாளரை வாக்காளர்கள் பார்த்திடும் ஒரு ஏளன பார்வை அது....
தலையை தொங்கப்போட்டுக்கொண்டு, மேற்கொண்டு நடக்கப்போகும் விளைவுகளை எதிர்நோக்கி காத்திருந்தேன்.....
ஒரு நிமிஷம் இருங்க.... எனக்கு பின்னால யாரோ வர்ற மாதிரி தெரியுது... இந்த இருட்டுல இந்த ரோட்’ல நடக்குற ஆளு யாரு?னு பார்க்குறேன்...
இப்போ மேகக்கூட்டங்கள் நிலவுக்கு வழிவிட்டு, சாலை ஓரளவு தெளிவாக தெரிந்ததால் என்னை நோக்கி நடந்து வந்துகொண்டிருக்கும் மனிதரை என்னால் பார்க்க முடிகிறது.... என்னை பார்த்ததும் அவருக்குள்ளும் ஒரு ஆச்சரியம்....
“என்ன தம்பி, இந்த நேரத்துல இங்குட்டு போறிய?” முகம் தெரியாத நபராக இருந்தாலும் கூட, அந்த தனிமை எங்க ரெண்டு பேரையும் ரொம்ப நெருக்கமா ஆக்கிடுச்சு....
“பிரென்ட்ட பார்க்க போறேன்.... நீங்க இந்த ஊர் காரரா?”
“நானா?... இல்லப்பா... எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்” சிரித்தார்.... மென்மையாக சிரித்தாலும் கூட, அந்த இடத்தில் அது கொஞ்சம் வன்மையாகத்தான் தெரிந்தது.... அவர் காணாத விதமாக, என் விரல் மோதிரத்தை எடுத்து பேன்ட் பைக்குள் போட்டுக்கொண்டேன்....
ஆனாலும், அது அவர் மீதான தேவையற்ற பயம் என்பதை இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்றபொழுதே அறிந்துகொண்டேன்....
“இந்த நேரத்துல நீங்க ஏன் போறீங்க?” என்றேன்....
“நான் நாடோடி’ப்பா... எனக்கு நேரம், காலமல்லாம் கெடயாது.... இதுதான் ஊருன்னும் கிடையாது.... வட்டத்துக்குள்ள சிக்காத பறவை மாதிரி” சிரித்தார்... அந்த சிரிப்பு இப்போ எனக்கு பழகிப்போச்சு.... சாலையோரங்களில் செழித்து வளர்ந்திருந்தாலும், செம்மண் சாலையையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவர  காத்திருக்கும் சூராமுள் செடி படாமல், சாலையின் நடுவிலேயே நடந்தோம்...
அவர் குடும்ப கதைகளை தாண்டி, நடக்கும் களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாட தொடங்கினார்.... “அச்சம் என்பது மடமையடா!.... அஞ்சாமை திராவிடர் உடமையடா.....”னு அவர் பாடும்போது, கண்களை மூடிக்கொண்டால் இசைக்கருவிகள் இல்லாமல் டீ.எம்.எஸ் பாடுவது போலவே இருந்தது....
அமுதவனுக்கும் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்.... இசைக்கு ஏற்ப தலையை அசைப்பவன் நான், ஆடாமல் அசையாமல் வரிகளை கவனிச்சு ரசிப்பவன் அவன்.... சரி, நான் பாதியில விட்டதை சொல்றேன், அதுவரை அவர் பாடிட்டு இருக்கட்டும்....
அந்த ஏளன பார்வைக்கு பிறகு அமுதவன் என்ட்ட எதுவும் பேசல, மழையையும் பொருட்படுத்தாமல் கதவை திறந்து வெளியே போய்விட்டான்.... “அமுது.... அமு....”னு நான் கூப்பிட்ட வார்த்தைகள் அவன் காது மடலோடு எதிரொலித்து திரும்பிவிட்டன....
சோகமாக அமர்ந்தேன்.... சொல்லிருக்க கூடாதோ?னு யோசிச்சேன்... சொன்ன பிறகு, அது என்ன “சொல்லி இருக்க கூடாதோ?”னு ஒரு முட்டாள்த்தனமான எண்ணம்.... இனி ஆகுறதை பார்க்கணும்... அவனிடம் மன்னிப்பு கேட்டிடலாம்’னு முடிவு பண்ணேன்.... எதுக்கு மன்னிப்பு? தெரியவில்லை... ஆனாலும், குறைந்தபட்சம் அவனுடனான நட்பையாவது தக்க வைத்துக்கொள்ள அந்த மன்னிப்பு தேவைப்படும்னு நெனச்சேன்... அடுத்த அரைமணி நேரத்துல தொப்பலாக நனைந்தபடி அறைக்குள் வந்தான்... தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட, இருக்கையில் அமர்ந்தான்.... ஒரு துண்டை எடுத்து அவன் கையில் கொடுத்தேன், அதை வாங்கி தூக்கி எறிந்தான்.... இவ்வளவு ஈரமும் கூட அவன் கோபத்தை தணிக்கவில்லை என்பது புரிந்தது....
இனி “இம்சை அரசன்” வடிவேலு பாணியில், என் ஆயுதத்தை எடுத்தேன்.... வேற ஒண்ணுமில்ல, வெள்ளைக்கொடி தான்.... அவன் அருகே சென்று, மெல்ல கைகளை பிடித்து (கோபத்தில் அடிச்சிடுவானோ’ன்னு பயத்துலதான் கையை பிடிச்சேன்) “சாரிடா...” என்றேன்....
சட்டென என் மீது ஒரு கோபப்பார்வை.... இயற்கையாகவே அவனுக்கு பெரிய கண்கள், அதை விரித்து கோபமாக பார்த்தபோது, நிஜமா கொஞ்சம் பயந்துதான் போனேன்....
“எதுக்கு சாரி?” அப்பாடா! பேசிட்டான்....
“இல்ல... தப்பா பேசிட்டேன்... அதுக்குத்தான்....”
“அது தப்பல்லாம் இல்ல.... எனக்கும் உன் மேல அதுதான்...”
அவன் இப்படி சொல்லி இரண்டு நிமிடங்கள் கழித்துதான், அவன் தானும் காதலிப்பதாய் சொல்கிறான் என்பதே எனக்கு புரிந்தது... அநேகமாக இந்த உலகத்தில் இப்படி ஒரு கேவலமான விதத்தில் தன் காதலை வேற யாரும் வெளிப்படுத்தியிருக்க மாட்டாங்க.... அப்புறம் எதுக்காக வெளில ஓடினான்?னு நான் யோசிச்ச மறு நொடி, என் வாயில் டயரி மில்க் சாக்லேட்டை திணித்தான்.....
அதன்பிறகு, என் சந்தோஷத்தை சொல்லவா வேணும்?.... பூகம்பம் வராமலேயே வீடு ஆடுவது போல இருந்துச்சு, சுனாமியில் சிக்கிய சுண்டெலியாக மனம் பரபரத்தது... அடுத்து என்ன பேசனும்? எப்டி பேசனும்?னு ஒன்னும் புரியல... முன்ன பின்ன காதலிச்சு அனுபவம் இல்லாததால ரொம்பவே தடுமாறினேன்.... ஆனாலும், அன்றைய இரவு நான் போட்ட அகரம், நாளுக்கு நாள் மெருகேறி எங்க காதலையும் கல்வெட்டுல எழுதலாம்னு சொல்ற அளவுக்கு ஒண்ணுக்குள்ள ஒன்னாகிட்டோம்....
இப்போ அந்த நாடோடி நண்பர், நான்காவது பாட்டை முடித்து, ஐந்தாவது பாட்டாக “உள்ளத்தில் நல்ல உள்ளம்... உறங்காதென்பது....” பாடிக்கொண்டு இருக்கிறார்....
“இந்த பாட்டுல வார்த்தைகளை கவனிச்சிருக்கிங்களா தம்பி?... அற்புதமா எழுதிருப்பார் கவிஞர்.... ‘செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.... வருவதை எதிர்கொள்ளடா....’ ரெண்டே வரில மொத்த மகாபாரதத்தையும் சொல்லிருப்பார்...” சில விஷயங்கள் புரியவில்லை என்றாலும், அவர் சொன்னவைகளுக்கு “ஆமா.... ஓஹோ... அடடா...” சொல்லிக்கொண்டே நானும் நடந்தேன்....
இப்படி அமுதவனிடமும் ஒருமுறை மாட்டிருக்கேன்..... ராவணன் படத்தின் “கள்வரே... கள்வரே...” பாடல் பார்த்துக்கொண்டிருந்தோம்.... அதில் ப்ரித்விராஜ் என்னமா இருப்பான்!... ஐஸ்வர்யாவும் அவனும் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் தழுவல்  காட்சிகள், ரசிக்கும்படியா இருந்துச்சு....
“நல்ல பாட்டுல்ல?” அவன் கேட்டான்....
“ஆமா... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு..”
“வரிகளை கவனிச்சியா?... வைரமுத்து கலக்கிருக்கார்...”
“ஆமா....” நான் எங்கே வரிகளை கவனிச்சேன்?... பிருத்வி ராஜ் போட்டிருந்த சட்டையில் இருந்த வரிகளை தவிர, வேற எந்த வரியையும் கவனிக்கல....
“உனக்கு புரிஞ்சுதா?”
இல்லைன்னு சொன்னா, பாடம் நடத்தியே டார்ச்சர் பண்ணுவான்.... “ஹ்ம்ம்... நல்லா...”
“வலி மிகு இடங்கள், வலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே!... வலி மிகு இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா?’ வரி புரியுதுல்ல” என்றான்....
தமிழுக்கு வலி புரியுமா?... ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுது, என்ன பதில் சொன்னாலும் வலி வரப்போறது என்னமோ எனக்கு மட்டும்தான்.... என் அமைதி அவனை லேசான எரிச்சல் படுத்தி இருக்க கூடும்....
“புரியலையா?” இப்போ வார்த்தைகளில் கொஞ்சம் வேகம் தெரிந்தது...
வழக்கம் போல சிரித்தபடியே பதில் சொல்லவில்லை நான்....
“வலி மிகும் இடங்கள்’னா வல்லினம் மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள்’னா வல்லினம் மிகாத இடங்கள்...  தமிழில் எல்லா இடத்திலும் வல்லினம் மிகுந்துவிடாது, அதுக்குன்னு சில விதிகள் இருக்கு... அதைத்தான் வைரமுத்து சிலேடையா சொல்லிருப்பார்....”
“ஓஹோ...” இந்த இலக்கண வகுப்பு அவன் எடுத்த போது மணி என்னவோ நள்ளிரவை தாண்டி இருந்தது.... இயந்திரங்கள் கூட கண் அயர்ந்து உறங்கும் நேரத்தில், அவன் இலக்கணப்பாடம் என்னை கலவரப்படுத்தியது.... ஆனாலும், அந்த சிலேடை வரிகளை நான் லாவகமாக எனக்காக பயன்படுத்திக்கொண்டதுதான் நீங்க கவனிக்க வேண்டிய விஷயம்...
“இப்போ உனக்கு நான் வலி மிகுந்த இடங்களை காட்டப்போகிறேன்”னு சொல்லி, மெல்ல அவன் கன்னங்களை வருடினேன்.... அப்படியே மெல்ல.... அதுக்கு மேல அங்க என்ன நடந்திருக்கும்?னு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க....
ஊருக்குள் வந்தாச்சு.... ரொம்ப நேரம் கழித்து, மரணிக்கும் தருவாயில் ஒளித்துக்கொண்டிருந்த தெருவிளக்கின் அருகே சென்றுவிட்டோம் நானும் அந்த நாடோடி நண்பரும்.....
“தம்பி... ஊரு வந்தாச்சு.... நீ போயி உன் நண்பனை பாரு... நான் என் வேலையை பார்க்கறேன்...” விடைபெற்றுவிட்டு அந்த நண்பர் மேற்கு நோக்கி செல்ல, நான் அமுதவனின் வீட்டை நோக்கி நடந்தேன்.... இரண்டு கிலோமீட்டர் தூரத்தையும் கடக்க அரை மணி நேரம் ஆகிருக்கு.... ஆனாலும், உங்ககூட பேசிட்டே வந்ததுல, களைப்பு தெரியல.... அதோ அமுதவன் வீடு தெரியுது.... வீட்டு மாடியில், அவன் அறையில் மட்டும் விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறது.... நாய்கள் குரைப்பதை கூட கவனிக்காமல், என் கால்கள் நடையின் வேகத்தை அதிகமாக்கியது.....
வீட்டு வாசல் கேட்’டை சத்தம் வராமல் மெல்ல திறந்தேன்.... வீட்டின் பிரதான கதவு சாத்தியிருந்தது.... வீட்டிற்குள் செல்லாமலேயே மாடி அறைக்கு செல்ல, பக்கவாட்டில் மாடிப்படிகள் இருக்கிறது.... மெல்ல, மற்றவர்களுக்கு சத்தம் வராதபடி அடி மேல் அடி வைத்து மாடிப்படிகளை கடந்தேன்.... அறைக்கதவு திறந்து இருக்கிறது, அறைக்குள் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.... மெல்ல, அறைக்குள் சென்றேன்....
கட்டிலில் அமுதவன் அமர்ந்திருக்க, அருகில் அவன் அம்மா நின்றுகொண்டு அமுதவனின் தலைமுடியை கோதி விட்டுக்கொண்டு இருக்கிறார்.... அவன் கைகள் முகத்தினை மூடிக்கொண்டு அழுததை போல தெரிகிறது...
“அமுதவா!... சொல்றத கேளு... நீ சாப்புடாம தூங்காம அழறதால இறந்தவன் உயிரோட வரப்போறது இல்ல... அவன் இறந்ததா மதியம் தகவல் வந்ததுலேந்து இப்டியே உக்காந்திருக்கிறது, எனக்கு பயமா இருக்குப்பா.... ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருப்பார்... தயவுசெஞ்சு இந்த பாலை குடிச்சுட்டு தூங்கு” சொல்லிவிட்டு, முகம் முழுக்க கவலையோடு அம்மா என்னை கடந்து அறையை விட்டு வெளியே போனார்.... போன வேகத்தில் கதவு சாத்திக்கொண்டது...
மெல்ல அமுதவனின் அருகில் நடந்தேன்... அவன் கையில் இப்போது ஏதோ ஒரு புகைப்படம்... அதைபார்த்தபடியே அவன் அழுகை இன்னும் அதிகமாவதை கவனித்தேன்.... அவன் பின்புறமாக எட்டிப்பார்த்தேன், அது என் புகைப்படம் தான்....
ஒரு வேகத்தில் என் கையை அமுதவனின் தோள் மேல் வைக்க முயன்றபோது, என் தோள் மீது வேறொரு கை பட்டதை உணர்ந்து திரும்பினேன்.... அது, அந்த நாடோடி நண்பர்தான்....
“போதும் தம்பி... வந்திடு போகலாம்... நீ மதியமே இறந்துட்டன்னு புரிஞ்சுக்க.... இப்போ நாமல்லாம் வெறும் ஆத்மாக்கள்... மனுஷங்களை தொந்தரவு பண்ணக்கூடாது.... பாக்கலாம், தூரத்துல நின்னு அவங்க வாழ்றத ரசிக்கலாம்.... அவ்ளோதான்.... அதுதான் நமக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது” என் கைபிடித்து, இழுத்து சென்றார் அந்த நண்பர்.... அவனை பார்த்தபடியே பிரிய மனமில்லாமல், மூடியிருந்த கதவை ஊடுருவி வெளியே சென்றேன் நானும், ஆவியாக!... (முற்றும்)

Wednesday 25 September 2013

பாராளுமன்றத்தை கலக்கிய "முத்தப்போராட்டம்"....


ஒருபால் ஈர்ப்புக்கு ஆதரவான எத்தனையோ வகையான போராட்டங்களை நாம் பார்த்திருப்போம்... பேரணிகள் செல்வது, போராட்டங்கள் நடத்துவது, விழிப்புணர்வு கூட்டங்கள் போடுவது போன்ற அஹிம்சாவழி போராட்டங்கள் முதல், தடையை மீறி வன்முறையில் ஈடுபடும் போராட்டம் வரை நிறைய பார்த்திருப்போம், படித்திருப்போம்....
ஆனால் “கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து” நடத்திய போராட்டம் ஒன்று , இன்றைக்கு உலக அளவில் பெரியதொரு போராட்டமாக மீடியாக்களை ஆக்கிரமித்துள்ளது உங்களுக்கு தெரியுமா?.... அப்படி நடந்த போராட்டம் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் என்பதால்தான் இவ்வளவு முக்கியத்துவமும், பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்...
ஆங்கில ஊடகங்களை அலங்கரித்த இந்த செய்தி, வழக்கம்போல தமிழ் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படவில்லை.... அநேகமாக தமிழ் நாளேடுகளில் ஏதோ ஒரு மூலையில், “காளைமாடு கருத்தரித்தது”, “காங்கோவில் கடலை வியாபாரம்” போன்ற துணுக்குகளுக்கு மத்தியில் இந்த செய்தியும் ஒரு நகைச்சுவை துணுக்கை போல பிரசுரம் ஆகியிருக்கலாம்....
சரி நாமாவது அந்த புதிய போராட்ட செய்தியை பற்றி தெரிந்துகொள்வோம்....
இந்த முத்த யுத்தம் நடந்த இடம் இத்தாலியின் பாராளுமன்றம்(கீழ் சபை).... கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில், “ஒருபால் ஈர்ப்புக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கான தண்டனையை உறுதிப்படுத்தும்” சட்ட முன்வரைவு அங்கு சமர்ப்பிக்கப்பட்டது.... ஒருபால் ஈர்ப்பு நபர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான அந்த சட்டத்திருத்தத்தை வாக்கெடுப்பிற்கு முன்வைத்தது அரசு... மிகப்பெரிய பெரும்பான்மையில் (சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக 354 உறுப்பினர்களும், எதிராக 79  உறுப்பினர்களும் வாக்களித்தனர்) அந்த சட்டம் கீழ் சபையில் நிறைவேறியது....
அந்த சட்டத்திருத்தத்தினை பற்றிய விவாதம் நடந்துகொண்டிருந்தபோதுதான் நான் மேற்சொன்ன அந்த வித்தியாசமான “முத்தப்போராட்டம்” நிகழ்ந்தது.... பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து தத்தமது வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஐந்து நட்சத்திர இயக்கம் (Five Star Movement – M5S) கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, முத்தங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு வித்தியாசமான முறையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்....
“ஒரு ஆண் இன்னொரு ஆணை கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுப்பதோ தவறில்லை என்பதை எங்கள் செய்கையால் உணர்த்தினோம்” என்று சொன்ன அந்த உறுப்பினர்களின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.... அந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த உறுப்பினர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எழுந்து நின்று சத்தம் எழுப்பி ஆதரவுக்குரல் கொடுத்தனர்...
ஒரு பக்கம் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த சுதந்திர மக்கள் கட்சி உறுப்பினர்களோ, “இந்த சட்டம் கீழ் சபையில் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது... இன்னும் இது செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டால்தான் சட்டமாக உருவெடுக்கும்.... ஆனால், நிச்சயம் செனட் சபையில் இந்த சட்டத்தை தோற்கடிப்போம்” என்கிறார்கள் காட்டமாக....
ஆனால், அரசியல் வல்லுனர்கள் சொல்வதோ, “நிச்சயம் இந்த சட்டம் செனட் சபையிலும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்கின்றனர்....
இன்னும் சில நாட்களில், யார் சொல்வது நடக்கப்போகிறது? என்று பார்க்கத்தான் போகிறோம்...
ஒருபால் ஈர்ப்பு அமைப்புகளை சார்ந்தவர்களோ, “இந்த சட்டம் ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான வன்முறைகளை தண்டிக்கும் இன்னும் அதிகமான அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.... சில மாற்றங்களை உட்புகுத்தி, ஒருபால் ஈர்ப்பு நபர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்” என்கிறார்கள்....
இப்படி அவரவரும் தங்களது யூகங்களை, கருத்துகளை வெளிப்படுத்தினாலும், இந்த முத்தப்போராட்டம் பெரிய அளவிலான தாக்கத்தை இத்தாலி அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.... இத்தாலியை தாண்டி உலக நாடுகளிலும் இந்த விஷயம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் உண்மை...
ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் சேவகர்கள் என்பதை இந்த வித்தியாசமான போராட்டங்களின் மூலம் நாம் உணரமுடிகிறது.... தங்கள் சுய அடையாளங்கள் அவமதிக்கப்பட்டாலும், சுய மரியாதை பாதிக்கப்பட்டாலும், தரக்குறைவான விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் கூட, மக்களின் பிரதிநிதியாக தங்கள் கருத்துக்களை இன்னும் ஆழமாக மக்கள் மன்றத்தில் முன்வைத்துள்ள அந்த கட்சியினரையும், கட்சியையும் தலைவணங்கி பாராட்ட வேண்டியது நம் கடமை...
இந்த செய்தியை நம் ஊர் அரசியல்வாதிகளும் பார்ப்பார்கள்....
நம் சட்டமன்றம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதன்மூலம் ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டி இருக்கிறது... எங்களின் உரிமைக்காக மன்றங்களில் நீங்கள் “முத்தம்” கொடுக்கவல்லாம் வேண்டாம், கொஞ்சமாக “சத்தம்” கொடுக்கவாவது செய்யுங்கள்.... அந்த சத்தம் ஆட்சியாளர்கள் காதில் விழுந்து, எங்கள் உரிமைகளுக்கு உத்திரவாதமும், உயிர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்குமாயின் உங்கள் வாழ்வில் கோடி புண்ணியம் உண்டாகும்.... கொடுப்பார்களா?, சத்தத்தை......

Monday 23 September 2013

கலையுலக கடவுளுக்கு சமர்ப்பணம் - 100வது பதிவு....

                                            http://commons.wikimedia.org/wiki/File:Michelangelos_David.jpg 

(உங்கள் விஜயின் வலைப்பூவின் நூறாவது இடுகை இது..... இந்த நூறாவது இடுகையில் மைக்கேல் ஏஞ்சலோ அவர்களை பற்றி சொல்வதில் பெருமைப்படுகிறேன்.... இந்த பதிவு அந்த மேதையின் திறமைக்கும், பெருமைக்கும் சமர்ப்பணம்...)
பரபரப்பான  கடைத்தெருவில், ஒரு பிரம்மாண்டமான கடையின் வாசலில் ஒரு பாறாங்கல் வருவோர் போவோருக்கு இடைஞ்சலாக கிடந்தது... கடையின் முதலாளியோ, “யாராவது அந்த கல்லை எடுக்க மாட்டார்களா?” என்று பார்த்துக்கொண்டே இருந்தார்... ஒரு பாறாங்கல்லை எடுத்து தள்ளிப்போட அந்த பணக்கார கடைக்காரருக்கு, தன் தகுதி இடம் கொடுக்கவில்லை.... ஒருவழியாக அந்த கல்லை தான் எடுத்துக்கொள்ளலாமா? என்று ஒரு வழிப்போக்கர் கேட்க, வாய் முழுக்க புன்னகையோடு “சரி” சொன்னார் கடைகாரர்....
ஆறு மாதம் கழித்து, “புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ அவர்களின் அழகான சிற்பம் ஏலம் விடப்படுவதாக” விளம்பரம் செய்யப்பட்டது... காண்பவரின் கண்களை மட்டுமல்ல, மனதையும் கொள்ளை கொள்ளும் பேரழகான கடவுளின் சிற்பம் அது... காண்போர் எல்லாம் வாய் பிழந்து அதிசயித்தனர்.... ஏலம் விறுவிறுப்பானது, மிகப்பெரிய தொகையை கொடுத்து சிலையை வாங்கினார் கடைகாரர்.... அந்த சிலையை செய்த சிற்பியை வாழ்த்திட கடைகாரர், ஏஞ்சலோவை தேடி போனார்... அப்போதுதான் அவரை முதலில் பார்க்கிறார் கடைகாரர், ஆனாலும் எப்போதோ பார்த்ததாக ஒரு ஞாபகம் அவருக்குள்...
“உங்க சிற்பம் ரொம்ப அழகா இருக்கு.... இவ்வளவு அழகான சிற்பம் செய்ய உங்களுக்கு கல் எங்கே கிடைக்கிறது?” என்றார் கடைகாரர்....
“உங்க கடை வாசலில்தான்” பொறுமையாக பதில் சொன்னார் மைக்கேல் ஏஞ்சலோ.....
இது மைக்கேல் ஏஞ்சலோ பற்றி, அவரின் சிற்ப நுணுக்கங்களை பாராட்டும்போது பலராலும் சொல்லப்படும் சம்பவம்....
புகழ் பெற்ற சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையில் ஓவியம் வரைய, அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் யூலியஸ் அவர்கள் ஏஞ்சலோ அவர்களை தேர்ந்தெடுத்தார்.... தான் அடிப்படையில் சிற்பி என்பதால், முதலில் மறுத்த ஏஞ்சலோ, பின்பு போப் அவர்களின் அன்பு கட்டளைக்கு ஒப்புக்கொண்டார்.... இறுதியில், பிரம்மாண்ட ஓவியங்கள், முப்பரிமான தோற்றத்தில் தேவாலயத்தை ஓவிய கண்காட்சி போல ஆக்கியது.... “இயேசுவின் கைகள் தீண்ட, ஆதாம் உயிர் பெற்ற” பைபிளின் காட்சி அது... அதனை பார்த்த அனைவரும் சொன்ன ஒரு வாக்கியம், “முதன்முதலில் ஆதாமை உயிர்ப்பித்தவர் இறைவன்... இரண்டாம் முறையாக அந்த ஆதாமிற்கு உயிர் கொடுத்தவர் மைக்கேல் ஏஞ்சலோ” என்றார்கள்... ஆம், அந்த ஓவியம் உட்பட அந்த தேவாலயத்தில் வரையப்பட்ட 340 ஓவியங்களும் உயிர்ப்புடன் காட்சி அளித்தது.....
இவருடைய ஒரு சலவைக்கல்லால் வடித்த சிற்பம்தான், பண்டைய உலக அதிசயங்களுள் ஒன்றாக கருதப்பட்டது என்பது ஒரு கொசுறு தகவல்......
இப்படி சிற்ப மற்றும் ஓவிய கலைகளில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும், இன்றளவிலும் அசைக்க முடியாத முதலிடத்தை பெற்றவர் நம் ஏஞ்சலோ என்பதை எவராலும் மறுக்க முடியாது....
ஏஞ்சலோ பற்றி இவ்வளவு சொல்ல காரணம் என்ன?... இல்லாமல் சொல்வேனா?... ஆம், மைக்கேல் ஏஞ்சலோ (Michelangelo di Ludovico Buonarroti Simoni) ஒரு “ஒருபால் ஈர்ப்பு” நபர்... அந்த ஒருபால் ஈர்ப்பு அவருடைய சிற்பம் மற்றும் ஓவியங்களிலும் பிரதிபலித்தது என்பதுதான் நாம் இன்னும் பெருமை கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம்....
இவருடைய சிற்பங்களில் காணப்படும் ஆண்கள் மிகவும் வீரத்துடன், ஆண்மை மிகுந்து காணப்பட்டனர்... இன்னும் சொல்லனும்னா, அவர் வடிக்கும் பெண்கள் சிற்பங்களுக்கு கூட மாடலாக ஆண்களைத்தான் பயன்படுத்தினார்... இவருடைய பல சிற்பங்களிலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை நீளமான முடியை வைத்து மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்... அந்த அளவுக்கு ஆண்களின் உடல் மீது அவருக்கு மேலோங்கிய ஈர்ப்பு இருந்தது...
“காதலின் உன்னத நிலையை பெண்களால் உணர முடியாது... அந்த அளவிற்கு உயர்வான இதயம் பெண்களிடத்தில் இல்லை” என்று பெண்களை வெறுக்கும் அளவிற்கு, காதல் ஆண்களிடம் தான் இருப்பதாக அவர் நம்பினார்.... “ஏஞ்சலோ ஒரு ஆண் ஆதிக்கம் பிடித்தவர்.... பெண்ணடிமை தனத்தை ஆதரிப்பவர்” என்று அவர் மீதான எதிர்மறை கருத்துகள் கூட நிறைய சொல்லப்பட்டது உண்டு.... அதனால்தான் என்னவோ, தன் காதலை கூட ஆண்களிடம் தேடினார்....
ஆண்களின் நிர்வாணத்தை ஓவியத்துக்காகவும், சிற்பத்துக்காகவும் ரசித்து, வர்ணித்தே ஆண்களின் மீது ஏஞ்சலோவிற்கு ஈர்ப்பு வந்துவிட்டது என்று சிலர் கூறுவர்....
முதல் காதல் தன் நண்பரும், புகழ் பெற்ற மாடலுமான கெரார்டோ பெரிணி (gherardo perini) என்பவருடன் தொடங்கியது.... அந்த காதல் தோல்வி ஏஞ்சலோ அவர்களை மிகவும் சோர்வான நிலைக்கு தள்ளியது.... தன் வாழ்வின் மிகப்பெரிய துக்க காலமாக ஏஞ்சலோ கருதும் நாட்கள் அவை.... பின்பு தாமசோ என்பவர் நீண்ட காலத்திற்கு பிறகு ஏஞ்சலோவின் காதலரானார்.... உடல் தேவைகளை தாண்டி உணர்வு பூர்வமாக ஏஞ்சலோ  காதலில் திளைத்த நாட்கள் அவை....
தன் 63வயதில் , 47 வயதான விட்டோரியா என்ற இளம் விதவைபெண்ணுடன் காதலில் கலந்தார் ஏஞ்சலோ.... அவருடனான காதலுக்கு பிறகுதான் பெண்களை பற்றிய தன் எண்ணங்களை மாற்றிக்கொண்டதாக கூறப்படுவதுண்டு.... ஆனால், அதிலும் தன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக்கொள்ளாத ஏஞ்சலோ, “நான் விட்டோரியாவிற்குள் இருக்கும் ஆண்மையைத்தான் காதலிக்கிறேன்” என்று தன் கருத்தில் முழுவதையும் பின்வாங்காமல் வாழ்ந்தார்....
ஏஞ்சலோ அவர்கள் தன் வாழ்க்கையை மிக ரகசியமாக வாழ்ந்தவர்.... தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாய்ப்பேசிடாத சிற்பத்துடனும், ஓவியத்துடனும் கழித்தவர்.... அதிகம் மனிதர்களை நம்பாதவர்... அதனால், தான் இறக்கும் முன்பே தன்னை பற்றிய பெரும்பாலான ரகசியங்களை தீயிட்டு கொளுத்திவிட்டார்.... மேலும், அவர் வழித்தோன்றல்கள் கூட ஏஞ்சலோவின் ஒருபால் ஈர்ப்பு உணர்வுக்கான ஆதாரங்களை மேலும் மறைக்க முனைந்தனர்.... ஆனாலும், ஏஞ்சலோ எழுதிய, ஏஞ்சலோவுக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்கள் சில இன்றும் அவருடைய ஒருபால் ஈர்ப்பு எண்ணங்களுக்கு சான்றாக, ஆதாரமாக நம்மிடையே இருக்கிறது.... அந்த கடிதங்களில் அப்பட்டமாக ஏஞ்சலோ அவர்களின் ஒருபால் ஈர்ப்பு எண்ணங்கள் நமக்கு புலப்படும்... ஒரு கடிதத்தை படித்து, உள்வாங்கி கிரகிக்கும் தன்மை உடைய ஒவ்வொருவரும் அந்த கடிதத்தின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்....
ஏஞ்சலோ அவர்களின் சிற்பமும், ஓவியங்களும் இன்னும் எத்தனை காலத்துக்கு போற்றப்படுமோ, அத்தனை காலத்துக்கு அவருடைய ஒருபால் ஈர்ப்பும் அவருடன் பயணிக்கும் என்பதில் மாற்றமில்லை.... நல்லவேளையாக அவர் இந்தியாவில் பிறக்கவில்லை, பிறந்திருந்தால் பாலீர்ப்பு காரணத்தை வைத்தே அவருடைய சிற்பங்கள் உடைக்கப்பட்டிருக்கும், ஓவியங்கள் அழிக்கப்பட்டிருக்கும்.... “ஒரு மனிதரின் திறமையை அவருடைய செயல்களில் பாருங்கள், படுக்கை அறையில் பார்க்காதீர்கள்” என்பதுதான் இந்த ஹோமொபோபிக் சமூகத்துக்கு ஏஞ்சலோ அவர்கள் விட்டு செல்லும் உண்மை.....