Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday 31 May 2014

மோடி சர்க்காருக்கு ஒரு கோரிக்கை கடிதம்....

மோடி சர்க்காருக்கு ஒரு கோரிக்கை கடிதம்....



புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசுக்கு முதல்ல வாழ்த்துகளை சொல்லிவிட்டு, எங்களோட நசுக்கப்பட்ட உரிமைகளை கோரிக்கையா உங்க முன் வைக்கிறோம்...
இந்த கடிதத்தை நீங்க பார்ப்பீர்களோ? படிப்பீர்களோ? எனக்கு தெரியாது.... கடிதம் எழுதி உங்ககிட்ட கேட்குற அளவுக்கு நாங்க பெரிய ஆட்களல்லாம் இல்ல, ஆனால் கடிதத்தை தவிற உங்களோட தொடர்புகொள்ள வேற வழி எதுவும் எங்களுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்...
“வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானை உடைஞ்சா மாதிரி”ன்னு எங்க ஊர்கள்ல பழமொழி சொல்வாங்க... நிஜத்தில், நான்கு மாதங்களுக்கு முன்ன எங்களுக்கும் அப்படி ஒரு வெண்ணை திரண்டு வந்ததாதான் நினைச்சோம், இடையில் தேர்தல் அறிவிப்பு வந்ததால் அது உடைஞ்சு போயிட்டதா நினைக்குறோம்.... சட்டப்பிரிவு 377ஐ நீக்குவது தொடர்பாக கடந்த காங்கிரஸ் அரசாங்கம் எடுத்த முன்னெடுப்புகளைத்தான் நாங்க வெண்ணையா பார்க்கிறோம்... உச்சநீதிமன்றம் அந்த சட்டப்பிரிவை நீக்க முடியாதுன்னு சொன்ன பிறகு, இந்தியாவை சேர்ந்த பல அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக நின்று பேசியது எங்களை ஆச்சரியப்படுத்திய பேரானந்தம்.... அதே காங்கிரஸ் அரசாங்கம் மறுசீராய்வு மனு போட்டு, அது தள்ளுபடியாகி.... மீண்டும் நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக தீர்மானமோ, சட்ட முன்வரைவோ கொண்டுவரப்படும்! என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்தான், தேர்தல் அறிவிப்பு வந்து, எங்க பிரச்சினைகளை நாங்களே பேசமுடியாத சூழல் உருவாகிடுச்சு.....
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, நம்ம நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எங்களுக்கு ஆதரவாத்தான் நிலைப்பாட்டை எடுத்தாங்க.... ஏனோ பாஜக மட்டும், சில அரசியல் காரணங்களால் தீர்ப்பை வரவேற்றார்கள்... அதனால், கொஞ்சம் மனம் துவண்டது என்னமோ உண்மைதான்...  ஆனால், சமீபத்தைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறிக்கை ஒன்றில், “சட்டப்பிரிவு 377 நீக்கம் என்பது பேசி எடுக்கப்பட வேண்டிய முடிவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.... அந்த அமைப்பின் நிலைப்பாடு இப்போ எங்கள் பக்கம் கொஞ்சம் தளர்ந்திருப்பதாகவே இதன்மூலம் தெரிகிறது... மேலும், எங்கள் உரிமைகளை பற்றி பாஜகவின் எத்தனையோ தலைவர்கள் எதிர்மறையாக கருத்துகளை சொன்னபோதிலும், இன்றைக்கு பிரதமராக வீற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்கள் அமைதியாகவே இருந்தார்... அந்த அமைதிக்கு பின், எங்கள் மீதான கரிசனம் கொஞ்சம் இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம்...
காந்தி பிறந்த மண்ணின் மைந்தனாக இன்றைக்கு ஆட்சியை பிடித்திருக்கும் மோடி அவர்கள், காந்தியின் பாலீர்ப்பை பற்றியும் நிச்சயம் அறிந்திருப்பார்.... காந்தியின் பாலீர்ப்பை மறைக்க கடந்த காலத்து அரசாங்கங்கள், அவருடைய கடிதங்களையும், மற்ற தடையங்களையும் அழித்த நிகழ்வுகளும் நீங்கள் அறியாதது அல்ல...
மேலும், இந்தியா எப்போதுமே ஒருபால் ஈர்ப்பை அந்நியமாக பார்த்த வரலாறு கிடையாது... இன்றைக்கும் நம் இந்தியாவின் கலாச்சாரங்களின் பிறப்பிடமாக கருதப்படும் கோவில்களின் சிற்பங்களை ஆய்வு செய்தாலே அந்த உண்மை நமக்கு புரியவரும்... கஜுஹரோ சிற்பங்களும், உலகிற்கே களவியல் கல்வியை கற்றுக்கொடுத்த “காமசூத்திரத்தையும்” பார்த்தாலே ஒருபால் ஈர்ப்பு இயற்கையான ஒன்றுதான் என்பதை உங்களால் எளிதாக உணரமுடியும்....
ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட இந்து மதத்தில் எந்த இடத்திலாவது ஒருபால் ஈர்ப்பு குற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.... “ஒருபால் ஈர்ப்பை கொடுமையான குற்றமாக” கருதும் எத்தனையோ மதங்களுக்கு மத்தியில், இந்து மதக்கடவுள்களை கூட ஒருபால் ஈர்ப்புள்ளவர்களாக எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் உன்னத கருத்துகளை உள்வாங்கிய மதத்தை, அதன் கருத்துகளை ஏற்க மறுப்பது ஏன்?... ஐயப்பன், விநாயகர், முருகன் என்று எத்தனையோ பிரதான கடவுள்களின் பிறப்பின் வரலாற்றை அறியாதவர்களா நாம்?...
நிஜத்தில் இப்போ இந்தியர்களாகிய நம்மீது திணிக்கப்பட்டது தான் இந்த ஹோமோபோபிக் எண்ணங்கள்.... 1860ஆம் ஆண்டு காலனிய ஆதிக்கத்தில், பிரித்தானிய அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட அந்த “ஒருபால் ஈர்ப்புக்கு எதிரான மனநிலையை” கொஞ்சம் உதறித்தள்ளிவிட்டு, உண்மையை நாம் இனி உணர்ந்துதான் ஆகணும்...
காலனிய தாக்கத்திலிருந்து கொஞ்சம் விலகி, நிதர்சனத்தை நீங்க ஏற்றாலே, எங்கள் மீதுள்ள நிலைப்பாட்டை நிச்சயம் மாற்றிக்கொள்வீர்கள்...
மோடி அரசாங்கத்தின் மீது எவ்வளவோ எதிர்பார்ப்புகள் மக்களுக்கு கொட்டிக்கிடக்கிறது, அதில் எங்களோட இந்த “பாலீர்ப்பு ஏற்பு” எதிர்பார்ப்பும் பிரதானம் என்பதை உணரனும்....
இந்த உலகத்தில் இன்னும் ஒருபால் ஈர்ப்பை குற்றமாக கருதும் நாடுகள் வெறும் 77 மட்டும்தான்... ஏறத்தாழ நூற்றியிருபது நாடுகள் நிதர்சனத்தை உணர்ந்து, எங்கள் பாலீர்ப்பை ஏற்றுள்ளார்கள்.... உலகில் நம்மைவிட பொருளாதாரத்திலும், கல்வி அறிவிலும் பின்தங்கிய நாடுகள் பலவற்றிலும் கூட பாலீர்ப்பு பிரச்சினைகள் இருந்திடவில்லை.... மோடியின் தலைமையில் வல்லரசை நோக்கி நகரும் இந்தியா, இந்த விஷயத்தில் மட்டும் பிற்போக்குத்தனமான முரண்களை கொண்டிருப்பது முறையா? என்பதை உணருங்கள்....
நம் நாட்டில் ஏறத்தாழ 8% மக்கள் ஒருபால் ஈர்ப்புள்ளவர்களாக இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது... நிச்சயம் இந்த சதவிகிதம் கூடுதலாக இருக்கவே வாய்ப்பிருக்கு.... இந்தியாவின் வளர்ச்சி என்பது இந்த எட்டு சதவிகித குடிமகன்களின் பங்களிப்பிலும், உழைப்பிலும் கூட இருக்கிறது என்பதை நீங்கள் உணரனும்.... அந்த எட்டு சதவிகிதத்தில் அரசியல்வாதி முதல் அணு விஞ்ஞானி வரை, தொழிலதிபர் முதல் விவசாயி வரை எல்லோரும் இருப்பார்கள் என்பதும் நிதர்சனம்தான்.... சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “இந்தியாவில் ஆண்டொன்றுக்கு முப்பாதாயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் பணம் ‘ஹோமோபோபியா’வால் இழப்பாகிறதாம்...”... இவ்வளவு தொகை ஒரு ஆண்டுக்கு இழப்பாகிறது என்றால், நம் நாடு எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டு வருகிறது என்பதையும் நீங்கள் உணரனும்....
நாங்கள் “உரிமை, உரிமை” என்று சொல்வதல்லாம், எங்களுக்கான திருமண உரிமையோ, தம்பதிகளாக குழந்தை தத்தெடுக்கும் உரிமையோ இல்லை.... இப்போ எங்களுக்கு தேவை என்பது, ஒரு சாதாரண குடிமகனுக்கு அந்த நாடு கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை பாதுகாப்பு மட்டுமே எங்கள் கோரிக்கை.... ஒவ்வொரு நாளும் பாலீர்ப்பு காரணங்களால் நம் நாட்டில் எத்தனையோ தற்கொலைகள் நிகழ்கின்றன, “யார் வேண்டுமானாலும் ஒரு ஒருபால் ஈர்ப்பு நபரை அடித்து, துன்புறுத்தி, திருடலாம்” என்கிற பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவுகிறது.... ஆகையால் மோடி அரசாங்கத்திடமிருந்து நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான “சட்டப்பிரிவு 377 நீக்கம்” என்பதுதான்.... அதை தாண்டிய உரிமைகளை பிற்காலத்தில் பெற்றுக்கொள்வதில் பொறுமையாக காத்திருப்போம்...
1989ஆம் ஆண்டு அமெரிக்க சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில், “எதிர்பால் ஈர்ப்பு நபர்களைவிட ஒருபால் ஈர்ப்பு நபர்கள் மூன்று மடங்கு அதிகம் தற்கொலை செய்கிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது... இந்தியாவை போன்ற சட்ட மற்றும் சமூக அங்கீகாரமும், விழிப்புணர்வும் இல்லாத நாட்டில் நிச்சயம் அது பல மடங்கு அதிகமாகவே வாய்ப்பிருக்கு.... மேலும், உலகில் முப்பது சதவிகிதம் தற்கொலைகள் பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாள குழப்பத்தால் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது... இந்தியா போன்ற ஒருநாடு முதலில் தன்னாட்டு குடிமகன்களின் இத்தகைய தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.... திறம்பட மக்கள் வளம் பெற்றிருக்கும் நாடு, இத்தகைய காரணங்களால் தான் இன்னும் பல துறைகளிலும் பின்தங்கி இருக்கிறது...
மாவீரன் அலெக்சாண்டர், தத்துவ ஞானிகள் சாக்ரட்டிஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ, கணினி அறிவியலின் தந்தை ஆலன் தூரிங், பிரபல இலக்கியவாதி சேக்ஸ்பியர்.... இந்த பட்டியலில் இருக்க வேண்டிய எத்தனையோ இந்தியர்கள் பட்டை தீட்டப்படாத வைரங்களாகவே மண்ணுக்குள் புதைந்துவிட்டார்கள்.... எங்கள் பிள்ளைகளை “தன் சுயபாலீர்ப்பை பற்றியே யோசிக்கும் நிலையை மாற்றி, தன்னம்பிக்கை வளர செய்து பாருங்கள்....” நிச்சயம் அப்போதே அவர்களின் உள்புதைந்துள்ள திறமைகள் வெளிவந்து, நாட்டிற்காக அவர்களும் உழைக்க வெளிவருவார்கள்...
ஒன்றை மட்டும் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.... “ஒருபால் ஈர்ப்பை ஏற்றால், நாளைக்கே இங்க ஒருபால் ஈர்ப்பு நபர்கள் அதிகமாகிடுவாங்க.... இதை பரப்பிடுவாங்க”ன்னு நினைச்சுட வேண்டாம்.... இது குணப்படுத்த வேண்டிய மனநோயும் இல்லை, பரப்பப்படும் அளவிற்கு மத நம்பிக்கையும் இல்லை.... எங்கள் சுயத்தை நாங்கள் ஏற்கவும், அதை நீங்கள் ஏற்கவும் மட்டுமே எங்கள் போராட்டம்.... மேலும், இதன்மூலம் கட்டுப்பாடற்ற காமம் கரைபுரண்டு ஓடும்னும் நினைக்க வேணாம்.... ஒரு பொது இடத்தில் எங்க சமூகத்து மக்களே அநாகரிகமாக நடந்துகொண்டால், தாராளமாக தண்டியுங்கள்... ஒருவன் மீது மற்றொருவன் பாலியல் குற்றச்சாட்டு சுமத்துகிறான் என்றால், அதையும் விசாரித்து தாராளமாக தண்டனை வழங்குங்கள்.... ஆனால், “எதிர்பால் ஈர்ப்பினருக்கு பின்பற்றப்பட வேண்டிய அதே வழிமுறைகள் தான் எங்கள் மீதும் பின்பற்றப்பட வேண்டும்” என்பதுதான் எங்கள் கோரிக்கை.... கட்டுப்பாடற்ற காமத்துக்கு நாங்கள் உரிமை கேட்கவில்லை, கட்டுக்கோப்பான எங்களின் உறவுக்குத்தான் அனுமதி கேட்கிறோம்.... இதை எங்களுக்கான சலுகைகளாக நினைக்க வேண்டாம், ஒரு குடிமகனுக்கு நாட்டின் தலைமை கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமையாக நினைத்து தரவேண்டும்...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் சட்டப்பிரிவு 370ஐ போக்க நீங்க தீவிரமாக களமிறங்கியுள்ளது தெரிகிறது... ஆனால், “370 நீக்க”த்திற்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை, “377 நீக்க”த்திற்கு தாருங்கள் என்பதுதான் எங்கள் கோரிக்கை... நாட்டின் வளர்ச்சியை பிரதானமாக கருதும் நீங்கள், அந்த வளர்ச்சிக்கு எல்லா தரப்பு மக்களின் ஆதரவும், பங்களிப்பும் அவசியம் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறோம்... அந்த வகையில் எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், எங்களுக்கான ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையோடு.....

உங்கள் நாட்டு ஒருபால் ஈர்ப்பு பிரஜைகள்.....             

                                                             

Monday 26 May 2014

ஃபெயில் ஆகிட்டான்.... - சிறுகதை...



சூரியன் உதிக்கத்தொடங்கியது... மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒலித்த ஒப்பாரி ஓலம் சற்றே தணிந்திருந்தது... பெண்கள் தொண்டை வற்றியவர்களாக எச்சிலை விழுங்கியபடி, வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தனர்... வாசற்படியில் அமர்ந்திருந்த வைரவனும் கூட தன்னிலை மறந்தவனாய் வானத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்....
வாசலில் புழுதியை கிளப்பியபடி வந்து நின்ற அம்பாசிடர் காரிலிருந்து, வைரவனின் சின்ன தங்கச்சி இறங்கி, நடையும் ஓட்டமுமாக மார்பில் அடித்தபடி வீட்டிற்குள் நுழைய, பழைய ஓலம் மீண்டும் ஒப்பாரி வடிவில் தொடங்கியது...
“ஐயா.... என்னப்பெத்த ராசா.... சித்திய பாக்க வரேன்னு சொன்னியே, இப்புடியா உன்ன பாப்பேன்னு நெனச்சேன்.... பேச்சுக்கு நாலு தடவ சித்தின்னு நீ கூப்பிடுற அந்த பேச்சை இனி நான் எங்கய்யா கேப்பேன்?....” இளையவளின் குரல் வைரவனை இன்னும் அதிக வேதனையூட்டியது....
கையில் வைத்திருந்த குற்றால துண்டால் முகத்தை மூடி அழத்தொடங்கினார்....
வைரவனின் தங்கைகள் மூவருக்கு, அரை டசன் ஆண் குழந்தைகள்... ஆனாலும், அத்தனை பேரின் செல்லமாக வலம் வந்தவன் செந்தில் தான்... அதிலும் குறிப்பாக வைரவனின் கூடுதல் பாசத்துக்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது... செந்திலை தன் தங்கை மகளாக மட்டும் பார்த்திடாமல், தன் ஒற்றை மகளான மேகலாவுக்கு மாப்பிள்ளையாகவும் பார்த்ததால்தான் இந்த கூடுதல் பாசம்... சிறுவயது முதல் படுசுட்டியாகவும், எல்லோருடனும் பாசமாகவும், திருத்தமான முகத்தோடும் மற்ற ஐவரை விட எல்லாவிதத்திலும் தன் மகளுக்கு பொருத்தமாகவும் இருந்ததால், ஆறு வயது முதலே தன் மாப்பிள்ளையாக செந்திலை மனதில் நிறுத்தத்தொடங்கிவிட்டார்.... திருவிழாவுக்கு மற்ற பிள்ளைகளுக்கு சாலையோர கடையிலும், செந்திலுக்கு மட்டும் டவுன் ரெடிமேட் கடையில் துணி எடுப்பது தொடங்கி மற்ற பிள்ளைகளுக்கு தெரியாமல் டவுனிலிருந்து பரோட்டா வாங்கி வந்து, அதை யாருக்கும் தெரியாமல் செந்திலுக்கு ஊட்டிவிடுவது வரை கரிசனம் கரை கடந்த கடலாக வெளிப்பட்டது...
மாப்பிள்ளைக்கு பிடிச்ச நகரை மீன் குழம்பு மட்டுமே வைரவனின் வீட்டில் வாரத்திற்கு மூன்று நாட்கள் சமைக்கப்படும், செந்திலின் காதுகுத்து விழாவிற்கு வைரவன் எடுத்த மாமன் சீர் இன்னும் அவர்கள் குடும்பத்தில் புகைந்துகொண்டே இருக்கும் ஒரு பிரச்சினை...
“அது என்ன பெரியக்கா மவனுக்கு மட்டும் அம்புட்டு செறப்பா சீர் செஞ்சிய, நாங்கல்லாம் மட்டுமென்ன புள்ளைய தவுட்டுக்கா வாங்குனோம்” நடுதங்கச்சி நேரடியாகவே கேட்டுவிட்டாள்....
“நீ என்னப்பா பேசுற?... உம் மவனுகளுக்கு தேவை வச்சப்ப, ரொம்ப கஷ்டத்துல இருந்தேன்பா... இப்ப கைல கொஞ்சம் பணம் பொரலுறதால செஞ்சேன்... இப்ப செய்யலைன்னா என்ன, அடுத்த தேவைக்கு செறப்பா செய்யப்போறேன்...” சமாளிக்க முடியாமல் தவிப்பார் வைரவன்....
இவ்வளவு பாசம் வைத்திருந்த மாப்பிள்ளை, சவமாக கிடப்பதை எவரால்தான் தாங்கமுடியும்?.... இப்படி ஒவ்வொரு நிகழ்வாக எண்ணி, வைரவன் இன்னும் தேம்பி அழுதுகொண்டே இருந்தார்....
அப்போது பின்னாலிருந்து ஒரு கை வைரவனை அழைக்க, திரும்பி பார்த்தார்.... மேல் சட்டை இல்லாமல், வேஷ்டியுடன் வந்து நின்ற வேளார், வைரவனின் இரு கைகளையும் தழுவி துக்கம் விசாரித்தார்....
ஏனோ யாரை பார்த்தாலும், வைரவனுக்கு அழுகை அதிகமாகிக்கொண்டே இருந்தது... இதே வேளாரிடமிருந்துதான், செந்திலின் கல்லூரி படிப்பிற்காக நிலத்தை ஒத்திவைத்து கடன் வாங்கினார் வைரவன்....
“பேசாம ஐ.டி.ஐ ல சேர்த்துவிட்டு நம்ம மாப்பிள்ளை மெக்கானிக் கடையில வேலைக்கி சேர்த்தூடலாம் மச்சான்.... இம்புட்டு செலவு பண்ணனுமா?” செந்திலின் அப்பாவே தயங்கினாலும், மாப்பிள்ளைக்காக சோறு போட்ட நிலத்தை ஒத்திவைத்தார் வைரவன்....
“வைரவா.... அழுவாதப்பா.... உன் மாமன்தான் பெத்த புள்ளைய இழந்துட்டு அழுதுகிட்டு இருக்கான்... நீயும் இப்புடி உக்காந்துட்டா ஆகுற வேலையல்லாம் யாரு பொறுப்பா பாக்குறது?... மொதல்ல கண்ணை தொடச்சுட்டு எந்திரி... ஏழு மணி பஸ்’சுல நம்ம சாதி சனமல்லாம் வந்துரும்.. அவிக உக்கார கூட ஒன்னும் ஏற்பாடு இல்ல....” வேளார் சொன்னபிறகுதான் வைரவனுக்கு சூழல் புரிந்தது...
திருப்பத்தூரிலிருந்து வரும் பேருந்து ஏழு மணிக்கு ஊருக்கு வந்திடும், சுற்றுவட்டார சொந்தங்கள் நிறையபேர் அதில்தான் வருவார்கள்... வீட்டு திண்ணையில் சடலம் போடப்பட்டிருக்க, அக்கம் பக்கத்தினரும் முக்கிய சொந்தங்களுமே முழு வீட்டையும் நிரப்பிவிட்டார்கள்... இனி வருபவர்களுக்கு நிற்கக்கூட இடமிருக்காது....
துண்டால் முகத்தை துடைத்தபடி எழுந்தார் வைரவன்....
“ஏய் பழனிச்சாமி கீத்து பின்றவன வரசொல்லி வேகமா ஒரு காவணம் போட சொல்லு.... ஆளுக உக்காருற மாதிரி தார்ப்பாய், சமுக்காலம் எல்லாம் எடுத்துட்டு வா...” சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்து இரண்டு பிளாஸ்டிக் குடங்களை எடுத்து, தண்ணீர் பிடித்துவர சொல்லி வாசலில் வைத்தார்.... அதற்காகவே காத்திருந்தார்போல பலரும் குவளை குவளையாக தண்ணீரை வாய்க்குள் கவிழ்த்தனர்....
“எப்புடிப்பா ஆச்சு?” என்ற எல்லோருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய மொத்த குத்தகைதாரர் ஆகிவிட்டார் வைரவன்...
“ஏதோ பரிச்ச எழுதுனானாம்... பெய்லா போய்ட்டோம்னு பாவிப்பய பூச்சி மருந்தை குடிச்சுட்டான்.... விடியகாலம் நான்தான் பார்த்தேன், நொரை கக்கி கிடந்ததை பார்த்தப்ப என் உசுரே போய்டுச்சு.... அப்பவே பேச்சு மூச்சு இல்ல, நாடியும் இல்ல...” ஒவ்வொருமுறை சொல்லும்போதும் மனம் வலிக்க, தொண்டை அடைக்க சொல்லிய வைரவனின் கண்கள் அனிச்சையாக கண்ணீரையும் தாரை தாரையாக வடித்தது...
ஒருவழியாக கீற்றால் கொட்டகை வேய்ந்துகொண்டிருக்கும்போதே ஆட்கள் நிறைய வரத்தொடங்கிவிட்டனர்... ஆட்கள் வரத்து அதிகமாக, அங்கு ஒப்பாரியும் மிகுதியானது...
“ஏய் தம்பி.... சின்ன புள்ளைகல்லாம் பசியா இருக்குங்க.... முக்கு கடைல போய் டீத்தண்ணி வாங்கிட்டு வா.... சலவைக்கடைல போய் வண்ணான வரசொல்லு....” தன் சட்டைப்பையிலிருந்து சில நூறுகளை கொடுக்கும்போது தன்னையும் மீறி கண்ணீர் வழிந்தது வைரவனுக்கு.... முதன்முறையாக தன் மாப்பிள்ளைக்காக செலவு செய்யும்போது மனம் கனத்து, கண்ணீராய் கரைந்தது இப்போதுதான், அநேகமாக இதுவே அவனுக்கு செய்யும் கடைசி செலவாக இருப்பதாலோ என்னவோ....
வீட்டிற்குள் சென்று பாய் மற்றும் போர்வைகளை எடுத்துவந்து வீட்டு வாசலில் கிளைபரப்பி நின்ற புங்கை மரத்து நிழலில் விரித்தார்.... கொட்டகையையும் மீறி வழிந்த கூட்டத்தை கட்டுப்படுத்த மரநிழல்கள் தற்காலிக இளைப்பாறும் இடமாக மாற்றப்பட்டது....
திடீரென வீட்டு வாசலில் ஒரே சலசலப்பு....  தன் மாமா, வேளார், மற்றைய உறவினர்களுடன் வேறு யாரோ வாக்குவாதம் செய்வதைப்போல தெரிகிறது... வாக்குவாதம் முற்றியதன் அடையாளமாக தடித்த வார்த்தைகள் வெளிப்பட்டு இன்னும் அதிக உஷ்ணத்தை அங்கு உண்டாக்கியது....
நடையும் ஓட்டமுமாக அந்த இடத்தை அடைந்தார் வைரவன்...
“இங்க பாருங்க வேளாரே, நான் ஒத்துக்க முடியாது...எனக்கு இந்த சாவுல சந்தேகம் இருக்கு.... அவன் தற்கொலைதான் பண்ணிகிட்டான்னா ஏன் போலிசுக்கு போக பயப்படனும்?” சாமிக்கண்ணுதான் பிரச்சினை செய்கிறான்....
வழக்கமான பங்காளி தகராறால், வருடங்கள் கடந்தும் தீராத பகையின் வெளிப்பாடுதான் இந்த வீண் பிரச்சினையும்... சுபகாரியங்களிலேயே “என்னடா பிரச்சினை பண்ணலாம்?” னு காத்திருக்குற சாமிக்கண்ணுக்கு, வசமாய் வாய்க்குள் சிக்கிய அவலாக கிடைத்த செந்திலின் மரணத்தை சும்மா விடுவாரா என்ன?....
“எம்புள்ள செத்ததுல உனக்கென்னடா சந்தேகம்?... சனிப்பொணம் தனியா போவாதுன்னு சொல்வாக, இன்னைக்கி எம்மவன் பொணத்துக்கு நீதான் தொணை பொணமா போவப்போறன்னு நெனக்கிறேன்” மாமாவும் பொறுமை இழந்து பேசத்தொடங்கிவிட்டார்....
துக்கத்திற்கு வந்தவர்கள் அந்த இடத்தை சூழ்ந்து, நடப்பது புரியாமல் வேடிக்கை பார்த்தனர்... அவர்களுக்குள்ளாக ஏதேதோ பேசிக்கொண்டு, தங்கள் கற்பனைகளுக்கு  வண்ணம் தீட்டிக்கொண்டு நின்றனர்...
சூழலை உணர்ந்த வைரவன், சாமிக்கண்ணுவை தனியே அழைத்தபடி, “என்ன மச்சான் இதல்லாம்?... பெத்த மகன் செத்த வேதனைல இருக்குற மனுஷன்கிட்ட வந்து பிரச்சின பண்ணனுமா?... எதுவா இருந்தாலும் அடக்கம் பண்ணதுக்கு பொறவு பேசிக்கலாம்.... இப்ப கெளம்புங்க மச்சான்...” பொறுமையாக பேசினார்....
“இல்ல வைரவா, அவன் ஏதோ தப்பு பண்ணிருக்கான்.... அந்த செந்திலு பயல ரெண்டு நாளக்கி முன்னாடி கைநீட்டி அடிச்சத எம்மவன் பாத்திருக்கான்.... என்னமோ பிரச்சினைலதான் மருந்து வச்சு கொன்னிருக்கான்.... வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனக்கிற ஆளு நீ... உம்மகள செந்திலுக்கு கல்யாணம் பண்ண பேசி முடிச்சது எனக்கு தெரியும்... இப்ப உம்மவ வாழ்க்கையும் கஷ்டமா போச்சுல்ல?... அதுக்கும் சேத்து நாம நியாயம் கேப்போம்... அவன் மேல தப்பு இல்லைன்னா, என்னத்துக்கு போலிசுக்கு  சொல்ல பயப்படுறான்?” கேள்விகளை வரிசையாக அடுக்கினார் சாமிக்கண்ணு....
“ஐயோ மச்சான்....  போலிசுக்கு போனா, ஆஸ்பத்திரில உடம்ப கூறு போட்டு நாளை கடத்துவாங்க.... ஏற்கனவே புள்ளைய எழந்து தவிக்குற அக்கா, மாமாவல்லாம் அதை தாங்கமுடியாது... உங்க கால்ல வேணாலும் விழுகுறேன், தயவுசெஞ்சு பிரச்சினை பண்ணாதிக....” காலை நோக்கி வைரவனின் கைகள் செல்ல, சில அடிகள் பின்னால் விலகிய சாமிக்கண்ணு தடுத்து நிறுத்தியபடி, “ஏய் ஏய்.... சரி விடுப்பா.... இம்புட்டு ஏமாளியா நீ இருக்கியே!” என்று தலையில் அடித்தபடி வீதியில் நடக்கத்தொடங்கினார் சாமிக்கண்ணு....
பெருமூச்சு விட்டபடி கூட்டத்தை சரிசெய்து, மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளுக்குள் தன்னை ஆட்படுத்திக்கொண்டார் வைரவன்....
வீதியின் தொடக்கத்திலிருந்தே பெண்கள் பலர் தலையிலும், மார்பிலும் அடித்தபடி வீட்டை நோக்கி நடந்து வந்தனர்... எல்லோர் கண்களிலும் எல்லையற்ற சோகம், அதிர்ச்சி...
உடலை வணங்கி போடப்பட்ட மாலைகளை அவ்வப்போது அள்ளி வாசலில் இருந்த கூடையில் போட்டனர்... ரோஜாப்பூ இதழ் சிந்தி வாசலே பூக்கோலம் போட்டது போல ஆகிவிட்டது...
“ஏம்பா தாரை தப்பட்டைக்கு சொல்லலையா?” ஒரு முதியவர் வைரவன் அருகில் வந்து கேட்டார்....
“இல்ல பெரியப்பா.... தாரை, தப்பட்டை, ஜோடிக்கப்பட்ட பாடை எதுவும் இல்ல.... கல்யாண சாவுக்குத்தான் அதல்லாம் வைக்கணுமாம்....” பொறுமையாக பதில் சொல்லியபடியே, தான் செய்யவேண்டிய சடங்கான நீர் பந்தல் எடுக்கும் வேலைகளில் ஆயத்தமானார்....
“எம்மருமவனுக்கு இருக்குற வரை மட்டுமில்ல, இறந்த பிறகும் எந்த மொறையும் கொறையில்லாம செஞ்சதா இருக்கணும்...” என்று கண்கள் கலங்க சொல்லியபடியே சம்மந்திபுரத்து சடங்கை தானே முன்னின்று செய்தார்....
உடலை குளிப்பாட்டி, உறவுகள் எல்லாம் துணிகள் போர்த்தியபிறகு மீண்டும் சடலம் வாசலில் போடப்பட்டு, விளக்கு ஏற்றி உறவுகளின் இறுதி பார்வைக்காக வைக்கப்பட்டது.... அழுகை சத்தம் விண்ணை பிளந்தது... தொண்டை வற்றியவளாக, கதரக்கூட திராணி அற்றவளாக செந்திலின் அம்மா விசும்பியபடி அழுதுகொண்டிருக்கிறாள்....
“வைரவா.... வானம் சனி மூலை கருத்திருச்சு... மழை வரும்போல தெரியுது... நேரத்தோட அடக்கம் பண்ணிடலாமே?” வேளார்தான் வைரவனின் காதருகே கிசுகிசுத்தார்...
சனி மூலை கறுத்து, வடமேற்கில் வானம் மின்னிக்கொண்டு இருந்தது... அடைமழை பெய்வதற்கான அத்தனை கூறுகளும் தென்பட்டது... இனியும் காலம் கடத்தினால், இறுதி சடங்கில் சிக்கல்கள் வரும் என்பதால் செந்திலின் உடல் மயானத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது...

                                                      **************
இறப்பு நிகழ்ந்து ஒருவாரமாகியும் இன்னும் வீடே துன்பக்கடலில் நீந்திக்கொண்டுதான் இருக்கிறது.... அக்கா ஒருபக்கம், மாமா மறுபக்கம் என வைரவனும் கடலுக்குள் கட்டுண்டு கிடந்தார்... மணிமேகலை தான் உலை வைத்து சோறு வடித்தாள், கையை இரண்டு முறை சுட்டுக்கொண்டு புளிக்குழம்பும் வைத்தாள்...
“சாப்புட வாங்க மாமா...” செந்திலின் அப்பாவிடம் பவ்யமாக பேசினாள் மணிமேகலை....
“நீ சாப்புடும்மா.... உங்க அத்தைய சாப்புட சொல்லு, நான் பொறவு சாப்புடுறேன்...” மதியமும் இதேபோல சொல்லித்தான் சாப்பாட்டை தவிர்த்தார்... அதனால், அங்கிருந்து விலக மனமில்லாமல் அப்படியே நின்றாள் மணிமேகலை....
வைரவன்தான் எழுந்து, “மாமா, ஆகுற வேலையை பார்க்கனும்ல... இப்புடியே இருந்து என்ன ஆவப்போவுது?” கண்கள் கலங்க சொல்லிவிட்டு, மேகலையை பார்த்து, “நீ சாப்பாட்டை எடுத்து வையிம்மா வர்றோம்” என்றார்...
மின்னலாக ஓடிய மணிமேகலை பதார்த்தங்களை எடுத்து கடைபரப்பி வைக்க தொடங்கினாள்...
மாலையிடப்பட்ட தன் மகனின் புகைப்படத்தை பார்த்தவராக “மறக்குற விஷயமாப்பா இது?... எதை பார்த்தாலும் அவன் நெனப்புதான் வருது மச்சான்... எப்புடித்தான் அவனுக்கு தற்கொலை பண்ணிக்குற அளவுக்கு வேகம் வந்துச்சுன்னே தெரியல...” பிள்ளையின் இழப்பு அப்பாவை இந்த அளவிற்கு வருத்துவது ஆச்சரியம் ஒன்றுமில்லைதான்....
“அதையே புலம்பாதிய மாமா.... பேசப்பேச அந்த நெனப்பு கூடத்தான் வரும்...” தொண்டையில் இறங்க மறுத்த எச்சிலை சிரமப்பட்டு விழுங்கியபடி பேசினார் வைரவன்....
“எல்லாரும் உம்மவ வாழ்க்கை போச்சுன்னு கவலைப்படுறாக... ஆனா, ஆம்பளை கூடத்தான் வாழ்வேன்னு சொன்ன அந்த பயகூட மேகலாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா, அப்பதான் அது வாழ்க்கை பாவமாகிருக்கும்... அந்த வகையில தான் தற்கொலை பண்ணி, உம்மவ வாழ்க்கையை காப்பாத்திட்டான் செந்திலு....” சத்தமில்லாமல் மாமா சொன்ன இந்த ஆறுதல் யாரை தேற்றுவதற்கு? என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார் வைரவன்....
“சரி எழுந்திரு மச்சான்... போய் மூஞ்சி கழுவிட்டு வா, எதாவது சாப்டுட்டு வேளார் வீட்டு வரைக்கும் ஒரு எட்டு போயிட்டு வருவோம்...” மாமா எழுந்து செல்ல, வைரவனும் தண்ணீர் தொட்டியை நோக்கி நகர்ந்தார்....
கைகள் கொள்ளாத அளவிற்கு நீரை அள்ளி, முகத்தில் தெளித்தார்.... ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில் சாப்பிட்ட சாப்பாட்டில் தான் கலந்த விஷத்தின் வாடை இன்னும் தன் விரல்களை விட்டு அகலாதது வெறும் பிரம்மைதான் என்று வைரவனால் நம்பமுடியவில்லை...
கண்களில் பெருகிய நீரோடு சோப் போட்டு அந்த வாடையை கழுவ முயன்றார், பாவத்தை எங்கு கழுவுவது? என்ற புரியாத சோகத்தோடு....! (முற்றும்)

Thursday 22 May 2014

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...”

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் “உங்கள் விஜய் பேசுகிறேன்...”


 ஐந்தாண்டுகளாக கதைகள் எழுதும் உங்கள் விஜய், வலைப்பதிவராக மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறேன்....
தொடக்க காலங்களை போல, இப்போ எழுதுவதில் அதிகம் சிக்கல் ஏற்படுவதில்லை... நான் சரியான திசையில்தான் செல்வதாக உங்கள் தொடர் ஆதரவின் மூலம் அறிகிறேன்...
நம் ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினர் மட்டுமல்லாமல், நம்மை பற்றிய தகவல்களை பொதுத்தளத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்கிற ஆசை, ஓரளவு நிறைவேறிக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சியே.... சிறுகதைகள் தளத்தில் என் சிறுகதைகள், ஆழம் மின்னிதழில் எனது கட்டுரை என்று வரிவடிவம் தாண்டி திரை வடிவில் என் சிறுகதையான “377” குறும்படமாகி வந்திருப்பது வரை பொதுத்தளத்து மக்கள் நம் உணர்வுகளை உணர என்னாலான சிறு பங்களிப்பு செய்திருப்பதில் மனநிறைவு....
84 நாடுகளை சேர்ந்த வருகையாளர்களின் ஒன்றரை லட்சத்தை தாண்டிய பார்வைகள், இருநூறை நெருங்கும் பின்தொடர்பவர்கள், 160 பதிவுகள், அது தொடர்பான 1500 கருத்துகள், சிறந்த LGBT தளமாக கடந்தாண்டு தேர்வு என்று உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு கிடைத்த அத்தனை பெருமையும், உங்கள் அத்தனை பேரையும் மட்டுமே சாரும்....
சமீப கால அரசியல் மற்றும் சட்டத்தின் மாற்றங்கள் நமக்கு எதிரான சூழலை உருவாக்கியுள்ளது... சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே நம் இருப்பை இந்த உலகிற்கு உணர்த்த முடியும்... ஆக, தளர்வில்லாத நடையோடு இனி வரும் காலத்தை கடத்தினால் மட்டுமே சில ஆண்டுகளிலாவது நம் உரிமைகளை பெறமுடியும்... அது நமக்கான முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும் உரிமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...
பொதுவாக நான் சர்வதேச விழிப்புணர்வு சார்ந்த பிரச்சினைகளை அதிகம் பேசுவதில்லை என்றும், சின்ன சின்ன லோக்கல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்... அவர்கள் காண விரும்பும் சர்வதேச தரத்திலான நம் மாற்றம் என்பதற்கு, முதலில் நம் அடிப்படை கட்டமைப்பு பலமாக இருப்பது அவசியம் என்பதால்தான் நான் நம்மை சுற்றியுள்ள அடிப்படை, அடிமட்ட பிரச்சினைகள் பற்றியே அதிகம் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்....
தொடர்ந்து உங்களின் ஆதரவின் மூலம் நாம் இன்னும் பல உயரத்திற்கு செல்வோம் என்ற நம்பிக்கையில் தான் மூன்றாம் ஆண்டிலும் புத்தணர்வோடு களமிறங்க காத்திருக்கிறேன்....
கடந்த ஆண்டு வரை ஒரு கை ஓசையாக வெளியான பதிவுகள், சமீப காலங்களில் மிகத்தேர்ந்த பதிவர்களின் பதிவுகள் மூலம் மிகையான வெற்றியை பெற்றுள்ளது...
எனதருமை நண்பர் ஜான் பால், அருமை சகோதரி கண்ணகி இளமலர் மற்றும் அன்புத்தோழர் வெண்பா ஆகியோரது வருகை நிச்சயம் எனது கனவை இன்னும் வேகமாக நிறைவேற்றும் என்று நம்புகிறேன்... பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உங்களுக்காக சமூக அக்கறையோடு பதிவுகளை பகிர்ந்திடும் அந்த தோழர்களுக்கு உங்கள் சிறப்பான ஆதரவை நல்கி, நல்ல உள்ளங்களுக்கு ஊக்கம் தாருங்கள்... இந்த வாய்ப்பை அந்த நண்பர் பெருமக்களுக்கு நன்றி கூறும் வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்கிறேன்....
எனது பெரும்பாலான கதைகள் மற்றும் கட்டுரைகளுக்கு ஆலோசானைகள், தணிக்கைகள் மற்றும் மேலும் பல உதவிகளை செய்து, நான் எப்போ பதிவை அனுப்பினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் என்னை தொடர்புகொண்டு திருத்தங்களை கூறிடும் ஆருயிர் நண்பர் அவிட் (ராஜு) மற்றும்  அண்ணன் ரோத்திஸ் அவர்களுக்கு எனது சிறப்பான நன்றிகளை உரித்தாக்க விரும்புகிறேன்....
அமைப்புகள் சார்ந்த எத்தனையோ விமர்சனங்களை நான் முன்வைத்திருந்தாலும், இன்றைக்கும் நல்ல நட்போடும், எவ்விதமான பிணக்கும் இன்றி நல்லாலோசனைகளை அளித்து வரும் ஓரினம் அமைப்பினருக்கும் (குறிப்பாக ராம்கி, சுந்தர் மற்றும் பிரவீன்), சிருஷ்டி அமைப்பின் கோபி மற்றும் சென்னை தோஸ்த் விக்ராந்த் பிரசன்னா அவர்களுக்கும் எனது முத்தான நன்றிகள்....
எங்கோ எனது நினைவுகள் கூட நெருங்க முடியாத தூரத்தில் வாழ்ந்தாலும், இன்றைக்கும் என்னை எழுத வைத்திடும் என் விஜய்க்கு நன்றிகள்...
தளராத மனதையும், சிதறாத சிந்தையையும் கொடுத்து என்னை எழுத வைக்கும் அந்த இறைவனுக்கு நன்றிகள்....
“அண்ணா...” என்று பாசத்தோடு விளித்து, என் கவனத்திற்கு பல உலகளாவிய செய்திகளை கொண்டு வந்து சேர்க்கும் எனதருமை தம்பிமார்கள் அனைவருக்கும் எனது முத்தாய்ப்பான நன்றிகள்...
தொடர்ந்து பல வேலை பளுவிற்கு இடையிலும், என்னை எழுத தூண்டிடும் எனதருமை வாசக நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.... நிஜத்தில் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் வாசகர்களின் பெயர்களை குறிப்பிட எனக்கும் ஆசைதான்.... ஆரம்ப காலம் முதல் என்னை ஊக்குவித்த நண்பர்களின் பெயர்களை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு கூர்ந்து எழுதி வருகிறேன்.... முடித்ததும் நிச்சயம் உங்கள் முன் அந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தனிப்பதிவில் உரித்தாக்குகிறேன்....
உங்கள் விஜயோடு தொடர்புடைய அத்தனை அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றி...! நன்றி...! நன்றி...!