Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 21 October 2013

இந்தியாவில் கொடுக்கப்படும் ஓரினசேர்க்கைக்கான சிகிச்சை முறைகள்.....


(ஏற்கனவே ஓரின சேர்க்கைக்கு வெளிநாடுகளில் கொடுக்கப்படும் சிகிச்சைகளாக சொல்லப்படும் விஷயங்கள் பற்றி முன்பு பார்த்தோம், இப்போ இந்தியாவில் நடக்கின்ற கூத்துகளை பார்க்கலாம்.... வெளிநாட்டு சிகிச்சை பற்றிய கட்டுரையை படிக்க  இங்கே அழுத்தவும்)
     மனநல மருத்துவம் இன்று எவ்வளவோ முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.... ஆனாலும், சில நேரங்களில் அறிவியலை அடிபணிய வைத்துவிடுகிறது புரையோடிய மூட நம்பிக்கைகள்.... ஆம், ஒருபால் ஈர்ப்புக்கான சிகிச்சைகளை கொடுப்பதாக கூறி கல்லா கட்டும் மனநல மருத்துவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, பதட்டம்தான் நமக்கு வருது....
எல்லா மருத்துவர்களையும் அப்படி நான் சொல்லவில்லை... இன்னும் சொல்லனும்னா, டாக்டர் நாராயண ரெட்டி அவர்களின் “உயிர்” படித்த பிறகுதான், ஒருபால் ஈர்ப்பும் இயற்கையானதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன்... பொதுத்தளத்தில் தமிழ்நாட்டில் ஒருபால் ஈர்ப்பை பற்றி பேசிய முதல் மருத்துவர் அவராகத்தான் இருக்கணும்... அதே போல மருத்துவர் ஷாலினி போன்றோரும் அவ்வப்போது பாலீர்ப்பை பற்றி பேசுவதை பார்க்கிறேன்... அதனால், மிகவும் தெளிவாக, முழுமையாக பாலீர்ப்பை பற்றி தெரிந்து, நமக்கு எடுத்துசொல்லிக்கொண்டிருக்கும் மருத்துவர்களை நான் மதிக்கிறேன், வணங்குகிறேன்....
அதே நேரத்தில் பல்கி பெருத்துக்கொண்டிருக்கும் சில களைசெடிகள் பற்றியும் இங்க நான் சொல்லியாகனும்....
ஒருபால் ஈர்ப்பை பற்றி மக்கள் தெரிஞ்சுக்க, அதை விளக்க வேண்டிய இடத்தில் இருக்கும் மனநல மருத்துவர்களின் தவறான வழிகாட்டலை சொல்லியாகனும்...
பல நண்பர்களிடமிருந்தும், அவர்களின் பாலீர்ப்பை மனநல மருத்துவர் அணுகிய விதம் பற்றி கேட்டிருக்கிறேன்... தங்களின் ஒருபால் ஈர்ப்பை பற்றி மருத்துவர்களிடம் சொன்னதும், பெரும்பாலும் “முகம் சுளிப்புகள், ஏளன பார்வைகள், கடும் சொற்கள்”தான் அந்த மருத்துவர்களிடமிருந்து பதிலாக வந்ததாம்... மனச்சிதைவு நோய்க்கு உண்டான மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் பலர்... விளைவு, இன்னும் குழப்பம் அதிகமாகி மன சோர்வு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்....
இப்படி சிலர் புரியாமல் சிகிச்சை கொடுப்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கமோ இதனை புரிந்தே மக்களை தவறான திசையில் பயணிக்க வைக்கும் மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் பற்றி பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் நரேன் மற்றும் வினய் சந்திரன் என்ற இரண்டு களப்பணியாளர்கள்  ஒரு கள ஆய்வை மேற்கொண்டனர்..... அதில் கண்ட உண்மை அதிர்ச்சிக்கு உள்ளானவை....
சில மருத்துவர்கள் தெளிவான மனநிலையில் இதை அணுகுகிறார்கள்.... சிலர் இதற்கு சிகிச்சை கொடுக்கிறார்கள்.... அது என்ன சிகிச்சை?... இல்லாத நோய்க்கு, சிகிச்சை எப்படி கொடுக்க முடியும்?னு நீங்க கேட்பது புரியுது... ஆனால், கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள் இந்த இருவரும்....
சிகிச்சைக்காக வரும் இளைஞரிடம், ஒருபால் ஈர்ப்பை மனநோய் என்றே மனதில் முதலில் பதிய வைக்கிறார்கள்... அதற்கு சிகிச்சை அளிக்க, அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறை “ஷாக் ட்ரீட்மெண்ட்” (Electro Convulsive Therapy)….
சிகிச்சைக்கு வரும் இளைஞனின் கையில் ஷாக் வைக்கப்படும் எலக்ட்ரோட் பொருத்தப்படுகிறது... ஒரு கணினியின் திரையில் முதலில் நிர்வாணமான ஆணின் புகைப்படம் திரையிடப்படுகிறது... அதை பார்க்கும்போது அந்த இளைஞன் கிளர்ச்சி ஆகிறான், அந்த கிளர்ச்சியாகும் நேரத்தில் மின் அதிர்வு கொடுக்கப்படுகிறகு.... அதனை தொடர்ந்து ஒரு பெண்ணின் நிர்வாண படம் திரையிடப்பட, மின் அதிர்வு நிறுத்தப்படுகிறது.... அதாவது, ஆணை கண்டு கிளர்ச்சியாகும் நேரத்தில் மின் அதிர்வு கொடுக்கப்பட்டு, பெண்ணின் படம் வரும்போது மின் அதிர்வு நிறுத்தப்படுகிறது.... இது சில முறை தொடர்கிறது, கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு வந்த பிறகு இளைஞன் விடுவிக்கப்படுகிறான்.... ஆண்களின் மீது ஈர்ப்பு வருவதை இதன்மூலம் நிறுத்தமுடியும் என்று நம்மை நம்பவைக்கிறார்கள்....
இந்த வன்கொடுமை மாதக்கணக்கில் தொடர்கிறது, கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் இந்த கொடுமையான சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞன் ஒருவன், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டதையும் இந்த ஆய்வில் பதிவு செய்கிறார்கள்....
இத்தகைய சிகிச்சைகள் மாதக்கணக்கில் தொடர்கிறது, சிலர் இந்த சிகிச்சைக்கு பயந்து தாங்கள் மாறிவிட்டதாக சொல்கிறார்கள்... அப்படி சொல்பவர்களை தங்கள் மூலம் குணமடைந்தவர்கள் பட்டியலில் இணைத்து, விளம்பரம் கொடுத்து பணம் பார்க்கிறார்கள் அந்த மருத்துவர்கள்....
சமீபத்தில் கூட கேரளத்தில் ஒரு லெஸ்பியன் பெண்ணுக்கு இத்தகைய கொடுமையான சிகிச்சை கொடுக்கப்பட, அவரை அந்த கொடுமையிலிருந்து மீட்டனர் சில சமூக அமைப்பினர்....
கடந்த வருடம் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு கட்டுரைக்கு பேட்டியளித்த பிரபல மனநல மருத்துவர் புல்கிட் ஷர்மா அவர்கள் சொல்வதை பார்த்தால், இந்த நிலைமைக்கு ஒருவகையில் பெற்றோரும் காரணமோ? என்று எண்ணத்தோன்றுகிறது....
“என் மகனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுங்க, அல்லது மூளையை வெட்டி எடுத்திடுங்க... அவனை எப்படியாச்சும் ஸ்ட்ரைட்டா மட்டும் மாத்திட்டா போதும்” என்று சொன்ன ஒரு தந்தை, மெத்தப்படித்த ஒரு ஆடிட்டர்....
பெரும்பாலும் உயர்தர வர்க்கத்தினர் தான் இப்படிப்பட்ட சிகிச்சைக்கு மனநல மருத்துவர்களை தள்ளுவதாகவே நமக்கு எண்ண தோன்றுகிறது....
மேலும் மருத்துவர் புல்கிட் ஷர்மா அவர்களுக்கு, ஒரு வருடத்தில் சராசரியாக இப்படி ஐம்பது பெற்றோர்களிடமிருந்து நிர்பந்தம் வருவதாக கூறுகிறார்...
“ஒருபால் ஈர்ப்பு நோய் கிடையாது... இதில் தவறும் கிடையாது.... சிகிச்சை என்ற பெயரில் பிள்ளையை கஷ்டப்படுத்த வேணாம்’ என்று நான் சொல்லி அவர்களை அனுப்பினாலும், பலர் வேறொரு மருத்துவரை நோக்கித்தான் நகர்கிறார்கள்” என்று மேலும் சொல்கிறார் ஷர்மா....
நாம் மருத்துவர்களை குறை சொல்கிறோம், மருத்துவர்கள் பெற்றோர்களை நோக்கி கை நீட்டுகிறார்கள், பெற்றோர்களின் சமூகத்தின் மீதான பயமும் நாம் அறிந்ததே.... இதற்கு குற்றவாளியாக நாம் யாரையும் கைகாட்டிட வேண்டாம்... குறைந்தபட்சம், ஒருபால் ஈர்ப்பை மனநோய் இல்லை என்ற ஒரு உண்மையை மட்டும் நாம் எல்லோரும் புரிந்துகொண்டால் போதும், குறைந்தபட்சம் சில மின்சார சிகிச்சைகளில் இருந்து நம் பிள்ளைகளை காப்பாற்றவாவது முடியும்...
இதைத்தாண்டி இப்போ சமீப காலங்களில் “ஒரு மாதத்தில் குணமாக்குகிறோம்”னு வாலிப வயோதிக அன்பர்களை கூவி அழைக்கும் போலி வைத்தியர்களிடம் இருந்தும் தப்பித்துக்கொள்ள இந்த புரிதல் நம் எல்லோருக்கும் அவசியமாக படுகிறது.... புரிந்துகொண்டு வாழ்வது மட்டுமே இதற்குரிய ஒரே சிகிச்சை என்பதை உணருங்கள்... உணர்த்துங்கள்....

Friday, 18 October 2013

"தற்கொலை எண்ணம் உள்ளவரா?" - எளிமையாக மாற்றிடலாம்....

 அதிகரித்து வரும் பாலீர்ப்பு காரணமான தற்கொலைகள் பற்றி சில நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியதை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்... எப்போதும் பிரச்சினைகளை பற்றியே மட்டும் பேசும் நாம், அவ்வப்போது அதற்குரிய தீர்வுகள் பற்றியும் யோசித்தாக வேண்டியது கட்டாயமான ஒன்று... புற காரணிகள் பலவற்றை பற்றியும் நாம் முன்பு பேசினோம், இப்போது நமக்குள் இருக்கின்ற சில பிரச்சினைகளை பற்றியும், அதற்குரிய தீர்வுகள் பற்றியும் சுருக்கமாக பார்க்கலாம்....
தற்கொலை என்பது ஒருநாளில் நிகழ்வது இல்லை... அது பல கால மன சோர்வின் வெளிப்பாடு... மன சோர்வு பற்றி பார்க்கும் முன்பு, மனநல மருத்துவம் பற்றிய ஒரு குட்டி முன்னுரை....
நம் உடலில் சாதாரண காய்ச்சல் முதல் கொடிய புற்றுநோய் வரை ஆயிரக்கணக்கான நோய்கள் இருப்பதை நாம் அறிவோம்... உடல் ரீதியான ஒவ்வொரு பிரச்சினைகள், உபாதைகள் பற்றியும் நாம நிறைய தெரிஞ்சு வச்சிருக்கோம்... ஆனால், உடல் நலம் பற்றி எவ்வளவோ யோசிக்கும் நாம, மனநலம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.... காரணம், மனநலம் என்றாலே “பைத்தியம், கிறுக்கு, லூசு” என்று மேலோட்டமாக நாம் பார்க்குற அணுகுமுறை.... ஆனால், உண்மை அதுவல்ல.... கிட்டத்தட்ட முன்னூறு வகையான மனநல பிரச்சினைகள் மனிதனுக்கு வரலாம் என்கிறது அறிவியல்.... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை, வெவ்வேறு விதமான அணுகுமுறை....
“எனக்கு பத்து வருஷமா டயாபட்டிஸ்....”
“எனக்கு இதயத்துல அடைப்பு... சமீபத்துலதான் ஆஞ்சியோ பண்ணேன்...”
இப்டி உடல் நோய்களை சர்வசாதாரணமாக அலசி ஆராய்ந்து, பெருமையாக பேசும் நாம், ஒரு சின்ன மனநல பிரச்சினையை கூட நமக்கு இருப்பதாக வெளியில் சொல்ல தயங்குவது காலத்தின் கொடுமை.....
நான் மேற்சொன்ன முன்னூறு வகையான மனநல நோய்களையும் அறிவியல் இரண்டு பெரிய பிரிவுகளா பிரிச்சிருக்கு....
·        சைக்கோசிஸ் (psychosis)
·        நியூரோசிஸ் (neurosis)
அதாவது தனக்கு ஏதோ மனநலம் சார்ந்த பிரச்சினை இருக்குன்னு ஒருத்தன் நம்பி, சிகிச்சைக்கும் தன்னை உட்படுத்திக்கொள்ள முனையும் நபர்களை நியூரோசிஸ் வகைக்குள் நாம இணைக்கலாம்....
ஆனால், தனக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை ஏற்க மறுப்பார்கள் சிலர், சிகிச்சை எடுத்துக்கொள்ள சொன்னால் கூட “நானா பைத்தியம்?... நீதான் பைத்தியம்” என்று நம் மீதே வெறுப்பை உமிழ்பவர்கள் சைக்கோசிஸ் வகைக்குள் அடங்குவார்கள்... இதைத்தவிர மனநோய்கள் பட்டியலை மாபெரும் பத்து பிரிவுகளாக ICD 10 classificationஆக மனநல அறிவியல் பகுத்திருப்பதை இப்போ நாம் பேசி குழப்பிக்க வேண்டாம்...
பொதுவா ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்கான மனநல பிரச்சினைகளில் “மன சோர்வு” நோய்(depression) தான் பிரதானம் ..... நம் மனம் ஒரு விசித்திரமான அமைப்பு... எவ்வளவு பெரிய இழப்பானாலும், தோல்வியானாலும், பிரிவானாலும் ஆறு வார காலத்திற்குள்ளிருந்து அதிலிருந்து நாம் வெளிவந்திடுவோம்... அதுதான் இயல்பு... ஆறு வார காலத்தை தாண்டி அப்படி ஒரு இழப்பு நம்மை தொடர்ந்து பாதித்தால், அது மனநோயின் அறிகுறி என்பதை நாம் உணரவேண்டும்....
நம் பருவ வயது முதல் ஒருபால் ஈர்ப்பில் பெரும்பாலானோர் ஈடுபட்டிருப்போம்... பல வருடங்களாக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் நாம், அதை ஒரு தவறான விஷயமாகவே கருதியிருப்போம்.... “அது தப்பு, ஆனாலும் செய்றேன்” என்ற மனநிலையே நம்மை ஆட்கொண்டிருக்கும்... “நாம் தவறு செய்றோம்”னு நம்பிக்கை நம்ம மனசில் ஆழ பதிஞ்சுடும்.... அப்படி குழப்பம், பயம், குற்றமனப்பான்மை எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை, நம் மனதை “மன சோர்வை” நோக்கி நகர்த்திவிடுகிறது.... விளைவு இந்த “மன சோர்வு” நோயின் ஆதிக்கம் நம்மை ஆட்படுத்திவிட தொடங்குகிறது... “எனக்கு மனநல பாதிப்பா?”னு பலரால் இதை ஏத்துக்க கஷ்டமா இருக்கும்.... பெரும்பாலானவர்களுக்கு அவங்க ego defence இதை ஒப்புக்க மறுக்கும்....மன சோர்வு நோயோட அறிகுறிகள் பற்றியல்லாம் பேசி நான் மேலும் குழப்ப விரும்பல.... ஒரே கேள்வி தான் இப்போ உங்களுக்கு.... “உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருக்கா?, நீங்க தற்கொலை முயற்சில ஈடுபட்டவங்களா?” அப்படின்னா, நீங்க நான் கீழ் சொல்லப்போகும் சிகிச்சைகளை எடுத்தே ஆகணும்.... உங்களின் அத்தகைய தற்கொலை எண்ணத்திற்கும், மன சோர்வுக்கும் எந்த காரணமாக வேண்டுமானாலும் இருக்கலாம்... அதாவது, நீண்டநாள் ஓரின சேர்க்கையின் குற்ற மனப்பான்மை, சமூகத்தை கண்டு பயம், தாழ்வு மனப்பான்மை, தொடர் புறக்கணிப்பு, காதல் தோல்வி என்று இன்னும் எத்தனையோ காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்... இனி காரணத்தை அலசுவதைவிட, அதிலிருந்து மீள்வதை பற்றி பார்க்கலாம்...
தற்கொலை எண்ணங்கள் என்பதே கூட அந்த மனசோர்வின் அறிகுறிதான்.... தற்கொலை எண்ணங்கள் உள்ள எல்லோரும் இத்தகைய மனசோர்வின் எல்லைக்குள் வந்துவிட்டீர்கள் என்பதை உணரவேண்டும்.... இத்தகைய நபர்களுக்கு சிகிச்சை அளித்தே ஆகவேண்டும்... நான் பல காலமாக “கலந்தாய்வு” கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்வது உங்களுக்கு நினைவிருக்கலாம்.... ஒரு விஷயத்தை நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும், கலந்தாய்வு என்பது மன நோய்க்கான சிகிச்சை கிடையாது....
உங்களுக்கு இருக்கும் பிரச்சினை என்ன? அதை எந்த சிகிச்சை முறையில் தீர்க்கலாம்? என்பதை கலந்து பேசி தீர்மானிப்பதுதான் கலந்தாய்வு... இது சிகிச்சைக்கான முதல் கட்டம்தான்...
சிகிச்சையை பொருத்தவரை மூன்று வகையாக பிரிக்கலாம்....
சைக்கோ தெரப்பி (psycho therapy) – உளவியல் சிகிச்சை... நிபுணத்துவம் பெற்ற நபர்கள் மூலம் கொடுக்கப்படும் உளவியல் கலந்தாய்வு....
மருந்து மூலம் சிகிச்சை – மருந்து மாத்திரைகள் மூலம் மூளையின் வேதியல் மாற்றங்களை உண்டாக்குவது...
ECT (electro convulsion therapy) – நாம் ஷாக் சிகிச்சை என்று கேள்விப்பட்டிருப்போம்.... இது ரொம்ப சில நோய்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும், அதுவும் வலியின்றி கொடுக்கும் நடைமுறை இப்போதல்லாம் வந்துவிட்டது...
மருந்து மாத்திரைகள் மூலம் இரண்டு வாரங்களுக்குள் பெரும்பாலான மன சோர்வினை போக்கிவிடலாம்... ஈ.ஸி.டி மூலம் ஒரே நாளில் தற்கொலை எண்ணங்களை தவிடு பொடி ஆக்கிடலாம்...
நம் மனதின் குழப்பங்களை, மனதின் சோர்வை போக்க இத்தகைய சிகிச்சை தான் முறையான ஒன்று....
அதைவிடுத்து இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுப்பதாய் சொல்லி, “இங்க பாருங்க நண்பா, இதல்லாம் வெறும் பிரமை.... மனசுதான் காரணம்”னு சொல்லி மனதை தேற்ற முனைவது, அவங்களை மேலும் குழப்பத்தான் செய்யும்.... மன சோர்வு என்பது ஒரு நோய், அதற்கு தீர்வு என்பது சிகிச்சை மட்டுமே.... மாறாக, நமது அறிவுரைகளும், ஆறுதல்களும் இல்லை... முறையான உளவியல்  கலந்தாய்வு என்பது பல கட்டங்களாக நடைபெறும்.... ஒருபால் ஈர்ப்பு நபர்களை அமரவைத்து, “இங்க பாருங்க சார்... பாலீர்ப்பு என்பது சாதாரண ஒண்ணுதான்.... அறிவியல்படி ஒருபால் ஈர்ப்பு ரொம்ப இயல்பான ஒன்று....” என்று அறிவியல்படியும், ஆராய்ச்சிகள் படியும் சொல்லப்பட்ட உண்மைகளை, பாதிக்கப்பட்டவரின் மனதிற்குள் ஆழப்புதையுமாறு சொல்ல வேண்டும்... இதை அதற்குரிய நிபுணர்கள் செய்வதுதான் முறையே தவிர, எல்லோரும் செய்திட முடியாது....
நீங்க ரொம்ப பெருசா நினைக்கும் அந்த பல விஷயங்கள், மருத்துவ துறையை பொருத்தவரை ரொம்ப இயல்பான விஷயம்... நீங்கள் சாகத்துணியும் அளவிற்கான ஒரு எண்ணத்தை, இந்த அறிவியல் ஒரே வாரத்தில் உங்களுக்கு ரொம்ப சாதாரணமானதுன்னு புரிய வச்சிடும்....
ஒரு விஷயத்தை நான் மறுபடியும் ஆழமா சொல்ல விரும்புறேன்... நான் மேற்சொன்ன சிகிச்சைகள் மன சோர்வுக்கானது மட்டுமே.... உங்களின் ஒருபால் ஈர்ப்புக்கு கிடையாது.... மனநோய்க்குத்தான் சிகிச்சை உண்டு, பாலீர்ப்புக்கு கிடையாது.... அது இயற்கையே... அதனால், ஒருபால் ஈர்ப்புக்கான சிகிச்சையாக இதனை நீங்க நினைத்திட வேண்டாம்...
அதனால், தற்கொலை எண்ணங்கள் இருப்பவர்கள், கொஞ்சமும் தயங்காமல் மனநல ஆலோசனைகளை பெறுவது அவசியம்.... மனநலம் மீட்போம், உயிர்நலம் காப்போம்...

Tuesday, 15 October 2013

"அவனா நீ....!!!" - சிறுகதை...


மேற்கே சூரியன் உதிக்கும்போது அந்த ஊருக்குள் அரும்பும் ஒரு செய்தி, அந்தி பொழுதாகி சூரியன் கிழக்கில் மறையும்போது, காட்டுத்தீ போல மூலை முடுக்குகள் எங்கும் பேசப்படும் அளவிற்கான அதிமுக்கிய ஹாட் டாப்பிக்காக மாறிவிடுவது வழக்கமான ஒன்று... “அண்டப்புளுகூர்” ஊரில் வசிக்கும் முன்னூறு தலைக்கட்டிற்கும் ‘அவனோட இவனுக்கு தொடர்பாமே?’, ‘அவளோட இவளை ஆத்தங்கரை பக்கம் பாத்தாகலாமே?’ போன்ற அதிமுக்கியமான தேசநலம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றி பேசுவதுதான் பொழுதுபோக்கே.... இப்படி செவிக்கு “கிசுகிசு” கிடைக்காத நேரங்களில் தான், வயிற்றுக்கே உணவு எடுக்கும் அளவிற்கு வள்ளுவனின் முரட்டு பக்தர்கள் இவர்கள்....
அப்படி இன்றைக்கு குழாயடியில் குடத்தில் நீர் நிரப்ப மறந்தவர்களாகவும், ரேஷன் கடையில் சக்கரை வாங்க மறந்தவர்களாகவும் மக்கள் பேசிக்கொண்டிருக்கும் பேச்சு “தங்கராசு மவன் பாண்டிக்கும், சரோஜா மகள் செல்விக்கும் என்னமோ கசமுசாவாம்....”.
“என்னக்கா சொல்றீய?... ஆம்பளை எப்புடி பொம்பளையோட.... ச்சி ச்சி... இருக்காது”
“நெசமாத்தான் சொல்றேன்... வெள்ளக்காரன் கணக்கா இந்த கூத்தல்லாம் இப்ப நம்ம ஊர்லயும் நடக்க ஆரமிச்சுடுச்சு.... நம்ம கலாச்சாரமல்லாம் சவுக்காரம் போட்டு வெளுக்குற அளவுக்கு அழுக்காகிப்போச்சு”...
இதுதாங்க இப்போ இன்னைய அளவுல நம்ம அண்டப்புளுகூரின் மொத்த பரப்பளவிலும் பரபரப்பிற்கு காரணமே... பாண்டியையும் செல்வியையும் அரசல் புரசலாக ஆங்காங்கே பார்த்தபோது கிசுகிசுக்கப்பட்ட விஷயம், இன்னைக்கு ஆலமரத்து நிழலுல, வெற்றிலையை குதப்பிக்கொண்டே பேசப்படும் அளவிற்கு வெளிப்படையான பேச்சாகிவிட்டது... ஆலம்பழத்தை வயிறு முட்ட தின்ன காக்கைகள், சாவுகாசமாக மரத்தடியில் பேசிக்கொண்டிருந்தவர்களின் உடல் மேலே எச்சத்தை கழிந்ததை கூட கவனிக்க மறந்து புரணியில் ஐக்கியமாகி கிடந்தார்கள் மக்கள்... புல் வயல்களில் புதராய் மண்டிக்கிடந்த நெற் செடிகளை களையெடுக்க குனிந்தவர்கள், தன்னை மறந்து புற்களை பறித்துவிடும் அளவிற்கு அந்த பேச்சின் சுவாரசியம் அதிகமாக ஆண்களை கவர்ந்திருந்தது...
அந்தி சாய்ந்த நேரம் ஆகிவிட்டது, ஊரே அது பற்றி பேசி ஓய்ந்து போய், மூன் தொலைக்காட்சியில் “திருமதி செல்வி” நாடகத்தில் செல்வியின் மனைவியின் கஷ்டங்களை ரசிக்க தொடங்கிவிட்டது.... ஒரே ஒரு வீட்டில் மட்டும்தான் ‘ஹை டெசிபல்’ பேச்சு சத்தம் வாசல் வரை எதிரொலித்துகொண்டு இருந்தது...
பாண்டியின் வீட்டு வாசலில் அக்கம் பக்கத்து பெருசுகள் சிலர், அடுத்தநாள் பொழுதை கழிக்க அவல் போல மெல்லுவதற்காக, வீட்டிற்குள் பேசப்படும் வார்த்தைகளை ஒவ்வொன்றாக சேகரித்துக்கொண்டு, செய்திகளுக்கு அவரவரும் புது உருவம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர்... இயற்கையாய் வந்த தும்மலை கூட அடக்கிக்கொண்டு, ஒட்டுக்கேட்பதில் தாங்கள் உளவுத்துறையை மிஞ்சியவர்கள் என்பதை நொடிக்கு நொடி நிரூபித்துக்கொண்டு நின்றார்கள்...
கதவின் விளிம்பின் அருகே அமர்ந்திருக்கும் பாண்டியின் அத்தை இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.... மாமா, சித்தப்பா, பெரியம்மா சகிதம் பாண்டியின் அப்பாக்கள் இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு தலையில் கைவைத்து அமர்ந்திருந்தனர்...
“இப்டியே எவ்வளவு நேரம் உக்காந்திருக்கது?.... இதல்லாம் சரியா வராது... உடனே நம்ம பாண்டி பயலுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிடலாம்” பெரியப்பாதான் முதலில் மௌனத்தை கலைத்து பேச்சை தொடங்கினார்....
“இருங்கண்ணே... கொஞ்சம் பொறுமையா இருங்க... இப்ப என்ன ஆகிப்போச்சு?... ஆம்புளைக பொம்பளைகள கல்யாணம் பண்ணிக்கறதல்லாம் இப்ப ஊர் ஒலகத்துல சர்வ சாதாரணம்...இன்னும் நாம பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக்கிட்டு இருந்தா சரிபட்டு வராது...” சித்தப்பாவின் இந்த முற்போக்கு பேச்சை வீட்டில் ஒருவரும் ரசிக்கவில்லை... கிழக்கே தலைவைத்து படுத்திருந்த நாய் கூட, எழுந்து ஒருமுறை சுற்றிக்கொண்டு மீண்டும் மேற்கே தலைவைத்து படுத்தது...
“ஏய் என்ன பேசுற?... வெள்ளக்காரன் செய்றதயல்லாம் நாம செய்ய முடியாது.... நமக்குன்னு ஒரு கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இருக்கு... ஆம்பளைனா ஆம்பளையத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்... அப்பத்தான் அவனுக்கு ஆம்பளத்தன்மை இருக்குறதா அர்த்தம்... இது வெறும் வயசுக்கோளாறு... சின்ன பய அவன், ஒரு நல்ல பயலா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா சரி ஆகிடுவான்”
அதுவரை அழுதுகொண்டு மட்டும் அமர்ந்திருந்த அத்தை, சேலையின் முனையில் கண்களை துடைத்துக்கொண்டு பேசுவதற்கு ஆயத்தமாவதை போல எச்சிலை விழுங்கியபடியே, “நல்ல பயலா பாக்குறீயளா?... எனக்கு மவன் பொறக்கயிலேயே, அவன் பாண்டிக்குத்தான்’னு கோயில்ல வச்சு சொன்னத மறந்துட்டியலா?... சொந்தத்த விட்டுக்கொடுக்க முடியாது, என் மவன் சதீஷுக்குத்தான் பாண்டிய கல்யாணம் பண்ணி வைக்கணும்” அத்தை கர்ச்சித்தார்....
“என்னம்மா நீயி?... இப்ப இருக்குற பிரச்சினைய முதல்ல முடிக்கட்டும்... அப்புறம் உன் பிரச்சினைக்கு வரலாம்....”
கொதித்தெழுந்த அத்தை, “எல்லாம் ஒரு பிரச்சினை தான்... இவ்வளவு பேச்சுக்கு பிறகும் பாண்டிய மருமவனா நான் ஏத்துக்கறதே, சொந்தம் விட்டுப்போக கூடாதுன்னுதான்... எதாவது குழப்புனீயன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன் ஆமா...” சொல்லிவிட்டு சேலையை உதறி தன் மார்மேல் போட்டவாறு, மற்றவர்களின் பதிலைகூட எதிர்பார்க்காதவலாய் வீட்டை விட்டு வெளியே நடந்தாள்.... அத்தை அங்கிருந்து சென்ற சில நிமிடங்கள், புயலுக்கு பின் அமைதியை போல நிசப்தமாக வீடு காட்சி அளித்தது....
“என்ன தங்கராசு, உன் தங்கச்சி இப்புடி சொல்லிட்டு போறா?”
“அவ சொல்றதும் நியாயம்தானே அத்தான்!... பாண்டி அப்பா வெளிநாட்டுக்கு சம்பாதிக்க போனப்ப ஒத்தையா நான் பட்ட கஷ்டத்துல கூட நின்னவ அவ... எங்களுக்கு ஒண்ணுன்னா மொதல்ல நிக்குறவ அவதானே!... அவ பக்கத்துல நியாயம் இருக்குத்தான்....” தங்கராசு கண்களை துடைத்தவாறே சொன்னார்....
“சரிண்ணே... நம்ம பாண்டிக்கு இஷ்டமில்லாத கல்யாணத்தை பண்ணி வைக்கிறது நம்ம தலைல நாமலே மண்ணை வாறி போட்டுக்குற மாதிரிதானே?” முற்போக்கு சித்தப்பா தயங்கியபடியே கூறினார்....
“அவனுக்கு சதீஷை பிடிக்கலைன்னா வேற பையனை பாக்கலாம்.... அந்த கம்னாட்டிக்கு பையனை கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கலைனா நாம என்னத்த பண்றது?... நம்ம பூதக்கோயில்ல மந்திரிக்க சொல்லிருக்கேன், எல்லாம் ரெண்டு நாள்ல சரி ஆகிடும்... அப்புடியும் சரி ஆகலைனா ஒரு பைத்தியக்கார டாக்டர் கிட்ட வைத்தியம் பண்ண வேண்டியதுதான்” பெரியப்பா சொன்னார்... எப்போதும் எல்லா விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பவர் அவர்தான்... பெரும்பாலும் அவர் பேச்சை யாரும் தட்டுவதில்லை... எல்லோரும் அமைதியாய் அமர்ந்திருக்க, அருகில் மாட்டப்பட்டிருந்த “புலாசுலாக்கி பைனான்ஸ்” காலண்டரை எடுத்து, நாட்களை புரட்டினார்....
“வர்ற புரட்டாசி மாசம் ஞாயித்து கிழமை... அஷ்டமி... நல்ல நாள்... அன்னிக்கே கல்யாணத்தை காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிடலாம்... கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆகிடும்” கடிகாரத்தை பார்த்தபடியே மனதிற்குள் ‘சொதப்பல் சிங்கர் போட்டிருப்பாணுக’ என்று நினைத்தபடியே பெரியப்பாவும் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டார்....
அறைக்குள் தனிமையை மட்டும் துணையாய் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த பாண்டியின் காதில் மொத்த விவாதமும் பிசிறு தட்டாமல் விழுந்தது.... பாண்டி இயலாமையில் எல்லையில் இருக்கிறான்.... மருத்துவரால் கைவிடப்பட்ட புற்றுநோய் நோயாளியை போல, உள்ளம் உணர்ச்சியற்று கிடந்தது... செவிவழியாக நஞ்சை உள்வாங்கிக்கொண்டிருந்த பாண்டியின் கண்களில், கார்ப்பரேஷன் குழாய் போல தண்ணீர் ஊற்றியது... காலை முதல் காதல் பரிசாக வாங்கிய அடிகளின் காயங்களில் அந்த உப்புநீர் பட்டபோதெல்லாம், மனதினை போலவே உடலும் வலியை உணர்ந்தது.... இலவம்பஞ்சு தலையணையை கண்ணீரால் ஈரப்பதம் நிரப்ப செய்தான்.... ஒருவாராக கண்ணீர் வற்றிய கணப்பொழுதில், படுக்கைக்கு கீழே வைத்திருந்த ஒரு கத்தியை கையில் எடுத்தான்....
எச்சிலை விழுங்கிக்கொண்டு, கண்களை இறுக்க மூடிக்கொண்டு கைகளின் மணிக்கட்டை நோக்கி பாய்ச்ச.......
“டேய் பாண்டி..... எழுந்திருடா.... டேய்.... லேட் ஆச்சு....” திடுக்கிட்டு விழித்தான் பாண்டி... அப்பாவின் குரல்தான்....
காற்றாடி சுற்றிக்கொண்டிருந்தும் உடல் முழுக்க வியர்வை, கையில் காயமில்லை.... முகத்திலும் கூட காயமோ, கண்ணீரின் பிம்பமோ இல்லை... வீட்டின் வேறொரு அறையில் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது....
“யாருப்பா அது?” எச்சிலை விழுங்கியபடியே கேட்டான்...
“என்னடா ஆச்சு உனக்கு?... உன் அம்மாதான்...”
“அம்மாவா? எனக்கா?” தனக்குள் கேட்டுக்கொண்டு குழப்பம் விலகாதவனாக எழுந்து ஹாலுக்கு சென்று இருக்கையில் அமர்ந்தான்... தொலைக்காட்சி பெட்டி “ஆதித்யாவில்” சிரித்துக்கொண்டு இருந்தது.... கண்ணாடி அலமாரிக்குள் அலங்கார பொருட்களின் அணிவகுப்பின் தொடர்ச்சியாக, அப்பா அம்மாவின் திருமண புகைப்படம்... அம்மாவின் முகத்தில் பூரிப்பும், அம்மாவின் முகத்தில் வெட்கமும் தேவைக்கு அதிகமாய் ஜோடிக்கப்பட்டு இருக்கிறது....
அலைபேசி குறுந்தகவலுக்கான “பீப்” ஒலித்தது.... திறந்து பார்த்தான், “குட் மார்னிங் புருஷா...” செல்வியிடமிருந்து காதல் மொழியில் காலை வணக்கம்....
“ச்ச... வெறும் கனவா?... ஐயோ சாமி!” சுவற்றில் மாட்டப்பட்டு, சிரித்துக்கொண்டிருந்த முருகனை நோக்கி வணங்கிக்கொண்டான்.... அருகில் வள்ளி தெய்வானையோடுதான் நிற்கிறார்... இது இயல்பான உலகம்தான்...
தொலைக்காட்சியில் வடிவேலு நிர்வாண கோலத்தில் அமர்ந்திருக்க, புகைப்படக்காரன் ஒருவன் ஒருவித காமப்பார்வையில் பார்க்க.... “அவனா நீ?” வடிவேலு சொல்லும் காட்சி.... எரிச்சல் மிகுந்து, தொலைகாட்சியை அணைத்தான்... நேற்றுவரை பாண்டி, ரசித்து சிரித்த காட்சி... ஏனோ இன்றைக்கு சிரிப்புக்கு பதில், எரிச்சல் வந்தது... “அவனவனுக்கும் வந்தாத்தான் தெரியும்!” மனதிற்குள் நினைத்துக்கொண்டான்....
கையில் குவளையோடு பாண்டியின் அருகில் வந்த அப்பா, “தண்ணிய குடிடா... முகமல்லாம் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு.... குடிச்சுட்டு வேகமா கிளம்பு”
“எங்கப்பா?”
“மறந்துட்டியா?... உங்க அத்தை வீட்டுக்குத்தான்... நேத்தே சொன்னேனே?”
“ஹ்ம்ம்... ஆமா... மறந்துட்டேன்..... என்ன ஊர் சொன்னிங்க?” தண்ணீரை குடித்து தன் பதட்டத்தை தணித்துக்கொண்டான் ....
நாளிதழை புரட்டியபடியே அப்பா சொன்னார் “அண்டப்புளுகூர்...” (முற்றும்)