(ஏற்கனவே ஓரின சேர்க்கைக்கு
வெளிநாடுகளில் கொடுக்கப்படும் சிகிச்சைகளாக சொல்லப்படும் விஷயங்கள் பற்றி முன்பு
பார்த்தோம், இப்போ இந்தியாவில் நடக்கின்ற கூத்துகளை பார்க்கலாம்.... வெளிநாட்டு
சிகிச்சை பற்றிய கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்)
மனநல மருத்துவம் இன்று எவ்வளவோ முன்னேற்ற பாதையில்
சென்றுகொண்டிருக்கிறது.... ஆனாலும், சில நேரங்களில் அறிவியலை அடிபணிய
வைத்துவிடுகிறது புரையோடிய மூட நம்பிக்கைகள்.... ஆம், ஒருபால் ஈர்ப்புக்கான
சிகிச்சைகளை கொடுப்பதாக கூறி கல்லா கட்டும் மனநல மருத்துவர்கள் சிலர்
இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, பதட்டம்தான் நமக்கு வருது....
எல்லா மருத்துவர்களையும் அப்படி நான்
சொல்லவில்லை... இன்னும் சொல்லனும்னா, டாக்டர் நாராயண ரெட்டி அவர்களின் “உயிர்”
படித்த பிறகுதான், ஒருபால் ஈர்ப்பும் இயற்கையானதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன்... பொதுத்தளத்தில்
தமிழ்நாட்டில் ஒருபால் ஈர்ப்பை பற்றி பேசிய முதல் மருத்துவர் அவராகத்தான்
இருக்கணும்... அதே போல மருத்துவர் ஷாலினி போன்றோரும் அவ்வப்போது பாலீர்ப்பை பற்றி
பேசுவதை பார்க்கிறேன்... அதனால், மிகவும் தெளிவாக, முழுமையாக பாலீர்ப்பை பற்றி
தெரிந்து, நமக்கு எடுத்துசொல்லிக்கொண்டிருக்கும் மருத்துவர்களை நான் மதிக்கிறேன்,
வணங்குகிறேன்....
அதே நேரத்தில் பல்கி
பெருத்துக்கொண்டிருக்கும் சில களைசெடிகள் பற்றியும் இங்க நான் சொல்லியாகனும்....
ஒருபால் ஈர்ப்பை பற்றி மக்கள்
தெரிஞ்சுக்க, அதை விளக்க வேண்டிய இடத்தில் இருக்கும் மனநல மருத்துவர்களின் தவறான
வழிகாட்டலை சொல்லியாகனும்...
பல நண்பர்களிடமிருந்தும், அவர்களின்
பாலீர்ப்பை மனநல மருத்துவர் அணுகிய விதம் பற்றி கேட்டிருக்கிறேன்... தங்களின்
ஒருபால் ஈர்ப்பை பற்றி மருத்துவர்களிடம் சொன்னதும், பெரும்பாலும் “முகம்
சுளிப்புகள், ஏளன பார்வைகள், கடும் சொற்கள்”தான் அந்த மருத்துவர்களிடமிருந்து
பதிலாக வந்ததாம்... மனச்சிதைவு நோய்க்கு உண்டான மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு
அனுப்பி இருக்கிறார்கள் பலர்... விளைவு, இன்னும் குழப்பம் அதிகமாகி மன சோர்வு
நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்....
இப்படி சிலர் புரியாமல் சிகிச்சை
கொடுப்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கமோ இதனை புரிந்தே மக்களை தவறான திசையில்
பயணிக்க வைக்கும் மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் பற்றி பெங்களூருவை
சேர்ந்த அரவிந்த் நரேன் மற்றும் வினய் சந்திரன் என்ற இரண்டு களப்பணியாளர்கள் ஒரு கள ஆய்வை மேற்கொண்டனர்..... அதில் கண்ட
உண்மை அதிர்ச்சிக்கு உள்ளானவை....
சில மருத்துவர்கள் தெளிவான மனநிலையில்
இதை அணுகுகிறார்கள்.... சிலர் இதற்கு சிகிச்சை கொடுக்கிறார்கள்.... அது என்ன
சிகிச்சை?... இல்லாத நோய்க்கு, சிகிச்சை எப்படி கொடுக்க முடியும்?னு நீங்க கேட்பது
புரியுது... ஆனால், கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள் இந்த இருவரும்....
சிகிச்சைக்காக வரும் இளைஞரிடம்,
ஒருபால் ஈர்ப்பை மனநோய் என்றே மனதில் முதலில் பதிய வைக்கிறார்கள்... அதற்கு
சிகிச்சை அளிக்க, அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறை “ஷாக் ட்ரீட்மெண்ட்” (Electro Convulsive
Therapy)….
சிகிச்சைக்கு வரும் இளைஞனின் கையில்
ஷாக் வைக்கப்படும் எலக்ட்ரோட் பொருத்தப்படுகிறது... ஒரு கணினியின் திரையில்
முதலில் நிர்வாணமான ஆணின் புகைப்படம் திரையிடப்படுகிறது... அதை பார்க்கும்போது
அந்த இளைஞன் கிளர்ச்சி ஆகிறான், அந்த கிளர்ச்சியாகும் நேரத்தில் மின் அதிர்வு
கொடுக்கப்படுகிறகு.... அதனை தொடர்ந்து ஒரு பெண்ணின் நிர்வாண படம் திரையிடப்பட,
மின் அதிர்வு நிறுத்தப்படுகிறது.... அதாவது, ஆணை கண்டு கிளர்ச்சியாகும் நேரத்தில்
மின் அதிர்வு கொடுக்கப்பட்டு, பெண்ணின் படம் வரும்போது மின் அதிர்வு நிறுத்தப்படுகிறது....
இது சில முறை தொடர்கிறது, கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு வந்த பிறகு இளைஞன்
விடுவிக்கப்படுகிறான்.... ஆண்களின் மீது ஈர்ப்பு வருவதை இதன்மூலம் நிறுத்தமுடியும்
என்று நம்மை நம்பவைக்கிறார்கள்....
இந்த வன்கொடுமை மாதக்கணக்கில்
தொடர்கிறது, கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் இந்த கொடுமையான சிகிச்சைக்கு
உள்ளாக்கப்பட்ட இளைஞன் ஒருவன், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டதையும்
இந்த ஆய்வில் பதிவு செய்கிறார்கள்....
இத்தகைய சிகிச்சைகள் மாதக்கணக்கில்
தொடர்கிறது, சிலர் இந்த சிகிச்சைக்கு பயந்து தாங்கள் மாறிவிட்டதாக சொல்கிறார்கள்...
அப்படி சொல்பவர்களை தங்கள் மூலம் குணமடைந்தவர்கள் பட்டியலில் இணைத்து, விளம்பரம்
கொடுத்து பணம் பார்க்கிறார்கள் அந்த மருத்துவர்கள்....
சமீபத்தில் கூட கேரளத்தில் ஒரு
லெஸ்பியன் பெண்ணுக்கு இத்தகைய கொடுமையான சிகிச்சை கொடுக்கப்பட, அவரை அந்த கொடுமையிலிருந்து
மீட்டனர் சில சமூக அமைப்பினர்....
கடந்த வருடம் இந்துஸ்தான் டைம்ஸ்
இதழில் வெளியான ஒரு கட்டுரைக்கு பேட்டியளித்த பிரபல மனநல மருத்துவர் புல்கிட்
ஷர்மா அவர்கள் சொல்வதை பார்த்தால், இந்த நிலைமைக்கு ஒருவகையில் பெற்றோரும் காரணமோ?
என்று எண்ணத்தோன்றுகிறது....
“என் மகனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்
கொடுங்க, அல்லது மூளையை வெட்டி எடுத்திடுங்க... அவனை எப்படியாச்சும் ஸ்ட்ரைட்டா
மட்டும் மாத்திட்டா போதும்” என்று சொன்ன ஒரு தந்தை, மெத்தப்படித்த ஒரு
ஆடிட்டர்....
பெரும்பாலும் உயர்தர வர்க்கத்தினர்
தான் இப்படிப்பட்ட சிகிச்சைக்கு மனநல மருத்துவர்களை தள்ளுவதாகவே நமக்கு எண்ண
தோன்றுகிறது....
மேலும் மருத்துவர் புல்கிட் ஷர்மா
அவர்களுக்கு, ஒரு வருடத்தில் சராசரியாக இப்படி ஐம்பது பெற்றோர்களிடமிருந்து
நிர்பந்தம் வருவதாக கூறுகிறார்...
“ஒருபால் ஈர்ப்பு நோய் கிடையாது...
இதில் தவறும் கிடையாது.... சிகிச்சை என்ற பெயரில் பிள்ளையை கஷ்டப்படுத்த வேணாம்’
என்று நான் சொல்லி அவர்களை அனுப்பினாலும், பலர் வேறொரு மருத்துவரை நோக்கித்தான்
நகர்கிறார்கள்” என்று மேலும் சொல்கிறார் ஷர்மா....
நாம் மருத்துவர்களை குறை சொல்கிறோம்,
மருத்துவர்கள் பெற்றோர்களை நோக்கி கை நீட்டுகிறார்கள், பெற்றோர்களின் சமூகத்தின்
மீதான பயமும் நாம் அறிந்ததே.... இதற்கு குற்றவாளியாக நாம் யாரையும் கைகாட்டிட
வேண்டாம்... குறைந்தபட்சம், ஒருபால் ஈர்ப்பை மனநோய் இல்லை என்ற ஒரு உண்மையை
மட்டும் நாம் எல்லோரும் புரிந்துகொண்டால் போதும், குறைந்தபட்சம் சில மின்சார
சிகிச்சைகளில் இருந்து நம் பிள்ளைகளை காப்பாற்றவாவது முடியும்...
இதைத்தாண்டி இப்போ சமீப காலங்களில்
“ஒரு மாதத்தில் குணமாக்குகிறோம்”னு வாலிப வயோதிக அன்பர்களை கூவி அழைக்கும் போலி
வைத்தியர்களிடம் இருந்தும் தப்பித்துக்கொள்ள இந்த புரிதல் நம் எல்லோருக்கும் அவசியமாக
படுகிறது.... புரிந்துகொண்டு வாழ்வது மட்டுமே இதற்குரிய ஒரே சிகிச்சை என்பதை
உணருங்கள்... உணர்த்துங்கள்....


