Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 20 January 2014

ஸ்டோன்வால் கிளர்ச்சி – ஒருபால் ஈர்ப்பின் முதல் புரட்சி!

ஸ்டோன்வால் கிளர்ச்சி – ஒருபால் ஈர்ப்பின் முதல் புரட்சி!




      “டிப்பிங் பாய்ன்ட்” (tipping point) என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்வாங்க... மிகப்பெரிய பிரளயம் ஒன்னு வெடிக்குதுன்னா, அதற்கான முதல் புள்ளி ரொம்ப சாதாரணமான ஒரு விஷயமாக இருக்கும்... அதாவது, ஒரு மிகப்பெரிய காட்டுத்தீ பரவ, ஒரு சின்ன மரத்தின் உரசலால் விளைந்த தீப்பொறிதான் “டிப்பிங் பாய்ன்ட்”...
இன்றைக்கு ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவு மனநிலையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் நாம் காணமுடிகிறது என்றால், அதற்கான காரணம் அங்கு நிகழ்ந்த போராட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும்தான்... ஆனால், அத்தகைய புரட்சிகர போராட்டங்களுக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் முதல் புள்ளியாக திகழ்ந்த ஒரு தீப்பொறியை பற்றித்தான் இப்போ சொல்லப்போறேன்.... உலக ஒருபால் ஈர்ப்பு உரிமைகளுக்கான போராட்டங்கள் என்பதற்கான “டிப்பிங் பாய்ன்ட்” தான் நான் இப்போது விவரிக்க இருக்கின்ற நிகழ்வு...
அமெரிக்காவில் ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒருபால் ஈர்ப்பினரை ஓரளவு அங்கீகரித்து அரவணைத்தது சில மதுபான அரங்குகளும், உணவு விடுதிகளும் மட்டும்தான்... இன்றைக்கு போல சகஜமான பாலீர்ப்பு அங்கீகாரம் இல்லாத அந்த காலகட்டத்தில், ஒருபால் ஈர்ப்பினர் தம்மை போன்ற நபர்களை சந்திக்க, மகிழ்ச்சியாக கொண்டாட அந்த இடங்கள்தான் அவர்களின் வடிகால்....
அப்படிப்பட்ட ஒரு இடமான “ஸ்டோன்வால்” என்னும் மதுபான அரங்கில் அன்றைக்கும் வழக்கமான உற்சாக நடனங்களும், சந்தோஷ கேளிக்கைகளும் நிகழ்ந்துகொண்டிருந்தது.... நியூயார்க் அருகே உள்ள கிரீன்விச் என்னும் இடத்தில் அமைந்துள்ள அந்த “ஸ்டோன்வால்” கேளிக்கை விடுதிக்கு வழக்கமான தன் சோதனையை நடத்த வந்தது காவல்துறை....
“ஷூ’ன்னா பாலிஸ் போடுறதும், பார்’ன்னா போலிஸ் வர்றதும் சகஜம்தான்” அங்கே... அடிக்கடி காவல்துறையின் அத்துமீறல்கள் அங்கே நடப்பதும், சில தடியடிகள் நடப்பதும் வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும், அன்றைக்கு அந்த இடம் கலவர பூமியாக மாறுமென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்...
அந்த நாள்வரை காவல்துறையின் கை மட்டுமே அங்கே ஓங்கியிருக்கும்... ஓரினசேர்க்கையை மனநோயாக கருதிய அந்த காலகட்டத்தில், குற்றவாளியை போல ஒருபால் ஈர்ப்பினர் தலைகுனிந்து நிற்பார்கள்... அடித்தால் வாங்கிக்க வேண்டும், தடுக்க கை ஓங்கினால் கூட இருக்கும் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்படுவார்கள்...
அன்றைக்கும் தன் வழக்கமான அத்துமீறல்களை காவல்துறை பிரயோகித்தது... முதல்முறையாக அங்கே இருந்த ஒருபால் ஈர்ப்புள்ள நபர் ஒருவர், காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தார்... காவல்துறை அடிக்க கை ஓங்க, ஒட்டுமொத்த அரங்கில் இருந்த ஒருபால் ஈர்ப்பினரும் ஒன்றாக குரல் கொடுத்தனர்.... கோபம் அடைந்த காவல்துறை தடியடியை பிரயோகம் செய்தார்கள், விஷயம் அறிந்த அருகில் இருந்த கேளிக்கை விடுதிகளில் இருந்த அத்தனை ஒருபால் ஈர்ப்பினரும் ஒன்றாக குவிந்தனர்... “பார் சிறுத்ததில் படை பெருத்ததோ, படை பெருத்தலில் பார் சிறுத்ததோ” என்று கலிங்கத்து பரணி பாடிய செயம் கொண்டார் எதைவைத்து சொன்னாரோ என்னவோ, நிஜமாகவே “ஸ்டோன்வால்” பார் அந்த படையை தாங்கிடும் இடத்தை பெற்றிருக்கவில்லை... கிறிஸ்டோபர் தெருவே ஒருபால் ஈர்ப்பினரின் அணிவகுப்பில் திரண்டு நிற்க, எச்சியை விழுங்கிவிட்டு காவல்துறை சத்தமில்லாமல் திரும்பி சென்றனர்.... மறுநாள் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தை ஆக்கிரமித்த அந்த நிகழ்வுக்கு பெயர்தான் “ஸ்டோன்வால் கிளர்ச்சி” என்று இப்போதுவரை சொல்லப்படுகிறது....
அந்த ஸ்டோன்வால் கிளர்ச்சி என்பதை ஒருநாள் கூத்தாக நினைத்த அமெரிக்க அரசுக்கு, அதன்பிறகு ஒவ்வொரு நாளும் ஒருபால் ஈர்ப்பினர் தங்கள் உரிமைகளுக்கு போராடியதை கண்டு ஸ்தம்பித்து நின்றனர்.... போராடிய மக்கள் அனைவரும் இணைந்து அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள்.... அந்த அமைப்புக்கு பெயர் “கே விடுதலை முன்னணி" (Gay Liberation Front)....
அந்த அமைப்பினர்  விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கூட்டங்கள் என்று வெகுஜன மக்கள் மத்தியிலும் தங்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொண்டுசென்றார்கள்.... "ஒருபால் ஈர்ப்பு உரிமை", "ஒருபால் ஈர்ப்பு விடுதலை" என்ற இரண்டு கொள்கைகளையும் அடிப்படையாக கொண்டு போராட்ட களத்தில் தீவிரமாக தங்களை இணைத்துக்கொண்டார்கள்... இந்த போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் American Psychiatric Association அமைப்பு ஓரின சேர்க்கையை மனநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது...  ஏற்கனவே உருவாக்கிய சமூக விழிப்புணர்வோடு, இந்த அறிவியல் உண்மையும் போராட்ட களத்திற்கு உத்வேகத்தை கொடுத்தது....
ஸ்டோன்வால் கிளர்ச்சியின் முதலாம் ஆண்டு நிகழ்வின்போதுதான் முதன்முதலாக ஒருபால் ஈர்ப்பினர் ஒன்றாக இணைந்த மிகப்பெரிய விழிப்புணர்வு பேரணி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூ யார்க் நகரங்களில் நடைபெற்றது... அதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தை “பேரணி வாரம்” (Pride week) என கொண்டாடுகிறார்கள் ஒருபால் ஈர்ப்பினர்.... இந்தியா உட்பட அனைத்து நாட்டுகளின் ஒருபால் ஈர்ப்பினரும் தத்தமது உரிமைகளை வலியுறுத்தும்விதமாக கொண்டாடப்படும் அந்த பேரணி நிகழ்வுகளுக்கு அச்சாரமாக விளங்கிய “ஸ்டோன்வால்” கலவரத்தை பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.....
நமக்கான உரிமை போராட்டங்கள் இங்கே நடக்க தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், தீப்பொறி ஒன்று காட்டுத்தீயாக மாறிய இந்த வரலாற்றை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பியதால், வரலாற்றை கொஞ்சம் புரட்டினேன்...
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!....

Friday, 10 January 2014

“பச்சை சட்டை, கருப்பு பேன்ட்...” – சிறுகதை....


    பச்சை சட்டை, கருப்பு பேன்ட்...” – சிறுகதை....

   வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில், தன் படுக்கை அறையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தான் அசோக்... கதவை சாத்திய வேகத்தில் “படார்” என்று அதிர்ந்த சத்தத்தில் மீன் தொட்டிக்குள் நீந்திக்கொண்டிருந்த மீன்கள் ஒருசில வினாடிகள் நீந்த மறந்து நின்றன... அறைக்குள் ஏற்கனவே நிலவிய இதமான தட்ப வெப்பத்தை இன்னும் சிலிர்ப்பாக்கிய குளிரூட்டியோடு, ‘வீட்டின் எல்லா மூலைகளிலும் காற்றை கொண்டு சேர்க்கும்’ என்று விளம்பரத்தில் சொல்லப்பட்ட அந்த முன்னணி நிறுவனத்தின் காற்றாடியும் தீவிரமாக இயங்கியும் கூட, அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அருவியாய் அசோக்கின் காதோரம் வழிந்தது வியர்வைத்துளிகள்....
அறைக்குள் எதற்காகவோ தயாராக விரிக்கப்பட்டிருந்த படுக்கையின் மீது அமர்ந்தபடி, தன் பைக்குள்ளிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியே வைத்தான்... தூக்க மாத்திரைகள், வீரியமான விஷமருந்து நிரப்பப்பட்ட குடுவைகள், ஒரு குளிர்பான புட்டி... அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைக்கும்போதும், அவன் கைகளின் நடுக்கமும், தொண்டைக்குள் விழுங்கப்பட்ட உமிழ்நீரும் அவனுடைய மனதிற்குள் புதைந்திருந்த பயத்தையும், பதற்றத்தையும் அப்பட்டமாகவே வெளிக்காட்டியது...
ஒரு கண்ணாடி குவளையில் முதலில் குளிர்பானத்தை ஊற்றி, அதனோடு விஷத்தையும் கலந்தான், பிறகு ஒவ்வொரு மாத்திரையாக எண்ணிக்கொண்டே (மாத்திரையை அல்ல, ஏதோ நினைவுகளை எண்ணிக்கொண்டு) அதனுள் போட்டுக்கொண்டிருக்க, அறையின் வெளியிலிருந்து ஒரு குரல் “போதும் போதும்.... மிக்ஸிங் சரியா இருக்கும்” என்றது.... விஷக்கலவையை கலந்துகொண்டிருந்த கைகள் சட்டென நிற்க, கழுத்து அறையின் வாயிலை நோக்கி திரும்பியது... யாராக இருக்கும்?... “அம்மாவும் அப்பாவும் வெளியூருக்கு சென்றுவிட்டார்கள், பணிப்பெண் தன் வேலையை காலையிலேயே முடித்து சென்றுவிட்டாள், அருகில் வசிப்போர் வேறு யாரும் கூட ஹாலிற்குள் வரும் அளவிற்கும் பழக்கமில்லை....”
யோசனைகள் மூளையை கசக்கிக்கொண்டிருக்க, கால்கள் மெல்ல ஹாலை நோக்கி நகர்ந்தது... மனதிற்குள் கொஞ்சமும் பயமில்லை, மரண விளிம்பில் நிற்கும் ஒருவனுக்கு பயம் எப்படி இருக்கும்?....
ஹாலில் இருக்கையில் அமர்ந்தபடி, தொலைக்காட்சி சேனல்கள் ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறான் ஒரு புதியவன்... பார்ப்பதற்கு திருடன் போலவல்லாம் இல்லை, வீடு தவறி வந்தவனை போலும் இல்லை... கல்லூரி மாணவன் ஒருவன் வெகுநாள் பழகிய தன் நண்பன் வீட்டில் வந்து, சாவகாசமாக அமர்ந்திருப்பதை போல வெகு இயல்பாக அமர்ந்தவாறு, அஷோக்கை நோக்கி திரும்பி, “ஹாய் அஷோக்.... வா, உக்காரு.... செந்தில் ஜோக் பார்த்தியா?... தற்கொலை பண்ணிக்க போறதா சொல்லிட்டு அவன் அடிக்குற லூட்டியை பார்த்தியா?... ஹவா ஹவ்வா...ஹவ்வா.... ஹவா ஹவாவா...” பாடியபடியே சிரித்தான்....
“ஹலோ... நீ யாரு?... என் பேர் உனக்கெப்படி தெரியும்?... எப்டி வீட்டுக்குள்ள நுழைஞ்ச?” அஷோக் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தான்....
“இந்த கேள்விக்கல்லாம் பதில் தெரிஞ்சா உன்னை என்ன ப்ரீ பாஸ் கொடுத்து சொர்க்கத்துக்கா கொண்டுபோகப்போறாங்க?... தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்கு நிச்சயம் நரகம்தான்... இதைத்தான் ரிக் வேதத்துல ‘அதோ சம்பாக்ய முகந்தவே!... சமோ தேவாய பஹம் பஹம்’னு சொல்லிருக்காங்க...” தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு புதியவன் இப்படி சொன்னதை, அஷோக் கொஞ்சம் ஆச்ச்சரியத்துடனே பார்த்தான்....
“சரி.... உங்க பேர் என்ன?... உங்களுக்கு என்ன வேணும்?” பவ்யமாக கேட்டான் அஷோக்....
“பேரு தெரியனுமா?... சரி, உன் வசதிக்காக ஈசன்’னு வச்சுக்கோ... எனக்கு ஒன்னும் வேணாம்... இப்போ எமகண்டம், நீ இறந்தா நிச்சயம் நரகம்தான்... அதனால, ஒரு அறை மணி நேரம் கழிச்சு இறந்துடு... அதுவரை உனக்கு கம்பெனி கொடுக்க வந்ததா நினைச்சுக்கோ....”\
“கம்பெனியா?”
“ஆமா.... மன்னார் அண்ட் கம்பெனி.... நீ நினைக்குற மாதிரி மத்த விஷயத்துக்கான கம்பெனி கிடையாது, கொஞ்சம் பேச மட்டுமே...”
“நீங்க நல்லா பேசுறீங்க” மெல்ல அரும்பிய புன்னகையை மறைக்க விரும்பாதபடி, ஈசனின் அருகில் அமர்ந்தான் அஷோக்....
“இனி நீதான் பேசனும்... உனக்கு என்ன பிரச்சின? ஏன் தற்கொலை பண்ணிக்க போற?”
“நான் ஒரு கே... முதன்முதலா இப்போதான் ஒரு அந்நியர்கிட்ட இப்டி வெளிப்படையா என்னோட பாலீர்ப்பை பற்றி சொல்றேன்...”
“கே’யா இருக்கிறது தப்பில்லையே?”
“இல்லைதான்... ஆனால், அழகில்லாம, அதுவும் இந்தியாவுல பொறந்தது தப்பாகிடுச்சே?” சொல்லும்போது அஷோக்கின் வார்த்தைகள் தடுமாறியது...
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு....”
“இந்தியா போல ஹோமொபோபிக் சமூகம் நிறைஞ்ச நாட்டுல, என்னோட பாலீர்ப்பை பற்றி சொல்லக்கூட முடியாம வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?.. முதன்முதலா என்னோட ஒரு நண்பனை செட்யூஸ் பண்ணேன்.. இப்போவரைக்கும் என்கூட அவன் பேசுறதில்ல, வருஷமும் ஏழாச்சு... அவன் என்னைய புரிஞ்சுக்கல...”
“அட முட்டாளே.... உபநிஷதங்கள்ல கூட ‘மஹோ மகாந்த மிதுனோ தனாயமா விபோ தேவ!’னு விருப்பமில்லாமல் மற்றொருவரை தொடுவதுகூட மிகப்பெரிய பாவம்னு சொல்லிருக்கு.... உன் நண்பன் ஸ்ட்ரைட்னு தெரிஞ்சும் அவனை செட்யூஸ் பண்ணது உன் தப்புதானே?... எத்தனையோ கே பசங்க கொட்டிக்கெடக்குற இந்த நவீன உலகத்துல, ஒரு ஸ்ட்ரைட் பையனை போய்.... அடப்போடா....”
“நானும் அந்த தவறை உணர்ந்துதான், பிளானட் ரோமியோ, பேஸ்புக்னு கே பசங்களை தேடுனேன்...”
“கெடச்சாங்களா?”
“ஹ்ம்ம்... நெறைய.... ஆனால், போட்டோ கேட்பாங்க, நான் அனுப்புவேன்... அவ்ளோதான், அதுக்கப்புறம் ஒரு ரெஸ்பான்சும் வராது... ஒரு தடவை இல்ல, நூறு தடவைக்கு மேல வெந்து நொந்து போய்ட்டேன்....” விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகளுக்கு இடையே, தன்னை நொந்துகொள்ளவும் தயங்கவில்லை அஷோக்...
“ஏன் பதில் அனுப்பல?”
“ஹ ஹா... என் மூஞ்சிய பார்த்துமா உனக்கு அந்த சந்தேகம்?”
“நீ ஒன்னும் அசிங்கமா இல்லையே?” அஷோக்கின் முகத்தை ஒருமுறை உற்றுப்பார்த்தவாறே கேட்டான் ஈசன்...
“அதே நேரத்துல அழகாவும் இல்லையே?”
“தற்கொலை பண்ணிக்க இதல்லாம் ஒரு காரணமா யாராச்சும் சொல்வாங்களா?”
“தற்கொலை பண்ணிக்கன்னு எதாச்சும் காரணங்கள் வகுத்திருக்காங்களா என்ன?”
“நீயும் நல்லாதான் பேசுற” ஈசன் சிரித்தான்...
“பேசி என்ன புண்ணியம்?”
“சரி... நல்லாதான் பேசுறியே, இப்டி டேட்டிங் பண்றத விட்டுட்டு ஒருத்தனை பாக்காமலே லவ் பண்ணிருக்கலாம்ல?.. போட்டோ அனுப்பாம, பேசிட்டு மட்டும் லவ் பண்ணி அடுத்த கட்டத்துக்கு உன்னோட காதலை நகர்த்தி இருக்கலாம்ல?...”
“அதையும் நான் முயற்சி பண்ணாம இல்ல... அப்டி அஜித்தை பார்த்து நான் செஞ்ச தப்புதான் இப்போ தற்கொலை வரை நிறுத்திருக்கு.... புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டா மாதிரி....”
“ஏன்? என்னாச்சு?” ஆர்வத்தில் கேட்டான் ஈசன்...
“போட்டோ ஷேர் பண்ணிக்காம லவ் ப்ரப்போஸ் பண்ணி, ஒரு மாசம் பேசி, இன்னிக்கு ‘பச்சை சட்டை, ப்ளாக் பேன்ட்’ போட்டிட்டு வர்றதா பஸ் ஸ்டான்ட்’ல வந்து வெய்ட் பண்ண சொன்னான் ஒருத்தன்... நானும் ரெண்டு மணி நேரமா நின்னேன், கால் பண்ணி பார்த்தா சுவிட்ச் ஆப் பண்ணிருக்கான்... எங்கயோ நின்னு பார்த்துட்டு, என்னைய புடிக்கலைன்னு சொல்லிக்காம ஓடிட்டான்... இந்த மாதிரி நான் அவமானப்பட்டதும் கூட இன்னையோட பதினாலாவது முறை... இவ்வளவு விரக்தியும் சேர்ந்து என்னைய இந்த அளவுக்கு கொண்டு வந்திடுச்சு....” கண்களை துடைத்துக்கொண்டான் அஷோக்....
“சரி... உன்னை புறக்கணிச்சவனுக்காக நீ இறக்கனுமா?... ‘உன்னை மதிக்காதவனை, துரும்பினும் கீழாக நினை’னு ஓஷோ சொல்லிருக்காரு....”
“இல்ல ஈசா... என்னைய யாருக்குமே புடிக்கல...”
“யாருக்குமேன்னா? உன் அம்மா அப்பாவுக்கா?”
“இல்ல... அவங்களுக்கு புடிக்கும்...”
“உன்னோட நெருங்கிய நண்பர்களுக்கா?”
“இல்ல... அவங்களுக்கு நான்னா உயிர்...”
“உன்னோட சொந்தபந்தத்துக்கா?”
“இல்ல... அவங்களும் இல்ல....”
“அப்போ யார்தான் அந்த ‘யாருமே?’”
“பிளானட் ரோமியோ’ல இருக்குற பசங்களுக்கு, கே க்ரூப்’ல இருக்குற பசங்களுக்குனு எல்லாருக்கும்...”
“பேர் கூட தெரியாத, முன்பின் அறிமுகமில்லாத யாரோ சிலருக்காக நீ சாகுறதா சொல்றது வேடிக்கையா இல்லையா?... சரி, எமகண்டம் முடிஞ்சிடுச்சு, நீ இப்போ சாகலாம்...” சொல்லிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியை  ஆன் செய்து, ஒவ்வொரு சேனலாக மாற்றத்தொடங்கினான் ஈசன்...
அஷோக் எதையோ யோசிக்க தொடங்கினான்... ரிமோட்டை பிடுங்கி, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு “எனக்கு தற்கொலை பண்ணிக்குற எண்ணமே போய்டுச்சு... உண்மையை சொல்லுங்க நீங்க கடவுள்தானே?” என்றான்....
“என்னது?” ஆச்சரியத்தில் கேட்டான் ஈசன்....
“ஆமா... எனக்கு நல்லா தெரியும்... நான் அந்த பக்கம் திரும்புற நேரத்துல நீங்க காணாமல் போய்டுவீங்க....”
“ஹ ஹ ஹா... நீ ரொம்ப தமிழ் படங்கள் பார்ப்பன்னு நினைக்குறேன்...அதுவும் நிறைய குறும்படங்கள்ல இப்போலாம் எதார்த்தம்ங்குற பேர்ல கடவுள்களை இப்டி பேன்ட் ஷர்ட் போட்டு காண்பிக்குறதால நீ ரொம்ப குழம்பிட்ட போல... உன் மனம் மாறக்காரணம் நான் இல்ல, சில உண்மைகளை நீ புரிஞ்சுகிட்டதுக்கான அடையாளம் அது... கொஞ்ச நேரம் உண்மைகளை யோசிச்சாவே இப்டி ஆபத்தான முடிவுகள் கூட அபத்தமான விஷயங்கள்னு நமக்கு புரிஞ்சிடும்.... உன்னைய யோசிக்க வச்சது மட்டும்தான் நான் செஞ்ச ஒரே வேலை, மத்ததெல்லாம் தானா நடந்தது...” சிரித்தான் ஈசன்....
“அப்புறம் எப்டி வேதங்கள், ஓஷோ தத்துவங்கள் எல்லாம்?”
“அது உண்மையில் வேதங்களே கிடையாது.... தமிழ்’ல சொன்னா எவன் கேக்குறீங்க, வாழைப்பழத்த வாய்ல போட்ட மாதிரி எதையாச்சும் சொல்லி அதை வேதம்னு சொன்னா கடவுளா நினைக்க ஆரமிச்சிடுவீங்க, யாருக்கும் புரியாத விஷயங்களை சொன்னா அதை தத்துவங்களா நினைப்பீங்க.... அதனாலதான் இப்போகூட வாய்க்கு வந்ததை சொல்லி, அதுக்கு வேதங்கள்னு போர்வை போர்த்திவிட்டேன்.... நீகூட அதுனாலதான் இப்போ நான் சொன்னதை ஏத்துக்கிட்ட...”
“மூடியிருந்த கதவை எப்டி திறந்து வந்தீங்க?”
“இது என்ன அலிபாபா குகையா, மந்திரம் போட்டு திறக்க?... நீ போன வேகத்துல கதவு தானாவே திறந்துதான் கெடந்துச்சு....”
“அப்போ... அப்போ நான் தற்கொலை பண்ணிக்க போறது உங்களுக்கு எப்டி தெரியும்?” இன்னும் குழப்பம் அகலாதவனாக கேள்வியை கேட்டான் அஷோக்....
“உன்ன ரெண்டு மணி நேரமாவே நான் பாலோ பண்றேன்... அப்டி உன் வீடுவரைக்கும் வந்தபோதுதான் நீ இந்த முடிவை எடுத்ததே எனக்கு தெரியும்....”
“அப்டின்னா நீங்க?..... நீ?...” தலையை சொறிந்துகொண்டே கேட்டான்...
“நான் மதன்...” சிரித்தபடியே அஷோக்கை பார்க்க, அப்போதுதான் மதன் அணிந்திருந்த “பச்சை சட்டையையும், கருப்பு பேன்ட்’ஐயும்” கவனித்தான் அஷோக்... (முற்றும்)

(கதையின் தலைப்பு உபயம் – Avid)

Tuesday, 31 December 2013

“என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்.....!” – சிறுகதை...

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்.....!” – சிறுகதை...

“அஷோக் சார், இந்த கொட்டேஷனை கொஞ்சம் எடிட் பண்ணி தரீங்களா?... ரொம்ப குழப்பமா இருக்கு சார்...” மாலினி இப்படி கேட்டு அருகில் வந்து நின்றபோது, மனதிற்குள் அந்த தருணத்தை ரசித்தபடியே மென்மையாக சிரித்தான் அஷோக்...
“இதுகூட பண்ண மாட்டேனா உங்களுக்காக... இது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல மாலு, லாஸ்ட் இயர் வால்யூவை கம்பேர் செஞ்சு ப்ரைஸ் அப்டேட் போட்டா போதும்... இங்க பாருங்க...” என்றபடி தன் கணினியில் சில வித்தைகளை அஷோக் காட்ட, அவன் பின்பு குனிந்தவாறு நின்று அதை கவனிக்க தொடங்கினாள் மாலினி... அதுவரை குறுகியபடி அமர்ந்திருந்த அஷோக், தன் தோள் மாலினியின் மார்போடு உரசுவதற்கு ஏதுவாக அப்போதுதான் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தான்... அவ்வப்போது கணினியின் “என்டர்” பட்டனை தட்டும்போதேல்லாம், காரணமே இல்லாமல் அவன் தோள் குலுங்கிய காரணத்தை மாலினி அறிந்திருக்கவில்லை....
“ரொம்ப தாங்க்ஸ் சார்...” சொல்லிவிட்டு மாலினி செல்லும் முன்பு கொடுத்த கையை சில நொடிகள் தடவியபடி விடைகொடுத்தான் அஷோக்....
“தாங்க்ஸ் மட்டும்தானா மாலு?” ஆயிரம் அர்த்தங்கள் பொதிய கேட்டான்...
“வேற என்ன சார் வேணும்?.. நியாயமா உங்களுக்கு என் சாலரி’ல பாதி கொடுக்கணும், அந்த அளவுக்கு என் வேலைகள்ல பாதிய நீங்கதான் செய்றீங்க... ஹ ஹ ஹா...” குலுங்கி சிரித்தாள் மாலினி...
“ரொம்பவல்லாம் ஒண்ணுமில்ல மாலு, இந்த வீக்கெண்ட் டேட் வேணும்.... அவ்ளோதான்...” சிரித்தான்...
“ஹ ஹ ஹா.... போங்க சார்...” ஆறு முறைகளை தொடர்ந்து, ஏழாவது முறையாகவும் இந்த கேள்விக்கு சிரித்தே மழுப்பிவிட்டாள் மாலினி... அந்த அலுவலகத்தில் அஷோக் தொட்டு துளங்காத ஒரே பெண் அவள் மட்டும்தான்... அழகான சிரிப்பு, தெளிவான தோற்றம், எப்போதும் பட்டாம்பூச்சியை போன்ற துறுதுறுப்பு... மாலினியின் மீது பித்தாய் அஷோக் மட்டுமல்ல, இன்னும் சில யுக புருஷர்களும் அந்த அலுவலகத்தில் காத்துக்கிடக்கிறார்கள்...
மதிய உணவு இடைவேளையில், சப்பாத்தியை பிய்த்து வாயில் வைத்தவாறே, அன்றைய மாலினியுடனான உரசலுக்கு, கண் காது மூக்கு வைத்து கதை அளந்துவிட்டான் அஷோக்...
“ரொம்ப சிம்பிளான கொட்டேஷன்டா... அதை புரியாத மாதிரி என்கிட்ட கேட்க வந்து என் பின்னாடி வந்து நின்னு உரசுனா மச்சி...”
“ஐயோ செம்மடா.... அப்புறம்?” இப்படி கதை கேட்டே காதோரத்தில் நரை பூக்கும் அளவிற்கு நாட்களை கடத்திவிட்ட சீனியர் அலுவலர் ராமு எதை சொன்னாலும் நம்பிடும் ஒரு “பச்சை குழந்தை”...
“அதை சரி பண்ணி கொடுத்திட்டு என் வேலையை பார்க்குறப்போ, இந்த வீக்கெண்ட் டேட்டிங் போலாமா?’னு கேட்குறா... டைம் கிடச்சா போகலாம்னு சொல்லிட்டேன்...”
“உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு மச்சி... இதுவரைக்கும் ஷைலு, வினோ, அம்மு... இப்போ மாலு... எல்லாமே செம பிகர்டா.... ஆமா, என்னாச்சு வித்யா விஷயம்?”
“ஹ்ம்ம்.... அது ஓவர் மச்சி... இந்த வாரம்தான், மகாபலிபுரத்துல அடிக்கல் நாட்டினேன்... இங்க பாரு...” என்று தன் அலைபேசியில் சில புகைப்படங்களை காட்ட, அதில் ஒரு பெண் கட்டிலில் அமர்ந்திருப்பதாகவும், உடை மாற்றுவதாகவும், கண் அடித்து சிரிப்பதாகவும் புகைப்படங்கள் வரிசை கட்டி நின்றன... விரித்த கண்களோடு ஆச்சரியமாக அவற்றை ராமு பார்க்கும் நேரத்தில், பெருமிதத்தில் மிதக்கத்தொடங்கினான் அஷோக்....
மாலை வேளையில் அலுவலகம் முடிந்து பைக்கில் தன் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வழியில் திடீரென வண்டியை நிறுத்தி, அலைபேசியை காதில் வைத்தான் அஷோக்.... அழைப்பு எதுவும் வராவிட்டாலும்கூட அந்த அலைபேசியை காதில் வைத்தவாறே மெல்ல தன் கண்களை சாலையோரத்தில் அமர்ந்திருந்த மனநலம் பிறழ்ந்த ஒரு பெண் மீது படரவிட்டான்... இளம் வயது பெண்தான் என்றாலும், அழுக்கேறி கிடக்கும் அவள் உடை ஆங்காங்கே கிழிந்து இருக்கிறது... தன் கண்களை அவள் மீது ஊடுருவ செய்து, கிழிந்த ஆடைக்குள் அவள் அங்கங்களை அளவெடுத்தான்.... அவன் மட்டுமல்லாது அந்த “பார்வை கற்பழிப்புகள்” அங்கு பல ஆண்களால் நடந்துகொண்டிருப்பதை, ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையாக கடந்து சென்றனர்... அவள் அங்கங்களை கண்களால் கபளீகரம் செய்துவிட்டு சில நிமிடங்களில் வீட்டையும் அடைந்தான்....
அந்த ஆறு மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தன் பிளாட் இருக்கும் மூன்றாம் தளத்திற்கு செல்லும் முன்பு யாரையோ தரைத்தளத்தில் தேடினான்.... அஷோக்கை பார்த்ததும் ஒரு சிறுமி ஓடிவந்தாள், பதின்மூன்று வயதிருக்கலாம்.... வயதினை மீறிய அங்க வளர்ச்சிகள், அவள் ஓடி வரும்போது அப்பட்டமாக வெளிப்பட்டது....
“ஹாய் அஷோக் அங்கிள்...” என்றாள்...
தன் பைக்குள் வாங்கி வைத்திருந்த ஒரு சாக்லேட்டை அவள் கையில் திணித்துவிட்டு, கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு மாடியேற தொடங்கினான்... அந்த முத்தத்தில் எச்சிலோடு கலந்திருந்த விரசமான எண்ணங்களை, அந்த சிறுமி அறிந்திடாமல் அவள் வாங்கிடும் எழுபத்திரண்டாவது சாக்லேட் அது...
தன் பிளாட்டின் வெளியில் ஒரு பெண்ணும் ஆணும் பேசிக்கொண்டிருப்பதை கண்டதும், தன் நடையை வேகப்படுத்தினான் அஷோக்... அஷோக்கை பார்த்ததும் அந்த ஆண் மெல்ல அங்கிருந்து விலகி செல்வதை போல அவனுக்கு தோன்ற, அங்கு நின்ற பெண் அருகில் சென்றதும், “யார் அவன்?” என்றான்....
“பக்கத்து பிளாட் ராஜேஷை தேடி வந்தாராம், ஆள் இல்லைன்னு நம்ம வீட்ல கேட்டாங்க...” கலக்கத்துடன் பதில் சொன்னாள்....
“உனக்கு ஆயிரம் தடவை சொல்லிருக்கேன், இப்டி எவன்கூடயும் பல்ல இழிச்சுகிட்டு பேசிட்டு இருக்காதன்னு... உள்ள போ....” என்று அதிர்ந்து சொல்ல, திடுக்கிட்டு நிதானித்த அவன் மனைவி தன் இயலாமையை நொந்தவாறு உள்ளே சென்றாள்...
குளித்து முடித்து, சூடாக காபியை அருந்திவிட்டு அறைக்குள் சென்றான் அஷோக்... அப்போதுதான் இறுக்கம் களைந்த அவன் மனைவி சீரியல் பார்ப்பதற்கு ஆயத்தமானாள், அவள் முகத்தில் “நாதஸ்வரம்” மலரை பற்றிய கவலை குடிகொண்டிருந்தது....
அறைக்குள் சென்று கதவை மூடிய வேகத்தில் கணினியை திறந்து, செக்ஸ் வீடியோக்கள் நிறைந்து கிடக்கும் ஒரு தளத்தில் “கேங் ரேப் (gang rape)” என்று வீடியோக்களை தேடினான் அஷோக்... அதில் ஒரு பள்ளி மாணவியை நான்கு பேர் கற்பழிக்கும் வீடியோவை டவுன்லோட் செய்தான்.. அந்த காணொளி டவுன்லோட் ஆகிக்கொண்டிருக்கும் கால இடைவெளிக்குள், தன் பேஸ்புக் பக்கத்தை திறந்தான்....
சில நொடிகள் யோசித்துவிட்டு, அன்றைய பேஸ்புக் ஸ்டேட்டசை மிகுந்த அக்கறையோடும், சமூக பொறுப்போடும் பதிவு செய்தான் அசோக்...
“ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அங்கீகரிக்க போகிறார்களாம்...
நம் கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் இந்த செயல்களுக்கு ‘மனித உரிமை’ என்று பெயராம்....
என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?”... (முற்றும்)