ஸ்டோன்வால் கிளர்ச்சி – ஒருபால் ஈர்ப்பின்
முதல் புரட்சி!
“டிப்பிங்
பாய்ன்ட்” (tipping point) என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்வாங்க... மிகப்பெரிய பிரளயம் ஒன்னு
வெடிக்குதுன்னா, அதற்கான முதல் புள்ளி ரொம்ப சாதாரணமான ஒரு விஷயமாக இருக்கும்...
அதாவது, ஒரு மிகப்பெரிய காட்டுத்தீ பரவ, ஒரு சின்ன மரத்தின் உரசலால் விளைந்த தீப்பொறிதான்
“டிப்பிங் பாய்ன்ட்”...
இன்றைக்கு ஒருபால் ஈர்ப்புக்கான ஆதரவு மனநிலையை அமெரிக்கா
மற்றும் மேற்கத்திய நாடுகளில் நாம் காணமுடிகிறது என்றால், அதற்கான காரணம் அங்கு
நிகழ்ந்த போராட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும்தான்... ஆனால், அத்தகைய
புரட்சிகர போராட்டங்களுக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் முதல் புள்ளியாக திகழ்ந்த
ஒரு தீப்பொறியை பற்றித்தான் இப்போ சொல்லப்போறேன்.... உலக ஒருபால் ஈர்ப்பு
உரிமைகளுக்கான போராட்டங்கள் என்பதற்கான “டிப்பிங் பாய்ன்ட்” தான் நான் இப்போது
விவரிக்க இருக்கின்ற நிகழ்வு...
அமெரிக்காவில் ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒருபால்
ஈர்ப்பினரை ஓரளவு அங்கீகரித்து அரவணைத்தது சில மதுபான அரங்குகளும், உணவு
விடுதிகளும் மட்டும்தான்... இன்றைக்கு போல சகஜமான பாலீர்ப்பு அங்கீகாரம் இல்லாத
அந்த காலகட்டத்தில், ஒருபால் ஈர்ப்பினர் தம்மை போன்ற நபர்களை சந்திக்க,
மகிழ்ச்சியாக கொண்டாட அந்த இடங்கள்தான் அவர்களின் வடிகால்....
அப்படிப்பட்ட ஒரு இடமான “ஸ்டோன்வால்” என்னும் மதுபான
அரங்கில் அன்றைக்கும் வழக்கமான உற்சாக நடனங்களும், சந்தோஷ கேளிக்கைகளும்
நிகழ்ந்துகொண்டிருந்தது.... நியூயார்க் அருகே உள்ள கிரீன்விச் என்னும் இடத்தில்
அமைந்துள்ள அந்த “ஸ்டோன்வால்” கேளிக்கை விடுதிக்கு வழக்கமான தன் சோதனையை நடத்த
வந்தது காவல்துறை....
“ஷூ’ன்னா பாலிஸ் போடுறதும், பார்’ன்னா போலிஸ் வர்றதும் சகஜம்தான்”
அங்கே... அடிக்கடி காவல்துறையின் அத்துமீறல்கள் அங்கே நடப்பதும், சில தடியடிகள்
நடப்பதும் வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும், அன்றைக்கு அந்த இடம் கலவர பூமியாக
மாறுமென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்...
அந்த நாள்வரை காவல்துறையின் கை மட்டுமே அங்கே ஓங்கியிருக்கும்...
ஓரினசேர்க்கையை மனநோயாக கருதிய அந்த காலகட்டத்தில், குற்றவாளியை போல ஒருபால்
ஈர்ப்பினர் தலைகுனிந்து நிற்பார்கள்... அடித்தால் வாங்கிக்க வேண்டும், தடுக்க கை
ஓங்கினால் கூட இருக்கும் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறைக்குள்
அடைக்கப்படுவார்கள்...
அன்றைக்கும் தன் வழக்கமான அத்துமீறல்களை காவல்துறை
பிரயோகித்தது... முதல்முறையாக அங்கே இருந்த ஒருபால் ஈர்ப்புள்ள நபர் ஒருவர்,
காவல்துறையுடன் வாக்குவாதம் செய்தார்... காவல்துறை அடிக்க கை ஓங்க, ஒட்டுமொத்த
அரங்கில் இருந்த ஒருபால் ஈர்ப்பினரும் ஒன்றாக குரல் கொடுத்தனர்.... கோபம் அடைந்த
காவல்துறை தடியடியை பிரயோகம் செய்தார்கள், விஷயம் அறிந்த அருகில் இருந்த கேளிக்கை
விடுதிகளில் இருந்த அத்தனை ஒருபால் ஈர்ப்பினரும் ஒன்றாக குவிந்தனர்... “பார்
சிறுத்ததில் படை பெருத்ததோ, படை பெருத்தலில் பார் சிறுத்ததோ” என்று கலிங்கத்து
பரணி பாடிய செயம் கொண்டார் எதைவைத்து சொன்னாரோ என்னவோ, நிஜமாகவே “ஸ்டோன்வால்” பார்
அந்த படையை தாங்கிடும் இடத்தை பெற்றிருக்கவில்லை... கிறிஸ்டோபர் தெருவே ஒருபால்
ஈர்ப்பினரின் அணிவகுப்பில் திரண்டு நிற்க, எச்சியை விழுங்கிவிட்டு காவல்துறை
சத்தமில்லாமல் திரும்பி சென்றனர்.... மறுநாள் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தை
ஆக்கிரமித்த அந்த நிகழ்வுக்கு பெயர்தான் “ஸ்டோன்வால் கிளர்ச்சி” என்று இப்போதுவரை
சொல்லப்படுகிறது....
அந்த ஸ்டோன்வால் கிளர்ச்சி என்பதை ஒருநாள் கூத்தாக நினைத்த
அமெரிக்க அரசுக்கு, அதன்பிறகு ஒவ்வொரு நாளும் ஒருபால் ஈர்ப்பினர் தங்கள்
உரிமைகளுக்கு போராடியதை கண்டு ஸ்தம்பித்து நின்றனர்.... போராடிய மக்கள் அனைவரும்
இணைந்து அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள்.... அந்த அமைப்புக்கு பெயர் “கே விடுதலை
முன்னணி" (Gay
Liberation Front)....
அந்த அமைப்பினர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கூட்டங்கள் என்று வெகுஜன
மக்கள் மத்தியிலும் தங்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொண்டுசென்றார்கள்....
"ஒருபால் ஈர்ப்பு உரிமை", "ஒருபால் ஈர்ப்பு
விடுதலை" என்ற இரண்டு கொள்கைகளையும் அடிப்படையாக கொண்டு போராட்ட களத்தில்
தீவிரமாக தங்களை இணைத்துக்கொண்டார்கள்... இந்த போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த
அதே காலகட்டத்தில்தான் American Psychiatric Association
அமைப்பு ஓரின சேர்க்கையை மனநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது... ஏற்கனவே உருவாக்கிய சமூக விழிப்புணர்வோடு, இந்த
அறிவியல் உண்மையும் போராட்ட களத்திற்கு உத்வேகத்தை கொடுத்தது....
ஸ்டோன்வால் கிளர்ச்சியின் முதலாம் ஆண்டு நிகழ்வின்போதுதான்
முதன்முதலாக ஒருபால் ஈர்ப்பினர் ஒன்றாக இணைந்த மிகப்பெரிய விழிப்புணர்வு பேரணி
ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூ யார்க் நகரங்களில் நடைபெற்றது... அதன்
தொடர்ச்சியாகவே இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தை “பேரணி
வாரம்” (Pride week) என
கொண்டாடுகிறார்கள் ஒருபால் ஈர்ப்பினர்.... இந்தியா உட்பட அனைத்து நாட்டுகளின்
ஒருபால் ஈர்ப்பினரும் தத்தமது உரிமைகளை வலியுறுத்தும்விதமாக கொண்டாடப்படும் அந்த
பேரணி நிகழ்வுகளுக்கு அச்சாரமாக விளங்கிய “ஸ்டோன்வால்” கலவரத்தை பற்றி நாம்
ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.....
நமக்கான உரிமை போராட்டங்கள் இங்கே நடக்க தொடங்கியுள்ள இந்த
காலகட்டத்தில், தீப்பொறி ஒன்று காட்டுத்தீயாக மாறிய இந்த வரலாற்றை உங்களுக்கு
சுட்டிக்காட்ட விரும்பியதால், வரலாற்றை கொஞ்சம் புரட்டினேன்...
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!....




