Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 4 November 2014

பெங்களூர் முதல் உங்களூர் வரை ஆழப்பாயும் 377....!!!






கர்நாடகத்தை சேர்ந்த 32 வயதாகும் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர், சட்டப்பிரிவு 377ன் கீழ் கைதுசெய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர் மற்றும் சட்ட நிபுணர்களால் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது... கைது செய்யப்பட்ட நபர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிதித்துறையில் உயரிய பொறுப்பில் பணியாற்றியவர்.... இந்த வழக்கை பொருத்தவரை ஆச்சர்யம் என்னவென்றால், தன் கணவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக ஆதாரத்தோடு புகார் கொடுத்தது, கைதுசெய்யப்பட்ட நபரின் மனைவிதான், அவர் ஒரு மருத்துவரும் கூட... தனது வீட்டில் கணவனின் நடவடிக்கையை கண்காணிக்க மனைவியால் மறைத்துவைக்கப்பட்ட காமிரா தான் இப்போது வழக்கிற்கான முக்கய சாட்சி... கைதுசெய்யப்பட்ட மென்பொருள் ஊழியர் கேரளாவின் திருவனந்தபுரத்தை பூர்விகமாக கொண்டவர், பிறந்து வளர்ந்ததெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளில்... இவருக்கு திருமணமாகி சரியாக இப்போதுதான் ஒருவருடம் பூர்த்தியாகிறது... இருவருக்கும் திருமணமான முதல் ஆறு மாதங்கள் பணிசூழல் காரணமாக கணவர் மைசூரிலும், மனைவி பெங்களூரிலும் வசித்துவந்துள்ளனர்... கடந்த மே மாதம்தான் இருவரும் மல்லேஸ்வரத்தில் வீடு எடுத்து ஒன்றாக வாழத்தொடங்கியுள்ளனர்....
கடந்த ஆறு மாத இணைந்த வாழ்க்கையில்தான் மனைவிக்கு கணவன் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளது... மனைவியுடன் இல்லற வாழ்க்கையை வாழ்வதில் விருப்பமில்லாதவராக இருந்திருக்கிறார் கணவர்... உடல் சார்ந்த எவ்விதமான தொடர்புகளையும் விரும்பாமல், மனைவியிடம் விலகியே இருந்துள்ளார்... பெரும்பாலும் மனைவி உறங்கிய பின்பு, நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.... மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் புதுப்புது ஆண் நண்பர்களை வீட்டிற்கு அடிக்கடி அழைத்துவருவதாக அக்கம் பக்கத்தினர் மூலம் அறிந்துள்ளார் மனைவி... அந்த நண்பர்கள் பற்றி கேட்கும்போது கணவர் ஏதேதோ மழுப்பலான காரணங்களை சொல்லி சமாளித்திருக்கிறார்... கணவர் தன்னிடம் எதையோ மறைக்கிறார் என்பதை அப்போதுதான் உறுதிசெய்துள்ளார் மனைவி... மேலும், உடலுறவில் ஈடுபாடில்லாத கணவனை மருத்துவ சோதனைக்கு பலமுறை அழைத்தும், சம்மதிக்க மறுத்த கணவன், ஒவ்வொரு முறையும் சண்டையில்தான் அந்த மருத்துவ விஷயத்தை முடித்துள்ளார்.... மருத்துவ சோதனைக்கோ, மனநல ஆலோசனைக்கோ சிறிதும் ஒத்துழைக்காத கணவனை சமாளிக்க தினறியுள்ளார் மனைவி... ஒருகட்டத்தில் வேறுவழியின்றி கணவனின் பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார்.... அதற்கு மாமானார் மாமியார் சொன்ன பதிலோ அதிர்ச்சிகரமானது, “உன்னால அவனை சமாளிக்க முடியலைன்னா விவாகரத்து பண்ணிடு, வேற பெண்ணை நாங்க கட்டிவச்சுக்கறோம்.... எங்கள் மகன் முழுமையான ஆண்மகன்தான், உன்னிடம்தான் ஏதோ குறையிருக்க வேண்டும்!” என்று குற்றத்தை அந்த பெண் பக்கம் திசைதிருப்பியுள்ளனர்....
பொறுமை இழந்த மனைவி அப்போதுதான் கொஞ்சம் அறிவியல்பூர்வமாக யோசித்துள்ளார்... கணவனை நம்புவதைவிட காமிராவை நம்புவது சிறந்தது என்று எண்ணி, வீட்டின் ஹால், படுக்கையறை தொடங்கி சமையலறை வரை டசன் கணக்கில் காமிராவை மறைத்துவைத்துள்ளார்... மறைத்துவைத்துவிட்டு ஒருவார காலம் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார் மனைவி... மனைவி வீட்டில் இல்லை, ஒருபால் ஈர்ப்புள்ள கணவன், என்ன செய்திருப்பான்? என்பதை யூகிக்கவே தேவையில்லை...
ஒருவார அம்மா வீட்டு விஜயம் முடிந்த மனைவி, மல்லேஸ்வரம் வீட்டிற்கு வந்ததும் செய்த முதல் வேலை காமிராவை சோதித்ததுதான்..... ஒருவார காலத்தின் பதிவுகளும் மனைவியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது... தான் வீட்டில் இல்லாத சமயங்களில் தன் கணவன் வேறு ஒரு ஆணுடன் உறவு வைக்கும் காட்சியை பார்த்த மனைவியின் கோபத்தையும், ஏமாற்றத்தையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை... கோபத்தை கணவனிடம் காட்டி பயனில்லை, இதைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்டாலும், அவர் உண்மையை சொல்லப்போவதில்லை.... சற்றும் யோசிக்காமல் உடனே அந்த வீடியோ பதிவுகளை ஒரு சிடியில் பிரதி எடுத்துக்கொண்டு, அவள் நேராக சென்ற இடம் காவல் நிலையம்தான்... இப்போது கணவனின் மீது சட்டப்பிரிவு 377ம், கணவனின் குடும்பத்தினர் மீது “தன் மகன் ஒருபால் ஈர்ப்புள்ளவர் என்பதை அறிந்தும் ஏமாற்றி ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது...
முன்கதை சுருக்கமாக சொல்ல நினைத்து, மொத்த நிகழ்வையும் சொல்லிவிட்டேன்... முதலில் இங்கு நாம் பார்த்தது மனைவியின் தரப்பு நியாயம் மட்டுமே (காவல் துறையால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் மனைவி சொன்ன நிகழ்வுகள்தான் இவை..).. கணவனின் தரப்பு வாதங்கள் அவர் சிறையிலிருந்து வந்தால்தான் வெளிவரும், அல்லது நீதிமன்ற வழக்கு வாதத்தின்போது அவருடைய வழக்கறிஞர் வாயிலாக அறியமுடியும்... ஆனாலும், கணவன் செய்த தவறை நான் துளியளவும் நியாயப்படுத்த விரும்பவில்லை... ஒரு பெண்ணுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத ஒரு நபர், திருமணம் என்கிற சடங்கின் வாயிலாக அப்பெண்ணின் கனவுகளை சிதைத்த குற்றம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்... அதேநேரத்தில் இப்போது கணவனுக்கு கிடைக்க இருக்கிற தண்டனை எதற்கானது? என்ற கேள்வியை நாம் அறிந்தாகவேண்டும்...
நியாயப்படி பார்க்கும்போது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 497, 498ன்படி “பிறமனை புணர்ச்சி” குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட நபருக்கு அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது... ஒருவேளை, இதே கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டு கைதாகி இருந்தால், இந்த நபர் மீது இந்த சட்டப்பிரிவுதான் போடப்பட்டிருக்கும்... ஆனாலும், அப்படியோர் புகாரை மனைவியால் கொடுக்கமுடியாது என்பதுதான் நமது சட்டத்தின் தற்போதய நிலைமை... மனைவியால் அதிகபட்சம் அந்த ஆதாரத்தை வைத்து விவாகரத்து மட்டுமே வாங்கமுடியும், கணவனை தண்டனைக்கு ஆட்படுத்த முடியாது...
ஆனால், இந்த பெங்களூரு மென்பொருள் நிறுவன ஊழியர் வழக்கில், அவருக்கு கிடைக்க இருக்கின்ற தண்டனை அவர் மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்காக அல்ல... அந்த கணவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்பதற்காக மட்டுமே... அநேகமாக அவருக்கு சட்டப்பிரிவு 377ன் கீழ் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்...
இந்த இடத்தில்தான் எனக்கு இந்த வழக்கில் முரண்பட்ட கருத்து வருகிறது... இங்கே ஒரு நபர் படுத்தது பிரச்சினையாக பார்க்கப்படவில்லை, மாறாக படுக்கும் நபர் யாரென்று மட்டுமே பார்க்கப்பட்டு நீதி வழங்கப்படுகிறது... இது எதிர்காலத்தில் நிச்சயமாக பலவிதமான ஆபத்து நிறைந்த விளைவுகளை உண்டாக்கும் என்ற அச்சம் இயல்பாகவே நமக்கு எழுகிறது....
இந்த வழக்கில்கூட சம்மந்தப்பட்ட மனைவியின் தரப்பில் வெளிப்படும் நியாயம், அந்த கணவர் மீதான கோபமாக உருமாறி, நம்மை அவர் பக்கம் காணப்படும் நியாயத்தை கூட உணரமுடியாமல் செய்துவிடும்....
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு மருத்துவர் ஒருவர் இதே ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்... சில இளைஞர்கள் அந்த மருத்துவரை, அவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை வைத்து மிரட்டி, ஏமாற்றி லட்சங்களை பறித்த குற்றத்தைவிட, ஒரு ஆணுடன் உறவில் ஈடுபட்டதை தவிர வேறு குற்றம் செய்யாத அந்த மருத்துவருக்கு கிடைத்ததுதான் அதிக தண்டனை...
 இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய பிரதேச முன்னாள் நிதியமைச்சரும், முதுபெரும் அரசியல்வாதியுமான ராகவ்ஜி இதே ஓரினச்சேர்க்கை அவதூறின் விளைவாக பதவியிழந்து, கட்சியிலிருந்து விரட்டப்பட்டு, ஒட்டுமொத்தமாக அவருடைய அரசியல் வாழ்வே சூன்யமாகிபோனதும் கடந்தகால நிதர்சனங்கள்....
உச்சநீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப்பிரிவு 377 பற்றிய விவாதத்தின்போது, நீதியரசர்கள் முகோபாத்யாயா மற்றும் சிங்வி ஆகியோர் முன் இப்படிப்பட்ட மிரட்டல்கள் பற்றிய வாதம் முன்வைக்கப்பட்டது... இந்த சட்டப்பிரிவின் மூலம் அப்பாவி நபர்கள் பலரும் மிரட்டப்படும் ஆபத்து இருக்கிறது என்றும், இந்த சட்டத்தையே தவறாக பிரயோகிக்கும் வாய்ப்பு இருக்கிறது எனவும் நாஸ் பவுண்டேசன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்... ஆனாலும், நீதியரசர்கள் இதை பெரிய விஷயமாக கருத்தில் கொள்ளவில்லை... இந்த சட்டப்பிரிவு இப்போது பிரயோகிக்கப்படும் சூழல்களை பார்க்கும்போது, அந்த வாதத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியமுடிகிறது...
மேற்கூறிய இரண்டு சம்பவத்துடன், இப்போது கைதாகியுள்ள மென்பொருள் பொறியாளரை நான் இணைக்க விரும்பவில்லை... காரணம், இந்த பொறியாளர் வழக்கில் அப்பாவியான அவருடைய மனைவி அப்பட்டமாக பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்... இருந்தாலும் கூட இங்கே ஓரினச்சேர்க்கை என்கிற ஒரு விஷயத்தை வைத்து, இவர்களைப்போல நாமும் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை சொல்லத்தான் சில உதாரணங்களை உங்கள் முன் வைத்தேன்....
இங்கே எத்தனையோ ஒருபால் ஈர்ப்புள்ள நபர்கள், குடும்பம் சமூகம் என்ற காரணத்தால் திருமணமாகியும்/திருமணத்தை எதிர்நோக்கியும் வாழ்ந்துகொண்டிருக்கலாம்.... அவர்களுக்கெல்லாம் காட்டப்படுகிற ஒரு அபாய ஒலிதான் இந்த உதாரணங்கள்....
குடும்பம், சமூகம் என ஆயிரம் காரணங்கள் காட்டி நீங்கள் செய்துகொள்ள இருக்கின்ற திருமணம், அப்பாவியான ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதிக்கவேண்டுமா? என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்... தன் மகன் ஒருபால் ஈர்ப்புள்ளவன் என்பதை அறிந்தும் மிரட்டி, உருட்டி திருமணம் செய்துவைக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு இந்த வழக்கு நிச்சயம் ஒரு படிப்பினையை தரும்... தன் மகனின் வாழ்க்கையும் போய், தங்கள் முதுமை காலத்தை சிறையில் கழிக்க வேண்டிய சூழலுக்கு அந்த பெற்றோரை தள்ளிய இந்த திருமணத்தால், அந்த பெற்றோர்கள் எதை பெற்றார்கள்?... இந்த சமூகத்தை காரணம் காட்டி செய்த திருமணத்தால் உண்டான விளைவுகளின்போது அந்த சமூகம் எங்கே போனது?... உற்றாரும், உறவுகளும், நண்பர்களும், சுற்றமும் என யாருக்காகவல்லாம் பாலீர்ப்பை புறக்கணித்துவிட்டு திருமணம் நடத்தப்பட்டதோ, அந்த நபர்கள் எல்லாம் இப்போது ஆபத்தில் சிக்கிய அந்த குடும்பத்தை கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் நிதர்சனம்.... வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் இந்த சமூகத்துக்காக நீங்கள் செய்ய இருக்கின்ற ஒவ்வொரு விஷயத்தையும், அதன் பின்விளைவுகள் அறிந்தபிறகு செய்யவேண்டும் என்பதுதான் என் கோரிக்கை....
இந்த சட்டப்பிரிவு 377 என்பது திருமணமான நபர்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை நண்பர்களே... முகம் தெரியாமல் நீங்கள் நித்தமும் சாட் செய்யும் எந்த நபரின் மூலமாகவும் உங்களுக்கு அந்த ஆபத்து வரலாம்... ஒரே ஒரு புகைப்பட ஆதாரம், உங்களை பத்து வருடங்கள் சிறையில் தள்ள போதுமானது என்பதை அறிவீர்களா?... அந்த சட்டப்பிரிவை காரணம் காட்டி சமூக விரோத கும்பல் உங்களை மிரட்டி பணம் பறிக்கும் ஆபத்தும் இருக்கிறது... (அப்படி மிரட்டப்படும் நபர்கள் யாரேனும் இருந்தால் சொல்லவும், அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் வாயிலாக ஏதேனும் உதவிகளை நாட நான் உதவி செய்கிறேன்).
ஆகையால் சாட்டிங், டேட்டிங் என எளிதாக கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளில் உங்களை இழந்துவிடாதீர்கள் என்பதுதான் மேற்சொன்ன நிகழ்வுகள் நமக்கு உரத்து சொல்லும் உண்மைகள்...
சட்டமும், சமூகமும் நமக்கு ஏற்ப மாறும் காலம் வரும்வரை ஐந்து புலன்கள் மட்டுமல்லாது, ஆறாவது புலனையும் கொஞ்சம் அடக்கி வாழத்தான் வேண்டும்...
நேற்று பெங்களூர் மருத்துவர், இன்று பெங்களூர் மென்பொறியாளர்.... நாளை?... நீங்களாகவோ, நானாகவோ கூட இருக்கலாம்... எந்த தருணத்திலும் நம் கழுத்தை பதம்பார்க்க காத்திருக்கும் கத்திதான் சட்டப்பிரிவு 377… அந்த சட்டப்பிரிவு 377 தொடர்பாக பலரும் விவாதிப்பதை பார்த்திருப்பீர்கள்... அந்த குரல்கள் எல்லாம் நமது உரிமைகளுக்காக உரத்து ஒலிக்கும் குரல் என்பதை உணரவேண்டும்.... ஆக, இந்த சட்டப்பிரிவை எதிர்க்க நடக்கும் போராட்டங்கள் மற்றும் அமைப்புகளின் முன்னெடுப்புகளுக்கு நமது ஆதரவை கொடுத்திடுவோம்... இன்றைக்கு பெங்களூரின் நிகழ்வுகள், நாளைக்கு உங்களூரிலும் நடந்திட வெகுகாலம் ஆகிவிடாது... நிதர்சனத்தை உணர்ந்து, கொஞ்சம் கவனத்தோடு நடந்திடுங்கள்...!

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. விஜய்
    உங்கள் கருத்து நூறு சதம் சரியானது. ஒரு பெண்ணின் வாழ்க்கை, கனவு, நம்பிக்கையை கெடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. நிச்சயமாக இந்த வழக்கில், பையன் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றவாளிகளாக உள்ளனர்.
    கே என்பதனால் நாம் அனுதினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று திருமணம் பற்றிய பேச்சுகள். அலுவலகத்தில், நண்பர்கள் மத்தியில், குடும்பத்தில் இப்படி எல்லா இடங்களிலும் இதனால் எழும் கேள்விகள், ஏளனங்கள் எத்தனை எத்தனை. இது போன்ற அவமானகளை தவிர்க்க பலர் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் பல பொது நிகழ்ச்சிகளையும் தவிர்க்கின்றனர், நண்பரகள், உறவினர்கள் தொடர்பைகூட துண்டிக்கின்றனர்.
    இப்படி போன்றே விஷயங்களைலிருந்து தப்பிக்க நம்மில் பலர் செய்யும் தவறுதான் திருமணம். இவ்வாறு செய்யும் மனவாழ்க்கையை சிலர் ஒருவாறு சமாளித்தாலும் அவர்களால் தங்கள் உணர்வுகளை மறக்கவும் மறைக்கவும் முடியுமா? இல்லை உணர்ச்சிகளை அடக்கத்தான் முடியுமா?
    திருமணமே செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அதன் பிறகு அந்த பெண்ணுக்கு நீங்கள் திரோகம் செய்யாமல் இருக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும் . சற்றே யோசித்து செயல் படுங்கள். வீனில் குடும்ப கௌரவம், மிரட்டல் போன்ற விஷயங்களில் சிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.
    விஜய் சொன்னது போல், திருமணம் ஆனவரோ, ஆகாதவறோ, நம்மை வைத்து பணம் பறிக்கும் கும்பல்களுக்கு இது போன்ற ஒன்று வரப்பிரசாதம். சட்ட அங்கீகாரம் கிடைக்காத வரைக்கும் நாம் தான் நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக விளக்கமாகவும், தெளிவாகவும் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள் பிரபு.... நிச்சயம் நம்மவர்கள் இதனை புரிந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம்...

      Delete
    2. எனது உறவினருக்கும் இதே சம்பவம் நடந்துள்ளது..என்னிடம் ஆதாரங்கள் உள்ளன..

      இது தொடர்பாக நான் யாரைத் தொடர்பு கொள்வது..

      Delete
  3. yes na u r absolutely rit... neenga sonna madhiri naama yar kuda irukom nu dha pakaranga.. epo dha idhellam maarum??:-(

    ReplyDelete
  4. yen ? antha iruvarukkum aana kathi thaan naalai namkkum enbathil enakku udanbaadu illai.
    pootiya araiyil naalu suvattrukkul nadkum nigalvai...... antharanga unarvugulai kelvi ketkka entha oru sattathtukkum athigaaram illai. en padukkai arayayi yetti parkkum sattam , mumbaiyilum, kolkattavilum en paalyial thozhilukkendru oru pagudhiyayi odhukkiyathai aatchebikkavillai? athai sattavirodham endru niruththavillai?
    US il ithu pondra oru orina serkaiyaalarin antharangaththai padam pidiththa kaaranuththukkaaga tamil naattai serntha oru maanavan thookumedia varai sendru uyir petrrathai padiththiruppom.
    ithu pola spying on someone's privacy should be punishable. Though it is easy to say that the person should not have married.It is difficult in our society.
    I strongly feel marriage /weddings cannot interfere and change someone's ideology and privacy. though married the husband and wife should be allowed to have their own privacy respected. In this case if the husband has committed a crime, then the wife too had equally committed a crime by spying his privacy.
    Even in this case the wife can only sue for divorce. impounding them under 377 is not fair. the provisions of 377 is wrongly used
    The NGOs who support or who are pro-LGBT should fight for this case.

    ReplyDelete
  5. you are absolutely rit Mr. Sundhar... as u told wat tat wife did is really unfare.. better she may approach fr divorce.. she totally spoiled her husband life and ofcourse her life too...

    ReplyDelete
  6. எனது உறவினருக்கும் இதே சம்பவம் நடந்துள்ளது..என்னிடம் ஆதாரங்கள் உள்ளன..

    இது தொடர்பாக நான் யாரைத் தொடர்பு கொள்வது..

    ReplyDelete