Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 6 September 2013

நம்மவர்களும் குழந்தை வளர்க்கலாம்....!


ஒரு குடும்பம் என்பது முழுமைபெறுவது “குழந்தைகள்” மூலம்தான்.... இன்றைக்கும் ஒருபால் ஈர்ப்புக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் முன்வைக்கும் வாதம் கூட “குழந்தை இல்லாத குடும்பம் எப்படி நிறைவான வாழ்க்கையை கொடுக்கும்?” என்பதுதான்.... நம் நாட்டில் இன்னும் ஒருபால் ஈர்ப்பை கூட அங்கீகரிக்கவில்லை என்னும் போது குழந்தை பற்றி நாம் யோசிப்பதில் அர்த்தமில்லை.... ஆனாலும், என்றைக்காவது அதைப்பற்றி பேசும் சூழலும் வரும் என்ற நம்பிக்கையில் ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளின் வாழ்க்கையில் குழந்தைகளின் பங்கை பற்றி இங்கே சொல்கிறேன்.....

ஒருபால் தம்பதிகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் வழிவகை பல நாடுகளில் உள்ளன... அதே போல செயற்கை முறையில் கருத்தரித்தல் (artificial insemination), வாடகை தாய் மூலம் குழந்தை பெறுதல் (surrogacy) மூலமும் பல ஒருபால் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்... அத்தகைய குழந்தைகளை வளர்க்கும் பெற்றோரும், அந்த பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளும் பொதுவான எதிர்பால் (heterosexual families) குடும்பங்களை போலவே நல்ல முறையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...

சமீப காலங்களில் ஒருபால் ஈர்ப்பு தம்பதிகள், குழந்தைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளது.... குடும்ப அமைப்பு என்பது குழந்தைகள் மூலமே நிறைவாகிறது, அதற்காக தாங்கள் குழந்தைகளை வளர்ப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்... அதன்மூலம் தம்பதிகளுக்குள் இடையிலும் ஒரு அதிகமான பிணைப்பு ஏற்படுவதாக நம்புகிறார்கள்....ஆனால், அத்தகைய பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் சட்ட ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நிறைய சிக்கல்களும் இருக்கிறது... பெரும்பாலும் லெஸ்பியன் பெண்கள் செயற்கை முறையில் தாங்களே கருத்தரித்து குழந்தைகள் பெறுகிறார்கள்.... ஆண்கள் பெரும்பாலும் தத்தெடுத்தும் , சிலர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றும் வளர்க்கிறார்கள்.... கடந்த முப்பது வருடங்களாக இந்த முறைகள் மூலம் பல ஒருபால் ஈர்ப்பாளர்கள் குழந்தைகளை வளர்ப்பது அதிகரித்து வருகிறது....

 இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, நார்வே, கனடா, பெல்ஜியம், பிரேசில் என்று இன்னும் பல நாடுகள் ஒருபால் ஈர்ப்பு தம்பதிகள் குழந்தைகள் தட்தெடுப்பதை, வளர்ப்பதை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ளன....

ஒருபால் தம்பதிகளுடன் வளரும் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள்.... பெற்றோர்கள் இருவருமே ஆண், அல்லது இருவருமே பெண் என்னும் நிலையில் தம்பதிகள் இருவருமே குடும்ப பொறுப்புகளையும், குழந்தையை பராமரிப்பதிலும் சரிசமமான பங்கை வகிக்கிறார்கள்.... அத்தகைய சூழலில் வளரும் குழந்தை பொறுப்புள்ள இளைஞராக வளர முடியும் என்கிறார்கள்....

சிலர் “ஒருபால் ஈர்ப்பு நபர்கள் குழந்தை வளர்த்தால், அந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை” என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள்.... அவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டுமானால், இப்போது சட்ட ரீதியாக குழந்தைகளை வளர்க்க ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளுக்கு உரிமை கொடுத்துள்ள நாடுகளில் அப்படி வழக்குகளும், குற்றச்சாட்டுகளும் பதிவாகி இருப்பது மிக மிக சொற்ப அளவே.... அதுவும் எதிர்பால் தம்பதிகளின் குழந்தைகளுக்கு உண்டாகும் பாதிப்பை விட, இப்படிப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பாகவே வளர்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.... பெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாயும், மகளோடு பல வருடம் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட தந்தையும் வாழ்வது நம் நாட்டில்தான்... அதனால், தவறு என்பது குழந்தையை வளர்க்கும் ஒருபால் ஈர்ப்பு நபர்கள் கையில் இல்லை... அது ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பை பொறுத்தது....
எதிர்பால் தம்பதிகள் குழந்தையை வளர்ப்பதைவிட, ஒருபால் தம்பதிகள் குழந்தை வளர்ப்பதில் அவர்களுக்கு பொறுப்புகள் அதிகம் உண்டு.... குழந்தை வளரும்போது தங்கள் பெற்றோர்கள் ஒருபால் தம்பதிகள் என்ற உண்மை குழந்தைக்கு புரியும்போது அதற்கு மனக்குழப்பம் உண்டாகலாம்... அதனால், வளரும் போதே அந்த குழந்தைகளுக்கு தங்கள் வாழ்க்கை பற்றியும், அந்த குழந்தையின் பிறப்பு பற்றியும் தாங்களே சொல்லி புரிய வைக்க வேண்டும்... மேலும், அத்தகைய குழந்தைகள் வளர்ந்து சமூகத்தை அணுகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் முன்பே சிந்தித்து, அவர்களை அத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் மன திடத்தையும், பக்குவத்தையும், அறிவையும் உண்டாக்கும் விதம் வளர்க்க வேண்டும்....
சக குழந்தைகளுக்கு மத்தியில் தாங்கள் அந்நியப்பட்டு இருப்பதைப்போல அவர்கள் உணராத அளவிற்கு அந்த குழந்தைகளுக்கு தெளிவான மனநிலையை கொடுக்க வேண்டும்....
பெற்றோர்களால் முடியவில்லை என்றால் அதற்கான அமைப்புகள் மூலம் கலந்தாய்வு கொடுக்கலாம்..... மேற்குலக நாடுகள் பலவற்றிலும் இத்தகைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒன்றாக வளரவிடுகிறார்கள்.... அதற்காகவே பல அமைப்புகள் அங்கு இருக்கின்றன... வாரம் ஒருமுரோ ஒன்றுகூடி அவர்கள் பேசி, விளையாடி குழந்தைகளை குழப்பத்திலிருந்து மீட்டிட வழி செய்கிறார்கள்... அதன்மூலம் தான் அந்நியப்படவில்லை, இதுவும் இயல்பான ஒன்றுதான், தன் பெற்றோர்களை போலவே மற்ற சிலரும் இருக்கிறார்கள் என்று அந்த குழந்தைகள் உணர்ந்திட வழிவகையாக இருக்கும்....
ஆரம்ப காலத்தில், முறையான தளத்தை நாம் அமைத்து கொடுத்தால், நிச்சயம் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தில் அது உறுதியான மனநிலையை உருவாக்கும்.....
COLAGE (Children of Lesbians and Gays Everywhere) என்கிற அமைப்பு இத்தகைய குழந்தைகளுக்காகவே  1993ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது..... சான் பிரான்சிஸ்கோ'வில் இதற்கான தேசிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.... இந்த குழந்தைகள் தேவைகள், சமூகத்தில் அவர்களை ஒன்றாக இணைக்கும் செயல் திட்டங்கள் என்று கொலாஜ் அமைப்பு விஸ்தரித்து செயல்பட்டு வருகிறது.... உலகம் முழுக்க கிளைகளை பரப்பி, பல குழந்தைகளை வழிநடத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.....

"கே பெற்றோர்களுக்கு பிள்ளையாய் இருப்பது ஒரு சவாலாக இருக்கிறது.... அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.... என்னிடம் அவர்கள் உண்மையாக இருக்கிறார்கள், நானும் அவர்களுடன் உண்மையாக இருப்பேன்" இதை சொன்னது பதினைந்து வயது சிறுமி ஜேன் ட்ரக்கர்.... இவளுடைய பெற்றோர் ஒரு "கே".....
பொதுவாக ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்காத நாட்டில் வாழும் நாம், அவர்கள் திருமணம் முடிந்து, இல்வாழ்க்கை நடத்தி, குழந்தைகள் வளர்ப்பதை அதிசயமாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.....
ஆனால் நான் மேற்சொன்ன அந்த சிறுமியின் அந்த நான்கு வரி ஒப்புதல் என்பது, இன்று ஒருபால் ஈர்ப்பை எதிர்க்கும் பலருக்கும் சவுக்கடி கொடுப்பதைப்போல உள்ளது..... தன்னிடம் உண்மையாக இருக்கும் ஒரு பெற்றோருக்காக தான் உண்மையாக இருப்பதாக அவள் சொல்லும் வார்த்தைகளை, நம் நாட்டில் இப்படி கணினியின் திரையில்  படிக்க மட்டுமே முடிந்த ஒரு சூழலில் நாம் இருக்கிறோம்.....
நமக்கான நல்லதொரு தளத்தை அமைத்துக்கொடுக்கும் தருணத்தில், இந்தியாவிலும் ஒருபால் ஈர்ப்பு திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டு, இங்கும் குழந்தை தத்தெடுக்கும் வாய்ப்பு உருவாகும் என்று நம்புவது மட்டுமே இப்போது நம்மால் முடிந்த ஒரே செயல்.....
நம்புவோம்!... நம்பிக்கைதானே வாழ்க்கை!!

4 comments:

  1. 1776 ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது ( இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு நூற்றி எழுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்)! ஆனால், இன்னும் அமெரிக்காவின் அனைத்து ஐம்பது மாநிலங்களும் கூட ஓரினச் சேர்க்கையை சட்ட ரீதியாக ஒப்புக்கொள்ளவில்லை!

    அமெரிக்காவை முன்னுதாரணம் காட்டுவது அந்த நாடு மிகவும் வளர்ந்த சுதந்திரமான முற்போக்கான நாடு என்பதால் மட்டுமே!

    நீங்கள் சொல்வது போல் அந்த குழந்தையை சிறு வயதில் இருந்தே ஒருபால் பற்றியும் தன் பெற்றோர் மற்றவரில் இருந்து வேறுபட்டவர் என்பதை சிறு வயதில் இருந்தே போதித்து வந்தாலும் அந்த பிள்ளை மற்ற பிள்ளைகள் போல் சாதாரண வாழ்வை வாழ்வது கடினம்! சிறு வயதில் இருந்தே கலந்தாய்வு, உதவி என்று குழந்தைப் பருவத்தின் INNOCENCE இல்லாமலே தான் வளரும் அந்த குழந்தை!

    இது நிச்சயம் வரவேற்க பட வேண்டிய விடயம்! ஒரு குழந்தை ஒரு தம்பதியின் வாழ்வில் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நானும் கண்கூடாக கண்டுள்ளேன்! சம்பாதிக்க ஒரு உந்துதல், வாழ்வை போராடி வாழ ஒரு பிடிப்பு, அந்த பிள்ளையை மகிழ வைத்து வளர்ப்பதில் அலாதி ஆனந்தம்!!

    இவை எல்லாம் நம்மவர்களுக்கும் நிச்சயம் கிடைக்க வேண்டும்!அது தான் நம் எல்லோரின் ஆதங்கமும் அவாவும்!

    ஆனால், அமெரிக்காவிற்கே இத்துணை ஆண்டுகள் ஆகியுள்ளது?! இந்தியாவில் பிற்போக்குவாதமும், மூட பழக்கங்களும், ஜாதி, மத, இன வெறுப்பும், கொலை வெறியும் தலை விரித்து ஆடுகிறது! இங்கே நம்மை அங்கீகரிக்கும் நாளைப் பார்க்கவே நீங்களும் நானும் இருப்போமா என்று தெரியவில்லை!

    "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நந்திதா, தன் பெண்ணிடம் சொல்லி விடை பெறும் வசனம் நினைவுக்கு வருகிறது!

    "என்டைகாவது ஒரு நாள் இது யுத்தம் இல்லாத பூமியாக மாறும்!விடியல் வரும்"!

    அது போல் இந்தியாவின் பிற்போக்குவாதிகளும் கண்களை திறந்து நாமும் மிருககங்கள் அல்ல காதல் செய்யும் மனிதர்கள் என்று உணர்த்து ஒருபால் திருமணத்தையும் ஒரு பால் தம்பதிகள் குழந்தை பெறுவதையும் அங்கீகரிக்கும் என்று உங்களோடு சேர்ந்து நம்புகிறேன்! வேண்டுகிறேன்!

    அதைக் காண நம் புறக் கண்கள் இல்லாமல் போனாலும்! நம்புவோம்!

    நன்றி நண்பா!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துகளுக்கு நன்றி சந்திரன்.... அமெரிக்காவை எல்லா விஷயத்துக்கும் நாம் முன்னுதாரணம் காட்டக்கூடாது என்பது உண்மைதான்... இங்கு நாம் அமெரிக்காவை மட்டும் பார்க்கக்கூடாது... உலகின் பல நாடுகள் பல படிகளை கடந்து போய்கிட்டு இருக்கு, நாம இன்னும் கீழே நின்று போகலாமா?னு யோசிச்சுட்டு இருக்கோம்... நீங்கள் சொல்வதை போல "விடியல் ஒருநாள் வரும்" என்று நம்புவோம்...

      Delete
  2. இதலாம் சாத்தியமாச்சுனா ரொம்ப சந்தோஷம் தான். ஒரு குழந்தைக்கு அம்மாவால் கிடைக்கூடிய அண்பை நம்மால் கொடுக்கமுடியுமானு தெரியல. ஒரு வேளை வருண்,விக்கி மாதிரி நல்ல புரிதலும் காதலுமிருந்தால் கண்டிப்பா சாத்தியமாகலாம் விக்கி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சேகர்...

      Delete