Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 2 October 2012

நெஜமாவா சொல்றீங்க - பகுதி 2

சிலநாட்கள் கழித்து பொங்கல் விடுமுறைக்கு சாந்தனை அழைத்தான் பிரபா.... சாந்தனோ தயங்கியபடியே மறுத்தான்....
“தீபாவளிக்குதான் உன்ன கூப்பிட முடியல.... மாமாவுக்கு தலை தீபாவளின்னு மதுரை போயிட்டதால உன்ன கூப்பிட முடியல.... இப்போவாச்சும் வாடா... உன்ன கூட்டிட்டு போயி நான் ஒன்னும் ரேப் பண்ணிட மாட்டேன்....” என்று சிரித்தான் பிரபா....
முறைத்த சாந்தன், “ஆமாமா நீ ரேப் பண்ணிட்டாலும்.... சரிடா வரேன்” என்றான்....

“அப்பாடா.... இந்த ஒரு வருஷத்துல என்னிக்காவது நான் சொல்றதுக்கு சொன்னஉடனேயே நீ ஒத்திட்டிருக்கியா?.... நானா மறுபடியும் மறுபடியும் கம்பல் பண்ண வேண்டி இருக்கு.... சரி கிளம்பு போகலாம்” என்று சாந்தனை அழைத்து சென்றான் பிரபா....
இம்முறை பிரபாவின் அழைப்பை ஏற்க மறுத்ததன் காரணம், கடைசியாக பிரபாவின் வீட்டில்தான் ஒரு பூகம்பமே தங்கள் இருவருக்குள்ளும் வெடித்தது.... அதனால் இம்முறை கொஞ்சம் பயந்தான்... ஆனாலும், பிரச்சினையின் சூத்திரதாரியான அகிலன் இம்முறை இல்லாததால் அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில் பிரபாவுடன் கிளம்பினான் சாந்தன்.... ஊருக்குள் நுழைகையில் புகை மண்டலமாக இருந்தது... பதறிய சாந்தன், “என்னடா ஆச்சு?.... எதுவும் பிரச்சினையா?... ஆமிக்காரன் எவனாவது செஞ்ச வேலையா?” என்று பதற்றத்துடன் கேட்டான்.... இதை அதிசயித்து பார்த்த பிரபா பதில் சொல்வதற்குள் சுதாரித்த சாந்தன், “ஐயோ சாரிடா.... நான் ஏதோ நினைவுல எங்க ஊர் நியாபகத்துல சொல்லிட்டேன்..... என்ன ஆச்சு?” என்றான்.... அதை சொல்கையில் சாந்தனின் கண்களில் தெரிந்த ஒரு வகைபடுத்த முடியாத உணர்வை கண்டான் பிரபா.... அது சோகமா? கோபமா? ஆற்றாமையா? ஏமாற்றமா? என்னவென்று தெரியவில்லை... ஆனாலும் அந்த நினைவை திசை திருப்ப முயன்ற பிரபா, “அது ஒன்னுமில்லடா.... நம்ம பயலுக போகி கொண்டாடுறான்கலாம்..... குப்பைகள்லேந்து வண்டி டியூப் வரைக்கும் கண்டதையும் எரிச்சு ரொம்ப அழகா கொண்டாடுவாங்க..... சரி விடு, இதை எவனாச்சும் கேட்டா சண்டைக்கு வந்திடுவாங்க..... எலக்சன் வேற வரப்போகுது, இந்த நேரத்துல எதுவும் நாம மாட்டிக்க வேணாம்....” என்று வீட்டை நோக்கி அழைத்து சென்றான் பிரபா.... செல்லும் வழியெல்லாம் கரும்பு சக்கைகள் சாலைகளை நிரப்பிக்கிடந்தது.... வீடுகள் எல்லாம் வெள்ளை அடித்து பளிச்சென இருந்தது..... பிரபாவின் வீட்டு வாசலில் மறுநாள் பொங்கல் வைப்பதற்காக அம்மா இடத்தை தேர்வு செய்து சுத்தம் செய்ய சொல்லிக்கொண்டிருந்தார்.... சாந்தனை பார்த்ததும், “வாப்பா.... நல்லா இருக்கியா?... என்ன இங்கல்லாம் வரவே மாட்ற?.... அடிக்கடி வாப்பா” என்று வாஞ்சையுடன் வரவேற்றார்... நெகிழ்ந்தபடியே உள்ளே சென்ற சாந்தன், உள்ளே பிரபாவின் மாமாவை பார்த்ததும் திகிலடித்து நின்றான் .... எதையாவது கிண்டல் செய்யும் மாணிக்கத்தை பார்த்து எப்போதுமே பயப்படுவான் சாந்தன்.... அதுவும் மாணிக்கம் பற்றி பிரபா சொன்ன கதைகளை கேட்ட பிறகு கொஞ்சம் அதிகமாகவே பயந்தான்.... சாந்தனை பார்த்த மாணிக்கம், “வாங்க தம்பி... நல்லா இருக்கியளா?... ஆளே பாக்க முடியல.... நல்லா வெடக்குஞ்சா இருக்கு.... ட்ரை பண்றீங்களா?” என்றான்....

எச்சிலை விழுங்கிய சாந்தன், “என்ன?... என்னது?” என்றான்....
“அட, நல்ல வெடக்கோழி குஞ்சா அடிச்சிருக்கு, சாப்பிடுறீங்கலான்னு கேட்டேன்.... எல்லாதையுயம் நீங்களே தப்பா புரிஞ்சுகிட்டு என்னையவே தப்பு சொல்லாதிங்க” என்று சிரித்துக்கொண்டிருக்கும்போது, அறைக்குள் இருந்து “என்னங்க..... இங்க வாங்க” என்று ஜனனியின் குரல் கேட்டதும், நொந்து கொண்ட மாணிக்கம், “பாத்தியாப்பா, நான் பாட்டுக்கு தினம் ஒரு ஹோட்டல்னு நிம்மதியா சாப்பிட்டுட்டு இருந்தேன்.... கல்யாணம்னு ஒன்னு பண்ணி வச்சு, இப்டி ஒரே சாப்பாட்டை எம்புட்டு நாள்தான் தின்கிறது.... இப்பவும் நான் ஒரு அர்த்தத்துலதான் சொல்றேன், நீயா தப்பா புரிஞ்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல.... “என்று மாணிக்கம் சொல்லிக்கொண்டிருக்கையில் மீண்டும் அறைக்குள் இருந்து , “இப்ப வரீங்களா? இல்லையா?” என்ற ஜனனியின் குரல் கொஞ்சம் அழுத்தமாக விழவே பதறியபடி அறையை நோக்கி விரைந்த மாணிக்கம் செல்வதற்கு முன் சாந்தனை பார்த்த மாணிக்கம், “உனக்கு ஹோட்டல்ல எதாச்சும் வேணுமா?” என்று சிரிக்க.... சாந்தனோ தலைக்கு மேலே இருகைகளையும் கூப்பியபடி “வேண்டாம்” என்று மறுத்தான்... மாணிக்கத்தின் செய்கைகளை ரசித்து சிரித்தவாறே நின்ற சாந்தனை பார்த்த பிரபா, “என்னடா சிரிக்குற? மாமாவை பாத்தியா?” என்றான்...
ஆமோதிப்பதைப்போல தலை அசைத்த சாந்தன், “இன்னும் அவர் மாறவே இல்ல” என்றான்....
“அப்டிலாம் இல்லடா.... இப்பல்லாம் வெறும் வாய் வார்த்தை மட்டும்தான்... மத்தபடி எந்த வம்பு தும்புக்கும் போறதில்ல.... அத்தை நெறையவே மாத்திடுச்சு” என்று சிரித்தான் பிரபா....
சிரித்தபடியே இருவரும் மாடியில் இருந்த அறைக்கு சென்றனர்.... திருமணம் முடிந்த பின்பு மாணிக்கத்தின் அறை கீழே வந்துவிட்டதால், பிரபா மாடிக்கு சென்றுவிட்டான்.... இது இருவருக்கும் இன்னும் தோதாக இருந்தது.... அன்றைய பொழுது போகும்வரை பேசிக்கொண்டே இருந்தனர்.... நள்ளிரவை தாண்டி உறங்கிய இருவரும் , விடிந்ததும் பொங்கலுக்காக எழுந்து குளித்து கீழே சென்றனர்.... இருவரும் செல்லும்போதே பொங்கல் வைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் கீழே முடிந்திருந்தது.... சூரியனை வணங்கிவிட்டு ஜனனிதான் பொங்கல் வைத்து இறக்கினாள்..... எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு மகிழுந்து வீட்டின் முன் நின்றது.... இறங்கியவர்கள் பிரபாவின் மாமா குடும்பம்.... பொங்கலுக்காக தங்கை வீட்டிற்கு சீர் கொண்டு வரும் சாக்கில் வந்தனர்.... பிரபாவின் மாமா, அத்தை இருவரையும் தவிர்த்து அங்கு நின்ற ஒரு இளம்பெண்ணை நாம் முன்பே அறிவோம்... ஆம், அவள்தான் அமுதா.... பிரபாவுக்கும் அமுதாவிற்கும் திருமணம் செய்து வைக்கத்தான் மாமா இப்படிப்பட்ட “மாமா” வேலைகளை செய்கிறார்.... அமுதாவை வீட்டில் விட்டுவிட்டு மாமாவும் அத்தையும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டனர்.... ஆரம்பத்தில் இதை பொருட்படுத்தாத சாந்தன், நேரம் செல்ல செல்ல கொஞ்சம் கவலை கொண்டான்.... அதற்கு காரணம் பிரபாவின் அம்மா அமுதாவை “மருமகளே” என்று விழிப்பதும், பிரபாவிடம் அமுதா “அத்தான் அத்தான்” என்று குழைவதும், பிரபாவும் அவளிடம் விளையாட்டாக வம்பிழுப்பதும் சாந்தனை இன்னும் மனம் நோக வைத்தது.... இதெல்லாம் காண மனம் வராதவனாக தலை வலிப்பதாக கூறி மாடிக்கு சென்று படுத்துவிட்டான் சாந்தன்... மதிய வேளையில் கீழே இறங்கி வந்தவனுக்கு வீட்டிற்குள் பேசிக்கொண்டிருந்த ஒரு குரல் எங்கோ கேட்டது போல இருந்தது.... யாராக இருக்கும் என்று யூகிப்பதற்கு வழிகொடுக்காமல் அந்த பேச்சுக்கு உரியவனே வெளியே எதேச்சையாக வர மேலும் கோபம் கொண்டான் சாந்தன்.... காரணம், அங்கு நின்றது அகிலன்.... பிரபாவின் அம்மாவோடும், மாமாவோடும் பேசிக்கொண்டிருந்தான் அகிலன்... சாந்தனை பார்த்ததும் சம்பிரதாயத்துக்காக சிரித்தான் அகிலன்.... சாந்தனும் சிரித்தான்.... வேறு வழி இல்லாமல் அந்த இடத்தில் அமரவேண்டிய நிர்பந்தத்தால் அமர்ந்தான் சாந்தன்.... பிரபாவை தேடினான்.... பிரபா ஒரு வேலையாக வல்லம் வரை சென்றிருப்பதாக அம்மா கூறியதால் பல்லை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சாந்தன்....
அகிலன் சும்மா இருப்பானா?.... வந்த வேலையை தொடங்கனுமே.... அதற்கு கஷ்டம் கொடுக்காமல் ஆண்டவனே அமுதாவை பிரபாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாக நினைத்து தனக்குள் சிரித்த அகிலன் ஒருவாராக தொடங்கினான்....
"அமுதா ரொம்ப நல்ல பொண்ணா இருக்காம்மா... இந்த காலத்து பொன்னுங்கல்லாம் பொன்னுகலாவா இருக்குதுங்க.... அமுதா இந்த வயசுலேயே ரொம்ப பொறுப்பா இருக்கு... நம்ம பிரபாவுக்கு சரியான பொருத்தம்தான்மா" என்று கமலா அம்மாவை பார்த்து கூறிய அகிலன் சாந்தனை ஓரக்கண்ணால் பார்க்க தவறவில்லை.... இன்னும் சிறுத்துப்போனது சாந்தனின் முகம்.... அகிலனின் விஷமம் புரியாத அம்மாவும், "ஆமாம்பா... என் மருமக ரொம்ப பாசக்காரி... எங்க அண்ணன் மாதிரி இல்லாம, எல்லாத்துக்கும் விட்டுக்கொடுத்து பழகுரவ.... பிரபாவும் இவளோட நல்லாத்தான் பழகுறான்... எப்டியாவது உன் வாய் முகுர்த்தம் பலித்து நல்லது நடந்தா சரி..." என்று அருகில் நின்ற அமுதாவை பார்த்து புன்னகைக்க, அமுதாவோ வெட்க மிகுதியால் சிரித்துக்கொண்டே சமையலறை நோக்கி ஓடினாள் அமுதா.... சாந்தனின் முகம் மேலும் இறுக்கமானது, கண்கள் ஏனோ கண்ணீருக்காக காத்திருப்பதைப்போல இருந்தது..... இதைக்கண்டு உளம் மகிழ்ந்த அகிலன் இன்னும் அதை ரசிக்க விரும்பியவனாக, "ஒன்னும் கவலைப்படாதிங்கம்மா, எல்லாம் நல்லபடியா நடக்கும்.... பிரபா நிச்சயம் இதுக்கு ஒத்துக்குவான்" என்றான் அம்மாவை பார்த்து....
இப்போது குறிக்கிட்ட சாந்தன், "ஏம்மா இப்ப பிரபாவுக்கு கல்யாண பேச்சு பேசுறீங்க?.. இப்போதானே காலேஜ் படிச்சிட்டு இருக்கான்.... படிச்சு முடிச்சு , நல்ல வேலைக்கு போயி அப்புறம் பேசலாம்ல.... அதோட அமுதாவும் சின்ன பொண்ணுதானே... இப்பதான் பதினொன்னாவது படிக்குது.... அப்புறம் ஏன் இவ்ளோ அவசரம்" என்று ஏதோ அவசரத்தில் படபடப்பாக கூறி முடித்துவிட்டான்.... அம்மாவின் முகம் கொஞ்சம் மாறியது.... நல்ல விஷயம் பேசும்போது இப்படி அபசகுனமாக பேசுகிறானே என்கிற எரிச்சலாக இருக்கலாம்.... இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாத அம்மா, "இல்லப்பா... எனக்கும் வயசாகிடுச்சு.... இன்னும் ஒரு வருஷமோ , ரெண்டு வருஷமோதான் தாங்கும்.... அதுக்குள்ள அந்த பய கல்யாணத்த பாத்திடலாம்னுதான் ஒரு ஆசை.... இப்ப அவசரம் இல்லைனாலும், ரெண்டு வருஷத்துக்கு அப்புறமாவது பண்ணிடனும்.... அண்ணன் இப்பவே பேசி முடிக்கணும்னு ஒருபக்கம் நெருக்குராறு.... அதான் இப்ப பேசி முடிச்சிட்டு, ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்புறமா கல்யாணம் பண்ணிடலாம்னு ஒரு ஆசை.... பிரபாவும் இதுக்கு ஒத்துக்குவான்னு நெனக்கிறேன்.... நீங்களும் கொஞ்சம் சொல்லி அவனை ஒத்துக்க வச்சிட்டா, பங்குனி மாசமே பாக்கு மாத்திக்கிடலாம்... " என்று விளக்கினார்.... இன்னும் சாந்தன் மனம் நொந்தவனாக அங்கிருந்து கிளம்ப முயன்றவனை அழைத்த அகிலன் , "சாந்தன், நம்மதான் அவன்கிட்ட சொல்லனும்.... அம்மா சொன்னதை கேட்டீல்ல... நானும் பேசுறேன், நீயும் பேசு..." என்று ஒரு விஷமப்புன்னகை உதிர்த்தான்.... தலையை மட்டும் அசைத்தவனாக ஆமோதிப்பதைப்போல சொல்லிவிட்டு மாடிக்கு கிளம்பினான் சாந்தன்.... வந்த வேலையை இனிதே முடித்த மகிழ்ச்சியோடு பிரபாவிடம் சொல்லிக்கொள்ளாமல் கூட தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான் அகிலன்.... சாந்தனின் மனம் மிகவும் துயர் அடைந்தது.... பிரபாவுக்கு திருமண பேச்சு தொடங்கிவிட்டது, இனி தான் அவனிடமிருந்து விலக நேரிடுமா?... இதை எதையும் யோசிக்காமல் பிரபாவிடம் காதல் கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?... இதனை பிரபா எப்படி சமாளிப்பான்?... தான் நேசிப்பவர்கள் மட்டும் ஏதோ ஒரு சூழ்நிலையில் நிரந்தரமாக தன்னைவிட்டு பிரிந்துவிடுகிறார்கள்.... அந்த வரிசையில் பிரபாவும் சேர்ந்துவிடுவானா?.... என்று மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுந்தன, கண்ணீர் மட்டுமே அதற்கெல்லாம் பதில் சொல்வதைப்போல தாரை தாரையாக கொட்டியது..... அந்த துயரத்திலெப்படியோ உறங்கிப்போனான்.... கனவிலும் ஏனோ துயர் அவனை துரத்தியது... ஏதோ ஒரு பாலைவனம் போன்ற இடம், அங்கே பிரபாவுடன் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணம், ஆயிரம் ஆயிரம் விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்தது.... அந்த குண்டுகளில் ஒன்று பிரபாவின் மீது விழவே, மறைந்து போனான் பிரபா.... எவ்வளவோ கத்துகிறான், கதறுகிறான், பிரபாவை காணவில்லை.... அதிர்ச்சியில் உரைந்தவனாக அழுதான்.... அந்த நேரத்தில் சாந்தனின் முடிகளை யாரோ தொடுவதைப்போல உணர்ந்து, திடிக்கிட்டு விழித்துபார்த்தான்.... அருகில் பிரபா.... அப்பாடா! நடந்ததெல்லாம் வெறும் கனவு, என்னவன் இன்னும் என்னுடன்தான் இருக்கிறான்... ஆனால், இன்னும் எவ்வளவு காலம் என்னுடன் இருப்பான்? என்ற கேள்விகள் அவனை துழைத்தெடுக்க தன்னை அடக்க முடியாமல் பிரபாவின் மீது சாய்ந்து அழுதான்.... அந்த அழுகைக்கான காரணம் புரியவில்லை பிரபாவிற்கு, ஆனாலும் சாந்தனை தன் மார்போடு அனைத்து, தான் இருப்பதாக அரவனைத்தான்.... பின்னர் காரணத்தை கேட்டபோது அந்த கனவை மட்டும் விவரித்தான், ஏனோ அகிலனை பற்றி கூறி பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை.... கனவை கேட்டதும் பிரபாவிற்கு சாந்தனின் மீது பரிவு உண்டானது.... இன்னும் அவன் போர் சூழலை மறக்கவில்லை.... எந்த காலத்திலும் அவனை துறக்க கூடாது என்று தீர்மானித்தவனாக கட்டி அணைத்தான்..... அன்று முழுவதும் சாந்தன் கலையிழந்தே காணப்பட்டான்.... மறுநாள் மாட்டுப்பொங்கலிற்கான முஸ்தீபுகள் காலை முதல் தெரிய தொடங்கியது.....
மாடுகளை பிடித்த சிறுவர்கள் குளத்தில் அவற்றை குளிப்பாட்டி அலங்காரம் செய்தனர்.... கொம்புகளில் வண்ணம், நெற்றியில் போட்டு, உடல் முழுக்க வண்ண கோலங்கள் என்று மாடுகளை அலங்கரித்த காட்சிகளை பிரபாவும் , சாந்தனும் வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்திருந்தனர்.... ஆனாலும் சாந்தனின் நினைவுகள் எல்லாம் பிரபாவின் திருமண பேச்சை பற்றியே இருந்தது.... இதை கேட்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடியே அமர்ந்திருந்த சாந்தனை பார்த்த பிரபா, அவன் முகத்தை நிமிர்த்தி, “என்னடா இன்னும் ஒரு மாதிரியாவே இருக்க?... அந்த கனவை நெனச்சு கவலைப்படுறியா?.... அப்டிலாம் ஒன்னும் நடக்காது, இங்க விமானம் எதுவும் குண்டு போடாது” என்றான்... போலியாக சிரித்த சாந்தனின் மனதில் இன்னும் ஏதோ சொல்ல தயங்கும் விஷயம் இருப்பதை உணர்ந்த பிரபா, “என்ன ப்ராப்ளம்?....தயங்காம சொல்லு, என்கிட்டே சொல்ல உனக்கென்ன தயக்கம்?” என்ற தைரியமூட்டிய வார்த்தைகள் ஒருவாராக இதைப்பற்றி பேசிட மன தைரியத்தை கொடுத்தது சாந்தனுக்கு..... அமுதாவை பற்றியான அம்மாவின் எண்ணத்தை பிரபாவிடம் கூறி, இதை முளையிலேயே கில்லிட வேண்டுமென நினைத்து வாயெடுத்த சமயம், அங்கு அமுதா இருவருக்கும் குடிக்க காபி கொண்டுவருவதை கண்ட சாந்தன் பேச்சை தொடங்காமல் நிறுத்தினான்.... அருகில் வந்த அமுதா, பிரபாவை பார்த்து, “காபி எடுத்துக்கோங்க அத்தான்.... இட்லிக்கு என்ன சட்னி வைக்கணும்னு அத்த கேக்க சொன்னாக” என்றாள்..... “ஏன்டி? உனக்கு வைக்க தெரியாதா?... கல்யாணத்துக்கப்புறம் நீதான் வைக்கணும் பாத்துக்கோ” என்று சொல்லி சிரித்தான்.... வெட்கத்தில் ஓடிய அமுதாவை பார்த்து பிரபா சிரித்தான்.... சாந்தனோ மேலும் இடிந்து போனான்.... “அப்படியானால் பிரபாவிற்கும் அமுதாவை திருமணம் செய்துகொள்ள விருப்பமா?.... பிறகு எதற்காக என்னை காதலிக்கணும்?... திருமணத்திற்கு பின் எவரும் அறியாமல் கள்ளக்காதல் செய்யவா என்னை காதலிக்கிறான்?” என்று மீண்டும் அடுக்கடுக்கான கேள்விகள் துளைத்தெடுத்தன சாந்தனை.... பிரபாவின் மனதை அறிய மனம் அவசரப்படுத்தியது, ஆனாலும் இது அதற்கான தருணமல்ல என்பதால் அமைதி காத்தான்.... பொங்கல் திருவிழா முடிந்து தன் அறைக்கு போகும்வரை, சாந்தன் பிரபாவின் நினைவாகவே இருந்தான்.... ஒருபக்கம் அவனை தன் சுய விருப்பத்திற்காக குடும்பத்திலிருந்து பிரிக்க போகிறோமோ? என்கிற மன வலியும், மறுபுறமோ தன்னை துறந்துவிட்டு பிரபா குடும்பத்தினர் நிற்பந்தத்தால் அமுதாவை மனம் செய்துகொள்வானோ? என்கிற மன வேதனையும் மிகுந்து காணப்பட்டது.... எப்படியும் இது இரண்டில் ஒன்றுதான் நடக்கப்போகிறது.... அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்தான்.... பொங்கல் விடுமுறை முடிந்து பிரபாவும் கல்லூரி வந்தான்....
சாந்தன் அன்று வேலைக்கு வரவில்லை என்பதை அறிந்து அவன் அறைக்கு சென்றான் பிரபா.... இரவு முழுக்க உறக்கம் இல்லாமல் யோசித்ததால், காலை முதல் தலைவலி என்று படுத்திருந்த சாந்தனின் நெற்றியில் தைலம் தேய்த்துவிட்டான் பிரபா.... இன்னும் சாந்தனின் முகத்தில் ஒரு விசித்திரமான குழப்பம் நிறைந்திருப்பதை கவனித்தான் பிரபா.... சாந்தனை ஏதோ ஒரு குழப்பம் ஆட்கொண்டதை உணர்ந்து அதைப்பற்றி கேட்டான் பிரபா....
“என்னடா ப்ராப்ளம் உனக்கு?.... என்கிட்டே தயங்குற அளவுக்கு என்ன பிரச்சினை உனக்கு?” என்றான் பிரபா...
தயங்கிய குரலில் தடுமாறியவனாக சாந்தன், “அமுதா.... அமுதாவை.....” என்று இழுத்தான்....
“என்னடா அமுதாவுக்கு?.... அவ எதுவும் சண்டை போட்டாளா?.... இல்லையே, அவ நல்லவளாச்சே.... தயங்காம சொல்லுடா” என்று சாந்தனின் கையை பிடித்தான் பிரபா....
கொஞ்சம் இருமி தன் தொண்டை அடைப்பை சரி செய்தவனாக, “அமுதாவுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறதா உங்க வீட்ல பேசிக்கறாங்க.... அப்டினா, நீ அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவியா?.... நாம ரெண்டு பேரும் காதலிக்கிறோம், ஆனால் இதைப்பத்தி நான் யோசிச்ச்சதே இல்ல.... இப்போ உனக்கு கல்யாண பேச்சு வந்தவுடன் தான் எனக்கு புத்தியே வருது.... அப்டினா எல்லாம் அவ்வளவுதானா?” என்று சாந்தன் தயங்கிய வார்த்தைகளை தடுமாறி சொல்லி முடித்தான்...
பலமாக சிரித்த பிரபாவின் செய்கை சாந்தனை குழப்பமும் கோபமும் ஆக்கியது.... கொஞ்சம் கோபத்துடன், “என்னடா சிரிக்குற?... நான் விளையாட்டுக்கு சொல்லல, நம்ம எதிர்காலம் பத்தி சொல்லுறேன்.... இதுல உன் முடிவு என்ன?” என்றான் சாந்தன்....
“டேய் லூசா நீ?... இப்போ எனக்கு என்ன வயசாகுதுன்னு நீ கல்யாணம் பத்தியல்லாம் கவலைப்படுற.... சரி என்ன விடு, அமுதா இப்பதான் பதினொன்னாவது படிக்குறா.... சின்ன பொண்ணுடா.... அவகூட எப்பவாவது நான் விளையாட்டுக்கு கல்யாணம் பத்தி பேசிருப்பேன்.... அது மாமா மகள்ங்குரதால கிண்டலுக்கு பேசுறது... அவ்வளவுதான்.... யார் நினைச்சாலும் கொறஞ்சது இன்னும் மூணு வருஷம் ஆகும், அவ மேஜர் ஆகறதுக்கு.... கல்யாணம் பத்தி பேசினாலே இப்ப சட்டப்படி குற்றம் வேற.... அதெல்லாம்விட நான் சம்மதிச்சாதான்டா கல்யாணம் நடக்கும்...” என்றான் பிரபா....
கொஞ்சம் தெளிவானாலும் இன்னும் குழப்ப ரேகைகள் அகலாதவனாக சாந்தன், “அப்டினா, வீட்ல கட்டாயப்படுத்தினா நீ கல்யாணம் பண்ணிக்குவியா?.... கல்யாணம் பண்ணிக்காம எப்டி சமாளிக்க முடியும் உன்னால... பின்னாடி நம்மளை யாராவது ஏத்துக்குவாங்களா?” என்றான்...
“அதப்பத்திலாம் நான் பாத்துக்கறேன்.... உயிரே போனாலும் அது உன்னோட இருக்குற நிமிஷத்துலதான் போகும்... மத்தபடி யாரை எந்த விதத்துல சமாளிக்குறதுன்னு எனக்கு தெரியும்.... உன்ன நான் கைவிட மாட்டேன்.... சரியா?.... இப்போவாச்சும் கொஞ்சம் சிரிடா” என்று சாந்தனின் வயிற்றை தொடவே, கூச்சத்தால் நெளிந்தான் சாந்தன்.....
“சரிடா, வாய் வலிக்க இவ்வளவு வசனம் பேசிட்டேன், அதுக்கு கொஞ்சம் ஒத்தடம் கொடுக்க மாட்டியா?” என்று சினுங்கினான் பிரபா....
“டேய், இந்த ரணகளத்துளையும் உனக்கு இப்டி கிளுகிளுப்பு கேக்குதா?.... அடுப்புல கரண்டிய சுட வச்சு வேணும்னா ஒத்தடம் கொடுக்கவா?” என்று சிரித்தான் சாந்தன்....
“அவ்வளவு கஷ்டம் உனக்கு வேண்டாம் செல்லம்.... நீ சும்மா இருந்தின்னா, நானே செய்ய வேண்டியதை செஞ்சுக்கறேன்” என்றவாறே சாந்தனை நெருங்கி உதடுகளை பதம் பார்க்க முயன்றவனை விலக்கி தள்ளிய சாந்தன், “அப்பா சாமி போதும்.... ஏற்கனவே நீ கடிச்சு காயப்படுத்தினதை எல்லார்கிட்டயும் சமாளிக்க நான் படாத பாடு பட்டேன்.... மறுபடியும் இன்னொரு யுத்தத்தை என் உதடுகள் தாங்க எப்டியும் இன்னும் நாலஞ்சு நாள் ஆகும்” என்று தடா போட்டான் சாந்தன்....
“சாரிடா..... அப்போ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.... இந்தத்தடவை காந்திய வழியில் கத்தியின்றி ரத்தமின்றி, முடிஞ்சா சத்தமும் இன்றி வேலையை முடிச்சிடுறேன்” என்று பிரபா கூற சிரித்துவிட்டான் சாந்தன்....
“அடப்பாவி.... இதை காந்தியவாதிகள் கேட்டா உன்ன கதற கதற கதர் துண்டை வச்சு அடிச்சே கொன்னுடுவாங்க.... சரி, ஆனா ஒரே ஒரு கண்டிசன்” என்று தடாவை கொஞ்சம் தள்ளிவைத்தான் சாந்தன்....
ஆர்வமான பிரபா, “சொல்லு சொல்லு.... என்ன பண்ணனும்?.... உதடு படாம முத்தம் கொடுக்கணும்னு மட்டும் சொல்லிடாத” என்றான்....
“அப்டிலாம் சொல்ல மாட்டேன்.... பிரெஞ்ச், இங்கிலீஷ் இந்த மாதிரி முத்தம் கொடுக்காம, கொஞ்சம் டீசன்ட்டா கிஸ் பண்ணு.... வலிக்காம, காயப்படுத்தாம பண்ணு” என்று சாந்தன் சொல்லி முடிப்பதற்குள் பிரபாவின் உதடுகள் சாந்தனை தன்னுள் ஆட்கொண்டுவிட்டது.... கடந்தமுறை போன்று அவசரப்படாமல், மெதுவாக ரசித்து ருசித்தான் அந்த உதடுகளை..... தேனீக்களுக்கு இன்னும் தெரிந்திருக்காது, தேனைவிட தித்திப்பான ஒன்று சாந்தனின் உதடுகளில் இருக்கிறது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் பிரபா....
கண்களை மூடி பிரபாவின் செயல்களை ரசித்தான் சாந்தன்.... அட்சய பாத்திரம் போல அந்த உதடுகளில் இருந்து இன்பம் குறையாமல் வந்துகொண்டே இருந்தது பிரபாவுக்கு.... பிரபாவின் செயலால் இளஞ்சிவப்பு உதடு இன்னும் சிவப்பாய் ஆனது.... அதற்கு மேல் சாந்தனின் எல்லைகோட்டினை தாண்டாம நல்லவனாக முடித்துக்கொண்டான் பிரபா.... மறுநாள் வழக்கம்போல கேண்டீனே கதியென கிடந்தான் பிரபா, தன் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பான்.... அவ்வப்போது கண்ணால் சாந்தனுடன் பேசிக்கொள்வான் .... காலை ஒன்பது மணி முதல் நண்பகல் பன்னிரண்டாகியும் வகுப்பிற்கு செல்லவில்லை பிரபா, நண்பர்களையும் விடவில்லை... ஒரு கட்டத்தில் கோபமான அகிலன், "டேய், நான் வீட்லயாச்சும் தூங்கிருப்பேன்.... என்னைய வரசொல்லி இப்டி மொக்க போடுரியேடா.... கிளாஸ்'கு போகணும் என்னைய விடுடா" என்றான்...
சமாளித்த பிரபா, "டேய், நீ கிளாஸ்க்கு படிக்கவா போற, எவனையாச்சும் தடவத்தானே போற?... அத இங்கயே எவன்கூடவாச்சும் பண்ணிக்க.... வேணும்னா கூல்ட்ரின்க்ஸ் வாங்கித்தரவா குடிக்க?" என்று பாசத்தோடு கேட்டான்....
கையெடுத்து கும்பிட்ட அகிலன் "அப்பா சாமி, காலைலேந்து ஆறு கூல்ட்ரின்க்ஸ் குடிச்சு, வாயை திறந்தாவே கேஸ் தான் வருது..... ஓசியா கெடச்சாலும் இனி இத குடிக்க முடியாதுடா சாமி.... வேணும்னா நீ போயி குடிச்சுக்க.... நல்லவேளைடா சாந்தன் கூல்ட்ரின்க்ஸ் கடையில வேல பார்த்ததால சரி, ஒருவேளை பூச்சிமருந்து கடையில வேலை பாத்திருந்தன்னா என் கதையையே முடிச்சிருப்பியேடா.... அதுவரைக்கும் சந்தோசம், ஆளவிடுடா சாமி...." என்று சொல்லியவாறே பிரபாவிடம் தப்பித்து ஓடிவிட்டான் அகிலன்.... சிரித்தவாறே சாந்தனை பார்க்க, அவனும் சிரித்தான்.... கண்ணால் பேசிய காட்சிகள் முடிந்து வீட்டிற்கு சென்றான் பிரபா.... மாணிக்கமும், அம்மாவும் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.... கணக்கு வழக்குகள் பற்றியும் பேசியதால் காது கொடுத்து கேட்டான் பிரபா... "மொத்தமா நாலஞ்சு லெட்சம் செலவாகும்கா.... மத்த சாமனல்லாம் தஞ்சாவூர்ல எடுத்துக்கலாம்..... நீ அலட்டிக்காம இருக்கா, நான் பாத்துக்கறேன்" என்றான் மாணிக்கம்....
"என்ன மாமா கணக்கல்லாம் பயங்கரமா போடுற?" என்றான் பிரபா....
"எல்லாம் கல்யாண கணக்குதான் மாப்ள.... செலவு பத்தி பேசிட்டு இருக்கோம்" என்றான் மாணிக்கம்....
சிரித்த பிரபா, "என்ன மாமா, அதுகுள்ளையும் ரெண்டாம் கல்யாணமா?... ஜனனி அத்தைக்கும் தெரியுமா?.... என்னதான் நீ புடிக்கலைனாலும் இதல்லாம் வேணாம் மாமா" என்றான்....
இதைகேட்ட ஜனனி மாணிக்கத்தை பார்த்து முறைக்க, பதறிய மாணிக்கம், "டேய், குட்டைய கலக்கி விட்ராத.... இது நம்ம அமுதாவுக்கு சடங்கு வச்சிருக்காரு உங்க மாமா.... அதுக்கு தாய்மாமன் சீர் உங்க அப்பாதானே முறையா எடுக்கணும்... அதான் கணக்கு பாக்குறோம்..." என்றான் மாணிக்கம்....
"அதானா?.... சரி சரி.... இப்டி கேட்டாதான் ஒழுங்கா பதில் சொல்ற.... ஆமா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அவ வயசுக்கு வந்துட்டான்னு சொன்னாங்க அம்மா, இப்ப என்ன திடீர்னு சடங்கு?" என்றான் பிரபா....
சிரித்த அம்மா, "அப்போ நாம ராசியா இல்லைல.... அதான் இப்போ வச்சிருக்காக.... உங்க மாமாவுக்கு பணம் பாக்க ஒரு வழிதான் சடங்கு.... இருந்தாலும் அமுதாவுக்காக நம்ம செய்யனும்" என்ற அம்மாவின் பேச்சுக்கு ஆமோதித்து மற்ற இருவரும் உள்ளே சென்றனர்..... அன்று முதல் மாணிக்கம் அந்த வேலைகளில் தீவிரமாக இறங்கினான்.... ஒருவாரம் கழித்து நிகழ்ச்சிக்கு செல்லவேண்டிய நாளும் வந்துவிட்டது..... அப்போதுவரை இதை சாந்தனிடம் சொல்லவில்லை.... சொல்லலாமா? என்று நினைத்தபோதும் சாந்தனுக்கு ஏற்கனவே அமுதா மீது உள்ள சந்தேகம் தேவையின்றி அதிகமாகும்... இதை அவனுக்கு புரியவைப்பதும் கடினம், அதனால் அதை மறைத்துவிடலாம் என்று தீர்மானித்தான்.... அதனால் மூன்று நாட்கள் மாணிக்கத்தின் மாமனார் வீட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சாந்தனிடம் விடைபெற்றான் பிரபா.... வீட்டை அடைந்தபோது மாணிக்கம் இன்னும் அதிக சந்தோஷத்தில் இருப்பதை கண்டு, அதுபற்றி மாணிக்கத்திடம் கேட்டான் பிரபா.... "மாப்ள, இந்த மூனு நாளும் நான் அடிக்க போற கூத்துக்கு ஒரு வருஷம் பேராவூரணிக்காரனுக என்னைய மறக்கவே கூடாது.... அப்டி லந்து கொடுக்க போறேன் பாரு" என்றான் மாணிக்கம்....
"என்ன மாமா சொல்ற?.... பேராவூரணி உனக்கு புதுசாச்சே?"

"டேய் மாப்ள, நான் பொறந்த ஊருடா அது.... மாமாவுக்கும் எங்க அண்ணன்களுக்கும் சண்டை வந்ததால நான் அங்க போறதில்ல.... ஆனாலும் மாமன், மச்சான், அங்காளி பங்காளிக எல்லாரும் அங்கதான் இருக்கானுக.... அதுவும் என் மச்சான் குமார்னு ஒருத்தன் இருக்கான்.... அவன்தான் எனக்கு வேட்டைக்கு போறதுக்கே கத்துக்கொடுத்தான்... அவனுக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டை.... அங்க அடிக்கடி போயி கூத்தடிப்போம்.... ரெண்டு வருஷமா சிங்கப்பூர்ல வேலை பாத்துட்டு அவனும் நாளைக்கு சடங்குக்கு வர்றான்.... "

"அடப்பாவி மாமா.... ரெண்டு மூனு வருஷத்துக்கு முன்னாடி பட்டுக்கோட்டைக்கு என்னமோ வேலை விஷயமா போறேன்னு அடிக்கடி சொல்வியே?.... அந்த வேலை இதுதானா?.... சரி, இப்போதான் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சே, அத்தையும் அங்க வரும்ல என்ன பண்ணுவ?"

"ஹ ஹ ஹா..... என் சந்தோஷத்துக்கு காரணமே அந்த விஷயம்தான்.... ஜனனியோட அண்ணனுக்கு குழந்தை பொறந்திருக்காம்.... அதான் அவளை நைசா மதுரைக்கு அனுப்பிவிட்டேன்.... இப்போ நான் தனி ஆளுடா மாப்ள.... " என்று சிரித்து சந்தோஷப்பட்டான் மாணிக்கம்.... எல்லாவற்றையும் கேட்டு மாணிக்கத்தின் தலையில் வழக்கம்போல கொட்டினான் பிரபா.... இரவோடு இரவாக பேராவூரணி நோக்கி சென்றார்கள் மொத்த குடும்பமும்.... கூடுதல் உற்சாகத்துடன் மாணிக்கமும்.....
பேராவூரணி நுழைந்தது முதல் அமுதாவின் அப்பாவுடைய வரவேற்பு தட்டிகள் அதகளப்படுத்தியது...... மாமா அலைபேசியில் பேசுவது, அவர் கோபமாக நடந்து வருவதும், ஆவேசமாக விரல்களை நீட்டுவதும் என்று விதவிதமான போஸ்களுக்கு சீரியசாகவே போஸ் கொடுத்தது பிரபாவிற்கு சிரிப்பை ஏற்ப்படுத்தியது..... மாமா அரசியல்வாதி என்பதால் "எதிர்கால எழுச்சி சிங்கமே", "பேராவூரனியின் தங்கமே" என்ற வாசகங்களுக்கும் பஞ்சமில்லை..... "அஞ்சாநெஞ்சனின் இல்ல விழாவிற்கு வருக" என்று அண்ணனின் விழுதுகள் வைத்த விளம்பர தட்டியை பார்த்தபோது, கரப்பான்பூச்சிக்கு பயந்து மாமா நாலு பர்லாங்கு தூரம் ஓடியதாக அம்மா சொன்னது பிரபாவுக்கு நினைவிற்கு வந்து மனதிற்குள் சிரித்துக்கொண்டான்..... ஒருவழியாக இந்த நகைச்சுவைகளை தாண்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் பிரபா குடும்பத்தார்.... வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார் மாமா..... "மாப்பிள்ளைக்கு கூல்ட்ரிங்க்ஸ் கொண்டுவாடா", "மாப்பிள்ளைக்கு டிபன் கொடுடா" என்று மாமா அளவுக்கு அதிகமாகவே உபசரிப்பது பிரபாவிற்கு கூச்சமாக இருந்தது.... அதுவரை தன்கூட வந்த மாமா திடீரென காணாமல் போனதைக்கண்டு ஆச்சரியப்பட்டான்.... பின்னர் மாடிக்கு சென்றிருக்கலாம் என்று யூகித்தபடி சென்றான் பிரபா... கழுதை கேட்டா குட்டு சுவரு, மாமா வந்தால் மாடி சுவரு என்று நினைத்தபடியே சென்ற பிரபாவின் கணிப்பு பொய்யாகவில்லை.... மாணிக்கத்தை ஒத்த வாலிபர் கூட்டம் நடுவில் நாடு நாயகமாக மாணிக்கம் அளந்துவிட்டுக்கொண்டிருந்தான்.... அந்த கூட்டத்தில் சிங்கப்பூர் குமாரை கண்டுபிடிப்பது பிரபாவுக்கு பெரிய கஷ்டம் இல்லை.... மற்ற நபர்கள் எல்லாம் வேட்டி சட்டையில் இருக்க, ஒருவர் மட்டும் ஜிலு ஜிலு சட்டையும், கொட கொடா பேண்ட்டும் , கையில் ஜொலித்த கோல்ட் கவரிங் கடிகாரம் என்று பார்த்ததும் சொல்லும் அளவிற்கு குமார் மாணிக்கத்தின் அருகில் உரிமையாக பேசிக்கொண்டிருந்தான்.... "உன் கல்யாணத்துக்கு வரலைன்னு கோவிச்சுக்காத மச்சான்... பாவிப்பயலுவ லீவ் குடுக்க மாட்டேண்டாணுக....." என்று மாணிக்கத்தின் திருமணத்திற்கு வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தான் குமார்....
"பரவால்ல மாப்ள, என் கஷ்டம் என்னோட போகட்டும் விடு.... நீ வரையில சிங்கப்பூர்காரி எவளையாச்சும் கூட்டியாருவன்னு நெனச்சேன், ஏமாத்திட்டியே" என்று சிரித்தான் குமார்....
"சிங்கப்பூரா இருந்தா என்ன, நம்ம மதுக்கூரா இருந்தா என்ன, உலகத்துல பொண்ணுக எல்லாருமே ஒரு மாதிரிதான்டா...... இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு கல்யாணத்த பத்தி பேசலாம்" என்ற குமார், அங்கு நின்ற பிரபாவை பார்த்து, "யாருடா மச்சான் இது?... நம்ம கமலா சித்தி மவனா?" என்றான்....
"ஆமாண்டா.... அவனேதான்... நம்ம பிரபாதான்...." என்று அப்போதுதான் பிரபாவை கவனித்தான் மாணிக்கம்....
"சின்ன புள்ளைல டவுசர புடிச்சுகிட்டே கிட்டிப்புள்ளு வெளயாடுவானே.... இப்ப இப்படி வளந்துட்டான்..." என்ற குமார் அதிசயமாக பார்த்தான் பிரபாவை...
"ஆமாமா.... அவனேதான்... இப்பல்லாம் டவுசர அவுத்துட்டு அப்பா அம்மா வெளையாட்டுத்தான் வெளையாடுறான்...." என்று மாணிக்கம் சிரிக்க, அவன் தலையில் வழக்கமான கொட்டு கொட்டினான் பிரபா....
ஒருவாராக அந்த பேச்சுகள் பலவாறு சென்று நள்ளிரவை தாண்டி உறங்க சென்றனர் அனைவரும்.... அப்போது மாணிக்கத்தை தனியே அழைத்த குமார், கையில் ஒரு மாத்திரை புட்டியை கொடுத்தான்... அதை பார்த்ததும் பத்தாயிரம் வால்ட் பிரகாசமான மாணிக்கம், "எவ்வளவு நேரம்டா தாக்கு பிடிக்கும்" என்றான்....
"கால் மணி நேரம் சும்மா கின்னுன்னு இருக்கும்டா" என்ற குமாரின் பேச்சை கேட்டு மகிழ்ந்தபடியே உறங்க சென்றான்....
மறுநாள் காலை பிரபா எழும்போது யாருமே அருகில் இல்லை... எழுந்து குளித்துவிட்டு கீழே சென்று சாப்பிட்ட பிரபா, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு இருந்த புத்தகங்களை புரட்டினான்..... அவ்வப்போது அத்தை அருகில் வந்து "ஜூஸ் தரவாப்பா?" "பாதாம் பால் தரவாப்பா?" என்று கவனித்தது சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கே வெட்கமாகிட எழுந்து வெளியே சென்றான்.... அப்போது அங்கு பைக்கில் வந்த மாணிக்கம், "வாடா மாப்ள, உன்னைய கூட்டிட்டு போகத்தான் வந்தேன்" என்று அழைத்துக்கொண்டு போனான்... மறுபேச்சு பேசாமல் தப்பித்தால் போதும் என்று எண்ணியபடி மாணிக்கத்துடன் சென்றான் பிரபா..... அங்கு அமுதாவின் தோப்பு வீட்டிற்குள் சென்றனர்.... தென்னை மரங்களுக்கு மத்தியில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் கள், பீர், வெளிநாட்டு சரக்கு என்று ஒரு கம்யூனிச சித்தாந்த ஏற்றத்தாழ்வு அற்ற மதுவகைகள் அடுக்கி வைக்கப்பட்டு, அதில் மாணிக்கத்திற்காக காத்திருந்தான் குமார்....
பிரபா பதநீரோடு முடித்துக்கொள்ள மாணிக்கமும் குமாரும் வித்தியாசமான காக்டெயில் முறையில் குடித்தனர்.... பல பேச்சுக்களும் பேசினார்... பெரும்பாலும் இருவரும் செய்த காம களியாட்டங்கள்தான் அதிகம் அந்த பேச்சில் இடம்பெற்றது....
மாணிக்கம் வல்லம், தஞ்சை என்று லோக்கல் அனுபவங்களை கூற, குமாரோ மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா என்று ஐ.எஸ்.டி விஷயங்களாக கூறினான்.... மாணிக்கம் கூறியபடி, குமார் நிஜமாவே "வேட்டை மன்னன்"தான் என்று நினைத்துக்கொண்டான் பிரபா.... ஆறாவது ரவுண்டில் பேச்சு, பலவாறாக சுற்றி மாணிக்கத்தின் திருமணத்தில் வந்து நின்றது.....
"ஏன்டா மச்சான், இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ண?"
"அதையேன்டா கேக்குற.... அக்கா கல்யாணம் பண்ணிக்க சொல்லுச்சு, பண்ணிகிட்டேன் ... கல்யாணம் பண்றவரைக்கும் கல்யாணம் பண்ணலயேன்னு ஒரு கவலைதான், கல்யாணம் பண்ணதுக்கப்புரம் அதைத்தவிர எல்லாமே கவலையா போச்சு..... ரொம்ப விரக்தியா ஆகிட்டேன்டா"
"அப்டி என்னதான் மாப்ள ஆச்சு?.... ஜனனி நல்ல பொண்ணாச்சே....?"
"சின்ன புள்ள ஒன்னு பரிச்சையில பாஸ் பண்ணதுக்கு முட்டாய் கொடுத்துச்சு, அதை பாராட்டி முத்தம் கொடுத்தது தப்புன்னு பெரிய சண்டைடா"
"அடப்பாவமே.... அப்டியெல்லாம் கூட பண்ணுவாங்களா என்ன?... பொசசிவ்னஸ் பொண்ணுகளுக்கு அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன், அதுக்காக இப்டியா?... ஆமா, அந்த சின்ன புள்ளைக்கு என்ன வயசு?"
"அது பன்னண்டாவது படிச்சு பாஸ் பண்ணின பொண்ணுதான்.... பதினேழு வயசு இருக்கும், அவ்வளவுதான்.... அதுக்கு போயி ஜனனி கோவப்பட்டா என்ன பண்றது?" என்று மாணிக்கம் சொல்லி முடிக்கையில் பிரபா சிரிக்க, அதை கேட்ட குமாரோ மடமடவென்று ஒரு கோப்பையை எடுத்து குடித்துவிட்டான்....
கொஞ்சம் ஆசுவாசமான பிறகு குமார், "சரி, இதுக்கு ,மேல உன்கிட்ட நான் ஒன்னும் கேக்க கூடாது.... அந்த பேச்சை விடு" என்றான்....
"மச்சான், இன்னும் ஒன்னு சொல்றேன்டா..... அத மட்டும் கேட்டு முழுசா முடிவெடு"
"சொல்லித்தொல.... " என்று கொஞ்சம் எரிச்சலாக கூறினான் குமார்....
"ஒரு கலைஞரை ஊக்குவிக்கிறது தப்பாம்டா"
"கலைஞர்கிட்ட எதுக்கு போயி ஊக்கு வித்த?"
"ஊக்கு விக்கலடா?... கலைஞர்களை பாராட்டி ஊக்கப்படுத்துறதை சொல்றேன்.... அது தப்பாடா" என்றான் மாணிக்கம் அப்பாவியாக....
"இதுல என்ன தப்பு இருக்கு.... இதுல ஜனனி செஞ்சது தப்புன்னுதான் எனக்கு தோணுது.... அப்படி யாருக்கு ஊக்கம் கொடுத்த?"
"நம்ம ஊர்ல கரகாட்டம் ஆடவந்த ஆட்டக்காரிக்கு அவளோட ஆட்டத்தை பாராட்டி ஜாக்கட்ல நூறு ரூபாய் குத்தினது தப்பாம்டா..... " என்ற மாணிக்கத்தின் பேச்சை கேட்டதும், மீண்டும் கடுப்பான குமார், "ஆமாமா.... ஜனனி இதை சும்மா விட்டிருந்தா நீ ஜாக்கட்'ல பணம் குத்துறதோடயா நிறுத்திருப்ப?.... " என்றான்....
கொஞ்சம் நிதானத்திற்கு பிறகு தொடர்ந்த குமார், "சரி மச்சான்.... கல்யாணத்துக்கு அப்புறம் ஒருவிதத்துல நீ பாதிக்கப்பட்டிருக்க.... அதனால நீ ஊருக்கு போறவரைக்கு நல்லா இங்க என்ஜாய் பண்ணு" என்று கூறிவிட்டு, கொஞ்சம் மெல்லிய குரலில், "சாயந்திரம் ஆறு மணிக்கு வந்திடு இங்க.... சிக்குன்னு ஒரு ஐட்டம் வருது..... என்ஜாய் பண்ணு, நான் நைட் வந்து அதை பாத்துக்கறேன்" என்றதும் அந்த போதையிலும் உற்சாகமாக தலையாட்டினான் மாணிக்கம்.....
ஒருவாராக அந்த குட்டி பார்ட்டி முடிந்ததும், மாணிக்கத்தை கர்ம சிரத்தையுடன் யார் கண்ணிலும் படாமல் அமுதா வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றுவிட்டான் பிரபா.... மதியம் சாப்பாடு முடிந்தவுடன் குட்டித்தூக்கம் போட்ட பிரபா, எழுந்த போது மணி ஆறு ஆகிவிட்டது.... அருகில் மாமாவையும் காணவில்லை.... "அடப்பாவி மாமா.... போதையில இருந்தாலும், இந்த விஷயத்துல சரியா ஞாபகத்தோட போயிட்டாரே... வரட்டும் பாத்துக்கலாம்" என்று நினைத்தபடி வெளியே வந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தான் பிரபா.... அப்போதுதான் பிரபாவுக்கு சாந்தனின் நினைவு வந்தது.... அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தான் பிரபா....
"ஹல்லோ சாந்துகுட்டி" என்றான் பிரபா...
"சாத்துக்குடி கிலோ நாப்பது ரூபா, ஆரஞ்சு கிலோ நாப்பத்தஞ்சு ரூபா...." என்று சரமாரியாக விலை பட்டியலை வாசித்தான் சாந்தன்.....
"ஏய் லூசு.... நான்தான் பிரபா...."
"ஓ நீதானா... அப்புறம் ஏன் சாத்துக்குடி, ஆரஞ்சுன்னு சொன்ன"
"நான் சொன்னது சாத்துக்குடி இல்லடா.... சாந்து குட்டி,னு செல்லமா சொன்னேன்.... இந்த சின்ன ரொமான்ஸ் கூட தெரியலையே உனக்கு"
"ஓஹோ.... அப்டி ரொமான்ஸ் இருக்குற ஆள்தான், ஒரு நாள் முழுக்க கால் பண்ணாம இருந்தியாக்கும்"
"அப்டிலாம் இல்லடா.... இப்போ நீ சொன்னாலும் நான் ஒன்றரை மணி நேரத்துல உன்ன பாக்க வந்திடுவேன்...."
"என்னது, மதுரைலேந்து தஞ்சாவூர் ஒன்றரை மணி நேரத்துல வந்திடுவியா?.... ஏரோப்ளேன் எதுவும் விட்ருக்காங்களா என்ன?.... ஆமா, நீ மதுரைலதானே இருக்க?"
தான் உளறியதை மறைக்க, மேலும் உளற தொடங்கினான் பிரபா, "அது அது..... சும்மா ஒரு ஆர்வத்துல சொன்னேன்டா...... நீ ஏன் துருவி துருவி கேக்குற?" என்றான்....

"நான் ஒன்னும் அப்டி கேக்கல, நீயாதான் உலருற.... சரி, உன் சொந்தக்கார பசங்கல்லாம் செம்மையா இருப்பாங்கன்னு சொன்னியே, அவங்களையெல்லாம் பாத்தியா?... எப்டி இருக்காங்க?"
"ஹ்ம்ம்.... எல்லாம் சூப்பரா இருக்கானுக.... எல்லாம் கலக்கலான நாட்டுக்கட்டைடா"
"நீதான் ரொமான்ஸ் பத்தி பேசுற ஆளாக்கும்?... இந்த கேள்விக்கு எப்டி பதில் சொன்னா தெரியுமா அது ரொமான்ஸ்?"
"சொல்லு.... அதையும் நீயே சொல்லு"
"எல்லாரையும் பாத்தேன்டா.... ஆனால், உன் அளவுக்கு யாரும் சூப்பரா இல்லடா, யாரை பாத்தாலும் உன் நியாபகம்தான் வந்துச்சுன்னு நீ சொல்லி இருந்தா நீ பெரிய மன்மதன்னு நான் ஒத்திருப்பேன்"
"ஹ ஹ ஹா..... உண்மைலேயே அப்டிதான்டா சாந்து குட்டி..... யாரும் உன் அளவுக்கு இல்லடா..... சரி யாரோ வர்ற மாதிரி இருக்கு, அப்புறம் பேசுறேண்டா குட்டி" என்று அழைப்பை துண்டித்தான் பிரபா.....
மாடிக்கு வந்தது மாணிக்கம்.... பிரபாவை பார்த்து சிரித்த மாணிக்கம், "என்னடா மாப்ள, யாரை குட்டி கிட்டினு கூப்பிடுற?.... மனுஷங்கள மனுஷங்களா கூப்பிடுங்கடா..... " என்றான்.... சிரித்த பிரபா, "அது இருக்கட்டும், அத்தை உனக்கு நாலு தடவை போன் பண்ணுச்சு..... பயங்கர கோவமா இருக்கு, இந்தா பேசு" என்று அலைபேசியை கொடுக்க, மாணிக்கம் ஜனனியை அழைத்தான்.....
"ஹல்லோ.... ஜானு குட்டி" என்று மாணிக்கம் கூற, அதற்கு பிரபா முறைக்க, அசடு வழிய சிரித்தான் மாணிக்கம்....
"ஹ்ம்ம்.... சரி.... இல்லடா.... ஓகே..... பாய்..." என்று ஐந்து நிமிட பேச்சில், இந்த ஐந்து வார்த்தைகளை தவிர மாணிக்கம் எதுவும் பேசவில்லை, எல்லாவற்றையும் ஜனனிதான் மறுமுனையில் பேசினாள்.....
பேசி முடித்ததும் பிரபாவை பார்த்த மாணிக்கம், "என்னடா பண்றது.... அவளை குட்டின்னு கூப்பிட்டாதான் அவ சந்தோஷப்படுரா.... ஆனாலும், அப்டி கூப்பிடயில என்னமோ நாய் குட்டி, ஆட்டுக்குட்டியை கூப்பிடுற மாதிரியே இருக்கு.... என்ன மாப்ள பண்றது, கழுதைக்கு வாக்கப்பட்டா உதைக்கு பயந்தா பொழப்ப ஓட்ட முடியுமா?" என்றான்....

"இதுக்கு அத்தைதான் பீல் பண்ணனும்..... நீ பண்ற கூத்துக்கலாம் இவ்வளவு அமைதியா இருக்குதுல்ல அத்தை, அதுதான் நெஜமாவே கழுதைக்கு வாக்கப்பட்டிருக்கு.... ஆமா, நீ ஏன் ஒரு மாதிரி நிக்குற.... வேட்டிக்கு மேல என்ன துண்டு கட்டிருக்க?" என்ற பிரபா கேட்டது சரிதான்.... அடக்கமுடியாமல், எதையோ மறைக்க முடியாமல் மாணிக்கம் வளைந்து நெளிந்து நின்றான்.... வேஷ்டிக்கு மேல் துண்டை இருக்க கட்டி எதையோ மறைக்க முயன்றான்..... "அது ஒன்னுமில்லடா மாப்ள.... அந்த குமார் பய ஏதோ மாத்திரை கொடுத்தான்.... ரொம்ப நேரம் வீரியம் குறையாதுன்னு சொன்னதால ஒரு ஆர்வத்துல நாலு மாத்திரை ஒன்னா தின்னுட்டேன்.... அது பாட்டுக்கு நட்டுகிட்டு நிக்குது.... நானும் என்னென்னமோ செஞ்சும், கொஞ்சமும் கண்ட்ரோல் ஆகாம நிக்குது..... அதை பார்த்து பயந்து அந்த பொண்ணு பயந்து போய் ஓடிடுச்சு.... இப்பவும் அப்டியே நிக்குது மாப்ள" என்றான் மாணிக்கம்.....
"அடப்பாவி மாமா..... கண்ட மாத்திரையும் தின்னு கை காலு வெளங்காம போய்ட போவுது"
"காலு வெளங்காம போனா பரவால்ல மாப்ள, பூ...." என்று இழுக்க, இடை மறித்த பிரபா, "போதும் போதும்.... நிறுத்து.... போயி தூங்கு, காலைல எந்திரி சரி ஆகிடும்" என்றதும் சிரித்த மாணிக்கம், "சரிதான் மாப்ள, நான் போயி தூங்குறேன்.... யார் வந்து கேட்டாலும் நான் துபாய், கத்தார்னு போயிட்டேன்னு சொல்லிடு.... எவனாச்சும் வந்து என் கோலத்தை பார்த்து அதிர்ச்சில செத்தா, கொலை குத்தம் நம்மள சேர்ந்திடும் மாப்ள" என்று மாணிக்கம் விந்தி விந்தி நடந்தது பதினாறு வயதினிலே சப்பானியை நினைவுபடுத்தியது பிரபாவுக்கு.....

மறுநாள் சடங்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது பேராவூரணியில்.... பிரபாவும் மாணிக்கமும் உற்சாகமாக நிகழ்ச்சியில் திளைத்திருந்த அந்த நேரத்தில் தஞ்சையில் பூகம்பத்தை கிளப்ப ஆயத்தமாகி இருந்தான் அகிலன்..... இப்போ அப்படியே நாம தஞ்சைக்கு போகலாம்.....
மாணிக்கமும் பிரபாவும் அன்று இரவு அதிக தொந்தரவு இல்லாமல் தூங்கினார்கள்.... மறுநாள் அதிகாலையில் சீர் எடுக்கும் வைபவம் என்பதால், விடிந்தும் விடியாமலும் எழுந்து குளித்து கிளம்பினர் இருவரும்.... முதலில் கிளம்பிய மாணிக்கம், சீர் எடுக்க ஆயத்தப்பணிகளை செய்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்தாலும், இன்னும் உடைகள் மாட்டி கிளம்பவில்லை பிரபா....
"டேய் மாப்ள, சீக்கிரம் கெளம்பு.... சீர் எடுக்க எல்லாரும் தயார் ஆகிட்டாங்க....டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு வாடா...." என்றான் மாணிக்கம் ....
    

"அதான் மாமா பிரச்சினையே.... இந்த வேட்டி எப்படி கட்டினாலும் அவுந்திடுமோன்னு பயமா இருக்கு.... கண்டிப்பா வேட்டிதான் கட்டியாகனுமா?" என்றான் அப்பாவியாக பிரபா
“வேட்டிதான் கட்டணும்னு அவசியம் இல்ல, ஆனா எங்கண்ணன் எடுத்து குடுத்த வேட்டிய கட்டலைனா வெட்டுக்குத்து அளவுக்கு போய்ட்டா என்னைய கேக்காத” என்று மாணிக்கம் சொன்னதும், பதறியபடி வேட்டியை ஒருவழியாக கட்டி சீர் எடுத்து செல்லும் இடத்திற்கு வந்துவிட்டான்.... மாணிக்கத்தின் ஏற்பாட்டின்படி பேராவூரணி நாட்டியக்குதிரை, புதுக்கோட்டை கரகாட்டம், தஞ்சாவூர் ஆர்கெஸ்ட்ரா சகிதம் பல தட்டுகளில் சீர் சாமான்களை எடுத்துக்கொண்டு பிரபா குடும்பத்தினருடன் உறவினர்களும் தயாராக நிற்க, முறையாக பிரபாவின் அப்பா முன்னெடுத்து செல்ல வேண்டிய சீர் என்பதால், அவர் இடத்தை பிரபா நிரப்ப முதன்மையாக நிறுத்தப்பட்டு புறப்பட தயார் ஆனார்கள்....

அப்போது மீசையை முறுக்கிய ஒரு பெரியவர் பிரபாவை பார்த்து, “ஏலே பிரபா, என்ன ஒரு மாதிரியா நிக்க?... “ என்றார்... அதைப்பார்த்த மாணிக்கம், “யோவ் மாமா, அவன் நிக்குறது இருக்கட்டும்... ஆம்பளைங்க நாங்க இவ்வளவு பேரு இங்க நிக்குறோமே, இடமே இல்லாதது மாதிரி பொம்பளைகளுக்கு எடையில நீ என்ன பண்ற?” என்றதும் அசடு வழிந்த அந்த பெரியவர், “இல்லடா மாணிக்கம், நம்ம பிரபா மாப்பிள்ளை கணக்கா தெகுரியமா நிக்காம , பம்மிகிட்டு நிக்கான்னு கேட்டேன்...” என்றார்....
“தைரியத்த பத்தி நீ பேசுறியா மாமா..... பல்லி கீழ விழுந்தத பாத்து, பத்துநாள் குளிர் ஜுரத்துல படுத்த நீ இத பேசலாமா?” என்று அதையும் மாணிக்கம் வாற, பம்மிய அந்த பெரியவர், “சரி... சரி.... கெளம்புங்கப்பா.... எல்லாரும் காத்துகிட்டு இருப்பாகல்ல” என்று அனைவரையும் கிளப்பினார்....
“கெளம்புன எங்கள இவ்வளவு நேரம் மொக்க போட்டு இருக்க வச்சுட்டு, இப்போ பேசுறத பாரு.... வீட்டுக்கு வா, வேட்டிகுள்ள வெடிய கொழுத்தி போடுறேன்” என்று அந்த பெரியவரை பார்த்து சொல்லிவிட்டு கிளம்ப போகும் முன் பிரபாவை பார்த்து, “டேய் மாப்ள, நீ குதிரைல ஏறிக்கடா.... அப்பதான் பேராவூரணி’காரனுகளுக்கு முன்னாடி நம்ம கெத்த காட்டலாம்” என்றான்....
முறைத்த பிரபா, “நான் நடந்தாவே வேட்டி அவுந்திடுமோன்னு பயந்துட்டு இருக்கேன், இதுல குதிரைல ஏறனுமாக்கும்?... சும்மா வா மாமா.... “ என்று கூறிவிட்டு சீர் எடுத்து ஒருவழியாக கிளம்பினர் அனைவரும்.... கிழக்கு சீமையிலே படத்தின் “மானூத்து மந்தையில” பாடல் இசைக்க, கரகாட்டம் ஆட, விண்ணை அதிரும் வெடிகள் முழங்க பிரபா முன்னே செல்ல, மொத்த சீரும் பேராவூரணி தெருக்களை சுற்றி வீட்டை அடைந்தது.... வெளியே நின்ற அமுதாவின் அப்பா மாமன் முறை செய்யும் பிரபாவுக்கு மாலை போட்டு வரவேற்க, அங்கிருந்த கன்னிப்பெண்கள் பிரபாவுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்லும் தருணத்தில் மாணிக்கம் ஒரு பெண்ணை அங்கு பார்த்தான்.... பெண்கள் கூட்டத்தில் கிளிப்பச்சை புடவையில் கிராமிய மண் மணம் மாறாத அந்த பெண்ணை பார்த்ததும், அந்த பெண்ணை மாணிக்கம் பார்த்ததும் ஒருவித மின்னலை மாணிக்கத்தின் மனதில் ஏற்ப்படுத்தியது.... சரியாக அந்த நேரத்தில் “கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்” பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்க மாணிக்கத்தை பார்த்து அவள் சிரிக்க,
மாணிக்கம் மன்மதனாய் மாறிப்போய் அங்கே நின்றுவிட்டான்.... உள்ளே அழைத்து செல்லப்பட்ட பிரபா, அப்போதுதான் அமுதாவை பார்த்தான்.... உண்மையில் அம்மா சொல்வதைப்போல தேவதை போல காணப்பட்டாள் அன்று....
மாமன் முறைப்படி பிரபா மாலை அணிவித்து அமர்ந்தான்.... அதைக்கண்ட அம்மா இருவருக்கும் திருமணமே ஆனதைப்போல மகிழ்ந்தார்.... சில நிமிடங்களில் அந்த மேடையில் ஒரு கலவரமே நடந்ததை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்... மாமன்மார்கள் அனைவரும் மாலை போடுவதில் முதல் மரியாதை யாருக்கு? என்ற சண்டையில் அமுதாவின் மாமா ஒருவர் அடிதடி வரைக்கும் போய்விட்டார்.... கடைசியாக அமுதாவின் அப்பாவுடன் கோபித்துக்கொண்டு அவர் வெளியே செல்லும் முன், “டேய் வீர சேகர்... கூப்பிட்டு அசிங்கப்படுத்திரியா நாயே.... நன்றி கெட்ட நாயே” என்று தொடர்ந்த வசை மொழிகள் திசை மாறி செல்கையில் காது கொடுத்து யாராலும் கேட்கமுடியவில்லை.... வீர சேகரான தன் மாமாவை ஒரு நிமிடத்தில் “நாய்” சேகராக மாற்றிய அந்த நபரை கண்டு அதிர்ச்சியானபடி வெளியே நடந்துகொண்டிருந்த ஆர்கெஸ்ட்ரா பாடல்களை கேட்கலாம் என்று சென்றான் பிரபா.... அங்கோ சூப்பர் சிங்கர் பாடகர் ஒருவர் “திருப்பாச்சி அருவாள, தீட்டிகிட்டு வாடா வாடா” என்று பாடியது அந்த கோபித்துக்கொண்டு சென்ற மாமனை மீண்டும் சண்டைக்கு அழைக்கிறாரோ என்று எண்ணத்தோன்றியது பிரபாவுக்கு....
அப்படியே சில பாடல்களை ரசித்துக்கேட்டுக்கொண்டிருந்தான் பிரபா, அப்போது அருகில் சலனமில்லாமல் வந்து அமர்ந்த ஒரு உருவத்தை பார்த்ததும் அதிர்ச்சியான பிரபா, “மாமா, என்ன இங்க இருக்குற?.... பெரிய சண்டை ஆச்சு மாமா.... காரைக்குடி பெரியப்பா கோவிச்சுக்கிட்டு போய்ட்டாரு.....நீ இருந்திருந்தா சமாதானப்படுத்தி இருக்கலாம்.... “ என்று அதிர்ச்சி விலகாமல் கூற, சிரித்த மாணிக்கம், “உள்ளயாவது கைகலப்போடு முடிஞ்சுடுச்சு, பந்தியில வெட்டுக்குத்தே ஆகிப்போச்சு....” என்றான்....
“அய்யய்யோ..... எதனால மாமா? என்ன பிரச்சினை?” என்றான் பிரபா....
“ஒன்னும் பெரிய பிரச்சினை இல்ல.... பக்கத்து இலைக்கு வச்சதவிட தன்னோட இலைக்கு ஒரு துண்டு மட்டன் குறைச்சு இருந்துச்சாம், அது அவமானப்படுத்துற மாதிரி இருக்குன்னு பரிமாறுனவன் கையை வெட்டிட்டான் ஒருத்தன்... இதல்லாம் கண்டுக்காத மாப்ள” என்று சொன்னபடி வேறு பக்கம் திரும்பிய மாணிக்கம், அந்த பச்சைக்கிளியை.... அதாங்க, அந்த பச்சைப்புடவை பொண்ணு.... அதை கண்ணால் கவர்ந்தான்....
இதை பார்த்த பிரபா, “என்ன மாமா பண்ற?” என்றான்....
“அந்த பொண்ணு ஓகே ஆய்டுச்சுன்னு நெனக்கிறேன் மாப்ள....” என்று சொன்னதும் அந்த பெண்ணை பார்த்து சிரிக்க, அந்த பெண்ணும் பதிலுக்கு சிரிக்க அதிர்ந்த பிரபா, “ஐயோ மாமா.... நீ பண்றதுதான் கொலை வரைக்கும் போகும்னு நெனக்கிறேன்.... ஒரு பக்கம் மதுரைல ஜனனி அத்தை குடும்பம், மறுபக்கம் இந்த பொண்ணோட குடும்பம்.... நீ தாங்குவியா மாமா?” என்றான்.....
“அதல்லாம் சமாளிச்சுக்கலாம் மாப்ள, எனக்கு ரெண்டு தாரம் இருக்குன்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொன்னது இப்பதான் பலிக்குது” என்று கூறியபடியே, அந்த பெண்ணின் பின்னால் ஓடினான் பிரபா.... தலையில் அடித்துக்கொண்ட பிரபா மற்ற நிகழ்வுகளையும் ரசித்துக்கொண்டிருந்தான்....
ஒருவழியாக மாலை நேரம் வல்லம் கிளம்ப தயாரான நேரம், பிரபாவை அழைத்த மாணிக்கம், “மாப்ள, கெளம்புற நேரம் வந்திருச்சு.... அந்த பச்ச்சக்கிளிய பாத்து பேசப்போறேன், கொஞ்சம் துணைக்கு வாடா” என்று அழைத்துக்கொண்டிருந்தபோது, அந்த பெண்ணே அங்கு வந்துவிட்டார்....
இது மாணிக்கத்திற்கு இன்ப அதிர்ச்சி..... அதிர்ச்சி விலகாமல் மாணிக்கம், “வாங்க.... உங்க ... உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் நான்” என்று உளறினான்....
“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்?” என்றாள் அந்த பெண்....
“ஐயோ... எல்லாரும் இருக்காங்க.... சரி, பரவால்ல” என்று அந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு பிரபாவை பார்த்த மாணிக்கம், “மாப்ள, நீ கொஞ்சம் தள்ளிப்போடா... இந்த பொண்ணு ரொம்ப அவசரப்படுது.... அனேகமா முத்தம் கேக்கும்னு நெனக்கிறேன்” என்று மெதுவாக சொல்லிவிட்டு பிரபாவை தள்ளி போக செய்தான்....
பின்னர், அந்த பெண்ணை பார்த்து, “ஹ்ம்ம்... என்ன வேணாலும் கேளுங்க” என்றான் மாணிக்கம்....
“நீங்கதானே ஜனனியோட வீட்டுக்காரர்.... என்னை ஞாபகம் இல்லையா?... உங்க கல்யாணத்துக்கு கூட என் வீட்டுக்காரரோட வந்தேனே” என்றதும் மறுபேச்சு பேசாமல் அந்த அதிர்ச்சி விலகாமல் வல்லம் சென்றான் மாணிக்கம்....
ஒருபக்கம் இப்படி கலகலப்பும், கொஞ்சம் கிளுகிளுப்புமாக அன்றைய பொழுது பேராவூரணியில் முடிய, தஞ்சையில் அதே நேரத்தில் வெடியை கிள்ளி எரிய தயார் ஆனான் அகிலன்....

“மூனு நாளா நம்ம பிரபா ரொம்ப பிஸியா இருக்கான்டா.... நாளக்கி வந்ததும் நெறைய கேக்கனும்” என்றான்.... பிரபாவை பற்றிய பேச்சு என்பதால் அதை அகிலன் கவனிக்காதவாறு கவனிக்க தொடங்கினான் சாந்தன்.... சாந்தன் கவனிப்பதை உணர்ந்த அகிலன் பேச்சை தொடர்ந்தான்....
அருகில் இருந்த நண்பன் ஒருவன், “ஆமாம்ல, எங்கடா போனான் அவன்?... மூனு நாளா பாக்கவே முடியல?” என்றான்....
“அவன் இந்நேரம் பேராவூரணில டூயட் பாடிட்டு இருப்பான்டா.... அவனுக்கும் அவன் மாமா பொண்ணு அமுதாவுக்கும் இன்னக்கி பேசி முடிக்கிறாங்க... அதான்...” என்றான் அகிலன்....
“அப்டியா?... இன்னக்கி நிச்சியதார்த்தமா?” என்று ஆச்சரியமானான் இன்னொரு நண்பன்....
“நிச்சயதார்த்தம் இல்ல.... ஆனா, பேசி முடிக்கிறாங்க..... அவ்வளவுதான்.... அட்வான்ஸ்’ல புக் பண்ற மாதிரி.... பொங்கலுக்கு ஊருக்கு போக நீ தீபாவளிக்கு முன்னாடியே ட்ரெயின்’ல ரிசர்வ் பண்ற மாதிரி.... பொண்ணு அவ்ளோ நல்ல பொண்ணுடா.... சின்ன வயசு சினேகா மாதிரி இருப்பா, பாவாடை தாவனில தான் இருப்பா.... கேரக்டரும் கூட சூப்பர்டா” என்று சாந்தனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சொல்லி முடித்தான் அகிலன்.....
அகிலனின் பேச்சை கேட்ட சாந்தன் எவ்வித ரியாக்சனும் இல்லாமல் இருப்பதை பார்த்து குழம்பினான் அகிலன்.... ஆனாலும் கொளுத்தி போட்டதோடு தன் கடமை முடிந்ததாக எண்ணி, இடத்தை காலி செய்தான் அகிலன்.... இதற்கு மேல் வாய்விட்டால் பிரபாவிடம் மாட்டிக்கொள்வோம் என்கிற தயக்கம் கூட அகிலனின் அடுத்த கட்ட தாக்குதலுக்கு தடை போட்டது....
இவற்றையெல்லாம் கேட்ட சாந்தன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.... அகிலனை பற்றி நன்றாக தெரிந்தும் இதை பெரிது படுத்த விரும்பவில்லை சாந்தன்.... தன்னிடம் பிரபா பொய் சொல்லமாட்டான் என்கிற நம்பிக்கை மேலோங்கி இருந்தது சாந்தனுக்குள்.... அதனால் அகிலனின் வார்த்தைகளை காற்றோடு கரையவிட்டான் சாந்தன்....
எப்படியும் நாளைக்கு வந்துவிடுவான் பிரபா, அப்போது நேரில் இதைப்பற்றி சொல்லி சிரிக்கலாம் என்ற அளவிற்கே அகிலனின் வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டான் சாந்தன்....
மாலை பணி முடிந்ததும் சாந்தனை அழைத்த முதலாளி, “சாந்தா, மதுரைலேந்து சரக்கு வருது.... நம்ம ட்ரைவரோட போயி பஸ் ஸ்டாண்ட்ல எடுத்திட்டு வந்துடு.... ரமேஸ் ஊருக்கு போய்ட்டான், வேற எவனையும் நம்பி சரக்கு எடுக்க அனுப்ப முடியாது.... போயிட்டு வந்திடுறியா?....” என்றார்...
“அதுல என்னண்ணே இருக்கு.... நான் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தான் சாந்தன்....

சரக்குகளை வண்டியில் ஏற்றிவிட்டு மதுரை பேருந்து நடத்துனரிடம் சாந்தன் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த பேருந்திலிருந்து இறங்கினாள் ஜனனி.... கணக்கு வழக்குகளை முடித்த சாந்தன், ஜனனியை பார்த்ததும் சிரித்தவாறே, “அக்கா, என்னக்கா தனியாவா வந்திருக்கிங்க?” என்றான்...
சாந்தனை பார்த்ததும் கொஞ்சம் மகிழ்ச்சியான ஜனனி, “ஆமா சாந்தன்... நல்லா இருக்கியா?.... சீக்கிரமே வந்திருக்கணும், இடையில பஸ் ப்ரேக் டவுன் ஆகிடுச்சுபா.... ஒரு ஹெல்ப் பண்றியா?.... ஒரு கார் ஒன்னு வாடகைக்கு எடுக்கனும்பா” என்றாள்...
இருவரும் பேசிக்கொண்டே வாடகை மகிழுந்துகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள்.... வாடகை பேசி ஒரு மகிழுந்தில் ஜனனி ஏறும்போதுதான் பிரபாவை பற்றி கேட்டான் சாந்தன்....
“பிரபாலாம் இன்னைக்கு வரலையா?” என்றான்...
“வந்திருப்பாங்கப்பா.... நான் மதுரைக்கு போனேன்... அவங்களோட பேராவூரணி போகலப்பா” என்று ஜனனி சொல்லி முடித்ததும் சாந்தன் அதிர்ச்சியானான்.... ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாதவனாக “பேராவூரணியா?.... எப்போ போனான்?” என்றான்...
“மூனு நாளக்கி முன்னாடியே போய்ட்டான்.... அவங்க மாமா வீட்ல ஒரு பங்க்சனாம், அதுக்குதான் எல்லாரும் போயிருக்காங்க” என்று கூறிவிட்டு ஜனனி புறப்பட தயாரானவளாக, “போயிட்டு வரேன் சாந்தன், வீட்டுக்கு டைம் கிடைக்குறப்போ வா” என்றதைகூட கவனிக்காமல் திகைத்து நின்றான் சாந்தன்.... ஜனனி சென்ற மகிழுந்து கண்ணிலிருந்து மறையும்வரை நிதானம் இல்லாமல் இருப்பதைப்போல நின்றுகொண்டிருந்தான்.... வண்டியின் ஒலி பெருக்கி சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு நினைவிற்கு வந்தவன், அங்கிருந்து கிளம்பினான்.... மறுநாள் வழக்கம்போல பிரபா சாந்தனை பார்க்கும் ஆர்வத்தோடு கேண்டீன் வந்தான்.... மூன்று நாள் விரதம் முடிந்ததும், மாமிசம் நோக்கி செல்லும் மனம் போல, சாந்தனை நோக்கி ஓடினான் பிரபா.... சாந்தன் இன்னும் பணிக்கு வரவில்லை.... எப்போதும் முதல் ஆளாக அங்கு வரும் சாந்தன் அன்று வராதது ஆச்சரியமானது பிரபாவுக்கு.... அலைபேசியில் அழைத்தாலும் பதில் இல்லை.... வேறு வேலையாக எங்கேனும் சென்றிருக்கலாம் என்று நினைத்த பிரபா, வகுப்பிற்கு சென்றான்.... வகுப்பில் அவன் இருந்தாலும், மனமெல்லாம் சாந்தனை சுற்றியே சுழன்றது.... மதியம் ஆர்வத்தோடு கேண்டீன் வந்தான், அப்போதும் அவன் பணிக்கு வரவில்லை என்பதை உணர்ந்த பிரபா அதற்கு மேலும் தாமதிக்க மனம் இல்லாதவனாக சாந்தனின் அறையை நோக்கி விரைந்தான்.... படபடப்பு சற்றும் குறையாமல் சாந்தனின் அறைக்கதவை தட்டினான்.... வெகுநேரம் தட்டியபிறகு கதவு திறக்கப்பட்டது....
கதவை திறந்த சாந்தனின் முகத்தை பார்த்த பிரபா அதிர்ச்சியானான்.... முகமெல்லாம் வீங்கி இருந்ததில் அவன் பல மணி நேரமாக அழுதிருப்பதை உணர்த்தியது, கண்ணுக்கு கீழே மெல்லிய கருவளையம் அவன் இரவெல்லாம் உறங்கவில்லை என்பது அப்பட்டமாக காட்டியது.... இதை எல்லாவற்றையும்விட அதிகமாக அவன் முகத்தில் படர்ந்திருந்த குழப்பமும், சோகமும் பிரபாவை இன்னும் வேதனையாக்கியது.... பிரபாவை பார்த்ததும், அவனை பார்க்க விரும்பாதவனைப்போல முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே சென்றான் சாந்தன்.... உள்ளே சென்று அங்கிருந்த நாற்காலியில் தலையில் கைவைத்தபடி அமர்ந்தான் சாந்தன்.... அதிர்ச்சியில் பித்தனான பிரபா, சாந்தனின் அருகில் சென்று, “என்னடா ஆச்சு?... ஏன் இப்டி இருக்க?.... என்ன பிரச்சின?” என்று கேள்விக்கு மேல் கேள்விகளாக அடுக்கினான்....
ஆனால், கேள்விகள் வெறும் கேள்விக்குரிகளோடே முடிந்துவிட்டது, சாந்தனிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.... ஆனாலும், அதை பொருட்படுத்தாத பிரபா, “சொல்லித்தொலடா.... என்னதான் பிரச்சின?.... யாரும் எதுவும் சொன்னாங்களா?.... வேற எதுவும் பிரச்சினையா?... நான் போன் பண்ணப்போ கூட நீ எடுக்கலையே, என் மேல எதுவும் கோவமா?” என்று சொல்லும்போது பிரபாவின் கண்களும் நீரை கோர்க்க தொடங்கியது....
அதற்கும் பதில் சொல்லாத சாந்தன், இன்னும் அமைதி களையாமல் இருந்தான்.... “சொல்லித்தொலடா.... மனுஷனா நீ?... ஒவ்வொரு தடவையும் இப்டி பிரச்சினைகள உனக்குள்ளயே வச்சுக்கிட்டா, பிரச்சின எப்டி தீரும்?... வாயை தொறந்து சொல்லு, உண்மைய சொல்லு” என்றான் பிரபா....
அப்போதுதான் பிரபாவின் முகத்தை பார்த்த சாந்தன், “நானாடா எல்லாத்தையும் மறைக்குறேன்?.... நீ எப்பவும் எதையும் மறைக்காம இருந்திருந்தா நமக்குள்ள எந்த பிரச்சினயுமே வந்திருக்காதே?” என்றான்....
“தெளிவா சொல்லு, நான் எதை மறச்சேன்?” என்றான் பிரபா...
“மூனு நாளா எங்க போயிருந்த?”
“அது.... அது.... அது வந்து..... மதுரைக்கு.... ஜனனி அத்தை வீட்ல ஒரு பங்க்சன், அதுக்குதான்”
“அதே ஜனனி அக்காவைத்தான் நேத்து பஸ் ஸ்டாண்ட்’ல பாத்தேன்... மதுரைக்கு போயிட்டு வந்தாங்க.... நீ எங்க போனன்னும் சொன்னாங்க.... இப்போகூட உனக்கு உண்மைய சொல்லனும்னு தோனலைல?.... இன்னமும் ஒனக்கு எம்மேல நம்பிக்கை இல்லைல.... யாரோ அகிலன், அவனுக்கு சொல்லிருக்க, எனக்கு சொல்ல உனக்கு தோனலைல” என்று கூறிவிட்டு தலையை கவிழ்த்து அழத்தொடங்கினான் சாந்தன்....
பிரபா திக்கற்று நின்றான்.... இப்படி கையும் களவுமாக மாட்டுவான் என்று அவன் நினைக்கவே இல்லை.... ஆனாலும், இதற்கு மேலும் எதையும் மறைத்தால், அது முற்றிலும் சாந்தனுடனான உறவை அழித்துவிடும் என்று பேசத்தொடங்கினான் பிரபா.... “உண்மைதான் சாந்தா.... நான் மதுரைக்கு போகல, பேராவூரணிதான் போனேன்... உன்கிட்ட எதையும் மறைக்கனும்னு நான் இந்த பொய்யை சொல்லல... ஏற்கனவே உனக்கு அமுதாவுக்கும் எனக்கும் கல்யாண பேச்சு பேசுராங்கன்னு ஒரு நெருடல் இருக்கு, இந்த நேரத்துல நான் இத சொன்னா நீ கஷ்டப்படுவன்னுதான் மறச்சேன்.... நீ கவலைப்படாம இருக்கனுமேன்னு நான் செஞ்ச ஒரு விஷயம் ஒன்னை இவ்வளவு சங்கடப்படுத்தும்னு நான் நெனச்சே பாக்கல.... ரொம்ப சாரிடா” என்று கூறிவிட்டு தலையை கவிழ்ந்தபடி நின்றான்....
“ஒவ்வொரு தடவையும் இப்டி எதாவது செஞ்சுட்டு, சாரின்னு ஒரு வார்த்தைல முடிச்சுக்கறியே, என்னைக்காவது நான் படுற கஷ்டத்த நினச்சு பாத்திருக்கியா நீ?.... எதுவா இருந்தாலும் நீ உண்மையா சொன்னா நான் அதை எதிர்கொள்ள சமாளிச்சுக்குவேன்.... இப்படி ஒவ்வொரு தடவையும் பொய் சொல்றதாலதான், நீ இன்னும் என்னை முழுசா புரிஞ்சுக்கலயோன்னு தோணுது.... இப்பவும் அமுதாவுக்கும் உனக்கும் நிச்சயம் ஆகிடுச்சுன்னு உன் ப்ரெண்ட்ஸ் பேசிக்கிட்டதை என்னால நம்பாம இருக்க முடியல” என்று சாந்தன் சொல்லி முடித்ததும் பிரபா கோபமானான்.....
“நான் பொய் சொல்றவன் தான் ஒத்துக்கறேன், ஆனால் உன் விஷயத்துல நான் உன்னை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.... என்னை நம்புனா இதையும் நீ நம்பித்தான் ஆகனும்” என்ற வார்த்தைகளில் காரத்தை உமிழ்ந்தான் பிரபா....
“அப்போ அமுதா விஷயத்தை ஏன் தொடக்கத்துலையே முடிக்காம, இன்னும் அமைதியாவே இருக்க?”
“இப்போ அதுக்கான நேரம் வரலைங்குரத தவிர வேற காரணம் இல்ல..... இப்பதான் எங்களோட மாமா குடும்பம் ஒன்னு சேர்ந்திருக்காங்க.... இந்த நேரத்துல நான் எதாவது பேசப்போய் அது மறுபடியும் எங்களுக்குள்ள பிரிவை கொண்டுவந்திடுமோன்னு பயமா இருக்கு.... மத்தபடி கட்டாயமா நிச்சயம் அளவுக்கல்லாம் நான் கொண்டுபோகவிட மாட்டேன்... ப்ரெண்ட்ஸ் கிண்டலுக்கு சொல்லிருப்பாங்கடா....”
“அப்படின்னா ஒனக்கு உன் குடும்பம், உன் சொந்தம், உன் நண்பர்கள் இவங்கதான் முக்கியமா?... நான் முக்கியமில்லையா? என்னோட உணர்வுகள் உனக்கு முக்கியமில்லையா?”
“உறவுகளோட முக்கியத்துவம் ஒனக்கு புரியல.... ஆரம்பத்துலேந்து சொந்தங்களோட பழகுற வாய்ப்பு உனக்கு கிடைக்காததால நீ இப்டி பேசுற.... உறவுகள் எவ்வளவு முக்கியம்னு உனக்கு இன்னும் புரியல.... அது புரியுரப்போ நான் சொல்றதும் உனக்கு புரியும்” என்று பிரபா சொன்னதும் சாந்தன் முகம் கோபத்தில் கொந்தளித்தது..... கோபத்தை திமிறிக்கொண்டு அழுகை கண்ணை மறைத்தது....
“எனக்கா உறவுகளோட முக்கியத்துவம் தெரியலன்னு சொல்ற?.... அப்படின்னா நீயும் என்னைய ஒரு அநாதை மாதிரிதானே பாக்குற..... உன்னைவிட உறவுகளோட முக்கியத்துவம் எனக்கு அதிகமா தெரியும்டா..... உறவுகளோட இழப்புகளை உன்னைவிட அதிகமா உணர்ந்தவன் நான்.... அப்டி இருக்கையில ஒன்னையும் நான் இழந்துடக்கூடாதுன்னுதான் இவ்வளவும் பேசுறேன்.... இதைக்கூட நீ புரிஞ்சுக்காம இருக்குறியே” என்று சாந்தன் சொல்லி அழும்போதுதான் தான் சாந்தனை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தான் பிரபா.... உடனே சுதாரித்த பிரபா சாந்தனை சமாதானப்படுத்தும் விதமாக பேசி, ஒருவழியாக இருவரும் சமாதானமாக நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டது.....
பெரிய பூகம்பம் ஓய்ந்த பிறகு விட்டு சென்ற சுவடுகளைப்போல இருவரின் சண்டை ஒரு பிரளயத்தையே விட்டு சென்றது அந்த அறையில் நிலவிய நிசப்தம் எடுத்துக்காட்டியது..... “எப்ப சாப்ட நீ?” என்றான் பிரபாவிடம் சாந்தன்...
“காலைல சாப்டேன்...... நீ?”
“நேத்து மதியம் சாப்டதுடா.... உன்கூட சண்டைபோடக்கூட இப்போ தெம்பில்ல..... அதனாலதான் இப்போ சமாதானம்கூட ஆகிட்டேன்” என்று சிரித்தான் சாந்தன்....
சாந்தனின் முகத்தில் புன்னகையை பார்த்ததும் மகிழ்ச்சியானான் பிரபா, “நீயா இப்டி பேசுற?.... நல்ல முன்னேற்றம்டா.... நான் போயி ரெண்டு பேருக்கும் சாப்பிட எதாச்சும் வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பினான்....
“பாத்து போடா.... அன்னிக்கு மாதிரி எவனாச்சும் உன்ன ரேப் பண்ண வந்தா காப்பாத்த எனக்கு தெம்பு இல்லடா” என்றான் சாந்தன்...

“நான் பழைய பிரபா இல்லடா, இப்போ நானே பலபேரை சமாளிச்சிடுவேன்” என்று சிரித்துவிட்டு கடைக்கு சென்றான் பிரபா......
பிரபா வெளியே சென்றதும் சாந்தன் நடந்தவற்றை சிந்தித்தான்... ஏனோ இப்போதெல்லாம் பிரபாவிடம் சண்டை போட கூட மனம் வரவில்லை அவனுக்கு .... பிரபா தவறே செய்தாலும் தான் அதை கிரகிக்க கற்றுக்கொண்டுவிட்டான் சாந்தன்... ஒரு சிறு பிரச்சினையே நாள் முழுக்க யோசித்து யோசித்து அதை பூதாகரமாக்கும் தான் பிரபா விஷயங்களில் இப்படி ஒருசில மணி நேரங்களில் அனைத்தையும் மறந்து பழையபடி சிரித்து பேச முடிவது எப்படி? என்று யோசித்தான்.... இப்படி சிந்தையை குழப்பும் விந்தைகள் நிறைந்த உலகம்தான் காதல் போலும் என்று நினைத்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் சாந்தன்....
கடைக்கு சென்ற பிரபாவின் மனத்திலும் இப்படி எண்ணங்கள் தோன்றாமல் இருக்குமா?... ஆனால் இப்படி கேள்விகள் எழும்போது ஏனோ கவுதமின் நினைவு பிரபாவுக்கு வந்தது.... “எதுவா இருந்தாலும் சாரி கேளுங்க, ஈகோவ விடுங்க” எவ்வளவு வலிமையான உண்மை....ஒருவேளை இப்படி இல்லாமல் தன் நியாயத்தை மட்டுமே சாந்தனிடம் வலியுறுத்தி இருந்தால் இந்நேரம் இருவருக்குள்ளும் கலவரம் அல்லவா ஆகியிருக்கும்.... அவன் சொன்னதைப்போலவே இந்த நேரத்தில் அவன் நினைவு வந்தது ஆச்சரியமாக இருந்தது....
மறுநாள் வழக்கம்போல கல்லூரியில் இருவரும் பேசிக்கொண்டிருந்தத பார்த்த அகிலன் மேலும் கோபமானான்.... இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகும் இருவரும் ஒரு இரவில் இணைந்துவிடுகிறார்களே, எப்படி சாத்தியம்? என்று தன்னை குழப்பிகொண்டான் அகிலன்.... இருந்தாலும் “ஆபரேசன் அகிலன்” ஐ மனம் தளராமல் இருவரையும் பிரிக்க அடுத்தடுத்த சதித்திட்டம் தீட்ட ஆயத்தமானான் அகிலன்....
அந்த அன்யோனத்தை இன்னும் அதிகமாக்கிட பிரபாவுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.... மூன்றாம் வருட இறுதியில் இருக்கும் பிரபா ஒரு ப்ராஜக்ட் விஷயமாக சென்னை செல்ல வேண்டி இருந்தது.... அதை சாந்தனுடனான இன்ப சுற்றுலாவாக்கவும் திட்டம் தீட்டி ஒருவாராக சாந்தனையும் சம்மதிக்க வைத்து மூன்றுநாள் பயணமாக சென்னை கிளம்ப ஆயத்தமானான் பிரபா.... கிளம்பும் முன் அகிலனிடம் பேசிக்கொண்டிருந்தான் பிரபா.... "என்னடா திடீர்னு இப்டி ஒரு ட்ரிப்.... ப்ராஜக்ட் நாங்கல்லாம் திருச்சிலதான் பண்ணப்போறோம், நீ என்ன சென்னை கிளம்பிட்ட?... அதுவும் மூனு நாளு?" என்றான் அகிலன்....
"ஒன்னுமில்ல சும்மாதான்டா.... சாந்தனோட எங்கயும் இப்டி வெளில போனதே இல்ல, அதான் கொஞ்சம் சுத்திப்பாத்துட்டு ப்ராஜக்டையும் முடிச்சிட்டு வரலாம்னு போறேன்டா... சாரிடா, முன்னாடியே சொல்லமுடியல, பிளான் உறுதி ஆகாததால இப்பதான் சொல்ல முடிஞ்சுது...." என்றான் பிரபா.... பிரபா இதை சொல்லி இருந்தால் எப்படியும் தடுத்திருக்க முயன்றிருக்கலாம், இப்படி கடைசி நேரத்தில் செல்வதால் முடிந்த அளவு அதில் என்ன பிரச்சினை கொண்டு புகுத்தலாம் என்று யோசித்தான் அகிலன்.... "எங்க தங்க போறீங்க?" என்றான் அகிலன்....
"வேளச்சேரில சித்தப்பா வீடு இருக்குடா.... அவரு ஒருவேலையா இப்ப பெங்களூர் போயிருக்காரு.... அவர் பைக்கும் அங்கதான் இருக்கு.... அதனால பிரச்சின இல்லடா" என்று சிரித்தான் பிரபா....
எல்லாம் சாந்தனுக்கு தோதாக அமைந்திருப்பதை எண்ணிய அகிலன், "ஓஹோ... அப்டியா?... அப்போ நீங்க போறது ஜாலி ட்ரிப்னு சொல்லு... மறக்காம மத்த விஷயம்லாம் எடுத்து வச்சுக்கோடா" என்று சிரித்தான்....
"மத்த விஷயமா?... என்னடா சொல்ற?.... புரியலையே"
"ஒனக்கு ஒன்னும் புரியாதுடா.... காண்டம், லூப்ரிகன்ட் இப்டி எல்லாம் சொல்றேன்டா... எதுவும் தெரியாத மாதிரி புதுசா கேக்குற?... "
"சி ச்சீ..... அப்டிலாம் இதுவரைக்கும் எங்களுக்குள்ள நடந்ததில்ல .... இதுவரைக்கும் எங்களுக்குள்ள அதிகபட்சம் கிஸ்'தான் இருந்திருக்கு.... அதுக்கு மேல இப்போதைக்கு எதுவும் இல்லடா"
"என்னடா இப்டி சொல்ற?.... காதல்ல இதல்லாம் இருக்கிறது தப்பில்லடா... சொல்றேன்னு தப்பா நினைக்காத, ஒருவேளை சாந்தன் இன்னும் உன்ன முழுசா நம்பலையா?" என்று வெடியை கொளுத்திவிட்டான் அகிலன்....
"கண்டிப்பா இல்லடா.... என்ன முழுசா நம்புரான்... இதல்லாம் இப்போ வேண்டாம்னு சொல்றான், அவ்வளவுதான்" என்று விட்டுக்கொடுக்காமல் பேசினான் பிரபா....
"அப்டினா, அவனுக்கு கே செக்ஸ்'ல விருப்பம் இல்லாம இருக்கலாம், உனக்காக இப்போ லவ் பன்றானோ என்னமோ.... பாவம்டா, அப்டினா அவன் ரொம்ப கஷ்டம்..." என்று கூறிவிட்டு பிரபாவின் முகத்தை பார்த்த அகிலன் அவன் முகத்தில் குழப்பத்தை நிரப்பிவிட்ட மகிழ்ச்சியின் திளைத்தான்....
இதைப்பற்றி யோசித்தான் பிரபா, "அப்படின்னா அவனுக்கு இதுல விருப்பம் இல்லாம இருக்கும்னு நெனக்கிரியா?" என்று சந்தேகமாக கேட்டான் பிரபா....
"தெரியல... ஆனால், ஒன்னு அவன் இன்னும் முழுசா நம்பலைன்னு அர்த்தம், அப்டி இல்லைனா அவன் இதுல விருப்பப்படலைன்னு அர்த்தம்.... இருந்தாலும் இந்த தனிமையை நீ யூஸ் பண்ணிக்கோ, அவன்கிட்ட இதைப்பத்தி தெரிஞ்சுக்கோ.... நீயா அவனை தீண்டு, அவன் மறுத்தான்னா என்ன காரணம்னு கேளு.... எப்டியும் எந்த பிரச்சினையா இருந்தாலும் சென்னை பயணத்தொட முடிச்சுக்கோ.... தஞ்சாவூர் வர்றப்போ எல்லாம் முடிஞ்சு, சந்தோஷமா நான் உன்ன பாக்கனும்டா" என்றான் அகிலன்.... பேருந்து கிளம்ப நேரமானதால் அத்தோடு பிரபா பேருந்தில் ஏறிவிட்டான்.... சாந்தன் அருகில் அமர்ந்திருந்தாலும், அகிலனின் பேச்சுக்கு பிறகு பிரபாவின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை சாந்தன் கவனிக்க தவறவில்லை.... ஏதோ அகிலன் கூறி, பிரபாவை குழப்பி இருக்கிறான் என்று உணர்ந்தான்.... எப்படியும் அதன் தாக்கம் சென்னையில் எதிரொலிக்கும், எப்படியும் அதனை சமாளிக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தான் சாந்தனும்....
மறுநாள் அதிகாலை சென்னை மாநகராட்சி இந்த காதலர்களை அன்போடு வரவேற்று அரவணைத்தது..... காலை முதலே தன் ப்ராஜக்ட் வேலையாக பிரபா வெளியே கிளம்பிவிட்டான்.... இரவு பயணக்களைப்பு மிகுதியால் சாந்தன் ஆழ்ந்து உறங்கினான்..... நண்பகல் நேரத்தில் எழுந்தவன் குளித்து முடித்து, அருகில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பிரபாவின் அலைபேசிக்கு அழைத்தான்.... பிரபா பதில் அளிக்கவில்லை.... தொலைக்காட்சி பெட்டியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சகல சேனல்களிலும் மனம் நாட்டமில்லாமல் ஒரு கட்டத்தில் அதை அனைத்துவைத்துவிட்டு வாசலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சாந்தன்.... “அவனுக்கு வேலை இருந்தா எதுக்கு என்னைய கூட்டிட்டு வந்திருக்கனும்?.... காலைலேந்து நான் ஒருத்தன் இருக்குறதையே மறந்து அப்டி என்ன வேலை அவனுக்கு?... அவன் வந்ததும், கண்டிப்பா அவன்கிட்ட பேசவே கூடாது.... எப்டியும் அவன் முத்தத்தை எதிர்பார்ப்பான், அதுக்கும் ஒத்துக்ககூடாது.... அவன் வந்ததும் அவனை கண்டுக்கவே கூடாது, அப்பதான் என் கோபம் அவனுக்கு புரியும்” என்று தனக்குள் பிரபாவின் மீதுள்ள கோபங்களை வார்த்தைகளாக வடித்துக்கொண்டிருந்தான் சாந்தன்.... அப்படி சிந்தித்துக்கொண்டிருக்கும்போது கதவை திறந்து உள்ளே வந்தான் பிரபா.... பிரபாவை பார்த்ததும் சிந்தனை மறந்தவனாய், “என்னடா பிரபா இவ்வளவு நேரம்?.... சாப்டியா?” என்று கேட்டுவிட்டான் சாந்தன்.... இதை கேட்ட பிறகுதான் தான் பிரபாவிடம் எப்படியல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து வைத்திருந்ததை நினைத்து பார்த்தான்... எவ்வளவோ யோசித்தும் பிரபாவின் முகத்தை பார்த்ததும் அத்தனையும் மறைந்து போனது சாந்தனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது....
உள்ளே வந்து உடைகளை மாற்றிய பிரபா, சாந்தனை கட்டிப்பிடித்து “சாரிடா செல்லம்.... என் ப்ராஜக்ட் வேலையை இன்னைக்கே முடிச்சுட்டேன், இன்னும் ரெண்டு நாள் நாம ஜாலியா இருக்கலாம்ல அதான் இன்னைக்கு முழுக்கவும் பிஸி....... நீ சாப்டியா?.... எனக்குதான் பசிக்குது” என்று கூறியவாறே கன்னத்தில் முத்தம் கொடுத்தான்....

“அச்சச்சோ சாப்பிடலையா?.... இரு நான் எதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வரேன்” என்று பிரபாவின் பிடியை விலக்க முயன்ற சாந்தனை மேலும் இறுக்கிய பிரபா, “இது வேற பசிடா.... இதுக்கு வேற எங்கயும் போய் சாப்பிட வேணாம்.... அதான் இங்கயே இருக்கே” என்று கூறியவாறே சாந்தனின் காதுகளை கடித்தான்.... சாந்தன் ஒருவித புது இன்பத்தை உணர்ந்தான்.... அந்த இடைப்பட்ட நேரத்தில் பிரபா மெல்ல தன் கைகளை சாந்தனின் மார்பை நோக்கி செலுத்தி, உடைகளை கழற்றினான்..... மதுரை குவாரியில் உள்ள கிரானைட் கல்லை போன்று வழவழப்பான மார்பை வருடும்போதுதான் சாந்தன் சுயநினைவுக்கே வந்தான்.... படாரென்று பிரபாவை விலக்கி தள்ளிய சாந்தன், சில அடிகள் தள்ளி நின்றான்.... சாந்தன் தள்ளியபோது பிரபாவின் உடைக்குள் இருந்து விழுந்த ஆணுறை பாக்கெட்டை பார்த்ததும் அதிர்ந்தான் சாந்தன்.... அவசர அவசரமாக அந்த ஆணுறையை எடுத்து மறைக்க முயல, சாந்தன் அதை கண்டுபிடித்துவிட்டதை உணர்ந்தான் பிரபா....
“என்னடா அது?” என்றான் சாந்தன்....
“அது.... அது ஒன்னுமில்ல..... சும்மாதான்.... பாக்கெட்...” என்று உளறினான் பிரபா....
“அதான் என்ன பாக்கெட்னு கேக்குறேன்.... மறைக்காம சொல்லு” என்று கண்டிப்புடன் கேட்டான் சாந்தன்....
கோபமான பிரபா, “ஆமா.... இது காண்டம்தான்.... அதுல என்ன தப்பு?” என்றான்....
“அறிவோடதான் இருக்கியா?.... என்ன தப்புன்னு கேக்குற... இது இப்ப வேணாம்னுதானே சொன்னேன், அத மறந்துட்டியா?”
“இப்ப வேணாம்னா அப்புறம் எப்ப?.... இன்னும் இருபது வருஷம் கழிச்சு வச்சிக்கலாமா?”
“அப்டினா உனக்கு என் உடம்புதான் முக்கியமா?”
“அப்டி நெனச்சிருந்தா நான் எப்பவோ உன்னைய அடைஞ்சிருக்க முடியும்.... உனக்குதான் என்மேல நம்பிக்கை இல்ல.... நான் உன்ன ஏமாத்திருவனோன்னு பயப்படுற.... இன்னும் எம்மேல சந்தேகப்படுற” என்று சாந்தனின் மீது அடுக்கடுக்கான கோப வார்த்தைகளை கொட்டிய பிரபா கோபத்தில் அறையில் சென்று படுத்துவிட்டான்....
சாந்தனுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை.... தான் பிரபாவின் மீது காட்டிய கோபம், தன் மீதே திருப்பி தாக்கும் என்று நினைக்கவே இல்லை அவன்.... தான் பிரபாவை நம்பவில்லை என்று அவன் நினைப்பதில் இன்னும் கவலையானான் சாந்தன்.... இந்த விஷயத்திற்கு சூத்திரதாரி அகிலன்தான் என்பதை உணர்ந்த சாந்தன் என்ன செய்வதென்று யோசித்தான்.... படுத்திருந்த பிரபாவோ மனத்தால் மிகவும் நொந்துபோனான்.... அகிலன் சொன்னதைப்போல தன் மீது சாந்தனுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்கிற ஆதங்கம்தான் அவனை வாட்டி எடுத்தது.... மணி எட்டு ஆனது... “பிரபா மதியானம் சாப்பிட்டானான்னு தெரியல.... நான் நல்லா கொட்டிகிட்டேன்.... பாவம், அவன் பசிவேற தாங்க மாட்டான்....
சாப்ட பிறகாவது சண்டை போட்டிருக்கலாம், வழக்கம்போலவே அவசரப்பட்டேன்” என்று பிரபாவை பற்றி தனக்குள் வருந்திக்கொண்டிருந்தான் சாந்தன்... ஒருவாராக உணவகம் சென்று இருவருக்கும் உணவு வாங்கிக்கொண்டு வந்து பிரபாவை எழுப்பினான் சாந்தன்... தூங்கினால்தானே எழுப்ப முடியும், பிரபாதான் தூங்கவில்லையே.... அதனால், சாந்தனின் பேச்சுக்களை கவனிக்காதவாறே படுத்திருந்தான்.... பிரபாவின் தோள்களை வருடிய சாந்தன், “பிரபா, எழுந்திருடா.... சாரி.... தயவுசெஞ்சு சாப்பிடுடா” என்றான்....
“நல்லா நீயே சாப்பிட்டு தெம்பா இரு.... எம்மேல உனக்கெதுக்கு அக்கறை?”
“நான் சொன்னது உடம்பு தெம்பாகுற சாப்பாடு இல்லடா.... நீ கேட்ட சாப்படைத்தான் சொல்றேன்” என்று சாந்தன் சொன்னதும் திடுக்கிட்ட பிரபா சட்டென திரும்பி சாந்தனை பார்த்து, “என்னடா சொல்ற?.... நெஜமாவா?.... “ என்றான்....

“நெஜமாதான்..... இனி நீ விரும்புரத செஞ்சுக்கோ” என்றான் சாந்தன்....
சாந்தனை கட்டி அணைக்க எழுந்தவன், திடீரென ஏதோ யோசித்தவனாக, “இல்லடா வேணாம்.... இப்போ உனக்கு விருப்பமில்லாம நீ எனக்காக ஒத்துக்கர்றன்னு நெனக்கிறேன்...... நீயா எப்போ சொல்றியோ அப்போ வச்சுக்கலாம்” என்று சிறுபிள்ளை போல மீண்டும் விலகி நின்றான் பிரபா....
“ஐயோ இல்லடா... நானாத்தான் சொல்றேன்.... எனக்கு முழு இஷ்டம்தான்” என்றான் சாந்தன்....
குழம்பிய பிரபாவோ, “இல்லடா நீ பொய் சொல்ற... நீ என் விருப்பத்துக்காக இப்டி சொல்ற...” என்று மீண்டும் கூறினான்....
“உன்ன திருத்தவே முடியாது” என்று கூறிய சாந்தன் கட்டிலில் அமர்ந்திருந்த பிரபாவை கட்டி அனைத்து இதழோடு இதழ் பதித்து இன்ப ரசம் பருகினான்....
பிரபா திகைத்து நின்றான்.... எப்போதும் தான் முன்னெடுக்கும் செயலை இன்று சாந்தன் செய்வது வித்தியாசமான அனுபவமாக இருந்தது பிரபாவுக்கு.... இதழில் அமுதம் பருகிய சாந்தன், பிரபாவின் ஆடைகளை களையும்போதுதான் பிரபாவும் அன்றைய வேட்டைக்கு ஆயத்தமானான்.... உதட்டில் தொடங்கிய களவியல் உறுப்பில் முடிந்து இருவரும் இன்ப களிப்பில் கட்டிலில் படுத்திருந்தனர்..... சாந்தனின் மார்பில் தலை வைத்து படுத்திருந்த பிரபா, சாந்தனின் மார்பை வருடிக்கொண்டிருந்தான்..... சாந்தன் வெட்க மிகுதியால் விட்டத்தை பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தான்.....
“தாங்க்ஸ டா சாந்தா.... நெஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான் பிரபா....
“தாங்க்ஸ் எதுக்குடா லூசு?.... எனக்கும்தான் அதுல சந்தோசம்.... சரி எனக்கு பசிக்குதுடா” என்றான் சாந்தன்....
சிரித்த பிரபா, “அடப்பாவி அதுக்குள்ளயுமா?.... எப்டியும் இன்னும் அரை மணி நேரம் ஆகுமேடா எனக்கு...” என்றான்....
“எரும எரும.... நான் சொல்றது வயிறு பசிக்குதுன்னு..... இதே நெனப்புல இருக்காத...” என்று செல்லமாக பிரபாவின் தொடையில் கிள்ளினான் சாந்தன்...
“அவ்ளோதானா?.... நான்கூட மறுபடியும் உனக்கு மூட் வந்திருச்சோன்னு பயந்துட்டேன்.... ஆனாலும், நீ ரொம்ப ஸ்ட்ராங்டா....” என்று சிரித்தான் பிரபா....
இருவரும் உடைகளை மாற்றிக்கொண்டு சாப்பிட்டனர்.... சாப்பிட்டுவிட்டு சாந்தனின் மடியில் படுத்து தொலைக்காட்சி பார்த்தவாறே அசந்து தூங்கிவிட்டான் பிரபா....
பிரபாவின் கன்னத்தில் முத்தமிட்ட சாந்தன், மெதுவாக “இதுதான் நீ அரை மணிநேரத்துல மூடாகுற லட்சனமாக்கும்..... சரி நான் போயி தூங்குறேன்” என்று கூறிவிட்டு தன் படுக்கைக்கு கிளம்ப போனவனின் கைகளை பிடித்து இழுத்த பிரபா, “நான் தூங்கிட்டேன்னு நெனச்சியாடா செல்லம்?.... இவ்வளவு ஆசையை மனசுல வச்சுக்கிட்டுதான் எதுவும் தெரியாத மாதிரியே நடிச்சியாக்கும்?..... இப்போ நான் தூங்கலடா, எல்லாம் நம்ம அடுத்த ஆட்டம் எப்டி இருக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.... என்ன ரெடியா?” என்றவாறே சாந்தனை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு முத்த மழை பொழிய தொடங்கினான் பிரபா.... சாந்தன் இப்போது வெட்க மிகுதியால் சிரித்தான்....
“முதல்ல நீ ஆரமிச்ச, இப்போ நான் ஆரமிக்குறேன்.... முதல்ல சாப்டது ஸ்டார்ட்டர்ஸ் தான், மெயின் மெனுவே இனிதான்டா செல்லம்...“ என்று கூறியவாறே சாந்தனின் ஆடைகளை களைந்து அடுத்த ஆட்டத்தையும் அற்புதமாக ஆடினான் பிரபா..... ஒருவழியாக அன்று இரவு முழுக்க இரட்டை இலக்கம் முறைகள் இருவரும் உறவில் திளைத்தனர்.... இரவில் போட்ட ஆட்டத்தின் களைப்பால் இருவரும் வெகுநேரம் படுக்கையில் கிடந்தனர்....
படுக்கையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த ரத்த துளிகள் சாந்தன் கன்னித்தன்மை இழந்ததை சொல்லாமல் சொல்லியது.... தட்டுத்தடுமாறி சாந்தன் எழும்போது மணி ஒன்பது ஆகிவிட்டது.... மெல்ல எழுந்தவனை மேலும் நகர முடியாதவண்ணம் வலி தடுத்தது.... அப்படியும் மெல்ல எழுந்து குளியலறை நோக்கி நகர்ந்தான், நடந்தான் சென்று சொல்ல முடியாத அளவிற்கு நகர்ந்தான் என்றுதான் சொல்லவேண்டும்..... உடலால் சாந்தன் பலமானவன் என்றாலும், உடலுறவால் பிரபா பலமானவன்னு நிரூபித்துவிட்டான்..... முத்தத்தையே ரத்தம் இல்லாமல் முடிக்க தெரியாதவன், மொத்தத்தையும் யுத்தமில்லாமலா முடித்திருப்பான்?.... ஆனாலும் அந்த முதல் அனுபவம் சாந்தனுக்கு ஒருவித பேரின்பத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது..... வலி கூட சுகம்தான் என்பதை அன்று இரவு பிரபா தனக்கு உணர்த்தியதை எண்ணி சிரித்தான் சாந்தன்..... ஒருவாராக காலைக்கடன்களை முடித்துவிட்டு அறைக்கு வந்து பிரபாவை எழுப்பினான் சாந்தன்.... எழுப்ப முயன்றவனின் கைகளை பிடித்து இழுத்து, முத்தம் கொடுக்க முயன்றான் பிரபா....
“அட அழுக்குப்பய்யா.... போயி பிரஷ் பண்ணுடா.... “ என்று கையை தட்டிவிட்டான் சாந்தன்....
“அப்படின்னா, பிரஷ் பண்ணி முடிச்சுட்டு இதல்லாம் ஓகேவா?”
“ஓகேதான்.... பிரஸ் பண்ணி முடிச்சு, குளிச்சுட்டு, சாப்பிட போக ஓகேதான்.... மெட்ராஸ்’கு வந்து இந்த ரூமோட முடிச்சிடலாம்னு நெனச்சுட்டியா?.... வா வெளில போகணும்...” என்று கூறிவிட்டு துண்டை எடுத்துகொடுக்க நடந்த சாந்தனின் நடையை பார்த்த பிரபா, “ஏய் குட்டி, என்னடாச்சு ஒனக்கு?....” என்றான்....
“பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னாச்சுன்னு வேற கேக்குறியா?.... மொறட்டுப்பயலே” என்றான் சாந்தன்.....
அப்போதுதான் படுக்கையில் சிதறி கிடந்த ரத்தத்துளிகளை பார்த்தான் பிரபா.... பார்த்ததும் தலையில் கை வைத்த பிரபா, “ஐயோ சாரிடா.... வலிச்சிருந்தா சொல்லிருக்கலாம்ல, ரத்தம் வர்ற அளவுக்கு..... ச்ச.... நான் மனுஷனே இல்ல.... என் சுகத்தை மட்டுமே பெருசா நெனச்சுட்டேன்” என்று வருந்தினான்....
அது பொறுக்குமா சாந்தனுக்கு.... பிரபாவின் அருகில் அமர்ந்து “ச்சி லூசு.... அதல்லாம் விஷயமே இல்ல.... நான் கிண்டலுக்கு சொன்னேன்டா.... வலி இல்லாம கிடைக்கிறது இந்த உலகத்துல எதுவுமே இல்ல, உடல் உறவா இருந்தாலும் அது விதி விலக்கு இல்லடா” என்று பிரபாவின் உச்சியை முகர்ந்து கட்டிப்பிடித்தான் சாந்தன்.... அந்த கட்டிப்பிடிப்பில் மனம் அமைதியான பிரபா குளிக்க சென்றான்.... ஒருவழியாக குளித்து முடித்து சாப்பிட்ட இருவரும் எங்கு செல்லலாம் என்று தீவிரமாக யோசித்தனர்....
“சாந்து.... எங்க போகலாம்? சொல்லு...”
“நீதான் சொல்லனும்.... எனக்கு மெட்ராஸ் பத்தி அவ்ளவா தெரியாது”
“சரி.... ஸ்பென்சர், சிட்டி சென்டர் இங்கல்லாம் போகலாமா?”
“ஏன் எதுவும் வாங்கனுமா?”
“இல்லையே”
“அப்புறம் எதுக்கு அந்த கடைக்கல்லாம் போகணும்?”
“சரி... அப்போ மாயாஜால், ஐநாக்ஸ் இந்த மாதிரி எடத்துக்கு போகலாமா?”
“படம் பாக்குறதா இருந்தால் நம்ம தஞ்சாவூர்ல இல்லாத தியேட்டரா என்ன?... படம் பாக்கவா இவ்வளவு தூரம் வந்தோம்?”
கோபமான பிரபா, “பீச்சுக்கு போகலாமா?” என்றான்....
அதற்கு சாந்தன் பதில் சொல்ல வாய்எடுக்கும் முன்னர் பிரபாவே அதற்கு பதில் சொல்வதைப்போல, “பீச் தான் நம்ம ஊர்லயே இருக்கே... அப்டின்னு சொல்லுவ.... சரிதானே?” என்றான்....
சிரித்த சாந்தன், “எப்டிடா கரக்டா கண்டுபிடிச்ச?... நீ பெரிய ஜீனியஸ்தான்....” என்று கிண்டல் பார்வை பார்க்க, பிரபாவோ கோபத்தில் முகம் சிவந்தான்.....
“சரி வா ஊருக்கே போகலாம்” என்று பிரபா கோபமாக கூறவே, சிரித்த சாந்தன் பிரபாவின் கன்னத்தில் கில்லியவாறே , “கோபிச்சுக்காத செல்லம்..... சும்மா சொன்னேன்.... எங்க போகலாம்னு நெனக்கிறியோ அங்க போகலாம்.... எங்க போறோம்னு முக்கியம் இல்ல.... எங்க போனாலும் உன் கையை பிடிச்சுகிட்டு ஒரு காதலனா ஊர் சுத்த மெட்ராஸ்ல மட்டும்தானே முடியும்.... வா போகலாம்” என்று பிரபாவின் கையை பிடிக்க, நெகிழ்ந்த பிரபா சாந்தனின் கையேடு தன் இரண்டுகைகளையும் இணைத்து பெருமிதம் அடைந்தான்....
பின்னர் இருவரும் பல இடங்களுக்கும் சென்று ஒருவாராக மெரீனா கடற்கரையை அடைய ஐந்து மணி ஆனது....
ஆனாலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் அனலாக கொதித்தது கடற்கரை மணல்.... அப்போது சுற்றும் முற்றும் பார்த்த சாந்தன், “எப்டிடா இந்த வெயில்லையும் அங்கங்க சிலபேர் குடைக்கு அடியில லவ் பண்ண முடியுறது எப்படி?... லவ் பண்ண வேற இடமே கிடைக்கலையா இவங்களுக்கு” என்றான்....
சிரித்த பிரபா, “ஆமாமா.... நீ சொல்றது சரிதான்.... இவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்தான்.... ஆனால், அந்த பொண்ணோட லவ்வர் வேற, இந்த பையனோட லவ்வர் வேற.... அவங்கவங்க லவ்வருக்கு தெரியாம இப்டி என்ஜாய் பண்றதுக்கு இங்க வராங்க.... இந்த நேரத்துல நீ அவங்க அடியில நெருப்பை கொளுத்துனாகூட கண்டுக்க மாட்டாங்க..... எல்லாம் புனிதமான காதலாம்.... இதுல நம்ம லவ் பண்றதை மட்டும் குறை சொல்ல நீட்டி முழக்கி பேசுவாங்க....” என்று கூறும்போது சாந்தனும் சிரித்துவிட்டான்.... வெயில் தனியும்வரை அப்படியே உலாவிய இருவரும், வெயில் சற்று தணிந்த பின்னர் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்தனர்....
கடல் அலை இருவருக்கும் காதல் கீதம் இசைத்தது, கடல் காற்று அந்த மாலை வேலையை இன்னும் ரம்மியமாக்கியது, அந்தி சாயும் சூரியன் மெல்லிய வெளிச்சத்தை பகிர்ந்தது.... பல விஷங்களையும் பேசியபோது பிரபாவின் தோள்களில் சாந்தன் சாய்ந்துகொண்டான், சாந்தனின் இடுப்பை சுற்றி கையால் அணைத்தபடி இருந்தான் பிரபா.... அங்கு யாருடைய கண்களும் இவர்களை வித்தியாசமாக பார்க்கவில்லை.... தஞ்சாவூரை போல அந்த உறவை குறை சொல்ல கூட யாரும் அவர்களை வித்தியாசமாக பார்க்கவில்லை.... அப்படி அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட சென்னை வாசிகளுக்கு நேரமில்லை என்றுதான் சொல்லனும்.... வெகுநேரம் அப்படி தனிமையை ரசித்துக்கொண்டிருந்த இருவரும் மெய்மறந்து இருந்தனர்.... அப்போது பிரபாவை பின்னால் இருந்து ஒரு கை தொட்டது.... திடுக்கிட்டு திரும்பி பார்த்த பிரபா அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்....
காரணம், அங்கு நின்றது கவுதம்.... பள்ளி சீருடையில் இருந்த கவுதமை அடையாளம் காணவே பிரபாவுக்கு ஒருசில மணித்துளிகள் ஆனது... கவுதத்தை பார்த்த நொடியே இருவரும் எழுந்து நின்றனர்.... பிரபாவின் முகத்தில் தெரிந்த குழப்பத்திற்கு காரணம் தெரியாமல் குழம்பினான் சாந்தனும்.... ஒருவாராக அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கவுதமே தொடங்கினான், “என்னத்தான் என்னை அடையாளம் தெரியலையா?.... எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.... அதே கவுதம் தான்” என்றான்....
அதிர்ச்சியை மறைத்து போலியாக சிரித்த பிரபா, “ஏய் உன்ன மறக்க முடியுமா?.... வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?.... எப்போ சென்னை வந்த?... இங்கதான் படிக்கிறியா?” என்றான்....
“இல்ல அத்தான்.... மதுரைலதான் படிக்கிறேன்.... டூர் கூட்டிட்டு வந்தாங்க ஸ்கூல்லேந்து .... இன்னும் சின்ன பசங்க மாதிரி எங்கள மகாபல்லிபுரம், சாந்தோம், மெரீனான்னேடூர் கூட்டிட்டு போறாங்க..... நாங்க இருக்குற மெச்சூரிட்டிக்கு பப், டிஸ்கோத்தே’னு கூட்டிட்டு போகாம இப்டி போட்டு அளக்கழிக்கிறாங்க.... சரி பீச்ல சீன் பாக்கலாம்னு இங்க ஆசையா வந்தா, இங்க ஆச்சரியமா நீங்க இருக்கீங்க.... ஆமா, இது யாரு?... இந்த நேரத்துல நீங்க என்ன இங்க பண்றீங்க?” என்ற கவுதமின் வார்த்தைகளில் சிறு அளவுகூட பொய் இருப்பதாய் தெரியவில்லை பிரபாவுக்கு.... ஆனால், அத்தகைய ஒருவனிடம் எந்த பொய்யை சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் ஒருவழியாக என்ன சொல்லலாம் என்ற தீர்மானத்திற்கு வந்தவனாக, “இவன் சாந்தன்.... ஒரு ப்ராஜக்ட் விஷயமா வந்தேன்.... வந்த வேலை முடிஞ்சதால பீச்சுக்கு வந்தோம்” என்று ரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டான்....
“வேலை முடிஞ்சதால பீச்சுக்கு வந்த மாதிரி தெரியல, ஏதோ வேலைக்காகவே பீச்சுக்கு வந்த மாதிரி இருக்கே.... நீங்க ரெண்டு பேரும் உக்காந்திருந்த பொசிஷன பார்த்தா அப்டிதான் தெரிஞ்சுது...” என்று சிரிக்க பிரபா அசடு வழிய சாந்தனோ சிரித்துவிட்டான்.....
சாந்தன் சிரித்ததை பார்த்த கவுதம், “நா இதுவரைக்கும் டவுட்லதான் சொன்னேன், இவர் சிரிக்கிறத பார்த்து முடிவே பண்ணிட்டேன் அத்தான்....” என்று கூற பிரபா இன்னும் அசடு வழிந்து வேறு பேச்சுகளை மாற்றினான்....
ஆனாலும் கவுதாமோ சுற்றி சுற்றி அந்த விஷ்யத்துக்கே வந்தான், “அத்தான்.... பயப்படாதிங்க, நான் யார்கிட்டயும் இத சொல்ல மாட்டேன்.... இதல்லாம் தப்பில்ல.... நிச்சயம் இதை ஜாலிக்காக செய்யலன்னு உங்க ரெண்டு பேரையும் பார்த்தாவே தெரியுது.... அதனால எதுக்கும் கவலைப்படாதிங்க” என்று ஏகத்துக்கும் அட்வைஸ் பண்ணிய கவுதமை வித்தியாசமாக பார்த்தான் சாந்தன்.... ஒருவழியாக கவுதமின் நண்பர்கள் அவனை அழைத்ததும் விடைபெறும் விதமாக, “நான் ஓவரா பேசுறேன்னு நெனக்காதிங்க.... உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் அத்தான்.... ஒரே ஒரு கேள்வி கடைசியா.... தப்பா நெனச்சுக்க மாட்டிங்கள்ல?” என்றான் கவுதம்....
“இதுக்கு மேல தப்பா நெனக்க என்னப்பா இருக்கு..... அதையும் கேளு...” என்று சிரித்தான் பிரபா....
“நீங்க கே லவ்வர்ஸ்’னு தெரியுது.... இதுல யார் டாப்? யார் பாட்டம்?” என்றதும் கவுதமை பொய்யாக அடிக்க முயல விலகி ஓடினான் கவுதம்.... கவுதம் சென்ற திசையை வெறித்து பார்த்து சிரித்த சாந்தனை பார்த்த பிரபா, “என்னடா பாக்குற?.... அவன் வித்தியாசமான ஆளு.... மனசுல எதையும் வச்சுக்காம பேசிடுவான்.... நல்ல பைய்யன்” என்றான்...
நீண்ட இடைவேளைக்கு பிறகு மவுனம் களைந்த சாந்தன், “நிஜமாவே நல்லவன்....ஆமா, அவன் சொன்னப்போ ஏன் நீ எதையும் மறுத்து பேசல.... எதாவது சொல்லி சமாளிச்சுருக்கலாம்ல?” என்றான் ....
“அவன் பேசுன பேச்சுக்கு நான்தானே சமாளிச்சேன்.... நீ பாட்டுக்கு சிறுச்சுகிட்டே இருந்திட்ட... என்னமோ தெரியல, அவன்கிட்ட பேசுறப்போ எதையும் மறைக்க மனசே வரலடா ..... சரி விடு.... லேட் ஆச்சு, வா போகலாம்” என்று கூறிய பிரபாவை இடை நிறுத்திய சாந்தன், “இரு இரு... ஆமா... என்னைய தவிர எல்லார்கிட்டயும் எதையும் மறைக்காம சொல்லிடுற போல.... சரி, அவன் டாப், பாட்டம்னு என்னமோ சொன்னானே, அப்டினா என்ன?” என்றான்....
சிரித்த பிரபா, “இதுக்கு நீ விளக்கம் கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா?” என்றான்...
“ஆமா....; சொல்லுடா” என்றான் சாந்தன்....
“இதுக்கு நான் பதில் சொல்லி உனக்கு புரியவைக்குறது கஷ்டம், அதுக்குன்னு ஒரு ஆள் இருக்காரு.... இரு, அவருக்கு நான் கால் பண்றேன்” என்ற பிரபா மாணிக்கத்தின் அலைபேசிக்கு அழைத்தான்....
எடுத்த மாணிக்கம், “என்னடா மாப்ள?.... ப்ராஜக்ட் வேலயல்லாம் எப்டி போகுது?” என்றான்....
“அதல்லாம் நல்லா போகுது மாமா.... அம்மா எப்டி இருக்காங்க?”
“அக்கா நல்லா இருக்கு.... நீ பீச்சுல என்ன பண்ற?” என்று மாணிக்கம் கேட்டதும் பிரபா திகைத்தான்.... சுற்றும் முற்றும் பார்த்த பிரபா, மாணிக்கம் சுற்றியும் இல்லையென முடிவு செய்த பிறகு, “எப்டி மாமா நான் பீச்சுலதான் இருக்கேன்னு கண்டுபிடிச்ச?” என்றான்...
“இத கூட கண்டுபிடிக்கலைனா இந்த மாணிக்கத்துக்கு என்ன மரியாதை.... பீச்சு காத்து செல்போன்ல கேக்குது மாப்ள.... அதான் சொன்னேன்.... ப்ராஜக்டுன்னு போயி ஊர் சுத்துறியா?... சரி, என்ன விஷயமா போன் பண்ணின?” என்றான் மாணிக்கம்...
சிரித்த பிரபா, அலைபேசியை லவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, “மாமா.... கே விஷயத்துல டாப், பாட்டம்னா என்ன?” என்றான்....
“சம்திங் தப்பா தெரியுதே.... பீச்ல இருக்குற, இந்த மாதிரி கேள்வி கேக்குற.... எங்கயோ இடிக்குதே?” என்றான் மாணிக்கம் சந்தேக தோரணையுடன்....
“இல்ல மாமா.... அது... அது என் ப்ரெண்ட் ஒருத்தன் கேட்டான்.;.. ஏதோ புக்ல படிச்சானாம்.... அதான் கேட்குறேன்....” வழக்கம்போல தடுமாறி சமாளித்தான் பிரபா...
“சரி உன்னைய நம்பித்தான் ஆகனும்.... அதாவது டாப்’னா மண்ணு மாதிரி படுத்திருப்பான், அவனுக்கு மாஞ்சு மாஞ்சு சுகத்தை கொடுக்குறவன் பாட்டம்... நம்ம ஊர்ல சாதி பாகுபாடு பாப்பானுகள்ல, அந்த மாதிரி.... அலட்டிக்காம சுகத்தை அனுபவிக்கிரவன் டாப், அதுக்காக பல வித்தைகளை தெரிஞ்சு வச்சுகிட்டு பாடுபடுறவன் பாட்டம்.... எல்லாம் அறியாமையால நடக்குற விஷயங்கள்.... வேற எதாவது கேள்விகள் உண்டா மன்னா?” என்றான் மாணிக்கம்....
கொஞ்சம் மனம் தெளிந்தவனாக பிரபா, “இல்லை மங்குனி அமைச்சரே..... நான் அப்புறம் பேசுறேன்...” என்று அழைப்பை துண்டித்தான் .....
எல்லாவற்றையும் கேட்ட சாந்தன், “இதுல இவ்ளோ இருக்காடா.... ஆமா, இதுல நம்ம விஷயத்துல யார் டாப்? யார் பாட்டம்?” என்றான் அப்பாவியாக.....
“டாப் பாட்டம்லாம் வெறும் செக்ஸ் மட்டும் வச்சிருக்கவங்களுக்கு மட்டும்தான்.... நம்ம லவ்வர்ஸ்டா.... உனக்கு மூட் வர்றப்போ நான் டாப், எனக்கு மூட் வர்றப்போ நீ டாப்.... நம்ம ரெண்டு பேர்லையும் பாட்டம் இல்ல....” என்று சிரித்த பிரபாவின் கைகளை எடுத்து கன்னத்தில் ஒற்றிக்கொண்டான் சாந்தன்.... ஒருவாராக சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர் இருவரும்.....
அந்த இரவும் இன்பத்தில் திளைத்த இரவாகவே இருந்தது.... மறுநாள் விடிந்ததும் அதிகாலையிலேயே எழுந்த சாந்தன், தனக்கு காபி போட்டுக்கொண்டு பால்கனியில் நின்று சென்னை நகரை ரசித்துக்கொண்டிருந்தான்.... அப்போது பின்னால் வந்து சாந்தனை கட்டிப்பிடித்த பிரபா, “என்ன இன்னக்கி சீக்கிரமாவே எந்திருச்சுட்ட?.... எனக்கும் காபி தாடா” என்றான்....
“இரு, போய் போட்டு எடுத்துட்டு வரேன்”
“போடவல்லாம் வேண்டாம், இதுவே போதும்” என்று சாந்தன் கையில் இருந்த குவளையில் இருந்த காபியை வாங்கி அருந்தினான் பிரபா......
“சார் இன்னக்கி ரொம்ப ரொமான்ஸ் மூட்ல இருக்க மாதிரி தெரியுது?” என்று கொஞ்சம் விலகி நின்றான் சாந்தன்....
“இருக்காதா பின்ன.... இன்னைக்கு நைட் ஊருக்கு போனதுக்கப்புறம் இப்டியல்லாம் பண்ண முடியாதே?” என்று கொஞ்சினான் பிரபா....
அப்போது சிரித்துக்கொண்டிருந்த சாந்தன், மேலே பறந்து சென்ற விமானத்தை கண்டதும் முகம் மாறியதை கண்டான் பிரபா.... மகிழ்ச்சி மறைந்து, பயம் தெரிந்தது சாந்தனின் முகத்தில்....
“ஏய்... சாந்தா.... என்னாச்சு திடீர்னு?.... ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று பதறினான் பிரபா....
“ஒன்னுமில்லடா.... அது... அது இந்த விமானங்களை பார்க்குறப்போ என்னை அறியாமல் ஒரு பயம் வருது.... ஆறு வயசுவரை விமானம் சத்தம் கேட்டாலே, பதுங்குகுழிக்குள் ஒளிஞ்சே பழக்கப்பட்டுட்டோம், இப்பவும் என் மனசு இந்த சத்தத்தை கேட்டா பதற்றமா இருக்கு.... சாரிடா” என்று சாந்தன் சொல்லி முடிக்கையில் பிரபா கவலையில் ஆழ்ந்தான்....
சாந்தனின் கைகளை பிடித்த பிரபா, “இங்க பாரு.... இங்க ஆமிக்காரன் யாரையும் சுடமாட்டான் , விமானம் எதுவும் குண்டு போடாது, போர் என்பதே இங்க இருக்காது.... நீ தேவை இல்லாம இத நெனச்சு பயப்படாத.... எல்லாம் சரி ஆகிடும்” என்று சமாதானம் சொன்னான்...
பல நிமிட ஆருதல்களுக்கு பின்னர் கொஞ்சம் தெளிவானான் சாந்தன்...
“சரி... பயம் வந்தா என்னைய கட்டிப்பிடுச்சுக்கோ.... நான் தப்பா நெனக்க மாட்டேன்” என்று சிரித்தான் பிரபா....
“நீ எதுக்கோ அடி போடுற மாதிரி தெரியுது.... முதல்ல போயி குளிச்சுட்டு வா” என்று குளியலறை நோக்கி பிரபாவை தள்ளினான் சாந்தன்....
சினுங்கியவாறே குளிக்க சென்றான் பிரபா..... ஆனாலும் சாந்தனுக்குள் இன்றோடு இந்த பாச பரிமாற்றங்கள் எல்லாம் முடிந்துவிடுமோ என்கிற அச்சம் இருந்தது.... அதைகாட்டிக்கொள்ளாமல் அன்று முழுவதும் கையேடு கை கோர்த்து, இடை பிடித்து நடை நடந்து இருவரும் சென்னை மாநகரில் காதல் புறாக்களாக வளம் வந்தனர்..... ஒருவாராக அன்று இரவு பேருந்து ஏறி மறுநாள் காலை தஞ்சாவூர் வந்தடைந்தனர்.... சென்னையில் இருக்கும்போது அகிலன் பிரபாவின் அலைபேசிக்கு தொடர்புகொள்ளும்போதல்லாம் எதையும் கூறாமல், தான் நேரில் எல்லாவற்றையும் சொல்வதாக கூறியதால் அகிலன் “என்ன நடந்திருக்கும்?” என்ற ஆர்வத்தில் அந்த அதிகாலையில் இருவருக்காகவும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான்..... அகிலனை பார்த்த பிரபா, ஓடி சென்று அவனை கட்டிப்பிடித்தான்.... அதற்கு அர்த்தம் புரியாமல் குழம்பி நின்றான் அகிலன்.... கோபத்தில் முகம் சிவக்க பிரபா வருவான் என்று காத்திருந்த அகிலன், பிரபாவின் வெட்கத்தில் முகம் சிவந்ததை கண்டபோது எரிச்ச்சலானது.... இருந்தாலும் பிரபா எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்வரை அமைதியாக கேட்டான் அகிலன்.... இந்த விஷயங்களை கொஞ்சம் தொலைவில் நின்று கவனித்துக்கொண்டிருந்த சாந்தன், அகிலனை பார்த்து ஒரு ஏளன புன்னகை உதிர்த்தான்.... அகிலனின் அத்தனை தில்லுமுல்லுகளுக்கும் மொத்தமாக கல்லறை கட்டியதைப்போல இருந்தது அந்த சிரிப்பு.... இதனால் அகிலன் இன்னும் கோபமானான்.... அதை காட்டிக்கொள்ளாதவனைப்போல சிறிது நேரத்தில் பிரபாவிடமிருந்து விடைபெற்றான் அகிலன்.... ஒரு வகையில் அகிலனை இந்த முறையும் தோற்கடித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறு புறமோ அடுத்து என்ன செய்வானோ? என்கிற அச்ச உணர்வு மேலோங்கி இருந்தது..... எப்படியும் எதையும் சமாளிக்கும் பக்குவத்தை சாந்தன் இப்போது பெற்றுவிட்டான்.... ஆனால், இப்படி ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டே இருக்க இது என்ன யுத்த களமா? என்று கொஞ்சம் எரிச்சலும் அடைந்தான்... மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க தருணம் கிடைக்குமா? என்று ஏங்கினான்....
சென்னை திட்டம் தோல்வி அடைந்ததால் இன்னும் கோபமான அகிலன், இனி நேரடியாக சாந்தனை கோபப்படுத்தும் முடிவிற்கு வந்தான்....
பிரபாவுடன் நிற்கையில் அவனை தொட்டு பேசுவது, சாந்தன் பார்க்கும்போது பிரபாவை கட்டிப்ப்டிப்பது போன்ற பல வேலைகளையும் செய்தான் அகிலன்.... ஆரம்பத்தில் இதை கண்டும் காணாமல் விட்ட சாந்தன், இடையில் அகிலனின் எல்லை மீறல்களை கண்டு மனம் வெதும்பினான்.... இதைப்பற்றி பிரபாவிடம் கேட்டு இருவருக்குள்ளும் சண்டை மூட்டுவதுதான் அகிலனின் எண்ணம் என்பதால் இதை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் தவித்தான் சாந்தன்.... சாந்தன் மனம் வருந்துவதை உணர்ந்த அகிலன், இதை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள தருணம் பார்த்துக்கொண்டிருந்தான்....
அன்றொருநாள் பிரபா, சாந்தன் உட்பட அவன் நண்பர்கள் பலரும் திரையரங்கம் செல்ல முடிவெடுத்தனர்.... எல்லாரும் தயாராகி கேண்டீனில் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக அகிலனின் அலைபேசியை பார்த்தபோது அதில் சாந்தன் தொடர்பு தொடர்புகொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தான்.... இதைப்பற்றி அகிலனோ, சாந்தனோ எதுவும் சொல்லாததால் இன்னும் குழப்பமானான் பிரபா.... எல்லோரும் திரையரங்கம் கிளம்பியபோது, கடைசி நிமிடத்தில் அகிலன் தனக்கு தலை வலிப்பதாக கூறி , வரவில்லை என்று கூறிவிட்டான்.... பிரபாவிற்கு ஏதோ தவறாக நடப்பதாக புலப்பட்டது.... ஆனாலும், அதை காட்டிக்கொள்ளாமல் அகிலன் விடுதிக்கு சென்றதும் தன் நண்பர்களிடத்தில் தானும் படம் பார்க்க வரவில்லை என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு சாந்தன் அறைக்கு எதிரில் இருந்த ஒரு மறைவான இடத்தில் நின்று “ஏதோ ஒன்று நடக்கப்போகிறது” என்று பார்த்துக்கொண்டிருந்தான்.... கேண்டீன் வேலைகள் முடிந்து சாந்தன் அறைக்கு வந்தான்.... பிரபாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.... என்ன எதிர்பார்த்து அங்கு நின்றான் என்று அவனுக்கு புரியவில்லை , ஆனாலும் சாந்தன் தனியாக செல்வதை பார்த்து கொஞ்சம் நிம்மதியானான்.... ஆனால், அந்த நிம்மதி வெகுநேரம் நீடிக்கவில்லை.... அடுத்த பத்து நிமிடங்களில் சாந்தன் அறையை நோக்கி வந்தான் அகிலன்.... பிரபா மேலும் அதிர்ச்சியானான்.... தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.... தான் பெரிதும் நம்பிய இருவரும் தனக்கு தெரியாமல் இப்படி தனிமையில் சந்திக்க காரணம் என்ன? என்றும் அவனுக்கு புரியவில்லை.... இருந்தாலும் அகிலன் அறியாதவாறே, அவன் பின்னால் சென்றான்.... சாந்தன் அறைக்குள் சென்ற அகிலன், கதவை சாத்தினான்...
பிரபாவுக்கு சாந்தன் அறை பற்றி முழுதும் தெரியும் என்பதால், அங்கிருந்த ஒரு சிறிய துவாரம் வழியாக நடப்பதை கவனித்தான் பிரபா....
உள்ளே சென்ற அகிலன், “என்ன சாந்தன் சார்.... கலியுகத்து ராமரே.... எதுக்கு என்னைய பாக்கனும்னு வர சொன்னிங்க” என்றான்....
பிரபா அதிர்ச்சியானான்..... இருந்தாலும் என்ன நடக்கிறது என்று முழுமையாக தெரியாதவரை எதையும் அவசரப்பட்டு செய்திட வேண்டாம் என்று தீர்மானமாக இருந்தான் பிரபா....
“என்னதான் வேணும் அகிலன் ஒனக்கு?.... உன்ன நான் அடிச்சது தப்புதான்... வேணும்னா என்னைய பதிலுக்கு அடிச்சுக்கோ.... அதுக்காக தினமும் ஏன் என்ன கஷ்டப்படுத்துற?” என்றான் சாந்தன்...
சிரித்த அகிலன், “நான் என்ன சார் கஷ்டப்படுத்துறேன் உங்கள?.... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது” என்றான்...
“எல்லாம் தெரியும் அகிலா.... அமுதா விஷயத்துல முதல்ல என்னைய குழப்பின, அப்புறம் மெட்ராஸ் போறப்போ பிரபாவை குழப்பின.... இதல்லாம் ஒன்னும் ஆகலைன்னதும் இப்போ மறுபடியும் சண்டை மூட்ட பிரபாவோட நெருக்கமா பழகுற.... என்னால இதுக்கு மேலையும் சமாளிக்க முடியல அகிலா.... என்ன வேணும் உனக்கு.... சொல்லு” என்று சொல்லும்போது சாந்தனின் கண்களில் நீர் அரும்பியது....
“அதான் எல்லாம் ஒனக்கு தெரியுதுல்ல.... பிரபாவை விட்டு பிரிஞ்சிடு.... என் பிரபாவை எனக்கு கொடுத்திடு” என்ற அகிலனின் வார்த்தைகள் சாந்தனை எரிச்ச்சலாக்கியது.....
இதை கேட்ட பிரபா அதிர்ச்சியானான்.... என்ன நடக்கிறது? என்று ஒரு கனம் திகைத்து போய்விட்டான்....
“அது முடியாது.... பிரபாவை தவிர என்ன வேணாலும் கேளு... வேணும்னா என்னைய அடி, மிதி.... உன் கால்ல வேணும்னா விழறேன்.... எல்லார் முன்னாடியும் சாரி கேக்குறேன்... சொல்லு என்ன பண்ணனும்?” என்று விரக்தியில் வார்த்தைகளை கொட்டினான் சாந்தன்....
“சரி... இவ்வளவு கேக்குரதால சொல்றேன்.... உன்னால பிரபா கிட்டேந்து எனக்கு கிடைக்காம போன விஷயத்தை, நீ ஒருநாள் மட்டும் எனக்கு தா.... அது போதும்.... புரியலையா?... ஒருநாள் என்கூட செக்ஸ் வச்சுக்கோ.... அவ்வளவுதான்.... அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேருக்கு இடையிலையும் நான் எப்பவும் வர மாட்டேன்” என்று அகிலன் சொல்லி முடித்ததும் சாந்தன் அடக்க மாட்டாமல் அழத்தொடங்கினான்....
“என்ன சொல்ற சாந்தன்?.... இந்த மவுனத்தை சம்மதம்னு நான் எடுத்துக்கலாமா?.... கண்டிப்பா இதைப்பத்தி நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்.... நமக்குள்ள நடக்கப்போற இந்த விஷயம் இந்த ரூமை விட்டு வெளியே போகாது....” என்று கூறியவாறே சாந்தனின் தோள்களை வருடினான்.... இன்னும் அழுகையை நிறுத்தாத சாந்தன், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனான்.... சிரித்த அகிலன், “இரு... நான் போய் கதவை தாப்பா போட்டு வரேன்” என்றவாறு கதவை நோக்கி சென்றான் அகிலன்.... இதற்கு மேலும் பொறுத்தால், விஷயம் விபரீதமாகிவிடும் என்று உணர்ந்த பிரபா, கதவருகே அகிலன் வரும்போது காலால் எட்டி உதைத்தான்... கதவில் பட்டு அகிலன் தடுமாறி கீழே விழுந்ததில் முகமெல்லாம் காயமாகிவிட்டது.... உள்ளே வந்ததும் வராததுமாக எதுவும் கேட்காமல் அகிலனை போட்டு அடிக்க தொடங்கினான்... பிரபாவை அங்கு சற்றும் எதிர்பாராத அகிலன் அதிர்ச்சியில் உறைந்தான், அதோடு பிரபாவின் அடியால் நிலை குழைந்து எதுவும் பேசவும் முடியவில்லை.... தொடர்ந்து அடித்ததில் அகிலனின் முகமெல்லாம் ரத்தம் சொட்ட பதறிய சாந்தன், பிரபாவை சமாளித்து கட்டிலில் அமரவைத்தான்.....
“பிரபா.... சாரிடா..... சும்மா.... “ என்று எதையோ சொல்ல வாயெடுக்க, இடைமறித்த பிரபா, “வாயை மூடுடா நாயே... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் நீ உயிரோட இருக்க மாட்ட.... நம்ப வச்சு கழுத்தறுத்துட்டல்ல, இதுக்கு மேல உன்கூட நான் பழகுனா நான் மனுஷனே இல்ல.... ஓடிடு... இதுக்கு மேல என் மூஞ்சியில முழிக்காத” என்று கோபக்கனல் வார்த்தைகளை கொட்டி தீர்த்தான் பிரபா.... அதற்கு மேல் எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து தட்டுத்தடுமாறி கிளம்பி சென்றுவிட்டான்....
அகிலன் அங்கிருந்து சென்றபிறகு சாந்தனும், பிரபாவும் சில நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... இன்னும் சாந்தன் அழுகையிலிருந்து மீளவில்லை... பிரபாவோ, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்பதோடு ஒரு வித குற்ற உணர்வாலும் அமைதியாக இருந்தான்.... சிறிது நேரம் கழித்து, நிதானம் வந்த சாந்தன் எழுந்து சென்று ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து பிரபாவிடம் நீட்டினான்... அந்த தண்ணீரை வாங்கி மடமடவென குடித்த பிரபா, தனக்கு தாகம் இருப்பதை கூட மனத்தால் அறிந்து எடுத்துகொடுக்கும் சாந்தனையா இவ்வளவு நாள் புரிந்துகொள்ளாமல் விட்டோம் என்று மனம் நொந்தவனாக அழத்தொடங்கினான் .... இதை பார்த்த சாந்தனுக்கும் ஒன்றும் புரியாமல் பிரபாவை கட்டிப்பிடித்து, “ஏன்டா அழற?.... எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடுச்சு.... இனி நமக்கு நல்ல காலம்தான்” என்று ஆறுதல் கூறினான்.... ஆனாலும் மனம் ஆறாத பிரபா, “சாரிடா..... சாரி.... இவ்வளவு நாளும் என்னைய எதையும் மறைக்க கூடாதுன்னு சொல்லிட்டு, இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு நாளா உனக்குள்ளே புதைச்சு வச்சுகிட்டு கஷ்டப்பட்டிருக்கியே.... இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட நானும் காரணம் ஆகிட்டேன்ல.... அந்த நாயை பத்தி நீ எவ்வளவோ சொல்லியும் நான்தான் புரிஞ்சுக்கல.... என்ன மன்னிச்சிருடா.... “ என்று கதறி அழுதான்....
“ச்சி... இதுக்கல்லாம் சின்ன புள்ள மாதிரி அழுவியா?.... அதான் சரி ஆகிடுச்சுல்ல, இனிமே அதப்பத்தி பேசவேணாம்டா... எதாவது வாங்கிட்டு வரேன், சாப்பிடுடா” என்று வெளியே கிளம்ப சென்றவனை இழுத்த பிரபா, “ஒரு நிமிஷம்டா.... ஒருவேளை நான் இப்போ வந்திருக்கலைனா அவன் சொன்னதுக்கு ஒத்திருப்பியா?” என்றான் அப்பாவியாக....
சிரித்த சாந்தன், “என்னை நீ அவ்வளவு கேவலமா நெனச்சிட்டியா?” என்று கூறிவிட்டு படுக்கைக்கு கீழே இருந்து ஒரு கத்தியை எடுத்து காட்டி, “நீ வர அஞ்சு நிமிஷம் லேட் ஆகியிருந்தா கூட, இந்நேரம் அவன் இந்த உலகத்துலேயே இருந்திருக்க மாட்டான்.... கடைசியா கெஞ்சிருப்பேன், மிரட்டியிருப்பேன், எதுக்கும் ஒத்துவரலைனா வேற வழி இல்லாம இதத்தான் செஞ்சிருப்பேன்” என்று கூறிய சாந்தனின் கண்களை பார்த்தான் பிரபா, அதில் ஒருவித கோபக்கனல் கொந்தளித்தது.... சாந்தனை கட்டி அனைத்து “சாரிடா.... நல்லவேளையா இந்த நேரத்துல நான் வந்தேன்..... இனிமேல் உன்னை எதுக்காகவும் நான் பிரிய மாட்டேண்டா.... நீதான் இந்த உலகத்துலேயே எனக்கு முக்கியம்.... நமக்குள்ள இனி எதுக்காகவும் சண்டை வராதுடா” என்று பெருமிதம் கலந்து நெகிழ்ந்த பிரபாவை ஒருவழியாக சமாதானப்படுத்தி அமரவைத்தான் சாந்தன்.... அன்றைய பொழுது இருவருக்குள்ளும் அவ்வளவு உருக்கமாகவும் நெகிழ்வாகவும் கடந்தது.... மறுநாள் இன்னும் மனநிறைவான காதலர்களாய் மாறிவிட்டனர்.... அன்றிலிருந்து இருவரும் இன்னும் இணக்கமாக ஆகிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.... அந்த நிகழ்வுக்கு பிறகு அகிலன் எவ்வளவோ முறை பிரபாவிடம் மன்னிப்பு கேட்டும், பிரபா அவனை ஏற்பதாக இல்லை.... ஒரு கட்டத்தில் இதைப்பற்றி சாந்தன் பிரபாவிடம் கேட்டான், “பிரபா, அகிலன் செஞ்சது தப்புதான்... அனால் இப்போ அதை உணர்ந்துட்டான்.... உம்மேல இருந்த அதீத பாசத்தால அவன் செஞ்ச தப்புக்கு அவன் தினமும் மன்னிப்பு கேட்டும் நீ மனம் இறங்கலைனா அது தப்புடா.... மன்னிக்கவே முடியாத குற்றம்னு இந்த உலகத்துல எதுவும் இல்ல..... ஆனால், அந்த மன்னிப்புக்கு கொடுக்க வேண்டிய விலைதான் மாறும்.... அந்த விஷயத்துல அகிலன், தான் செஞ்ச தப்புக்கு அதிகமாவே தண்டனை அனுபவிச்சுட்டான்..... இனி நிச்சயம் அந்த மாதிரி தப்பு பண்ண மாட்டான்... மன்னிச்சு அவனை ஏத்துக்கடா...” என்று சொல்லி முடித்ததும், இடைவெளி விடாமல் தொடங்கினான் பிரபா, “சாந்தா.... நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்ற நிலைமையே வரக்கூடாதுன்னு நெனச்சேன்.... ஆனால், இந்த விஷயத்துல நான் அதை மறுத்துத்தான் ஆகனும்..... அவன் செஞ்சது தப்பா இருந்தா மன்னிக்கலாம், ஆனால் அவன் செஞ்சது நம்பிக்கை துரோகம்..... எதிரிகளை மன்னிக்கலாம், துரோகிகளை மன்னிக்கவே கூடாது.... இதை நான் சொன்னால, உங்க தலைவர் சொன்னது.... அதனால எந்த காலத்துலயும் நான் அகிலனோட நட்பா மாறுறது நடக்காத ஒன்னு.... அதைப்பத்தி இனிமே பேசாத” என்று கூறிவிட்டான்.... பிரபா இவ்வளவு தெளிவாகவும், தீர்மானமாகவும் ஒரு முடிவு எடுத்த பிறகு அதைப்பற்றி மேற்கொண்டு பேசிட சாந்தனுக்கு மனமில்லை.... ஒருவழியாக பிரபாவுக்கு செமஸ்டர் முடிந்து, விடுமுறையும் ஆரம்பமானது.....
இந்த விடுமுறைக்கு எங்கு செல்லலாம் என்று இருவரும் பேசத்தொடங்கினார்....
“மதுரை போகலாமா?..... அங்க ஜனனி அத்தை வீடு இருக்கு... அப்படியே கொடைக்கானல் போகலாம்... நல்ல க்ளைமேட் வேற.... ஜாலியா இருக்கும்” என்று பிரபா கேட்டான்...
கொஞ்சம் தயங்கியபடி பேசத்தொடங்கினான் சாந்தன், “இதுவரைக்கும் எல்லா லீவுக்கும் நீ சொல்ற இடத்துக்கு போயிருக்கோம்.... இந்த தடவை மட்டும் நான் உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகனும்டா” என்றான்....
பிரபா ஆச்ச்சரியமானான்.... “எங்கடா?.... தாராளமா போகலாம்.... “ என்று ஆர்வத்தோடு கேட்டான் பிரபா...
“ஆனால், நான் கூட்டிட்டு போற இடம் சுத்திப்பார்க்க ஒன்னும் பெருசா இருக்காது, விடுமுறையை கழிக்க ஜாலியா எதுவும் இருக்காது..... அதான்....” என்று இழுத்தான் சாந்தன்....
“நீ சொல்ற இடம் உனக்கு பிடிச்சதாலதானே என்னை கூப்பிடுற, அப்படி இருக்கையில உனக்கு பிடிச்சது கண்டிப்பா எனக்கும் பிடிக்கும்.... நீ எங்க போறன்னு கூட சொல்ல வேணாம், எப்போ போகலாம்னு சொன்னா போதும், சந்தோஷமா நானும் வரேன்” என்ற பிரபாவின் வார்த்தைகள் சாந்தனை மகிழ செய்தது....
“வேற எங்கயும் இல்ல.... ராமேஸ்வரம்தான்..... இனி உயிர் பிழைப்போமா?, அடுத்து எங்க கதி என்ன? னு பல கேள்விகளோட நாங்க இருந்தப்போ எங்களை தாங்கி அனைத்த அந்த மண்.... ரொம்ப நாளா உன்னை அங்க கூட்டிட்டு போயி என் நண்பர்கள்கிட்ட காட்டணும்னு ரொம்ப ஆசைடா.... “ என்ற சாந்தனின் கண்களில் உற்சாகம் மிளிர்ந்தது....
ஆர்வமான பிரபா, “இதை நானே உன்கிட்ட கேக்கனும்னு நெனச்சேன்.... ஆனால், நீ சங்கடப்படுவியோன்னு தயங்கித்தான் கேக்காம இருந்தேன்.... எப்போவாவது உன் ப்ரெண்ட்ஸ் உனக்கு போன் பண்ணி பேசுறப்போ நீ ரொம்ப சந்தோஷமாவ, அதை பாக்குறப்போ அந்த நண்பர்களையும் நான் பாக்கனும்னு பல நாள் நெனச்சிருக்கேன்.... நாளைக்கு அதிகாலைல போகலாமாடா?” என்றான்....
சாந்தனுக்கு பெரு மகிழ்ச்சியானது.... உற்சாகத்துடன் தன் நண்பன் ஒருவனுக்கு தகவல் சொல்லி தன் வரவைப்பற்றி கூறினான்....
அதிகாலை ராமேஸ்வரம் புறப்பட பிரபாவும் மற்ற வேலைகளை கவனித்தான்.... பிரபா நண்பன் ஒருவனின் மகிழுந்தை இரவலாக பெற்று அன்று மாலையே ராமேஸ்வரம் கிளம்பினர்.... புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் வழியெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது பிரபாவுக்கு.... பசுமை சூழும் தஞ்சையிலிருந்து எவர் பார்த்தாலும் அனல் காற்று வீசும் ராமநாதபுரம் அந்த அதிர்ச்சியையே பரிசாக தரும்.... இந்தியா முழுவதிலுமிருந்து தங்கள் பாவங்களை போக்க ராமேஸ்வரம் நோக்கி வருவார்கள் மக்கள், ஆனால் அந்த ராமநாதபுர மக்கள் இத்தகைய பாவப்பட்ட சூழலில் வாழ்வது பிரபாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.... கருவேல மரங்களும், காய்ந்துபோன நிலங்களும், வற்றிய நீராதாரங்களும்தான் இந்த அதிர்ச்சிகளுக்கு காரணம்..... ஒரு குட்டி பாலைவனம் போல இருந்தது ராமநாதபுரம்..... சாந்தன் ஏற்கனவே பழக்கப்பட்ட விஷயம் என்பதால் அவனுக்கு இது பெரிய வித்தியாசமாக தெரியவில்லை.... இருவரும் ராமேஸ்வரம் அடைந்து, மண்டபம் அகதிகள் முகாம் அருகில் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தபோது ஏற்கனவே சாந்தனை பார்க்க ஆர்வ மிகுதியில் அவன் நண்பர்கள் நான்கைந்து பேர் அங்கு நின்றனர்.... சாந்தனை பார்த்ததும் தங்களை மறந்தவர்களாக அவனை கட்டி அனைத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர்.... சில நிமிடங்கள் அங்கு பிரபா நிற்பதையே மறக்கும் அளவிற்கு அன்பை பொழிந்தனர் அவன் நண்பர்கள்... பின்னர் அவன் நண்பன் ஒருவன், “இது ஆரடா?... புதுசா இருக்குறாங்கள்?” என்று கேட்ட பிறகுதான் தன்னிலை உணர்ந்தவனாக “இது என்ட சிநேகிதர்... தஞ்சாவூரிலை உங்கள மாட்டியே எனக்கு கெடச்ச ஒரு சிநேகிதன்” என்றான் சாந்தன்....
பிரபாவை பார்த்த சாந்தன், மற்றவர்களை அறிமுகப்படுத்தும்விதமாக, “இவன் கட்டையன், இவன் தமிழ் செல்வன், இவன் விக்டர், இவன் பொடியன்.... இவங்க எல்லாரும் என்ட நண்பர்கள்.... மட்டக்களப்பில ஒன்டாவே படிச்சம், அகதிகளாவும் இங்க ஒன்டாவே வந்தம்.... “ என்றபோது சாந்தன் முகத்தில் இதுவரை காணாத ஒரு பூரிப்பு தெரிந்தது....
கொஞ்சம் தயங்கிய பிரபா, “இவங்க எல்லாருக்கும் அடிபட்ருக்கே... இவருக்கு கால் இல்லை, இவருக்கு முகமெல்லாம் காயத்தழும்பு.... “ என்று இழுத்தபோது அங்கு நின்ற பொடியன், “அண்ணா, எங்கட சனம் காயப்படாம இருந்தாதான் அது ஆச்சரியம்.... பசங்களா பொறந்ததால இந்த அளவுக்கு தப்பித்தம், பொண்டுகளா பொறந்திருந்தா அந்த காடையர் கூட்டத்துக்கு வேற விதத்துல காயப்பட்டிருப்பம்” என்று அவன் சொல்லி முடிக்கையில் அங்கிருந்த அனைவரது முகத்திலும் ஒருவித கோபக்கனல் திளைத்தது.... இதை கேட்டிருக்க கூடாதோ என்று பிரபா ஒரு நிமிடம் தன்னை நொந்துகொண்டான்.... சூழலை புரிந்த சாந்தன், பேச்சை திசைமாற்றும்படி, “சரியடா பொடியா.... இந்த நண்பரின் பெயரென்னவெண்டு தெரியுமா?.... அதை கேட்டால், நீ களிப்பாகிடுவ” என்றான்...
“அப்படி என்ன பெயர் அண்ணா?...இப்போ நான் களிப்பாகனுமென்டால் அவர் பெயர் சோறு என்டு இருக்க வேண்டும்.... ஏன்னா, எனக்கு பசிக்குது.... பெயர் என்னவெண்டு புதிர் போடாம சொல்லுங்கண்ணா” என்று சிரித்தான் பொடியன்....
“இவர் பெயர் பிரபாகரன்.... “ என்று சாந்தன் சொன்னதும் அனைவரது முகமும் இறுக்கம் களைந்து பொளிவானது.... இதுவரை கொஞ்சம் அந்நியமாக தெரிந்த பிரபா, அந்த கனம் முதல் அவர்களுள் ஒருவனாக தெரிந்துவிட்டான்..... பிரபாவுக்கு மிகவும் ஆச்சரியமாக தெரிந்தது அந்த மாற்றம்.... பின்னர் அனைவரும் மகிழுந்தில் ஏறி கோவில், கடற்கரை, உணவகம் என்று பல இடங்களிலும் சுற்றினர்.... பிரபா அவர்களோடு மிகவும் இணக்கமாகிவிட்டான்..... பிரபாவோடு பழகிய யார் மனதிலும் சிறிதும் கபடம் இல்லை.... பிரபாவுக்கு ஒரே ஆச்சரியம், “இந்த சூழலிலும் இவர்களால் எப்படி கவலைகளை மறக்க முடிகிறது “ என்பதுதான்.... ஆனால் அவர்கள் கவலைகளை மறக்கவில்லை, தங்கள் கவலைகள் அடுத்தவர்களை ஆட்கொண்டுவிடக்கூடாது என்று தங்கள் கவலைகளை மறைக்கிறார்கள் என்பது அந்த ஒருநாளில் பிரபா தெரிந்துகொண்டான்.... ஒருவழியாக களைப்பு அனைவரையும் சீண்டும்வரை கலகலப்பாக அன்றைய பொழுதை கழித்து , மாலையில் தஞ்சை திரும்பும் நேரமும் வந்தது.... அனைவரிடமும் கண்ணீரோடு விடைபெற்றான் சாந்தன்.... ஒருநாள் பழகிய பிரபாவுக்கே அவர்களை பிரியும்போது சிறு நெருடலாகத்தான் இருந்தது..... “அண்ணா, அடிக்கடி இங்க வாங்க... சாந்தனை பத்திரமா பார்த்துக்கோங்க.... “ என்று பொடியன் கூறும்போது பிரபாவே ஒரு நிமிடம் கலங்கிவிட்டான்.... வரும்போது உற்சாகமாக பலவற்றையும் பேசிக்கொண்டு வந்த சாந்தன், இப்போது மவுன மொழிகள் கூட பேசாமல் அமைதியாக வந்தான்.... அப்போது சாந்தனின் கைகளை இருக்க பிடித்தான் பிரபா, அந்த பிடிப்பில் தான் இருப்பதாக அவனிடத்தில் உணர்த்தினான்.... கண்ணீர் வழிந்ததோடு பிரபாவின் தோள்களில் சாய்ந்துகொண்டான் சாந்தன்.... முகாமை விட்டு எல்லாவற்றையும் மறந்து வாழ அவன் தஞ்சைக்கு வந்துவிட்டாலும், அவன் நினைவுகள் இன்னும் ராமேஸ்வரத்தில் இருப்பதை கண்டு வியந்தான் பிரபா.... சாந்தனின் இன்னொரு உலகத்தை பிரபாவும் இன்றுதான் அறிந்தான்.... ஒருவழியாக இரவு தஞ்சையை அடைந்தனர் இருவரும்.... சாந்தன் அறையிலேயே இரவு தங்கிவிட்டு காலை தன் வீட்டிற்கு சென்றான் பிரபா..... காலை வீட்டிற்கு சென்ற பிரபாவுக்கு ஒரு ஆச்சரியம்.... அமுதாவின் குடும்பமே வீட்டில் இருந்தது.... பெரும்பாலும் பிரபாவின் வீட்டிற்கு வரும் அவன் மாமா, கஞ்சி போட்ட கதர் சட்டை போல விறைப்பாக இருப்பார்.... ஆனால் இன்று குடும்பத்தில் ஒருவராக மாறி இருப்பதை உணர்ந்தான் பிரபா.... பிரபா வீட்டிற்கு வந்த சில மணிகளில் அமுதா குடும்பம் கிளம்பிவிட்டனர்.... பிரபாவின் அம்மா எப்போதையும்விட அன்று உற்சாகம் மிகுந்து காணப்பட்டார்..... “குளிச்சுட்டு வாடா பிரபா, ஒனக்கு புடிச்ச அசோகா அல்வாவும், தெரட்டுப்பாலும் செஞ்சிருக்கேன்..... மத்தியானம் கோழி அடிக்கவா?, வெல்லாட்டங்கறி வாங்குவோமா?” என்று அம்மா ஒரே நாளில் ஒரு டன் ஐஸ்பாரை வைத்ததை ஆச்சரியமாக பார்த்தான் பிரபா.... இதற்கெல்லாம் ஒரே தீர்வு சொல்ல கூடியவன், மாணிக்கம்..... மாணிக்கத்தை தேடினான் பிரபா... சுகவாசியாக பத்து மணிக்கும் தூங்கிக்கொண்டிருந்தான் மாணிக்கம்..... மாணிக்கத்தை எழுப்பிய பிரபா, “என்ன மாமா?... இன்னக்கி ஒரே அடியா தூங்குற?.... அத்தையையும் காணும்” என்றான்....
“அது... அது மாப்புள... ஜனனி மசக்கையா இருக்காடா.... அதான் மதுரைக்கு அவள கொண்டுபோய் விட்டுட்டு காலைலதான் வந்தேன்” என்று அதிசயமாக வெட்கப்பட்டு சிரித்தான் மாணிக்கம்....
“ஐயோ மாமா.... வெக்கமல்லாம் படாத.... ரொம்ப பயமா இருக்கு..... எனி வே, வாழ்த்துக்கள் மாமா..... அதுசரி, பொதுவா எட்டாவது மாசத்துக்கு மேலதான் அம்மாவீட்டுக்கு அனுப்புவாங்க..... ஜனனி அத்தை என்ன இப்பவே போய்டுச்சு?” என்று சிரித்தான் பிரபா....
“அவளே போகனும்னு சொன்னா, நானும் சந்தோஷமா வழி அனுப்பிட்டேன்.... அக்கா கூட இருக்க சொன்னுச்சு, நான்தான் கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டேன்” என்று தலையணையை அணைத்துக்கொண்டான் மாணிக்கம்....
“நான் ஒருநாள் ஊர்ல இல்லாதப்ப என்னென்னமோ நடந்துருக்கே... ஆமா, அந்த மங்கூஸ் மாமா குடும்பத்தோட வந்தாரே, என்ன விஷயமா?” என்றான் பிரபா....
சிரித்த மாணிக்கம், “எல்லாம் உன் விஷயமாத்தான் மாப்ள.... “ என்றான்...
“என்ன என் விஷயமா?”
“ஒனக்கும் அமுதாவுக்கும் ஜாதகப்பொருத்தம் பாக்க பட்டிக்காட்டு ஜோசியரை பாக்க போனாங்க.... பத்து பொருத்தமும் பசை மாதிரி பொருந்திருக்காம்”
“வெளையாடாத மாமா.... உண்மைய சொல்றியா, இல்லைனா ஜனனி அத்தைக்கு போன் பண்ணி நீ வேட்டைக்கு போறத பத்தி சொல்லவா?”
பதறிய மாணிக்கம், “ஐயோ மாப்ள.... நான் இப்ப நெசமாத்தான் சொல்றேன்.... சத்தியமா உனக்கு பொருத்தம் பாக்கத்தான் எங்கண்ணன் வந்தாரு.... உண்மைய சொன்னா கூட நம்ப மாட்றியே?” என்றான்....
அப்போதுதான் பிரபா எல்லா விஷயங்களையும் இணைத்து பார்த்தான்.... அமுதாவின் அப்பாவின் திடீர் பாசம், அம்மாவின் திடீர் கவனிப்பு எல்லாமும் மாணிக்கத்தின் கூற்றை மெய்ப்பிக்கும்படி செய்தது.... பிரபாவின் முகமாற்றத்தை கவனித்த மாணிக்கம், “என்னடா மாப்ள, நீ சந்தொஷப்படுவன்னு பாத்தா இவ்வளவு சோகமா ஆகுற?.... அமுதாவுக்கு என்னடா கொறச்சல்.... அழகா, அறிவா, குடும்ப பாங்கான, இப்பவும் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுதானேடா?” என்றான்....
சமாளிக்க முனைந்த பிரபா, “அதுசரி மாமா, இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?.... இன்னும் எனக்கு ஒரு வருஷம் படிப்பு இருக்கு.... அமுதாவும் இப்பதானே காலேஜ் சேந்திருக்கு.... அதுக்குள்ளையும் இந்த பேச்சு எதுக்கு?” என்றான்....
“அப்டி இல்லடா மாப்ள... அக்கா ரெண்டு மூனு வருஷமாவே சொல்லிட்டுதான் இருக்கு.... இப்பதான் அதுக்கு நேரம் வந்திருக்கு.... கல்யாணத்த ஒரு வருஷத்துக்கு அப்புறம் வச்சுக்கலாம்.... இப்போ பேசி முடிச்சு பாக்கு வெத்தலை மாத்துறது மட்டும்தான்டா.... அக்காவுக்கும் இப்பவல்லாம் ரொம்ப முடியாம போகுது, அதுவும் பயப்படுதுல்ல....” என்று மாணிக்கம் சொல்லி முடித்தும் பிரபா ஆழ்ந்த யோசனை மாறாதவனாக அமர்ந்திருந்தான்.... பிரபாவின் நினைவுகள் எங்கு சென்றிருக்கும் என்பது நம்மால் நிச்சயம் யூகிக்க முடியும், ஆம், அவன் சாந்தனை பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தான்.... சாந்தன் சொன்னபடி இந்த விஷயத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், இந்த விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சினையாக இப்போது உருவெடுத்து நின்றிருக்காது..... பிரபா இன்னும் யோசிப்பதை பார்த்த மாணிக்கம், “என்னடா?... அதான் சொல்றேன்ல.... வேற என்ன பிரச்சின?... அமுதாவை பிடிக்கலையா உனக்கு?.... இல்ல, வேற யாரையாச்சும்?” என்று இழுத்தபோது பிரபா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.... ஆனால், இந்த பிரச்சினை என்றாவது வெடிக்கும்போது பிரபா அதிகம் நம்பியது மாணிக்கத்தைதான்.... அதனால் இப்போதே இதை சொல்லிவிடலாம் என்று தீர்மானத்திற்கு வந்தான்....
தயங்கியபடி “ஆமா.... ஆமா மாமா.... நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்” என்று கூறிவிட்டான் பிரபா....
மாணிக்கம் அதிர்ச்சியானான்.... சிறுபிள்ளையாகவே பார்த்த பிரபா, இன்று காதல் என்று வந்து நிற்பதை மாணிக்கத்தால் நம்ப முடியவில்லை.... இருந்தாலும் பிரபாவின் மீதுள்ள அதீத பாசத்தால் மேற்கொண்டு அதைப்பற்றி விசாரிக்க முடிவெடுத்தான் மாணிக்கம்.... ஆனாலும் அதைப்பற்றி பேச இது சரியான இடமல்ல என்று முடிவெடுத்த மாணிக்கம், பிரபாவை மாடிக்கு அழைத்து சென்றான்.... காரணம், மாணிக்கத்தின் அறையில் பேசுவது அருகில் இருக்கும் சமையலறையில் கேட்கும்.... பலநாட்கள் தனக்கும் ஜனனிக்கும் நடக்கும் சண்டைகளை சமையலறையில் இருக்கும் அக்கா கேட்டுவிட்டு பிறகு இருவருக்குள்ளும் சமாதானப்படுத்துவது வழக்கம்... இப்போது அக்கா வேலை கவனத்தில் இதை கவனித்திருக்க மாட்டார் என்று மாணிக்கம் நினைத்துக்கொண்டாலும், உண்மையில் இவர்கள் பேசியது பிரபாவின் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது.... சமையலறையில் பிரபா கூறியதை கேட்ட அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள்.... இத்தனைகாலமும் அமுதாவை “மருமகளே” என்று வெறும் சம்பிரதாயத்திற்காக கூப்பிடவில்லை, மனதார கூப்பிட்டாள்.... மேலும், அமுதாவிற்கு தானே பிரபாவின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கி விட்டதை எண்ணியும் மனம் நொந்துவிட்டார்.... இந்த விஷயத்தில் பிரபாவைப்பற்றி சிந்தித்ததைவிட, அமுதாவைப்பற்றி அம்மா கவலைப்பட்டதுதான் அதிகம்.... இப்போது, பிரபா மேற்கொண்டு என்ன சொல்லப்போகிறான் என்று தெரிந்துகொள்ள அம்மாவும் மாடியை நோக்கி நடந்தார்.... மூட்டு வலி வந்து இரண்டு வருடங்களாகவே மாடிப்படிகள் ஏறுவதை தவிர்த்த அம்மா, வேறு வழியின்றி வலியையும் பொருட்படுத்தாமல் படிகளில் ஏறினார்.... அம்மாவிற்கு அதிக கஷ்டம் கொடுக்கக்கூடாது என்பதாலோ என்னவோ பிரபாவும் மாணிக்கமும் அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றே பேசிக்கொண்டிருந்தனர்.... இருவரும் பார்க்க முடியாதபடி மாடிப்படி மறைவில் நின்று அவர்களின் பேச்சுக்களை கவனித்தார் அம்மா....
“என்னடா மாப்ள சொல்ற?... உண்மையாத்தான் சொல்றியா? இல்லை, கல்யாணம் புடிக்காம பொய் சொல்றியா?”
“நெஜமாதான் மாமா.... இதை நான் ரொம்ப நாளாவே உன்கிட்ட சொல்லனும்னு நெனச்சேன், என்னமோ இப்பதான் சொல்ல நேரம் வந்துச்சு”
“எல்லார் மனசுலயும் வீண் ஆசைகள வளர்த்துட்டோமேடா.... மத்தவங்கள விடு, நம்ம அமுதா பாவமில்லையா?”
“அவ சின்ன பொண்ணு மாமா.... கொஞ்சம் மெச்சூரிட்டி ஆகிட்டா புரிஞ்சுப்பா.... ப்ளீஸ், நீயாச்சும் என்ன புரிஞ்சுக்க மாமா”
“சரி.... யார் அந்த பொண்ணு?... என்ன ஆளுக?”
“.......”
“தயங்காம சொல்லு மாப்ள, வேற சாதியா?.... பரவால்ல சொல்லு, பாத்துக்கலாம்”
“அது... அது....... நம்ம சாந்தன்....”
“அந்த இலங்கை பையன சொல்றியா?... அந்த பையன்னோட தங்கச்சியா?”
“இல்ல மாமா.... நான் லவ் பண்றது சாந்தனைத்தான்”
அதிர்ச்சியில் திகைத்து நின்றான் மாணிக்கம்.... “என்ன... என்னடா சொல்ற?.... தண்ணி எதுவும் அடிச்சுருக்கியா?.... தெளிவா சொல்லுடா” என்றான்....
“நான் தெளிவாத்தான் சொல்றேன்..... நான் அவனைத்தான் லவ் பண்றேன்.... நீதான் இது தப்பில்லைன்னு சொன்னில்ல” என்றான் பிரபா அப்பாவியாக....
“அய்யோ மாப்ள, நான் சொன்னது ஜாலியா இருக்குறதுக்கு.... இப்டி காலா காலத்துக்கும் வாழறதுக்கு இல்ல.... நாம ஒன்னும் அமெரிக்காவுல இல்ல, தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமத்துல இருக்கோம்.... இது இங்கல்லாம் வாய்ப்பே இல்ல மாப்ள.... புரிஞ்சு பேசு.... ஜாலியா இருந்தோமா, நம்ம வாழ்க்கைய பாத்துட்டு போனோமான்னு இருக்கணும் இந்த விஷயத்துல” என்று மாணிக்கம் தயங்கி தயங்கி வார்த்தைகளை விடுவித்தான்....
“நீ முன்னாடி சொன்னபடி, எங்க ரெண்டு பேருக்கு இடையில நடக்குற விஷயத்தை தப்புன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்ல மாமா”
“இல்ல மாப்ள.... இது உங்க ரெண்டு பேர் சம்மந்தப்பட்டது மட்டும் இல்ல.... ஒன்னு இந்த விஷயத்துல நமக்கேத்த மாதிரி இந்த சமுதாயம் மாறனும், இல்லைனா இந்த சமுதாயத்துக்கு ஏத்த மாதிரி நாம மாறிடனும்.... இதுல முதல் விஷயம் நடக்க வாய்ப்பு இப்போதைக்கு இல்ல, ரெண்டாவது பாதையைத்தான் நாம தேர்ந்தெடுக்கணும்.... இந்த விஷயத்தால பல பேரும் பாதிக்கப்படுவாங்க மாப்ள” என்று மிகவும் உருக்கமாக பேசினான் மாணிக்கம்...
ஆனால் எதற்கும் பிரபா செவி சாய்ப்பதாக தெரியவில்லை.... இவர்களது உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்போது மாடிப்படியில் ஏதோ சத்தம் கேட்க, ஓடி சென்று பார்த்தனர் பிரபாவும் மாணிக்கமும்.... பிரபாவின் அம்மா தடுமாறியபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தார்.... இருவரும் திகைத்து நின்றனர்....
எல்லாமும் அம்மாவிற்கு தெரிந்தது ஒருவகையில் பிரபாவுக்கு நிம்மதியாகவும் இருந்தது... காரணம், மாணிக்கத்திடம் வைத்த வாதங்களை அம்மா முன் வைக்க முடியாது.... அப்படி இருக்கையில் இதை ஏதோ ஒரு வகையில் அம்மா தெரிந்துகொண்டது மகிழ்ச்சி என முடிவு செய்தான் பிரபா.... மாணிக்கம்தான் அதிகம் பதறினான்.... அக்காவையும், பிரபாவையும் எந்த புள்ளியிலும் ஒருசேர கொண்டுவர முடியாது.... இந்த நிலையில் ஒரு பக்கம் சார்பாக முடிவெடுக்க வேண்டும்.... முதலில் அக்காவை சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணியபடி கீழே சென்றான் மாணிக்கம்....
பிரபாவின் அம்மா இறுகிய முகத்துடன் வீட்டு முகப்பில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.... அவர் முகத்தில் பயம், குழப்பம், சோகம், கவலை என்று எல்லாம் கலந்த கலவை உணர்வு மிகுந்து காணப்பட்டதை மாணிக்கம் இதுவரை பார்த்ததில்லை.... அருகில் சென்று பேசவே தயங்கியபடி, “அக்கா.... எப்ப மாடிக்கு வந்த?... கால் வலின்னு சொல்லி இவ்வளவு நாள் வராம இருந்தியே, இப்போ.....”என்று இழுத்தான்.....
மாணிக்கத்தின் முகத்தை திரும்பி பார்க்காமல், “ஆமா.... இதுவரைக்கும் மாடிப்பக்கமே வராததால பல விஷயங்கள் தெரியாமலே போய்டுச்சு.... எல்லா முடிவையும் நீங்களே எடுத்துகிட்டா, நான் இங்க ஒருத்தி என்னத்துக்கு உயிரோட இருக்கணும்?” என்ற அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மாணிக்கத்தை கலவரப்படுத்தியது..... பொதுவாகவே அக்கா மனதிடம் மிக்கவள், பிடிவாத குணம் கொண்டவள் என்பது மாணிக்கம் அறிந்ததே...... மாமா இறந்த இரண்டே நாளில் இயல்பு நிலைக்கு திரும்பி பணிகளை தொடங்கிய அக்காவை பலரும் அதிசயமாக பார்த்ததை மாணிக்கம் மறக்கவில்லை.... இப்போதும் அக்கா தன் கோபம், வருத்தமெல்லாம் மனதில் புதைத்தபடி, அடுத்து நடக்கவேண்டியதை பற்றி அக்கா சிந்திப்பதை மாணிக்கம் வித்தியாசமாக பார்க்கவில்லை..... “ஐயோ... அக்கா.. ஒன்னும் பிரச்சன இல்லக்கா.... நான் பாத்துக்கறேன்... பிரபா நான் சொன்னா நிச்சயம் கேட்டுக்குவான்.... நீ அலட்டிக்காதக்கா” என்று மாணிக்கம் அக்காவின் கைகளை பிடித்து உருக்கமாக பேசினான்....
கண்களின் நீரை துடைத்துக்கொண்ட அம்மா, “இனி பிரபாவை மனசு மாத்த முடியும்னு எனக்கு தோனல.... அவன் அவுக அப்பா மாதிரியே புடிவாதக்காரன்.... இதுக்கு நாமதான் வேற எதாவது செய்யனும்....” என்றார்....
“சரிக்கா... அப்போ நான் அந்த பையன் கிட்ட பேசுறேன்.... எப்படியாவது இந்த விஷயத்த நடக்காதது மாதிரி செஞ்சிடுறேன்..... எனக்கு நீயும், பிரபாவும் தாங்கா முக்கியம்... அவன் சின்ன புள்ளத்தனமா செய்றத நாம ஏத்துக்க முடியாது.... அந்த பையன் சாந்தன்கிட்ட அன்பா சொல்லி பாக்குறேன், கேக்கலைனா எந்த எல்லை வரையும் போயி இதை தடுத்திடுறேன்.....” என்று மாணிக்கம் கண் கலங்க, அதை பார்த்து அக்காவும் அழுதுவிட்டார்.....
ஆனாலும் அந்த நேரத்தில் மற்ற தாய்மார்களைப்போல அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல், இதைப்பற்றி ஆழ்ந்து யோசித்து திட்டமிட்டதை மாணிக்கம் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் பார்த்தான்....
காலை சாப்பாடு பிரபா சாப்பிடும்போதும், அதற்கு பிறகும் அம்மா அவனுடன் பேசவே இல்லை.... வருத்தமாக இருந்தாலும், அம்மா புரிந்துகொள்வார் என்று நம்பினான்.... சாப்பிட்ட பிறகு பயணக்களைப்பும், வருத்தமும் சேர்ந்து ஒருவாராக ஆழ்ந்து உறங்கத்தொடங்கினான்.... இதுதான் சரியான நேரம் என்று மாணிக்கம் தஞ்சை கிளம்ப ஆயத்தமானான்.... அக்காவிடம், “அக்கா, பிரபா தூங்கிட்டு இருக்கான்.... எனக்கு அந்த பையன் சாந்தனோட ரூம் தெரியும்.... நான் போய் இன்னையோட இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடுறேன்” என்றான்....
“நானும் வரேன்டா..... நான் சொன்னா கேட்டுக்குவான் அந்த பையன்.... வா போகலாம்.... இதை எப்படி சரிபண்ணனும்னு எனக்கு தெரியும்....” என்ற அக்காவின் பேச்சை மறுக்காமல், இருவரும் தஞ்சைக்கு புறப்பட்டனர்....
செல்லும் வழியெல்லாம் அம்மா வேண்டாத கோவில் இல்லை, வணங்காத தெய்வம் இல்லை.... இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்தால் பழனிக்கு தான் மொட்டை போடுவதாக வேண்டியது இந்த பிரச்சினையின் வீரியத்தை அம்மா உணர்ந்திருப்பது உணர்த்தியது..... ஒருவழியாக தஞ்சை சென்று சாந்தனின் அறையை அடைந்துவிட்டனர் இருவரும்....
கொஞ்சம் தயங்கியபடி, மனதை இறுக்கியபடி அறையின் கதவை தட்டினான் மாணிக்கம்....அம்மா, அமைதியாக வேறு திசையை பார்த்தபடி நின்றிருந்தார்.... கதவை திறந்த சாந்தன், மாணிக்கத்தையும் , பிரபாவின் அம்மாவையும் பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தான்.... கொஞ்சம் மனதிற்குள் பதற்றம் தனியாதவனாக, “வாங்கண்ணே..... நல்லா இருக்கிங்களா?.... அம்மாவும் வந்திருக்காங்களா?.... உள்ள வாங்க” என்று அழைத்து, கட்டிலில் இருந்த துணிகளை சுத்தப்படுத்தி அமருமாறு கூறினான்....
மாணிக்கம் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்தான்.... அம்மா, தயங்கியபடி இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்.... இருவரின் முகமாற்றத்தை கவனித்த சாந்தன், ஏதோ விபரீதம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்த பிரபா, மெல்ல தயங்கியபடியே, “என்னண்ணே ஒரு மாதிரி இருக்கீங்க?.... யாருக்கும் எதுவும்.....” என்று இழுத்தான்....
மௌனம் களைந்த மாணிக்கம், “யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாதுன்னுதான் இங்க வந்திருக்கோம்.... அது கூட உன் கைலதான் இருக்கு....” என்று பீடிகை போட்டான்....
என்ன எது என்று தெரியாமல், பதற்றத்துடன், “என்ன அண்ணே சொல்றிங்க?... சத்தியமா ஒன்னும் புரியல.... தயவுசெஞ்சு தெளிவா சொல்லுங்க” என்றான் சாந்தன்....
சிறிது அமைதிக்கு பிறகு தொடர்ந்த மாணிக்கம், “நான் சுத்தி வளச்சு பேச விரும்பல.... வெளிப்படையாவே சொல்றேன்.... பிராபவுக்கும் உனக்கும் இடையில இருக்குற உறவுக்கு என்ன பேர்?” என்றான்....
அந்த நேரத்தில் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத சாந்தன், குழப்பம் அகலாமல் பிரபாவின் அம்மா முகத்தை பார்த்தான்.... தலையை குனிந்தபடி இறுக்கமான முகத்துடன் காணப்பட்ட அம்மாவை பார்த்ததும் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த சாந்தன், “அது.... அது.... பிரபா என்ன சொன்னான்?” என்றான்....
“அவன் சின்னப்பய ஏதோ அறிவில்லாம பேசுறான்.... நான் கேக்குறது நீ என்ன நெனைக்குரன்னுதான்.... நீ தெளிவான பைய்யன், விவரம் தெரிஞ்சவன்னுதான் உன்னைய பொறுமையா கேக்குறேன்.... நீயாவது நாட்டு நடப்பை புரிஞ்சு பேசுவன்னு நெனக்கிறேன்....” என்ற மாணிக்கம் எழுந்து சாந்தனின் கைகளை பிடித்தான்....
பிரபா என்ன சொல்லி இருப்பான் என்பது யூகித்த சாந்தன், ஆழ்ந்த யோசனைக்கு பிறகு தொடங்கினான், “இதுல நான் புதுசா சொல்ல எதுவும் இல்லை.... பிரபா சொன்னதுதான் என் கருத்தும்.... நான் அவனை விரும்புறேன்.... காலம் முழுக்கவும் அவன்கூட வாழணும்னு ஆசைப்படுறேன்.... தயவுசெஞ்சு நீங்க எங்க நிலைமைய புரிஞ்சுக்கோங்க அண்ணே....” என்றவாறே கதவு ஓரத்தில் நின்ற அம்மாவின் கைகளை பிடித்தவாறே, “அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.... நான் உங்கள மன்றாடி கேட்டுக்கறேன், தயவு செஞ்சு எங்கள புரிஞ்சுக்கோங்க” என்றான்... அம்மா எவ்வித முக மாறுதலும் இல்லாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார்... அப்போது சாந்தனை கையை பிடித்து இழுத்த மாணிக்கம், “இங்க பாரு தம்பி.... நான் இவ்வளவு பொறுமையா பேசுறதே, நீ பிரபாவோட நண்பன்குரதாலதான்.... இது எங்க சொந்தக்கார யாருக்காச்சும் தெரிஞ்சா, நான் பொறுமையா பேசுற மாதிரி உன்கிட்ட பேசிகிட்டெல்லாம் இருக்க மாட்டாக.... பணம் எதுவும் வேணும்னா தயங்காம கேளு.... மெட்ராசுலயோ, பாண்டிச்செரிலயோ உனக்கு ஒரு கடை கட்டி தரேன்.... என்ன வேணாலும் கேளு, தயங்காம....”என்று மாணிக்கம் சொல்லி முடித்ததும்தான் தாமதம், மாணிக்கத்தின் கைப்பிடியை உதறித்தள்ளிய சாந்தன், “என்ன பேரம் பேசுறீங்களா?... இதே கேள்வியை வேற யாராச்சும் கேட்டிருந்தா என் பதில் வாயில வந்திருக்காது.... தயவுசெஞ்சு போய்டுங்க..... பிரபாவோட நான் சேரனும்னா எந்த அளவுக்கு வேணாலும் நான் போவேன்..... எல்லாத்துக்கும் அமைதியா இருக்குறதால அம்பினு நெனச்சிடாதிங்க.... ஆறு வயசுலேயே துப்பாக்கி பார்த்து வளர்ந்தவன் நான்.... பிணங்களுக்கு இடையில்தான் வாழ்க்கையை ஓட்டிருக்கோம்.... அதனால சாவைக்கண்டு பயந்து வாழுற ஈனப்பொறப்பு எனக்கு தெரியாது.... தயவு செஞ்சு போய்டுங்க” என்று சாந்தன் கடுமையாக கூற , மாணிக்கமா ஒருபடி இன்னும் அதிக விரக்தியானபடியே, “ஏன்டா, உனக்குத்தான் குடும்பம் இல்லைங்குறதால ஊர்ல எவனுமே குடும்பத்தோட வாழக்கூடாதுன்னு நெனக்கிரியா?.... உம்மேல பிரபாவுக்கு இருக்கது வெறும் பரிதாபம்தான்.... அதை நீ பயன்படுத்திக்கிட்டு வாழலாம்னு பாக்குற.... ஊரு, நாடு, சொந்தம் பந்தம், வீடு வாசல்னு எதையும் இல்லாம நீ இருக்கையிலேயே நீ இவ்வளவு ஆடுரன்னா, உனக்கெல்லாம் நல்லவழி அமஞ்சிருந்தா என்ன பண்ணிருப்ப..... ஆண்டவன் உன்ன மாதிரி ஆளுகளுக்கு தெரிஞ்சுதாண்டா இதல்லாம் செய்றான்.... உம்மேல பரிதாபப்பட்டேன் பாரு, என்னைய சொல்லனும்.... ஒழுங்கா நான் சொல்றத கேளு, எங்கயாச்சும் போய்டு.... இல்லைனா உன்ன மாதிரி ஆளுகள அடிச்சு போட்டா கூட ஏன்னுகேக்க நாதியில்ல” என்று மாணிக்கம் சொல்லி முடித்தாலும், அதை பொருட்படுத்தாதவனாக , “அதான் சொல்றிங்கல்ல, உங்களால பண்ண முடிஞ்சத பண்ணிக்கோங்க.... அப்புறம் என்னத்துக்கு என்கிட்டே கெஞ்சிகிட்டு இருக்கீங்க?.... வெளிய போங்க” என்று சாந்தன் சொல்லும்போதே மாணிக்கம் அவனை இழுத்து தள்ள, அருகில் இருந்த கட்டிலில் தலை மோதி ரத்தம் வர, இன்னும் கோபமான சாந்தன் மாணிக்கத்தை நோக்கி கையை ஓங்க, நிலைமையின் விபரீதம் புரிந்த பிரபாவின் அம்மா , சட்டென சாந்தனின் கால்களில் விழுந்துவிட்டார்.... கண்ணீர் ததும்பிய முகத்துடன், கால்களை பிடித்தவாறே, “தயவுசெஞ்சு பிரபாவை விட்டு போய்டு.... இந்த மாதிரி அசிங்கம் ஒன்னு நடந்தா, அதுக்கப்புறம் நாங்க யாருமே மானத்தோட வாழமுடியாது.... நிச்சியமா நான் தூக்குலதான் தொங்கனும்.... என்னை உன் அம்மா மாதிரி நெனச்சுக்க, இதை மட்டும் நீ செஞ்சின்னா என் வம்சமே உன்னை கடவுளா வணங்கும்..... போய்டு.... போய்டு” என்று கதறவே பதறிய சாந்தன், தானும் அமர்ந்து அம்மாவை நிமிர்த்தியவாறே என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தான்.... அப்படியே முகமெல்லாம் வியர்க்க தரையில் மயங்கிவிட்டார் பிரபாவின் அம்மா.... மேலும் அச்சம் மேலோங்க, தண்ணீர் தெளித்து அவர்களை சீராக்கினான்.... சில நிமிடங்கள் மயான அமைதி அங்கு நிலவியது....
பின்னர் அம்மா, “மாணிக்கம் சொன்னதல்லாம் மனசுல வச்சுக்காத.... நீ இதை ஏத்துக்குவன்னு நம்புறேன்..... அந்த நம்பிக்கையோட நான் ஊருக்கு போறேன்.... நான் வாழணுமா? சாகனுமான்னு நீதான் முடிவெடுக்கணும்.... “ என்றவாறே வலிந்த கண்ணீரை தன் சேலையின் நுனியில் துடைத்தவாறே அந்த அறையை விட்டு கிளம்பினார்..... அவர்கள் சென்றதும் சாந்தன், விரக்தியின் உச்சத்திற்கே சென்றான்....
கட்டிலில் அமர்ந்த சாந்தனுக்கு மாணிக்கத்தின் சொற்கள் ஒவ்வொன்றும் ஊசியாய் குத்தியது.... தனக்கெல்லாம் காதலிக்கும் அருகதை இல்லையா?... கண்டி கதிர்காமர் கோயிலுக்கு தன் குடும்பம் செய்த ஊழியத்திற்கு கூட கடவுள் செவிசாய்க்காமல், உயிரைத்தவிர மற்ற எல்லாவற்றையும் தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக மனம் குமுறினான்.... பிரபாவின் அம்மா இப்படி தன் காலில் விழுந்ததை எண்ணி கதறி அழுதான்.... ஆறு வயதில் அம்மாவை இழந்த சாந்தன், கொஞ்ச நாட்களாக அம்மாவாக பார்த்தது பிரபாவின் அம்மாவைத்தான்.... பிரபாவின் காதலை ஏற்றதற்கு ஒருவகையில் அவன் குடும்ப சூழ்நிலையும், அம்மாவின் பாசமும் கூட காரணம் என்று சொல்லலாம்.... அத்தகைய உயர்ந்த இடத்தில் வைத்து தான் மதிக்கும் ஒருவர், தான் வாழ்வதே தன் கையில்தான் இருக்கிறது என்று கூறியதை எப்படி உதாசீப்படுத்த முடியும்?.... அப்படியானால், பிரபாவின் நிலைமை.... தான் அவனுக்கு துரோகம் செய்வதாக அவன் எண்ணிக்கொள்ள மாட்டானா?.... ஒருவேளை பிரபாதான் முக்கியம் என்று அவனுடன் வாழத்தொடங்கி, அவன் அம்மா சொல்வதைப்போல இறந்துவிட்டால் காலம் காலமாக அந்த பழி தன்னை நிம்மதியாக வாழ முடியுமா?.... குடும்பத்தை இழந்து வாழ்வது எவ்வளவு கொடுமையான வலி என்பது தனக்கு தெரியும், அத்தகைய வலியை பிரபாவுக்கு நிச்சயம் கொடுக்க கூடாது என்று எண்ணினான்.... இறுதியாக இப்படி தனக்குள் விவாத களமே நடத்தி இறுதியாக நள்ளிரவை தாண்டி ஒரு தீர்மானமான முடிவை எடுத்தான்.... அந்த முடிவு, பிரபாவை விட்டு நிரந்தரமாக பிரியும் முடிவு.... நிச்சயமாக இதன்மூலம் பலருக்கும் நன்மை எனும் நிலைமையில் தான் காதலை தியாகம் செய்வதில் தவறில்லை என்பதை புரிந்துகொண்டான்.... நிச்சயம் பிரபாவை விட்டு இந்த தருணத்தில் விலகுவது கூட பிரபாவின் நன்மைக்காகத்தான் என்பதை நம்பினான் சாந்தன்.... இழப்பு என்பது தனக்கு புதிதல்ல, அப்படி இருக்கையில் ஒரு நல்ல குடும்பத்திற்காக தன் காதலை இழப்பதில் தவறில்லை என்பதை உணர்ந்து பிரபாவை விட்டு வெகுதூரம் விலக முடிவெடுத்து ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு புத்தகத்திற்குள் வைத்துவிட்டு கேண்டீன் முதலாளியிடம் கொடுத்து பிரபா தன்னை பற்றி கேட்டால், இதை கொடுக்க சொல்லிவிட்டு பார்க்கும் பேருந்தில் எல்லாம் ஏறி எங்கோ சென்றான்.... எங்கு செல்வது என்று அவனுக்கே தெரியாமல் எங்கோ சென்றுகொண்டிருந்தான்....

வழக்கம்போல மறுநாள் கல்லூரிக்கு வந்தான் பிரபா.... ஆர்வத்துடன் தங்கள் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டதையும், கூடிய விரைவில் அதை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சாந்தனிடம் கூற ஓடி வந்தான் பிரபா.... சாந்தன் அங்கு இல்லை.... கேண்டீன் முதலாளியிடம், “அண்ணே, சாந்தன் எங்க ஆளையே காணும்?” என்றான்....
“என்னனு தெரியலப்பா, அவன் வேலைய விட்டுட்டு போறதா இன்னைக்கு காலைல என் வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போய்ட்டான்.... என்ன காரணம்னு கேட்டேன், அவன் சொல்லல....”
இதை கேட்டதும் பிரபா அதிர்ச்சி அடைந்தான்.... மிகுந்த ஆர்வத்துடன் சாந்தனை பார்க்க வந்தவனுக்கு நிச்சயம் இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கும்....
பிரபா இப்படி யோசித்துக்கொண்டிருப்பதை பார்த்த கேண்டீன் முதலாளி, சட்டென நினைவு வந்தவராக, “பிரபா, இந்த புக்கை உன்கிட்ட சாந்தன் கொடுக்க சொன்னான்.... இதை கேட்டிருந்தியோ?” என்றார்....
அதற்கு பதில் சொல்லக்கூட மறந்தவனாக அதை வாங்கிய பிரபாவுக்கு அந்த புத்தகம் எதற்காக சாந்தன் கொடுத்திருப்பான் என்று புரியவில்லை.... அது “காசி ஆனந்தனின் கவிதைகள்” புத்தகம்..... ஒன்றும் புரியாமல் அதை வாங்கியவாறே அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.... என்ன காரணம்?.. எதனால் சாந்தன் இப்படி ஒரு முடிவை எடுத்தான்?... எங்கு சென்றிருப்பான்? என்று ஆயிரம் கேள்விகள் மனதை துளைத்தாலும் , எதேச்சையாக அவன் கை அந்த புத்தகத்தின் தாள்களை புரட்டியது... அப்போதுதான் அதற்குள் ஒரு கடிதம் இருப்பதை கவனித்தான் பிரபா..... படபடப்புடன் அதை எடுத்து பிரித்தான் பிரபா.... சாந்தனின் எழுத்துகள் எப்போதும் முத்து முத்தாக இருக்கும்.... அவன் எழுத்துகள் சிதைந்திருப்பதை கண்டபோது, அவன் மனம் எந்த அளவிற்கு வலியாக இருந்திருக்கும் என்றும், அவன் உடல் எந்த அளவிற்கு நடுக்கத்தில் இருந்திருக்கும் என்றும் எளிதாக யூகிக்க முடிந்தது.....
“அன்புள்ள பிரபாவுக்கு....
அநேகமாக இந்த கடிதம் படித்து முடிக்கும்போது இந்த அன்பு என் மீது உனக்கு இருக்குமா என்று தெரியவில்லை....
நான் உன்னைவிட்டு விலகி செல்கிறேன்.... இதற்கு என்ன காரணம்? எதனால் இப்படி செய்தேன்? என்ற எந்த கேள்விகளுக்கும் இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது....
உன்னைவிட்டு நான் பிரிவதற்கு காரணம், நிச்சயம் நம் காதலைவிட ஏதோ ஒன்று முக்கியமானதாக இருக்கும் என்பதை நீ உணர்வாய் என்று நம்புகிறேன்.... இப்போது நான் உன்னைவிட்டு வெகுதூரம் விலகி செல்கிறேன்... நான் இதுவரை உன்னிடம் எதுவும் கேட்டதில்லை, முதலும் கடைசியுமாக ஒன்றே ஒன்று கேட்கிறேன், “என்னை மறந்துவிடு..... “....
இதை சொல்ல நான் எத்தகைய ,மனப்போராட்டத்தில் இருப்பேன் என்பது உனக்கு புரியும், இருந்தாலும் காலமும் சூழலும் என்னை அத்தகைய ஒருநிலைக்கு தள்ளிவிட்டது.... என்னைவிட உன்மீது அதிக பாசம் கொண்டவர்கள் உன்னை சுற்றி இருக்கிறார்கள், அவர்களுக்காக நீ வாழு, அவர்களோடு நீ வாழு..... எவ்வளவு பெரிய விஷயங்களை இவ்வளவு எளிதாக எப்படி என்னால் கடிதத்தில் எழுத முடிகிறது என்று நீ நினைப்பது எனக்கு புரிகிறது.... வேறு வழி இல்லை.... நான் செல்கிறேன், உன்னைவிட்டு நிரந்தரமாக..... என்னை மன்னித்துவிடு......
இப்படிக்கு,
இப்போது உன்னை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை..... ...

என்று எழுதி இருந்த அந்த கடிதத்தை படித்து முடித்ததும் பிரபாவிற்கு அதை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.... மனம் முழுவதும் குழப்பத்தால் ஸ்தம்பித்து நின்றது... ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு கொஞ்சம் நிதானம் வந்த பிரபாவின் மனதிற்குள் கேள்விக்கணைகள் அம்பாக பாய்ந்தது.... என்ன காரணத்தால் பிரபா இப்படி ஒரு முடிவெடுத்தான்?... எங்கே சென்றிருப்பான்?... ஒருநாள் இடைவெளியில் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? யார்? என்றெல்லாம் எழுந்த கேள்விகளுக்கு ஒரு சிறிய யூகிப்பு கூட பிரபாவிற்கு சாத்தியம் இல்லாத அளவிற்கு குழப்பம் மிகுந்து காணப்பட்டது.... தன்னைவிட முக்கியமான ஒரு விஷயம் இருப்பதால்தான் நிச்சயம் சாந்தன் இத்தகைய ஒரு முடிவு எடுத்திருக்க கூடும், எதையும் ஆழ்ந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் சாந்தனின் இந்த செயலுக்கு நிச்சயம் ஒரு நியாயம் இருக்கும்... அந்த விஷயம் நிச்சயம் தன்னைவிடவும், தங்கள் காதலைவிடவும் அதி முக்கியமான ஒன்றாக இருக்கும் என்ற பொறி ஒரு மூலையில் பிரபாவிற்குள் எழுந்தாலும், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அடுத்தடுத்த கேள்விகள் அவனை துளைத்தெடுத்தது.... "தன்னைவிடவும், காதலைவிடவும் அப்படி ஒரு முக்கியமான விஷயம் இருக்குமானால், அதை நியாயமான முறையில் என்னிடம் அவன் தெரிவித்துவிட்டு சென்றிருக்கலாமே?... என்னிடம் கூற முடியாத அளவிற்கு அது ரகசியமான விஷயமா?... அல்லது, அந்த ரகசியத்தை சொல்லும் அளவிற்கு நான் நம்பகத்தன்மை இழந்துவிட்டேனா?.... காதலுக்கும், காதலனுக்கும் அவன் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?... அவனுக்காக குடும்பத்தையே துறக்க நான் முடிவெடுத்த நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் என்னையே இழக்க முற்பட்டுவிட்டான் என்றால் அவன் காதலுக்கு நான் உரியவன் அல்லாமல் ஆகிவிட்டேனா?.... எந்த விஷயத்தையும் என்னை மறைக்க கூடாது என்று கட்டளை இட்ட அவனே, இன்று இத்தகைய தருணத்தில் எதையோ மறைத்துவிட்டு சென்றுவிட்டான்.... சட்டம் இயற்றுவோர் அதை மீறலாம் என்று எண்ணிவிட்டானோ?" என்ற கேள்விகள் சாந்தன் மீது கோபத்தை ஏற்ப்படுத்தியது.... இந்த கேள்விகளின் விளைவாக பிரபாவின் மனது, "அடச்ச.... என்னைய மதிக்காம, காதலை மதிக்காம போன ஒருத்தனுக்காக நான் இவ்வளவு வருத்தப்படனுமா?... என்னைவிட ஏதோ ஒன்று அவனுக்கு முக்கியமா இருக்கும்போது, அவனை நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கவலைப்படனுமா?" என்று நினைத்தான்.... ஆனால், இந்த கேள்விகள், கோபங்கள், எண்ணங்கள் எல்லாம் எழுந்த அடுத்த நிமிடமே கானல் நீராக போனது.... சாந்தனின் மீதான காதல் இந்த அத்தனை கேள்விகளையும் செல்லா காசுகளாக்கிவிட்டன.... இப்படி அவன் மீது கோபப்படவும், அவன் பிரிவை ஏற்கவும் எந்த காலத்திலும் தன்னால் முடியாது.... அழுகை, கோபம், ஆத்திரம், குழப்பம் என்று பிரபாவை சுற்றிலும் சுழன்றடித்தது..... உடனே நிதானம் வந்தவனாக ஓடினான்... சாந்தனின் அறை, பேருந்து நிலையம் என்று பல இடங்களிலும் தேடினான்.... அவன் அங்கெல்லாம் இருக்க மாட்டான் என்று அறிவு சொன்னாலும், மனமோ எதையும் கேட்காமல் பித்துபிடித்ததைப்போல தஞ்சை முழுவதும் தேடியது.... அதிகாலை கிளம்பியவன், பதினோரு மணி வரை தஞ்சையில் இருப்பான் என்ற நம்பிக்கை மூட நம்பிக்கை என்று கூட சொல்லலாம், ஆனால் அந்த காதல் அந்த நம்பிக்கைக்கும் கூட நம்பிக்கை கொடுத்து தேட சொன்னது..... அந்த நேரத்தில் பிரபாவின் அலைபேசி அழைத்தது.... எடுத்து பேசினால் மறுமுனையில் பொடியன்....
-->
"அண்ணா.... நான் பொடியன் பேசுறன்.... சாந்தன் அண்ணா, அங்க இருக்காரா?... வெகுநேரமா பேச முயற்சி பண்றன், அவரை தொடர்புகொள்ளவே முடிய இல்லை அண்ணா.... பக்கத்தில இருக்கிறாரா?"

"இல்லப்பா.... சாந்தன் ஒரு வேலை விஷயமா வெளியூர் போயிருக்கான்... வந்ததும் நீ பேசுனதா சொல்றேன், அவன் போன் ஏதோ பிரச்சினை போல" என்று அழைப்பை துண்டித்தான் பிரபா.... என்ன காரணத்தால் சாந்தன் சென்றான்? என்று தனக்கே விடை தெரியாத தருணத்தில் எதையும் சொல்லி சாந்தனின் நண்பர்களை குழப்ப வேண்டாம் என்று நினைத்தான் பிரபா.... ராமேஸ்வரம் சென்றிருக்கலாமோ? என்ற ஒரு சிறிய ஐயம் அந்த நொடியே சுக்கு நூறாக நொறுங்கியது.... தன்னிடம் கூறாமல் எங்கோ சென்றிருப்பவன் நிச்சயம் ராமேஸ்வரம் செல்ல மாட்டான் என்று எளிதாக யூகிக்க முடிந்த விஷயம் என்றாலும் பொடியன் பேசிய பேச்சால் அதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டான் பிரபா....
பொடியனின் பேச்சில் தெளிவான உண்மை தெரிந்தது.... அதன் மூலம் நிச்சயம் அவன் அங்கு சென்றிருக்க மாட்டான் என்பதை முடிவே செய்துவிட்டான் பிரபா.. ஒருவழியாக பல இடங்களிலும் பித்தன் போல தேடிய பிரபா , தேடல் தோல்வி அடைந்து வீடு திரும்ப மாலை நேரம் ஆகிவிட்டது..... பேருந்தில் வழக்கத்தைவிட அன்று கூட்டம் மிகுந்து காணப்பட்டது.... ஏற்கனவே பிரபாவை ஆட்கொண்டிருந்த குழப்பம், கோபம், தவிப்பு என்ற விஷயங்களுடன் இப்போது களைப்பு, பசி எல்லாம் சேர்ந்து இன்னும் வாட்டி எடுத்தது.... இந்த நேரத்தில் பேருந்தில் கூட்டம் நிறைந்து காணப்பட, எரிச்சல் மிகுந்து காணப்பட்டான் பிரபா.... அந்த நேரத்தில், சாந்தனை பற்றி யோசித்துக்கொண்டிருந்த பிரபாவின் தொடைகளை அருகில் நின்ற ஒருவனின் கை தடவியது.... அதை புறக்கணிப்பதை போல, வேறு பக்கம் திரும்பிகொண்டான் பிரபா... அப்போதும் அந்த நபர் விடுவதாக இல்லை.... பிரபாவின் அருகில் வந்து இன்னும் இன்னும் தன் கையை எல்லை மீறி கொண்டு செல்ல, ஏற்கனவே இருந்த கோபமும், எரிச்சலும் பிரபாவை அந்த நிமிடம் மிருகமாக்கியது.... எதையும் யோசிக்காமல் அந்த நபரை "பளார்" என்று அறைவிட்டான்.... அத்தோடு நில்லாமல், கோபமாக வார்த்தைகளை கொட்ட அங்கே கைகலப்பு ஆனது.... ஒருவழியாக வல்லம் வந்துவிட்டான் பிரபா.... அங்கிருந்து மாணிக்கத்தின் அலைபேசிக்கு அழைத்தால் , அது அனைத்துவைக்கப்பட்டிருக்கவே இன்னும் கடுப்பனான் பிரபா.... ஒரு மனிதனுக்கு ஒருநாள் எத்தனை சோதனைகள்தான் வரும் என்ற கணக்கில்லாமல் அன்று பிரபாவை வாட்டி எடுத்தது... ஒருவழியாக நடந்தே மூன்று கிலோமீட்டரை கடந்த பிரபா, வீட்டை அடைந்துவிட்டான்.... அம்மா மட்டும் வெளியே அமர்ந்திருக்க, மாணிக்கம் அலைபேசியை அணைத்துவிட்டு அவன் அறையில் படுத்திருப்பது பிரபாவிற்கு தெரியாது.... மாணிக்கம் அந்த நேரத்தில் வெளியே நின்றிருந்தால், அத்தனை கோபத்திற்கும் அவன் வடிகால் ஆகும் அளவிற்கு திட்டி இருப்பான்... அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் மாணிக்கம் நிம்மதியாக உறக்கத்தில் இருந்தான் .... அம்மாவை கவனிக்காதவனைப்போல மாடிக்கு தன் அறைக்கு சென்றான் பிரபா....
பிரபாவின் முகத்தில் தெரிந்த அந்த இனம் புரியாத மாற்றத்திற்கு அர்த்தம் புரியாமல் குழம்பினார் அம்மா.... மாடிக்கு சென்ற பிரபாவிற்கு, தாகம் தொண்டையை அடைத்தது.... அங்கு எப்போதும் கேனில் இருக்கும் நீரும் காலியாகிவிட்டது.... எரிச்சலுடன் கீழே வந்தவன் நேராக எதையும் கவனிக்காமல் சமயலறைக்கு சென்று தாகம் தீர , பசி தீர நீர் அருந்தினான்.... பிரபா ,மாடிக்கு சென்றதும் நேராக மாணிக்கத்தின் அறைக்கு சென்ற அம்மா அவனை எழுப்பி, பிரபாவின் வருகையை பற்றி கூறினார்.... இந்த தருணத்தில் பிரபா சமையலறையில் இருப்பதை அம்மா அறிந்திருக்கவில்லை.... அம்மாவும் மாமாவும் ஏதோ பேசுவது கேட்டாலும், அதை நின்று கேட்க பொறுமை இல்லாமல் வெளியே கிளம்பும் நேரத்தில் அவன் காதுகளில் விழுந்த பெயர் "சாந்தன்".... சாந்தனை பற்றி ஏதோ பேசுவதை உணர்ந்த பிரபா, சமையலறையில் நின்றவாரே அவர்கள் பேச்சை மேலும் கேட்டான்....
டேய் மாணிக்கம்.... பிரபா வந்துட்டான்டா... அவன் ரொம்ப கோவமா மாடிக்கு போறான்.... அந்த சாந்தன் பய எதுவும் சொல்லிருப்பானோ?” என்று பிரபா சமயலறைக்கு வந்தது தெரியாமல் மாணிக்கத்திடம் கூறினார் அம்மா....
நான் அப்பவே சொன்னேன், அவனை இன்னும் நாலு அடி போட்டிருந்தா அப்பவே ஊரைவிட்டு ஓடிருப்பான், தேவையில்லாம நீதான் அவன சமாதானப்படுத்துற மாதிரி செஞ்சு, அவன் மனசுல பயத்தை போக்கிட்ட....
அவன் அடிக்கு பயப்படுறவன் மாதிரி தெரியலடா, நான் கெஞ்சி கேட்டப்புறம்தான் அவன் அமைதியானான், யோசிச்சான்.... அதனால அவன் போய்டுவான்னுதான் நெனச்சேன்
தெரியலக்கா.... அனேகமா அந்த பயல காணும்னு ஆத்திரத்துல பிரபா இருக்கானோ என்னமோ..... ஒருவேள நம்ம மேல கோவம் இருந்தா அதை மறச்சு வக்கவல்லாம் பிரபாவுக்கு தெரியாது, நேரா வந்து நம்மகிட்ட சண்டை போட்டிருப்பான்.... அதனால அந்தப்பய போன வருத்தத்துலையும், கோவத்துலயும் இருக்கான்னு நெனக்கிறேன்.... நீ எதையும் காட்டிக்காம சாதாரணமா இருக்கா, பாத்துக்கலாம்என்று மாணிக்கம் சொல்லி முடிக்கையில், அந்த அறையின் கதவை படாரென்று திறந்தான் பிரபா.... அந்த சத்தத்தில் அதிர்ந்தது அந்த அறை.... நேராக உள்ளே வந்த பிரபா, சற்றும் யோசிக்காமல் மாணிக்கத்தை பளார் என்று அறைந்தான்.... இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மாணிக்கமும், அம்மாவும்.... அடுத்தகனமே எதைப்பற்றியும் யோசிக்காமல் அம்மா பிரபாவின் கன்னத்தில் அறைந்தார்..... அந்த வேகத்தோடு, “மனுஷனா நீ?.... மிருகம் மாதிரி நடந்துக்கற.....அவன் உன் தாய் மாமன்.... அறிவில்லையா உனக்கு?... புத்தி பேதளிச்சு போச்சா?” என்றார் அம்மா.....யாருக்கு அறிவில்லை? எனக்கா? உங்க ரெண்டு பேருக்குமா?..... அந்த அப்பாவிப்பய்யனை அடிச்சும், கெஞ்சியும் எங்கயோ போகவச்சிட்டீங்களே, நீங்க மனுஷத்தன்மையோட நடந்துகிட்டீங்களா?..... “ என்று அனல் கக்கும் வார்த்தைகளை கொட்டினான் பிரபா.... இத்தனை நேரம் பிரபாவின் அடியால் நிலைகுழைந்து போன மாணிக்கம், இப்போதுதான் கொஞ்சம் நிலைமையை உணர்ந்து செயல்பட தொடங்கினான்....
ஐயோ மாப்ள, நாங்க அவனை அடிக்கணும்னு நினைக்கவல்லாம் இல்ல.... பேசுரப்பவே கொஞ்சம் கைகலப்பாச்சு..... மத்தபடி அவன்கிட்ட பொறுமையாத்தான் பேசுனோம்என்று மென்மையாக பேசினான் மாணிக்கம்.... ஆனால், எத்தகைய சமாதானத்துக்கும் உடன்பட பிரபா விரும்பாதவனாக, “அடச்சீ... வாயை மூடு.... என்ன பேசுறதா இருந்தாலும் என்கிட்டே பேசவேண்டியதுதானே, அவன்கிட்ட பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?.... இதுக்கு மேல எதுவும் பேசுனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..... என்று காட்டம் குறையாமல் சீறினான் பிரபா....
அத்தனை நேரமும் கோபமாய் பேசிய அம்மா நிலைமை புரிந்து கொஞ்சம் அமைதியாக, “பிரபா புரிஞ்சுக்கோடா.... இது நமக்கல்லாம் சரிபட்டு வராது.... இந்த ஊர் என்ன பேசும்னு உனக்கு தெரியாதா?.... மானத்தோட வாழ முடியும்னு நெனக்கிரியா?.... காலம் காலமா நம்ம குடும்பத்தோட கவுரவம் என்னாவது?..... புரிஞ்சுக்கோடா.....என்று கண்ணீர் சிந்த, இந்த நேரத்தில் எத்தகைய ஆறுதலையும், எவ்வித சமாதானத்தையும் ஏற்கும் மனம் இல்லாத பிரபா, “உனக்கு இந்த ஊர், சொந்த பந்தம், சமூகம் இதல்லாம் மட்டும்தானே முக்கியம்.... இதுகளுக்காக என் வாழ்க்கையும், என் ஆசைகளும் எப்படி சீரழிஞ்சாலும் உனக்கு கவலை இல்ல, அப்படித்தானே?.... அப்படின்னா இனிமே நீ இந்த ஊரையும், சொந்த காரங்களையும் கட்டிக்கிட்டு அழுதுக்க.... இனி ஜென்மத்துக்கும் உங்க மூஞ்சில முழிக்க மாட்டேன்..... அதுக்காக நான் செத்துப்போவேன்னு நினைக்காதிங்க, என்னைக்காவது சாந்தன் என்னைத்தேடி வருவான்குற நம்பிக்கையில தஞ்சாவூர்லையே தான் இருப்பேன்..... அவன் வந்து உங்கள மனிச்சுட்டேன்னு சொல்றவரைக்கும், நீங்களா என்னை பார்க்க வந்திங்கன்னா, அப்புறம் நீங்க பாக்க முடியாத எடத்துக்கு நான் போய்டுவேன்என்று மிரட்டலும், கட்டளையும் கலந்து வார்த்தைகளை உதிர்த்துவிட்டு தஞ்சையை நோக்கி கிளம்பினான்.... மாணிக்கம் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அதற்கு இசைந்து கொடுக்காமல் பிரபா தன் முடிவில் தீர்மானமாக இருந்தான்....
இரண்டு வருடங்கள் பிரபாவுக்கும் அவன் குடும்பத்திற்கும் எத்தகைய ஒட்டுதலும் இல்லாமல் தஞ்சையில் வாழ்ந்தான் பிரபா.... படிப்பை முடித்துவிட்டு, அதே கல்லூரியில் பணியிலும் சேர்ந்துவிட்டான் பிரபா.... அவனுக்கு சென்னை, பெங்களூரு என்று பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும், சாந்தன் என்றைக்காவது வருவான் என்ற நம்பிக்கையில் அதே கல்லூரியில் பணிக்கும் சேர்ந்துவிட்டான் பிரபா.... சாந்தன் சென்றுவிட்டாலும், தினமும் அந்த கேண்டீனில் ஒரு மணி நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்..... அந்த ஒரு மணி நேரம் சாந்தனுடன் இருப்பதை போல உணர்வுகள் கொஞ்சம் மேலோங்கி இருக்கும்.... பலரும் இதை முட்டாள்தனமாக நினைத்தாலும், இப்படி சில முட்டாள்தனமான விஷயங்கள்தான் காதல்களில் சுவாரசியம் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டும்தானே தெரியும்.... பிரபா இந்த இரண்டு வருடங்களிலும் தன் அத்தனை இயல்புகளையும் மாற்றிக்கொண்டுவிட்டான்.... அதிகம் யாருடனும் பேசுவதில்லை, சட்டென கோபப்படுவான், எல்லாவற்றையும்விட அளவுக்கதிகமாக மதுவிற்கு அடிமையாகி விட்டான்.... இரண்டு வருடத்திலும் குடும்பத்தை சந்திக்கவே இல்லை பிரபா, ஆனால் அத்தனை நாள்களிலும் ஒருநாள் கூட பிரபாவை நினைக்காத நாள் இல்லை அவன் குடும்பத்திற்கு.... பிரபாவிற்கு நேரடியாக எவ்வித உதவியும் மாணிக்கத்தால் செய்ய முடியவில்லை என்றாலும், அவன் நண்பர்கள் மூலமாக பிரபாவிற்கு தெரியாமல் பொருளாதார ரீதியாகவும், மற்ற உதவிகளும் நிறையவே செய்தான் மாணிக்கம்.... இப்போது பிரபா குடியிருக்கும் வீட்டின் பாதி வாடகை கூட அவனுக்கே அறியாமல் மாணிக்கம் தான் கொடுத்து வந்தான்.... ஆனாலும், இரண்டு வருடங்களிலும் அவன் குடும்பத்தினர் மீது கொஞ்சமும் மனம் இறங்கவில்லை பிரபாவிற்கு.... எப்போதாவது அவன் குடும்பத்தினரை பற்றி அவன் நண்பர்கள் யாராவது பேசினாலும், அவர்களை உதாசீனப்படுத்துவான் பிரபா.... அதனால், அடுத்தடுத்து இதைப்பற்றி அவனிடம் அவன் நண்பர்கள் பேசுவதையும் நிறுத்திவிட்டனர்..... இது மட்டுமே இந்த இரண்டு வருடங்களிலும் அதிகபட்சமாக நடந்த ஒன்று, அதைவிட அதிகமாக சாந்தன் நினைவுகள் அவனை துளைத்தெடுத்தது..... 
...



1 comment:

  1. உயிர் ஐ உருகும் கதை
    ஆழமான காதல் கதை
    வழக்கம் போல கண்ணீர் முடிவு
    கதையோடு பயணிக்கும் ஒரு இனிய உணர்வு

    ReplyDelete