Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday 20 February 2013

"அதே குரல்...!!!!" - உளவியல் சிறுகதை....






“சாரி விவேக், முக்கியமான மீட்டிங்... அதான் அவாய்ட் பண்ண முடியல, போயிட்டு ஈவ்னிங் வந்திடுறேன்”
“பரவால்லடா, நான் நல்லாதான் இருக்கேன்.... நீ போ பாலா”
“சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ... உடம்பை பார்த்துக்கோ.... அப்புறம்...”
“போதும் போதும், நீ கெளம்பு..... உனக்கு லேட் ஆச்சு”
பாலா கிளம்பி கண்ணிலிருந்து அவன் உருவம் மறையும்வரை, கண் சிமிட்டாமல் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் விவேக்.... அதுவரை இயல்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டில் இப்போது மயான அமைதி குடிகொண்டிருப்பதை போல உணர்கிறான் விவேக்.... தனிமை, வெறுமை இரண்டும் கலந்த கலவையால் உண்டான ஒருவித மனதை பிழியும் உணர்வு அவனுக்குள்.... காற்றடைத்த பலூனில் ஓட்டை விழுந்ததைப்போல ஒரு சோர்வு அவனுக்குள்.... எப்போதும் அவன் தனிமையை இன்னும் கொடுமையாக்கும் அதே குரல் அவனுக்குள் இப்போதும் ஒலித்தது....
“என்ன விவேக் ஒரு மாதிரி இருக்க?.... உனக்கு காய்ச்சல்னு நீ நேத்து சொன்னதைக்கூட அவன் கண்டுக்காம, உன்னைய விட்டுட்டு போய்ட்டான் பாத்தியா?” இது ஒருசில வருடங்களாக அவனுக்குள் கேட்கும் குரல்தான்.... ஆனால், இந்த ஒரு மாதத்தில் ரொம்பவும் அதிகமாகவும், ஆக்ரோஷமாகவும் அவனை வழிநடத்துகிறது.... அது ஆவி போன்ற அமானுஷ்ய குரலா? அறிவியல் சார்ந்த ஹாலுசினேஷன் குரலா? என்பதைப்பற்றி அவன் அறியவில்லை....
“பரவால்ல.... நான்தான் அவனை போகசொன்னேன்.... தயவுசெஞ்சு நீ என்னைய குழப்பாம போய்டு” விவேக்கின் பேச்சில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.... அந்த நொடியே தொலைக்காட்சியை போட்டுவிட்டு, சன் மியூசிக் சேனலின் ஒலியின் அளவை அதிகமாக்கினான் விவேக்.... அதையும் மீறி அந்த குரல் அவனுக்கு மிகத்தெளிவாக கேட்டது....
“லூசா நீ?... உன்ன அவன் கண்டுக்கவே இல்ல.... உன்ன லவ் பண்ண மாட்டேன்னு சொன்னான், இப்போ உன்ன விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டு இருக்கான்... உன் நல்லதுக்குத்தான் சொல்றேன், நான் சொல்றத கேளு” அந்த குரலில் தன் மீதான அக்கறையை உணர்ந்தான் விவேக்.... தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, சமையலறையில் சென்று “மடக் மடக்கென்று” இரண்டு குவளை தண்ணீரை வாயில் ஊற்றி, அதில் பாதி அவன் உடலிலும் மீதி வயிற்றையும் அடைந்தது....
“புரிஞ்சுக்க.... அவனை உன் வழிக்கு கொண்டுவர அதான் ஒரே வழி” இன்னும் அதிகாரமாக அந்த குரல் கட்டளையிட்டது.... இப்போது தன்னை மறந்தான், அந்த குரலின் ஆணைக்கேற்ப செயல்பட தொடங்கினான்....
“அதோ அந்த கத்தியை எடு” எடுத்தான்....
“கண்ணை மூடிக்கொள்” மூடினான்....
“உன் கையை கிழித்துக்கொள்” கிழித்தான்....
லேசான கோடு மட்டுமே தெரிந்தது... கத்தியில் கூர்மை இல்லையா? அவன் கிழித்ததில் வேகம் இல்லையா? என்பது அவனுக்கு புரியவில்லை... இப்போது தன்னிலை மீண்டான்.... படக்கென்று கையில் வைத்திருந்த கத்தியை தூர வீசினான்... இப்போதுதான் அந்த கையில் கிழித்திருந்த கோட்டிலிருந்து மெல்ல ரத்தத்துளிகள் எட்டிப்பார்க்க தொடங்கியது... அழுகையும், அந்த குரலின் மீது ஆத்திரமும் வந்தது... இப்போது ரத்தமும் இன்னும் அதிகமாக வழியத்தொடங்கியது... உடனே தன் அலைபேசியில் பாலாவின் எண்ணை அழைத்தான்....
“ஹலோ பாலா” மறுமுனையில் அவன் குரல் கேட்கும் முன்பே,  ரத்தம் இன்னும் வேகமாக பீறிட, மயங்கி அங்கேயே விழுந்தான் விவேக்...
கண்களை மெல்ல விழித்தபோது, அவன் அதிகமாக யோசிக்க வேண்டா வண்ணம் மருத்துவமனையின் மருந்துகள் வாசம் அவன் நாசிகளை துளைத்தது.... விவேக்கின் கையில் கட்டப்பட்டிருந்த கட்டினை வருடிக்கொண்டே எதையோ யோசித்துக்கொண்டிருந்தான் பாலா.... கண்களை இப்போது விழித்தால் அந்த வருடல் நின்ருவிடுமோ! என்கிற தயக்கத்தில் இன்னும் மயங்கிய நிலையில் இருப்பவனாக கண்களை மூடிக்கொண்டே பாலாவின் அரவணைப்பை அனுபவித்தான்...
விவேக்கின் அருகில் வந்து நர்ஸ் ட்ரிப்ஸ் மாற்றிக்கொண்டிருக்க, அவரிடம் பாலா, “சிஸ்டர், எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்?” என்றான்...
“ஈவ்னிங் போய்டலாம்... இன்னும் அவர் மயக்கம் தெளியல, அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க சார்... இது மூணாவது டைம்னு நெனக்கிறேன்... முன்னல்லாம் சின்ன சின்ன காயத்தோட வருவீங்க, இப்போ நாலு தையல் போடுற அளவுக்கு காயம்... கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க சார்” செவிலியரின் வார்த்தைகளில் அக்கறையும், கோபமும் கலந்து தெரிந்தது.... அந்த பெண் சொல்வதைப்போல இது மூன்றாவது முறை கிடையாது, நான்காவது தடவை இப்படிப்பட்ட காயத்துடன் விவேக் இங்கு அனுமதிக்கப்பட்டிருப்பது....
விவேக், பாலா இருவரும் பள்ளி, கல்லூரி, பணி வரை ஒன்றாகவே பயணம் செய்பவர்கள்.... பாலா படிக்கும் கல்லூரியில் படிப்பதற்காக, சில நல்ல கல்லூரிகளின் வாய்ப்பை இழக்கும்போது அவன் பெற்றோர் கூட இவர்களின் நட்பிற்காக அதற்கு இசைவு தெரிவித்தனர்.... நகமும் சதையும், இரவும் பகலும் என்று எவ்வளவோ உவமைகள் கூறினாலும், இருவருடைய நட்பும் அதற்கு அப்பாற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.... இந்த பல வருட நட்பில் ஒரு விரிசல் விழுந்தது ஒரு மாதத்திற்கு முன்புதான்...
நட்பில் விரிசல் விழும் அளவிற்கு “நடந்தது என்ன?” என்று விஜய் டிவி கோபிநாத் போல யோசிக்க வேண்டாம்.... சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நள்ளிரவை தாண்டிய நேரத்தில் வீட்டின் வெளியே தன்னந்தனியே நிற்கும் வேப்பமரத்தின் அடியில் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தனர்.... சென்னையில் இன்னும் அதிசயமாக ஜீவிக்கும் சொற்ப மரங்களில், அவர்கள் வீட்டு வேப்பமரமும் ஒன்று.... இருவருமே ஐடி துறையில் வேலை பார்ப்பதால், அவ்வப்போது இப்படி மனம் திறந்து பேசிக்கொள்வது வாடிக்கை.... இன்னும் ஓரிரு நாட்களில் வரவிருக்கும் பௌர்ணமியின் அடையாளமாக நிலவு பிரகாசமாக ஒளிபரப்பி கொண்டிருந்தது.... மெல்லிய தென்றல் காற்றும், நிலவின் ஒளியும், தனிமையான சூழலும் விவேக்கின் நீண்டநாள் மனக்குமுறலை வெளிக்கொணர வைத்தது....
“பாலா, நான் உன்கிட்ட ரொம்பநாளா ஒருவிஷயம் சொல்லனும்னு நெனக்கிறேன், அதை சொன்னா நீ எப்டி எடுத்துப்பன்னு தெரியல....” வார்த்தைகளை மென்று விழுங்கினான் விவேக்...
“ஏ லூசு, என்ன ஆச்சு உனக்கு?... உன்ன எதுக்குடா நான் தப்பா எடுத்துக்க போறேன்?... சொல்லு...”
“இல்லடா... இவ்வளவு நாள் இதை மறச்சு உன்கிட்ட பழகினேன்.... இதை சொல்லாம ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.... இதை சொன்னபிறகு தயவுசெஞ்சு என்னைய விட்டு விலகிடாத” தலையை கவிழ்த்தியபடி அமர்ந்திருந்தான் விவேக்.... மெல்ல எழுந்து விவேக்கின் அருகில் அமர்ந்த பாலா, அவன் முகத்தை நிமிர்த்தி, “டேய் என்ன ஆச்சு உனக்கு?... நான் எதுக்காக உன்னை தப்பா நெனக்க போறேன்... இந்த உலகத்துலேயே நீதான் எனக்கு முக்கியமான ஒருத்தன்.... சொல்லுடா...” அவன் கைகளை பிடித்து இறுக்க அழுத்தி இன்னும் நம்பிக்கை கொடுத்தான் பாலா....
“அது.... அது வந்து.... நான் உன்ன லவ் பண்றேன்....”
“இவ்வளவுதானா?.... நானும்தான் உன்ன லவ் பண்றேன்.... ப்ரெண்ட்ஸ்’னா எப்பவும் லவ் இருக்கும்டா”
“ஐயோ.... அது இல்ல.... நான் உன்ன லவ் பண்றேன், உன்னோட வாழ்க்கை முழுக்க வாழ ஆசைப்படுறேன்... ஆமா, நான் ஒரே கே”
விவேக்கை பிடித்திருந்த பாலாவின் கைகள் விடுபட்டன.... உடல் அசையா வண்ணம் மெல்ல விவேக்கை விட்டு விலகி அமர்ந்தான் பாலா.... பதில் எதுவும் பேசவில்லை... ஒருசில நிமிடங்கள் நிசப்தம் நிலவியது.... காற்றில் அசையும் மரத்தின் இலைகளின் சத்தத்தை தவிர எந்த சத்தமும் கேட்கவில்லை... ஏதோ ஒரு தெருவில் நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் கேட்டது... நான்காவது வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.... அந்த ஐந்து நிமிட நிசப்தம், இத்தனை சப்தங்களையும் வெளிச்சம் போட்டு காட்டியது....
“சாரிடா” பாலாவின் பதில் வராத நிலையில், காரணமே இல்லாமல் மன்னிப்பு கேட்டான் விவேக்....
“இல்ல விவேக்.... இதுவரை உன்னோட எண்ணங்களுக்கு நானும் ஏதோ ஒரு விதத்துல காரணமா இருந்திருப்பேன்... இனி நாம கொஞ்சம் விலகி இருக்குறதுதான் நல்லது....” எது நடக்கக்கூடாது! என்று விவேக் நினைத்தானோ, அது நடக்கும் நிலைக்கு நிலைமை வந்துவிட்டது.....
“ப்ளீஸ் பாலா....நீ என்னைய லவ் பண்ணனும்னு நான் சொல்லல, அப்டி சொன்னா அது பெரிய தப்பு.... என் மனசுல இருக்குற விஷயத்த சொல்லனும்னு தோனுச்சு, அதான் சொன்னேன்....  உனக்கு விருப்பம் இல்லைன்னு எப்போ தெரிஞ்சுதோ, அப்பவே அந்த எண்ணத்தை மனசுல இருந்து தூக்கி எரிஞ்சுட்டேன்.... இனி நீ எப்பவும் என் பிரென்ட் மட்டும்தான்” இதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பது இருவருக்குமே தெரியும்... இத்தனை வருட காதலை எப்படி அவனால் ஒரே நொடியில் தூக்கி எறிய முடியும்?... ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் பாலாவின் நட்பை இழக்கக்கூடாது என்பதில் மட்டும் விவேக் ரொம்பவும் உறுதியாக இருந்தான்....
அரைமணி நேர விவாதத்திற்கு பிறகு, “இனி காதல் எண்ணம் கூடாது, எதையும் பாலாவிடம் மறைக்க கூடாது, இதைப்பற்றி வேறு எவரிடமும் பேசக்கூடாது” என்ற மூன்று முக்கிய கட்டளைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தான் விவேக்.... அன்றைய இரவின் அந்த விவாதத்தை இருவரும் அன்று இரவே மறந்துவிடுவதாகவும் ஒருவருக்கொருவர் உறுதி செய்துகொண்டார்கள்.... அது அவ்வளவு எளிதா என்ன?.... அடுத்த நாளிலிருந்து சத்தமில்லாத மனப்போராட்டம் தொடங்கியது....
பொதுவாக போராட்டங்கள் என்றால் ரத்தமும், சத்தமும் மிகுந்து காணப்படும்... ஆனால், மனப்போராட்டங்களில் மட்டும்தான் நிசப்தம் குடிகொண்டிருக்கும்.... ஆனால், ஆயிரம் புயல்கள் விட்டு சென்ற பாதிப்பை ஒரு மனப்போராட்டம் மனதிற்குள் மிக எளிதாக ஏற்படுத்திவிடும்.... அன்றைய இரவுக்கு பிறகும் அப்படித்தான் நடந்தது... விடியும்போதே அதற்கான முதல் அஸ்திவாரம் விதியால் போடப்பட்டது...
அன்றைய காலை விவேக்கிற்கு பாலா “குட் மார்னிங்” சொல்லவில்லை... இதே “குட் மார்னிங்” நேற்று சொல்லப்படாமல் இருந்திருந்தால் நிச்சயம் அது விவேக்கால் கண்டுகொள்ளப்பட்டிருக்காது.... ஆனால், நேற்றைப்போல இன்று இல்லையே...
“குட் மார்னிங் சொல்லவில்லை”, “குட் நைட் சொல்லவில்லை” போன்ற சிறுசிறு ஏமாற்றங்கள் பாலா அறியாமல் விவேக்கிற்கு உண்டானது.... ஆனால், உண்மையில் பாலா விவேக்கிடம் எப்போதும் போல் இல்லை என்பது அவனுக்கே தெரிந்தது.... பழையபடி இப்போது விவேக்கை  இயல்பாக தொட்டுப்பேச பாலாவிற்கு தயக்கம் உண்டானது, கனிவான பேச்சுகள் காதலை உண்டாக்குமோ? என்கிற அச்சத்தில் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்தினான்.... இந்த தயக்கங்கள் விவேக்கால் அப்பட்டமாக உணர முடிந்தது.... விவேக்கை விட்டு பாலா விலகுவதைப்போன்ற தோற்றத்தை விவேக்கிற்குள் உண்டாக்கியது.... இப்படி சிறுசிறு விரிசல்கள் விரிவாகி பெரிய பிரிவினையை உண்டாக்கிவிட்டது இருவருக்குள்ளும்.... “பட்டாம்பூச்சி விளைவு” “கேயாஸ் தியரி” போன்றவற்றை எவ்வளவோ நம்ப மறுத்தாலும், அவை உண்மைகள் என்பது இதைப்போன்ற நட்பின் பிரிவில்தான் உணரமுடிகிறது....
இந்த ஒரு மாத இருவரின் இடைவெளியை ரொம்ப சாமர்த்தியமாக தனக்கு சாத்தியமாக்கி கொண்டது விவேக்கிற்கு கேட்கும் “அந்த குரல்” மட்டும்தான்.... ஓரிரு வருடங்களாக விவேக்கிற்குள் கேட்கும் அதே குரல், இந்த ஒரு மாதத்தில் அவனை வேறு விதத்தில் ஆட்டிப்படைக்கிறது.... ஒருமுறை விவேக்கிற்கு உடல்நிலை சரி இல்லாத நேரத்தில், இருவருக்கும் இடையிலான ஒரு விரிசல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.... விவேக்கை கவனிப்பது முதல், அனுசரணையாக பேசுவது வரை பழைய “பாலாவை” விவேக்கிற்கு பெற்றுத்தந்தது... ஆனால், அது நிலைக்கவில்லை.... உடல்நிலை சரி ஆனபிறகு, பழையபடி விரிசல் தோன்றியது... இதை காரணமாக வைத்தே அந்த குரல் விவேக்கை இம்சித்தது....
உடலில் அவ்வப்போது காயங்களை ஏற்படுத்த வைத்து, அதன்மூலம் பாலா விவேக்கிடம் அனுசரணையாக நடப்பதை ரசிக்க வைத்தது அந்த குரல்... நல்லதோ கெட்டதோ அந்த குரல் சொல்லும் ஆலோசனையால் பாலா தன்னுடன் இணக்கம் காட்டுவதால், அந்த குரலை அவனால் வெறுக்க முடியவில்லை.... அப்படி இம்முறை கத்தியால் உண்டாக்கிய காயத்தால் மருத்துவமனையில் நான்காவது முறையாக அனுமதிக்கப்பட்டிருக்கிறான் விவேக்....
மருத்துவர் வந்ததும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, படுக்கையில் படுக்க வைக்கப்பட்டான்.... இப்போதுவரை “ஏன் இப்படி செய்தாய்?” என்று விவேக்கிடம் கேட்கவில்லை... கேட்டாலும், “அமானுஷ்ய குரல் சொன்னது, யாரோ கையை கிழித்தார்கள்” என்று மூன்று முறையும் சொன்ன விஷயத்தைத்தான் இம்முறையும் சொல்லப்போகிறான் என்பதை பாலா அறிவான்....
சாப்பிட்டு முடித்தபின் விவேக் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை பிரித்து, கிளாஸ் தண்ணீருடன் விவேக்கிடம் கொடுத்தான் பாலா.... மாத்திரை சாப்பிட்டு முடித்து தலையணையை ஒருக்கணித்து மெல்ல எழுந்து அமர்ந்தான்... தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பேப்பரை பிரித்து அதனுள் இருந்த திருநீறை எடுத்து விவேக்கின் நெற்றியில் பூசிவிட்டான்... தனக்குள் இருந்த துக்கத்தால் விவேக் கண்கள் கலங்க, அதை திருநீறு கண்ணில் பட்டதால் என்று நினைத்துக்கொண்டு, “ஓஹ்.... சாரிடா.... ” என்று பதறியதை விவேக் ரசித்தான்.... தனக்காக பாலா பதறுவதை உள்ளூற ரசித்தான்....
பொதுவாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்ந்த பாலாவை கூட இந்த ஒரு மாதமும் அதிதீவிர ஆன்மிகவாதியாக ஆக்கிவிட்டது அந்த குரல்.... “கருப்பு சட்டை” போட்ட தி.க தொண்டனைப்போல இருந்தவனை, “சிவப்பு” சட்டை போட்ட மேல்மருவத்தூர் பக்தனாக ஆக்கிவிட்டது இந்த ஒருமாத நிகழ்வுகள்....
ஏதோ ஒரு அமானுஷ்ய குரல் எப்போதும் ஒலிப்பதாகவும், அவ்வப்போது ஒரு மங்கலான உருவம் கண்முன் தெரிவதாகவும் விவேக் சொல்லும்போது அதை எப்படி அணுகுவது? என்று புரியாமல் இப்படி கடவுளை நம்பத்தொடங்கினான் பாலா... தன் பயத்தை விவேக் அறிந்திடா வண்ணம், அவன் கண்முன்னால் அவனுக்கு ஆறுதல் கூறினாலும், மனதிற்குள் ததும்பி நிற்கும் அச்சத்தை போக்க கடவுளைத்தான் நாடினான்.... இதைப்பற்றி வாட்ச்மேன் வேலு அண்ணன், மெஸ் ராஜா, பக்கத்து வீட்டு பட்டாபி மாமா என்று ஆளாளுக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு சொல்வதாக நினைத்துக்கொண்டு மேலும் அச்சத்தைதான் அதிகமாக்கினார்கள்....
“உன்கிட்ட முன்னமே சொல்லாம விட்டுட்டேன், அந்த வீடு இருந்த இடத்துல ஒரு பொண்ணு செத்துப்போச்சாம்பா.... மந்திரிச்ச தகடு ஒன்னு வாங்கி மாட்டி வச்சிடு, எல்லாம் சரி ஆகிடும்”
“நம்ம குமார் அண்ணாச்சிக்கு கூட இப்டிதான் இருந்துச்சாம், நாகூர்ல போய் மந்திரிச்சுட்டு வந்தா சரி ஆகிடும்”
“ரொம்பநாளாவே நம்ம தெருல இப்டி அமானுஷ்யமா ஏதோ நடக்குதுப்பா.... குறி சொல்ற ஆளு பாத்தாதான் சரி ஆகும்”
இப்படி ஆளாளுக்கு சொல்லி பீதியைதான் இன்னும் அதிகமாக்கினர்.... இந்த பயத்தின் விளைவாக வீட்டிற்குள் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலான கடவுள்கள் நுழைந்தனர்... படங்கள், பிரசாதங்கள், கயிறுகள், தகடுகள் என்று வெவ்வேறு வடிவத்தில் நுழைந்த எந்த கடவுளாலும் அந்த குரலுக்கு எதிர் குரல் கொடுக்கமுடியவில்லை....
கடவுளை மனதிற்குள் வணங்கிவிட்டு விவேக்கின் அருகில் கட்டிலில் அமர்ந்து புத்தகத்தை புரட்டினான் பாலா....
இப்போதுவரை எதுவும் பாலா கேட்காததால் மனம் உறுத்திய விவேக், “சாரிடா” என்றான்....
புத்தகத்தை மூடிவிட்டு விவேக்கின் பக்கம் திரும்பி அமர்ந்து, அவன் கையை பிடித்து, “பரவால்லடா....” என்றான்....
“இப்பவும் அதே பிரச்சினை தாண்டா... என்னை மீறி நடந்திடுச்சு...”
“மறுபடியும் அதே குரலா?”
“ஹ்ம்ம்... ஆமா.... “
“நான் சொன்னபடி யோகா செஞ்சியா?”
“அது.... ஒரு ரெண்டு நாளா பண்ணல, மனசை ஒருநிலை படுத்த முடியலடா”
“ட்ரை பண்ணுடா.... எல்லாம் மனசுதான் காரணம்... ஈஸியா இதுலேந்து நீ வெளில வந்திடலாம்”
விவேக்கிற்கு பாலா சொன்ன தீர்வுதான் இந்த யோகா.... இதுவும் யாரோ சொன்ன யோசனைதான்... பிரபல தியான அமைப்பிடம் கற்றுக்கொண்ட “கார்ப்பரேட்” யோகா தான் விவேக்கையும் கற்கவைத்தான்... ஆனால், அப்படி தியானம் செய்தும் ஒரு முன்னேற்றத்தையும் விவேக் உணரவில்லை... பெரும்பாலான தனிமைகளை நாளுக்கு நாள் அந்த குரல் தன்வசப்படுத்திக்கொண்டே இருந்ததை இந்த யோகாவால் மாற்றமுடியவில்லை...  அதனால், தியானம் செய்ய மனமில்லாமல் இடையிலேயே நிறுத்திவிட்டான்.... பாலாவிற்கு கடைசியாக இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த யோகா மட்டுமே, அதனால் பாலாவின் நம்பிக்கையை கலைக்க வேண்டாம் என்று நினைத்தவனாக , அவனுக்காக இந்த தியானத்தை மீண்டும் தொடர்ந்தான்  விவேக்...
மறுநாள் காலை இட்லியை இடது கையில் வைத்திருந்த ஸ்பூனால் சாப்பிட விவேக் தடுமாறுவதை கண்டான் பாலா... அப்போதுதான் விவேக்கிற்கு வலது கையில் பட்டிருந்த காயமும், அதற்கு கட்டப்பட்டிருந்த கட்டும் பாலாவிற்கு நினைவுக்கே வந்தது.... உடனே பதறியவனாக, “ஏய் லூசு, ஏன் கஷ்டப்படுற?... என்னைய கூப்டா நான் ஊட்டிவிட மாட்டேனா?” என்று தட்டை தன் கையில் வாங்கி எவ்வித யோசிப்பும் இல்லாமல் ஊட்டிவிட தொடங்கினான்  பாலா....
விவேக்கிற்கு மெய் சிலிர்த்தது.... இந்த ஒரு மாதத்தில் இப்படி ஒரு நெருக்கம் பாலாவுடன் கிடைக்கவில்லை... இது சரியா? தவறா? என்று அவன் மனம் யோசிக்க விரும்பவில்லை... பாலாவின் கை தன் உதட்டில் படும்போது ஒருவித கிளர்ச்சி அவனுக்குள் எழுந்தது.... காலம் முழுக்க பாலா இப்படி ஊட்டிவிடுவான் என்றால் கையை முழுமையாக இழப்பதற்கு கூட தயாராக இருப்பதைப்போல விவேக்கின் மனம் பூரிப்படைந்தது.... “ஆண்டவா! இந்த காயம் இன்னும் ஒருவாரம் ஆறிடாம பார்த்துக்கோ” மனதிற்குள் பிராத்தித்துக்கொண்டான் விவேக்... சுவற்றில் மாட்டியிருந்த கடவுள்கள் நிச்சயம் இதைக்கேட்டு திகைத்துத்தான் போயிருப்பார்கள்... இட்லியும் சாம்பாரும் கூட இவ்வளவு தித்திக்கும் என்பதை பாலாவின் கைபட்டதும்தான் உணர்கிறான் விவேக்....
விவேக்கிற்கு ஊட்டிவிட்டு குளிக்க சென்றுவிட்டான் பாலா....
“என்னடா விவேக்! ரொம்ப சந்தோஷமா இருக்க போல?” அதே குரல்....
“அய்யய்யோ வந்துட்டியா?” பதற்றத்தில் விவேக்....
“நான் சொன்னத கேட்டதால்தான் உனக்கு இவ்வளவு இன்பமும் இப்போ கெடச்சுச்சு, அதை மறந்துடாத”
“சரி சரி... இப்போ நீ போ....”
“போறேன்.... ஒருவேள உனக்கு வலது கைல காயம் வந்ததுக்கு பதிலா, இடது கைல வந்திருந்தா?”
“வந்திருந்தா?”
“அடப்போப்பா! எனக்கு வெக்கமா இருக்கு”
குரல் சொன்னதின் உள்ளர்த்தத்தை உணர்ந்த விவேக்கும் மனதிற்குள் சிரித்தவாறு, “அடக்கருமம் பிடிச்ச குரலே!.... ஓடிப்போ” என்று துரத்தினான்.... ஆனாலும், அந்த குரல் சொன்னதை நினைத்து தனக்குள் வெகுநேரம் சிரித்துக்கொண்டான்.....
அன்று மாலை, விவேக்கிடம் பாலா, “எங்கயாச்சும் வெளில போலாமா விவி” என்றான்.... “விவி” என்று இந்த ஒருமாதத்தில் இப்போதான் சொல்கிறான் பாலா.... மகிழ்ச்சியான தருணங்களிலும், விவேக்கின் மீது பாசம் மிகுந்து காணப்படும் நேரங்களில் தான் இப்படி அழைப்பான் பாலா.... இப்போது இந்த வார்த்தையை கேட்டதும் விவேக்கின் மனதிற்குள் “ஆயிரம் பட்டாம்ப்பூச்சிகள் பறக்கும்” உணர்வை கொடுத்தது.... கூடவே அந்த குரலின் ஹம்மிங்கில் “சொட்ட சொட்ட நனையவைத்தாய்....” பாடல் தனக்குள் ஒலித்தது....
“என்னடா நான் கேட்டுட்டே இருக்கேன், என்ன ஆச்சு?” மீண்டும் விவேக்கை குலுக்கியபடி கேட்டான் பாலா....
“ஓ தாராளமா போகலாம்டா.... என்ன திடீர்னு?”
“ஒண்ணுமில்ல.... உன் மனசுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்ல, அதான்... சரி எங்க போகலாம்?... தியேட்டர், கோவில், மால் எங்க போகலாம்?”
“அங்கல்லாம் வேணாம்.... பீச் போகலாமே”
“ஓகே... கெளம்பு, போகலாம்” இருவரும் கடற்கரையை நோக்கி கிளம்பினர்.... அது என்ன காதல் வந்தாலே கடற்கரைதானா? என்று நீங்கள் கேட்பது புரியுது.... பரபரப்பான சென்னை மாநகரில் வாகன நெரிசல் இல்லாத இடம் கடற்கரை மட்டும்தானே.... அதுமட்டுமில்லாமல் இந்த கடற்கரை, நிலா, ரோஜாப்பூ இவையெல்லாம் காதலுக்காகவே கடவுள் உருவாக்கிய விஷயங்கள்.... ஏன்? எதற்கு உருவாக்கினார்? என்று யோசிக்க கூடாது.... இதை அனுபவிக்கிறதுக்கு பதிலா ஆராயக்கூடாது.... ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் இருவரும் அமர்ந்தனர்....ஒருசில குதிரைகள், நான்கைந்து துப்பட்டா போட்டு மறைத்த காதலர்கள், பரந்து விரிந்த கடலில் எதையோ வெகுநேரமாக தேடிக்கொண்டிருக்கும் ஒரு தாத்தா தவிர அந்த பகுதியில் வேறு யாருமில்லை....
ஐந்து நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... கடற்கரை மணலில் குழந்தைகள் வீடு கட்டி விளையாடுவதைப்போல ஏதோ செய்தான் பாலா... வானமும், கடலும் இணையும் ஒரு புள்ளியை கண்களை அகல விரித்து தேடிக்கொண்டிருந்தான் விவேக்....
“நான் வேணும்னா ஊருக்கு போய்டவா பாலா?” விவேக்கின் குரலில் தயக்கம் தெரிந்தது....
விவேக்கின் பக்கம் திரும்பிய பாலா, “ஏண்டா? என்னாச்சு?.... வீட்டு ஞாபகம் வந்திடுச்சா?” என்றான்....
“இல்லடா.... தேவையில்லாம உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்குறேன்.... ஒரு மாசத்துல நீ ஏழெட்டு நாள் லீவ் போட்டுட்ட... அதான்”
“போடா நாயே.... இதுல என்னடா கஷ்டம்?... இதைவிட அதிகமா நீ எனக்கு பாத்திருக்க... எனக்காக ஒரு செமஸ்டர் எக்ஸாம் கூட போகாம என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போன.... நீ ஏன் இப்ப இப்டி பிரிச்சு பார்க்குற?.... இப்போ ஊருக்கு போனா அப்பா அம்மாவுக்கு தேவையில்லாத பயம், கவலை வரும்... அதனால, உனக்கு சரி ஆகுற வரைக்கும் கொஞ்ச நாள் இங்கேயே இரு, அப்புறம் பார்த்துக்கலாம்” பாலாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் நெகிழ்ந்து போனான் விவேக்... இப்படிப்பட்ட வார்த்தைகள்தான் அவனுக்கு தேவைப்பட்டது.... இந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டே இருந்தாலே தன் மனம் நிம்மதி அடைந்துவிடும், பிறகெதற்கு யோகா? என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் விவேக்.... ஆனால்,  அந்த நேரம் பார்த்து அலுவலகத்திலிருந்து பாலாவிற்கு அழைப்பு வர, விவேக்கின் ஆசைக்கு அணைபோட்டது அந்த அழைப்பு..... அதில் பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்றான் பாலா....
விவேக் இப்போது பாலா சொன்ன வார்த்தைகளை தனக்குள் நினைத்துக்கொண்டான்... கடல் அலையைவிட, அவன் மனதினுள் உண்டான அலைகள் அதிக சத்தம் எழுப்பின....
“என்னப்பா ரொம்ப சந்தோஷமா இருக்க போல?” இங்கும் வந்துவிட்டது அதே குரல்....
“வந்துட்டியா?.... இங்கயாவது என்னை நிம்மதியா இருக்க விடு....”
“ஏன் இப்டி கோவிச்சுக்கற?... நான் எது சொன்னாலும் உன் நல்லதுக்குதான் சொல்வேன்.... பாலா உன்மேல உண்மையாவே அக்கறையா இருக்கான்னு நெனக்கிறியா?”
“ஆமா... அதுல என்ன சந்தேகம்?”
“மிகப்பெரிய முட்டாள் நீ”
“கோபத்தை கிளப்பாத... ஓடிடு” விவேக்கின் வார்த்தைகளில் வேகம் தெரிந்தது....
“என்கிட்ட கோபப்படாத.... அவனுக்கு நீ செஞ்ச விஷயங்களுக்கு பதிலாதான் இப்பவும் அவன் உனக்கு பண்ணிட்டு இருக்கான்.... இதோ இந்த கடல்ல நீ குதிச்சா, அவன் உயிரையும் பொருட்படுத்தாம உன்ன காப்பாத்துவான்னு நெனக்கிறியா?”
“நிச்சயம் காப்பாத்துவான்.... அதுல சந்தேகமே இல்ல”
“அதை நிரூபிச்சு காட்டு.... எழுந்திடு” எழுந்தான்....
“கடலை நோக்கி போ” நடந்தான்...
இடுப்பு வரை ஆழத்திற்கு சென்ற சமயம், அவனை பின்னாலிருந்து ஒரு கை இழுத்தது... அப்போதுதான் தன்னிலை உணர்ந்தவனாக திரும்பி பார்த்தான் விவேக்... அது பாலாதான்...
“எங்கடா போற?... அலை எவ்வளவு வேகமா வருது பாரு, வா கரைக்கு” விவேக்கின் கைகளை பிடித்து அழைத்து கரையை நோக்கி நடந்தான் பாலா.....
“இது என்னடா சின்ன புள்ளைங்க மாதிரி ஆசை உனக்கு?... இப்போ என் டிரெஸ்சும் நனஞ்சிடுச்சு பாரு.... வா வீட்டுக்கு போகலாம்” நிகழ்ந்த விபரீதங்கள் எதுவும் தெரியாமல் வீட்டிற்கு அழைத்து சென்றான் பாலா....
அன்று இரவு வெகுநேரம் விவேக்கிற்கு அந்த மாலையின் சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது.... பாலா கொஞ்சம் தாமதித்திருந்தாலும் இந்நேரம் இப்படி யோசிப்பதற்கு உயிர் இருந்திருக்காது.... நள்ளிரவை தாண்டியும் தூக்கம் என்பதே வரவில்லை... புரண்டு படுத்தான், கண்களை மூடிக்கொண்டு முன்னூறு வரை எண்ணினான்.... ஆனால் தூக்கத்திற்கான அறிகுறி கூட வரவில்லை....  ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பாலாவை எழுப்பி, “பாலா, தலைவலி மாத்திரை எங்க இருக்கு?” என்றான்...
தூக்கத்திலிருந்து விடுபட்டு, கண்களை தேய்த்தவாறே எழுந்து சென்று  மாத்திரையும், நீரும் விவேக்கிடம் கொடுத்தான் பாலா.... அதை வாங்கி விழுங்கியவன் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான்...
“ரொம்ப வலிக்குதா விவேக்?”
“ஹ்ம்ம்... ஆமாடா”
அருகில் இருந்த தைலத்தை எடுத்து விவேக்கின் நெற்றியில் மசாஜ் செய்வதை போல தேய்த்துவிட்டான்.... சில நிமிடங்களுக்கு பிறகு விவேக்கின் தலையில் கையை வைத்தவாறே உறங்கிவிட்டான் பாலா.... விவேக்கிற்கு தலை வலியும் இல்லை, மாத்திரை இருக்குமிடம் தெரியாமலும் இல்லை... ஆனாலும், தன் மனக்குழப்ப தருணங்களில் இப்படி ஏதேனும் காரணத்தின் மூலம் பாலா தன் மீது அக்கறை செலுத்தும்படி செய்துவிட்டால், மனமும் உடலும் நிம்மதி அடையும் என்பது அவன் நம்பிக்கை... அதனால் பல இரவுகளில், பற்பல காரணங்களின் பெயரில் பாலா எழுப்பப்பட்டிருக்கிறான், கொஞ்சமும் சலிப்பில்லாமல் விவேக்கிற்கு பணிவிடைகளை ஒரு கடமையாக செய்திருக்கிறான்....
இப்போது விவேக்கின் மனம் அமைதி ஆனதைப்போல உணர்வு அவனுக்குள் உண்டானது... அதன் தொடர்ச்சியாக நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது....
விடிந்தது....
அன்றைய தினசரியை எடுத்து ஹாலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான் பாலா.... இன்னும் விவேக் எழுந்திருக்கவில்லை.... வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, கதவை திறந்த பாலாவின் முகமெல்லாம் பல்லாக சிரித்தபடி வந்தவனை உள்ளே அழைத்தான்....
“வாடா பைத்தியக்கார டாக்டர் பைய்யா” சிரித்துக்கொண்டே வந்தவனின் பையை வாங்கி உள்ளே வைத்தான்.....
“டேய் அசிங்கப்படுத்தாத.... தமிழ்ல சொல்லனும்னா மனநல மருத்துவர்’னு சொல்லுடா..... இதை கேட்டா மத்தவங்க வேற மாதிரி நெனக்க போறாங்க”
“சரி சரி பொழச்சு போ.... சொல்லுங்க மனநல மருத்துவரே, தங்களின் திடீர் விஜயத்துக்கு காரணம் என்னவோ?”
“இங்க ஒரு செமினாருக்கு வந்தேன்.... ஈவ்னிங் ட்ரெயின்ல ஊருக்கு போறேன்.... அதுவரைக்கும் உங்கள பாத்துட்டு போகலாம்னு வந்தேன்... எவ்ளோ நாள் ஆச்சுல்ல?”
இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், வந்தவரை பற்றிய ஒரு சிறு முன்னரை சொல்லிடுவோம்..... வந்தவனின் பெயர் சர்வா... இருவரும் பேசியதிலிருந்தே இவன் மனநல மருத்துவம் படித்துக்கொண்டிருப்பது புரிந்திருக்கும்.... பாலா மற்றும் விவேக்கின் பள்ளி காலத்து நண்பன்...
சரி, இருவரும் ஒருவாராக பழைய நினைவுக்கடலில் நீந்தி கரையை அடைந்து விட்டனர்... அவர்கள் வழியே கதைக்குள் செல்லலாம்....
“என்னடா வீடு முழுக்க ஒரே ஆன்மிக நெடி தூக்கலா இருக்கு?” வீட்டு சுவர்களில் மாட்டியிருந்த படங்களை பார்த்தவாறே கேட்டான் சர்வா....
“எல்லாம் விதிடா... பாவம், நம்ம விவேக்குக்கு தான் உடம்பு சரி இல்லை, அதான் இவ்வளவும்”
“என்னடா ஆச்சு அவனுக்கு?... ஆளையே காணுமே?”
“அவன் தூங்குறாண்டா... பாவம், அவன் சரியா தூங்கியே ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு” வந்ததும் வராததுமாக இதுவரை தேக்கி வைத்திருந்த ஒரு மாதத்து நிகழ்வுகளையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் பாலா....
“அடப்பாவமே, இவ்வளவு நடந்திருக்கா?.... விவேக்கா கே?... நம்பவே முடியலடா.... பாவம், ஹாலுசினேஷன் வேற இருக்கு போல.... நீ நெனக்கிற மாதிரி அந்த குரல் ஆவியோ, பிசாசோ இல்ல.... அது அவன் மனசுதான்.... இதுக்கு பேருதான் ஹாலுசினேஷன்’னு சொல்வாங்க... பார்த்ததா சொன்ன உருவம் கூட அப்படிப்பட்டதுதான்.... ஏதோ டிப்ரஷன் இருக்கும்னு நினைக்குறேன்.... ஈசியா கியூர் பண்ற விஷயம்டா இது... அடுத்த வாரம் அவனை நீயே எங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வா.... ட்ரீட்மெண்ட் கொடுத்திடலாம்”
“டேய், ட்ரீட்மெண்ட்’ஆ?.... அப்போ அவனுக்கு பைத்தியமா?”
“நீதான் பைத்தியம்.... உடம்புக்கு காய்ச்சல், தலைவலி வர்ற மாதிரி மனசுக்கு வர்ற சில அறிகுறிகள் தான் இந்த மாதிரி விஷயங்கள்... ஆரம்ப ஸ்டேஜ்’லேயே ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டா ஈசியா கியூர் பண்ணிடலாம்... படிச்ச நீயே ஆவி, பிசாசுன்னு நம்பிட்டு இவ்வளவு நாள் இதை வளர விட்டுட்ட... இன்னும் நம்ம ஆளுங்க இதுல நெறைய மாறனும்”
“ஓ சாரிடா.... ஹாஸ்பிட்டல், டாக்டர்’னு போக தயக்கமா இருந்துச்சு... அதுவுமில்லாம இந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்குறப்போ, ஷாக் ட்ரீட்மெண்ட்’லாம் கொடுப்பாங்கலாமே?... அதான் தானாவே சரி ஆகிடும்னு இருந்திட்டேன்.... தியானம்’லாம் செய்ய சொல்லி மாத்திடலாம்னு நினச்சேன்”
“நாசமா போச்சு.... ஹெல்த்தி மைன்ட்’க்கு தான் யோகா, தியானம்’லாம் நல்ல பலனை தரும்... தியானம் வெறும் பயிற்சிதான்... மனநல பிரச்சினைகளுக்கு தேவை பயிற்சிகள் இல்ல, ட்ரீட்மென்ட் தான் தேவை... அதுமட்டுமில்ல, நீ நெனக்கிற மாதிரி ஷாக்’லாம் எல்லாத்துக்கும் கொடுக்க மாட்டாங்க, அது ரொம்ப அரிதாத்தான் கொடுப்பாங்க.... சைக்கொதெரப்பி கொடுத்து ஈசியா சரி பண்ணிடலாம்...”
“ஓ அப்டியா?.... சரிடா, நிச்சயம் அவனை நான் அடுத்த வாரம் கூட்டிட்டு வரேன்....”
“சரி நான் போய் அந்த தூங்கு மூஞ்சி பையனை பார்த்துட்டு வரேன்” சொல்லிவிட்டு எழுந்த சர்வா படுக்கை அறைக்குள் சென்றான்... கைகளில் காயத்திற்கான கட்டு கட்டி இருந்தது... கண்களுக்கு கீழே காணப்பட்ட கருவளையம், விவேக்கின் பல நாள் தூக்கமின்மையை சத்தமின்றி சொன்னது.... கைகளையும், கால்களையும் குன்னிக்கொண்டு ஒரு குழந்தையை போல உறங்கிக்கொண்டிருந்தான் விவேக்.... அதை சில நொடிகள் ரசித்தபடியே நின்ற சர்வாவை பார்த்த பாலா, “என்னடா அப்டியே நிக்குற?... எழுப்பலையா?” என்றான்....
“இல்லடா.... இன்னும் நம்ம விவேக் கொஞ்சம் கூட மாறலல்ல?... ஸ்கூல்ல பாத்த அதே மாதிரி இருக்கான்டா....” சிரித்தான்.... இந்த பேச்சின் சத்தத்தில் எழுந்துவிட்டான் விவேக்....
சர்வாவை பார்த்ததும் ஆச்சரியத்தில் துள்ளி எழுந்து கட்டிலில் அமர்ந்தான்... கிண்டலும், கேலியுமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கவலை மறந்து உற்சாகமானான் விவேக்.... மதிய உணவை ஒன்றாக அதே உற்சாகத்துடன் முடித்தபிறகு மூவரும் பேசிக்கொண்டே இருந்தனர்... மூவரும் என்று சொல்வதை விவேக் ஏற்றுக்கொள்ள மாட்டான்.... அதற்கு காரணம், பாலாவும் சர்வாவும் மட்டுமே அதிதீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.... அவ்வப்போது தலையை அசைத்தும், மென்மையாக சிரித்தும் மட்டுமே அந்த உரையாடலில் தன் பங்களிப்பை செலுத்தினான் விவேக்.... சர்வா பாலாவுடன் இவ்வளவு அளவவாவுவதை விவேக் ரசிக்கவில்லை..... அதற்கு மேல் அங்கு  அமர்ந்திருந்தால் மனக்குழப்பம் உண்டாகும் என்கிற ஒரு பயத்தாலும், முந்தைய நாள் இரவின் தூக்கமின்மையால் உண்டான சோர்வாலும் அறைக்குள் சென்று படுத்துவிட்டான் விவேக்...... கண்களை மூடி ஒருவழியாக தூங்கியும் விட்டான்....
கண்விழிக்கும்போது நேரம் மாலையை நெருங்கி இருந்தது.... வெளியே இன்னும் இருவரின் பேச்சுக்குரல் கேட்டது....
நேராக அறையிலிருந்து வெளியே வந்தவன், சமையலறைக்குள் சென்றான்.... அங்கிருந்த பாலை கிண்ணத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தான்....
அதே குரல் மீண்டும் இப்போது.... தன்னை மறந்து நின்றான்.... விவேக்கின் தோளை சர்வா அசைத்தபோதுதான் தன் நினைவை மீட்டான் ... கண்விழித்து பார்த்தபோதுதான் பால் பொங்கி வழிந்திருப்பதை உணர்கிறான்.... அவ்வளவு நேரமும் தன்னை அறியாமல், நினைவு தப்பி தான் நின்றிருப்பதை உணர்ந்தான் விவேக்....
“என்னடா ஆச்சு?... ஏன் அப்டியே நின்ன?... பால் பொங்கி தீயுற நாத்தம் வந்ததால உள்ள வந்தேன், நீ அப்டியே நிக்குற.... இன்னும் தூக்கம் கலையலயா?” சிரித்தான் சர்வா....
“ஹ்ம்ம்... ஆமாடா...”
“ஏண்டா தூங்கிட்ட... நம்ம பாலாவோட செம்ம ரகளைடா இப்ப.... சரியான காமெடி....” சொல்லிக்கொண்டே சிரித்தான் சர்வா.... அதைதாண்டி சர்வாவின் எந்த பேச்சும் விவேக்கின் காதுகளை அடையவில்லை... அதே குரல் இப்போது மீண்டும் ஒலிக்க தொடங்கியது....
“உனக்கு போட்டியா வந்துட்டான் அவன்... அவன் உன் எதிரி... அவனை நம்பாத... உன்னோட எடத்த பாலாகிட்டேந்து அவன் புடிச்சுப்பான்... “
“ஹ்ம்ம்... புரியுது... என்ன பண்ணட்டும் இப்போ?”
“என்னடா பேசுற?.... என்ன பண்ண போற?... புரியலையே?” விவேக் தன்னிடம் பேசுவதாக நினைத்து குழப்பத்தில் கேட்டான் சர்வா.....
“சூடா இருக்குற பாலை அவன் மேல ஊத்திடு”
அடுத்த நொடிகளில் சர்வாவின் கைகளில் கொதித்த பால் விவேக்கால் ஊற்றப்பட்டது.... சர்வா கொஞ்சம் விலகிவிட்டதால் கையில் லேசான சிதறலுடன் பெரிய காயங்களின்றி தப்பித்தான் சர்வா.... சர்வாவின் சத்தம் கேட்டு பாலா சமையலறைக்குள் நுழைய, அந்த ஆரவாரத்தில் விவேக் தன்னிலை உணர்ந்தான்....
சர்வாவின் கைகளில் இருந்த காயத்தை பார்த்த பாலா, “என்னடா ஆச்சு?... கைய்யல்லாம் காயமா இருக்கு?” பதறினான்.... அந்த பதற்றத்தில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் விவேக்....
“ஒண்ணுமில்லடா.... விவேக் கை தவறி பாத்திரத்தை கீழ போட்டுட்டான், அது மேல தெறிச்சுடுச்சு, அவ்ளோதான்” தண்ணீரில் கைகளை கழுவினான்.....
“டேய் பார்த்து செய்ய மாட்டியா? இப்டியா மேல ஊத்துவ?” விவேக்கை எரிச்சலுடன் திட்டினான் பாலா.... விவேக்கிற்கு பாலா திட்டியதெல்லாம் பெரிய கவலையாக இல்லை..... அவன் மனதெல்லாம் வேறு ஒரு குழப்பம்... இவ்வளவு நாள் தன்னை காயப்படுத்த தூண்டிய குரல், இன்று இன்னொருவனை காயப்படுத்த வைத்துவிட்டது.... நாளையே அது பாலாவின் மீது எதையாவது செய்ய தூண்டினால்??? யோசித்தபடியே திகைத்து நின்றான் விவேக்....
பாலா, சர்வா இருவரும் நடந்ததை மறந்து பழையபடி உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கும்போது, விவேக் மட்டும் அந்த மனக்குழப்பத்தை விட்டு அகலாமல் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான்....
சர்வாவிற்கு பயணத்திற்கான நேரம் வந்ததும், விவேக்கிடம் விடைபெற்றுவிட்டு வெளியே வந்தான்.... அவன் வெளியே வந்த நேரத்தில் உள்ளிருந்து பாலாவின் குரல் கொஞ்சம் வேகமாக கேட்டது.... “வாய மூடு, இப்டி லூசுத்தனமா எதுவும் பேசாத” விவேக்கைதான் திட்டிக்கொண்டிருக்கக்கூடும்.... வெளியே வந்த பாலாவிடம், “என்னடா? என்ன ப்ராப்ளம்?” என்றான் சர்வா....
“ஒண்ணுமில்லடா... எதாவது லூசுத்தனமா பேசிட்டு இருப்பான் அவன், நீ கெளம்பு” தன் மகிழுந்தில் ஏறினான் பாலா.... இருவரும் பத்து நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... காரில் ஒலித்த பாடலை ரசித்தபடியே வந்தான் பாலா..... அதை அணைத்த சர்வா, “இதப்பத்தி நீ விவேக் வீட்டுக்கு சொன்னியா?” என்றான்...
“எதைப்பத்தி?... இந்த பாட்டை பற்றியா?” சிரித்தான்....
“சீரியஸா கேக்குறேன், பதில் சொல்லு.... விவேக் விஷயம் பத்தி?”
“இல்ல.... சொன்னா, அவங்க பயந்திடுவாங்க... தானா சரி ஆகிடும்னு நெனச்சேன்”
“முட்டாள்த்தனமா பண்ணிருக்க... ஒருவேளை அவன் கையை கிழிச்சுகிட்டப்போ அவன் உயிருக்கு எதாச்சும் ஆகிருந்தா, அப்போ என்ன ப்ராப்ளம் ஆகிருக்கும்னு யோசிச்சியா?... இனியும் டிலே பண்ணாத, உடனே சொல்லிடு” சர்வாவின் குரலில் ஒரு அச்ச்சரேகை படர்ந்தது....
“ஏண்டா திடீர்னு இப்டி பேசுற?.... சரி பண்ணிடலாம்னு சொன்னியே?”
“ஆமா... பண்ணிடலாம்.... ஆனா, அவனுக்கு ப்ராப்ளம் ஹாலுசினேஷன் மட்டுமில்ல.... அது ரெண்டு வருஷமா அவனுக்கிருக்குற ப்ராப்ளம்... இப்போ அவனுக்கு இருக்குற ப்ராப்ளம் Attention Seeking Behaviour….
“என்னடா பயமுறுத்துற?.... புரியுற மாதிரி சொல்லு” பதறினான்
பல சைக்காலஜிக்கல் ப்ராப்ளம்’லையும் இது வரலாம்... உன்னுடைய கவனத்தை அவன் பக்கம் திருப்புறதுக்காக அவன் தன்னையே காயப்படுத்திக்கறான்.... அவன் உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ண பின்னாடி அவன் கூட நீ பழையபடி பழகலன்னு அவன் நெனச்சிருக்கான்.... அதனால, அவன் உடலளவுல பாதிப்பு ஆகும்போது நீ அவன் மேல அக்கறை காட்டுறத அவன் புரிஞ்சுகிட்டு, தன்னையே கருவியா ஆக்கிகிட்டு இப்டி உன்னோட அனுசரணையை, அக்கறையை அவன் பக்கம் திருப்புறான்.... இன்னொன்னு நீ யோசிச்சு பாரு, இதுவரை அவன் உடம்புல காயம் ஏற்படுத்திகிட்ட எப்போவாச்சும் நீ அவன் பக்கத்துல இருந்தியா?”
யோசித்த பாலா, “இல்ல... நான் ஆபிஸ் போனப்புறமும், கான்பரன்ஸ் போனப்புறமும் தான் இதல்லாம் நடந்துச்சு” என்றான்...
“ஆமா... உன்னோட கவனத்தை அவன் பக்கம் திருப்பத்தான் இப்டிலாம் பண்றான்... ஆபிஸ்’ஐ விட அவன் உனக்கு முக்கியம்னு அவன் மனசுக்கு அவன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தால் இப்டி நடந்துக்கறான்... இன்னொன்னும் சொல்றேன், இன்னிக்கு அவன் பாலை என் மேல ஊத்துனது கூட கை தவறி செய்யல.... அவன்கிட்டேந்து உன்னைய நான் பிரிச்சிடுவனோன்னு ஒரு பயத்துல என்னை காயப்படுத்த சொல்லி அவன் மனசு சொல்லிருக்கு”
“அடக்கொடுமையே!.... இப்டிலாம் நான் கேள்விப்பட்டதே இல்லையேடா?”
“இல்ல... இது வெளிநாட்ல ரொம்ப சாதாரணம்.... சாதாரணமா இது குழந்தைகள்ட்ட இயல்பா நாம பாக்க முடியும்.... அவங்க நிக்குறத நாம கவனிக்கலைனா, கீழ விழுந்தோ, காயப்படுத்திகிட்டோ நம்ம கவனத்த குழந்தைங்க ஈர்ப்பாங்க.... இதுவே வளர்ந்த பிறகு வர்றதுதான் மனநோய் அறிகுறியா ஆகிடுது..... இதுலயே இன்னொரு வகை மனுஷங்க இருப்பாங்க.... அதாவது, யாரோட கவனத்த தன் மேல திருப்பனும்னு நெனக்கிறாங்களோ, அவங்கள காயப்படுத்துறது.... ஜெர்மனி’ல ஒரு நர்ஸ் இப்டி குழந்தைகள காயப்படுத்தி, அப்புறம் அந்த குழந்தைகளை விழுந்து விழுந்து கவனிச்சு மத்தவங்க கவனத்த ஈர்த்துச்சாம்.... அப்டி பண்ணதுல கிட்டத்தட்ட இருபது குழந்தைகளை அந்த நர்ஸ் கொன்னிடுச்சாம்.... இந்த பீகேவியர்’ஓட பிரச்சினையே இதான்...”
“உடம்பல்லாம் படபடப்பா இருக்குடா..... இவ்ளோ இருக்கா இதுல?... பல நாள் நைட்ல நான் தூங்குறப்போ எழுப்பி, அவன் தலை வலிக்குதுன்னு சொல்வான்.... இப்போதான் புரியுது எல்லாமே” உடலை சிலுப்பிக்கொண்டான் பாலா.... அவன் பதற்றத்தில் இருப்பதை அவனுடைய கண்கள் அப்பட்டமாக காட்டியது....
“இன்னொரு முக்கியமான விஷயம்... முடிஞ்சவரை சீக்கிரம் ஒரு டாக்டரை பாரு.... ஒருவேளை அவனுக்கு தான் செத்தா நீ எப்டி ரியாக்ட் பண்ணுவ?னு ஒரு எண்ணம் வந்துட்டா, அடுத்த அஞ்சு நிமிஷத்துல அவன் உயிரோட இருக்க மாட்டான்”
சர்வா இதை சொல்லி முடிக்கையில், காரின் பிரேக்கை வேகமாக அழுத்தி வண்டியை நிறுத்தினான் பாலா... அவன் உடலெல்லாம் வியர்த்தது, கைகள் நடுங்கியது....
“ஏய் என்னாச்சு.... இந்தா தண்ணி குடி” பாட்டிலை திறந்து பாலாவின் கைகளில் கொடுக்க, அவசர அவசரமாக அதை குடித்து ஏதோ சொல்ல முயன்றான் பாலா....
“ரிலாக்சா இருடா.... என்னாச்சு உனக்கு?... பதட்டப்படாத....” பாலாவின் நெஞ்சை மெல்ல தடவிவிட்டான்....
முகத்தை தன் கைகளால் துடைத்தவனாக, இன்னும் படபடப்பும் அவசரமும் மிகுதியாக, வாய் குழறலுடன் சொன்னான், “இப்போதான் அவன் அதை என்கிட்ட சொன்னான்?”
“எதை சொன்னான்? எப்ப சொன்னான்?... குழப்பாம சொல்லுடா” குழப்பத்தில் சர்வா....
“இப்போ வீட்லேந்து கெளம்புறப்போ, ‘நான் செத்தா நீ அழுவியாடா?’னு கேட்டான்”
இப்போது சர்வாவின் உடலும் வியர்வையில் நனைய தொடங்கியது..... (முற்றும்)

8 comments:

  1. எதிர்பார்க்காத முடிவு. உங்களால் மட்டும் எப்படி இப்படி எழுத முடிகிறது. கதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. உளவியலில் தொடங்கி express வேகத்தில் எதிர்பார்க்காத வேளையில் ஒரு திருப்பம். i'm waiting................

    ReplyDelete
  3. chanceae illa vijay, indha climaxla irunthu vaeliya vara enaku 5 mins aachu vijay.

    idha oru short film-ma aedukalam... plzzzzz

    ReplyDelete
  4. vijay nice frd ............. as u said it is seeking attention of others which very danger .......................... i really thankful to u frd...............

    ReplyDelete
  5. You always prove that you are an extraordinary writer.. Really interesting and different..

    ReplyDelete
  6. Awesome.... u r great vijay... even I was shocked with the climax..

    ReplyDelete
  7. enna story.. kalakureenga vijay anna..
    Climax toppu tucker..
    Vivek ku edhuvum agatha mathari mudichirukalam..
    illa DEEPAVALI padam climaxla jayam ravi lovea pathu heroein love panniduva, adhe mathari, vivekoda lovea pathu bala urugi love pandra mathari mudichirukalam..
    Any way, ROCKING Vijay anna..

    ReplyDelete