Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 2 December 2013

“கே” குழந்தைகளின் பெற்றோர்களுக்காக. – “TEN TIPS for Parents of a Gay, Lesbian, or Bisexual child…”

      ங்கள் குழந்தை (மகன் அல்லது மகள்) ஒருபால் ஈர்ப்புள்ள நபர் என்ற உண்மை உங்களுக்கு தெரியவருகின்ற நேரத்தில் நீங்கள் என்னவல்லாம் செய்யனும்? எவற்றை செய்யக்கூடாது? என்ன விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும்? போன்றவற்றை பற்றிய சில முக்கிய ஆலோசனைகளை “பாலீர்ப்பு” பற்றிய கலந்தாய்வு அமைப்பு நடத்திடும் லிசா மாறர்(Lisa Maurer) கூறியவற்றை இப்போது பார்க்கலாம்... (நம் நாட்டிற்கு ஏற்றார் போல சில குறிப்புகளை மேலதிகமாக இணைத்துள்ளேன்)...

1.      புரிந்துகொள்ளுங்கள்.... முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, உலகத்தில் நீங்கள் மட்டும்தான் இப்படி ஒருபால் ஈர்ப்புள்ள குழந்தையின் பெற்றோராக இருப்பதாக நினைக்க கூடாது.... உங்களை போலவே லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பெற்றோர்கள் இருக்கிறார்கள், அவர்களின் பிள்ளைகளும் ஒருபால் ஈர்ப்புள்ள நபர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்....                   

2.      வித்தியாசத்தை உணருங்கள்.... பாலீர்ப்புக்கும் (sexual orientation), பாலின அடையாளத்துக்கும் (gender identity) உள்ள வித்தியாசத்தை அடுத்ததாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்... ஒரு மகன், தன் பாலீர்ப்பை பற்றி தன் பெற்றோரிடம் தெரிவிக்கும்போது, பெற்றோர்களில் பெரும்பாலானோர் இந்த இரண்டு விஷயங்களையும் போட்டு குழப்பிகொள்வர்.... “கே” என்பதையும், திருநங்கை என்பதையும் நிறைய குழப்பிக்கொள்ளும் பெற்றோர்கள் இங்க நிறைய உண்டு.... அதனால், இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை கற்றறிந்த பின்பே, உங்கள் பிள்ளையை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு நீங்கள் வரவேண்டும்....

3.      உண்மையை அறியுங்கள்... உங்கள் மகன் பாலீர்ப்பு மாறுபாடு உடையவன் என்பது உங்களுக்கு உறுதியானால், அதாவது உங்கள் பிள்ளை ஒருபால் ஈர்ப்பு நபர்தான் என்பதை நீங்கள் தெளிவுபடுத்திக்கொண்டுவிட்டால், மேற்கொண்டு இணையம் வழியாக அதுபற்றிய மேலதிக தகவல்களை அறிய முற்படவும்.... அருகில் இருக்கும் பாலீர்ப்பு தொடர்பான அமைப்புகளையோ, கலந்தாய்வு கூடங்களையோ தேவையிருப்பின் அணுகலாம்... நம் சட்டம் பற்றியும், பாலீர்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களை பெறவும் இணையம் மிகவும் உறுதுணையாக இருக்கும்...

4.      கவனியுங்கள்.... “நான் ஒரு கே”ன்னு உங்க பையன் உங்ககிட்ட சொல்கிறான் என்றால், நீங்கள் நிஜமாகவே சிறந்த பெற்றோர் தான்... காரணம், அப்படி தன் பாலீர்ப்பை உங்களை நம்பி சொல்லும் அளவிற்கு, உங்கள் வளர்ப்பு நல்ல தோழமையோடு இருப்பதாகவே அர்த்தம்... அதனால், மேற்கொண்டு நீங்கள் அவனிடம் நிறைய பேசுங்கள்... கோபமான வார்த்தைகளை கொட்டாமல், பொறுமையாக அவன் சொல்வதை கேளுங்கள், கவனியுங்கள்... பேசுவதைவிட, அதிகம் அவர்கள் பேசுவதை கவனியுங்கள்... உங்கள் கவனிப்பு ஒன்றுதான் அவனுக்கு அப்போதைய முக்கிய அவசியமான தேவை என்பதை உணருங்கள்... ஒரு நண்பரை போல அணுகவேண்டிய கடமை உங்களுக்கு இருப்பதை நீங்கள் உணரவேண்டும்....
5.      மேலும் குழப்பாதீர்கள்.... இப்போதெல்லாம் பதின்வயது தொடக்கத்திலேயே ஒரு குழந்தையால், தன் பாலீர்ப்பை எளிதாக அடையாளம் காணமுடிகிறது... இயல்பாகவே குழப்பங்களை அதிகம் தனதாக்கிக்கொள்ளும் அந்த வயதில், பாலீர்ப்பு தொடர்பான குழப்பம் மிகவும் அதிக பாதிப்பை உண்டாக்கும்... படிப்பில் கவனமின்மை, திடீர் குணநல வேறுபாடு போன்றவற்றை நீங்கள் திடீர் மாற்றமாக உங்கள் பிள்ளையிடம் உணர்ந்தால், அதற்கான காரணத்தை தேடுங்கள்.. அது பாலீர்ப்பு காரணம்தான் என்றால், தயவுசெய்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.... அது மேலும் அதிக குழப்பங்களைத்தான் உங்கள் பிள்ளைக்கு கொண்டு சேர்க்கும்...

6.      தண்டனையோ சிகிச்சையோ கிடையாது.... அடித்தோ. கடுமையான தண்டனை கொடுத்தோ உங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை மாற்றமுடியாது... அது இயற்கையான ஒன்று என்பதை உணருங்கள்... ஆனால், இந்த உண்மையை சொல்ல வேண்டிய சமுதாய பொறுப்பில் இருக்கின்ற மனநல மருத்துவர்களுக்கே இன்னும் பாலீர்ப்பை பற்றிய தெளிவான முழுமையான கருத்துகள் வாய்த்திருக்கவில்லை... அதனால், உங்கள் பிள்ளைகளை அவசரமாக மனநல மருத்துவரிடம் காட்டி, குணமாக்கும் முயற்சியிலும் ஈடுபடாதீர்கள்... சில நேரங்களில் ஷாக் ட்ரீட்மெண்ட் எனும் தவறான சிகிச்சை வழியாக, உங்கள் பிள்ளை மேலும் ஆபத்தை அணுகும் வாய்ப்பும் அதில் இருக்கிறது.... ஓரளவு தெளிவான மனநல மருத்துவர் இருப்பின், ஒரு தெளிவிற்காக நீங்கள் அவரிடம் ஆலோசனை பெறலாம்...

7.      கேலி கிண்டல் செய்யாதீர்கள்.... நீங்கள் உங்கள் மகனின் பாலீர்ப்பை சகஜமாக எடுத்துக்கொள்வதாக நினைத்து, “அவனா நீ?” போன்ற சினிமா வசன நகைச்சுவைகளை பிரயோகிக்காதீர்கள்.... உங்கள் கோபமான வார்த்தைகளைவிட, இப்படிப்பட்ட கேலிகள் குழந்தையை இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கும்....

8.      அரவணையுங்கள்.... உங்கள் பிள்ளை இந்த சமுதாயத்தில் எதிர்காலத்தில் நிறைய சமூக புறக்கணிப்புகளை எதிர்கொள்ளப்போகிறான் என்பதை உணருங்கள்... அதற்குண்டான வலிமையை கொடுக்க வேண்டியது உங்கள் அரவணைப்புதான்... ஆறுதலான பேச்சு, கனிவான கவனிப்பு போன்றவை அவசியமாக அவனுக்கு கொடுக்கப்பட வேண்டும்... பாலீர்ப்பை பற்றி தெரிந்ததும், உங்கள் வழக்கமான நடவடிக்கைகளில் உங்கள் மகன் சிறிதும் வித்தியாசம் கண்டிடக்கூடாது... எந்த தருணத்திலும் அவனுக்கு நீங்கள் துணை இருப்பதாக அரவணைப்பை கொடுக்கவேண்டும்...

9.      கடமையை உணருங்கள்... “இது தவறு”, “இது இயற்கைக்கு முரணானது” என்று பாடம் நடத்தி, மேலும் குழப்பமான எண்ணங்களை பிள்ளையின் பிஞ்சு மனதிற்குள் விதைக்காதீர்கள்.... “அது ஒன்னும் இல்லப்பா... நீ நார்மல்தான்” போன்ற ஆரோக்கியமான வார்த்தைகள் தான் உங்கள் பிள்ளைக்கு அப்போதைய தேவை... நாளைக்கே அவன் ஒரு ஆணை திருமணம் செய்து வாழப்போவதில்லை, அதற்கு நிறைய நாட்கள் இருக்கிறது... அப்போதைய மன குழப்பங்களில் இருந்து அவனை நீங்கள் மீட்பதுதான் உங்களின் அத்தியாவசிய தேவை என்பதை முதலில் உணருங்கள்... உங்கள் பிள்ளையின் திறமைகளை திரைபோட்டு மறைத்திருக்கும், இந்த மனக்குழப்பங்களை அகற்றி, நல்ல திறமை மிக்க இளைஞனாக அவன் வளர வழி வகுத்து கொடுக்க வேண்டிய உங்கள் அவசியமான கடமையை நீங்கள் முதலில் உணரவேண்டும்....

10.  நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.... சமுதாயம், கலாச்சாரம், சட்டம் என்று உங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை நீங்கள் எதிர்க்க ஆயிரம் காரணங்கள் உங்களுக்கு கிடைக்கலாம்... ஆனால், ஒரே ஒரு காரணம் உங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை ஏற்க உங்களுக்கு வாய்த்திருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும்.... அது என்ன? “உங்கள் பிள்ளை உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை”தான் அந்த ஒற்றை காரணம்.... அது உங்கள் பிள்ளை... உலகமே எதிர்த்தாலும், துணை நிற்க வேண்டிய பெற்றோர்கள் நீங்கள்... நீங்கள்தான் அதற்கு உலகமே, உங்களிடம்தான் முதலில் அந்த குழந்தைக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்... இத்தகைய உங்கள் பிள்ளைகளின் “நம்பிக்கையை” காப்பாற்றவாவது நீங்கள் உங்கள் பிள்ளையின் கரம் பிடித்து நிற்க வேண்டியது ஒரு முக்கிய காரணம்....
அவ்வளவுதான்.... இவற்றை செய்துவிட்டாலே, உங்கள் பிள்ளையின் முழு மனதை புரிந்துகொண்ட “சூப்பர் ஹீரோ” போல நீங்கள் மாறிவிடலாம் பெற்றோர்களே!.... புரிந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.....

உங்கள் விஜய் விக்கி...

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் விஜய்...உண்மையில் சில வரிகள் ஆணித்தரமாக சொல்லிருக்கீங்க...நம்பிக்கை பற்றி சொன்னது அருமை...பிற ஆணுடன் வாழ்கிறார்களோ இல்லையோ...தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள வைக்கும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சாம்...

      Delete
  3. tips super. aanal yaruku sonningalo avangala poi seranume!. apdi senthutta nallathu than. athu thane ellarukum venum.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா... நிச்சயம் இதை பொதுத்தளங்களுக்கும் கொண்டு சேர்க்க முயல்கிறேன்....

      Delete
  4. எல்லா பெற்றோர்களுக்கும் புரிந்து ஏற்கிறமாதிரி பதிவுபன்னியிருக்கங்க. இப்பயிருக்கிற parentsக்கு இதை கொண்டுப்போய் சேர்க்க முடியுமானு தெரியல. பெற்றோரா ஆகுற வாய்ப்ப கடவுள் எணக்கு கொடுத்தாறுண்னா கண்டிப்பா இதை followபன்னுவேன் விக்கி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சேகர்... நிச்சயம் இந்த தலைமுறை பெற்றோர்களும் இதை புரிஞ்சுப்பாங்கன்னு நம்புவோம் நண்பா...

      Delete
  5. நமது பெற்றோர்கள் நமக்கு கொடுக்க தவறியதை, நமது பிள்ளைகளுகவது கொடுபோம்,
    உலகை, இந்த சமூகத்தை தைரியமாக எதிர்கொள்ள

    நன்றி விஜய் விக்கி

    ReplyDelete