Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 6 January 2013

"கே" - என்னென்ன சிகிச்சைகள் இருக்கிறது?

                               "கே" - என்னென்ன சிகிச்சைகள் இருக்கிறது?



பெரும்பாலான இருபதாம் நூற்றாண்டு காலமும், ஓரின விருப்பத்தை ஒரு மன நல பிரச்சினையாகவே பார்த்தது இந்த அறிவியல் சமூகம்....முதன்முதலில் 1970இல் இதை அறிவியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக அங்கீகரித்த பல விஞ்ஞானிகள் இதை மனநல நோய்களின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்..... பின்னர் அதனை தொடர்ந்து 1973இல் American psychiatric association மற்றும் 1975இல் American Psychological Association counsil of representative ஆகிய அமைப்புகள் ஓரின விருப்பத்தை மனநல நோய்கள் பட்டியலிலிருந்து நீக்கினார்கள்..... 1990 ஆம் ஆண்டு உலக சுகாதார மையம் இதனை மன நோய் அல்ல என்றும், அது இயற்கையான ஒரு மனிதனின் எண்ணம் சார்ந்த விஷயம் என்றும் அறிவித்தது..... அதன்பின்புதான், இதை மெய்ப்பிக்கும் வண்ணம் பல ஆய்வு முடிவுகளும், அறிவியல் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன....

இவ்வளவு மருத்துவமும், விஞ்ஞானமும் வளர்ந்துள்ள நம் உலகில், இதுவரை முழுமையாக ஒருபால் ஈர்ப்புக்கான காரணமாக எந்த ஒரு விஞ்ஞானியும் உறுதியான எந்த ஆய்வு முடிவையும் சமர்ப்பிக்கவில்லை.... பல ஆய்வுகளும் இன்னும் ஆராய்ச்சி நிலையங்கள் அளவில் மட்டுமே இருக்கிறது, முடிவு தெரியாமல் இன்னும் முட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..... இப்படி இருக்க, இன்னும் சில அமைப்புகள் ஓரின விருப்பத்தை மிகப்பெரிய குற்றமாகவும், மன நோயாகவும் இன்னும் விளம்பரப்படுத்தி வருகிறது.... இத்தகைய அமைப்புகள் ஒருபால் ஈர்ப்பாளர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அதற்கு பெயர் “REPARATIVE THERAPY” என்றும் கூறி வருகிறார்கள்.... இதைப்பற்றி நான் முன்பே “ex gay movement” பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்..... இப்போது அவர்கள் மீது கடும் கண்டனக்குரல் எழுப்பியுள்ளது American Psychiatric Association….. அவர்கள் கூறுவதாவது, “இதைப்போன்ற சிகிச்சைக்கு வரும் நபர்களின் காரணங்களை பொருத்து மட்டுமே அப்படி சிகிச்சைகள் கொடுக்கப்படவேண்டும்..... காரணம், இப்படி சிகிச்சைகளின் மூலம் பெரும்பாலானவர்கள் மேலும் பல மனநோயகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.....

அதனால், முறையான முக்கியமான காரணங்கள் அன்றி, அத்தகைய சிகிச்சைகளை செய்ய கூடாது" என்கிறது..... மதங்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு இத்தகைய சிகிச்சை புருடாக்களை அள்ளிவிடும் இத்தகைய நிறுவனங்களை நேரடியாக தடுக்க முடியாமல் தவிக்கும் அறிவியல் சார் அமைப்புகள், அதிகபட்சமாக கண்டனங்களை மட்டுமே எழுப்புகிறார்கள்.... American Psychiatric Association கூறுவதைப்போல அங்கு சிகிச்சைக்கு வரும் பலரும், மனநோய் முற்றி மனநல சிகிச்சைகள் மேற்கொள்ளும் அளவிற்கு அங்கு சிகிச்சை என்ற பெயரில் உபதேசங்கள் நடக்கும்..... அதிக மதநம்பிக்கை உடைய ஒருவன் அத்தகைய சிகிச்சைக்கு செல்லும்போது ஒருபக்கம் அவனால் அந்த ஓரின எண்ணத்திலிருந்து விடமுடியாது, அதே நேரத்தில் மறுபுறமோ “இதை நீ தொடர்ந்தால் நீ மதத்திற்கு எதிரியாகிறாய்.... இறைவனுக்கு துரோகம் செய்கிறாய்” போன்ற எண்ணங்களை அங்கு வருபவர்களின் மனதில் ஆழப்பதிய வைக்கிறார்கள்.... அப்படி இருக்க, அவனால் அதிலிருந்து விடுபடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு, தீவிர மனநோயாளியாகிறான்..... இத்தகைய நேரத்தில் அறிவியல் ஓரின விரும்பிகளுக்கு ஒரு சிகிச்சையை வலியுறுத்துகிறது.....

அதன் பெயர், Gay affirmative psychotherapy.... இந்த சிகிச்சையில் கொடுக்கப்படும் கலந்தாய்வில், ஒரு கே’இன் மனதிற்குள் ஆழப்பதிந்திருக்கும் “இந்த பழக்கம் தவறானது” என்ற எண்ணத்தை அடியோடு இல்லாமல் செய்கிறார்கள்.... அறிவியல் ரீதியாக, “இது மன நோய் அல்ல, இயற்கைக்கு புறம்பானது அல்ல, இறை நம்பிக்கைக்கும் இதற்கும் எத்தகைய சம்மந்தமும் இல்லை, இதற்கு சிகிச்சை கொடுக்கும் அளவிற்கு இது நோய் அல்ல” என்று புரியவைத்து, ஒருபால் ஈர்ப்பாளனை  இயல்பான மனநிலைக்கு கொண்டுவருவது இந்த சிகிச்சையின் நோக்கம்.... இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இத்தகைய சிகிச்சை முறைகள் இதுவரை வரவில்லை... ஆனால், சில சித்தவைத்தியர்களின் விளம்பரங்களில் சமீப காலங்களாக “ஓரின சேர்க்கையை ஆறு மாதத்தில் குணப்படுத்திட உடனே அணுகவும்.....” என்று வருகிறது.... தயவுசெய்து, இத்தகைய ஆசாமிகளை நம்பி சென்று, பணத்தை இழக்காதீர்கள்.... இன்னும் சுய இன்பத்தையே தவறாக, அவ்வளவு தைரியமாக விளம்பரப்படுத்தும் இந்த முட்டாள்களை நம்பி நீங்கள் முட்டாள்கள் ஆகிவிடாதீர்கள் நண்பர்களே....

நம் ஊரில் இன்னும் இந்த ஹோமோபோபியா ஆசாமிகள் நிறைய இருக்கிறார்கள்.... பொதுஇடங்களில் இன்னும் ஒருபால் ஈர்ப்பு நபர்களை பொதுமக்கள் கையாளும் முறையே அருவருக்கத்தக்க இருக்கிறது..... ஏனோ ஒரு தவறான பிம்பம் நம் மீது அவர்களுக்கு விழுந்துவிட்டது.... இந்த பிம்பத்தை மாற்றும்வரை பெரிய அளவில் சமூகம் ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்காது.... இப்போது மருத்துவம் ஓரளவு நம் ஊரில் இதை கையாளும் முறை கொஞ்சம் நம்பிக்கையை தருகிறது..... ஒருவேளை மனரீதியாக நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், மனம் உடைந்த நிலையில் இருப்பவரானால், குற்ற உணர்ச்சி மிகுந்து காணப்படுபவராக இருந்தால், தயங்காமல் மனநல மருத்துவரிடம் கலந்தாய்வு செல்லுங்கள்.... மனநல மருத்துவரை அணுக சொல்வதால், “இது மனநல பிரச்சினையா?” என்று கோபப்படாதீர்கள்..... ஓரின விருப்பம் என்பது நிச்சயம் மனநல பிரச்சினை அல்ல, ஆனால் இது “சரியா? தவறா?” என்ற எண்ணம் இத்தனை காலம் போட்டு உங்கள் மனதை குழப்பி, நல்ல மனதை பலவீனமாக்கிவைத்திருக்கும் உங்கள் எண்ணத்திர்க்குத்தான் இந்த கலந்தாய்வு மேற்கொள்ள சொல்கிறேன்.... எந்த ஒரு உண்மையயுமே , ஒருத்தன் இலவசமா, ரொம்ப எளிமையா சொன்னா ஏற்றுக்கொள்ளாத மக்கள் நம் மக்கள்.... இங்கு நான் சொல்வதையேதான் ஒரு மருத்துவர், தன் அடுக்குமாடி மருத்துவமனையில் அமர்ந்து, நுனிநாக்கு ஆங்கிலத்தில் “கவலைப்படாதிங்க மிஸ்டர், இது வியாதியே இல்ல.... இது ஜஸ்ட் உங்க எண்ணம்தான்.... எதுக்கும் கவலைப்படாதிங்க” என்று சொன்னால், அவரிடம் சில நூறுகளை (சிலநேரங்களில் ஆயிரங்களை) கொடுத்துவிட்டு வந்தால்தான் ஏற்றுக்கொள்வீர்கள்.....எது எப்படியோ? உங்களுக்கு தெளிவான ஒரு மனநிலை வந்தால் அது போதும்....

No comments:

Post a Comment