Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 17 January 2013

கடிதமும், அதற்கு பதிலும்....

அன்பு நண்பர் விஜய் அவர்களுக்கு,

வணக்கம்! என் பெயர் HARD!!

ஆம்...அத்தகைய புனை பெயரில் ஆர்குட்டின் "Chennai guyss gay sex stories" வலை தளத்தில் பல கதைகளை பதிந்து இருக்கிறேன்!
இப்போது பணிசுமையின் காரணமாய் என்னால் எனது பங்களிப்பை செய்ய இயலவில்லை!
சென்னை தோஸ்த் அமைப்பின் பிரசன்னா மற்றும் உங்களை போன்றவர்கள் ஓரின ஈர்பாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஆற்றி வரும்
பணி போற்றுதலுக்கு உரியதே! உங்களை போன்றோர் கதை, கட்டுரைகள், கூட்டங்கள், பேரணிகள், கலந்தாய்வுகள் என எவ்வளவு பங்களிப்பை
செய்தாலும் அது சமூகத்தில் ஓரின உறவாலர்களின் மீதான பழமைவாத எண்ணத்தை சிறிதும் மாற்றிவிடாது! உங்களையே எடுத்து கொள்ளுங்கள்....கதைகளின் மூலம் இன்னும் பிற கட்டுரைகளின் மூலம் 'கே' சமூகத்தின் மீது நன்மதிப்பு ஏற்படும் வண்ணம் எழுதுகிறீர்கள்...ஆனால் உங்கள் எழுத்து யாரால் படிக்கப்படுகிறது என்று சிந்தித்து பாருங்கள்....இது 90% தன்பால் ஈர்ப்பு கொண்டவர்கள் பெரும்பாலும் உறுப்பினர்களாக கொண்ட வலை தளங்களிலேயே பதிய படுகிறது! ஓரின ஈர்ப்பு என்பது இயல்பானது என்பதை ஓரின சமூகம் எப்போதோ அறிந்து கொண்டு விட்டது! ஆகையால் உங்கள் எழுத்துக்கள் போய் சேர வேண்டிய இடம் தன்பால் ஈர்பற்ற (straight ) சமூகத்திடம் தான்!! ஏனெனில் அவர்களே இப்போது உங்கள் எழுத்துக்களை படித்து ஓரின ஈர்ப்புள்ள தங்கள் சக நண்பரை அல்லது உறவினரை ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வர வேண்டி உள்ளது! அப்படிப்பட்ட மனநிலையை  சமூகத்தில் ஏற்படுத்தும் பட்சத்தில் நமக்கான அங்கிகாரம் கிடைக்க தொடங்கிவிடும்!! நாமும்  நம் ஓரின பால் நாட்டத்தை சமூகத்திடம் தயக்கமின்றி வெளிபடுத்தலாம்! சென்னை தோஸ்த்  பிரசன்னா , சிருஷ்டி கோபி போன்றவர்கள் இதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது!! ஒரு 'கே' வுக்கு அவன் இயல்பான மனிதன் என்று கலந்தாய்வு செய்வதை விட அவன் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தான் கலந்தாய்வு தேவை...ஏனெனில் இப்போது 'கே' நண்பர்களுக்கு உள்ள பிரச்சனை சமூகம் தங்களை ஏற்று கொள்ளவில்லையே என்ற கவலை தானே தவிர வேறில்லை...மற்றபடி அவர்கள் அவர்களின்  ஒருபால் நாட்டத்தை இயல்பாக ஏற்று கொண்டுவிட்டனர்...அதற்கு காரணம் உங்களை போன்றோர் செய்யும் பங்களிப்பு! நான் சொல்ல முனைவதெல்லாம் உங்கள் பங்களிப்பு நம்மை போன்றரை இனி மையபடுத்தி இல்லாமல் சமூகத்தை மையபடுத்தி இருக்கட்டும்!! சமூகம் ஏன் நம்மை சிறுபான்மை இனமாக பார்க்கிறது?? ஏனெனில் நீங்களோ நானோ நான் 'கே' என்பதை வெளியில் சொல்லவில்லை...இப்படி ஒவ்வொரு 'கே' வும் நினைக்கும் பட்சத்தில் நம் இனம் எப்போதும் சமூகத்தில் சிறுபான்மை இனமாகவே இருக்கும்...சிறுபான்மை இனம் சமூகத்தில் ஒடுக்கப்படும் என்பது பொது விதி அன்றோ! :) :)  அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஓரின திருமணத்திற்கு போராடுகிறார்கள் நாம் இன்னும் அடிப்படை உரிமைக்கே போராடி கொண்டிருக்கிறோம் என்று வருத்தம் கொள்கிறீர்கள்...அமெரிக்க நாட்டிலும் ஓரின விருப்பதை முதலில் யாரும் ஏற்று கொள்ளவில்லை தான்...ஆனால் அங்கே 'coming  out' என்ற பெயரில் அமெரிக்க இளைஞர்கள் தங்களை சமூகத்திடம் ஒளிவு மறைவின்றி வெளிபடுதியதால் தான் 'கே' சிறுபான்மை இனம் அல்ல...பெரும்பான்மையான ஆண்கள் இந்த விருப்பத்தில் இருகிறார்கள் என்பதை ஏற்று கொண்டு அம்மக்கள் அதை ஏற்றனர்! நீங்களும் நானும் முகமூடியை கழற்றி எறியாதவரை சமூகமும் நம்மை ஏற்று கொள்ள போவதில்லை!! முகமூடி எதுவும் இன்றி எதையும் எதிர் கொள்ளும் திறந்த மனதுடன் சமூகத்தை எதிர் கொள்ளும் திறன் படைத்தவர்களுக்கு  தான் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கும் தகுதியும் உரிமையும் இருக்கிறது!

'கே' நண்பர்களுக்கு ஒரு செய்தி....உங்களை வெளிப்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வது உங்கள் படத்தை சமூக வலை தளங்களில் அல்லது பிற ஊடக வாயிலாக கொடுத்து  என்  உண்மையான விவரம் இன்னது...நான் ஒரு ஹோமோ....என்று விளம்பரபடுத்தி கொள்வதல்ல....மூன்றாம் நபருக்கு உங்கள் பாலின அடையளாத்தை வெளிபடுத்த வேண்டாம்....முதலில் உங்கள் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு  வெளிபடுத்துங்கள் போதும்....இப்படி ஒவ்வொரு 'கே' வும் தன்னை வெளிப்படுத்தி கொண்டால் ஓரின பெரும்பான்மை ஏற்பட்டு மெல்ல சமூகம் அவற்றை ஏற்கும்!...  ஆடவன் ஒருவனுடனான உங்கள் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில்....அந்த ஆடவனிடம் நீங்கள் காட்டும் அக்கறை,அன்பு,காதல் இவற்றை பார்த்து உங்கள் நெருங்கிய நண்பர்களும் பெற்றோர்களும் உங்கள் உறவு நிலையை ஆதரிப்பார்கள் என்பது நான் அனுபவப்பட்ட உண்மை! ஆம் நண்பர்களே...நான் என் ஓரின ஈர்ப்பு நிலையை என் நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் வெளிப்படுத்தி விட்டேன்!! இப்போது என் பத்து ஆண்டு கால காதலனுடன் உல்லாசமாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன்! ;)

அன்புடன்,
HARD.

(HARD அண்ணன் அவர்களுக்கான எனது பதில் கீழே)

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சரண் (hard) அவர்களே,
   முதலில் உங்கள் கருத்துகளுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.... அசாத்திய எழுத்து நடையும், அனைவரையும் கவரும் கதை சொல்லும் போக்கும் உங்கள் பல கதைகளிலும் நான் கண்டதுண்டு... அப்படிப்பட்டவர் எனது வலைப்பூவை பற்றிய தங்களது கருத்துகளை கூறியது மிக்க மகிழ்ச்சி...
நீங்கள் “வெளி வருதல்” பற்றிய உங்கள் கருத்தை சொல்லி இருக்கீங்க.... அது இப்போதைக்கு சாத்தியமா? என்பதில் எனக்கு சந்தேகமே... நம்முடைய சுய பாலீர்ப்பு எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்தான்... ஆனால், அதற்கான களம், சூழல் இல்லாதபோது அதனை மேற்கொள்வது நிச்சயம் எதிர்மறை விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தும்... பால் ஈர்ப்பு பற்றிய அடிப்படை தெளிவு கூட இல்லாத சமூகத்தில்தான் இன்றைய பல பெற்றோர்கள் இருக்கிறார்கள்.... அவர்களிடம் போய், “நான் ஒரு கே” என்று சொன்னால், நிச்சயம் அது எதிர்மறை விளைவுக்கு கொண்டு செல்லலாம்... நாம் எவ்வளவுதான் அறிவியலையும், வரலாற்றையும், மருத்துவத்தையும் துணைக்கு அழைத்து நம் பக்க நியாயத்தை முன்வைத்தாலும், அது எதையும் உணரும் சூழலை இந்த சமூகம் அவர்களுக்கு கொடுக்கவில்லை.... முதலில் நம் சமூகத்தில் ஒருபால் ஈர்ப்பை பற்றிய பேச்சுக்கள் உண்டாகவேண்டும்.... அது நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... பேசாமல் இருக்கும்வரை, உண்மைகளை நாம் வெளிக்கொணர முடியாது.... அப்படி ஒரு விவாதக்களம், பேச்சு நம் சமூகத்தில் உருவானால், பால் ஈர்ப்பை பற்றிய ஓரளவேனும் அறிவை நம் மக்கள் பெறுவார்கள்...
இன்னும் மாதவிடாய் பற்றிய விளக்கத்தைக்கூட தன் மகளுக்கு சொல்ல தயங்கும் தாய்மார்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்... “பாலியல் கல்வி” பற்றிய பேச்சைகூட தன் மகன் முன் பேசக்கூடாது என்று “கண்ணியம்” காக்கும் தந்தைகள்தான் அதிகம்... இந்த நிலைமையில், நம்மை “கே” என்று அடையாளப்படுத்தி, அவர்கள் அதை உடனே அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்ற எண்ணம் சரியாக இருக்காதே....
நம்மை வெளிப்படுத்திக்கொள்ள கூடாது என்று சொல்லவில்லை... அதற்கான சூழல் அமைந்த வீடுகளில் நிச்சயம் நம்மவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிக்கொண்டு வரலாம்... ஆனால், பெரும்பாலான வீடுகள், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை...
அமெரிக்காவில்கூட ஊடகங்களும், அரசியல்வாதிகளும், மதவாதிகளும் இதை ஆதரித்தும். எதிர்த்தும் நிறைய பேசியதன் விளைவாகத்தான் பலராலும் தங்கள் பாலின ஈர்ப்பு அடையாளத்தை துணிச்சலாக வெளிக்காட்ட முடிந்தது.... இப்போது சமூகம் பால் ஈர்ப்பை பற்றிய பேச்சுக்களை பேசும் நிலை தொடங்கி இருக்கிறது.... எதிர்காலத்தில் நீங்கள் நினைப்பதைப்போல நாம் சிறுபான்மையினர் அல்ல என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தலாம்...
அடுத்ததாக நீங்கள் சொன்னதைப்போல நம் ஒருபால் ஈர்ப்பு வலைத்தளங்களை பெரும்பாலும் நம் கே மக்கள் மட்டுமே தான் பார்க்கிறார்கள்... அதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமும்.... ஆனால், அவசரத்தேவை, அவசியத்தேவை என்று நம் தேவைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம்... ஒரு கே தன் பாலின ஈர்ப்பு அடையாளத்தை உணர்ந்து முதலில் தன்னை அங்கீகரிக்க வேண்டும்.... அதுதான் அவசரத்தேவை... இன்றைக்கு இதை தவறென்று நினைத்தே, நித்தமும் தான் தவறை செய்வதாக நினைத்து நொந்து போகும் பல நபர்களை நான் பார்க்கிறேன்... அவர்கள் தாங்கள் செய்வது தவறல்ல என்பதை உணரும்போது நிறைய தற்கொலைகளை தவிர்க்கலாம், மன நலமிக்க சமூகத்தை உருவாக்கலாம்.... அதனால் இது இப்போதைய அவசரத்தேவையாக இருக்கிறது.... நீங்கள் சொன்னதுபோல “ஸ்ட்ரைட்” நபர்களும் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியத்தேவை... அந்த தேவைக்கான முயற்சிகளை நாம் இப்போது தொடங்கவேண்டும்.... நாம் எல்லோரும் இணைந்து அதற்கான களத்தை, வாய்ப்பை உருவாக்கலாம்....
சமீப காலங்களில் நம்மை பற்றிய பேச்சுகள் பொது தளங்களில் துளிர்விட தொடங்கி இருக்கிறது.... அதற்கு நீரும், உரமும் இட்டு விருட்சமாக வளர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.... அதனை நிச்சயம் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு நம் பயணத்தை தொடர்வோம்...
                                                                           அன்புடன்,
                                                 என்றும், உங்கள் விஜய்.....

No comments:

Post a Comment